என் மலர்
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தமிழக அரசின் இலவச, வேட்டி சேலைகள் பல்வேறு கூட்டுறவு சொசைட்டி மூலம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் 40 சதவீத இலவச வேட்டி, சேலைகள் ஈரோட்டில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இதேபோல் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் ரயான் துணிகளும் உற்பத்தி செய்யப்பட்டு வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில் ரயான் துணி நூலின் விலை உயர்ந்துள்ளது. இதனால் ராயன் துணிகளை உற்பத்தி செய்யும் விசைத்தறியாளர்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை தினமும் 24 லட்சம் மீட்டர் ரயான் துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்த பணியில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 50 ஆயிரம் பேர் ஈடுபட்டு வருகின்றனர். நூல் விலை உயர்வால் தொடர்ந்து நஷ்டம் காரணமாக இன்று முதல் வரும் 27-ந் தேதி வரை ரயான் துணி உற்பத்தியை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று விசைத்தறிகளில் ரயான் துணி உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு வீரப்பன்சத்திரம் அசோகபுரம் காளிங்கராயன் பாளையம் போன்ற பகுதியில் உள்ள விசைத்தறிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
இதுகுறித்து ஈரோடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சுரேஷ் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் ராயன் துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. சமீபகாலமாக ராயன் துணிகளை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் நூல் விலை அதிகரித்துள்ளது.
இங்கு 120 கிராம் 150 கிராம் நூல் அதிகமாக பயன்படுத்த வருகிறோம். தீபாவளியின்போது இந்நூல் ஒரு கோன் ரூ.150-க்கு வாங்கினோம். இதன் மூலம் ஒரு மீட்டர் துணி ரூ.20-க்கு விற்பனை செய்தோம்.
தற்போது நூல் விலை ரூ.176 ஆக உயர்ந்துள்ளது. ஆனால் ஒரு மீட்டர் துணி விலை ரூ.22 என்ற நிலையிலேயே உள்ளது. நூல் அடக்க விலைக்கூட துணி விலை போகாததால் உற்பத்தியாளர்கள் கடும் நடத்தை சந்தித்து உள்ளனர்.எனவே இன்று முதல் வரும் 27-ந் தேதி வரை ஒரு வார காலத்திற்கு ரயான் துணி உற்பத்தியை மட்டும் நிறுத்தி உள்ளோம். இதனால் 16.80 கோடி மீட்டர் துணி உற்பத்தி பாதிக்கப்படும். இதன் மூலம் ரூ.40 கோடி வரை வர்த்தகம் பாதிக்கும். எனவே நூல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பெருந்துறை:
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள நக்களப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டி என்கிற முத்துப்பாண்டி வயது(30). இவரது மனைவி சூர்யா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
முத்துப்பாண்டியின் மனைவி சூர்யா கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதையடுத்து அவரது குழந்தைகள் உறவினர் வீட்டில் வளர்ந்து வருகின்றனர்.
முத்துப்பாண்டி தனது தாயாருடன் ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே உள்ள துடுப்பதி ஸ்லேடர்நகர் என்ற பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து சிமெண்ட் ஷீட் பொருத்தும் கூலி வேலைக்கு சென்று வந்தார்.
நேற்று இரவு வேலைக்கு சென்ற முத்துப்பாண்டி வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் துடுப்பதி செல்லும் சாலையில் சானடோரியம் அருகில் முத்துப்பாண்டி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு பெருந்துறை டி.எஸ்.பி. செல்வராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மது குடிக்கும் தகராறில் அவருடன் வேலை பார்க்கும் சிலர் அவரை கொலை செய்திருக்கலாம் என்று தெரிய வருகிறது. இதையடுத்து முத்துப்பாண்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை குறித்து விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் கொலையாளிகள் குறித்தும், கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோபியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தையல் தொழிலாளர்கள் மகளிர் மேம்பாட்டு தொழிற் கூட்டுறவு சங்க பேரவை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் காளியப்பன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த அரசு பொதுமக்களுக்கு பல்வேறு திட்டங்களை சிறப்பான முறையில் நிறைவேற்றி வருகிறது. பெண்களுக்காக முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி சாதனை படைத்தார்.
பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு செய்ய வேண்டும் என இந்தியாவில் முதன் முதலாக குரல் கொடுத்தவர் ஜெயலலிதா தான். தமிழக முதல்- அமைச்சர் பொங்கல் பரிசாக ரூ.2 ஆயிரத்து 500 வழங்குவதற்கு உத்தரவிட்டு உள்ளார். இதைப்பார்த்து எதிர்கட்சிகள் வியந்து போய் உள்ளன. நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்பதே இந்த அரசின் கொள்கையாக உள்ளது. இருப்பினும், கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்விற்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
சர்க்கரை குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் ரேஷன் அரிசி அட்டையாக மாற்ற 21-ந் தேதி (அதாவது இன்று) கடைசி நாள் ஆகும். எனவே சர்க்கரை ரேஷன் அட்டையை அரிசி ரேஷன் அட்டையாக மாற்றிக்கொள்ளுங்கள். அப்போதுதான் பொங்கல் பரிசுகள் கிடைக்கும். தமிழகம் அமைதியாகவும், மின்வெட்டு இல்லாத மாநிலமாகவும் திகழ்கிறது.
இங்கு தொழில் தொடங்க அனைத்து கட்டமைப்பு வசதிகளும் இருப்பதால், முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளனர். இன்னும் 6 மாத காலத்தில் 5 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘தமிழகத்தில் கிராமங்கள் தோறும் 2 ஆயிரம் மினி கிளினிக்குகளை உருவாக்கி இந்த அரசு சாதனை படைத்துள்ளது. 2021-ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தான் ஆட்சியை பிடிக்கும். மீண்டும் முதல்- அமைச்சராக எடப்பாடி பழனிசாமியே பொறுப்பேற்பார்’ என்றார்.
இதில் மாநில வர்த்தக அணி செயலாளர் சிந்து ரவிசந்திரன், மாவட்ட ஆவின் தலைவர் காளியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் வனப்பகுதியில் ஏராளமான யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகள் உள்ளன.
இந்நிலையில் பவானி சாகர் வனச்சரகத்தில் உள்ள யானைகள் தினமும் பவானிசாகர் அணையின் ஜீரோ பாயிண்ட் என்ற இடத்தில் மாலை வேளையில் கூட்டம் கூட்டமாக வந்து தண்ணீர் குடித்து குளித்து விட்டு செல்கின்றன.
நவம்பர், டிசம்பர், ஜனவரி இந்த மூன்று மாதம் யானைகளின் இனப்பெருக்க மாதம் என்பதால் முதுமலை, கர்நாடகா, ஓசூர் ஆகிய வனப் பகுதிகளில் இருந்து ஏராளமான காட்டு யானைகள் இடம்பெயர்ந்து தெங்குமரஹாடா மற்றும் பவானிசாகர் வனப்பகுதிக்கு வந்து சேரும்.
இதனால் இந்த 3 மாதங்களில் யானைகள் எண்ணிக்கை மிகவும் அதிகமாக காணப்படும். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருக்கின்றன. எனவே யானைகள் அருகே யாரும் செல்ல வேண்டாம், ஒற்றை யானையிடம் மிகவும் கவனமாக இருக்குமாறும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
கடந்த 2018-ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வெழுதியவர்களில் 857 பேர் தேர்ச்சி பெற்றனர். அதில் மூன்று இடங்களில் 41 பேர் கணினி பழுது காரணமாக செல்போன் மூலமாக அந்த தேர்வு அறையில் இருந்தவர்கள் தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது.
இதனால் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் இதுகுறித்து வழக்கு தொடர்ந்தனர். வழக்கு காரணமாக தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கில் குறிப்பிட்ட தேர்வு அறையில் இருந்தவர்களுக்கு மறு தேர்வு வைக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் மற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்குவதில் தடை இல்லை என்று கூறியது.
அதைத்தொடர்ந்து தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் கடந்த வாரம் கோபியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை சந்தித்து மனு அளித்தனர்.
அப்போது முதலமைச்சரிடம் கலந்து ஆலோசனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கூறினார்.
இந்நிலையில் இன்று காலை 50-க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் கோபியில் மீண்டும் அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்தனர்.
அப்போது ஓரிரு நாளில் முதல்-அமைச்சரிடம் கலந்து பணி நியமன ஆணை வழங்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கூறியதை தொடர்ந்து ஆசிரியர்கள் கலைந்து சென்றனர். இதையடுத்து பட்டதாரி ஆசிரியர்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர்.






