என் மலர்
தர்மபுரி
- தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இன்று எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.
- இந்தாண்டு கூடுதலாக 1.01 சதவீதம் பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தருமபுரி:
தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி தொடங்கி கடந்த மாதம் 8-ந் தேதி வரை நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின.
தருமபுரி மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து மொத்தம் 20651 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத தகுதி பெற்றிருந்தனர். இதில் தருமபுரி மாவட்டத்தில் இருந்து 10593 மாணவர்கள், 10058 மாணவிகள் என மொத்தம் 18679 மாணவர்கள் 94 மையங்களில் தேர்வு எழுதினர்.
தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இன்று எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.
இதில் தேர்வு எழுதிய 10,598 மாணவர்களில் 9270 பேரும், 10058 மாணவிகளில் 9409 பேரும் என மொத்தம் மாவட்டத்தில் 18679 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 90.45 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 89.46 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தாண்டு கூடுதலாக 1.01 சதவீதம் பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
- இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு சுமார் 500 கன அடியாக நீர்வரத்து அதிகரித்திருந்தது.
- ஒகேனக்கல்லில் நீர்வரத்து 1500 கனஅடிக்கு மேல் வரும் பட்சத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கக்கூடும்.
ஒகேனக்கல்:
பருவ மழை பொய்த்து போனதாலும், கர்நாடகா மாநில அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதாலும், தமிழக-கர்நாடக எல்லைப் பகுதியில் உள்ள பிலிகுண்டுலு வழியாக செல்லக்கூடிய காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நீர்வரத்து சரிந்து வண்ணமாக இருந்தது.
கடந்த சில நாட்காளக கோடை காலம் மற்றும் மழை இன்மையால் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்து, ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து வினாடிக்கு 200 கனஅடியாக நீடித்து வந்தன.
இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மற்றும் அஞ்செட்டி, கேரட்டி, நாட்ரபாளையம், ஊட்டமலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிக்க தொடங்கியது. இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு சுமார் 500 கன அடியாக நீர்வரத்து அதிகரித்திருந்தது.
படிப்படியாக மேலும் அதிகரித்து காலை 9 மணி நிலவரப்படி வினாடிக்கு சுமார் 800 கனஅடி அளவில் உயர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

கர்நாடகா அணைகளில் நீர் திறப்பு நிறுத்தப்பட்டதாலும், மழை அளவு குறைந்ததாலும், ஒகேனக்கல்லில் கடந்த சில நாட்களாக காவிரி ஆற்றில் தண்ணீர் வறண்டு பாறைகளாக காட்சியளித்தன.
மேலும், மெயின் அருவியில் மட்டும் குறைந்த அளவிலான தண்ணீர் கொட்டியது. ஐந்தருவி, சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்பட்டன.
மேலும் கடந்த சில நாட்களாக வீசிய கடும் வெப்ப அலை காரணமாக ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாவுக்காக வந்த பயணிகள் காவிரி ஆற்றில் குளிக்க முடியாமல் சிறிதளவில் தண்ணீர் கொட்டிய மெயின் அருவியில் குளித்து சென்றனர்.
இந்த நிலையில் இன்று காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் ஒகேனக்கல் அருவிகளான ஐந்தருவி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டிச்செல்கின்றன. ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் அருவிகளிலும், காவிரி ஆற்றிலும் குளித்து மகிழ்ந்தனர்.
இதேபோன்று வறண்ட காவிரி ஆற்றில் பாறைகளாக காட்சியளித்த நிலையில் கடந்த 3 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பரிசல் சவாரி நேற்றுடன் மீண்டும் இயக்க தொடங்கியது. இந்த நிலையில் காவிரி ஆற்றில் சீராக தண்ணீர் செல்வதால் அத்திமரத்துகடுவு பகுதியில் இருந்து ஊட்டமலை பரிசலில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் சவாரி செய்தனர். மேலும், ஓட்டல்கள், கடைவீதி, பரிசல் நிலையம் ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
தற்போது நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியதாலும், கோடைகாலம் தொடங்கியதாலும் கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் கர்நாடகா மாநிலத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகரிக்க தொடங்கின.
கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் கர்நாடகா மாநிலத்தில் இன்னும் சில தினங்களுக்கு கோடை மழை பெய்ய இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்கக்கூடும் என்பதால், மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் பிலிக்குண்டுலுவில் நீர்வரத்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 1500 கனஅடிக்கு மேல் வரும் பட்சத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- வீட்டில் சின்னசாமி மனைவி சாந்தி மட்டும் தனியாக தூங்கி கொண்டு இருந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து முகமூடி கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
தருமபுரி:
தருமபுரி நகரில் அடுத்தடுத்து 2 இடங்களில் நள்ளிரவில் முகமூடி கொள்ளையர்கள் வீடு புகுந்து பெண்களிடம் 7 1/2 பவுன் தங்கச் சங்கிலி , ரூ.47ஆயிரம் பணம் மற்றும் 2 செல்போன்களை கொள்ளையடித்து சென்றனர்.
தருமபுரி அருகே உள்ள மொன்னையவன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி, டாஸ்மாக் ஊழியர். இவர் பழைய தருமபுரி அருகே உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சாந்தி. இந்நிலையில் நேற்று இரவு சின்னசாமி பணியை முடித்து விட்டு வீட்டுக்கு செல்லாமல் அவருடைய தாய் வீட்டுக்கு சென்று அங்கேயே தங்கி உள்ளார். அவரது வீட்டில் சின்னசாமி மனைவி சாந்தி மட்டும் தனியாக தூங்கி கொண்டு இருந்தார்.
இந்நிலையில் நள்ளிரவில உடல் உபாதை கழிப்பதற்காக சாந்தி எழுந்து வெளியே வந்தார். அப்போது முகமூடி அணிந்த 2 நபர்கள் சாந்தியின் வீட்டுக்குள் சென்று பீரோவில் இருந்த ரூ.47 ஆயிரம் பணம், 2 விலை உயர்ந்த செல்போன்களை திருடி கொண்டிருந்தனர். அப்போது சத்தம் கேட்ட சாந்தி மின் விளக்கை ஆன் செய்த போது சாந்தியின் கழுத்தில் இருந்த 71/2 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு, அங்கிருந்து மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டனர்.
இதேபோல் பென்னாகரம் சாலையில் உள்ள நந்தி நகர் பகுதியில் 6-வது தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி. தனியார் சிப்ஸ் கடை உரிமையாளர். அவரது மனைவி ரேவதி. சம்பவத்தன்று 2 பேரும் வீட்டில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது நள்ளிரவில் கதவை தட்டிய முகமூடி அணிந்த 4 மர்ம நபர்கள் ரேவதியின் கழுத்தில் அணிந்து இருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர். ஆனால் அவரது கணவர் ராஜீவ் காந்தி தடுத்ததால் கொள்ளையர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதை தொடர்ந்து ராஜீவ் காந்தியை தாக்கி விட்டு கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்த தகவல் அறிந்த தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசு பாதம் ,கொள்ளை நடந்த 2 வீடுகளையும் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும் தருமபுரி நகர போலீசார் வழக்கு பதிவு செய்து முகமூடி கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த கொள்ளை சம்பவம் நடந்த வீடுகளில் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது. மேலும் கைரேகை நிபுணர்களும் அங்கிருந்து தடையங்களை பதிவு செய்தனர்.
தருமபுரி நகரில் நள்ளிரவில் அடுத்தடுத்து 2 வீடுகளில் நடந்த கொள்ளை சம்பவம் இப்பகுதி பொது மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
- தொப்பூர் டோல்கேட் பகுதியில் நேற்று இரவு கஞ்சா தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- பிரிந்து பார்த்து அதில் சுமார் 11 கிலோ எடையுள்ள கஞ்சா மற்றும் விதைகளுடன் கஞ்சா செடிகள் இருந்தன.
தொப்பூர்:
தருமபுரி மாவட்டத்தில் கள்ள சந்தையில் மது, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கஞ்சா ஆகியவை சகஜமாக விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் கஞ்சா, தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதையும், மேலும் மாவட்டம் வழியாக கஞ்சா கடத்தப்படுவதையும் தடுக்க வேண்டும் என்று மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின் பேரில் அவ்வப்போது போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை கடத்தி வருபவர்களை கைது செய்தும் வருகின்றனர்.
இந்த நிலையில் தருமபுரி அருகே தொப்பூர் டோல்கேட் பகுதியில் நேற்று இரவு கஞ்சா தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு வாகனத்தை வழிமறித்து சோதனை செய்தனர்.
