search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிதம்பரம் அருகே தொழிலாளி கொலை: மகன் கைது
    X

    சிதம்பரம் அருகே தொழிலாளி கொலை: மகன் கைது

    சிதம்பரம் அருகே குடிபோதையில் தகராறு செய்ததால் தந்தையை அடித்துக் கொன்றதாக கைதான மகன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பொன்னந்திட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 68). இவரது 2-வது மனைவி நீலா.

    நீலாவுக்கு சக்திவேல் (35) என்ற மகனும் 2 மகள்களும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சக்திவேல் வெளிநாடு சென்றிருந்தார். ராமலிங்கம் கூலி வேலை பார்த்து வீட்டை கவனித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த சில மாதத்துக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து சக்திவேல் சொந்த ஊருக்கு வந்தார்.

    ராமலிங்கம் தினமும் மது குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்தார். இதனை சக்திவேல் தட்டிக்கேட்டார். அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    நேற்று மாலை ராமலிங்கம் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அங்கிருந்தவர்களிடம் தகராறு செய்தார். அப்போது அங்கு வந்த சக்திவேல், ஏன் தகராறு செய்கிறீர்கள்? என்று தந்தையிடம் கேட்டார்.

    அப்போது ராமலிங்கம் அங்கு கிடந்த செங்கலை எடுத்து சக்திவேலை தாக்கினார். இதனால் ஆத்திரம் அடைந்த சக்திவேல் இரும்பு கம்பியை எடுத்து ராமலிங்கத்தின் தலையில் அடித்தார். இதில் ராமலிங்கம் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

    தனது தந்தை இறந்ததை அறிந்ததும் சக்திவேல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இந்த சம்பவம் தொடர்பாக கிள்ளை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் வீரமணி, சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா மற்றும் போலீசார் விரைந்து சென்று ராமலிங்கத்தின் உடலை கைப்பற்றி சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய சக்திவேலை தேடிவந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் சக்திவேலை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், எனது தந்தை ராமலிங்கம் மது குடித்து விட்டு வந்து குடிபோதையில் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.

    தட்டிக்கேட்ட என்னை செங்கலால் தாக்கினார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து அவரை தாக்கினேன். இதில் அவர் இறந்து விட்டார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×