என் மலர்tooltip icon

    கடலூர்

    பண்ருட்டி அருகே தி.மு.க.வை சேர்ந்த இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதால் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள புதுப்பேட்டையை சேர்ந்தவர் சுந்தர வடிவேல். இவர் நகர தி.மு.க. செயலாளராக உள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் சதாசிவம். இவர் தி.மு.க. மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளராக உள்ளார்.

    சுந்தர வடிவேலும், சதாசிவமும் நிதிநிறுவனம் நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக அவர்களிடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு புதுப்பேட்டை அருகே உள்ள தொரப்பாடி மாரியம்மன்கோவில் திருவிழா நடைபெற்றது.

    திருவிழாவின்போது சுந்தர வடிவேலுக்கும், சதாசிவத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது புதுப்பேட்டை போலீசார் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலையில் சுந்தர வடிவேலுக்கும், சதாசிவத்துக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. பின்பு 2 பிரிவினரும் கோஷ்டியாக மோதிக்கொண்டனர். இந்த மோதலில் சுந்தர வடிவேலின் அண்ணன் ராஜாராமின் வீடு சூறையாடப்பட்டது.

    அதுபோல சுந்தர வடிவேலின் தம்பி வெங்கடேசன் வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரும் அடித்து நொறுக்கப்பட்டது. சுந்தர வடிவேலுவின் ஆதரவாளர்கள் சதாசிவத்தின் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினர். இந்த மோதலில் சுந்தர வடிவேலின் மகன் ராஜ்குமார் தாக்கப்பட்டார்.

    படுகாயம் அடைந்த ராஜ்குமார் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு மோதலில் ஈடுபட்ட இரு தரப்பினரையும் விலக்கி விட்டனர்.

    இந்த மோதல் தொடர்பாக புதுப்பேட்டை போலீசில் இரு தரப்பினரும் புகார் செய்தனர். அதன்பேரில் 40 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் தி.மு.க. நகர செயலாளர் சுந்தர வடிவேல், தி.மு.க. மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சதாசிவம் உள்பட 20 பேரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை தேடிவருகின்றனர்.

    தி.மு.க.வினரிடையே திடீரென்று மோதல் ஏற்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    நீர்வரத்து அதிகமாக இருப்பதால் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு 74 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும். இந்த ஏரியானது சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடகா மாநில அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி உபரிநீர் தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தது. அங்கிருந்து கல்லணை, கீழணைக்கு வந்த தண்ணீர் வடவாறு வழியாக 27-ந் தேதி வீராணம் ஏரிக்கு வந்தது.

    நேற்று வீராணம் ஏரிக்கு 800 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று அது 690 கனஅடியாக குறைந்தது. ஏரியின் நீர்மட்டம் நேற்று 46.70 அடியாக இருந்தது. இன்றும் அதே 46.70 கனஅடியாக உள்ளது.

    நீர்வரத்து அதிகமாக இருப்பதால் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு கடந்த 11-ந் தேதியில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. நேற்று சென்னைக்கு வினாடிக்கு 66 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இன்று அது மேலும் அதிகரித்து 74 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டது. நேற்றைய விட இது 8 கனஅடி அதிகமாகும். ஏரியின் நீர்மட்டத்தை பொறுத்து சென்னைக்கு குடிநீர் அனுப்பும் அளவு மாறுபடும்.

    தற்போது வீராணம் ஏரியில் இருந்து விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால் விவசாய பாசனத்துக்கு தண்ணீரை சேமிக்கும் வகையில் வீராணம் ஏரியில் இருந்து வி.என்.எஸ். மதகு வழியாக உபரிநீர் சேத்தியாதோப்பு அணைக்கட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இன்று 570 கனஅடி தண்ணீர் அனுப்பபட்டது. அங்கிருந்து வெள்ளைராஜன் வாய்க்கால் வழியாக வினாடிக்கு 470 கனஅடி தண்ணீர் வாலாஜா ஏரிக்கு திறந்து விடப்பட்டது. பின்னர் வாலஜா ஏரியில் இருந்து 420 கனஅடி தண்ணீர் பெருமாள் ஏரிக்கு அனுப்பப்பட்டது.

