என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • ஆசிரியர்களுக்கு 2-ம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி பரமத்தி வட்டார வள மையம் சார்பில் பரமத்தி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
    • பயிற்சியை முதுநிலை விரிவுரையாளர் வேலு, வட்டார கல்வி அலுவலர் கவுரி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் சுபா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தியில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் 4 மற்றும் 5-ம் வகுப்பு கற்பிக்கும் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 2-ம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி பரமத்தி வட்டார வள மையம் சார்பில் பரமத்தி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    பயிற்சியை முதுநிலை விரிவுரையாளர் வேலு, வட்டார கல்வி அலுவலர் கவுரி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் சுபா ஆகியோர் தொடங்கி வைத்தனர். இணை இயக்குநர் ராஜேந்திரன் பயிற்சியை பார்வையிட்டு ஆசிரியர்களுக்கு வகுப்பறை செயல்பாடுகளுக்கு அப்பாற்பட்டு மாணவர்களுக்கு படைப்பாற்றல் சிந்தனைகள் வளர்த்தல், அன்றாட வாழ்வியலில் கணக்குகளின் பயன்பாடு, தற்கால சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாணவர்களை அணுகி அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் முறை ஆகியவை குறித்து அறிவுரை வழங்கினார்.

    தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடத்தில் புதிய இணைப்புகள் மற்றும் செயல்பாடுகளை மாவட்ட அளவில் பயிற்சி பெற்ற கருத்தாளர்களால் விளக்கம் அளிக்கப்பட்டது. பயிற்சியில் 61 தொடக்க நிலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

      பரமத்திவேலூர்:

      நாமக்கல் மேட்டு தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மகன் ஜெகநாதன் (வயது 32). இவர் நாமக்கல் பஸ் நிலையம் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் பாரில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

      இழுத்துச் செல்லப்பட்டார்

      இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் பார்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் ஜெகநாதன் மற்றும் அவரது உறவினர்கள் ஜேடர்பாளையம் காவிரி ஆற்றின் தடுப்பணையில் குளித்துக் கொண்டிருந்தனர்.

      அப்போது ஜெகநாதன் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டார். அவரை ேஜடர்பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் உதவியுடன் பரிசல், மீன்பிடி படகு மூலமாக தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் தண்ணீரில் மாயமாகி இன்றுடன் 7 நாட்கள் ஆகிறது.

      இன்று 7-வது நாளாக தொடருகிறது

      இன்றும் 7-வது நாளாக தொடர்ந்து காலை முதல் காவிரி ஆற்றில் மீண்டும் ஜெகநாதனை தேடி வருகின்றனர்.

      7 நாட்கள் ஆகியும் ஜெகநாதனை கண்டுபிடிக்க முடியாததால் அவரது குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் உள்ளனர். ஜெகநாதன் என்ன ஆனார்? என்பது குறித்து எந்த தடயங்களும் கிடைக்காததால் போலீசார் செய்வதறியாது உள்ளனர்.

      • தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் 2-ம் பருவத்திற்கான பயிற்சி வட்டார அளவில் 2 கட்டமாக வட்டார கல்வி அலுவலர் அருண் தலைமையில் நடைபெற்றது.
      • இதில் வட்டார வள மைய பார்வையாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார்.

      எருமப்பட்டி:

      நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியில் உள்ள வட்டார வள மையத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வள மையம் சார்பில் எருமப்பட்டி ஒன்றியத்தில் பணியாற்றும் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் 2-ம் பருவத்திற்கான பயிற்சி வட்டார அளவில் 2 கட்டமாக வட்டார கல்வி அலுவலர் அருண் தலைமையில் நடைபெற்றது.

      பயிற்சி

      முதற்கட்டமாக 1 முதல் 3-ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு 3, 4 -ந் தேதி ஆகிய 2 நாட்கள் பயிற்சி நடைபெற்றது. 2-ம் கட்டமாக 4-ம் வகுப்பு, 5-ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு 5, 6-ந்தேதிகளில் பயிற்சி நடைபெற்றது.

