என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை அருகே மருந்து கடை பெண் ஊழியர் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து அவரின் காதலனை போலீசார் கைது செய்தனர்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள குளமங்கலம் வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் சித்திரைவேலு. இவரது மகள் கஸ்தூரி (வயது 19). இவர் ஆலங்குடியில் உள்ள மருந்து கடையில் பணியாற்றி வந்தார். கடந்த 28-ந்தேதி வேலைக்கு சென்ற கஸ்தூரி அதன்பிறகுவீடு திரும்பவில்லை. அவரை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    இதைத்தொடர்ந்து கஸ்தூரியின் பெற்றோர் ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கஸ்தூரி எங்கு சென்றார் என்று விசாரணை நடத்தினர். விசாரணையில் புதுக்கோட்டை மாவட்டம் அதிரான்விடுதியை சேர்ந்த லோடு ஆட்டோ டிரைவரான கருப்பையா என்பவரின் மகன் நாகராஜ்(27) என்பவருக்கும் கஸ்தூரிக்கும் பழக்கம் இருந்து வந்ததும், சம்பவத்தன்று இருவரும் ஆலங்குடியில் இருந்து ஒன்றாக இணைந்து சென்றதும் தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் நாகராஜை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் போலீசார் விசாரணைக்கு பயந்து நாகராஜ் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

    அப்போது நாகராஜ் சென்னையில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து நாகராஜை ஆலங்குடிக்கு வரவழைத்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கஸ்தூரி இறந்திருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் நாகராஜிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

    அப்போது கஸ்தூரி சாவுக்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல் கிடைத்தது. கடந்த 28-ந்தேதி கஸ்தூரியை ஆலங்குடி ஆதனக்கோட்டை சாலையில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற நாகராஜ், அங்கு அவருடன் உடலுறவு கொண்டுள்ளார். அப்போது கஸ்தூரிக்கு நெஞ்சுவலி ஏற்படவே அவர் திடீரென மரணமடைந்துள்ளார். இதனால் என்னசெய்வதென்று தெரியாமல் திகைத்த நாகராஜ், போலீசாருக்கு தெரியாமல் இருக்க கஸ்தூரி உடலை சாக்குப்பையில் கட்டி தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள ஆற்றில் வீசி விட்டு, சென்னைக்கு தப்பி சென்றுள்ளார். இந்தநிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் சிக்கிக்கொண்டார்.

    இதனிடையே கஸ்தூரியின் உறவினர்கள், நாகராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கஸ்தூரி உடலை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
    எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மீனவர்கள் 6 பேரை கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களை காரைநகர் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர். #Fishermenarrested
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று காலை 150 விசைப் படகுகளில் 600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்துறை அலுவலக அனுமதியுடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    இதில் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த ராஜீவ்காந்தி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ராஜாராம் (வயது 28), ராகுல் (23), பாலையா (60), லெட்சுமணன் (57), அருளரசன் (35), அருள் (40) ஆகிய 5 பேரும் கடலுக்கு சென்றிருந்தனர்.

    அவர்கள் நள்ளிரவில் கடற்கரையில் இருந்து சுமார் 15 கடல் மைல் தொலைவில் இந்திய கடல் பகுதியில் வலைகளை விரித்து மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு இலங்கை கடற்படை வீரர்கள் ரோந்து கப்பலில் வந்தனர்.

    அவர்கள் புதுக்கோட்டை மீனவர்களிடம் இது எங்கள் நாட்டிற்கு சொந்தமான கடல் பகுதி. இங்கு மீன் பிடிக்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று கூறியதோடு, மீனவர்கள் பிடித்து வைத்திருந்த அனைத்து மீன்களையும் பறித்துக்கொண்டனர்.

    பின்னர் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மீனவர்கள் 6 பேரையும் கைது செய்தனர். அவர்களின் படகுடன் சிறைப்பிடித்த இலங்கை கடற்படையினர் இலங்கையில் உள்ள காரைநகர் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர்.

    அங்கு மீனவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இன்று காலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படும் அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்களா? அல்லது விடுதலையாவார்களா? என்பது பின்னரே தெரிய வரும்.

    டீசல் விலை உயர்வை கண்டித்து சுமார் 2 வார கால வேலை நிறுத்த போராட்டம், இயற்கை சீற்றத்திற்கு பிறகு கடந்த 22-ந்தேதி கடலுக்கு சென்ற ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை சிறைப் பிடித்தது. அவர்கள் விசாரணைக்கு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    அதற்குள் தற்போது மீண்டும் அதே பகுதியை சேர்ந்த 6 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தது மீனவர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. இலங்கை அதிபராக ராஜபக்சே இருந்தபோது தினமும் தமிழக மீனவர்கள் சிறைப் பிடிப்பு, மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு, தாக்குதல் போன்றவை நடந்து வந்தன.