    கடந்த 30 ஆண்டுகளுக்கு பிறகு வீராணம் ஏரியில் இருந்து பெருமாள் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    தற்போது கிளை வாய்க்கால்களை விவசாயிகள் தூர்வாரி வருகின்றனர். இந்த பணிகள் முடிந்த உடன் வரும் 25-ந் தேதிக்குள் வீராணம் ஏரியில் இருந்து விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என கூறப்படுகிறது.

    காவிரி தண்ணீர் அதிகமாக வருவதால் கொள்ளிடத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கொள்ளிட ஆற்றங்கரையோரம் உள்ள கஞ்சங்கொல்லை, நடுத்திட்டு, கருப்பூர், அரசூர், வல்லம்படுகை, முட்டம் , கருப்பூர் உள்ளிட்ட 20 கிராமங்களில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ஓலி பெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டனர்.
    வீராணம் ஏரியில் இருந்து இன்று காலை சென்னைக்கு 66 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இது நேற்றை விட 11 கனஅடி அதிகமாகும். #VeeranamLake
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக வீராணம் ஏரி விளங்குகிறது. இந்த ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும்.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு கர்நாடகா மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அங்கிருந்து கல்லணைக்கு வந்த தண்ணீர் கீழணைக்கு திறந்து விடப்பட்டது. பின்னர் வடவாறு வழியாக 27-ந் தேதி வீராணம் ஏரிக்கு தண்ணீர் வந்தது.

    நேற்று வீராணம் ஏரிக்கு 900 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று அது 800 கனஅடியாக குறைந்துள்ளது. ஏரியின் நீர்மட்டம் நேற்று 46.70 அடியாக இருந்தது. இன்றும் நீர்மட்டம் அதே அடியாக உள்ளது. தற்போது ஏரி கடல்போல் காட்சி அளிக்கிறது.

    நீர்வரத்து அதிகமாக இருப்பதால் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அதன்படி வீராணம் ஏரியின் கடைசி பகுதியான சேத்தியா தோப்பு அடுத்த பூதங்குடியில் உள்ள நீரேற்று நிலையத்தில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் நேற்று சென்னைக்கு வினாடிக்கு 55 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இன்று காலை வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு 66 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இது நேற்றை விட 11 கனஅடி அதிகமாகும்.

    ஏரியின் நீர்மட்டத்தை பொறுத்து சென்னைக்கு குடிநீர் அனுப்பும் அளவு மாறுபடும்.

    ஏரியில் இருந்து வி.என்.எஸ். மதகு வழியாக 850 கனஅடி உபரிநீர் சேத்தியாதோப்பு அணைக்கட்டுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டது. இதனை சேமிக்கும் வகையில் சேத்தியாதோப்பு அணைக்கட்டில் இருந்து வெள்ளைராஜன் வாய்க்கால் வழியாக வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் வாலாஜா ஏரிக்கு திறந்து விடப்பட்டது. பின்னர் பெருமாள் ஏரியை நிரப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தற்போது வீராணம் ஏரியில் இருந்து விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை. கிளை வாய்க்கால்களை விவசாயிகள் தூர்வாரி வருகின்றனர். இந்த பணிகள் முடிந்த உடன் வீராணம் ஏரியில் இருந்து விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அந்த பணிகள் முடிந்த பின்னர் ஓரிரு நாட்களில் கிளை வாய்க்கால்கள் மூலம் உபரி நீர் விவசாயிகளின் பயன்பாட்டிற்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிகிறது. #VeeranamLake

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக மாயமான தாய் வாட்ஸ்-அப் தகவலால் போலீசாரிடம் சிக்கினார்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கட்டமுத்துப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன். இவர் புதுவையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பர்த்து வருகிறார்.

    இவரது மனைவி ஜெயசித்ரா. இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 3 வயதில் மிதுன், 7 மாதத்தில் லட்சன் என்று 2 ஆண் குழந்தைகள் இருந்தனர்.