      இதில் வட்டார வள மைய பார்வையாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மணிவண்ணன் பயிற்சியினை பார்வையிட்டு எண்ணும் எழுத்தும் பயிற்சி குறித்த சிறப்பு தகவல்களை வழங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுமதி பயிற்சியை கண்காணித்தார்.

      புதுமைகள்

      இதில் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பாடத்திட்டத்தின் புதுமைகள், மாதிரி வகுப்புகள், கற்றல், துணை கல்விகள் பயன்படுத்தும் உத்திகள், வரைபடம் வரைதல், கடிதம் எழுதுதல் போன்றவற்றை மாணவர்களுக்கு எளிமையாக கற்பித்தல் தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டது. கருத்தாளர்களாக எருமப்பட்டி வட்டார ஆசிரியர்கள் செயல்பட்டனர்.

      இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் பானுமதி மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் செய்திருந்தனர்.

      • 2023-2024-ம் ஆண்டிற்கான முதல் அரையாண்டிற்கு சொத்து வரியினை செலுத்துவதற்கான கால அவகாசம் கடந்த 30-ந் தேதியுடன் நிறைவு பெற்றது.
      • சொத்துவரியினை செலுத்த தவறியவர்களுக்கு மாதம் தோறும் ஒரு சதவீதம் அபராதம் விதிக்க வாய்ப்புள்ளது.

      குமாரபாளையம்:

      குமாரபாளையம் நகராட்சி ஆணையர் சரவணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

      குமாரபாளையம் நகராட்சி சொத்து வரி விதிப்பாளர்கள் 2023-2024-ம் ஆண்டிற்கான முதல் அரையாண்டிற்கு சொத்து வரியினை செலுத்துவதற்கான கால அவகாசம் கடந்த 30-ந் தேதியுடன் நிறைவு பெற்றது.

      சொத்துவரியினை செலுத்த தவறியவர்களுக்கு மாதம் தோறும் ஒரு சதவீதம் அபராதம் விதிக்க வாய்ப்புள்ளது. எனவே முதல் அரையாண்டு சொத்துவரியினை நகராட்சியில் உடன் செலுத்தி அபராதத்தை தவிர்க்குமாறு தெரிவிக்கபப்டுகிறது.

      மேலும் 2-ம் அரையாண்டு சொத்துவரியினை வருகிற 31-ந் தேதிக்குள் செலுத்தி 5 சதவீத சலுகை பெற்றுக்கொள்ளலாம். எனவே சொத்துவரி செலுத்துபவர்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி 5 சதவீத சலுகையினை பெற்று பயன்பெறலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

      • மணிமேகலை (29) என்பவர் வீட்டின் வெளியே படுத்து தூங்கி கொண்டிருந்த போது 5 பவுன் தாலிக்கொடியை கடந்த 2016-ம் ஆண்டு மர்ம நபர் ஒருவர் கொள்ளை அடித்து சென்றார்.
      • மணிகண்டன்(59) என்பவர் திருடியது தெரியவந்தது. எருமப்பட்டி போலீசார் அவரை கைது செய்தனர்.

      கொல்லிமலை:

      சேந்தமங்கலம் அடுத்த செவிந்திப்பட்டியை சேர்ந்த பிளாஸ்டிக் பொருட்கள் வியாபாரி ராஜேஷ்கண்ணின் மனைவி மணிமேகலை (29) என்பவர் வீட்டின் வெளியே படுத்து தூங்கி கொண்டிருந்த போது 5 பவுன் தாலிக்கொடியை கடந்த 2016-ம் ஆண்டு மர்ம நபர் ஒருவர் கொள்ளை அடித்து சென்றார்.

