என் மலர்
செய்திகள்

பர்கூர் மலைப்பாதையில் உலாவரும் கரடிகள்- வனத்துறை எச்சரிக்கை
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இந்நிலையில் கர்நாடக எல்லையான கர்கேகண்டியிலிருந்து பர்கூர் வரும் கர்நாடகா -அந்தியூர் பிரதான சாலையில் இரண்டு கரடிகள் சர்வசாதாரணமாக நள்ளிரவில் சாலையில் உலா வந்தது.
அப்போது அந்த வழியே வந்த சரக்கு வாகனத்தை கண்டவுடன் சரக்கு வாகனத்தின் முன்னால் சுமார் அரை கிலோமீட்டர் தூரம் சாலையிலேயே ஓடி வனப்பகுதிக்குள் கரடிகள் நுழைந்தது. 2 கரடிகளும் வனப்பகுதிக்குள் நுழையும் காட்சியினை பர்கூர் பகுதியைச் சேர்ந்த சரக்கு வாகன ஓட்டுனர் தனது செல்போனில் பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில் நள்ளிரவில் வனவிலங்குகள் அடிக்கடி சாலையில் சுற்றித் திரிவதால் இருசக்கர வாகனத்தில் செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். மேலும் சரக்கு வாகன ஓட்டுனர்களும் மிகவும் கவனமாக வாகனத்தை இயக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.