    நேற்று முன்தினம், வழக்கம்போல் சிலம்பரசன், வேலைக்கு சென்றுவிட்டார். மிதுன் பள்ளிக்கு சென்ற பின்னர், வீட்டில் லட்சனுடன் ஜெயசித்ரா இருந்தார். இந்த நிலையில் மதியம், சிலம்பரசன் வீட்டுக்கு வந்தார். அப்போது, ஜெயசித்ரா மற்றும் லட்சன் ஆகியோரை வீட்டில் காணவில்லை. இதையடுத்து அவர்களை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    பின்னர், சந்தேகத்தின் பேரில் வீட்டின் குளியல் அறையின் உள்ளே சென்று பார்த்த போது, அங்கு ஒரு அண்டா மூடி வைக்கப்பட்டு நிலையில் இருந்தது. அதை பார்த்து சந்தேகமடைந்த, சிலம்பரசன், அண்டாவின் மூடியை திறந்து பார்த்தார். அதன் மேல் பகுதியில் பழைய துணிகளும், அதன் கீழ் தண்ணீரும் இருந்தன. இதையடுத்து, துணிகளை நீக்கிவிட்டு அவர் பார்த்த போது, தண்ணீரில், மூழ்கிய படி லட்சன் பிணமாக கிடந்தான்.

    இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், தனது குழந்தையை பார்த்து கதறி அழுதார். ஜெயசித்ராவை தேடினார். அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் என்ன ஆனார்? எங்கு சென்றார்? என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. இதையடுத்து சிலம்பரசனின் குடும்பத்தினர் இந்த சம்பவத்தை போலீசில் தெரிவிக்காமல், குழந்தையின் உடலை வீட்டில் வைத்திருந்த படியே ஜெயசித்ராவை தேடி வந்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக புதுப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிலம்பரசனின் வீட்டுக்கு இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பரந்தாமன், செல்வம் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் குழந்தை லட்சனின் தாய் ஜெயசித்ரா மாயமாகி விட்டார். இவரை கண்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேணடும்’ என்று கூறி ஒரு செல்போன் எண்ணை குறிப்பிட்டு வாட்ஸ்-அப்பில் தகவல் வேகமாக பரவியது.

    இந்த நிலையில் மேல்மருவத்தூரில் சந்தேகத்துக்கிடமாக சுற்றி திரிந்த ஜெயசித்ராவை வாட்ஸ்-அப்பில் பரவிய தகவல் மூலம் அந்த பகுதி பொதுமக்கள் அடையாளம் கண்டனர்.

    உடனே ஜெயசித்ராவை பிடித்து அந்த பகுதியில் உள்ள போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் பண்ருட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே பண்ருட்டி போலீசார் மேல்மருவத்துருக்கு விரைந்தனர்.

    ஜெயசித்ராவை அழைத்து வந்து விசாரணை நடத்தினால்தான் குழந்தை கொலை செய்யப்பட்டு அண்டாவில் போடப்பட்டதா? என்ற விவரம் தெரியவரும்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
    சிதம்பரம் அருகே குடிபோதையில் தகராறு செய்ததால் தந்தையை அடித்துக் கொன்றதாக கைதான மகன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பொன்னந்திட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 68). இவரது 2-வது மனைவி நீலா.

    நீலாவுக்கு சக்திவேல் (35) என்ற மகனும் 2 மகள்களும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சக்திவேல் வெளிநாடு சென்றிருந்தார். ராமலிங்கம் கூலி வேலை பார்த்து வீட்டை கவனித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த சில மாதத்துக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து சக்திவேல் சொந்த ஊருக்கு வந்தார்.

    ராமலிங்கம் தினமும் மது குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்தார். இதனை சக்திவேல் தட்டிக்கேட்டார். அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    நேற்று மாலை ராமலிங்கம் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அங்கிருந்தவர்களிடம் தகராறு செய்தார். அப்போது அங்கு வந்த சக்திவேல், ஏன் தகராறு செய்கிறீர்கள்? என்று தந்தையிடம் கேட்டார்.

    அப்போது ராமலிங்கம் அங்கு கிடந்த செங்கலை எடுத்து சக்திவேலை தாக்கினார். இதனால் ஆத்திரம் அடைந்த சக்திவேல் இரும்பு கம்பியை எடுத்து ராமலிங்கத்தின் தலையில் அடித்தார். இதில் ராமலிங்கம் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

    தனது தந்தை இறந்ததை அறிந்ததும் சக்திவேல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இந்த சம்பவம் தொடர்பாக கிள்ளை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் வீரமணி, சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா மற்றும் போலீசார் விரைந்து சென்று ராமலிங்கத்தின் உடலை கைப்பற்றி சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய சக்திவேலை தேடிவந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் சக்திவேலை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், எனது தந்தை ராமலிங்கம் மது குடித்து விட்டு வந்து குடிபோதையில் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.

    தட்டிக்கேட்ட என்னை செங்கலால் தாக்கினார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து அவரை தாக்கினேன். இதில் அவர் இறந்து விட்டார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து சென்னையின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 55கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. #VeeranamLake
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரி விவசாயிகளின் உயிர் நாடியாக விளங்குகிறது. மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கும் இந்த ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும்.

    இந்த ஏரியில் இருந்து சென்னை நகர மக்களின் குடிநீர் வசதிக்காக 72 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. போதிய மழை இல்லாததாலும், காவிரி தண்ணீர் வராததாலும் கடந்த 5 மாதங்களாக வீராணம் ஏரி வறண்டு காணப்பட்டது. இதனால் கடந்த மார்ச் மாதம் 21-ந் தேதி முதல் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக காவிரி உபரி நீர் தமிழகத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு வந்தது. அங்கிருந்து கல்லணைக்கு வந்த தண்ணீர் கீழணைக்கு திறந்து விடப்பட்டது. இதையடுத்து வடவாறு வழியாக 27-ந்தேதி வீராணம் ஏரிக்கு தண்ணீர் வந்தது.

    நேற்று வீராணம் ஏரிக்கு 800 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று அது 900 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஏரியின் நீர்மட்டம் நேற்று 46.80 அடியாக இருந்தது. இன்று அது 46.70 அடியாக உள்ளது. வீராணம் ஏரி நிரம்பி தற்போது கடல்போல் காட்சி அளிக்கிறது.

    வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பி வைப்பதற்காக சேத்தியாதோப்பு அடுத்த பூதங்குடியில் உள்ள நீரேற்று நிலையத்துக்கு கடந்த 30-ந் தேதி காவிரி தண்ணீர் வந்தது. இங்கிருந்து ராட்சத குழாய்கள் மூலம் சென்னைக்கு குடிநீர் அனுப்ப அதிகாரிகள் முன்னிலையில் முன்னேற்பாடு பணிகள் நடந்து முடிந்தன. இந்த நிலையில் வீராணம் ஏரி நிரம்பியதாலும், தண்ணீர் அதிக அளவு உள்ளதாலும் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று காலை சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரியில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் வினாடிக்கு 55 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஏரியில் இருந்து சென்னைக்கு திறந்து விடப்படும் நீரின் அளவு இனி வரும் நாட்களில் அதிகரிக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பப்பட்டதால் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தற்போது வீராணம் ஏரி பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் இப்போதைக்கு ஏரியில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டாம் . பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணி முடிந்ததும் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம், சேத்தியாதோப்பு பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் தற்போது விவசாயத்துக்கு வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. #VeeranamLake
    பண்ருட்டி அருகே முன்விரோத தகராறில் பெண்ணை உயிருடன் எரித்துக்கொல்ல முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த காடாம்புலியூர் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மனைவி சிவமணி (வயது 45).

    இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த செந்தில் என்பவருக்கும் இடையே வீட்டு மனை தகராறு காரணமாக முன்விரோதம் இருந்தது.

    இந்த நிலையில் கடந்த ஒருவாரமாக இவர்களுக் கிடையே அடிக்கடி தக ராறு ஏற்பட்டு வந்தது. நேற்று இரவும் சுந்தர மூர்த்தியும், அவரது மனைவி சிவமணியும் வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர்.