அதில் பயணம் செய்த 2 பேரின் பைகளை போலீசார் சோதனை செய்ததில் பொட்டலங்களாக கட்டி வைக்கப்பட்டிருந்தது. அதனை பிரிந்து பார்த்து அதில் சுமார் 11 கிலோ எடையுள்ள கஞ்சா மற்றும் விதைகளுடன் கஞ்சா செடிகள் இருந்தன.
அதனை ஒடிசா மாநிலம் கேந்திராபுரா அருகே உள்ள ராஜி நகரைச் சேர்ந்த பாய்லோசார் பெகரோ (வயது25), புத்தாதீப் ரோத் ஆகிய 2 பேரும் ஒடிசாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது.
உடனே 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 11 கிலோ எடையுள்ள கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கைதான 2 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- பென்னாகரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
தருமபுரி:
தருமபுரி மாவட்டத்தில் கோடைக்கு முன்பே கடுமையாக வெப்பம் வீசி வந்தது. கோடை வெயில் தொடங்கியவுடன் 100 பாரன்ஹீட் வெயில் பதிவாகி சதம் அடித்து வந்த நிலையில் ஏப்ரல் மாதம் முழுவதும் 104 பாரன்ஹீட் வெப்பம் தொடங்கி 108. 7 பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. கடும் வெப்பத்தால் அனல் காற்று வீசியதில் பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகினர்.
இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு 108.5 பாரன்ஹீட் அளவில் கடுமையான வெப்பம் தாக்கியதில் தார் சாலைகளில் வெப்பம் பட்டு வெப்பத்துடன் சேர்ந்து அனல் காற்று வீசியதால் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச் சோடி காணப்பட்டது. பின்னர் மாலை திடீரென 5 மணிக்கு மேல் சூறாவளி காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது. இதனால் குளிர்ந்த சீதோசன நிலை நிலவி பொதுமக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வானம் போர்வையால் போர்த்தியது போல் மேக மூட்டத்துடன் காணப்பட்டாலும் வெப்பத்தின் தாக்கம் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று 106.1 பாரன்ஹீட் வெப்பம் பதிவான நிலையில் மாலை திடீரென தருமபுரி , பாரதிபுரம், ஒட்டப்பட்டி, அதனைச் சுற்றியுள்ள தடங்கம், ஆட்டுக்காரன் பட்டி, சோலை கொட்டாய், வத்தல்மலை உள்ளிட்ட பகுதிகளிலும் இடி மின்னலுடன் மழை கொட்டி தீர்த்தது.
பாலக்கோடு, அரூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் அனல் காற்றின் தாக்கம் தணிந்து குளிர்ந்த சீதோசன நிலை நிலவியது. மேலும் இந்த திடீர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கத்திரிப்பிறந்த முதல் நாளே மழை ஆலங்கட்டியுடன் கொட்டி தீர்த்தது. தொடர்ந்து கோடை மழை பெய்தால் வறட்சியால் தண்ணீர் இன்றி கருகும் பயிர்களை பாதுகாக்க முடியும் என விவசாயிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
நேற்று இரவு திடீரென பென்னாகரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஏரியூர் செல்லும் சாலை ஓரத்தில் இருந்த மரங்கள் சாய்ந்தது. இதனால் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் மின்சரா துறையினர் சாலையில் விழுந்த மரங்களை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.கடும் வெயில் தாக்கம் அதிகம் இருந்த நிலையில் திடீரென மழை பெய்ததால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- தருமபுரி மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் தொடர்ச்சியாக இன்று காலை வெப்பம் தணிந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
- கடும் வெயிலால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.
தருமபுரி:
தமிழகம் முழுவதும் வெப்ப அலை வீச தொடங்கியதால் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 100 டிகிரி வரை வெயில் அடித்து சதம் அடித்தது.
இதைத்தொடர்ந்து வெப்பசலன காற்று வீசி கடந்த 5 நாட்களாக தருமபுரி மாவட்டத்தில் 100 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் கொளுத்தியது. இதில் தருமபுரி மாவட்டத்தில் நேற்று காலை முதல் மாலை வரை 45 வருடங்களுக்கு பிறகு 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் அடித்தது. இதனால் கடுமையான வெயிலை தாக்குபிடிக்க முடியாமல் பொதுமக்கள் சிலர் குடைபிடித்தப்படி சாலைகளில் நடமாடினர்.
