என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    பொன்னமராவதி அருகே ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    பொன்னமராவதி:

    தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொன்னமராவதி வட்டார கிளையின் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பொன்னமராவதி வட்டார கல்வி அலுவலகம் எதிரே வட்டார தலைவர் ராஜகோபாலன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைச்செயலாளர் புவியரசு வரவேற்று பேசினார். 

    ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் தேவகுமார், வட்டார செயலாளர் மணிக்குமார், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் தேவேந்திரன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி நிறைவுரையாற்றினார். இடைநிலை ஆசிரியர்களுக்கு 7-வது ஊதியக்குழுவில், ஆண்டு ஊதிய உயர்வு மறுக்கப்படுகிறது. இதற்கு தமிழக அரசு தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், வட்டார கிளையின் நிர்வாகிகள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
    புதுக்கோட்டை மாட்டம் விராலிமலை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
    விராலிமலை:

    திருச்சி மாவட்டம், மருங்காபுரி தாலுகா, மினிக்கியூரைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் போதுராஜ் (வயது 40). கூலித் தொழிலாளியான இவர், நேற்று வீட்டிலிருந்து சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் லஞ்சமேடு பிரிவு அருகே சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக போதுராஜ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், படுகாயம் அடைந்த போதிராஜை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த விபத்து குறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆவூர் அருகே கொத்தனார் வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகை மற்றும் ரூ.25 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    ஆவூர்:

    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகாவிற்கு உட்பட்ட சாத்திவயல் கிராமத்தை சேர்ந்தவர் கோபால் (வயது 44). கொத்தனார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர் குடும்பத்தினருடன் திண்டுக்கல்லில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். வீட்டில், கோபாலின் தாய் சின்னப்பிள்ளை (65) மட்டும் இருந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டி விட்டு 100 நாள் வேலைக்கு சின்னப்பிள்ளை சென்றிருந்தார். பின்னர் வேலை முடிந்து மாலை வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 17 பவுன் நகைகள், ரூ.25 ஆயிரம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த கோபால், திண்டுக்கல்லில் இருந்து வீடு திரும்பினார். பின்னர் இதுகுறித்து மாத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் பீரோவில் பதிவாகி இருந்த மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

    மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளையும் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    கறம்பக்குடி அருகே மது விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கறம்பக்குடி:

    கறம்பக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கறம்பக்குடி பேரூராட்சி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு அருகே இரவு மற்றும் காலை நேரங்களில் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த அண்ணாத்துரை, குமார், வீரமுத்து ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 30 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    கறம்பக்குடி பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கறம்பக்குடி:

    கறம்பக்குடி பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கறம்பக்குடி போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் கறம்பக்குடி காசிம் கொல்லை, சூரக்காடு, ஆத்தியடிப்பட்டி, கெண்டையன்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு புகையிலை பொருட்களை விற்பனை செய்த சேட்டு (வயது 58), ரவி (42), முகமது இக்பால் (40), இதயத்துல்லா ( 60), கார்த்திக் (27), திருமண நாதன் (22), பாலச்சந்தர் (47) ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 70 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
    13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கங்கானிப்பட்டியை சேர்ந்தவர் காடப்பன் (வயது 66). கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், கடந்த 12-3-2019 அன்று 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை மிரட்டல் விடுத்தார். அந்த சிறுமி மனவளர்ச்சி குன்றியவர் என்றும் கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக திருமயம் அனைத்து மகளிர் போலீசார், காடப்பன் மீது போக்சோ சட்டம் உள்பட 4 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.

    ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி காடப்பனுக்கு போக்சோ சட்டத்தில் 2 பிரிவுகளில் தலா 5 ஆண்டுகளும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த சிறுமி என தெரிந்தும் பாலியல் துன்புறுத்தல் செய்ததற்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், கொலை மிரட்டல் விடுத்ததற்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், இதனை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி டாக்டர் சத்யா நேற்று தீர்ப்பளித்தார்.

    அதன்படி அவர் 5 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். மேலும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஏற்கனவே ரூ.2½ லட்சம் வழங்கப்பட்டுள்ள நிலையில் மேலும் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். இதையடுத்து காடப்பனை திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
    வருகிற சட்டமன்ற தேர்தலில் கமல் கட்சியுடன் ஆம் ஆத்மி கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று மாநில தலைவர் வசீகரன் தெரிவித்துள்ளார்.

    புதுக்கோட்டை:

    ஊழலை ஒழிக்க வலியுறுத்தி ஆம் ஆத்மி கட்சி சார்பில் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை யாத்திரை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்த யாத்திரை புதுக்கோட்டை வந்தது. அப்போது கட்சியின் மாநில தலைவர் வசீகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வருகிற சட்டசபை தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் ஆம் ஆத்மி கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தேர்தல் பிரசாரத்துக்காக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தமிழகம் வருகிறார்.

