என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • விண்ணப்பித்தவர்களில் தகுதி வாய்ந்தவர்களுக்கு நாளை முதல் உரிமை தொகை வழங்கப்பட உள்ளது.
    • துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார்.

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் 2-வது கட்டமாக நாளை முதல் கூடுதல் பயனாளிகளுக்கு உரிமை தொகை வழங்கப்பட உள்ளது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    மகளிர் மேம்பாட்டிற்காக தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். கலைஞர் உரிமை தொகை திட்டத்தில் முதல் கட்டமாக சுமார் 1 கோடியே 13 லட்சத்து 75 ஆயிரத்து 492 பயனாளிகளுக்கு ஒவ்வொரு மாதமும் 15-ந்தேதி மகளிரின் வங்கிக்கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இதில் விண்ணப்பித்தவர்களில் தகுதி வாய்ந்தவர்களுக்கு நாளை முதல் உரிமை தொகை வழங்கப்பட உள்ளது.

    இதற்கான நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்க உள்ளது. மதியம் 3 மணிக்கு நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார்.

    இந்த நிகழ்ச்சியில் சமூக சேவகி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், 2022-ம் ஆண்டு சீனாவின் காங்சோவில் நடைபெற்ற மாற்றுதிறனாளர் ஆசிய விளையாட்டு பூப்பந்து போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியவருமான துளசிமதி முருகேசன் ஆகியோர் உடன் கலந்து கொள்கின்றனர்.

    கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம், நன்னிலம் மகளிர் நிலவுடைமைத் திட்டம், விடியல் பயணம், மக்களை தேடி மருத்துவம், சுய உதவி குழுக்கள், விளையாட்டு, வெற்றி நிச்சயம், நலம் காக்கும் ஸ்டாலின், பெண் தொழில் முனைவோர், தோழி விடுதிகள் போன்ற திட்டங்களினால் பயன்பெற்ற மற்றும் சாதனை பெண்களின் வெற்றிக் கதைகளை வெளிக்கொணரும் நிகழ்வாக மாநில அளவில் 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி சென்னையில் நடைபெற்றது.
    • இதில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியது.

    சென்னை:

    14-வது ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் (21 வயதுக்கு உட்பட்டோர்) சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

    இன்று மாலை நடைபெற்ற வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்திய அணி, அர்ஜென்டினா அணியை எதிர்கொண்டது.

    இதில் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தியது.

    இதன்மூலம் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில் வெண்கல பதக்கம் வென்று இந்திய அணி அசத்தியது.

    கடந்த 2016-ம் ஆண்டு இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி சென்னையில் நடைபெற்றது.
    • இதில் ஜெர்மனி அணி 8வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்று அசத்தியது.

    சென்னை:

    14-வது ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் (21 வயதுக்கு உட்பட்டோர்) சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

    இன்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற சாம்பியன் கோப்பைக்கான இறுதிப்போட்டியில் நம்பர் ஒன் அணியான ஜெர்மனி, 4-ம் நிலை அணியான ஸ்பெயினை எதிர்கொண்டது.

    இதில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தன. இதையடுத்து வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

    இதனால் ஷூட் அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் ஜெர்மனி 3-2 என்ற கோல் கணக்கில் வென்று 8வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    • அதிமுகவினர் மத்தியில் "டான்?" போல காட்டுமே தவிர, அவர் டம்மி என்பது மக்களுக்கும் பாஜகவுக்கும் நன்றாகவே தெரியும்.
    • எடப்பாடி பழனிசாமியின் பயத்தை போக்க போடப்பட்ட மேக்அப்தான் பொதுக்குழு.

    எடப்பாடி பழனிசாமி, பயத்தை போக்க டோப்பட்ட மேக் அப் தான் அதிமுக பொதுக்குழு கூட்டம் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    நெல் கொள்முதல் ஈரப்பத அளவை உயர்த்துங்கள் என்று அதிமுக பொதுக்குழுவில் ஒன்றிய அரசுக்கு நேரடியாக ஒரு கோரிக்கை வைப்பதற்குகூட "போலி விவசாயி" எடப்பாடி பழனிசாமிக்கு துணிவில்லை.