இந்த நிலையில் நேற்று மாலை திடீரென்று வெப்ப சலன காற்று குறைய தொடங்கி வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. இரவு திடீரென்று கோடை மழை பெய்தது. இதனால் தருமபுரி, பாலக்கோடு, காரிமங்கலம் ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சில இடங்களில ஆலங்கட்டியுடன் மழையும் பெய்தது. இதனால் கடுமையான வெயிலால் வாட்டி வதைந்து வந்த பொதுமக்களுக்கு இந்த கோடை மழை சற்று ஆறுதலாக குளிர்ச்சியை தந்தது. இதனால் அவர்கள் இரவில் நிம்மதியாக தூங்க சென்றனர்.
இந்த நிலையில் இன்றும் வடமாவட்டங்களில் உள்பகுதிகளில் சில இடங்களில் கடுமையான வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிக்கை விடுத்து இருந்தது. ஆனால், மாறாக தருமபுரி மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் தொடர்ச்சியாக இன்று காலை வெப்பம் தணிந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தருமபுரி மாவட்டத்தில் இன்று 100 டிகிரி கீழ் சென்று 96 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் தலைகாட்ட தொடங்கியது.
கடந்த ஒரு வாரமாக வெப்பஅலையால் பொது மக்கள் வெளியில் தலை காட்ட முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்த நிலையில் இன்று காலை குளிர்ந்த சீதோஷ்ண நிலையுடன் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் சற்று நிம்மதியடைந்தனர்.
இதேபோன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெப்ப அலை காரணமாக கடுமையான வெயிலால் பொது மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று காவேரிப்பட்டணம், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, ஓசூர், பாரூர் ஆகிய பகுதிகளில் கோடை மழை பெய்தது. இதில் சூளகிரி, ஓசூர், காவேரிப்பட்டணம், பாரூர் ஆகிய பகுதிகளில் ஆலங்கட்டியுடன் மழை பெய்தது.
இதனால் கடும் வெயிலால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் இன்று காலை கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், ஓசூர், சூளகிரி பகுதிகளில் வெயில் தாக்கம் இல்லாமல் குளிர்ந்த சீதோஷ்ண சூழ்நிலை நிலவியது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று 96 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகி இருந்தது.
இதனால் காலை வேளையில் வேலைக்கு செல்பவர்கள், விவசாயி கூலி தொழிலாளிகள் சற்று நிம்மதியடைந்தனர்.
- பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றியதாக புகார்.
- கைது செய்து சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், கேசர்குளி சாலை கிராமத்தை சேர்ந்தவர் விஜயரங்கன். இவர் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:-
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம், தீர்த்தகிரி நகர் பகுதியை சேர்ந்தவர் சாம்ராஜ். இவரும், இவரது மனைவி புனிதாவும் சேர்ந்து தனியார் பைனான்ஸ் இன்வெஸ்ட்மென்ட் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர்.
அதில் ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். அதில் முதலீடு செய்தால் அதிகலாபம் கிடைக்கும் என்று ஆசைவார்ததை கூறினர். அதனை நம்பி, 3.10.2015-ம் தேதி வங்கி மூலம் ரூ.2 லட்சமும் , பணமாக ரூ.2 லட்சமும் என ரூ.4 லட்சம் டெபாசிட் செய்தேன்.
மேலும் இரண்டு ஏலச்சீட்டில் சேர்ந்து அதன் மூலம் பணத்தை கட்டி வந்ததாகவும், இவ்வாறாக டெபாசிட் செய்த தொகை மற்றும் ஏலச்சீட்டில் கட்டிய தொகை என மொத்தம் ரூ.13 லட்சத்து 33 ஆயிரம் பணத்தை திருப்பி தராமல் காலம் கடத்தி வந்தனர்.
இது குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுத்து என்னுடைய பணத்தை மீட்டு தர வேண்டும். என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இவ்வழக்கானது விசாரணைக்காக சேலம் பொருளாதார குற்றப்பிரிவில் இருந்து தருமபுரி பொருளாதார குற்றப்பிரிவிற்கு மாறுதல் செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில் சாம்ராஜ் ரூ.36 லட்சத்து 83 ஆயிரத்து 40 பணத்தை 4 நபர்களிடமிருந்து டெபாசிட் மற்றும் ஏலச்சீட்டுக்காக பெற்றுக்கொண்டு பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றியதாக புகார்கள் பெறப்பட்டுள்ளன.
இவ்வழக்கில் சாம்ராஜ் என்பவரை தருமபுரி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தேடி வந்த நிலையில் 25.03.2024 -ம் தேதி அவரை கைது செய்து கோவை முதலீட்டாளர்கள் நலன் மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தற்போது அவர் நீதிமன்ற காவலில் இருந்து வருகிறார்.
