என் மலர்
மகாராஷ்டிரா
- ரத்தம் சொட்ட சொட்ட இந்த விவகாரத்தை வீடியோவாக பேசி அப்பெண் வெளியிட்டுள்ளார்.
- அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.
புனேவில் ஜெரலின் டி சில்வா என்ற பெண் தனது 2 குழந்தைகளுடன் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரின் பின்னே வந்த கார் இவரை முந்தி செல்ல முயற்சித்தது. ஆனால் முந்தி செல்ல முடியாமல் 2 கிமீ தூரம் ஸ்கூட்டரின் பின்புறம் கார் சென்றுள்ளது. இதனால் காரை ஓட்டி வந்த முதியவர் கோவமடைந்துள்ளார்.
பின்பு ஸ்கூட்டருக்கு முன்பு காரை நிறுத்தி இறங்கிய முதியவர் கோபத்துடன் அப்பெண்ணின் முடியை பிடித்து இழுத்து முகத்தில் சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் அப்பெண்ணின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியுள்ளது.
பின்னர் ரத்தம் சொட்ட சொட்ட இந்த விவகாரத்தை வீடியோவாக பேசி அப்பெண் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.
வீடியோ வைரலானதை அடுத்து, தாக்கிய முதியவர் மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர்.
- மும்பையில் குடிசைகள் அதிகமாக அமைந்துள்ள பகுதியாக தாராவி உள்ளது.
- சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாயில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட அதானி குழுமத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் தாராவி ஏராளமான குடிசைகள் அமைந்த பகுதியாகும். இந்த குடிசை பகுதிகளை அப்புறப்படுத்திவிட்டு அந்த இடத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித் தரப்படும் என மகாராஷ்டிரா அரசு தெரிவித்தது. இதற்கு தாராவி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தபோதிலும் மகாராஷ்டிரா அரசு தாராவி குடிசை மறுமேம்பாடு திட்டத்திற்கான டெண்டரை அதானி குழுமத்திற்கு வழங்கியுள்ளது. பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்ட இந்த திட்டம் தற்போது அதானி குழுமத்திற்கு சென்றுள்ளது.
இந்த நிலையில் சிவ சேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே, நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு தாராவி குடியிருப்புவாசிகள் மற்றும் வணிகங்கள் முற்றிலும் அப்புறப்படுத்தப்படாது. அங்குள்ள மக்களுக்கு 500 சதுர அடியில் வீடுகள் கட்டித்தரப்படும்.
நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு தாராவி குடிசை மறுமேம்பாடு திட்டத்திற்கான டெண்டரை ரத்து செய்வோம். அதை ஏன் இப்போது ரத்து செய்யக்கூடாது என்பதற்கு அரசு பதில் அளிக்க வேண்டும். மும்பையை அதானி நகரமாக மாற்ற அனுமதிக்க மாட்டோம்.
இந்த திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படாத சலுகைகள் அதானி குழுமத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளன. கூடுதல் சலுகைகளை வழங்க மாட்டோம். தாராவியில் வசிப்பவர்களுக்கு எது நல்லது என்பதை நாங்கள் பார்ப்போம், தேவைப்பட்டால் புதிதாக டெண்டர் விடுவோம்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் வருகிற அக்டோபர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளன.
தாராவி பகுதியை மறுமேம்பாடு செய்வதற்கு ரூ. 5069 கோடி மதிப்பிலான திட்டத்தை அதானி குழும நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மும்பையின் முக்கியமான பகுதியில் 600 ஏக்கர் நிலப்பரப்பில் செயல்படுத்த இருக்கிறது.
இந்த திட்டம் முதலில் வேறோடு நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டது. பின்னர் அதானி குழுமத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
- பூஜா கேட்கரின் தாய் மனோரமா கேட்கர் நிலப்பிரச்சனையில் விவசாயியை துப்பாக்கியால் மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டார்.
- ஐ.ஏ.எஸ். அதிகாரி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அடுத்தடுத்து நடவடிக்கை பாய்வது மகாராஷ்டிரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலம் புனே கலெக்டர் அலுவலகத்தில் உதவி கலெக்டர் அந்தஸ்தில் பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றி வந்தவர் பூஜா கேட்கர்(வயது34). விதிமுறையை மீறி தனது சொகுசு காரில் சிவப்பு சுழல் விளக்கு பொருத்தியது, அலுவலகத்தில் தனியறை கேட்டு அடம் பிடித்தது, கூடுதல் கலெக்டரின் அறையை ஆக்கிரமித்தது போன்ற வெவ்வேறு சர்ச்சைகளில் சிக்கினார்.
இதையடுத்து இவர் சமீபத்தில் வாசிம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு அதிரடியாக மாற்றப்பட்டார்.