    10 தோல்வி கண்ட பழனிசாமிக்கு 2026 தேர்தலிலும் படுதோல்வியை பரிசாக தருவார்கள்.

    ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அண்ணா திமுக அமித்ஷா திமுகவாக மாறி விட்டதை மறைக்க முயற்சித்தாலும் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பாஜகவின் அடிமை பழனிசாமி என்பதை தமிழ்நாட்டு மக்களுக்கு சொல்லும் வகையிலேயே உள்ளன.

    "கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை; கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்க எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம்" என்ற தீர்மானம் பார்ப்பதற்கு எடப்பாடி பழனிசாமியை அதிமுகவினர் மத்தியில் "டான்?" போல காட்டுமே தவிர, அவர் டம்மி என்பது மக்களுக்கும் பாஜகவுக்கும் நன்றாகவே தெரியும்.

    அதிமுக பொதுக்குழு நடப்பதற்கு இரண்டு நாள் முன்புகூட குஜராத்தில் பேசிய அமித்ஷா, ''பீகாரை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும்'' என்றார். "மாப்பிள்ளை அவர்தான், ஆனால் அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது" என்ற வசனம் போல மாப்பிள்ளை பழனிசாமிதான்.

    ஆனால், அவருக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்பதுதான் அமித்ஷா சொன்ன வார்த்தையின் அர்த்தம். ஆனால், அதிமுக பொதுக்குழுவில், "அதிகாரம்'' என்ற போலி சட்டையை பழனிசாமிக்கு மாட்டியிருக்கிறார்கள்.

    அமித்ஷா அழைப்பின் பேரிலே டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி கார்கள் மாறி அமித்ஷாவை சந்தித்தும், முகமூடி அணிந்து வெளி வந்ததையும் தமிழ்நாட்டு மக்கள் பார்த்தார்கள். அந்த அமித்ஷா சொல்வதை மீறி எதையுமே எடப்பாடி பழனிசாமியால் செய்ய முடியாது என்பது அதிமுகவினருக்கே நன்கு தெரியும். எடப்பாடி பழனிசாமியின் பயத்தை போக்க போடப்பட்ட மேக்அப்தான் பொதுக்குழு.

    மெகா கூட்டணி அமைப்பதாக கூறிய எடப்பாடி பழனிசாமியை நம்பி எந்த கட்சியும் வர தயாராக இல்லை; 10 தோல்வி கண்ட பழனிசாமிக்கு எந்த ஆளுமையும் இல்லை; மக்கள் செல்வாக்கும் கிடையாது என்பது தெள்ளத்தெளிவாக உணர்ந்த அமித்ஷா, எடப்பாடி பழனிசாமியை மிரட்டி அடிபணிய வைத்து கூட்டணியை அவரே அறிவித்தார் என்பதுதானே நிஜம்.

    அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்துவிட்டு வருகிறார்கள். அதற்காக அமித்ஷாவை கண்டித்து ஒருவார்த்தை கூட பேசாத தொடைநடுங்கி எடுபுடி பழனிசாமிக்குதான் கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரம் என்பது மிக சிறந்த நகைச்சுவை.

    நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 17 விழுக்காட்டில் இருந்து 22 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கையை ஒன்றிய பாஜக நிராகரித்துவிட்ட விவகாரத்தில், ஒன்றிய அரசைக் கண்டிக்க தைரியம் இல்லாத பழனிசாமி, திமுக அரசைக் கண்டித்திருப்பது பச்சைத்துண்டு அணிந்துகொண்டு பச்சைதுரோகம் செய்யும் போலி விவசாயி பழனிசாமி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார்.

    நெல் கொள்முதல் ஈரப்பத அளவை உயர்த்துங்கள் என்று அதிமுக பொதுக்குழுவில் ஒன்றிய அரசுக்கு நேரடியாக ஒரு கோரிக்கை வைப்பதற்குகூட "போலி விவசாயி" எடப்பாடி பழனிசாமிக்கு துணிவில்லை.

    உண்மையான விவசாயியாக இருந்தால் பிரதமரை டெல்லி சென்று சந்தித்து 22 சதவீதம் வரை உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கினால்தான் கூட்டணியில் தொடருவோம் என நிபந்தனை விதிக்க ஆளுமை வேடம்போடும் எடப்பாடி பழனிசாமிக்கு தைரியும் இருக்கிறதா?

