search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான நாகராஜ்.
    X
    கைதான நாகராஜ்.

    புதுக்கோட்டை அருகே மருந்து கடை பெண் ஊழியர் மர்மமரணம்- காதலன் கைது

    புதுக்கோட்டை அருகே மருந்து கடை பெண் ஊழியர் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து அவரின் காதலனை போலீசார் கைது செய்தனர்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள குளமங்கலம் வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் சித்திரைவேலு. இவரது மகள் கஸ்தூரி (வயது 19). இவர் ஆலங்குடியில் உள்ள மருந்து கடையில் பணியாற்றி வந்தார். கடந்த 28-ந்தேதி வேலைக்கு சென்ற கஸ்தூரி அதன்பிறகுவீடு திரும்பவில்லை. அவரை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    இதைத்தொடர்ந்து கஸ்தூரியின் பெற்றோர் ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கஸ்தூரி எங்கு சென்றார் என்று விசாரணை நடத்தினர். விசாரணையில் புதுக்கோட்டை மாவட்டம் அதிரான்விடுதியை சேர்ந்த லோடு ஆட்டோ டிரைவரான கருப்பையா என்பவரின் மகன் நாகராஜ்(27) என்பவருக்கும் கஸ்தூரிக்கும் பழக்கம் இருந்து வந்ததும், சம்பவத்தன்று இருவரும் ஆலங்குடியில் இருந்து ஒன்றாக இணைந்து சென்றதும் தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் நாகராஜை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் போலீசார் விசாரணைக்கு பயந்து நாகராஜ் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

    அப்போது நாகராஜ் சென்னையில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து நாகராஜை ஆலங்குடிக்கு வரவழைத்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கஸ்தூரி இறந்திருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் நாகராஜிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

    அப்போது கஸ்தூரி சாவுக்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல் கிடைத்தது. கடந்த 28-ந்தேதி கஸ்தூரியை ஆலங்குடி ஆதனக்கோட்டை சாலையில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற நாகராஜ், அங்கு அவருடன் உடலுறவு கொண்டுள்ளார். அப்போது கஸ்தூரிக்கு நெஞ்சுவலி ஏற்படவே அவர் திடீரென மரணமடைந்துள்ளார். இதனால் என்னசெய்வதென்று தெரியாமல் திகைத்த நாகராஜ், போலீசாருக்கு தெரியாமல் இருக்க கஸ்தூரி உடலை சாக்குப்பையில் கட்டி தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள ஆற்றில் வீசி விட்டு, சென்னைக்கு தப்பி சென்றுள்ளார். இந்தநிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் சிக்கிக்கொண்டார்.

    இதனிடையே கஸ்தூரியின் உறவினர்கள், நாகராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கஸ்தூரி உடலை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
    Next Story
    ×