    ஊழலை ஒழிப்பதற்காக யார் அரசியலுக்கு வந்தாலும் வரவேற்கிறோம். தமிழக அரசு தற்போது தொடங்கியுள்ள மினி கிளினிக் திட்டத்தை ஏற்கனவே டெல்லியில் கெஜ்ரிவால் தொடங்கி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

    தமிழக அரசும் இந்த திட்டத்தை தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் செயல்படாமல் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களையும் செயல்பட வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    கறம்பக்குடி அருகே உள்ள மருதன் கோன்விடுதி நால் ரோட்டில் அரசு கலை அறிவியல் கல்லூரி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    கறம்பக்குடி:

    கறம்பக்குடி அருகே உள்ள மருதன் கோன்விடுதி நால் ரோட்டில் அரசு கலை அறிவியல் கல்லூரி இந்திய மாணவர் சங்கத்தின் (எஸ்.எப்.ஐ) சார்பில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜனார்த்தனன் தலைமை தாங்கினார்.

    இதில் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசின் விவசாய சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.
    அன்னவாசல் அருகே புகையிலை பொருட்கள் விற்ற 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    அன்னவாசல்:

    இலுப்பூரில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதாக பெட்டிக்கடை உரிமையாளர் திருநாவுக்கரசு (வயது 35), முத்துக்கருப்பன் (42) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

    இதேபோல் அன்னவாசல் கீழக்குறிச்சி பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற பாலசிங்கம் (35), அங்கப்பன் (45) மற்றும் வெள்ளனூரில் விற்ற பழனிச்சாமி (48), இந்திரா (46), செல்வம் (40), கருப்பையா (36), அழகர்சாமி (42) ஆகியோர் மீதும் அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

    இதேபோல் ெநடுவாசல், மாங்காடு, வடகாடு பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற, யோகநாதன் (58), திருமுருகன் (33), கணேசன் (46), நேரு (46) ஆகியோர் மீது வடகாடுபோலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    வடகாடு அருகே புகையிலை பொருட்கள் விற்ற 4 பேரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வடகாடு:

    வடகாடு அருகேயுள்ள ஆவணம் கைகாட்டி, நெடுவாசல் பகுதிகளில் வடகாடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதிகளில் உள்ள பெட்டி கடைகளில் வைத்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக, அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (வயது 30), கறம்பக்காடு பகுதியை சேர்ந்த ஜமீர்கான் (37), பெரியநாயகிபுரம் ஆவணத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் (63), நெடுவாசலை சேர்ந்த பாஸ்கர் (45) ஆகிய 4 பேர் மீது வடகாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கீரனூர் அருகே கார் வாங்க சேமித்து வைத்திரந்த 6 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    கீரனூர்:

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள கல்லுக்குமியல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 62). இவர் சைக்கிளில் டீ, பால், காப்பி மற்றும் கார வகைகள் விற்று பிழைப்பு நடத்தி வந்தார். இவரது மகன் சக்தி வாடகை கார் ஓட்டி வருகிறார்.

    இந்தநிலையில் சக்தி சொந்தமாக கார் வாங்க நினைத்து, சிறுக, சிறுக சேமித்து தலா ஒரு பவுன் எடையுள்ள 5 மோதிரம், ஒரு பவுன் தங்க சங்கிலியும் மற்றும் மேலும் ரூ.2 லட்சம் கடனும் வாங்கி வீட்டில் உள்ள பீரோவில் வைத்து இருந்தார்.

    இந்தநிலையில் வெளியூர் சென்று இருந்த தந்தையும், மகனும் நேற்று வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே  சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த மோதிரங்கள், தங்க சங்கிலி, ரூ.2 லட்சம் ஆகியவை திருடப்பட்டு இருந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், இதனை திருடி சென்றுள்ளனர்.

    இது குறித்து ஜெகநாதன் கீரனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை திருடிய ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
    ஆலங்குடி அருகே குளத்தில் குளிக்க சென்ற பள்ளி மாணவி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள கணபதிபுரத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் அஞ்சலி (வயது 15). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் ஆலங்குடி அருகே குழந்தைவிநாயகர் கோட்டை பகுதியில் உள்ள உறவினர் சிவக்குமார் என்பவர் வீட்டுக்கு வந்து இருந்த அவர் ஒருசிறுமியுடன் அங்குள்ள பெரியகுளத்துக்கு குளிக்க சென்றார். 

    இந்தநிலையில் ஆழமான பகுதிக்கு சென்ற அவருக்கு நீச்சல் தெரியாததால் குளத்தில் மூழ்கினார். இதைபார்த்த அவருடன் சென்ற சிறுமி கூச்சல் போட்டார். அப்போது, அங்கு மரம்வெட்டும் பணியில் இருந்த தொழிலாளர்கள் விரைந்து வந்து அஞ்சலியை மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

    இது குறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×