என் மலர்tooltip icon

    ஈரோடு

    பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரியில் கல்வி கட்டணத்தை குறைக்கக்கோரி மாணவ- மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    பெருந்துறை:

    பெருந்துறையில் இயங்கி வந்த சாலை போக்குவரத்து மருத்துவ கல்லூரி, அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியாக மாற்றம் செய்யப்பட்டு ஒரு ஆண்டாகிறது.

    இந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு முதல் இறுதி ஆண்டு வரை 300 மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த கல்லூரியானது அரசு கல்லூரியாக மாற்றம் செய்யப்பட்டும் கல்வி கட்டணம் இதுவரை குறைக்கப்படவில்லை. மற்ற அரசு மருத்துவ கல்லூரிகளில் வசூலிக்கும் கட்டணத்தை போன்று பெருந்துறை அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது. எனினும் கல்வி கட்டணம் குறைக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இந்த நிலையில் மாணவ- மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் என ஏராளமானோர் நேற்று காலை 10 மணி அளவில் பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி வளாகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் கல்வி கட்டணத்தை குறைக்கக்கோரி கல்லூரி வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி அறிந்ததும் பெருந்துறை தாசில்தார் முத்துகிருஷ்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் கூறுகையில், ‘இதுகுறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’ என தெரிவித்தனர். இதில் சமாதானம் அடைந்த மாணவ- மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் தங்களுடைய தர்ணா போராட்டத்தை கைவிட்டு மதியம் 12 மணி அளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    விவசாயிகளுக்கு ஆதரவாக ஈரோடு மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.
    ஈரோடு:

    விவசாயிகளுக்கு ஆதரவாக ஈரோடு மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. மேலும் காய்கறி மார்க்கெட்டுகளும் அடைக்கப்பட்டிருந்தது.

    ஈரோடு வ.உ.சி. பெரிய மார்க்கெட், சத்தியமங்கலம் பூ மார்க்கெட், பெருந்துறை தினசரி காய்கறி மார்க்கெட் ஆகியவை அடைக்கப்பட்டிருந்தது.

    கோபிசெட்டிபாளையம், சென்னிமலை, பெருந்துறை, புஞ்சை புளியம்பட்டி, கவுந்தப்பாடி, நம்பியூர், ஆப்பக்கூடல், பவானி, கொடுமுடி, சத்தியமங்கலம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஒருசில டீ கடைகள் மட்டுமே திறந்திருந்தது. ஈரோடு மாநகரில் ஒருசில இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.

    புஞ்சை புளியம்பட்டியில் 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் ஓடவில்லை.

    ஈரோட்டில் புகழ்பெற்ற கனி மார்க்கெட் ஜவுளி சந்தை வழக்கம்போல் செயல்பட்டது. ஆனாலும் வெளிமாநில வியாபாரிகள், பொதுமக்கள் கூட்டம் இன்றி சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.

    ஈரோடு மாவட்டம் முழுவதும் வழக்கம்போல் அனைத்து பஸ்களும் ஓடியது. ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களும் வழக்கம்போல் இயங்கியது. போக்குவரத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

    ரெயில் நிலையம், பஸ் நிலையம், மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் 21 போலீஸ் நிலையங்களில் போலீசார் ஓய்வெடுக்க பெட்டுடன் கூடிய படுக்கை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று போலீஸ் சூப்பிரண்டு கூறியுள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் 5 போலீஸ் சப்- டிவி‌ஷன்களில் 40 போலீஸ் நிலையங்கள் உள்ளன. இதில் 800-க்கும் மேற்பட்ட போலீசார் பணிபுரிந்து வருகின்றனர்.

    சட்ட ஒழுங்கை காக்கவும், குற்ற சம்பவங்களை தடுக்கவும் 24 மணி நேரமும் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் சோதனைசாவடிகள், வாகன தணிக்கை என்று 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பணி முடிந்து சோர்வடையும் போலீசாருக்கு போலீஸ் நிலையத்திலேயே ஓய்வு எடுக்க ஓய்வறை உள்ளது. ஆனால் போதிய வசதி இல்லாததால் ஓய்வெடுப்பதில் சிரமம் ஏற்பட்டது.

    இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையத்திலும் பெட் வசதியுடன் கூடிய படுக்கை வசதி ஏற்படுத்த உத்தரவிட்டார். இதன்படி கட்டில், பெட்டுடன் கூடிய படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து எஸ்.பி.தங்கதுரை கூறும் போது, மாவட்டத்தில் போலீசார் ஓய்வு எடுக்க அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கட்டில் உடன் கூடிய படுக்கை வசதி ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த படுக்கை வசதி போலீஸ் நிலையங்களுக்கு தகுந்தாற் போல் மாறுபடும்.

    பணி முடிந்து வரும் போலீசார் இரவு ரோந்து முடிந்து வரும் போலீசார் சில மணி நேரம் ஓய்வெடுக்க பயன்படுத்தி கொள்ளலாம். பணி நேரத்தில் தலைவலி, உடல்வலி ஏற்பட்டால் தாங்கள் பணிபுரியும் போலீஸ் நிலையத்திலேயே அதிகாரிகளிடம் அனுமதி பெற்று சிறிது நேரம் ஓய்வெடுத்து கொள்ளலாம்.

    தற்போது மாவட்டம் முழுவதும் 21 போலீஸ் நிலையங்களில் இந்த கட்டில் உடன் கூடிய படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. பின்னர் படிபடியாக மற்ற போலீஸ் நிலையத்துக்கும் இந்த வசதி செய்து கொடுக்கப்படும் என்றார்.

    ஈரோடு அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் சுக்கிரமணியகவுண்டர் வலசு பகுதியை சேர்ந்தவர் நடராஜ் (வயது 51). இவருடைய மனைவி ஜெகதீஸ்வரி என்கிற ஜமுனா (40). இவர்களுக்கு வாய்பேச முடியாத கீர்த்தனா என்கிற மகள் உள்ளார். கீர்த்தனாவுக்கு கடந்த மே மாதம் திருமணம் நடந்தது. 

    அவர் தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கீர்த்தனா தனது தாய் வீட்டிற்கு வந்திருந்தார். இந்தநிலையில் அவரது கணவர் ராஜ்குமார் தனது மனைவி கீர்த்தனாவை தன்னுடன் அழைத்து சென்று உள்ளார். ஆனால் கீர்த்தனாவை அனுப்பி வைக்க ஜமுனாவுக்கு விருப்பமில்லை. 

    இதனால் கீர்த்தனாவை தடுத்தும் அவர் தனது கணவருடன் சென்றுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த ஜமுனா நேற்று காலை வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். உடனடியாக குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஜமுனா இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு வைராபாளையம் நால்ரோடு பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராம்பிரபு மற்றும் போலீசார் நேதாஜிரோடு பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டு இருந்ததாக பி.பி.அக்ரஹாரம் நஞ்சப்பா நகரை சேர்ந்த சவுகத்அலி (வயது 44) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 12 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதேபோல் ஈரோடு வைராபாளையம் நால்ரோடு பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்ததாக சேலம் மாவட்டம் எடப்பாடி கவுண்டம்பட்டி பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்த செல்வம் (42) என்பவரை கருங்கல்பாளையம் போலீசார் கைது செய்தனர்.

    வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில் நள்ளிரவில் வனவிலங்குகள் அடிக்கடி சாலையில் சுற்றித் திரிவதால் இருசக்கர வாகனத்தில் செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இந்நிலையில் கர்நாடக எல்லையான கர்கேகண்டியிலிருந்து பர்கூர் வரும் கர்நாடகா -அந்தியூர் பிரதான சாலையில் இரண்டு கரடிகள் சர்வசாதாரணமாக நள்ளிரவில் சாலையில் உலா வந்தது.

    அப்போது அந்த வழியே வந்த சரக்கு வாகனத்தை கண்டவுடன் சரக்கு வாகனத்தின் முன்னால் சுமார் அரை கிலோமீட்டர் தூரம் சாலையிலேயே ஓடி வனப்பகுதிக்குள் கரடிகள் நுழைந்தது. 2 கரடிகளும் வனப்பகுதிக்குள் நுழையும் காட்சியினை பர்கூர் பகுதியைச் சேர்ந்த சரக்கு வாகன ஓட்டுனர் தனது செல்போனில் பதிவு செய்துள்ளார்.

    இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில் நள்ளிரவில் வனவிலங்குகள் அடிக்கடி சாலையில் சுற்றித் திரிவதால் இருசக்கர வாகனத்தில் செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். மேலும் சரக்கு வாகன ஓட்டுனர்களும் மிகவும் கவனமாக வாகனத்தை இயக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

    பவானிசாகர் மீன் வளர்ச்சி குடோனில் கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் எரிந்து நாசம் ஆனது.
    பவானிசாகர்:

    பவானிசாகரில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக அலுவலக வளாகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் பவானிசாகர் அணையில் ஏலம் எடுத்த ஒப்பந்ததாரர்கள் மீன்களை பிடித்து விற்பனை செய்து வருகிறார்கள். இவர்களுக்காக கடந்த ஆண்டு புதிய அலுவலக கட்டிடம் துறை சார்பில் கட்டி கொடுக்கப்பட்டது.

    இதனால் மீன் வளர்ச்சி கழக அலுவலக வளாகம் இருந்த பழைய கட்டிடம் குடோனாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இதில் பவானிசாகர் அணையில் மீன் பிடிப்பதற்காக டெண்டர் எடுத்துள்ள ஒப்பந்ததாரர்களின் கியாஸ் சிலிண்டர்கள், தெர்மோகோல் பெட்டிகள், மூன்று இருசக்கர வாகனங்கள், மற்றும் படகின் உதிரிபாகங்கள், மீன் வளர்ச்சி கழக அலுவலகத்தின் பழைய பர்னிச்சர்கள் போட்டு வைக்கப்பட்டு இருந்தன.

    இந்த நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் இந்த குடோனில் வைக்கப்பட்டிருந்த கியாஸ் சிலிண்டர் திடீரென வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த அலுவலக வளாகத்தில் 12-க்கும் மேற்பட்ட கியாஸ் சிலிண்டர்கள் இருந்த நிலையில், அதில் உள்ள 4 சிலிண்டர்களில் கியாஸ் நிரப்பப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதில் அந்த 4 கியாஸ் சிலிண்டர்களும் வெடித்ததால் குடோன் முழுவதும் தீப்பற்றி கொழுந்து விட்டு எரிந்தது. இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில் குடோன் முழுவதும் எரிந்து அதில் வைக்கப்பட்டிருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசம் ஆனது. இதுகுறித்து பவானிசாகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கையே தொடரும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
    கடத்தூர்:

    தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கோபியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ‘நிவா்’ புயல் வந்த போது முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையால் எந்தவித பெரிய பாதிப்பும் ஏற்படவில்லை. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் சென்று பார்வையிட்டு நிவாரண பணிகள் நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    எங்களது பயணங்கள் மக்களை நோக்கி செல்கிறது. மக்கள் விருப்பத்தை நிறைவேற்றுகிற அரசாக திகழ்கிறது. அதற்காக நாங்கள் அரும்பணியாற்றி வருகிறோம்.

    நம்பியூர் பஸ் நிலையம் கட்டுவதில் முறைகேடு என கனிமொழி எம்.பி. பேசி உள்ளார். அவர் எப்படி பேசுவதென்பது என தெரியாமல் பேசுகிறார். ஒன்று கொள்கை ரீதியாக பேசவேண்டும். அல்லது செய்கின்ற பணிகளை தெரிந்து பேச வேண்டும். எதுவும் தெரியாமல் பேசி உள்ளார்.

    தமிழக அரசை பொறுத்தவரை இருமொழி கொள்கை என்பது தான் எங்களுடைய நிலைப்பாடு. இதுபற்றி மத்திய அரசுக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார். மேலும் சட்டமன்றத்தில் அனைத்து கட்சிகளின் சாா்பில் ஒருங்கிணைந்த தீா்மானம் நிறைவேற்றப்பட்டு அதுகுறித்து மத்திய அரசுக்கு தெரியப்படுத்தப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கொரோனா தடுப்பு ஊசி பள்ளிக்குழந்தைகளுக்கு முன்னுாிமை அளித்து போடப்படுமா? என நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பதில் அளிக்கையில், ‘மத்திய அரசால் தடுப்பு ஊசி எந்த அளவுக்கு தயாா் செய்யப்படுகிறது என்பதை பொறுத்து அதற்கேற்ப மத்திய அரசிடம் வேண்டுகோள் வைக்கப்படும்,’ என்றார்.
    பண்ணாரி வனப்பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்த வாலிபரை துரத்தியது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர் வாகனத்தை வேகமாக ஓட்டி கொண்டு சென்று உயிர் தப்பினார்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, மான், புலி, கரடி, சிறுத்தை உள்படட பல்வேறு காட்டு விலங்குகள் வசித்து வருகின்றன.

