search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமாரபாளையம் அருகே எலக்ட்ரீசியன் கொலை
    X

    குமாரபாளையம் அருகே எலக்ட்ரீசியன் கொலை

    • இவரது மனைவி திருமணமான 3 மாதத்தில் பிரிந்து சென்று விட்டார். இதனால் தந்தை வீடு அருகே உள்ள லைன் வீட்டில் வாடகைக்கு தனியாக வசித்து வந்தார்.
    • தனபாலின் குடும்பத்தினரை பற்றி கார்த்திகேயன் இழிவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அவர்களை அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நாராயண நகர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (38). எலக்ட்ரீசியன்.

    இவரது மனைவி திருமணமான 3 மாதத்தில் பிரிந்து சென்று விட்டார். இதனால் தந்தை வீடு அருகே உள்ள லைன் வீட்டில் வாடகைக்கு தனியாக வசித்து வந்தார்.

    குடிப்பழக்கம் காரணமாக கார்த்திகேயன் தினமும் வீட்டிற்கு போதையில் வருவார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நண்பரான தனபால் (45) மற்றும் சிலருடன் கார்த்திகேயன் மது குடித்துள்ளார். அப்போது தனபாலின் குடும்பத்தினரை பற்றி கார்த்திகேயன் இழிவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அவர்களை அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

    போதை தலைக்கேறிய தனபாலுக்கு குடும்பத்தை இழிவாக பேசிய கார்த்திகேயன் மீது ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நள்ளிரவு 12 மணியளவில் கார்த்திகேயன் வீட்டிற்கு சென்று கதவை தட்டியுள்ளார். அவர் வெளியே வந்ததும் குடும்பத்தினரை பற்றி இழிவாக பேசியதற்காக மன்னிப்பு கேட்கும்படி கூறியுள்ளார். ஆனால், கார்த்திகேயன் மறுத்துவிட்டார்.

    இதனால் மீண்டும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை போட்டுக்கொண்டனர். இதில் வீட்டு வாசலில் தடுமாறி விழுந்த கார்த்திகேயனை தனபால் கத்தியை எடுத்து அவரது கழுத்தை அறுத்து படுகொலை செய்து விட்டு ஓடிவிட்டார். அப்போது கார்த்திகேயன் கதறி துடித்துள்ளார். ஆனால், போதையில் வழக்கம்போல் கூச்சல் போடுவதாக நினைத்து அருகில் வசிப்பவர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து சிறிது நேரத்தில் கார்த்திகேயன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

    நேற்று காலை அவ்வழியாக சென்றவர்கள் கார்த்திகேயன் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து குமாரபாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் தவமணி, கார்த்திகேயன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

    இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் பெயிண்டர் வேலை பார்க்கும் தனபால் உள்பட 2 பேரை பிடித்து வந்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×