என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    தாம்பரம் அருகே கள்ளக்காதல் ஜோடி வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஆவடி:

    ஆவடியை அடுத்த மோரை திருமலை நகரை சேர்ந்த திருமணமான 27 வயது இளம்பெண் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் இளம்பெண்ணுக்கும் உடன் வேலை பார்க்கும் 2 குழந்தைகளுக்கு தந்தையான 33 வயது வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது.

    இதுபற்றி அறிந்ததும் இளம்பெண்ணை அவரது கணவர் கண்டித்தார். இதற்கிடையே கடந்த 4-ந் தேதி இளம்பெண் திடீரென மாயமானார்.

    இதுபற்றி அவரது கணவர் ஆவடி டேங்க்பேக்டரி போலீசில் புகார் செய்தார். விசாரணையில் இளம்பெண் தனது கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்து இருப்பது தெரிந்தது. குழந்தைகளை தவிக்கவிட்டு சென்ற அவர்களை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் இளம்பெண் திடீரென தனது கணவரின் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது, ‘‘தாம்பரம் அருகே தங்கி உள்ளோம். நாங்கள் வி‌ஷம் குடித்து விட்டோம்.

    கடைசியாக உங்களை பார்க்க வேண்டும் வாருங்கள்’’ என்று தெரிவித்து இணைப்பை துண்டித்து விட்டார்.

    இதனால் பதறிப்போன இளம்பெண்ணின் கணவர் தாம்பரம் பகுதியில் உள்ள வீட்டுக்கு சென்று பார்த்தார். அங்கு மனைவியும், கள்ளக்காதலனும் வி‌ஷம் குடித்து மயங்கிய நிலையில் உயிருக்கு போராடியபடி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அவர்களை மீட்டு ஆவடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கள்ளக்காதல் ஜோடியின் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.16 லட்சத்து 81 ஆயிரம் மதிப்புள்ள 330 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வரும் சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள், விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.

    அப்போது துபாயில் இருந்து வந்த சென்னையை சேர்ந்த ஜாகீர் உசேன் (வயது 35) என்பவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர்.

    அதில் அவர் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.16 லட்சத்து 81 ஆயிரம் மதிப்புள்ள 330 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    மேலும் இது தொடர்பாக ஜாகீர் உசேனிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
    போகிப்பண்டிகையன்று புகை மூட்டம் உருவாகி சேவை பாதிக்கும் என்பதால் சென்னை விமான நிலையத்தை சுற்றி வசிக்கும் பொதுமக்கள் பொருட்களை எரிக்க வேண்டாம் என்று விமான நிலைய ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
    ஆலந்தூர்:

    பொங்கல் பண்டிகை நெருங்குவதையொட்டி, ‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப போகி பண்டிகை அன்று பொதுமக்கள் வீட்டில் உள்ள உபயோகமற்ற கழிவு பொருட்களை எரித்து கொண்டாடுவர். இந்த நிலையில் விமான நிலைய ஆணையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை சுற்றி மீனம்பாக்கம், பல்லாவரம், பரங்கிமலை, ஆலந்தூர், நங்கநல்லூர், பொழிச்சலூர், பம்மல், கொளப்பாக்கம், மணப்பாக்கம் போன்ற பகுதிகள் உள்ளன. அதில், கடந்த 2018-ம் ஆண்டு விமான நிலையத்தை சுற்றி உள்ள மேற்கண்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் போகி பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி, அதிக புகை தரக்கூடிய பொருட்களை எரித்ததால் ஏற்பட்ட புகை மூட்டத்தினால் சென்னை விமான நிலையத்தில் 73 புறப்பாடு விமானங்களும், 45 வருகை விமானங்களும் தரையிறங்க சிரமம் ஏற்பட்டு சேவை பாதிக்கப்பட்டது.