    தற்போது அவர் பிரதமராக பதவியேற்ற மறுநாளே தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லவே அச்சம் தெரிவித்துள்ளனர். #Fishermenarrested

    ஆலங்குடி அருகே மணமகன் டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்டு வருவதால் நேற்று நடக்க இருந்த திருமணத்தை பெற்றோர் நிறுத்தியுள்ளனர். #DengueFever

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்த கறம்பக்குடி அருகேயுள்ள பல்லவராயன்பத்தை கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 27). இவருக்கும் கறம்பக்குடியை சேர்ந்த ஜீவிதா என்ற பெண் ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நேற்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

    திருமணத்திற்கான ஏற்பாடுகளை உறவினர்கள் செய்து வந்தனர்.

    கடந்த வாரம் பாண்டியனுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. கறம்பக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டெங்கு அறிகுறி இருந்தது.

    அவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். தொடர்ந்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    நேற்று, திருமணம் நடத்த திருமண மண்டபத்தில் ஏற்பாடுகள் நடந்தன. உணவு வகைகளும் தயார் செய்யப்பட்டு இருந்தன. மணமகன் பாண்டியனை உறவினர்கள் அழைத்து வர சென்றபோது தனியார் மருத்துவமனை நிர்வாகம் அவரை டிஸ்சார்ஜ் செய்ய மறுத்துவிட்டது.

    தற்போது காய்ச்சலின் தாக்கம் குறைந்து வருகிறது. வெளியே சென்றால் விபரீதமாகிவிடும். எனவே அவர் தொடர் சிகிச்சையில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறிவிட்டனர்.

    இதனால் நேற்று நடக்க இருந்த திருமணத்தை இரு வீட்டாரும் பேசி ஒத்தி வைத்து விட்டனர். மீண்டும் ஒரு நல்ல நாள் பார்த்து திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று அவர்கள் முடிவெடுத்து அறிவித்தனர். இதற்கிடையே திருமண விழாவில் கலந்து கொள்ள வந்தவர்கள் தகவலறிந்து ஏமாற்றத்துடன் சென்றனர். #DengueFever

    சீன பேரரசின் ஆதரவுடன் இந்தியாவில் எதிர் விளைவுகளை ஏற்படுத்த ராஜபக்சே முயற்சிப்பார் என்று திருமாவளவன் கூறினார். #Thirumavalavan #Rajapaksa
    பொன்னமராவதி:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இலங்கையில் பிரதமராக ராஜபக்சே பொறுப்பேற்றிருப்பது இந்திய அரசின் வெளி விவகார கொள்கைக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவாகும். இந்தியாவுக்கு ஆதரவாக செயல்பட்டு கொண்டிருந்த ரணில் விக்ரமசிங்கை நெருக்கடி மூலம் வெளியேற்றி விட்டு தங்களின் ஆதரவாளரை சீன பேரரசின் விசுவாசிகள் ஆட்சி பீடத்தில் அமர வைத்துள்ளனர்.

    இலங்கையில் தங்களுக்குத் தான் செல்வாக்கு உள்ளது என்பதை சீன பேரரசு, இந்த நிகழ்வின் மூலம் மீண்டும் நிரூபித்துள்ளது. பிரதமராக பொறுப்பேற்றுள்ள ராஜ பக்சே, மீண்டும் ஈழத் தமிழர்களை துன்புறுத்துவார். மேலும் சீன பேரரசின் ஆதரவுடன் இந்தியாவிலும் எதிர் விளைவுகளை ஏற்படுத்த முயற்சி செய்வார். அதை ஆரம்பத்திலேயே மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

    பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக ரணில் விக்ரமசிங்கே ஒரு புறமும், மற்றொரு பகுதியில் சிறிசேனா மற்றும் ராஜபக்சேயும் களத்தில் நின்று கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில் தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த 15 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட சம்பந்தம் தலைமையிலான குழுவினர் மிகுந்த நிதானத்துடன் செயல்பட வேண்டும். தொலை நோக்கு பார்வையுடன் நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

    தமிழகத்தில் 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க நடவடிக்கை செல்லும் என்று ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும். ஒரு வேளை 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடாது. தி.மு.க. கூட்டணியின் வெற்றிக்காக பாடுபடும்.

    சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் ஜனாதிபதி மேடைக்கு வந்த போது பா.ஜ.க. மூத்த தலைவர்கள் எழுந்து நிற்காமல் இருக்கையில் அமர்ந்திருந்த வீடியோ வெளியாகியிருந்தது. இது தனிநபர் அவமதிப்பல்ல. ஜனாதிபதிக்கு செய்யும் அவமதிப்பாகும். சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர் என்பதால் இதுபோன்று இருக்கையில் அமர்ந்து அவரை அவமதித்துள்ளனர்.

    தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் அரசு காலம் தாழ்த்தி வருவது ஜனநாயகத்துக்கு விரோதமானது. இதனால் மாவட்டங்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #ViduthalaiChiruthaigalKatchi #Thirumavalavan
    ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டு விடும் என்ற அச்சத்தில் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் திரும்பி வர வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார்கள் என்று அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி கூறி உள்ளார். #ADMK #Rathinasabapathy
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை தொகுதி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதி ‘மாலை மலர்’ நிருபரிடம் கூறியதாவது:-

    அரசுக்கு எதிராக செயல்பட்டதாகவும், அ.தி.மு.க. அரசை ஊழல் அரசு என்று பேசி வருவதாகவும், நான் உள்பட 4 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளதாகவும் தினந்தோறும் பத்திரிகை, தொலைக்காட்சி செய்திகளில் மட்டுமே வருகிறது.

    இதுவரை எனக்கு விளக்கம் கேட்டு எந்த ஒரு நோட்டீசும் வரவில்லை. அப்படி நோட்டீஸ் வந்தால் என்னையும் சேர்த்து 4 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தி முடிவு எடுப்பேன்.

    அ.தி.மு.க. என்பது ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும் என்று முதலில் வலியுறுத்தியவன் நான் தான். எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, அம்மாவால் கட்டிக்காக்கப்பட்டு இன்று தமிழக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கட்சி உடையக் கூடாது என்று முதல் குரல் கொடுத்தவனும் நான் தான்.

    இன்று மக்கள் செல்வாக்கு என்பது டி.டி.வி.தினகரனுக்கு மட்டும்தான் இருக்கிறது. எனவே அனைவரும் ஒன்று சேரவேண்டும் என்று தெரிவித்து வருகிறேன். பொதுச் செயலாளர் சசிகலா தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்பதே ஒட்டுமொத்த அ.தி.மு.க.வினரின் விருப்பம்.



    பிரச்சினை எழுந்தபோது தற்போதைய ஆட்சி பலமாக இருந்ததால் நான் கூறியதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கேட்கவில்லை. ஆனால் இன்றைய நிலையில் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டு விடும் என்ற அச்சத்தில் பிரிந்து சென்ற அ.தி.மு.க.வினர் மீண்டும் திரும்பி வர வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார்கள்.

    அதற்கான காலம் கடந்து விட்டது. மீண்டும் அனைவரும் ஒன்று சேருவார்கள் என்ற நிலை இனியும் வராது என்று தான் நினைக்கிறேன். ஏனென்றால் கட்சியை காப்பாற்றி தமிழக மக்களுக்கு நல்லதொரு ஆட்சியை வழங்கவேண்டும் என்ற எண்ணம் இருப்பதாக தோன்றவில்லை. அதையும் தாண்டி முதல்வரின் வேண்டுகோளை ஏற்று அனைவரும் ஒன்று சேர்வார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #Rathinasabapathy

    அன்னவாசல் அருகே கல்லூரி மாணவி கடத்தப்பட்டது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    விராலிமலை:

    தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியை சேர்ந்தவர் வெங்கடாசலம்.  இவரது மகள் பிரீத்தா (வயது18). இவர் புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையில் உள்ள அரசு வேளாண்மை கல்லூரியில் முதலாம் ஆண்டு விடுதியில் தங்கி படித்து வருகின்றார். இவர் கல்லூரி விடுமுறைக்கு சொந்த ஊரான பாப்பிரெட்டிபட்டிக்கு சென்று விட்டு மீண்டும் தனது தாயுடன் கல்லூரி விடுதிக்கு வந்தார்.  

    பின்னர் கல்லூரிக்கு சென்ற அவர் மீண்டும் மாலை விடுதிக்கு விரவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து கல்லூரி விடுதிகாப்பாளர் ராஜேந்திரன் பிரீத்தாவின் பெற்றோருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். 