    கோவை, மதுரை நகரங்களின் மெட்ரோ திட்டங்களை ரத்து செய்த மோடி அரசை கண்டிப்பதற்கு பதில், ஒன்றிய பாஜக அரசு கூறிய மொக்கையான காரணத்தையே அதிமுக பொதுக்குழு தீர்மானத்திலும் நியாயப்படுத்தி கோவை, மதுரை மக்களுக்கு பெரும் துரோகத்தை செய்திருக்கிறார்கள்.

    திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு அடைந்துவரும் வளர்ச்சியை தினந்தோறும் பார்த்து வயிற்றெரிச்சலில் தவிக்கும் எடப்பாடி பழனிசாமி, போகின்ற இடங்களிலெல்லாம் புலம்புவதை வாடிக்கையாக வைத்திருந்தார். அதையே அதிமுக பொதுக்குழுவின் தீர்மானங்களாகவும் வடித்துள்ளார்.

    தமிழ்நாட்டின் கடன் சுமை கட்டுக்குள் இருப்பதாக சிஏஜி வெளியிட்ட அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும் கடன் சுமை அதிகரித்துவிட்டதாக அதிமுக பொதுக்குழுவில் அவதூறு பரப்பப்பட்டுள்ளது.

    2011ம் ஆண்டு திமுக ஆட்சி நிறைவு பெறும்போது தமிழ்நாட்டின் மொத்தக் கடன் 1,01,349 கோடி ரூபாய்தான். 10 ஆண்டுகால அதிமுக ஆட்சி நிறைவடையும்போது 2021ம் ஆண்டில் தமிழ் நாட்டின் கடன் 4,80,300 கோடி ரூபாய். அதாவது 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கடன் சுமார் 5 மடங்கு அதாவது கிட்டதட்ட 500 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே நேரம் திமுக ஆட்சியில் தற்போது 9 லட்சத்து 20 ஆயிரம் கோடி அளவிற்கு கடன் இருந்தாலும் 2021ல் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து 93 சதவீதம் அளவிற்கே கடன் உயர்ந்துள்ளது.

    ஒரு மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியான ஜிஎஸ்டிபியை ஒப்பிடும்போது கடன் அளவு எவ்வளவு என்பதுதான் கடன் சுமையை தீர்மானிக்கும் காரணி. அந்த வகையில் தமிழ்நாட்டின் DEPT TO GSDP RATIO 26.4 சதவீதம்தான். தமிழ்நாடு நிதி பொறுப்புச் சட்டம் 2003 நிர்ணயித்த கடன் வரம்பைவிட குறைவான அளவில்தான் தமிழ்நாட்டின் கடன் அளவு உள்ளது.

    "முதலீடுகள் இல்லை, நிறுவனங்கள் இடம் பெயர்கின்றன, வேலை வாய்ப்பு இல்லை, ஏமாற்றும் புள்ளி விவரங்கள்" என பொத்தாம் பொதுவாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிய அதிமுக, தனது ஆட்சிக்காலத்தில் இவ்வளவு முதலீடுகள் ஈர்க்கப்பட்டன; அதிலிருந்து திமுக ஆட்சியில் இவ்வளவு கோடி குறைவாக உள்ளது.

    அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட 'இந்த' நிறுவனம் தற்போது வேறு மாநிலத்திற்கு சென்று விட்டது, அதிமுக ஆட்சியில் இத்தனை இலட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கினோம்; தற்போது அதைவிட குறைந்த வேலை வாய்ப்புகளே உருவாக்கப்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டு கூறியிருந்தால் முதலீடு ஈர்ப்பு, தொழில் வளர்ச்சி விஷயத்தில் அதிமுக ஆட்சியின் யோக்கியதை தெரிந்துவிடும் என்பதால் பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டை கூறியிருக்கிறது அதிமுக.

