என் மலர்
காஞ்சிபுரம்
வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று வருவதால் வடகடலோர மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
‘ரெட் அலர்ட்’ பகுதில் உள்ள மாமல்லபுரத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பக்கிங்காம் கால்வாயில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு உள்ளது.
இதையடுத்து கால்வாய் கரையோரங்களில் குடியிருப்போருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
இந்தநிலையில் கூடுதல் பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகளுக்காக மத்திய அரசின் தேசிய பேரிடர் மீட்பு படையினர் அரக்கோணத்தில் இருந்து மாமல்லபுரம் வந்து முகாமிட்டுள்ளனர்.
இரண்டு கமாண்டர் தலையில் 25-க்கும் மேற்பட்ட மீட்புபடை வீரர்கள் வந்துள்னர். அவர்கள், நவீன தொலை தொடர்பு கருவிகள், மரம் மற்றும் இரும்புகளை வேகமாக அறுக்கும் கருவி, நீன்ட நேரம் மின்சாரம் கொடுக்கக்கூடிய பேட்டரிகள், கூடுல் மீட்பு பணிக்கு அவசர வீரர்கள் தேவை என்றால் அரக்கோணத்தில் உள்ள தலைமை அலுவலக ஹெலிகாப்டர் தளத்திற்கு தகவல் கொடுக்க ரேடார் வசதி மற்றும் தற்காலிக முகாம் கூடாரங்களுடன், தேசிய பேரிடர் மீட்பு படையினர் மாமல்லபுரத்தில் தயாராக உள்ளனர்.
மாமல்லபுரம் கடலோர காவல் படையினர் மற்றும் தீயணைப்பு படை வீரர்களும் பைப்பர் படகுகளுடன் மீட்பு பணிகளுக்கு தேவையான கருவிகளுடன் மழை வெள்ளத்தை சமாளிக்க தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.
மாமல்லபுரத்தில் இன்று காலை கனமழை பெய்து வருகிறது. ஸ்தலசயன பெருமாள் கோவிலில் மழைநீர் முழங்கால் அளவுக்கு தேங்கி நிற்கிறது.

குவைத்தில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை 1.30 மணிக்கு 137 பயணிகளுடன் விமானம் வந்தது.
அதில் பயணம் செய்த ஆந்திரா மாநிலத்தை சோந்த முகமது ஷெரீப்(57) என்பவர், விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, தனது உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த சிகரெட் மற்றும் லைட்டரை எடுத்து, தனது சீட்டில் அமர்ந்திருந்தபடி புகைபிடிக்கத் தொடங்கினார்.
இதனை சக பயணிகள் கண்டித்து எதிர்ப்பு தெரிவித்தனர். விமான ஊழியர்களும் எச்சரித்தனர். ஆனால் முகமது ஷெரீப் தொடர்ந்து புகைபிடித்தபடி ஊழியர்களை மிரட்டி ரகளையில் ஈடுபட்டார்.
இதுகுறித்து சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விமானம் சென்னையில் தரையிறங்கியதும், தயாராக இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்தில் புகைப்பிடித்து ரகளை செய்த பயணி முகமது ஷெரீப்பை கைது செய்து சென்னை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
சென்னையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
உடனடியாக அன்றைய தினமே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வடசென்னை பகுதிக்கும், தென்சென்னை பகுதிக்கும் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.
மழை நீரில் நடந்து சென்றும் மக்களிடம் குறை கேட்டு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளை பார்வையிட்ட அவர் நேற்றும் மழை சேத பகுதிகளை பார்வையிட்டார். கொளத்தூர், திரு.வி.க.நகர், வில்லிவாக்கம், போரூர் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்றார். போரூர், ரெட்டேரி பகுதிகளையும் பார்வையிட்டு நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டார்.
மெரினா கடற்கரை சாலையில் உள்ள எழிலகத்தில் அமைந்துள்ள பேரிடர் கட்டுப்பாட்டு மையத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11.15 மணியளவில் திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அவரை பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வரவேற்று கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து சென்றார்.
கடும் மழையை எதிர்கொள்ள என்னென்ன முன் ஏற்பாடுகள் எடுத்துள்ளனர் என்பதையும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அங்குள்ள ஊழியர்களிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விவரம் கேட்டறிந்தார். ஒவ்வொரு ஊரில் இருந்தும் வரும் தொலைபேசி அழைப்புக்கு எவ்வாறு பதில் அளிக்கின்றனர் என்பதையும் பார்த்தார்.
