என் மலர்
கோயம்புத்தூர்
- தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியது.
- 2 கார்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
கோவை:
கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. நேற்று காலை முதல் மாலை வரை வெயில் அடித்த நிலையில் மாலை 6 மணிக்கு பிறகு மழை பெய்ய தொடங்கியது.
6 மணிக்கு தொடங்கிய மழையானது இரவு 9 மணியை தாண்டியும் நீடித்தது. பலத்த இடி, மின்னலுடன் கொட்டி தீர்த்த இந்த மழையால் கோவையில் உள்ள முக்கிய சாலைகளான திருச்சி சாலை, சத்தி சாலை, அவினாசி சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.
அவினாசி சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தில் இருந்து தண்ணீர் அருவி போன்று கொட்டியது. அதில் வாகன ஓட்டிகள் நனைந்தவாறு வாகனங்களை இயக்கி சென்றனர்.
பணிமுடிந்து வீடு திரும்பும் நேரத்தில் கனமழை பெய்ததால் ஏராளமானோர் குறிப்பிட்ட நேரத்திற்குள் வீடு செல்ல முடியாமல் தவித்தனர். மழையில் இருந்து தப்பிக்க பலர் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.
குறிப்பாக அவினாசி சாலையில் சென்றவர்கள், அங்கு புதிதாக கட்டப்பட்டு வரும் பாலத்திற்கு அடியில் மழைக்கு ஒதுங்கினர். எல்.ஐ.சி சந்திப்பு பகுதியில் ஏராளமானார் தங்களது மோட்டார் சைக்கிளுடன் ஒதுங்கியதாலும், சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதாலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அந்த சாலையில் சென்ற வாகனங்கள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக ஊர்ந்து சென்றன.
இதுதவிர லங்கா கார்னர் ரெயில்வே பாலம், அவினாசி ரோடு பழைய மேம்பாலத்தின் கீழ் பகுதி, வடகோவை மேம்பாலம், சிவானந்தா காலனி ரெயில்வே மேம்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
இதையடுத்து அந்த வழியாக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.
மாநகராட்சி ஊழியர்கள் விரைந்து வந்து தண்ணீரை அகற்றினர். இதனை தொடர்ந்து இன்று காலை முதல் இந்த பகுதிகளில் போக்குவரத்து சீரானது. வழக்கம் போல வாகனங்கள் பாலத்தின் கீழ் வழியாக செல்வதை காண முடிந்தது.
புறநகர் பகுதிகளான பெரிய நாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, சூலூர், தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
பாலமலை பகுதியில் கொட்டி தீர்த்த மழை காரணமாக மலையில் இருந்து உற்பத்தியாகி பெரிய நாயக்கன்பாளையம், மத்தம்பாளையம், கோட்டைப்பிரிவு வழியாக செல்லும் ஏழு எருமைப் பள்ளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மத்தப்பாளையத்தில் இருந்து ஒன்னிப்பாளையம் வழியாக செல்லும் இந்த சாலையில் ஓடையின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது.
மழையால் இந்த பாலத்தில் 4 அடிக்கும் மேல் தண்ணீர் சென்று கொண்டிருந்தது. அப்போது மின்தடை ஏற்பட்டதால் தண்ணீர் செல்வது தெரியவில்லை. அப்போது அந்த வழியாக வந்த 2 கார்களில் வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்லப்பட்டன.
இதனால் அதிர்ச்சியான காரில் இருந்தவர்கள் உடனடியாக காரில் இருந்து கீழே இறங்கி உயிர் தப்பினர். 2 கார்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
இன்று காலை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார்களை தீயணைப்புத்துறையினர் தேடி வருகிறார்கள்.
தொண்டாமுத்தூர் பகுதியில் பலத்த இடி, மின்னலுடன் பெய்த மழைக்கு புதுப்பாளையம் என்ற இடத்தில் தோட்டத்தில் உள்ள ஒரு தென்னை மரத்தின் மீது மின்னல் தாக்கி தீ பிடித்து எரிந்தது.
மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 3 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதனால் மேட்டுப்பாளையத்தில் உள்ள முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
வாகனங்களில் சாலையில் ஊர்ந்தபடியே சென்றன. பல இடங்களில் வெள்ளநீருடன் சாக்கடை நீரும் கலந்தது. மழையால் மேட்டுப்பாளையம்-காரமடை சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. போக்குவரத்து மட்டும் பாதிக்கப்பட்டது.
அதேபோல் ராஜீவ்காந்தி நகர் உள்ளிட்ட பல்வேறு தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியது.
மழையால் அடிக்கடி மின்தடையும் ஏற்பட்டது. இதனால் வயதானவர்கள், குழந்தைகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். கொட்டி தீர்த்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
கோவையில் பெய்த கனமழையால் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து கலெக்டர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தில் அதிகபட்சமாக பீளமேடு விமான நிலையம் பகுதியில் 8 செ.மீ மழையும், கோவை தெற்கு தாலுகாவில் 7 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.
மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை விவரம் மி.மீட்டரில் வருமாறு:-
விமான நிலையம்-87.60, வால்பாறை பி.ஏ.பி-74, சோலையார்-72, வால்பாறை தாலுகா-71, கோவை தெற்கு-70, பெரியநாயக்கன் பாளையம்-58, வேளாண் பல்கலைக்கழகம்-47, மேட்டுப்பாளையம-31, மாக்கினாம்பட்டி-39.
- தமிழகத்தில் ஓருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும்.
- கனமழை காரணமாக குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது.
கோவை:
வங்கக்கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.
இது புயலாக மாறுவதால் இதற்கு 'டானா' புயல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த டானா புயல் வடக்கு மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து சென்று ஒடிசா மாநிலம் பூரி-மேற்குவங்க மாநிலம் சாகர் தீவுகளுக்கு இடையே தீவிர புயலாகி மாறி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், கோவை மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். அதேபோல், கனமழையால் ஒன்னிபாளையம் செல்லும் சாலையில் உள்ள ரெயில்வே பாலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் கார்கள் அடித்து செல்லப்பட்டன.
- 12 பேர் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்தில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டனர்.
- சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தம்பதி ஹினில்அன்சாரி-நசீரான்கதூம். இவர்களது மகள் அப்சார்கதூம் (வயது 4). இவர்கள் வால்பாறை ஊசிமலைமட்டம் எஸ்டேட் பகுதியில் தங்கியிருந்து அங்குள்ள தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் அவர்கள் தேயிலை தோட்டத்துக்கு சென்றபோது அங்கு வந்த ஒரு சிறுத்தை குழந்தை அப்சார்கதூமை தாக்கி கொன்றது. தகவலறிந்த வால்பாறை வனச்சரக அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் 12 பேர் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்தில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டனர்.
மேலும், சிறுத்தையை கண்காணிக்க 6 இடங்களில் கண்காணிப்பு காமிராவையும் பொருத்தி உள்ளனர். மேலும் சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து கூறிய வனத்துறை அதிகாரிகள், "வால்பாறை தேயிலைத்தோட்டத்தில் சிறுத்தையின் நடமாட்டம் உள்ளதாக கண்டறியப்பட்டு உள்ள 6 இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தி உள்ளோம். கண்காணிப்பு காமிராவில் சிறுத்தையின் நடமாட்டம் பதிவான உடன் அந்த பகுதியில் கூண்டு வைத்து பிடிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் சிறுத்தையின் கால் தடம் மற்றும் புதர்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.