    2016 முதல் 2021 வரையிலான அதிமுக ஆட்சியில் 15,543 கோடி ரூபாய் முதலீட்டில் 10,316 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பளித்திடும் 21 தொழிற்சாலைகளுக்குப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு; அவற்றுள் 12 தொழிற்சாலைகள் மட்டுமே தொடங்கப்பட்டன. ஆனால், திராவிட மாடல் ஆட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 9.74 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 31 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

    இந்த முதலீடு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் முதல் கட்டமாக 46 தொழிற்சாலைகள் தங்களது உற்பத்தியை தொடங்கிவிட்டன. அதனால்தான் தமிழ்நாடு கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 11.19% இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை அடைந்து இந்தியாவில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. இந்த வளர்ச்சியை பழனிச்சாமியால் பொறுத்துக் கொள்ள முடியாமல், ஒன்றிய பாஜக அரசு வழங்கிய புள்ளி விவரத்தையே "பொய்யான புள்ளி விவரம்" என்று கூறியுள்ளார்.

    திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் விவகாரத்தில் நீதித்துறையின் மதச்சார்பின்மைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அடம்பிடிக்கும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக திமுக கொண்டு வந்த கண்டனத் தீர்மானத்தை வட மாநிலங்களைச் சேர்ந்த எம்.பிக்கள் உள்பட 120 மக்களவை எம்.பிக்கள் ஆதரித்துள்ளனர்.

    ஆனால் மற்ற மாநிலங்களில் மதக் கலவரம் செய்தே ஆட்சியை மாற்ற பாஜக முயற்சி செய்து பலனடைந்ததால் தமிழ்நாட்டிலும் அந்த பலனை அறுவடை செய்யலாம் என்ற நப்பாசையில் எடப்பாடி பழனிசாமி பாஜகவின் கலவர அரசியலுக்கு துணை போகும் வகையில் அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்.

    வழக்கம்போல் உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டது; தீபம் ஏற்றிவிட்டதை மறைத்து, தீபமே ஏற்ற அனுமதி மறுக்கிறது திமுக அரசு என்று அவதூறு பரப்பும் மதவெறி கும்பலுக்கும் அவர்களுக்கு துணையாக இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் மதசார்பின்மைக்கு முன்மாதிரியாக திகழும் தமிழ்நாட்டு மக்கள் 2026 தேர்தலில் பாடம் புகட்டுவார்கள்.

    திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் 364 வாக்குறுதிகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டுவிட்டது. 40 திட்டங்கள் பரிசீலனையில் உள்ளன. மொத்தமாக 404 திட்டங்கள் அரசின் செயல்பாட்டில் உள்ளன. 37 திட்டங்கள் ஒன்றிய அரசின் நிதி பங்களிப்பு இல்லாமல் நிலுவையில் உள்ளன. 64 திட்டங்கள் மட்டுமே இன்னும் அரசு நடவடிக்கை எடுத்துக் கொள்ளாத திட்டங்களாக உள்ளன.

    தேர்தல் வாக்குறுதியாக சொல்லப்படாத இல்லம் தேடி கல்வி, காலை உணவு திட்டம், நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ் புதல்வன், இன்னுயிர் காக்கும் 48 திட்டம் போன்ற திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி சொல்லியது மட்டுமல்ல சொல்லாததையும் செய்யும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என தமிழ்நாட்டு மக்கள் பாராட்டுவதாலேயே எடப்பாடி பழனிசாமி பொய்யையும் அவதூறையும் பரப்பி ஆதாய அடைய முயற்சிக்கிறார்.

    பாஜகவின் மதவெறி கொள்கைக்கு எதிரியாக இருப்பது திமுக மட்டுமல்ல தமிழ்நாடே என்பதால் தமிழ்நாட்டுக்கு துரோகத்தையும் வஞ்சகத்தையுமே மட்டுமே ஒன்றிய பாஜக அரசு துணிந்து செய்கிறது. அப்படியிருந்தும் பாஜகவுடன் கூட்டணிவைத்து எட்டப்பன் வேலைபார்க்கும் எடப்பாடி பழனிசாயின் புலம்பலை தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பார்கள்; 10 தோல்வி கண்ட பழனிசாமிக்கு 2026 தேர்தலிலும் படுதோல்வியை பரிசாக தருவார்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 6 இடங்களில் தி.மு.க. சார்பில் 4 பேரும் அ.தி.மு.க. சார்பிலும் 2 பேரும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
    • யார் யாருக்கு மீண்டும் எம்.பி. பதவி கிடைக்கும் என்பது விரைவில் தெரிந்து விடும்.

    சென்னை:

    தமிழகத்தின் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி இடங்கள் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் காலியாகிறது.

    இதன் காரணமாக 6 இடங்களுக்கு சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் நடத்தப்படுகிறது.

    கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் தி.மு.க. சார்பாக திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர். இளங்கோ, கனிமொழி சோமு ஆகியோரும் அ.தி.மு.க. சார்பில் தம்பிதுரை மற்றும் கூட்டணி கட்சியான த.மா.கா. சார்பில் அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசனும் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    இந்த 6 பேரின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதியுடன் முடிவடைய உள்ளதால் சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக பிப்ரவரி மாதம் 6 இடங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, ஏப்ரல் 1-ந்தேதிக்குள் இந்த இடங்களுக்கான தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள உள்ளது.

    இந்த 6 இடங்களில் தி.மு.க. சார்பில் 4 பேரும் அ.தி.மு.க. சார்பிலும் 2 பேரும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் யார் யாருக்கு மீண்டும் எம்.பி. பதவி கிடைக்கும் என்பது விரைவில் தெரிந்து விடும்.

    • அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் சுயமாக சிந்தித்து செயல்படும் கட்சிகள்.
    • அ.தி.மு.க. ஆட்சி அமைப்பதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது.

    அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * அ.தி.மு.க. தலைமையில் நல்ல கூட்டணி அமையும், கவலைப்பட வேண்டாம்.

    * அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் சுயமாக சிந்தித்து செயல்படும் கட்சிகள்.

    * சொந்த பலத்தைக் கொண்ட கட்சி அ.தி.மு.க., தி.மு.க. மக்கள் செல்வாக்கை இழந்த கட்சி.

    * அ.தி.மு.க. தான் கூட்டணிக்கு தலைமை, அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

    * அ.தி.மு.க. ஆட்சி அமைப்பதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது.

    * தனது தேர்தல் சுற்றுப்பயணத்தின்போது மக்கள் சிறப்பாக வரவேற்பு அளித்தனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழக உள் பகுதிகளில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழக உள் பகுதிகளில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    12-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று முதல் 13-ந்தேதி வரை தமிழக கடலோரப்பகுதிகள், தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • கள்ளச்சாராய வழக்கில் சி.பி.ஐ. விசாரணையைக் கண்டு தி.மு.க.வுக்கு ஏன் பயம்?
    • அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிலும் அச்சம் ஏன்?

    வானகரம்:

    சென்னை வானகரத்தில் நடைபெற்று வரும் அ.தி.மு.க. செயற்குழு- பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    * விலை நிலவரத்திற்கு பதிலாக கொலை நிலவரம் கேட்டுகும் நிலையில் தி.மு.க ஆட்சி இருக்கிறது.

    * போக்குவரத்து துறை, மின்சாரத்துறை, டாஸ்மாக் என அனைத்திலும் ஊழல்.

    * தி.மு.க.வில் உள்ள எத்தனை அமைச்சர்கள் மீது வழக்குகள் உள்ளன என்பதை நினைத்து பார்க்க வேண்டும்.

    * தி.மு.க.வில் ஊழல் வழக்கு உள்ள அனைத்து அமைச்சர்களும் பத்திரமான இடத்தில் இருப்பார்கள்.

    * கள்ளச்சாராய வழக்கில் சி.பி.ஐ. விசாரணையைக் கண்டு தி.மு.க.வுக்கு ஏன் பயம்?

    * அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிலும் அச்சம் ஏன்?

    * யாரையோ காப்பாற்றுவதற்காக இந்த அரசு துடித்துக்கொண்டிருக்கிறது.

    * கள்ள ஓட்டுக்களால் தி.மு.க. வெற்றி பெற்றதால் SIR என்றாலே அலறுகிறார்கள்.

    * வாக்காளர் தீவிர திருத்தத்தை எதிர்ப்பதற்கு என்ன அவசியம் இருக்கிறது.

    * இறந்தவர்களின் பெயர், இரட்டைப் பதிவு கொண்டோர் தான் நீக்கப்படுகின்றனர்.

    * தி.மு.க. கூட்டணி வைத்தால் பா.ஜ.க. நல்ல கட்சி, நாங்கள் கூட்டணி வைத்தால் மதவாத கட்சியா?

    * பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்ததால் முதலமைச்சரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

    * பா.ஜ.க. குறித்து சிறுபான்மையினரிடம் சந்தேகம் உள்ளது, அதை முறியடிக்குமாறு கலைஞர் கூறினார்.

    * அறிவாலயத்தில் சிபிஐ ரெய்டு நடந்த போது கீழ் தளத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    * தி.மு.க. என்பது ஜனநாயக முறைப்படி இயங்கும் கட்சி அல்ல, அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி.

    * அமைச்சர் துரைமுருகனும் எமர்ஜென்சி காலத்தில் பாதிக்கப்பட்டவர் தான்.

    * அமைச்சர் துரைமுருகனுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுக்கப்படாதது ஏன்?

    * அ.தி.மு.க.வில் சாதாரண தொண்டன் கூட முதலமைச்சர் பதவியில் அமர முடியும்.

    * இந்த கூட்டத்தில் உள்ள பல பேருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளது.

    * அ.தி.மு.க.வுக்கு விழக் கூடிய வாக்குகள் சிந்தாமல், சிதறாமல் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    * தைத்திருநாளில் ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    • நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைக் கூறி ஆட்சியை தி.மு.க. பிடித்துள்ளது.
    • கேஸ் சிலிண்டர் மானியம், பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, கல்விக் கடன் ரத்து என்னவானது?

    வானகரம்:

    சென்னை வானகரத்தில் நடைபெற்று வரும் அ.தி.மு.க. செயற்குழு- பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    * வேறு வழியில்லாமல் 28 மாதங்கள் கழித்து மகளிருக்கு ரூ.1000 திட்டம் தொடங்கப்பட்டது.

    * குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 கொடுப்பது கூட அ.தி.மு.க.வின் அழுத்தத்தால் தான்.

    * மக்கள் பணம் பெற்றுக்கொண்டாலும் அ.தி.மு.க.வுக்கு தான் மக்கள் ஓட்டு போடுவார்கள்.

    * அம்மா மினி கிளினிக், இருசக்கர வாகனம் போன்ற திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்தியது.

    * அ.தி.மு.க. ஆட்சியில் 52 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது.

    * மக்களின் செல்வாக்கை தி.மு.க. அரசு இந்து விட்டதால் 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதாக அறிவிப்பு.

    * கல்லூரி திறக்கப்பட்டு 5 மாதம் கழித்து தான் மடிக்கணினி வழங்கப்படுகிறது, இதனால் என்ன பயன்?

    * அடுத்தாண்டு நடைபெறும் தேர்தலில் மாணவர்களின் வாக்குகள் தேவை என்பதால் மடிக்கணினி வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    * நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைக் கூறி ஆட்சியை தி.மு.க. பிடித்துள்ளது.

    * கேஸ் சிலிண்டர் மானியம், பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, கல்விக் கடன் ரத்து என்னவானது?

    * டெல்டா மாவட்டங்களில் 15 நாட்கள் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் நெல்மணிகள் நாசம்.

    * 15 நாட்களாக நெல் மூட்டைகளை காவல் காத்துக்கொண்டிருக்கிறோம் என விவசாயிகள் கூறினர்.

    * டெல்டாவில் பயிர் பாதிப்புகளை பார்க்காமல் ரெயில் நிலையத்திற்கு சென்றார் உதயநிதி.

    * விவசாயிகளை பார்ப்பதற்கு அஞ்சிதான் பார்க்காமல் சென்று விட்டார் துணை முதலமைச்சர்.

    * பொருட்களை வாங்கும் சக்தியை ஏழை மக்கள் இழந்து விட்டனர்.

    * மின் கட்டணத்தை 52 சதவீத அளவுக்கு தி.மு.க. அரசு உயர்த்தி இருக்கிறது.

    * மின் கட்டணம் என்று சொன்னாலே ஷாக் அடிக்கிறது என்று கூறியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    * தி.மு.க. ஆட்சியில் மின்சாரக் கட்டணத்தை கேட்டாலே ஷாக் அடிக்கிறது.

    * வரி மேல் வரி போட்டு மக்களை உறிஞ்சிக் கொண்டிருக்கிறது தி.மு.க. அரசு.