    வனப்பகுதியில் உள்ள யானைகள் உணவு தேடி சாலைகளில் சுற்றி திரிகிறது. அவை தண்ணீருக்காக ரோட்டை அடிக்கடி கடந்து செல்கிறது.

    சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி வனப் பகுதியிலும் தினமும் யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் எச்சரிக்கையாக செல்ல வேண்டும் என வனத்துறை எச்சரித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் பண்ணாரி வனப்பகுதியில் திம்பம் மலைப்பகுதி செல்லும் சாலையில் ஒற்றை யானை உணவு தேடி வந்தது. அந்த யானை திடீரென அந்த பகுதியிலேயே நின்று கொண்டிருந்தது. இதை கண்டு அந்த வழியாக வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து நீண்ட நேரம் காத்திருந்தனர்.

    யானையின் அருகே இரு சக்கர ஒன்று வாகனம் வந்தது. இதை கண்ட அந்த யானை திடீரென இரு சக்கர வாகனத்தில் வந்த வாலிபரை துரத்தியது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர் வாகனத்தை வேகமாக ஓட்டி கொண்டு சென்று உயிர் தப்பினார்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, ஒற்றை யானை மிகவும் ஆக்ரோ‌ஷமாக சுற்றித் திரிகின்றன. இதனால் வனப்பகுதிக்குள் ஒற்றை யானையை கண்டால் வாகனங்கள் நீண்ட தூரம் தள்ளி நிறுத்துங்கள். யானை அருகே செல்ல வேண்டாம். யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்ற பிறகே அந்த பகுதியை கடந்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.

    வாய்க்காலில் மூழ்கி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பவானி:

    நாமக்கல் மாவட்டம் சின்ன முதலைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவருடைய மனைவி கமலம் (வயது 72). உடல் நலக்குறைவால் கடந்த ஆண்டு கிருஷ்ணசாமி இறந்தார். இதனால் கமலத்தை, பவானி காலிங்கராயன்பாளையம் அருகே உள்ள லட்சுமி நகர் பகுதியில் வசிக்கும் அவருடைய மகன் சுரேஷ்குமார் தன்னுடன் அழைத்து வந்து கவனித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று காலை காலிங்கராயன் வாய்க்காலுக்கு கமலா குளிக்க சென்றார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக வாய்க்காலில் மூழ்கி இறந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி சித்தோடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று கமலத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தொழிலாளியிடம் பணம் கேட்டு மிரட்டியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பவானி:

    பவானியை அடுத்த சித்தோடு ரோஜா நகர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 50). கட்டிட தொழிலாளி. நேற்று அவர் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் திடீரென முருகேசனிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. உடனே அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த நபரை பிடித்து சித்தோடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். பிடிபட்டவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், ‘அவர் சித்தோடு ராயபுரம் அம்மன் கோவில் வீதியை சேர்ந்த மணிகண்டன் (30) என்பதும், அவர் முருகேசனிடம் பணம் கேட்டு மிரட்டியதும்,’ தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.
    பவானிசாகர் அருகே காட்டு யானைகள் கரும்பு தோட்டத்துக்குள் புகுந்து நாசம் செய்துள்ளது.
    பவானிசாகர்:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பவானிசாகர் வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த யானைகள் இரவு நேரத்தில் வனத்தை விட்டு வெளியேறி வனப்பகுதியை ஒட்டி உள்ள விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை சேதம் செய்வது தொடர் கதையாக உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புதுபீர்கடவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 3 காட்டு யானைகள் அந்த பகுதியில் உள்ள விவசாயி செல்வம் (55) என்பவரது தோட்டத்துக்குள் நுழைந்தன. அங்கு 5 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு இருந்த கரும்பு பயிர்களை தின்றும், காலால் மிதித்தும் சேதப்படுத்தின. இதைப்பார்த்த அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் பட்டாசுகள் வெடித்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.

    வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தும் யானைகளை விரட்ட வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வரவில்லை என்று விவசாயிகள் குற்றம்சாட்டினர். சேதமடைந்த பயிருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியே வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ×