என் மலர்
தர்மபுரி
- பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றியதாக புகார்.
- கைது செய்து சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், கேசர்குளி சாலை கிராமத்தை சேர்ந்தவர் விஜயரங்கன். இவர் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:-
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம், தீர்த்தகிரி நகர் பகுதியை சேர்ந்தவர் சாம்ராஜ். இவரும், இவரது மனைவி புனிதாவும் சேர்ந்து தனியார் பைனான்ஸ் இன்வெஸ்ட்மென்ட் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர்.
அதில் ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். அதில் முதலீடு செய்தால் அதிகலாபம் கிடைக்கும் என்று ஆசைவார்ததை கூறினர். அதனை நம்பி, 3.10.2015-ம் தேதி வங்கி மூலம் ரூ.2 லட்சமும் , பணமாக ரூ.2 லட்சமும் என ரூ.4 லட்சம் டெபாசிட் செய்தேன்.
மேலும் இரண்டு ஏலச்சீட்டில் சேர்ந்து அதன் மூலம் பணத்தை கட்டி வந்ததாகவும், இவ்வாறாக டெபாசிட் செய்த தொகை மற்றும் ஏலச்சீட்டில் கட்டிய தொகை என மொத்தம் ரூ.13 லட்சத்து 33 ஆயிரம் பணத்தை திருப்பி தராமல் காலம் கடத்தி வந்தனர்.
இது குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுத்து என்னுடைய பணத்தை மீட்டு தர வேண்டும். என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இவ்வழக்கானது விசாரணைக்காக சேலம் பொருளாதார குற்றப்பிரிவில் இருந்து தருமபுரி பொருளாதார குற்றப்பிரிவிற்கு மாறுதல் செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில் சாம்ராஜ் ரூ.36 லட்சத்து 83 ஆயிரத்து 40 பணத்தை 4 நபர்களிடமிருந்து டெபாசிட் மற்றும் ஏலச்சீட்டுக்காக பெற்றுக்கொண்டு பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றியதாக புகார்கள் பெறப்பட்டுள்ளன.
இவ்வழக்கில் சாம்ராஜ் என்பவரை தருமபுரி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தேடி வந்த நிலையில் 25.03.2024 -ம் தேதி அவரை கைது செய்து கோவை முதலீட்டாளர்கள் நலன் மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தற்போது அவர் நீதிமன்ற காவலில் இருந்து வருகிறார்.
எனவே தனியார் பைனான்ஸ் - இன்வெஸ்மெண்ட் பிரைவேட் லிமிடேட் நிறுவனத்தில் டெபாசிட் மற்றும் ஏலச்சீட்டில் பணம் முதலீடு செய்து, பாதிக்கப்பட்டவர்கள் உரிய ஆவணங்களுடன் தருமபுரி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் கொடுக்க அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு தருமபுரி பொருளாதார குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கற்பகம், தெரிவித்துள்ளார்.
- யானை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
- கிருஷ்ணனின் உடலை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பாலக்கோடு:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மணியகாரன்கொட்டாய் கிராமத்தில் உள்ள ஜெர்த்தலாவ் ஏரியில் ஒற்றை காட்டுயானை நேற்று காலை தண்ணீர் தேடி வந்தது.
அப்போது அந்த யானை ஏரியில் உள்ள நீரில் குளியல் போட்டு கும்மாளம் போடுவதை அந்த வழியாக சென்றவர்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து பாலக்கோடு வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன்பேரில் வனத்து றையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஏரியில் குளியல் போட்ட காட்டு யானையை காட்டுக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். மேலும் யானை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வனத்து றையினர் அறிவு றுத்தியுள்ளனர்.
இருந்த போதிலும் நேற்று இரவு தீர்த்தாரஹள்ளி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் (70) என்பவர் அவருடைய விவசாய நிலத்தில் இருந்தார். அப்போது அந்த இடத்திற்கு வந்த காட்டு யானை கிருஷ்ணனை மிதித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து கிருஷ்ணனின் உடலை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைதொடர்ந்து காட்டு யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கும் பணியில் பாலக்கோடு வனத்து றையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்:-
சமீப காலமாக பாலக்கோடு சுற்று வட்டார பகுதியில் உள்ள கிராமங்களுக்கு காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வருவதால் விவசாய நிலங்களில் உள்ள பயிர்கள் சேதமடைந்து வருவதுடன், கிராம மக்கள் அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனர்.
தற்போது, கோடைகாலம் தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கம் அதிக ரித்ததால் வனப்பகுதியில் இருந்து கிராம பகுதிக்குள் புகுந்து, ஏரியில் யானை முகாமிட்டிருப்பது பொது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அவ்வாறு வரும் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கர்னூர் பகுதியில் மீண்டும் 3 யானைகள் முகாமிட்டுள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.இந்த சம்பவம் பாலக்கோடு சுற்றுவட்டார பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
- ஆடுகளை வாங்க ஊத்தங்கரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர்.
- சந்தையில் 200-க்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகளும் கொண்டு வந்தனர்.
அரூர்:
கம்பைநல்லூரில் வாரந்தோறும் வெள்ளி கிழமைகளில் சந்தை நடைபெற்று வருகிறது. இங்கு சந்தையில் நடைபெறும் ஆடு, கோழி உள்ளிட்ட வாங்க விவசாயிகளும், ஆடு வளர்ப்பவரும், விற்பனைக்கு கொண்டு வந்தனர்
ஆடுகளை வாங்க ஊத்தங்கரை, திருப்பத்தூர், ஆம்பூர், காரிமங்கலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர்.
நேற்று நடந்த சந்தையில் 200-க்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகளும் கொண்டு வந்தனர். ஒரு ஆடு விலை ரூ. 5,000 முதல் ரூ.9,500 வரையும் விற்பனையானது. சந்தையில் நேற்று ஆடுகள் மொத்தம் ரூ.23 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது வியாபாரிகள் தெரிவித்தனர்.
- ஒகேனக்கல் அருவிகளான ஐந்தருவி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டி செல்லும் வேகமும் குறைந்துள்ளது.
- தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை என்பதால் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகளின் வருகையும் சற்று அதிகரித்துள்ளது.
ஒகேனக்கல்:
கர்நாடகா மாநிலத்தில் குடிநீருக்காக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரால் தமிழக- கர்நாடக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 400 கனஅடியாக அதிகரித்துள்ளது.
கடுமையான வெப்ப அலை தாக்குதலால் தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்து ஆறுகள், ஏரிகள், குளம், குட்டைகள் என நீர்நிலைகளில் தண்ணீர் படிப்படியாக வற்ற தொடங்கி வருகிறது.
மேலும், கர்நாடகா மாநிலத்தில் உள்ள அணைகளில் தண்ணீர் திறப்பு குறைவாலும், மழை பொய்த்து போனதாலும், ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் நீர்வரத்து 200 கனஅடி அளவில் சரிந்து வந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் கர்நாடகா மாநிலத்தில் குடிநீருக்காக கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் கடந்த 2 நாட்களாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து திடீரென அதிகரித்து வினாடிக்கு 350 கனஅடியாக நீடித்து வந்தது. இந்த நிலையில் இன்று காலை நீர்வரத்து 400 கனஅடியாக மேலும் அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.
தமிழகத்திற்கு வரும் இந்த நீரின் அளவு குறைந்த அளவு என்பதால் ஒகேனக்கல் அருவிகளான ஐந்தருவி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டி செல்லும் வேகமும் குறைந்துள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை என்பதால் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகளின் வருகையும் சற்று அதிகரித்துள்ளது. எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு சுற்றுலா பயணிகள் குறைவாக தண்ணீர் கொட்டும் அருவிகளிலும் குளித்து மகிழ்ந்தனர்.
ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் தண்ணீரின் அளவு குறைந்த அளவு உள்ளதால், பரிசல் சவாரி செல்லக் கூடிய மாமரத்து கடுவு முதல் ஊட்டமலை வரை பகுதிகளில் காவிரி ஆற்றில் தண்ணீர் அளவும் சரிந்து காணப்படுகிறது.
இதன் காரணமாக பரிசலில் செல்லமுடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும், மீன் மற்றும் இறைச்சி கடைகள், கடை வீதிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
- பிரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.
- சிறப்பு மிளகாய் வத்தல் யாகம் நடைபெற்றது.
ஓசூர்:
சித்ரா பவுர்ணமி நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கோயில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது.
அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மோரனபள்ளி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ராகு கேது அதர்வன ஸ்ரீ மகா பிரத்யங்கிரா தேவி கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, மூலவர் பிரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர், மகா தீபாராதனை நடத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து சிறப்பு மிளகாய் வத்தல் யாகம் நடைபெற்றது. இதில், மிளகாய் வத்தல் உள்ளிட்ட திரவியங்களை யாகசாலை குண்டத்தில் நிரப்பி பூரண ஆகுதியுடன் சிறப்பு அஷ்டோத்திர வழிபாடு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ராகு கேது பரிகார பூஜைகள் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மன் வழிபாடு நடத்தினர்.
- பக்தர்கள் ஆணிகள் கொண்ட காலணி அணிந்தும் நேர்த்தி கடன்.
- சிறப்பு அலங்காரத்தில் முருகன் சாமி பவனி வந்தார்.
மொரப்பூர்:
மொரப்பூர் அருகே சித்ரா பவுர்ணமியையொட்டி முருகன் கோவிலில் பக்தர்கள் மீது உரல் வைத்து மஞ்சள் இடித்து விநோத வழிபாடு செய்தனர். இதைத்தொடர்ந்து பக்தர்கள் ஆணிகள் கொண்ட காலணி அணிந்தும் நேர்த்தி கடன் செலுத்தினர்.
தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ளது தாமலேரிப்பட்டி. இந்த கிராமத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் அமைந்து உள்ளது.
இந்த நிலையில் நேற்று சித்ரா பவுர்ணமியொட்டி முருகன் சாமிக்கு இளநீர், மஞ்சள், பால், தயிர் ஆகிய வற்றால் சிறப்பு அபிஷேகங்கள், தீபாரதனையும் நடைபெற்றன. பின்னர் சாமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தாமலேரிப்பட்டி கிராமத்தில் இருந்து முருகன் கோவில் வரை மேளம் தாளங்கள் முழங்க கரகம் பாதித்து காவடியுடன் தேரில் சிறப்பு அலங்காரத்தில் முருகன் சாமி பவனி வந்தார்.
அப்போது மொரப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாவிளக்குடன் ஊர்வல மாக வந்தனர்.

இதனைத் தொடர்ந்து பூ மிதித்தல் நிகழ்ச்சியும், சாமி திருவீதி உலா வந்தபோது பக்தர்கள் மீது உரல் வைத்து மஞ்சள் இடித்தும், ஆணிகள் கொண்ட காலனியை அணிந்தும், பக்தர்கள் கோவிலை சுற்றி வலம் வந்தும் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். இதைத்தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப் பட்டது.
- கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
- அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் வீட்டிற்கு செல்ல வழியில்லாமல் தவித்து வருகிறோம்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த மூங்கில்மடுவு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் மணிகண்டன் இவர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் திடீரென குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
மூங்கில் மடுவு பகுதியில் உள்ள எங்கள் வீட்டிற்குச் செல்லும் ஓடை புறம்புக்கு வழியை அதே பகுதியை சேர்ந்த நபர் ஆக்கிரமித்துள்ளார். இந்த நிலையில், ஆக்கிரமிப்பை அகற்ற கோரி கடந்த ஜனவரி, 23-ந் தேதி கலெக்டர் அலுவலகத்தில் இதேபோல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டோம். அப்போது அதிகாரிகள் பேசும்போது ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் நம்பிக்கையுடன் சென்றோம். ஆனால் இதுவரை ஆக்கிரமிப்பு ஓடை புறம் போக்கை மீட்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் வீட்டிற்கு செல்ல வழியில்லாமல் தவித்து வருகிறோம்.
வாக்குறுதி தந்த அதிகாரிகளின் மெத்தனப் போக்கை கண்டித்து குழந்தைகள் உட்பட குடும்பத்துடன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டு உள்ளோம் என அவர் கூறினார். இதனை அடுத்து அங்கு வந்த டி.ஆர்.ஓ பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், தர்ணாவில் ஈடுபட்டிருந்த மணிகண்டனின் குடும்பத்திடம் விசாரனைக்கு உத்திரவிடுவதாக உறுதியளித்தார். அதனை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
- கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி கோரிக்கை நிறைவேற்றும் வரை தேர்தலை புறக்கணிப்பதாக பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டது.
- வாக்குசாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டது.
பாலக்கோடு:
தருமபுரி பாராளுமன்ற தொகுதி பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜோதி அள்ளி கிராமத்தில் நீண்ட நாட்களாக ரெயில்வே தரைபாலம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி கோரிக்கை நிறைவேற்றும் வரை தேர்தலை புறக்கணிப்பதாக பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டது.
ஆனால் இதுவரை எந்த அதிகாரிகளும் பேச்சுவார்த்தை கூட நடத்தவராததால் திட்டமிட்டபடி ஒட்டுமொத்த கிராம மக்களும் இன்று பாராளுமன்ற தேர்தலை புறக்கணித்துள்ளனர்.

வெறிச்சோடி காணப்படும் வாக்குசாவடி மையம்.
இதனால் வாக்குசாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டது. இக்கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் ஆண் வாக்காளர்கள் 768 பேரும், பெண் வாக்காளர்கள் 668 பேரும் என மொத்தம் ஆயிரத்து 436 வாக்குகள் உள்ள நிலையில் இதுவரை ஒருவாக்கு கூட பதிவாகாதது குறிப்பிடத்தக்கது. தற்போது வரை எந்த ஒரு தேர்தல் அதிகாரியும் கிராமத்துக்கு வரவில்லை என பொதுமக்கள் வருத்தம் தெரிவித்தனர்.
- மாற்று எந்திரம் வரவழைக்கப்பட்டு அரசியல் கட்சி வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் அதிகாரிகள் பொருத்தினர்.
- சுமார் 45 நிமிட நேரம் தாமதத்திற்கு பிறகு காலை 7.45 மணியளவில் மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது.
ஏரியூர்:
ஏரியூர் அருகே வாக்குப்பதிவு எந்திரம் பழுது காரணமாக 45 நிமிடம் தாமதமாக தொடங்கிய வாக்குப்பதிவு தொடங்கியது.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டடமன்ற தொகுதிக்குட்பட்ட ஏரியூர் அருகே உள்ள ராமகொண்ட அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட, புதூர் சோளப்பாடியில், வாக்குப்பதிவு எந்திரம் பழுதானது. இதனை தொடர்ந்து மாற்று எந்திரம் வரவழைக்கப்பட்டு அரசியல் கட்சி வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் அதிகாரிகள் பொருத்தினர்.
சுமார் 45 நிமிட நேரம் தாமதத்திற்கு பிறகு காலை 7.45 மணியளவில் மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது. இதன் காரணமாக வாக்காளர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து பின்னர் வாக்களித்தனர்.
- கடந்த தேர்தலில் என்னுடைய நண்பர்கள் பலரும் வாக்களித்து விட்டு விரலில் வைத்த மையை காட்டியபோது மிகுந்த ஏமாற்றமாக இருந்தது.
- இன்னும் கூட பல நாடுகளில் வாக்களிக்கும் உரிமை மக்களுக்கு கிடைக்கவில்லை.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தமனம்பட்டி கிராமத்தை சேர்ந்த சத்யா (வயது 19) என்பவர் தெரிவிக்கையில்,
நான் அரசு கல்லூரியில் இயற்பியல் துறையில் முதலாம் ஆண்டு படித்து வருகிறேன். கடந்த தேர்தலில் என்னுடைய நண்பர்கள் பலரும் வாக்களித்து விட்டு விரலில் வைத்த மையை காட்டியபோது மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. முதல் முறையாக இந்த தேர்தலில் எனக்கு வாக்களிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இதுவரை எனது பெற்றோர் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்கள் வாக்களிக்க செல்வதாக கூறி விட்டு செல்லும்போது நாமும் எப்போது வாக்களிக்க செல்வோம் என மிகுந்த ஆர்வமுடன் காத்திருந்தேன்.
தற்போது அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்ததால் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளேன்.
வாக்களிப்பது என்பது ஜனநாயக கடமை. அதனை முறையாக நிறைவேற்ற வேண்டும். அந்த வாய்ப்பு ஒவ்வொருவருக்கும் கிடைப்பது அரிது.
இன்னும் கூட பல நாடுகளில் வாக்களிக்கும் உரிமை மக்களுக்கு கிடைக்கவில்லை. எனவே நமக்கு கிடைத்த ஜனநாயக கடமையை தேர்தலை புறக்கணிக்காமல் தங்கள் வாக்கை பதிவு செய்ய வேண்டும் என்றார்.
- தேர்தல் பாஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது என்றால், அந்த கட்சியின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
- அதிமுக-வுக்கு வாக்களித்தது வேஸ்ட் என அன்புமணி தெரிவித்துள்ளார். அதிமுக-வுக்கு வாக்களித்து நான் வெற்றி பெற்றதனால்தான் நீங்கள் எம்.பி.யாக இருக்கிறீர்கள்.
தருமபுரி அதிமுக வேட்பாளர் டாக்டர் அசோகனை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்த வேனில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பேசும்போது அவர் கூறியதாவது:-
தருமபுரியில் மும்முனை போட்டி நிலவுகிறது. அதிமுக, திமுக, பாஜனதா கூட்டணியில் பாமக ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.
பாட்டாளி மக்கள் கட்சி நமது கூட்டணியில் 2-வது இடம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தது. தற்போது 3-வது இடமல்ல. ஐந்தாவது இடத்திற்கு போய்விட்டார்கள். 2019 தேர்தலில் அதிமுக கூட்டணியில் 2-வது இடத்தில் பாமக இருந்தது. 3-வது இடத்தில்தான் பா.ஜனதா இருந்தது.
இந்த தேர்தல் பாஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது என்றால், அந்த கட்சியின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அதிமுக-வுக்கு வாக்களித்தது வேஸ்ட் என அன்புமணி தெரிவித்துள்ளார்.
அதிமுக-வுக்கு வாக்களித்து நான் வெற்றி பெற்றதனால்தான் நீங்கள் எம்.பி.யாக இருக்கிறீர்கள். ஒரு எம்எல்ஏ கூட இல்லாத நிலையில் மக்கள் அதிமுக எம்.எல்.ஏ.-க்களை தேர்ந்தெடுத்ததன் மூலம் நாங்கள் உங்களை எம்.பி.யாக தேர்ந்தெடுத்தோம்.
எங்களிடம் பிரதமர் வேட்பாளர் யார் எனக் கேட்கிறார். அவர் மத்திய அமைச்சரவையில் இருந்தபோது ஒரு திட்டத்தையாவது இந்த பகுதிக்கு கொண்டு வந்தாரா?. தமிழக மக்கள் பயன்படும் வகையில் பாராளுமன்றத்தில் பேசினாரா?. பிரதமரை வைத்து என்ன செய்யப்போகிறீர்கள். அடிமையாக இருக்க பார்க்கிறீர்கள்.
மத்தியில் யார் என்பது எங்களுக்கு தேவையில்லை. மக்கள்தான் தேவை. மக்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும். தனித்து போட்டியிட்டால்தான் பாராளுமன்றத்தில் மக்களின் பிரச்சனைகளை பேச முடியும். உங்களுக்கு பதவி வேண்டும். அதனால் கூட்டணி அமைத்துள்ளீர்கள். பாமக அடிக்கடி கூட்டணி மாறிக்கொண்டே இருக்கும்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
- தி.மு.க பொய் வாக்குறுதிகளை அளிப்பதை மட்டுமே வாடிக்கையாகக் கொண்டுள்ளது.
- மீண்டும் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமைவது என்பது 101 சதவீதம் உறுதி செய்யப்பட்ட ஒன்று.
தருமபுரி:
தருமபுரி மக்களவை தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சவுமியா அன்புமணியை ஆதரித்து தருமபுரி மாவட்டம் தொப்பூரில் வாகன பிரசாரத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வாக்கு சேகரித்தார்.
இந்தியாவிலேயே அன்புமணி ராமதாசை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. 108 ஆம்புலன்ஸ் என்றால் உலகத்திலேயே இந்தியா அதற்கு ஒரு ரோல் மாடலாக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் அன்புமணி ராமதாஸ் .
தி.மு.க பொய் வாக்குறுதிகளை அளிப்பதை மட்டுமே வாடிக்கையாகக் கொண்டுள்ளது. குறிப்பாக, மகளிருக்கு ஏராளமான பொய் வாக்குறுதிகளை திமுக அளித்து வருகிறது. ரூ.1,000 மகளிருக்கு தருவதாகக் சொன்னார்கள். ஆனால், இந்த தொகை சிலருக்கு மட்டுமே வந்துள்ளது. பலருக்கு இன்றுவரை வழங்கப்படவில்லை.
ஒருபுறம் உரிமைத் தொகை என்ற பெயரில் பணம் வழங்கும் இந்த அரசு மறுபுறம் மதுக்கடைகளை திறந்து அந்த பணத்தை பறித்துக் கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
திட்டங்களையும், வாக்குறுதிகளையும் செயல் படுத்துவதில் தமிழக அரசு முதலிடம் பிடித்துள்ளது என விளம்பரப்படுத்திக் கொள்கிறது. இந்த அரசு போதை பொருட்கள் புழக்கத்திலும், கஞ்சா விற்பனையிலும் முதலிடம் பிடித்த அரசாகத் திகழ்கிறது.
மீண்டும் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமைவது என்பது 101 சதவீதம் உறுதி செய்யப்பட்ட ஒன்று. இந்த தேர்தலில் நீங்கள் தி.மு.க.வுக்கோ அ.தி.மு.க-வுக்கோ வாக்களிக்கக்கூடாது. அப்படி தவறுதலாக உங்கள் வாக்கை போட்டால் உங்களது வாக்கு குப்பைத் தொட்டியில் போடுவதற்கு சமம். என்றார்.
பின்னர் வேட்பாளர் சவுமியா அன்புமணி உடன் நடந்து சென்று வாக்கு சேகரித்தார். அப்போது சாலையோரத்தில் இருந்த டீக்கடையில் அமர்ந்து டீ குடித்தவாறு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.