வால்பாறை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் அருகிலுள்ள நீர்நிலைகளுக்கு குழந்தைகளை அழைத்து செல்லக்கூடாது. வீட்டில் இருந்து வெகுதொலைவில் தனியாக விளையாட அனுமதிக்க வேண்டாம். மேலும் குடியிருப்பு பகுதிகளை சுற்றிலும் புதர்கள் இல்லாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
இதுதவிர இறைச்சி மற்றும் உணவுக்கழிவுகளை எப்படி பாதுகாப்பாக அப்புறப்படுத்துவது என்பது குறித்து தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். சிறுத்தையை பிடிக்கும்வரை சம்பவம் நிகழ்ந்த தேயிலை தோட்டப்பகுதியில் தொழிலாளர்களுக்கு பணி வழங்க வேண்டாமென சம்பந்தப்பட்ட எஸ்டேட் நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது" என்றனர்.
- முதல்கட்டமாக ரூ.50 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று வனத்துறை தெரிவித்துள்ளது.
- சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க 4 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
கோவை மாவட்டம் வால்பாறையில் 4 வயது சிறுமியை கடித்து கொன்ற சிறுத்தையை பிடிக்க 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஊசிமலை மட்டம் எஸ்டேட் பகுதியில் பணிபுரிந்து வரும் வடமாநில தொழிலாளியின் 4 வயது மகள் அப்சராவை சிறுத்தை தாக்கி கொன்ற சம்பவம் பரபப்பை ஏற்படுத்தியது.
சிறுமியின் குடும்பத்திற்கு முதல்கட்டமாக ரூ.50 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று வனத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க 4 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்கவும், இரவில் வெளியே வர வேண்டாம் எனவும் வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
- ஆட்கொணர்வு மனுவை முடித்து வைப்பதாக உச்ச நீதிமன்றம் அதன் தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளது.
- ஜனநாயகத்தின் சிறப்புரிமைகளை இன்னும் பொறுப்புடன் பயன்படுத்த நாம் கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது.
ஈஷா பெண் துறவிகள் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. பெண் துறவிகள் இருவரும் அவர்களின் சுய விருப்பத்தின் பேரிலேயே அங்கு தங்கி இருக்கின்றனர். அதனால் இந்த ஆட்கொணர்வு மனுவை முடித்து வைப்பதாக உச்ச நீதிமன்றம் அதன் தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளது.
இந்த தீர்ப்பு குறித்து 'நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம்' என சத்குரு கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைத்தள பதிவில் "நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம். நீதிமன்றத்தின் கவனம் உண்மையாகவே தேவைப்படும் எண்ணற்ற வழக்குகள் இருக்கும்போது, தவறான நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்ட அற்பமான மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்றம் தனது மதிப்புமிக்க நேரத்தை வீணாக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஜனநாயகத்தின் சிறப்புரிமைகளை இன்னும் பொறுப்புடன் பயன்படுத்த நாம் கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது" எனக் கூறியுள்ளார்.
https://x.com/SadhguruTamil/status/1847312679628583005
- இரவு நேரங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
- ஒற்றை காட்டு யானை ஒன்று செம்மேடு கிராமத்திற்குள் புகுந்தது.
பேரூர்:
கோவை ஆலாந்துறை, தொண்டாமுத்தூர், நரசீபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
குறிப்பாக இரவு நேரங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. ஊருக்குள் வரும் யானைகள் குடியிருப்புகள், கடைகளை சேதப்படுத்துவதோடு, விளைநிலங்களுக்குள் புகுந்து அங்கு பயரிடப்பட்டிருக்கும் பயிர்களையும் சேதப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பூண்டி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை ஒன்று செம்மேடு கிராமத்திற்குள் புகுந்தது.
அங்கு நீண்ட நேரமாக சுற்றித்திரிந்த ஒற்றை யானை, அங்குள்ள தினகரன் என்பவரது மளிகைக் கடையின் முன் பகுதியை உடைத்து உள்ளே இருந்த இரண்டு 25 கிலோ அரிசி மூட்டைகளை வெளியே இழுத்து போட்டு தின்றது.யானை ஊருக்குள் புகுந்ததை அறிந்து அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவல் அறிந்த போளுவாம்பட்டி வனத்துறையினர் விரைந்து வந்து, ஊருக்குள் புகுந்த யானையை வனத்திற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரத்திற்கு பிறகு காட்டு யானை அங்கிருந்து வனத்தை நோக்கி சென்றது. வனத்தை விட்டு வெளியேறும் யானை கூட்டங்கள் அடிக்கடி குடியிருப்பு மற்றும் விளைநிலங்களுக்குள் நுழைந்து பொருட்களை சேதப்படுத்துகிறது.
எனவே யானை நடமாட்டத்தை கண்காணித்து யானை ஊருக்குள் நுழையாமல் இருக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
- ரெயிலில் 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்து வைத்து பயணிப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகும்.
- 60 நாட்கள் என்பது, எளிதாக அனைவருக்கும் மனதில் நிற்கக் கூடிய நாட்களாகும்.
குனியமுத்தூர்:
சென்னை, கோவை உள்பட பெரு நகரங்களில் தங்கியருக்கும் பெரும்பாலானோர் தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை உள்ளிட்ட விசேஷ நாட்களுக்கு தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.
அவ்வாறு செல்பவர்கள் முதலில் பயணிக்க விரும்புவது ரெயிலில் தான். இதற்காக ரெயிலில் முன்பதிவு செய்து விடுவார்கள்.
இப்படி ஊருக்கு செல்வதற்கு ரெயிலில் முன்பதிவு செய்ய வேண்டும் என்றால் 120 நாட்களுக்கு முன்பே அதாவது 4 மாதத்திற்கு முன்பே முன்பதிவு செய்து இருக்க வேண்டும். அப்படி செய்தால் தான் பயணிக்க முடியும் நிலை இருந்தது. பயணிகளும் 4 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்து, பயணித்து வந்தனர்.
இந்த நிலையில், ரெயில் பயணம் செய்யும் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான கால அவகாசம் 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த நடைமுறையானது வருகிற நவம்பர் 1-ந் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. ரெயில்வே நிர்வாகத்தின் இந்த அறிவிப்பானது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து போத்தனூர் ரெயில் பயணிகள் சங்க பொதுச் செயலாளரும், சேலம் ரெயில்வே கோட்ட பயனாளர் ஆலோசனை குழு உறுப்பினருமான சுப்பிரமணியன் கூறியதாவது:-
ரெயிலில் 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்து வைத்து பயணிப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகும். பொதுவாக ரெயில் பயணம் செய்ய விரும்புவர்கள் 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் புக்கிங் செய்து, பிளாக் செய்து விடுவதால், அவசர தேவைகளுக்காக செல்பவர்களுக்கு அது கிடைக்காமல் போகும் வாய்ப்புள்ளது.
மேலும் பல்வேறு பகுதிகளில் ஏஜென்ட்கள் இதுபோன்று அதிகப்படியான டிக்கெட் புக்கிங் செய்து விட்டு, கடைசி நேரத்தில் அதனை கேன்சல் செய்து விடுவதும் நடக்கிறது. இதனால் பாதிக்கப்படுவது பயணிகள் மட்டுமே.
மேலும் நீண்ட நாட்களுக்கு முன்பு புக்கிங் செய்யும்போது ஒரு சிலருக்கு மறதி ஏற்பட்டு, பயணிக்கும் நாட்களையும் தவற விடும் சூழலும் உள்ளது.
தற்போது முன்பதிவு செய்வதற்கான கால அவகாசம் 60 நாட்களாக குறைக்கப்படும் என்ற ரெயில்வே நிர்வாகத்தின் அறிவிப்பு வரவேற்க கூடியதாகும்.
60 நாட்கள் என்பது, எளிதாக அனைவருக்கும் மனதில் நிற்கக் கூடிய நாட்களாகும். மேலும் தேவையற்றவர்கள் புக்கிங் செய்து வைத்திருப்பது குறையும். ரெயில்வே துறையின் இத்தகைய முடிவு ரெயில் பயணிகளுக்கு முற்றிலும் நன்மையே ஆகும். பயணிகள் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் இந்த திட்டத்தின் மூலம் பயனடையலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- குளத்தின் ஒரு பகுதியில் அரை ஏக்கரில் நங்கூரம் (ஆங்கரிங் மெத்தடு) முறையில் சோலார் பேனல்கள் மிதக்கவிடப்பட்டு உள்ளது.
- ஊழியர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கோவை:
கோவை மாநகராட்சி சார்பில் தமிழகத்திலேயே முதல் முதலாக உக்கடம் பெரியகுளத்தில் சோலார் பேனல்களை மிதக்கவிட்டு, அதன் மூலம் மின்சாரம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 45 லட்சத்தில் ஜெர்மன் நாட்டு நிறுவனத்துடன் சேர்ந்து சோலார் மூலம் மின்சாரம் எடுக்க குளத்துக்குள் சோலார் பேனல்களை மிதக்க விடும் பணி தொடங்கியது. இதற்காக இந்த குளத்தின் ஒரு பகுதியில் அரை ஏக்கரில் நங்கூரம் (ஆங்கரிங் மெத்தடு) முறையில் சோலார் பேனல்கள் மிதக்கவிடப்பட்டு உள்ளது.
அதை கண்காணிக்கவும், அவற்றை யாரும் சேதப்படுத்தி விடுவதை தடுக்கவும் அங்கு இரவு நேரத்திலும் தெளிவாக தெரியும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அத்துடன் அங்கு ஊழியர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தமிழகத்திலேயே தண்ணீரில் சோலார் பேனல்களை மிதக்கவிட்டு மின்சாரம் எடுக்கும் முதல் பணி என்பதால் இந்த பணியை நேர்த்தியாகவும், விரைவாகவும் முடித்து முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டுவர மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் மூலம் தினமும் 154 கிலோ வாட் மின்சாரம் எடுக்க முடியும். இன்னும் 2 மாதத்தில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, மின்சாரம் தயாரித்து வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- கல்லாறு மற்றும் அதற்கு மேல் பகுதியில் உள்ள வனப்பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.
- ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
இதனால் கடந்த சில நாட்களாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது.
குறிப்பாக மேட்டுப்பாளையம் வனச்சரத்துக்குட்பட்ட கல்லாறு மற்றும் அதற்கு மேல் பகுதியில் உள்ள வனப்பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.
இந்த கனமழையால், பவானி ஆற்றுக்கு தண்ணீர் வரும் கல்லார் ஆற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
வனப்பகுதியில் பெய்த மழையால் செந்நிறத்தில் கல்லாறு ஆற்றில் இதுவரை மிக குறைந்த அளவிலேயே தண்ணீர் வந்தது. நேற்று ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பாராங்கற்க்களுக்கு மத்தியில் வளைந்து நெலிந்து இரைச்சல் சப்தத்துடன் தண்ணீர் பாய்தோடி வரும் காட்சிகள் ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
சில சுற்றுலா பயணிகள் இந்த ஆற்றுக்கு சென்று அதனை பார்வையிட்டு ரசித்து புகைப்படமும் எடுத்து மகிழ்கின்றனர்.
இதற்கிடையே இந்த ஆற்றில் சுற்றுலாப் பயணிகள் சென்று புகைப்படம் எடுப்பதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக அலுவலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
- சிங்காநல்லூர், புலியகுளம் பகுதிகளில் உள்ள 2 மருத்துவமனைகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
- டார், வி.பி.என் போன்ற தேடுபொறி தளங்களை பயன்படுத்தும்போது எங்கிருந்து அனுப்புகின்றனர் என்பதை உறுதி செய்ய முடியாது.
கோவை:
கோவையில் கடந்த சில நாட்களாக தனியார் பள்ளிகள், ஓட்டல்கள், கல்லூரிகளை குறிவைத்து மர்மநபர்கள் இ-மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
ஈச்சனாரி அருகே உள்ள தனியார் மருத்துவ கல்லூரி முதல்வருக்கு வந்த மெயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது.
செட்டிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை செய்தனர். சோதனையின் முடிவில் அது புரளி என்பது தெரியவந்தது.