    அதே போல் கடந்த 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளிலும் விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில், வருகிற போகி பண்டிகையன்று விமான நிலையத்தை சுற்றி உள்ள வீடுகளில் அதிக புகை தரக்கூடிய பழைய கழிவு பொருட்களை (டயா், பிளாஸ்டிக்) எரிப்பதால் ஏற்படும் புகை மண்டலம் உருவாகி விமானநிலைய ஓடுபாதையை சூழ்ந்து கொள்ளும் நிலை ஏற்படும்.

    இதன் காரணமாக சென்னை விமான நிலையத்தை சுற்றியுள்ள குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்கள் போகியன்று அதிகமாக புகை ஏற்படக்கூடிய கழிவு பொருட்களை எரிக்க வேண்டாம் என்றும், மேலும் விமான நிலையத்தை சுற்றி உள்ள குடியிருப்பு வாசிகள் விமான சேவைகள் பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்பட ஒத்துழைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.
    நீட் பயிற்சி வகுப்பில் சரியாக படிக்காததால் மனமுடைந்த பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    தாம்பரம்:

    பம்மல், கிருஷ்ணா நகர், பாரதியார் தெருவை சேர்ந்தவர் விநாயகம். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஜனனி (வயது 17). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    இந்த நிலையில், கடந்த 14-ந்தேதி, அடையாறில் உள்ள நீட் தேர்வு பயிற்சி மையத்தின் ஆன்லைன் வகுப்பில், மகள் ஜனனியை விநாயகம் சேர்த்துள்ளார். இதையடுத்து பயிற்சி மைய ஆன்லைன் வகுப்புக்கு சென்று வந்த நிலையில், மகள் சரியாக படிக்கவில்லை என்று கூறி விநாயகம் வருத்தம் அடைந்து பேசாமல் இருந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் விநாயகம் மற்றும் குடும்பத்தினர், எழுந்து பார்த்தபோது, ஜனனி, தூக்கில் தொங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    உடனே அவரை மீட்டு, அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஜனனி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து விநாயகம் சங்கர் நகர் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவியின் சாவு குறித்து விசாரித்து வருகின்றனர். நீட் பயிற்சி மையத்தில் சரியாக படிக்காததால் மனமுடைந்த மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
    வேலை கிடைக்காத விரக்தியில் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலந்தூர்:

    சென்னை வேளச்சேரி வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 50). திருமணமானவர். சிவில் என்ஜினீயரான இவர், வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில், 2 ஆண்டுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு திரும்பி வந்தார். ஆனால் இங்கு அவருக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மிகவும் சிரமப்பட்ட அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் ரவிச்சந்திரன் தனது மனைவி குழந்தைகளுடன் தேனாம்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதையடுத்து திரும்பி வந்த ரவிச்சந்திரன் மனஉளைச்சலில் வீட்டில் இருந்த போது திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
    சென்னை:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்லும் சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் வெளிநாட்டு பணம் கடத்தப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், சுங்க இலாகா அதிகாரிகள் துபாய் செல்லும் விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளை கண்காணித்தனர். அப்போது சென்னையை சேர்ந்த மன்சூரலிகான் (வயது 27), யாகாலீக் (68), தமீம் அன்சாரி (49), முகமது உசேன் (30), யூசுப் (67), புதூரை சேர்ந்த அப்துல் ரகுமான் (38) ஆகிய 6 பேரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

    இதற்கிடையே 6 பேரும் முன்னுக்கு பின் முரணாக பதிலளிக்கவே, அவர்களது உடமைகளை சோதனை செய்தனர். அப்போது அவர்கள் வைத்திருந்த கைப்பை, பவர் பங்க் ஆகியவற்றை சோதனை செய்தனர்.