      சம்பவம் குறித்து எருமப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் தஞ்சாவூர் மாவட்டம் வெள்ளம் கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த மணிகண்டன்(59) என்பவர் திருடியது தெரியவந்தது. எருமப்பட்டி போலீசார் அவரை கைது செய்தனர். அந்த வழக்கு நேற்று சேந்தமங்கலம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதி மன்றத்தில் விசாரணை நடந்தது. விசாரணையில் மணிகண்டனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டணையும், ரூ.1000 அபராதமும் விதித்து நீதிமன்ற நீதிபதி ஹரிஹரன் தீர்ப்பளித்தார்.

      மணிகண்டன் உட்பட அவரது உறவினர்கள் 5 பேர் பல்வேறு வேலைகள் செய்து கொண்டு வீடுகளை நோட்டம் மிட்டு இரவு நேரத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேருக்கு தண்டணை வழங்கப்பட்டுள்ளது. ஒருவர் தலைமறைவாக உள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் கூறுகின்றனர்.

      • பஸ் பரமத்திவேலூர் நான்கு ரோடு பகுதியில் நின்ற போது திருமண மண்டபத்திற்கு செல்வதற்காக உமா கனகராஜ் கீழே இறங்கி உள்ளார்.
      • போலீசார் 3 பெண்களை கைது செய்து அவர்களிடம் இருந்து 15 பவுன் தங்க நகைகளை மீட்டனர்.

      பரமத்திவேலூர்:

      சென்னை மேற்கு வேளச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் உமாகனகராஜ்( 58). இவர் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் நடைபெற்ற அவரது உறவினர் வீட்டு திருமணத்திற்கு கடந்த செப்டம்பர் மாதம் 8-ந் தேதி வெள்ளிக்கிழமை அன்று மாலை கரூரிலிருந்து சேலம் செல்லும் தனியார் பஸ்சில் ஏறி பரமத்தி வேலூருக்கு வந்து கொண்டிருந்தார்.

      அப்போது பஸ் பரமத்திவேலூர் நான்கு ரோடு பகுதியில் நின்ற போது திருமண மண்டபத்திற்கு செல்வதற்காக உமா கனகராஜ் கீழே இறங்கி உள்ளார். அப்போது பஸ்சில் அவருடன் நோட்டமிட்டு வந்த 3 பெண்கள் சில்லறை காசுகளை கீழே போட்டு உமாகனகராஜ் கவனத்தை திசை திருப்பி உள்ளனர்.

      அப்போது கைப்பேக்கில் மணிபர்சில் உமாகனகராஜ் வைத்திருந்த 25 பவுன் தங்க செயினை திருடி கொண்டனர். உமாகனகராஜ் திடீரென கை பேக்கில் இருந்த மணிபர்ஸை பார்த்தபோது 25 பவுன் தங்கச் செயின் இருந்த மணி பர்சை காணவில்லை. திருட்டு போய் இருப்பது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த உமா கனகராஜ் இது குறித்து பரமத்திவேலூர் போலீசில் புகார் செய்தார்.

      புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 25 பவுன் தங்கச் செயினை மர்மநபர்கள் திருடிச் சென்ற 4 ரோடு பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான பதிவுகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்போது நகை திருட்டுகளில் ஈடுபடும் பெண்களின் பழைய குற்றப்பதிவுகளை ஆராய்ந்தனர். பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள அவர்களின் பெயர்களை ஆய்வு செய்தனர்.

      இந்நிலையில் நேற்று பரமத்திவேலூர் பஸ் நிலையத்திற்கு பின்புறம் உள்ள ஒரு கடைக்கு அருகில் 3 பெண்கள் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தனர். தகவல் அறிந்த போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று மூன்று பெண்களையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.

      விசாரணையில் இவர்கள் 3 பேரும் சேர்ந்து உமா கனகராஜ் பேக்கில் இருந்த 25 பவுன் தங்க நகையை திருடியது தெரியவந்தது. அவர்களை கைது செய்து விசாரணை நடத்திய போது, திருப்பத்தூர் அவ்வை நகர் பகுதியைச் சேர்ந்த சக்தி என்பவருடைய மனைவிகள் அமுதா (36), நந்தினி( 30), மற்றும் தேவா என்பவரது மனைவி பூமிகா என்கிற பரிமளா (25) ஆகியோர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

      இவர்கள் அனைவரும் தற்பொழுது கிருஷ்ணகிரி ராயக்கோட்டை ரோடு பெத்தனப்பள்ளி பகுதியில் குடியிருந்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து 15 பவுன் தங்க நகைகளை மீட்டனர். பின்னர் 3 பேரும் நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சேலம் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

      • பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் மரவள்ளி கிழங்குகளை பயிரிட்டுள்ளனர்.
      • மரவள்ளிக்கிழங்கில் உள்ள ஸ்டார்ச் சத்து அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

      பரமத்தி வேலூர்:

      நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் மரவள்ளி கிழங்குகளை பயிரிட்டுள்ளனர். மரவள்ளி கிழங்குகளை சவ்வரிசி தயாரிக்கும் மில் அதிபர்கள் பல ரக சவ்வரிசி களாகவும், கிழங்கு மாவு போன்றவைகளை தயார் செய்கின்றனர். மரவள்ளிக்கிழங்கில் உள்ள ஸ்டார்ச் சத்து அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதே போல் சவ்வரிசி விலை உயரும் போதும், விலை வீழ்ச்சி அடையும் போதும் சேகோசர்வ் மூலம் மரவள்ளி கிழங்குகளுக்கு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த வாரங்களில் மரவள்ளிக்கிழங்கு சவ்வரிசி தயாரிக்கும் மில் அதிபர்கள் ஒரு டன் ரூ.12 ஆயிரத்துக்கு வாங்கிச் சென்றனர்.

      சிப்ஸ் தயாரிப்பவர்கள் ஒரு டன் மரவள்ளிக்கிழங்கை ரூ13000 க்கு வாங்கிச் சென்றனர். நேற்று சவ்வரிசி தயாரிக்கும் அதிபர்கள் ஒரு டன் மரவள்ளி கிழங்கு ரூ. 12ஆயிரத்து 700-க்கு வாங்கிச் சென்றனர். சிப்ஸ் தயாரிப்பவர்கள் ரூ 14 ஆயிரத்துக்கு வாங்கிச்சென்றனர். 

      • பொதுப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் பல மாதங்களாக வருவாய்த்துறைக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
      • வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

      வாழப்பாடி:

      சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டம் கவர்கல்பட்டி, சென்றாயன்பாளையம், வி.மன்னார்பாளையம், டி.பெருமாபாளையம் ஆகிய கிராமங்களில் பொதுப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் பல மாதங்களாக வருவாய்த்துறைக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

      இந்த கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வாழப்பாடி வட்டத் தலைவர் பழனிமுத்து தலைமையில் வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

      இந்த போராட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் அன்பழகன், ராமமூர்த்தி, பி.தங்கவேலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வாழப்பாடி தாலுகா செயலாளர் தங்கவேலு மற்றும் சீனிவாசன், ராஜா, கணேசன், விவசாயிகள் பலரும் கலந்து கொண்டனர்.

      விவசாயிகளின் கோரிக்கை மனு பெற்றுக் கொண்ட தாசில்தார் ஜெயந்தி தலைமையிலான வருவாய்த்துறையினர், விவசாயிகள் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதன்பேரில் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

      • பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 113 ஆக பிசிசி அறிவித்துள்ளது.
      • முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 106 ஆக தென்னிந்திய கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

      நாமக்கல்:

      நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன.

      தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), கடந்த மே மாதம் முதல் தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. இதை அனைத்து பண்ணையாளர்களும் கடைபிடித்து வருகின்றனர்.