இதேபோல் சிங்காநல்லூர், புலியகுளம் பகுதிகளில் உள்ள 2 மருத்துவமனைகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதுகுறித்து அந்தந்த பகுதி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வெடிகுண்டு மிரட்டல் வந்த மெயில் முகவரியை வைத்து எங்கிருந்து மிரட்டல் வந்தது. அதனை விடுத்தது யார்? என விசாரித்து வருகின்றனர்.
கோவையில் தொடர்ந்து பள்ளிகள், கல்லூரிகள், ஓட்டல்கள், ஆஸ்பத்திரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ள சம்பவம் கோவை மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
மிரட்டல் விடுக்கும் நபர்கள் யார் என்பதை கண்டறிவதில் போலீசாருக்கு கடும் சவால் ஏற்பட்டுள்ளது. தற்போது போலீசார் தொழில் நுட்ப உதவியுடன், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபர்கள் யார் என்பதை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
டிஜிட்டல் தொழில்நுட்பம் அறிந்த நபர்களே இதுபோன்ற மிரட்டல்கள் விடுத்து வருகின்றனர். டார் எனப்படும் பிரவுசரை பதிவிறக்கம் செய்து, அதன் மூலம் மிரட்டல் விடுத்து இ-மெயில் அனுப்புகிறார்கள்.
டார், வி.பி.என் போன்ற தேடுபொறி தளங்களை பயன்படுத்தும்போது எங்கிருந்து அனுப்புகின்றனர் என்பதை உறுதி செய்ய முடியாது.
உள்ளூரில் இருந்து அனுப்பினாலும் வெளிநாட்டில் இருப்பது போலவே முகவரி காட்டும். இதுபோன்ற மிரட்டல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிய தொழில்நுட்ப உதவியுடன் தீவிர விசாரணை செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- தினசரி மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு இந்த ரெயில் புறப்படுகிறது.
- மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி ரெயில் நிலையம் வரை ரெயில் பாதையில் 16 குகைகள், 216 வளைவுகள், 250 பாலங்கள் உள்ளன.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
தினசரி மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு இந்த ரெயில் புறப்படுகிறது. இந்த ரெயிலில் பயணம் செய்ய ஏராளமான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1899 ஜூன் 15 முதல் மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே மலை ரெயில் இயக்கப்பட்டது. 1908 அக்டோபர் 15 முதல் ஊட்டி ரெயில் நிலையம் வரை ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டது.
இதனால் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15-ந் தேதி நீலகிரி மலை ரெயில் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி ரெயில் நிலையம் வரை ரெயில் பாதையில் 16 குகைகள், 216 வளைவுகள், 250 பாலங்கள் உள்ளன.
ஆசியாவிலேயே மிக செங்குத்தான மீட்டர்கேஜ் ரெயில் பாதைகளில் மிகவும் நீளமானது என்பது இதன் சிறப்பு அம்சம். நீலகிரி மலை ரெயிலை யுனெஸ்கோ நிறுவனம் 2005 ஜூலை 15-ல் உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது.
இந்நிலையில் இன்று 116-வது ஆண்டு விழாவை முன்னிட்டு ரெயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
- மேட்டுப்பாளையம் சாலை, சத்தி சாலை, திருச்சி சாலை உள்ளிட்ட சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
- நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
கோவை:
கோவையில் கடந்த சில தினங்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
நேற்றுமுன்தினம் மாலையில் பலத்த மழை பெய்ததால் பல இடங்களில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் மக்கள் அவதிப்பட்டனர்.
தொடர்ந்து நேற்று மாலையும் கோவை மாநகர பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகள் என மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.
கோவை மாநகரில் வடவள்ளி, மருதமலை, தடாகம், கவுண்டம்பாளையம், சிவானந்தா காலனி, ரத்தினபுரி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. மற்ற இடங்களில் சாரல் மழையும், அவ்வப்போது கனமழையும் கொட்டி தீர்த்தது.