    * உடல் உறுப்பை விற்று வாழ்க்கையை நடத்தும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

    * கிட்னி முறைகேடு தொடர்பாக இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    * தி.மு.க. ஆட்சியில் உடல் உறுப்பைக் கூட விட்டு வைக்கவில்லை.

    * அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் கிட்னி முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.

    * மகளிருக்கு இலவச பயணம் என்று கூறுகிறீர்கள், ஆனால் பேருந்துகள் ஓட்டு உடைசலாக உள்ளன.

    * 2019-ல் அதிமுக ஆட்சியில் ரூ.3 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகள் பெறப்பட்டன.

    * 77 சதவீத அளவுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டு விட்டதாக முதலமைச்சர் பச்சைப்பொய் சொல்கிறார்.

    * முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை கேட்டால், வெள்ளை காகிதத்தை காட்டுகிறார்கள்.

    * அ.தி.மு.க.வின் திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வைக்கிறது தி.மு.க. அரசு.

    * ஏதாவது ஒரு திட்டத்தை தி.மு.க.வால் கொண்டு வர முடிந்ததா?

    * கொரோனா காலத்தில் வரியே இல்லாமல் ஆட்சியை நடத்தினோம்

    * கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்றது என்று கூறினார். 

    • ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் எங்களது கருப்பு சிவப்புப் படை உங்களுக்குத் தக்க பாடம் புகட்டும்!
    • தமிழ்நாடு என்றைக்குமே ஆணவம் பிடித்த டெல்லிக்கு Out of Control தான்!

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மயிலாப்பூர் தொகுதியில் உள்ள தனது வாக்குச்சாவடியில், 'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச் சாவடி' கூட்டத்தில் கலந்துகொண்டார். இந்த வாக்குச்சாவடியில் 440 வாக்குகளை இலக்காக நிர்ணயித்து, ஒவ்வொரு வாக்குச்சாவடி உறுப்பினர்களுக்கும் அவரவர்களுக்கான இலக்கை முதலமைச்சர் நிர்ணயித்துக் கொடுத்தார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    எந்த ஷா வந்தாலென்ன? எத்தனை திட்டம் போட்டாலென்ன?

    டெல்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழ்நாட்டுக்கு வர நினைத்தால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் எங்களது கருப்பு சிவப்புப் படை உங்களுக்குத் தக்க பாடம் புகட்டும்!

    தமிழ்நாடு என்றைக்குமே ஆணவம் பிடித்த டெல்லிக்கு Out of Control தான்! என்று கூறியுள்ளார். 



    • அமைதி, வளம், வளர்ச்சி என்ற ஜெயலலிதாவின் கொள்கையே அ.தி.மு.க.வின் தாரக மந்திரம்.
    • தனது தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் ஏதாவது குறை இருந்ததா?

    அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * தீய சக்தி தி.மு.க.வை தமிழகத்தில் இருந்து அடியோடு அகற்றவே எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கினார்.

    * அமைதி, வளம், வளர்ச்சி என்ற ஜெயலலிதாவின் கொள்கையே அ.தி.மு.க.வின் தாரக மந்திரம்.

    * நாட்டு மக்களைத்தான் ஜெயலலிதா தனது வாரிசாகப் பார்த்தார்.

    * பெரும்பான்மையை நிரூபிக்கும் தருணத்தில் முதலமைச்சர் நடந்துகொண்ட விதம் அனைவருக்கும் தெரியும்.

    * 2026 சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் அ.தி.மு.க. ஆட்சி அமையும்.

    * அ.தி.மு.க. ஆட்சி குறித்து தி.மு.க.வால் விமர்சனம் செய்ய இயலவில்லை.

    * தனது தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் ஏதாவது குறை இருந்ததா?

    * அனைத்து தேர்தல்களிலும் களப்பணி ஆற்றியவர்கள் இங்கே இருக்கிறீர்கள்.

    * நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு 100% வெற்றி உறுதி.

    * சூழ்ச்சியால்தான் 2021 சட்டசபை தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தோம்.

    * 1991 சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

    * 2006 தேர்தலில் மைனாரிட்டி அரசை நடத்திக்கொண்டிருந்தது தி.மு.க.

    * 2014 பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற இயலவில்லை.

    * 2021 தேர்தலில் 75 இடங்களில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது.