      இந்த நிலையில் நேற்று நடைபெற்ற என்இசிசி கூட்டத்தில் முட்டை விலை 5 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 4.95 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இதை அனைத்து பண்ணையாளர்களும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்றும், என்இசிசி விலையை விட முட்டை விலையை குறைத்து விற்பனை செய்ய வேண்டாம் எனவும், என்இசிசி மற்றும் தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

      பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 113 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 106 ஆக தென்னிந்திய கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

      • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொரி தயார் செய்யப்பட்டாலும் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உற்பத்தி செய்யப்படும் பொரிக்கு மக்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பு உள்ளது.
      • இதற்கு கர்நாடக மாநிலத்தில் விளையும் பவானி அரிசி மூலம் பொரி தயார் செய்யப்படுவதே காரணமாகும்.

      பரமத்திவேலூர்:

      தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொரி தயார் செய்யப்பட்டாலும் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உற்பத்தி செய்யப்படும் பொரிக்கு மக்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பு உள்ளது. இதற்கு கர்நாடக மாநிலத்தில் விளையும் பவானி அரிசி மூலம் பொரி தயார் செய்யப்படுவதே காரணமாகும்.

      விறுவிறுப்பு

      ஆயுத பூஜை பண்டிகைக்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் பரமத்திவேலூர் பகுதியில் பொரி தயாரிப்பு பணி விறுவிறுப்படைந்துள்ளது.

      பரமத்திவேலூர், சுல்தான்பேட்டையில் விறகுகளில் நெருப்பு மூட்டி மண் அடுப்பில் வைத்து தயார் செய்யப்படும் பொரி சுவையாக இருக்கும். இதனால் மக்கள் இந்த பொரிகளையே விரும்பி வாங்குகின்றனர். மொத்த ஆர்டர்களும் குவிகின்றது.

      ரூ.450 ஆக உயர்வு

      அதே சமயம் கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது பொரியின் விலையும் கடும் ஏற்றம் கண்டுள்ளது. குறிப்பாக ஒரு மூட்டை பொரி 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

      இதுகுறித்து சுல்தான்பேட்டை பொரி உற்பத்தியாளர் ராமசாமி கூறியதாவது:-

      பரமத்திவேலூர் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பொரியை நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சி மாவட்டங்களை சேர்ந்த மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.

      சுவை மிகுந்தது

      உப்பு, சோடா, எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து பொரி தயார் செய்யப்படுகிறது. அதனால் மற்ற பகுதிகளில் தயார் செய்யப்படும் பொரியை காட்டிலும் இங்கு தயாராகும் பொரியின் சுவை அலாதியாக இருக்கும். கர்நாடகா மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் பவானி நெல்லை கொள்முதல் செய்து பொரி தயாரிக்கப்படுகிறது.

      கடந்த ஆண்டு 50 பக்கா கொண்ட ஒரு மூட்டை பொரி 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சீசன் நெருங்கும் சமயத்தில் அதன்விலை 400 ரூபாயாக உயரும்.

      ஆனால் நடப்பாண்டில் தற்போதே விலை உயர்ந்து ஒரு மூட்டை பொரி 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகை நெருங்கும் சமயத்தில் இதன் விலை 550 ரூபாய் வரை ஏற்றம் காண வாய்ப்புள்ளது. இந்த விலையேற்றத்துக்கு அரிசி விலை உயர்வு முக்கிய காரணம்.

      ரூ.1500 செலவாகிறது

      கர்நாடகாவில் இருந்து நெல்லை கொண்டு வந்து பொரி தயாரிப்பதற்கான செலவு 1,000 ரூபாயில் இருந்து 1,500 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால் பொரி விலை உயர்ந்துள்ளது.

      இவ்வாறு அவர் கூறினார்.

      • இவரது மனைவி திருமணமான 3 மாதத்தில் பிரிந்து சென்று விட்டார். இதனால் தந்தை வீடு அருகே உள்ள லைன் வீட்டில் வாடகைக்கு தனியாக வசித்து வந்தார்.
      • தனபாலின் குடும்பத்தினரை பற்றி கார்த்திகேயன் இழிவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அவர்களை அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

      குமாரபாளையம்:

      நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நாராயண நகர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (38). எலக்ட்ரீசியன்.

      இவரது மனைவி திருமணமான 3 மாதத்தில் பிரிந்து சென்று விட்டார். இதனால் தந்தை வீடு அருகே உள்ள லைன் வீட்டில் வாடகைக்கு தனியாக வசித்து வந்தார்.

      குடிப்பழக்கம் காரணமாக கார்த்திகேயன் தினமும் வீட்டிற்கு போதையில் வருவார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நண்பரான தனபால் (45) மற்றும் சிலருடன் கார்த்திகேயன் மது குடித்துள்ளார். அப்போது தனபாலின் குடும்பத்தினரை பற்றி கார்த்திகேயன் இழிவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அவர்களை அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

      போதை தலைக்கேறிய தனபாலுக்கு குடும்பத்தை இழிவாக பேசிய கார்த்திகேயன் மீது ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நள்ளிரவு 12 மணியளவில் கார்த்திகேயன் வீட்டிற்கு சென்று கதவை தட்டியுள்ளார். அவர் வெளியே வந்ததும் குடும்பத்தினரை பற்றி இழிவாக பேசியதற்காக மன்னிப்பு கேட்கும்படி கூறியுள்ளார். ஆனால், கார்த்திகேயன் மறுத்துவிட்டார்.

      இதனால் மீண்டும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை போட்டுக்கொண்டனர். இதில் வீட்டு வாசலில் தடுமாறி விழுந்த கார்த்திகேயனை தனபால் கத்தியை எடுத்து அவரது கழுத்தை அறுத்து படுகொலை செய்து விட்டு ஓடிவிட்டார். அப்போது கார்த்திகேயன் கதறி துடித்துள்ளார். ஆனால், போதையில் வழக்கம்போல் கூச்சல் போடுவதாக நினைத்து அருகில் வசிப்பவர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து சிறிது நேரத்தில் கார்த்திகேயன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

      நேற்று காலை அவ்வழியாக சென்றவர்கள் கார்த்திகேயன் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து குமாரபாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் தவமணி, கார்த்திகேயன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

      இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் பெயிண்டர் வேலை பார்க்கும் தனபால் உள்பட 2 பேரை பிடித்து வந்து விசாரித்து வருகின்றனர்.

      • நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே கொக்கராயன்பேட்டை பகுதியில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உள்ளது.
      • 12 வயது சிறுவன் ஒருவர் ஷட்டர் வழியே டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உள்ளே நுழைந்து கல்லாவில் இருந்த பணத்தை திருடி சென்று உள்ளான்.

      பள்ளிபாளையம்:

      நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே கொக்கராயன்பேட்டை பகுதியில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உள்ளது.

      சம்பவத்தன்று காலை ஷட்டரை பாதியளவு மூடிவிட்டு அங்குள்ள பணியாளர்கள் பொருட்கள் பாக்கெட் போடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

      அப்போது சுமார் 12 வயது சிறுவன் ஒருவர் ஷட்டர் வழியே டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உள்ளே நுழைந்து கல்லாவில் இருந்த பணத்தை திருடி சென்று உள்ளான்.

      இந்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவானது.

      கல்லாவில் இருந்த பணம் காணாமல் போனதால் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவை பணியாளர்கள் பார்த்தனர். அதில் சிறுவன் கைவரிசை காட்டியது தெரியவந்துள்ளது.

      அந்த சிறுவன் அதே பகுதியை சேர்ந்தவர் என்பதால் சிறுவனையும், அவரது பெற்றோரையும் நேரில் அழைத்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது.

      ×