எனவே தனியார் பைனான்ஸ் - இன்வெஸ்மெண்ட் பிரைவேட் லிமிடேட் நிறுவனத்தில் டெபாசிட் மற்றும் ஏலச்சீட்டில் பணம் முதலீடு செய்து, பாதிக்கப்பட்டவர்கள் உரிய ஆவணங்களுடன் தருமபுரி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் கொடுக்க அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு தருமபுரி பொருளாதார குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கற்பகம், தெரிவித்துள்ளார்.
- யானை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
- கிருஷ்ணனின் உடலை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பாலக்கோடு:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மணியகாரன்கொட்டாய் கிராமத்தில் உள்ள ஜெர்த்தலாவ் ஏரியில் ஒற்றை காட்டுயானை நேற்று காலை தண்ணீர் தேடி வந்தது.
அப்போது அந்த யானை ஏரியில் உள்ள நீரில் குளியல் போட்டு கும்மாளம் போடுவதை அந்த வழியாக சென்றவர்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து பாலக்கோடு வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன்பேரில் வனத்து றையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஏரியில் குளியல் போட்ட காட்டு யானையை காட்டுக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். மேலும் யானை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வனத்து றையினர் அறிவு றுத்தியுள்ளனர்.
இருந்த போதிலும் நேற்று இரவு தீர்த்தாரஹள்ளி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் (70) என்பவர் அவருடைய விவசாய நிலத்தில் இருந்தார். அப்போது அந்த இடத்திற்கு வந்த காட்டு யானை கிருஷ்ணனை மிதித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து கிருஷ்ணனின் உடலை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைதொடர்ந்து காட்டு யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கும் பணியில் பாலக்கோடு வனத்து றையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்:-
சமீப காலமாக பாலக்கோடு சுற்று வட்டார பகுதியில் உள்ள கிராமங்களுக்கு காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வருவதால் விவசாய நிலங்களில் உள்ள பயிர்கள் சேதமடைந்து வருவதுடன், கிராம மக்கள் அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனர்.
தற்போது, கோடைகாலம் தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கம் அதிக ரித்ததால் வனப்பகுதியில் இருந்து கிராம பகுதிக்குள் புகுந்து, ஏரியில் யானை முகாமிட்டிருப்பது பொது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அவ்வாறு வரும் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கர்னூர் பகுதியில் மீண்டும் 3 யானைகள் முகாமிட்டுள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.இந்த சம்பவம் பாலக்கோடு சுற்றுவட்டார பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
- ஆடுகளை வாங்க ஊத்தங்கரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர்.
- சந்தையில் 200-க்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகளும் கொண்டு வந்தனர்.
அரூர்:
கம்பைநல்லூரில் வாரந்தோறும் வெள்ளி கிழமைகளில் சந்தை நடைபெற்று வருகிறது. இங்கு சந்தையில் நடைபெறும் ஆடு, கோழி உள்ளிட்ட வாங்க விவசாயிகளும், ஆடு வளர்ப்பவரும், விற்பனைக்கு கொண்டு வந்தனர்
ஆடுகளை வாங்க ஊத்தங்கரை, திருப்பத்தூர், ஆம்பூர், காரிமங்கலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர்.
நேற்று நடந்த சந்தையில் 200-க்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகளும் கொண்டு வந்தனர். ஒரு ஆடு விலை ரூ. 5,000 முதல் ரூ.9,500 வரையும் விற்பனையானது. சந்தையில் நேற்று ஆடுகள் மொத்தம் ரூ.23 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது வியாபாரிகள் தெரிவித்தனர்.
- ஒகேனக்கல் அருவிகளான ஐந்தருவி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டி செல்லும் வேகமும் குறைந்துள்ளது.
- தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை என்பதால் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகளின் வருகையும் சற்று அதிகரித்துள்ளது.
ஒகேனக்கல்:
கர்நாடகா மாநிலத்தில் குடிநீருக்காக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரால் தமிழக- கர்நாடக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 400 கனஅடியாக அதிகரித்துள்ளது.
கடுமையான வெப்ப அலை தாக்குதலால் தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்து ஆறுகள், ஏரிகள், குளம், குட்டைகள் என நீர்நிலைகளில் தண்ணீர் படிப்படியாக வற்ற தொடங்கி வருகிறது.