    இதனையடுத்து பிரீத்தாவின் தந்தை வெங்கடாசலம் அன்னவாசல் போலீசில் நிலையத்தில் புகார் செய்தார். புகாரில் தர்மபுரியை சேர்ந்த தேசிங்கு என்பவர் பிரீத்தியை கடத்தி சென்று விட்டதாக கூறியுள்ளார். இது குறித்து அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
    விராலிமலை அருகே சாலை பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது கார் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவன் பரிதாபமாக இறந்தான்.
    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள பூம்மரம் கிராமத்தை சேர்ந்தவர் சரவண பெருமாள். விவசாயி. இவரது மகன் ஸ்ரீதர் (வயது 4). இவன் இன்று காலை கீரனூர்-விராலிமலை சாலை பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் எதிர் பாராதவிதமாக ஸ்ரீதர் மீது மோதியது. இதில் ஸ்ரீதர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.  

    இது குறித்து தகவல் அறிந்ததும் விராலிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஸ்ரீதர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். 

    மேலும் விசாரணையில் காரை ஓட்டி வந்தது திருச்சி கே.கே.நகரை சேர்ந்த டாக்டர் யாசப்அரபத் (வயது 34) என்பதும், அவர் ஆவூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. அவர் இன்று காலை பணிக்கு சென்ற போது இந்த விபத்து நடந்தது என தெரியவந்தது.

    இது குறித்து விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்மாறன் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    இலங்கை பிரதமராக ராஜபக்சே பதவியேற்று இருப்பது மீண்டும் 2009ஐ ஞாபகப்படுத்துகிறது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். #PonRadhakrishnan #Rajapaksa
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் துவார் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நல்வாழ்வு மையத்தை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதமர் மோடி 50 கோடி மக்களுக்காக நல்வாழ்வு திட்டத்தை தொடங்கியுள்ளார். இந்த திட்டத்தின் கீழ் ஏற்கனவே தமிழக முதல்வர் காப்பீட்டு திட்டம் இணைக்கப்பட்டுள்ளது.

    மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அரசியல் லாபத்திற்காக பா.ஜ.க.வை விமர்சனம் செய்து வருகிறார். லாபத்திற்காக அரசியல் செய்ய வேண்டிய நிலைமையில் பா.ஜ.க.வுக்கு இல்லை.

    இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருகிறது. கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. பா.ஜ.க. கூட்டணிக்காக தனது கொள்கையை மாற்றி கொள்ளாது. கூட்டணிக்காக யாரிடமும் கையேந்தக்கூடிய நிலையில் இல்லை.



    இலங்கை பிரதமராக ராஜபக்சே பொறுப்பேற்றுள்ளது மீண்டும் 2009ஐ ஞாபகப்படுத்துகிறது. இனப்படுகொலை சம்பவத்தை மக்கள் மறந்து விட மாட்டார்கள். அதுபோன்ற சம்பவம் இனி நடக்க மோடி அரசு விடாது. ஏனென்றால் அவர் தமிழர் நலனில் அக்கறை கொண்டவர்.

    கடந்த மாதம் இந்தியா வந்த ராஜபக்சே 2009 போரின் போது காங்கிரஸ், தி.மு.க. அரசுதான் எங்களுக்கு உதவி செய்தது என்று கூறி அப்ரூவராக மாறி உள்ளார். இதற்கு தி.மு.க. -  காங்கிரஸ் தரப்பிலிருந்து எந்தவிதமான பதிலும் சொல்லவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #PonRadhakrishnan #Rajapaksa
    புதுக்கோட்டை அருகே 3 வயது குழந்தை கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள குரும்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி, கூலித்தொழிலாளி. இவரது மனைவி முருகாயி. இவர்களது மகள் ஷாலினி (வயது 3). நேற்று மாலை இவள், விளையாடுவதற்காக வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன் பிறகு நீண்ட நேரமாகியும் அவள் வீடு திரும்பவில்லை.

    இதையடுத்து அவளது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் ஷாலினி பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அப்பகுதி கிராம எல்லை காட்டுப் பகுதியில் ஷாலினி இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அங்கு சென்று பார்த்தனர்.

    அப்போது அங்கு ஷாலினி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஷாலினியின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    இதுகுறித்த தகவல் அறிந்ததும் இலுப்பூர் டி.எஸ்.பி. கோபாலசந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஷாலினியை கொலை செய்த மர்ம நபர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஷாலினி இறந்து கிடந்த இடம் அருகே பிளேடுகள் கிடந்தன. இதனால் மர்ம நபர்கள் பிளேடால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது. நேற்றிரவு சிறுமி தெருவில் விளையாடி கொண்டிருந்த போது, அங்கு வந்த மர்ம நபர்கள் நைசாக பேச்சு கொடுத்து, அவளை அங்கிருந்து காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். போலீசார் விசாரணை முடிவில் சிறுமி கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