அப்போது கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் அகிலா என்ற பெண் மழை நீர் வடியாதது குறித்து தகவல் தெரிவித்து கொண்டிருந்தார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த ஹெட்போன் தொலைபேசியை வாங்கி தனது காதில் பொருத்தி அந்த பெண்ணிடம் பேசினார்.

அதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் , “நான் பார்க்க சொல்கிறேன். நீங்கள் சொன்ன தகவலையும் இங்கு பதிவு செய்துள்ளனர். உங்கள் பகுதியை கட்டாயம் நான் பார்க்க சொல்கிறேன். உடனே நடவடிக்கை எடுப்பார்கள்” என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து கட்டுப்பாட்டு அறையில் அமர்ந்து மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள ஏற்பாடுகளை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் உயர் அதிகாரிகள் விளக்கி கூறினார்கள்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நேற்று இரவு அதிக அளவு மழை பெய்துள்ளதாகவும், குறிப்பாக கடலோர மாவட்டங்களில் அதிக மழை பெய்ததாகவும் தெரிவித்தனர்.
சென்னையில் மழை குறைவாக பெய்ததாகவும் கூறினார்கள். அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் , “நேற்று மழை பெய்யாத மாவட்டம் உண்டா?” என்று கேட்டார். அதற்கு அதிகாரிகள் “எல்லா மாவட்டத்திலும் மழை பெய்துள்ளது” என்று தெரிவித்தனர்.
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறும் போது, “பயிர் சேத விவரங்களை கணக்கெடுக்க சொல்லி உள்ளோம். வருவாய்த்துறையினரும், விவசாய அதிகாரிகளும் ஒருங்கிணைந்து பணியை மேற்கொள்ள வேண்டும் என கூறி உள்ளோம். மழை நீர் வடிந்த பிறகு முழு கணக்கெடுப்பும் நடத்தியும் அறிக்கை தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார்.
காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் சுற்று வட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதனால் ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார் சத்திரம் உளிட்ட பகுதியில் உள்ள 58 ஊராட்சிகளில் பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் பெரிய ஏரிகளான ஸ்ரீபெரும்புதூர் ஏரி மற்றும் பிள்ளைப்பாக்கம் எரிகள் முழு கொள்ளளவு எட்டி வருகிறது. ஏரியில் உள்ள கலங்கள் வழியாக நீர் வெளியேறி வருகின்றன.
ஸ்ரீபெரும்புதூர் செல்லப் பெருமாள் நகரில் தாழ்வான பகுதியில் வசிக்கும் இருளர் இன மக்கள் 26 பேரை வருவாய் துறையினர் மீட்டு அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பாதுகாப்பாக தங்க வைத்து உள்ளனர்.
சிவந்தாங்கள் பகுதியில் வசிக்கும் இருளர் இன மக்கள் 56 பேரை மீட்டு அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் தங்கவைத்து மருத்துவ வசதி, உணவு வசதி ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறார்கள்.
மேலும் மழை தொடரந்து பெய்து வருவதால் வருவாய் துறை, மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகளை துரிதப்படுத்தி தாழ்வான பகுதியில் மழை நீர் சூழ்ந்து உள்ள இடங்களை கண்காணித்து வருகின்றனர்.
மதுராந்தகம்:
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மிகப்பெரியது மதுராந்தகம் ஏரி. இதன் மொத்த உயரம் 23.3 அடி. தொடர் மழை காரணமாக மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவை எட்டி உள்ளது.
இன்று காலை நிலவரப்படி ஏரியில் 24 அடிக்கு தண்ணீர் உள்ளது. இதன் முழு கொள்ளளவான 694 மில்லியன் கனஅடி நீரை தாண்டி 720 மில்லியன் கனஅடி தண்ணீர் நிரம்பி இருக்கிறது.
ஏரிக்கு 2000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து ஏரியில் இருந்து 2 ஆயிரம் கன அடி நீர் உபரி நீராக தானியங்கி ஷட்டிர் மற்றும் கலங்கள் வழியாக கிளி ஆற்றில் வெளியேறி வருகிறது.
இதனால் கிளி ஆற்றின் கரையோரம் உள்ள வளர்பிறை, முள்ளி, தோட்ட நாவல், ஈசூர், விழுதமங்கலம் உள்ளிட்ட 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஏரியை பார்வையிட பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. உபரி நீர் வெளியேறும் கிளி ஆற்றின் கரையோர பகுதிகளில் குளிக்கவோ, மீன் பிடிக்கவும் செல்லக்கூடாது என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் உத்தரவுபடி ஏரிக்கரையின் ஆரம்பப்பகுதியில் தற்காலிக மையம் அமைக்கப்பட்டு மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நீர்வள ஆதார துறை பொதுப்பணித் துறையின் செயற்பொறியாளர் நீல் முடியோன், இளநிலை பொறியாளர் குமார் பொதுப்பணித்துறையினர் ஏரியின் நீர் வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் ஷட்டரை திறப்பதற்கான ஏற்பாடுகளை தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.
மதுராந்தகம் வட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 78 ஏரிகளில் அருங்குணம் சிறுகளத்தூர், மாமண்டூர், கிண்டிசேரி உள்ளிட்ட 35 ஏரிகள் முழுவதும் நிரம்பி உள்ளதாக பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை கொளத்தூரில் மழை-வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டும் பணிகள் முறையாக நடைபெறவில்லை. மழைநீர் வடிகால் அமைத்ததில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் வந்துள்ளது.
ஏற்கனவே “ஸ்மார்ட் சிட்டி” திட்டத்தை உருவாக்கி அதிலும் பல கோடி ரூபாயை மத்திய அரசின் நிதியை வாங்கி என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை. இதில் கமிஷன் வாங்கி உள்ளனர். பல கோடி ரூபாய் சம்பாதித்துள்ளனர்.
“ஸ்மார்ட் சிட்டி” திட்ட பணிகள் முடிந்த பிறகு இதில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும். இதில் ஸ்மார்ட் சிட்டி காண்டிராக்ட் எடுத்தவர்கள் மீதும் நிச்சயமாக நடவடிக்கை பாயும்.

உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி. வேலுமணி மீதான ஊழல் புகார் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
அ.தி.மு.க. ஆட்சியில் மழைநீர் வடிகால் பணிகள் செய்ததில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. அதுவும் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. 288 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் கொசஸ்தலை மற்றும் ஆரணி ஆற்று பாசன பகுதியில் 574 ஏரிகள் உள்ளன. இதில் 60 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பி இருக்கிறது. 30 ஏரிகள் 75 சதவீதமும், 49 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பி உள்ளன.
ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 581 ஏரிகளில் 24 ஏரிகள் முழுவதும் நிரம்பி உள்ளன. ஏரிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். கரைகளில் உடைப்பு ஏற்பட்டால் சரி செய்ய தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
பிச்சாட்டூரில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் ஆரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொன்னேரி அடுத்த லட்சுமிபுரம் தடுப்பணை நிரம்பி வினாடிக்கு 1,300 கன அடி தண்ணீர் வெளியேறுகிறது.
இந்த தண்ணீர் ரெட்டிபாளையம், தடுப்பணை ஆண்டார்மடம் வழியாக பழவேற்காடு ஏரியில் சென்று கடலில் கலக்கின்றன. இதனால் பழவேற்காடு ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து காணப்படுறது.
பொன்னேரி, மீஞ்சூர், கோளூர், திருப்பாலைவனம் சுற்றுவட்டார பகுதிகளில் நடவு செய்த நெற்பயிரில் மழை நீர் தேங்கி காணப்படுவதால் 50 ஆயிரம் ஏக்கர் நெல் பயிர்கள் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.
இதுகுறித்து பொன்னேரி பொதுப்பணித்துறை உதவி செயற் பொறியாளர் முருகன் கூறியதாவது:-
பொதுப் பணித்துறை நீர்வள துறையின் ஆரணி ஆறு வடிநில கோட்டத்தின் கீழ் ஆரணி ஆறு உள்ளது. இதன் கீழ் 250 ஏரிகள் உள்ளன. தற்போது பெய்த மழையில் 59 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன.
மீதம் உள்ள 191 ஏரிகள் பாதி நிரம்பியுள்ளன ஆரணி ஆற்றின் கரை பகுதிகளை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். 10 ஆயிரம் மணல் மூட்டைகள், கயிறு, சவுக்கு தயார் நிலையில் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தாமல், திருப்புட்குழி, சோமங்கலம், பரந்தூர், ஆற்றுப்பாக்கம், மதுரைமங்களம், தண்டலம், கோவிந்தவாடி, சிறுவாக்கம் உள்பட 129 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன.
145 ஏரிகள் 75 சதவீதமும், 35 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பி காணப்படுகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 575 ஏரிகள் உள்ளன. இதில் 75 ஏரிகள் முழுவதும் நிரம்பி வழிகின்றன. 188 ஏரிகள் 75 சதவீதம் வரையும், 265 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பி இருக்கிறது.
இதையும் படியுங்கள்... பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 29ல் தொடங்குகிறது- அமைச்சரவை குழு பரிந்துரை