மேலும், கர்நாடகா மாநிலத்தில் உள்ள அணைகளில் தண்ணீர் திறப்பு குறைவாலும், மழை பொய்த்து போனதாலும், ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் நீர்வரத்து 200 கனஅடி அளவில் சரிந்து வந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் கர்நாடகா மாநிலத்தில் குடிநீருக்காக கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் கடந்த 2 நாட்களாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து திடீரென அதிகரித்து வினாடிக்கு 350 கனஅடியாக நீடித்து வந்தது. இந்த நிலையில் இன்று காலை நீர்வரத்து 400 கனஅடியாக மேலும் அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.
தமிழகத்திற்கு வரும் இந்த நீரின் அளவு குறைந்த அளவு என்பதால் ஒகேனக்கல் அருவிகளான ஐந்தருவி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டி செல்லும் வேகமும் குறைந்துள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை என்பதால் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகளின் வருகையும் சற்று அதிகரித்துள்ளது. எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு சுற்றுலா பயணிகள் குறைவாக தண்ணீர் கொட்டும் அருவிகளிலும் குளித்து மகிழ்ந்தனர்.
ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் தண்ணீரின் அளவு குறைந்த அளவு உள்ளதால், பரிசல் சவாரி செல்லக் கூடிய மாமரத்து கடுவு முதல் ஊட்டமலை வரை பகுதிகளில் காவிரி ஆற்றில் தண்ணீர் அளவும் சரிந்து காணப்படுகிறது.
இதன் காரணமாக பரிசலில் செல்லமுடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும், மீன் மற்றும் இறைச்சி கடைகள், கடை வீதிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
- பிரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.
- சிறப்பு மிளகாய் வத்தல் யாகம் நடைபெற்றது.
ஓசூர்:
சித்ரா பவுர்ணமி நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கோயில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது.
அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மோரனபள்ளி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ராகு கேது அதர்வன ஸ்ரீ மகா பிரத்யங்கிரா தேவி கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, மூலவர் பிரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர், மகா தீபாராதனை நடத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து சிறப்பு மிளகாய் வத்தல் யாகம் நடைபெற்றது. இதில், மிளகாய் வத்தல் உள்ளிட்ட திரவியங்களை யாகசாலை குண்டத்தில் நிரப்பி பூரண ஆகுதியுடன் சிறப்பு அஷ்டோத்திர வழிபாடு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ராகு கேது பரிகார பூஜைகள் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மன் வழிபாடு நடத்தினர்.
- பக்தர்கள் ஆணிகள் கொண்ட காலணி அணிந்தும் நேர்த்தி கடன்.
- சிறப்பு அலங்காரத்தில் முருகன் சாமி பவனி வந்தார்.
மொரப்பூர்:
மொரப்பூர் அருகே சித்ரா பவுர்ணமியையொட்டி முருகன் கோவிலில் பக்தர்கள் மீது உரல் வைத்து மஞ்சள் இடித்து விநோத வழிபாடு செய்தனர். இதைத்தொடர்ந்து பக்தர்கள் ஆணிகள் கொண்ட காலணி அணிந்தும் நேர்த்தி கடன் செலுத்தினர்.
தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ளது தாமலேரிப்பட்டி. இந்த கிராமத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் அமைந்து உள்ளது.
இந்த நிலையில் நேற்று சித்ரா பவுர்ணமியொட்டி முருகன் சாமிக்கு இளநீர், மஞ்சள், பால், தயிர் ஆகிய வற்றால் சிறப்பு அபிஷேகங்கள், தீபாரதனையும் நடைபெற்றன. பின்னர் சாமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தாமலேரிப்பட்டி கிராமத்தில் இருந்து முருகன் கோவில் வரை மேளம் தாளங்கள் முழங்க கரகம் பாதித்து காவடியுடன் தேரில் சிறப்பு அலங்காரத்தில் முருகன் சாமி பவனி வந்தார்.
அப்போது மொரப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாவிளக்குடன் ஊர்வல மாக வந்தனர்.

இதனைத் தொடர்ந்து பூ மிதித்தல் நிகழ்ச்சியும், சாமி திருவீதி உலா வந்தபோது பக்தர்கள் மீது உரல் வைத்து மஞ்சள் இடித்தும், ஆணிகள் கொண்ட காலனியை அணிந்தும், பக்தர்கள் கோவிலை சுற்றி வலம் வந்தும் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். இதைத்தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப் பட்டது.






