என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    பல்லாவரம் அருகே ‘வாட்ஸ்-அப்’பில் மனைவிக்கு தகவல் அனுப்பிவிட்டு வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    தாம்பரம்:

    சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் திருநீர்மலை சாலையில் வசித்து வந்தவர் அருண்குமார் (வயது 29). இவர், கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார்.

    இதற்கிடையில் சரியான வேலை மற்றும் குடும்பத் தகராறு காரணமாக வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் தவித்த அருண்குமார், தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தனது மனைவிக்கு ‘வாட்ஸ்-அப்’ மூலம் தகவல் அனுப்பி விட்டு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 
    இதுபற்றி சங்கர்நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    காஞ்சீபுரம் அருகே கள்ளக்காதல் விவகாரம் தொடர்பான வாலிபர் கொலை வழக்கில் தாய், மகள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தை அடுத்த களக்காட்டூர் காந்தி தெருவை சேர்ந்தவர் அருள். இவரது மகன் லிங்கமூர்த்தி (வயது32). சமையல்காரராகவும், நிலத்தரகராகவும் வேலை செய்து வந்தார்.

    கடந்த 11-ந்தேதி இரவு இவரை சில நபர்கள் கத்தியால் வெட்டியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு 12-ந் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா உத்தரவின் பேரில், காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமேகலை மேற்பார்வையில் காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தார்.

    விசாரணையில், காஞ்சீபுரம் ஆலடி தோப்பு தெரு இந்திரா நகரை சேர்ந்தவர் அம்சா (40). இவரது 2-வது கணவர் பெருமாள். இவர் அம்சாவை பிரிந்து சென்றதால் தனது 2 மகள்களுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் அம்சாவுக்கும் லிங்கமூர்த்திக்கும் பழக்கம் ஏற்பட்டு கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தனர்.

    அம்சாவின் முதலாவது மகள் ஐஸ்வர்யம் (21) , திருப்பருத்திக்குன்றத்தை சேர்ந்த ஹரிஹரன் என்கிற ஹரிஸ் 19 என்பவரை காதலித்து வந்தார்..

    ஹரிகரனை சந்தேகத்தின் பேரில் மாகரல் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தென்னரசு பிடித்து விசாரணை செய்தார்.

    விசாரணையில் லிங்கமூர்த்தி அடிக்கடி அம்சா வீட்டுக்கு வருவது ஹரிஹரனுக்கு பிடிக்கவில்லை என்பதும் அதனால் 2 முறை கைகலப்பு ஏற்பட்டதும் தெரியவந்தது.

    அம்சா வீட்டுக்கு ஹரிஹரன் வரக்கூடாது என்று லிங்கமூர்த்தி மது குடித்துவிட்டு தகராறு செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து அம்சா, அவரது மகள் ஐஸ்வர்யம் ஆகியோர் ஹரிஹரனுகக்கு தகவல் தெரிவித்தனர். ஹரிகரன் தனது நண்பரான குருவிமலை கிராமத்தை சேர்ந்த நேதாஜி (20) என்பவருடன் சேர்ந்து லிங்க மூர்த்தியை வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரிஹரன், நேதாஜி, அம்சா அவரது மகள் ஐஸ்வர்யம் ஆகியோரை கைது செய்து காஞ்சீபுரம் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்கள் குடியாத்தம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    உத்திரமேரூர் அருகே அ.தி.மு.க. நிர்வாகி வீட்டில் நகை-பணம் திருடப்பட்டது.
    உத்திரமேரூர்:

    உத்திரமேரூரை அடுத்த மானாமதி மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சிவபிரகாசம் (வயது 34). இவர் உத்திரமேரூர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. மாணவரணி செயலாளராக இருந்து வருகிறார். மேலும் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு அவர் திரைப்படம் பார்க்க சென்றதாக தெரிகிறது.

    அவரது மனைவி ரேவதி பக்கத்து தெருவில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்று இருந்தார்.