    அதில் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர்கள், யூரோ கரன்சிகள், சவூதி ரியால்கள் உள்ளிட்ட வெளிநாட்டு பணத்தை மறைத்து வைத்து கடத்தி செல்ல முயன்றதை கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து, 6 பேரிடமும் இருந்து ரூ.1 கோடியே 4 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தமீம் அன்சாரியை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள், மற்ற 5 பேரிடமும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
    உள்நாட்டு விமானத்தில் சென்னை வந்த இங்கிலாந்து பயணிகள் 4 பேரை கொரோனா பரிசோதனைக்கு பிறகு தனியார் ஓட்டலில் சுகாதார துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தி வைத்தனர்.
    ஆலந்தூர்:

    இங்கிலாந்து நாட்டில் உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் இந்தியா உள்பட சில நாடுகள் இங்கிலாந்துக்கான விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

    லண்டனில் இருந்து சென்னை வரும் விமான சேவைகள் கடந்த மாதம் 23-ந் தேதியுடன் நிறுத்தப்பட்டது. கடந்த மாதம் 24-ந் தேதி லண்டனில் இருந்து சரக்கக விமானம் சென்னைக்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த விமானிகள் உள்பட ஊழியா்கள் 9 பேரை சென்னை விமான நிலையத்தில் உள்ள சுகாதாரத்துறையினா் மருத்துவ பரிசோதனைகள் நடத்தி தனிமைப்படுத்தினா். அதன்பிறகு லண்டனில் இருந்து சரக்கு விமானமும் சென்னைக்கு வரவில்லை.

    இந்தநிலையில் இந்தியாவில் உள்ள டெல்லி, மும்பை, ஐதராபாத், பெங்களூரு விமான நிலையங்களில் இருந்து லண்டனுக்கு குறைந்த அளவு விமானங்களை இயக்க இந்திய அரசு அனுமதித்து உள்ளது.

    ஆனால் சென்னையில் இருந்து லண்டனுக்கு நேரடி விமான சேவையை தொடங்கவில்லை. சென்னையில் இருந்து லண்டன் செல்லும் பயணிகள், பெங்களூரு, ஐதராபாத்துக்கு உள்நாட்டு விமானத்தில் சென்று அங்கிருந்து லண்டன் செல்கின்றனர். இதேபோல் லண்டனில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய பயணிகளும் பெங்களூரு, ஐதராபாத் வழியாக சென்னை வரவேண்டிய நிலை உள்ளது.

    லண்டனில் இருந்து பெங்களூரு, ஐதராபாத் வழியாக உள்நாட்டு விமானத்தில் சென்னை உள்ளிட்ட தமிழகம் வரும் பயணிகளால் இங்கும் உருமாறிய கொரோனா வைரஸ் பரவும் அபாயம் ஏற்படுமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

    இந்தநிலையில் நேற்று உள்நாட்டு விமானம் மூலம் சென்னை வந்த இங்கிலாந்து நாட்டு பயணிகள் 4 பேரை அடையாளம் கண்டுபிடித்த சுகாதாரத் துறை அதிகாரிகள், அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்தனர். பின்னர் 4 பேரையும் மணப்பாக்கத்தில் உள்ள ஓட்டலில் தனிமைப்படுத்தி வைத்தனர்.

    இங்கிலாந்தில் பரவும் உருமாறிய வைரஸ் இந்தியாவில் பரவுவதை தடுக்க அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன. லண்டனில் இருந்து இந்தியாவிற்கு நேரடியாக வரும் அனைத்து விமான பணிகளுக்கும், அவா்கள் வந்திறங்கும் விமான நிலையங்களிலேயே முழுமையான மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகின்றது. அவா்களில் நோய்தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டவா்கள் மட்டுமே வெளியே அனுப்பப்படுகின்றனா்.

    உள்நாட்டு விமானங்களில் பயணிக்கவும் அனுமதிக்கப்படுகின்றனா். லண்டனில் இருந்து வந்து வேறு மாநிலங்கள் அல்லது மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் பற்றிய விவரங்களை அந்தந்த மாநில, மாவட்ட சுகாதாரத்துறைக்கு உடனடியாக தெரிவிக்கப்படுகிறது. லண்டனில் இருந்து வருபவர்கள் 14 நாட்கள் தொடா்ந்து கண்காணிக்கபடுவார்கள். எனவே பொதுமக்கள் அச்சப்பட வேண்டியதில்லை என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.
    கொரோனா ஆபத்து முழுவதும் நீங்கவில்லை. இன்னும் 2 மாதமாவது நாம் கவனமாக இருக்கவேண்டும் என சென்னை மாநகராட்சி கமிஷனர் தெரிவித்தார்.
    ஆலந்தூர்:

    சென்னை மாநகராட்சி பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து குப்பைகளை அகற்றுதல், பராமரித்தல், பொதுமக்களின் புகார்கள் மீது நடவடிக்கை எடுத்தல் போன்ற பணிகளை கண்காணிக்க ஆலந்தூரில் கண்காணிப்பு கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த மையத்தை சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் திறந்து வைத்தார். பின்னர் அவர், கண்காணிப்பு மையத்தில் செய்யப்படும் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது பணிகளை துரிதமாக செயல்படுத்துவது குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

    பின்னர் நிருபர்களிடம் பிரகாஷ் கூறியதாவது:-

    சென்னை மாநகராட்சி பகுதிகளில் அரசு ஒத்துழைப்புடன் தனியார் நிறுவனம் திடக்கழிவு மேலாண்மை பணிகளை மேற்கொண்டு வருகிறது. வீடு வீடாக சென்று குப்பைகளை வாங்க 100 முதல் 150 வீடுகளுக்கு ஒரு பேட்டரி வாகனம் தரப்பட்டு உள்ளது. இதனால் வேலைப்பளு குறைந்து உள்ளதால் குப்பைகள் அகற்றும் பணியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    இந்த கண்காணிப்பு மையத்தின் மூலம் யார் வேலைக்கு செல்லாமல் இருக்கிறார்கள். வேறு எந்த மாதிரியான பிரச்சினைகள் உள்ளன என்பதை கண்டறிந்து அடுத்த நாளே சரிசெய்யப்படும். ஒரு நபர் ஒரு நாளைக்கு எவ்வளவு குப்பைகளை சேகரிக்கிறார் என்பது உள்ளிட்ட தகவல்களையும் கண்டறிய முடியும். இது இணைய இணைப்பின் மூலம் மாநகராட்சியிலும் கண்காணிக்கப்படும். பொதுமக்களும் அறிந்து கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மழையால் சேதமடைந்த சாலைகள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருகிறது. கொரோனா ஆபத்து முழுவதும் நீங்கவில்லை.குறைந்தது இன்னும் 2 மாத காலமாவது நாம் கவனமாக இருக்க வேண்டும். எனவே திரையரங்குகளில் அரசின் வழிக்காட்டு நெறிமுறைகளை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும். முககவசம் இல்லாம் யாரையும் உள்ளே அனுமதிக்கூடாது. ஒவ்வொரு காட்சிக்கு பிறகும் கிருமி நாசினி கொண்டு திரையரங்கை சுத்தம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னை மாநகராட்சி கூடுதல் கமிஷனர் திவ்யதர்ஷினி, துணை கமிஷனர் ஆல்பி ஜான், மண்டல அலுவலர் சீனிவாசன், என்ஜினீயர்கள் முரளி, ராஜசேகர் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
    சாக்லெட் மற்றும் உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வந்த ரூ.1 கோடியே 97 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள 3 கிலோ 726 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    சென்னை:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

    அதில் வந்த சென்னையை சேர்ந்த பத்மா பாலாஜி (வயது 25) என்ற பெண்ணிடம் சந்தேகத்தின்பேரில் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பேசினார். அவரது உடைமைகளை சோதனை செய்தபோது அதில் எதுவும் இல்லை.

    இதனால் அவரை தனிஅறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் அவர், உள்ளாடைக்குள் சாக்லெட்டுகளை மறைத்து வைத்திருந்தார். அதனை பிரித்து பார்த்தபோது அவற்றுக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.28 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள 546 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

    மேலும் துபாயில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த 12 பயணிகள் மற்றும் சார்ஜாவில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த 3 பேர் என 15 பேரை சோதனை செய்தனர். அதில் அவர்கள் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.1 கோடியே 69 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 180 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

    சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் துபாய் மற்றும் சார்ஜாவில் இருந்து வந்த 16 பேரிடமும் இருந்து ரூ.1 கோடியே 97 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள 3 கிலோ 726 கிராம் தங்கத்தை பறிமுதல் சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக பத்மா பாலாஜி என்ற பெண்ணை கைது செய்தனர். மற்ற 15 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.
    காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகை மற்றும் ரூ. 70 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
    உத்திரமேரூர்:

    காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த அனுமந்தண்டலம் கூட்ரோட்டில் வசிப்பவர் சத்திய பிரசாத். இவரது மனைவி மரிய பாஸ்டினா (வயது 30). தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். தனது கணவரின் சகோதரி வீட்டு விசேஷத்திற்காக ஆவடிக்கு சென்றார்.

    இந்த நிலையில் மரிய பாஸ்டினாவின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் ஆரோக்கியமேரி இது குறித்து அவருக்கு தகவல் தெரிவித்தார்.

    உடனடியாக வீட்டுக்கு திரும்பி வந்த மரிய பாஸ்டினா வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 4 பவுன் தங்க நகை, ரூ.70 ஆயிரம் திருடப்பட்டிருந்தது. மேலும் வீட்டின் முன்புறம் நிறுத்தி வைத்திருந்த அவரது தம்பியின் மோட்டார் சைக்கிளும் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

    இது குறித்து மரியபாஸ்டினா பெருநகர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்குப்பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்.
    சென்னையில் இங்கிலாந்து விமான சேவைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை என்று சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    ஆலந்தூர்:

    கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்து செல்லும் விமானங்களை மத்திய அரசு ரத்து செய்தது. ஆனால் சிறப்பு விமானங்களை மட்டும் அந்தந்த மாநில அரசாங்கத்தின் அனுமதியோடு வெளிநாட்டு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இங்கிலாந்தில் பரவி உள்ள உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவுக்குள் பரவுவதை தடுக்கும் வகையில் கடந்த டிசம்பர் மாதம் 22-ம் தேதியிலிருந்து இங்கிலாந்துக்கு சிறப்பு விமான சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

    பின்னர் கடந்த 6-ந் தேதி முதல் லண்டனுக்கு சிறப்பு விமானங்கள் அந்தந்த மாநில அரசாங்க அனுமதியோடு இயக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து விமான சேவை இயக்கப்படுகிறது.

    சென்னையில் இருந்து இங்கிலாந்துக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மட்டும் இயக்கப்பட்டு வந்தது. தற்போது தமிழக அரசு எந்த ஒரு அனுமதியும் அளிக்காததால் சென்னை விமான நிலையத்தில் இருந்து இங்கிலாந்துக்கு விமான சேவை இயக்கப்படவில்லை.

    இதுகுறித்து சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் கேட்ட போது, ‘‘இங்கிலாந்துக்கு மாநில அரசின் அனுமதியோடு குறைந்த எண்ணிக்கையிலான விமானங்கள் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.ஆனால் தமிழக அரசு சென்னையிலிருந்து விமான சேவை தொடங்குவதற்காக எந்த ஒரு அனுமதியும் இதுவரையும் வழங்கப்படவில்லை. இதுகுறித்து மத்திய, மாநில அரசு கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கும்’’ என்று தெரிவித்தார்.

    இதற்கிடையே ஏர் இந்தியா நிறுவனம் வருகிற 19-ந் தேதி முதல் மார்ச் மாதம் 24-ந் தேதி வரை புதன்கிழமை தோறும் சென்னையில் இருந்து லண்டனுக்கும், செவ்வாய்க்கிழமை தோறும் லண்டனில் இருந்து சென்னைக்கும் விமான சேவை தொடங்கப்படும் என்று அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    காஞ்சீபுரத்தில் லாட்டரி சீட்டுகள் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் சர்வ தீர்த்த குளம் கிழக்கு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக பெரிய காஞ்சீபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்குமார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றார்.

    அப்போது லாட்டரி சீட்டுகள் விற்றதாக செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தை சேர்ந்த சதீஷ்சேகர் (வயது 49) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள், ரொக்கம் ரூ.620-ஐ போலீசார் கைப்பற்றினர்.
    ×