    நள்ளிரவு 1 மணி அளவில் சிவமணியின் அலறல் சத்தம் கேட்டு, திடுக்கிட்டு எழுந்த சுந்தரமூர்த்தி வீட்டின் தோட்டத்து பகுதிக்கு சென்று பார்த்த போது சிவமணி உடலில் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது.

    அப்போது அங்கிருந்து 2 மர்ம மனிதர்கள் ஓடியதை சுந்தரமூர்த்தி பார்த்தார். பின்னர் தனது மனைவி சிவமணியின் உடலில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து சிவமணியை மீட்டார்.

    இதில் சிவமணிக்கு ஆங் காங்கே பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிவமணிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இது குறித்து சிவமணியின் கணவர் சுந்தரமூர்த்தி காடாம்புலியூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கருணாநிதி மரணம் தொடர்பான ஒளிபரப்பை டி.வி.யில் பார்த்து கொண்டிருந்த திமுக பிரமுகர் மாரடைப்பால் ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
    கடலூர்:

    கடலூர் பெரியகங்கணாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 48), தி.மு.க. பிரமுகர். தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த 7-ந் தேதி மரணம் அடைந்தார். இந்த செய்தியை கேள்விபட்ட சக்திவேல் அதிர்ச்சியடைந்தார். மிகுந்த மனஉளைச்சலில் இருந்தார். கருணாநிதி மரணம் தொடர்பான ஒளிபரப்பை டி.வி.யில் பார்த்தபோது துக்கம் தாங்காமல் சக்திவேலுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சக்திவேல் பரிதாபமாக இறந்தார்.

    அவரது உடலுக்கு ஒன்றிய செயலாளர் சுப்புராம் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். சக்திவேலை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். இந்த சம்பவம் கடலூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
    காட்டுமன்னார்கோவில் அருகே விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள உத்தமசோழகன் கிராமத்தை சேர்ந்தவர் ராஜதுரை (வயது 75), விவசாயி. இவர் தனது நிலத்தை உழுவதற்காக வேளாண் எந்திரத்தை மானியவிலையில் வாங்க முடிவு செய்தார்.

    இதைத்தொடர்ந்து அவர் காட்டுமன்னார்கோவில் உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவரது விண்ணப்பம் மீது அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து ராஜதுரை காட்டுமன்னார்கோவிலில் உள்ள வேளாண்துறை அலுவலகத்துக்கு சென்று அங்கிருந்த உதவி அலுவலர் பாரதிதாசனை (40) சந்தித்தார். அப்போது அவர் ரூ.39 ஆயிரம் கொடுத்தால்தான் உடனே வேளாண் எந்திரம் வழங்கப்படும் என்றார்.

    இதையடுத்து ராஜதுரை கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.24 ஆயிரத்தை பாரதிதாசனிடம் கொடுத்தார். அப்போது பணத்தை பெற்றுக்கொண்ட பாரதிதாசன் மீதி ரூ.15 ஆயிரத்தை கொடுங்கள் என்று கேட்டார். அதற்கு பிறகு தருகிறேன் என்று கூறிவிட்டு ராஜதுரை வந்துவிட்டார்.

    இதுகுறித்து கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் அவர் புகார் செய்தார். போலீசாரின் அறிவுரையின்படி ரசாயன பவுடர் தடவிய ரூ.5 ஆயிரத்தை ராஜதுரை பாரதிதாசனிடம் நேற்று வழங்கினார்.

    அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்சஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பாரதிதாசனை மடக்கிபிடித்து கைது செய்தனர். பின்பு அவரை கடலூர் லஞ்சஒழிப்புதுறை அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவரிடம் இருந்த லஞ்சப்பணம் ரூ.5 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பின்பு அவரை கடலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து பாரதிதாசன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    கடந்த மாதம் லால்பேட்டையில் துணை மின்நிலைய பணியாளர் ஒருவர் லஞ்சம் வாங்கிய புகாரில் கைது செய்யப்பட்டார். தற்போது விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கிய வேளாண் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். காட்டுமன்னார்கோவில் பகுதியில் அதிகாரிகள் தொடர்ந்து லஞ்சம் வாங்குவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    வீராணம் ஏரிக்கு 800 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் ஏரி இன்று இரவுக்குள் முழு கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளது. ஏரியின் நீர்மட்டம் 46.80 அடியாக உயர்ந்துள்ளது. #VeeranamLake
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக வீராணம் ஏரி திகழ்கிறது. இந்த ஏரி காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் அமைந்துள்ளது. ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும். இந்த ஏரி மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

    சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. கடந்த 5 மாதங்களாக நீர் வரத்து இல்லாமல் ஏரி வறண்டு காணப்பட்டதால் மார்ச் 21-ந் தேதி முதல் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு கர்நாடகாவில் இருந்து காவிரி உபரி நீர் தமிழகத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு திறந்து விடப்பட்டது. அங்கிருந்து கல்லணை வழியாக கீழணைக்கு தண்ணீர் வந்து சேர்ந்தது. பின்னர் வடவாறு வழியாக கடந்த 27-ந்தேதி வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

    நேற்று வீராணம் ஏரிக்கு 920 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று அது 800 கனஅடியாக குறைந்தது. இருப்பினும் ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் நீர் மட்டம் நேற்று 46.40 அடியாக இருந்தது.

    இன்று காலை அது 46.80 அடியாக உயர்ந்தது. வீராணம் ஏரிக்கு தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இன்று இரவுக்குள் ஏரி முழு கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளது.

    வீராணம் ஏரியில் தண்ணீர் அதிகமாக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பாசனத்துக்கு வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது குறித்து சிதம்பரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் சேத்தியாதோப்பு, காட்டுமன்னார் கோவில், சிதம்பரம், ஸ்ரீமுஷ்ணம் பகுதி விவசாயிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். சம்பா சாகுபடிக்கு வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    இது தொடர்பாக பொதுப்பணிதுறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, சம்பா சாகுபடிக்கு ஓரிரு நாளில் வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும். அதன் பின்னர் சென்னைக்கு குடிநீருக்காக 72 கனஅடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படும் என்றார்.  #VeeranamLake
    கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இன்று காலை கியாஸ் சிலிண்டர் லாரி மோதிய விபத்தில் 1½ வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள ஆ.நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பரந்தாமன் (வயது 35). இவர் அதே பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (30). இவர்களுக்கு நிவாஷ் (3) என்ற ஆண் குழந்தையும், லத்திகா என்ற 1½ வயது பெண் குழந்தையும் உள்ளது.

    இன்று காலை நிவாஷ் தனது தங்கை லத்திகாவை தூக்கி கொண்டு தெருவில் உள்ள மற்ற குழந்தைகளுடன் விளையாட சென்றான். குழந்தைகள் அனைவரும் தெருவில் விளையாடி கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த பகுதியில் பண்ருட்டியில் உள்ள கியாஸ் ஏஜென்சிக்கு சொந்தமான மினி லாரி ஒன்று சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு அந்த வழியாக வந்தது.

    அந்த மினி லாரி எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. உடனே அந்த குழந்தைகள் அங்கிருந்து சிதறி ஓடினர்.

    இதில் 1½ வயது குழந்தையான லத்திகா மீது அந்த மினி லாரி மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட லத்திகா பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது.

    லத்திகாவின் உடலை பார்த்து அவளது பெற்றோர் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

    விபத்து குறித்து தகவல் அறிந்த புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குழந்தை லத்திகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கியாஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி மோதி 1½ வயது குழந்தை இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    விருத்தாசலம் மணல் கடத்தலில் ஈடுபட்டதாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கோணாங்குப்பம் வழியாக டிராக்டரில் மணல் கடத்தி வந்த ஆனந்த் (வயது 23), சீனுவாசன் (29) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல கம்மாபுரம் சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கோ.ஆதனூர் வழியாக மணல் கடத்தி சென்ற ஊ.ஆதனூரைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    ×