    நேற்று முன்தினம் 1½ மணி அளவில் சிவபிரகாசம் திரைப்படம் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    வீட்டுக்குள் சென்று பார்த்தபோது உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்து 6 பவுன் நகையும் ரூ.60 ஆயிரமும் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து அவர் பெருநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரித்து வருகிறார். மேலும் அங்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை ஏதாவது கிடைக்குமா என்று சோதனை செய்து பார்த்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி மூலம் கொள்ளையர்கள் வந்து போனது தெரிகிறதா என்றும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
    படப்பை அருகே குடும்ப தகராறில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    படப்பை:

    காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த செரப்பனஞ்சேரி நாவலூர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அரங்கலட்சுமி (வயது 48). இவரது மகள் பிரியதர்ஷினி (வயது 29). இவருக்கு 5 வயதில் பாலமுருகன் என்ற மகன் உள்ளான். தாயாருடன் வசித்து வந்த பிரியதர்ஷினி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இது குறித்து தகவல் அறிந்து வந்த மணிமங்கலம் போலீசார் விசாரணை செய்ததில் குடும்பத்தகராறு காரணமாக பிரியதர்ஷினியும் அவரது கணவர் மணிகண்டனும் கடந்த 5 ஆண்டுகளாக பிரிந்து வாழ்வதும் அதன் காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

    பிரியதர்ஷினியின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    காஞ்சிபுரம் அருகே வயிற்று வலி காரணமாக பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை அடுத்த செவிலிமேடு பாலாஜிநகர், அய்யங்கார் தெருவை சேர்ந்தவர் சாமி பகவதி. இவரது மனைவி நதியா (34). இவர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்று 2 குழந்தைகள் உள்ளனர்.

    நதியா நீண்ட நாட்களாக வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. வயிற்று வலி அதிகமானதால் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் காஞ்சிபுரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    சென்னை விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் தங்கம், 18 செல்போன்கள், 8 மதுபான பாட்டில்கள், சிகரெட்டுகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்
    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் ரூ.72 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 420 கிராம் தங்கம் மற்றும் ரூ.12 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள 18 செல்போன்கள், 8 மதுபான பாட்டில்கள், சிகரெட்டுகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின்பேரில் விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

    அப்போது துபாயில் இருந்து விமானத்தில் வந்த சென்னையை சேர்ந்த சையத் இப்ராகீம் கனி (வயது 27) , சாகுல் அமீது (36) ஆகிய 2 பேரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். 2 பேரும் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர்.

    அதில் விலை உயர்ந்த சிகரெட்டுகள், செல்போன்கள், மதுபான பாட்டில்கள் இருந்தன. பின்னர் 2 பேரையும் தனியறைக்கு அழைத்து சோதனை செய்தபோது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். 2 பேரிடமும் இருந்து ரூ.72 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 420 கிராம் தங்கம் மற்றும் ரூ.12 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள 18 செல்போன்கள், 8 மதுபான பாட்டில்கள், சிகரெட்டுகள் ஆகியவறையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரையும் கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள் மேலும் விசாரித்து வருகின்றனர்.
    பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு விமானங்களில் பயணம் செய்ய பொதுமக்கள் ஆர்வம் காட்டினர். இதனால் விமானங்களில் கட்டணங்களும் உயர்த்தப்பட்டன.
    சென்னை:

    சென்னையில் வசிக்கும் தென் மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள், பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்கு வசதியாக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆனாலும் சென்னையில் வசிக்கும் பலர், சொந்த ஊருக்கு விமானங்களில் செல்லவே ஆர்வம் காட்டினர்.

    இதனால் சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் செல்லும் அனைத்து விமானங்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    சென்னையில் இருந்து நேற்று தூத்துக்குடிக்கு 3 விமானங்கள் சென்றன. அந்த 3 விமானங்களிலும் அனைத்து இருக்கைகளும் நேற்று மாலைக்கு முன்னதாகவே முன்பதிவு செய்யப்பட்டு விட்டது. இதனால் அதன்பிறகு முன்பதிவு செய்ய முயன்ற பலர் விமானத்தில் செல்ல டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர்.

    மதுரைக்கு சென்ற 5 விமானங்கள், திருச்சிக்கு சென்ற 2 விமானங்களிலும் அனைத்து டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. சென்னையில் இருந்து கோவைக்கு 7 விமானங்கள் இயக்கப்படுகின்றன. அந்த விமானங்களில் மிகவும் குறைந்த அளவு டிக்கெட்டுகள் மட்டுமே இருந்தது. சென்னையில் இருந்து சேலம் செல்லும் விமானத்திலும் குறைந்த அளவு டிக்கெட்டுகளே இருந்தது.

    விமானங்களில் செல்ல பயணிகள் கூட்டம் அதிகரித்ததால் விமான டிக்கெட் கட்டணங்களும் பல மடங்கு அதிகரித்தது. தூத்துக்குடிக்கு வழக்கமாக ரூ.3 ஆயிரமாக இருக்கும் டிக்கெட் கட்டணம் நேற்று ரூ.8,500 வரை அதிகரித்தது.

    மதுரைக்கு ரூ.2,500 ஆக உள்ள டிக்கெட் கட்டணம் ரூ.6 ஆயிரம் வரையும், உயா் வகுப்பு கட்டணம் ரூ.12,500 ஆகவும் அதிகரித்து இருந்தது. திருச்சிக்கு ரூ.2,400 ஆக இருக்கும் கட்டணம் ரூ.5 ஆயிரத்துக்கும் அதிகமானது. கோவை, சேலம் விமானங்களிலும் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டு இருந்தது.

    ஆனாலும் பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் குடும்பத்தினருடன் சோ்ந்து கொண்டாடவேண்டும் என்ற ஆா்வத்தில் விமான கட்டண உயா்வை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் ஆர்வத்துடன் விமானங்களில் பயணம் செய்தனா்.
    காஞ்சீபுரத்தில் நிதி நிறுவன பெண்ணிடம் 10 பவுன் சங்கிலி பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் அருகே சிறுகாவேரி பாக்கத்தை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (வயது 36). இவர் காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் சன்னதி தெருவில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் இரவு கடையை பூட்டிவிட்டு தனது மொபட்டில் வீட்டுக்கு அருகே வந்தபோது, அவரைப் பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 2 பேர் அவர், அணிந்திருந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இச்சம்பவம் தொடர்பாக ஜெயலட்சுமி பாலுசெட்டி சத்திரம் போலீசில் புகார் செய்தார். காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு எஸ்.மணிமேகலை, பாலுசெட்டி சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காஞ்சீபுரம் ஒலிமுகம்மது பேட்டை, சிறுகவேரிபாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
    காஞ்சிபுரம் அருகே பட்டாகத்தியால் சமையல்காரர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை அடுத்த களக்காட்டூர் காந்தி ரோட்டை சேர்ந்தவர் அருள். இவரது மகன் லிங்கமூர்த்தி (வயது 32). சமையல்காரராக வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் இவர் களக்காடூரில் உள்ள அரசு தோட்டக்கலை எதிரே நேற்று முன்தினம் இரவு நின்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் சிலர் அவரை பட்டாகத்தியால் சரமாரியாக வெட்டினர்.

    அவரது அலறல் சத்தம் கேட்டதும் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த லிங்கமூர்த்தியை அங்கு இருந்தவர்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர், பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா, காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை செய்தனர்.

    இது குறித்து மேலும் வழக்குப்பதிவு செய்து, இந்த கொலை முன் விரோதத்தில் நடந்ததா? வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
    சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு கடத்த முயன்ற ரூ.21¼ லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரூ.11 லட்சம் தங்கமும் சிக்கியது.
    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு கடத்த முயன்ற ரூ.21¼ லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரூ.11 லட்சம் தங்கமும் சிக்கியது.

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்லும் சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் வெளிநாட்டு பணம் கடத்தப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அவரது உத்தரவின் பேரில், சுங்க இலாகா அதிகாரிகள் துபாய் செல்லும் விமானத்தில் ஏற வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது ராமநாதபுரத்தை நவுப்பர் (வயது 28), சென்னையை சேர்ந்த சவுர் பாத்திமா (44), திருச்சியை சேர்ந்த தில்சாத் (39) ஆகிய 3 பேரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

    அப்போது 3 பேரும் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்களது உடமைகளை சோதனை செய்தனர். அப்போது அவர்களிடமிருந்த கைப்பைகளை சோதனை செய்தனர்.

    அதில் கட்டுக்கட்டாக அமெரிக்கா டாலர்கள், சவூதி ரியால்கள், சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் நாட்டு பணம் ஆகியவை மறைத்து வைத்து கடத்தி செல்ல முயன்றதை கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து, 3 பேரிடமும் இருந்து ரூ.21 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    அதே போல் துபாயில் இருந்து விமானத்தில் சென்னை விமான நிலையம் வந்திறங்கிய சென்னையை சேர்ந்த முகமது அஸ்மத் (33) என்பவரை நிறுத்தி அவரது உள்ளாடையை சோதித்த போது, ரூ.11 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள 220 கிராம் தங்கம் கடத்தி வந்ததை கண்டறிந்து, அதை பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக 2 பெண்கள் உள்பட 4 பேரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
    கொட்டும் மழையில் திறந்து கிடந்த கால்வாயை மூடி சமூக பொறுப்புடன் செயல்பட்ட அக்கா, தம்பியை தீயணைப்பு துறை டிஜிபி சைலேந்திரபாபு நேரில் அழைத்து பாராட்டினார்.
    தாம்பரம்:

    இன்றைய அவசர உலகில் சமூக பொறுப்பு என்பது ஒவ்வொருவருக்கும் அவசியமானது. ஆனால் இது நம்மில் பலருக்கும் இல்லை என்பதே உண்மை.