    சிறுமியின் பெரியப்பா மகளுக்கு அடுத்த மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற இருந்தது. இந்தநிலையில் சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதனிடையே சிறுமி கொலை தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் இந்த செயலில் ஈடுபட்டாரா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் கொலையாளிகளை விரைவில் பிடித்து விடுவோம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
    கீரனூர் அருகே குடிபோதையில் மின்சார டிரான்பார்மரில் ஏறிய தொழிலாளி மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.
    கீரனூர்:

    புதுக்கோட்டை மாவட்ட கீரனூர் அருகே உள்ள மேலப்புதுவயல்  கிராமத்தை சேர்ந்தவர் பொன்னையா. இவரது மகன் ஆறுமுகம் (வயது 27). கூலி தொழிலாளி.

    இவர் கடந்த 22-ந் தேதி மது குடித்து விட்டு போதையில் வீட்டிற்கு நடந்து வந்தார். போதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் மேலப்புதுவயல் செல்லும் வழியில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மரில் ஏறினார். பின்னர் தனது இரண்டு கைகளால் மின்சாரகம்பியை தொட்டார்.  உடனே அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி விசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த ஆறுமுகத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் பரிதாபமாக இறந்தார். 

    இது குறித்து கீரனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாஞ்சில்குமார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    குடிபோதையில் டிரான்ஸ்பார்மரில் ஏறி மின்சாரம் பாய்ந்து இறந்த வாலிபரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    அறந்தாங்கி அருகே பேருந்தை விட்டு கீழே இறக்கியதால் ஆத்திரம் அடைந்த வாலிபர் பஸ் கண்ணாடியை உடைத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் மண மேல்குடியைச் சேர்ந்தவர் நீலகண்டன் (வயது 21). இவரது மனைவி நந்தினி (வயது 20). நேற்று இவர்கள் இருவரும் அறந்தாங்கியில் இருந்து ஏம்பல் செல்லும் அரசு பேருந்தில், நந்தினியின் பெற்றோர் ஊரான குண்டக வயலுக்கு புறப்பட்டனர். 

    மது குடித்துவிட்டு போதையில் இருந்த நீலகண்டன் அவரது மனைவி நந்தினியை பேருந்திற்குள் வைத்து தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் முகம் சுளித்தனர். இதைத் தொடர்ந்து துரையரசபுரம் அருகே பேருந்து ஓட்டுனர் காளிமுத்து பேருந்தை நிறுத்தி நீலகண்டனையும், அவரது மனைவி நந்தினியையும் பேருந்தை விட்டு கீழே இறக்கி விட்டார். 

    இதில் ஆத்திரமடைந்த நீலகண்டன் பேருந்து ஓட்டுனரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், பேருந்தின் கண்ணாடியையும் உடைத்துள்ளார். இதுகுறித்து பேருந்து ஓட்டுனர் காளிமுத்து, ஆவுடையார்கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் பேருந்து கண்ணாடியை உடைத்ததாக நீலகண்டனை கைது செய்தனர். 
    ஆலங்குடி- லாலாப்பேட்டையில் நடந்த சாலை விபத்தில் முதியவர் மற்றும் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    ஆலங்குடி:

    ஆலங்குடி அருகேயுள்ள பாப்பான்விடுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 65). இவர் கடந்த 17-ந் தேதி ஆலங்குடியிலிருந்து சைக்கிளில் வீடு திரும்பினார். பாப்பான்விடுதி பஸ்நிறுத்தம் அருகே சென்ற போது பின்னால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள், சைக்கிள் மீதுமோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. 

    இதில் படுகாயம் அடைந்த சுப்பிரமணியை சிகிச்சைக்காக  தஞ்சாவூர் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி பரிதாபமாக  இறந்தார். 

    இது குறித்து ஆலங்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய நபரை தேடி வருகிறார்கள்.  

    லாலாபேட்டை அடுத்த பிள்ளபாளையத்தை சேர்ந்தவர் செந்தில் (38) இவர் தொட்டியத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரி வாகன ஓட்டுனராக பணியாற்றி வந்தார். கடந்த 19-ம் தேதி லாலாபேட்டையில் இருந்து அய்யர் மலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். லாலாப்பேட்டை பாலப்பட்டி என்ற இடத்தில் சென்ற போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த கொம்பாடிபட்டியைச் சேர்ந்த அருண் (25) என்பவர் செந்தில் மீது மோதினார். 

    இந்த விபத்தில் செந்திலுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் செந்திலை மீட்டு சிகிச் சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று செந்தில் இறந்தார். 

    இது குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து அருணை கைது செய்து உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
    ×