search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விசைத்தறிகள் வேலைநிறுத்தம்
    X
    விசைத்தறிகள் வேலைநிறுத்தம்

    ஈரோட்டில் நூல் விலை உயர்வை கண்டித்து 30 ஆயிரம் விசைத்தறிகள் வேலைநிறுத்தம்

    ஈரோடு மாவட்டத்தில் நூல் விலை உயர்வை கண்டித்து 30 ஆயிரம் விசைத்தறிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தமிழக அரசின் இலவச, வேட்டி சேலைகள் பல்வேறு கூட்டுறவு சொசைட்டி மூலம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    தமிழகம் முழுவதும் 40 சதவீத இலவச வேட்டி, சேலைகள் ஈரோட்டில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இதேபோல் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் ரயான் துணிகளும் உற்பத்தி செய்யப்பட்டு வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    இந்நிலையில் ரயான் துணி நூலின் விலை உயர்ந்துள்ளது. இதனால் ராயன் துணிகளை உற்பத்தி செய்யும் விசைத்தறியாளர்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை தினமும் 24 லட்சம் மீட்டர் ரயான் துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    இந்த பணியில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 50 ஆயிரம் பேர் ஈடுபட்டு வருகின்றனர். நூல் விலை உயர்வால் தொடர்ந்து நஷ்டம் காரணமாக இன்று முதல் வரும் 27-ந் தேதி வரை ரயான் துணி உற்பத்தியை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று விசைத்தறிகளில் ரயான் துணி உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

    ஈரோடு வீரப்பன்சத்திரம் அசோகபுரம் காளிங்கராயன் பாளையம் போன்ற பகுதியில் உள்ள விசைத்தறிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

    இதுகுறித்து ஈரோடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சுரேஷ் கூறியதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் ராயன் துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. சமீபகாலமாக ராயன் துணிகளை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் நூல் விலை அதிகரித்துள்ளது.

    இங்கு 120 கிராம் 150 கிராம் நூல் அதிகமாக பயன்படுத்த வருகிறோம். தீபாவளியின்போது இந்நூல் ஒரு கோன் ரூ.150-க்கு வாங்கினோம். இதன் மூலம் ஒரு மீட்டர் துணி ரூ.20-க்கு விற்பனை செய்தோம்.

    தற்போது நூல் விலை ரூ.176 ஆக உயர்ந்துள்ளது. ஆனால் ஒரு மீட்டர் துணி விலை ரூ.22 என்ற நிலையிலேயே உள்ளது. நூல் அடக்க விலைக்கூட துணி விலை போகாததால் உற்பத்தியாளர்கள் கடும் நடத்தை சந்தித்து உள்ளனர்.எனவே இன்று முதல் வரும் 27-ந் தேதி வரை ஒரு வார காலத்திற்கு ரயான் துணி உற்பத்தியை மட்டும் நிறுத்தி உள்ளோம். இதனால் 16.80 கோடி மீட்டர் துணி உற்பத்தி பாதிக்கப்படும். இதன் மூலம் ரூ.40 கோடி வரை வர்த்தகம் பாதிக்கும். எனவே நூல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×