என் மலர்tooltip icon

    கரூர்

    • கரூர் கசப்-இன்ஸ்பெக்டரை பணி செய்ய விடாமல் தடுத்தவர் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது
    • இ-சலான் மிஷினை சேதப்படுத்தியதாகவும் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு

    கரூர்

    கரூர், எல்.ஜி.பி., நகரை சேர்ந்த பாலசுப்பிரமணி என்பவரது மகன் சரவணகுமார் (வயது 28) இவர், தனது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல், மனோகரா கார்னர் பகுதியில் சென்றுள்ளார். அப்போது, பணியில் இருந்த போலீஸ் எஸ்.ஐ., சண்முக வடிவேல், அபராதம் விதித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சரவண குமார், எஸ்.ஐ., சண்முக வடிவேலுவை, பணி செய்ய விடாமல் தடுத்து, இ-சலான் மெஷினை சேதப்படுத்தியுள்ளார். இதுகுறித்து, எஸ்.ஐ., சண்முகவடிவேல் கொடுத்த புகார்படி, சரவணகுமார் மீது, கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

    • கரூர் மாவட்ட எறிபந்து அணிக்கு அரவக்குறிச்சி அரசு கலலூரி மாணவி நந்தீஸ்வரி தேர்தெடுக்கப்பட்டு உள்ளார்
    • மாவட்ட அணிக்கு தேர்வான மாணவியை, முதல்வர், பேராசிரியர்கள் பாராட்டினர்

    கரூர்,

    தமிழ்நாடு எறிபந்து கழக அனுமதியுடன், சேலம் மாவட்ட எறிபந்து விளையாட்டு சங்கம் சார்பில், 19 வயதுக்குட்பட்ட மாநில அளவிலான எறிபந்து போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் கரூர் மாவட்ட அணியில் விளையாட, அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவி நத்தீஸ்வரி தேர்வு பெற்றுள்ளார். மாவட்ட அணிக்கு தேர்வான மாணவியை கல்லுாரி முதல்வர் வசந்தி மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.

    • குளித்தலை அடுத்த சூரியனூரை சேர்ந்த வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது
    • தாயை காப்பாற்ற சென்றதால் மகனுக்கு அரிவாள் வெட்டு காயம்

    கரூர்

    குளித்தலை அடுத்த, சூரியனுாரை சேர்ந்தவர் விஜய் (வயது 25). விவசாயி கூலி தொழிலாளி. அதே ஊரை சேர்ந்த பாரிவேந்தன் (32), கூலி தொழிலாளி. பாரிவேந்தன், விஜயை தகாத வார்த்தை பேசி திட்டியுள்ளார். இது குறித்து விஜய் அவருடைய தாயிடம் தெரிவித்தார்.

    இது குறித்து தட்டி கேட்க வந்த விஜய் தாயை , பாரிவேந்தன் அரிவாளால் வெட்ட முயலும் போது, அதை தடுத்த விஜயின் கையில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் விஜய்க்கு ரத்தகாயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் விஜயை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். குளித்தலை போலீசார், பாரிவேந்தன் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    • சமீபத்தில் சரவணனை தொடர்பு கொண்ட ஒரு குழு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு இந்த வகை நாய் குட்டி வேண்டும் என்று கூறினர்.
    • நான் வளர்த்த நாய்க்கு ட்டியை ராகுல் காந்தி ஆசையாக பெற்று கொண்டார்.

    கரூர்:

    கரூர் சின்னாண்டாங் கோவில் எல்.பி.ஜி. நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 32). வீட்டு உபயோக ஜவுளி ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். நாய்கள் வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட இவர் வெளிநாட்டு நாய்களை இறக்குமதி செய்து வளர்த்து விற்பனை செய்து வருகிறார்.

    ரஷ்யாவின் ஜாக் ரசல் டெரியர் வகையை சேர்ந்த இரண்டு ஜோடி நாய்க்குட்டிகளை 10 ஆண்டுகளுக்கு முன்பு இறக்குமதி செய்தார். தற்போது அவை ஈன்று வரும் குட்டிகளை விற்பனை செய்து வருகிறார்.

    இந்த அரிய வகை நாய்கள் குறித்த தகவல்களை அவர் வலைதளங்களில் வெளியிடுவார். அதைப் பார்த்த கேரளா போலீசார் கடந்த ஆண்டு கரூர் வந்து 4 குட்டிகளை வாங்கிச் சென்றனர்.

    இதற்கிடையே சமீபத்தில் சரவணனை தொடர்பு கொண்ட ஒரு குழு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு இந்த வகை நாய் குட்டி வேண்டும் என்று கூறினர்.

    பின்னர் கடந்த மாதம் கரூரில் உள்ள அவரது அலுவலகத்திற்கு ராகுலின் உதவியாளர்கள் வந்தனர். பின்னர் நாய் குட்டியின் வளர்ப்பு முறை குறித்து கேட்டு அறிந்தனர். அதன் பின்னர் கேரளா வந்த ராகுல் காந்தியை சரவணன் நேரில் சந்திக்க ஏற்பாடு செய்தனர். அதை தொடர்ந்து தொழிலதிபர் சரவணன் 3 ஜாக் ரசல் டெரியர் வகை நாய் குட்டிகளுடன் அவரை சந்தித்தார்.