    * 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 9 இடங்களை அ.தி.மு.க. கூட்டணி வென்றெடுத்தது.

    * 2011 சட்டசபை தேர்தலில் கலைஞர் இருந்தபோது கூட எதிர்க்கட்சி வரிசையில் தி.மு.க.வுக்கு இடமில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒவ்வொரு வாக்குச்சாவடி உறுப்பினர்களுக்கும் அவரவர்களுக்கான இலக்கை முதலமைச்சர் நிர்ணயித்துக் கொடுத்தார்.
    • அடுத்த மாதம் ஜனவரி 10-ந்தேதி வரை மாநிலம் தழுவிய வகையில் தீவிரமான பிரசாரமாக இது மேற்கொள்ளப்பட உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    சட்டசபை பொதுத்தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க. தலைவா் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு கட்டளைகளை பிறப்பித்து வருகிறார்.

    அந்த வகையில் நேற்று முன்தினம் நடைபெற்ற தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, வாக்குச்சாவடியை வென்றால் சட்டமன்ற தொகுதியை வெல்லலாம். அதற்காக என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற பிரசாரம் தொடங்கப்படுகிறது. அவரவர் வீடு அருகே உள்ள வாக்குச்சாவடியில் பங்கேற்க வேண்டும் என்றும் நான் எனது வாக்குச்சாவடி பகுதியில் கலந்து கொள்வேன் என்றும் அறிவித்திருந்தார்.

    அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மயிலாப்பூர் தொகுதியில் உள்ள தனது வாக்குச்சாவடியில், 'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச் சாவடி' கூட்டத்தில் கலந்துகொண்டார். இந்த வாக்குச்சாவடியில் 440 வாக்குகளை இலக்காக நிர்ணயித்து, ஒவ்வொரு வாக்குச்சாவடி உறுப்பினர்களுக்கும் அவரவர்களுக்கான இலக்கை முதலமைச்சர் நிர்ணயித்துக் கொடுத்தார்.



    அந்த பாகத்தில் உள்ள தி.மு.க. வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள், பி.எஸ்.ஏ.-2 முகவர்கள், வட்டச் செயலாளர்கள் ஆகியோரின் செயல்பாடுகளை ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்டக் கழக செயலாளர் மயிலை த.வேலு, பகுதிச் செயலாளர் நந்தனம் மதி மற்றும் முக்கிய நிர்வாகிகளும் உடன் சென்றனர்.

    இதைபோல் தமிழ்நாடு முழுவதும் அந்தந்த வாக்குச் சாவடிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற பரப்புரையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், கிளை செயலாளர்கள் என அனைவரும் பங்கேற்றனர். பூத் கமிட்டி நிர்வாகிகள் வீடு வீடாக சென்று வாக்காளர்களின் விவரங்களையும் சரி பார்த்தனர்.

    தமிழ்நாடு முழுவதும் 68 ஆயிரத்து 463-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் உள்ளதால் அத்தனை வாக்குச்சாவடிகளிலும் வெற்றி பெறுவதற்காக இந்த பரப்புரை இன்று மேற்கொள்ளப்பட்டது.

    அடுத்த மாதம் ஜனவரி 10-ந்தேதி வரை மாநிலம் தழுவிய வகையில் தீவிரமான பிரசாரமாக இது மேற்கொள்ளப்பட உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். 6.8 லட்சம் தி.மு.க. பூத் கமிட்டி உறுப்பினர்கள் உற்சாகப்படுத்தவும் அணி திரட்டவும் இந்த பிரசார வியூகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு பூத்திலும் தெருமுனை கூட்டங்கள், வீடு வீடாக கலந்துரையாடல்கள், வாக்காளர் சரிபார்ப்பு என வாக்குச்சாவடிக்கு உட்பட்ட மக்களை கவரும் வகையில் தி.மு.க.வினரின் வியூகம் அமைக்கப்பட்டுள்ளது.

    முன்னோடி தலைவர்கள் உள்பட அனைத்து தி.மு.க. நிர்வாகிகளும் கடந்த தேர்தலைவிட கூடுதல் வாக்குகளை பெறும் வகையில் தங்களது வாக்குச்சாவடிகளை பலப்படுத்தி வெற்றி வாக்குச்சாவடியாக மாற்றி காட்ட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளன.

    ×