மேட்டுப்பாளையம் சாலை, சத்தி சாலை, திருச்சி சாலை உள்ளிட்ட சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபா காலனியில் இருந்து, சிவானந்தா காலனி வழியாக காந்திபுரம் வரும் சாலையில் ரெயில்வே சுரங்கப்பாதை உள்ளது.
பலத்த மழை காரணமாக அந்த சுரங்கப்பாதையில் அதிகளவில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்வது தடைபட்டது.
இதற்கிடையே கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு 24 பயணிகளுடன் புறப்பட்ட அரசு பஸ் பாலத்தில் சிக்கியது. பஸ்சுக்குள் தண்ணீர் புகுந்து விட்டதால், பயணிகள் வெளியில் வரமுடியாமல் தவித்தனர்.
தீயணைப்பு துறையினர் வந்து, பயணிகளை மீட்டனர். பஸ்சை கிரேன் மூலம் மீட்டு வெளியில் கொண்டு வந்தனர்.
இந்த மழைக்கு கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பாரதி பார்க் ரோட்டில் மரம் முறிந்து விழுந்தது. அந்த நேரத்தில் அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்லாததால் எவ்வித சேதமும் ஏற்படவில்லை.
கோவை புலியகுளம் பகுதியில் உள்ள மீனா எஸ்டேட் குடியிருப்பு பகுதிகளுக்குள் சாலையோரம் நின்றிருந்த மரம் ஒன்று முறிந்து சாலையில் நின்றிருந்த 2 கார்கள் மீது விழுந்தது.
தகவல் அறிந்த மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மரத்தை வெட்டி அகற்றி கார்களை மீட்டனர்.
காந்திபுரம் பகுதியிலும் மரம் ஒன்று முறிந்து விழுந்தது.
கனமழைக்கு தடாகம் பகுதியில் சாலையோரத்தில் உள்ள செங்கல் சூளையில் வைக்கப்பட்டிருந்த புகைபோக்கி இடிந்து சாலையில் விழுந்தது. இதனால் ஆனைகட்டி-கோவை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் அங்கிருந்த மின் கம்பங்கள், மின்மாற்றிகளும் சேதம் அடைந்தன. பல்வேறு துறை ஊழியர்கள் விரைந்து வந்து சாலையில் கிடந்த செங்கல்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.
பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளிலும் மாலையில் கனமழை பெய்தது. மழையால் விஜயபுரம், புளியம்பட்டி பகுதிகளில் சாலையோரம் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் ஆழியாறு போலீஸ் நிலையம் அருகே மரம் சாய்ந்து ரோட்டில் விழுந்தது. அங்கு ஒரு மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து வந்து மரத்தை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.
இதேபோல் மேட்டுப்பாளையம், சூலூர், தொண்டாமுத்தூர், அன்னூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக குளம், குட்டைகள், ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. பல குளங்களும் வேகமாக நிரம்பி வருகின்றன.
நீலகிரி மாவட்டத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்றும் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.
குன்னூர் அருகே உள்ள சின்ன வண்டிச்சோலை- பேரட்டி சாலையில் மரங்கள் விழுந்து மின் கம்பிகள் சேதம் அடைந்தது. மின் ஊழியர்கள் விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.
குன்னூர் அருகே உள்ள பாய்ஸ் கம்பெனி, நல்லப்பன் தெருவில் பால்ராஜ் என்பவர் வீட்டின் மீது ராட்சத மரம் விழுந்ததில் வீடு சேதம் அடைந்தது.
பெள்ளட்டி மட்டம், கேத்தி பகுதிகளிலும் மழை பெய்தது. தொடர் மழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கியது.
ஊட்டி, கோத்தகிரி, கூடலூர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. மழையால் ஊட்டியில் காலநிலையும் மாறி விட்டது. இன்று காலை கடும் பனிமூட்டம் நிலவியது. வாகன ஓட்டிகளுக்கு சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை. இதனால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே செல்கின்றனர்.