    அப்போது மூன்றில் ஒரு குட்டியை ராகுல் காந்தி தேர்வு செய்தார். அந்த நாய்க்குட்டி பிறந்து 40 நாட்கள் மட்டுமே ஆகியிருந்தது. அதனால் மீண்டும் கரூருக்கு கொண்டு வரப்பட்டு 60 நாட்கள் ஆன பின்னர் அதனை டெல்லி க்கு எடுத்துச் சென்று ராகுல் காந்தி வீட்டில் அவரிடம் சரவணன் நேரில் வழங்கினார். இது தொட ர்பாக சரவணன் கூறும்போது,இந்த வகை நாய்கள் குடும்ப உறுப்பினர்களிடம் எளிதாக பழகும். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும். இதனால் பலரும் ஆர்வமாக வாங்கி செல்கிறார்கள்.

    நான் வளர்த்த நாய்க்கு ட்டியை ராகுல் காந்தி ஆசையாக பெற்று கொண்டார். அந்த தருணம் மகிழ்ச்சிகரமாக இருந்தது என்றார்.

    • பல்வேறு முறைகேடு புகார்கள் காரணங்களுக்காக கரூர் மாவட்ட மேலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்
    • கரூர் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் பொறுப்பை நாமக்கல் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் கூடுதலாக கவனிப்பார்

    கரூர்,

    கரூரில் டாஸ்மாக் மாவட்ட மேலாளராக பணியாற்றி வந்தவர் பி.சண்முகவடிவேல். இவர் மீது பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்த நிலையில், நிர்வாக காரணங்களுக்காக இவர் மாவட்ட மேலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். மேலும், இதுகுறித்து அடுத்த உத்தரவு வரும் வரை நாமக்கல் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் கமலக்கண்ணன், கரூர் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் பொறுப்பை கூடுதலாக வகிப்பார் எனவும், இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் டாஸ்மாக் நிர்வாக இயக்குநருக்காக பொது மேலாளர் ஐ.ஆனந்தகுமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    • தகராறு செய்து , மிரட்டல் விடுத்தவர் கைது
    • விவசாயின் சரக்கு வாகன கண்ணாடி உடைப்பு

    கரூர்,

    குளித்தலை அடுத்த, கள்ளப்பள்ளி, கருப்பத்துார் தெற்கு தெருவை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 40). விவசாயி. இவர் பொலிரோ பிக் அப் சரக்கு வாகனம் வைத்து தொழில் செய்து வருகிறார். தன் வீட்டில் இருந்தபோது, அதே ஊரை சேர்ந்த மாணிக்கம் என்பவர் வீட்டிற்கு வந்து தகாத வார்த்தையில் பேசி திட்டி, தகராறு செய்து வீட்டில் நிறுத்தி வைத்த பொலிரோ பிக் அப் சரக்கு வாகனத்தின் கண்ணாடியை உடைத்து, கொலை மிரட்டல் விடுத்தார்.இது குறித்து பாண்டியன் கொடுத்த புகார்படி, லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணிக்கத்தை கைது செய்தனர்.

    • புன்னம் சத்திரம் மற்றும் காந்தி நகரில் குட்கா விற்ற 3 பேர் மீது வழக்கு பதிவு
    • தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த வேலாயுதம்பாளையம் போலீசார்

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே காந்திநகர் பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் காந்திநகர்பகுதியில் உள்ள அந்த கடையில் சோதனை நடத்திய போது ஏராளமான புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய வைத்திருப்பது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், விற்பனை செய்த காந்திநகர் பகுதியைச் சேர்ந்த அபுரோஜ் (59) என்பவர் மீது வழக்கு பதிந்துள்ளனர். இதே போல புன்னம் சத்திரம் அருகே உள்ள மளிகை மற்றும் டீக்கடையில் குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து, புன்னம் சத்திரம் பகுதியைச் சேர்ந்த கௌரி(45), கரியாம்பட்டி பகுதியை சேர்ந்த ராமசாமி(53) ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடைக்கு சென்ற இளம்பெண் வீடு திரும்பவில்லை
    • கணவன் போலீசில் புகார்

    கரூர்,

    குளித்தலை அடுத்த, பாப்பக்காப்பட்டி பஞ்சாயத்து பெரியகுளத்துார் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி கஸ்தூரி (வயது 23). குளித்தலை பஜனை மட வீதியில் உள்ள ஜவுளி கடைக்கு துணி வாங்க சென்றார். மீண்டும் திரும்ப வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களை தேடியும், விசாரித்தும் எந்த வித தகவலும் கிடைக்கவில்லை. தனது மனைவியை காணவில்லை என, மணிகண்டன் கொடுத்த புகார் படி, குளித் தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புகளூர் வள்ளுவர் நகர் அருகே பஸ் படிக்கட்டில் பயணம் செய்த முதியவர் கீழே விழுந்து பலி
    • மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்த சோகம்