    இதனை மாற்றும் வகையில் சமூக பொறுப்பை அனைவருக்கும் உணர்த்தும் விதமாக தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் லட்சுமிபுரத்தை சேர்ந்த அசோக்குமார் - கிருஷ்ணவேணி தம்பதியினரின் குழந்தைகள் தேவயாணி (11), விக்னேஷ் (8) நடந்திருப்பது அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

    கடந்த 8-ந்தேதி கிருஷ்ணவேணியும், விக்னேசும் கொட்டும் மழையில் அருகில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.

    அப்போது சாலையோரம் கழிவுநீர் செல்லும் மழைநீர் கால்வாய் திறந்து கிடப்பதை கண்டனர். அதில் யாரும் விழுந்துவிடக்கூடாது என்பதை உணர்ந்த அவர்கள் தடுப்புகள் வைக்க முடிவெடுத்தனர்.

    தேவயாணி அங்கிருந்த விளம்பர பதாகை கட்ட பயன்படுத்தும் ‘ஆங்கிளை’ எடுத்து கால்வாய் மீது வைத்து அதன் மீது பலகை ஒன்றை வைத்து மூடினார்.

    கால்வாய் மூடும் பணியை அக்காள் செய்து கொண்டிருந்தபோது அவர் மழையில் நனையாமல் இருக்க விக்னேஷ் குடை பிடித்தார். அவர் சமூக பொறுப்புடன் சகோதர பாசத்தையும் வெளிப்படுத்தினார். இந்த காட்சியை அவ்வழியே சென்ற பொதுமக்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ வைரலாக பரவியதால் அக்காள் தம்பியான தேவயாணி, விக்னேசை அனைவரும் பாராட்டினர்.

    அவர்களுக்கு முடிச்சூர் குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பினர் பாராட்டு சான்றிதழ் வழங்கினர்.

    அக்கா, தம்பியை நேரில் அழைத்து பாராட்டிய தீயணைப்பு துறை டிஜிபி சைலேந்திரபாபு

    இந்த நிலையில் தீயணைப்பு துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு, நேற்று குழந்தைகள் தேவயாணி, விக்னேஷ் மற்றும் அவர்களது பெற்றோர் அசோக்குமார் - கிருஷ்ணவேணி ஆகியோரை நேரில் அழைத்து பாராட்டினார்.

    மேலும் சமூக பொறுப்புடனும், பிறருக்கு எடுத்துக்காட்டாகவும் செயல்பட்ட தேவயாணி, விக்னேசுக்கு ரூ.2 ஆயிரம் பரிசு வழங்கினார். குழந்தைகளின் கல்விக்கு எதிர்காலத்தில் உதவி தேவைப்பட்டால் தன்னை அழைக்குமாறும் சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

    குழந்தைகள் தேவயாணி - விக்னேசின் செயல் பொறுப்பற்ற அதிகாரிகளுக்கும், சமூக பொறுப்பில்லாமல் சுற்றி வருபவர்களுக்கும் ஒரு பாடமாக அமைந்துள்ளது.
    பொங்கல் பண்டிகையையொட்டி தென்மாவட்ட மக்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக கிளாம்பாக்கத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
    வண்டலூர்:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் தென்மாவட்ட பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக கோயம்பேடு புறநகர் பஸ் நிலையம், தாம்பரம் அறிஞர் அண்ணா பஸ் நிலையம் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே கிளாம்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலையோரம் உள்ள சி.எம்.டி.ஏ.வுக்கு சொந்தமான இடத்தில் புதியதாக புறநகர் பஸ் நிலையம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    தற்போது அந்த இடத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பஸ் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் இந்த தற்காலிக பஸ் நிலையத்தில் நின்று செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இங்கு ஆம்னி பஸ்களும் நின்று செல்லும். தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்ட இடத்தில் மின்கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. குடிநீர் வசதி, கழிப்பறை மற்றும் பயணிகள் அமருவதற்கு இருக்கைகள் போடப்பட்டுள்ளது.

    மேலும் தற்காலிகமாக போலீஸ் கட்டுப்பாட்டு அறை, அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் அதிகாரிகள் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து மகேந்திரா சிட்டி வரை ஜி.எஸ்.டி.சாலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் தலைமையில் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×