    வேலாயுதம்பாளையம், 

    நாமக்கல் மாவட்டம் கொண்டிசெட்டிபட்டி மோகனூர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (53). இவர் கோவைக்கு சென்று விட்டு மாலை வீட்டிற்கு வருவதற்காக கரூரிலிருந்து சேலம் செல்லும் தனியார் பேருந்தில் ஏறி வந்து கொண்டிருந்தார். பேருந்தில் அதிக பயணிகள் ஏற்றப்பட்டிருந்த நிலையில் இடம் பற்றாக்குறையால் ராதா கிருஷ்ணன் பேருந்தின் படிக்கட்டில் நின்று கொண்டு வந்தார். அப்போது பேருந்து கரூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்ற பேருந்து புகளூர் வள்ளுவர்நகர் மேம்பால சர்வீஸ் ரோட்டில் சென்றது. அப்போது திடீரென பேருந்து டிரைவர் ராஜா பிரேக் அடித்துள்ளார். அப்போது படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்து கொண்டிருந்த ராதாகிருஷ்ணன் நிலை தடுமாறி பேருந்து படிக்கட்டில் இருந்து சாலையில் கீழே விழுந்தார். பலத்த காயமடைந்த அவர் ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் ராதாகிருஷ்ணனை ஆம்புலன்சில் கொண்டு செல்லும்போது செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து கொடுக்கப்பட்ட புகாரின் பேரில்வேலாயுதம்பாளையம் காவல் நிலைய போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் ரமேஷ் , பஸ் டிரைவர் ராஜா, கண்டக்டர் கலையரசன் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து பேருந்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

    • கரூர் மாவட்டம் குளித்தலை சுங்ககேட் பகுதியில் உள்ள தென்கரை வாய்க்காலில் ஆண் பிணம் கிடந்தது
    • கிராம நிர்வாக அலுவலர் சதீஷ் அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப் பதிவு செய்து தண்ணீரில் இறந்து கிடந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை

    கரூர்,

    கரூர் மாவட்டம் குளித்தலை சுங்ககேட் பகுதியில் உள்ள தென்கரை வாய்க்காலில் ஆண் பிணம் கிடப்பததாக வைகநல்லூர் வடக்கு கிராம நிர்வாக அலுவலர் சதீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து அவர் குளித்தலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு சென்ற போலீசார் நடத்திய விசாரணையில்,இறந்தவருக்கு சுமார் 40 வயது இருக்கலாம் என்று தெரிய வந்தது. உடலை முகம் உள்ளிட்ட உள்ளிட்ட இடங்களில் மீன்கள் கடித்ததற்கான அடையாளம் இருந்துள்ளது. இதனை தொடர்ந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.மேலும் இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் சதீஷ் அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப் பதிவு செய்து தண்ணீரில் இறந்து கிடந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தோகைமலை அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்
    • 5 பேர் மீது வழக்கு பதிந்து ரொக்கப்பணம், 4 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது

    கரூர்,

    தோகை மலை அருகே வடசேரி ஊராட்சி பகுதியில் பணம் வைத்து சீட்டு ஆடுவதாக தோகைமலை இன்ஸ் பெக்டர் ராஜ்குமாருக்கு தகவல் கிடைத்து உள்ளது. அதன் பேரில் வடசேரி பகுதியியில் இன்ஸ்பெக்டர் ராஜ் குமார் கண்காணிப்பில் ஈடுபட்டார். அப்போது வடசேரி சுடுகாடு பகுதியில், ஒரு கும்பல், பணம் வைத்து சீட்டு ஆடியது தெரிய வந்தது. அங்கு பணம் வைத்து சீட்டு ஆடிய வட சேரி தியாகராஜன், கேசவன், காவல்காரன்பட்டி வெள்ளிமலை, முத்துகிருஷ்ணன், நவலூர் வடிவேல், ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரொக்கப்பணம், 4 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது

    • கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் 2 கல்லுாரி மாணவிகள் மாயமாகி உள்ளனர்
    • குளித்தலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    கரூர், 

    குளித்தலை அடுத்த, மருதுார், கணேசபுரம் ஊராளி பள்ளம் பகுதியை சேர்ந்தவர் தமிழரசி. கூலித்தொழிலாளி. இவரது மகள் நமீதா. திருச்சி தனியார் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். வீட்டிலிருந்த நமீதா திடீர் என மாயமாகி உள்ளார். பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.

    இதேபோல், சேப்ளாபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சித்ரா, கூலித் தொழிலாளி. இவரது மகள் சங்கீதா. திருச்சி அரசு கலைக்கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு தமிழ் படித்து வந்தார். வீட்டிலிருந்து வெளியே சென்றவர். அதன் பின்னர் வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களை தேடியும், விசாரித்தும், எந்த தகவலும் கிடைக்கவில்லை. மாணவிகள் மாயமானது குறித்து கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் குளித்தலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    ×