இதற்கிடையே பூஜா கேட்கர் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக மாற்றுத்திறனாளி ஒதுக்கீடு மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இடஒதுக்கீட்டை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இது குறித்து விசாரிக்க மத்திய அரசின் கூடுதல் செயலாளர் மனோஜ்குமார் திவேதி தலைமையில் ஒரு நபர் கமிட்டி அமைக்கப்பட்டது.
இதற்கிடையே பூஜா கேட்கரின் தாய் மனோரமா கேட்கர் நிலப்பிரச்சனையில் விவசாயியை துப்பாக்கியால் மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டார். இதேபோல அவரது தந்தை திலீப் கேட்கர் அரசு அதிகாரியாக இருந்த போது 2 முறை லஞ்ச வழக்கில் சிக்கி பணியிடை நீக்கம் செய்யப்பட்டது தெரியவந்தது.
இந்தநிலையில் மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய விசாரணையில் பூஜா கேட்கர் தனது பெயர், தந்தை பெயர், தாய் பெயர், புகைப்படம், கையெழுத்து, இ-மெயில் ஐ.டி., செல்போன் எண், முகவரி ஆகியவற்றை மாற்றி அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் அவர் மீது போலீசில் மோசடி வழக்கு தொடர்ந்து உள்ளது.
மேலும் அவரது ஐ.ஏ.எஸ். தேர்வை ரத்து செய்யவும், எதிர்காலத்தில் அவர் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுத தடை விதிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
சர்ச்சையில் சிக்கிய பயிற்சி பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அடுத்தடுத்து நடவடிக்கை பாய்வது மகாராஷ்டிரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் போலீசில் மோசடி வழக்குப்பதிவு செய்த நிலையில், பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரி பூஜா கேட்கர் மகாராஷ்டிர மாநிலம் வாசிம் அரசு ஓய்வு இல்லத்தை காலி செய்தார். அவர் தற்போது பணிபுரிந்து வரும் வாசிமில் இருந்து தனியார் காரில் வெளியூருக்கு புறப்பட்டு சென்றார். அவர் நாக்பூர் சென்றதாக கூறப்படுகிறது.
வாசிம் அரசு ஓய்வு இல்லத்தில் இருந்து புறப்படும்போது பூஜா கேட்கர் கூறுகையில், "நீதித்துறை அதன் கடமையை செய்யும். நான் விரைவில் திரும்பி வருவேன்" என்றார்.
- அடிக்கடி தனது நண்பர்களை வீட்டுக்கு அழைத்து கணவர் பார்ட்டி கொடுப்பார்
- 5 வருட திருமண வாழ்க்கையில் பலமுறை இதுபோன்று நடந்துவந்துள்ளது.
மும்பையில் வசிக்கும் 35 வயது திருமணமான பெண் ஒருவர் தனது கணவர் அவரது நண்பர்களின் முன் தன்னை ஆடைகளை அவிழ்க்க கட்டயப்படுத்தியதாக புகார் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் திரைப்பட VFX கலைஞராக பணியாற்றுவரும் அந்த பெண் சர்வதேச ஏர்லைன் பைலட்டாக பணியாற்றிவரும் தனது கணவருடன் தனியாக வசித்து வருகிறார்.
அடிக்கடி தனது நண்பர்களை வீட்டுக்கு அழைத்து பார்ட்டி கொடுக்கும் கணவர் TRUTH OR DARE விளையாடி, தனது மனைவியை அவர்களின் முன் ஆடைகளை அவிழ்க்கும்படி நிர்பந்தம் செய்து வந்துள்ளார். அதற்கு மனைவி மறுத்ததால் அவரை பல்வேறு சமயங்களில் அடித்து துன்புறுத்தியுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையில் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு வந்துள்ளன. தங்களின் 5 வருடதிருமண வாழ்க்கையில் பலமுறை கணவர் இடகுபோன்று தன்னை நண்பர்கள் முன்னிலையிலும் தனியாக இருக்கும்போதும் அடித்து துன்புறுத்தினார் என்று அப்பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக எப்ஐஆர் பதிந்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
- பாந்த்ரா-ஒர்லியை இணைக்கும் கடல் பாலத்தில் இருந்து குதித்து சேத் தற்கொலை செய்துகொண்டார்.
- தகவலறிந்து சென்ற மீட்புக் குழுவினர் நடத்திய 3 மணி நேர தேடுதலுக்குப் பிறகு அவரது உடல் மீட்கப்பட்டது.
மும்பை:
காட்கோபரில் வசிக்கும் பவேஷ் சேத், பால் பேரிங்ஸ் வியாபாரம் செய்து வந்தார். இவர்நேற்று மாலை 3.15 மணியளவில் பாந்த்ரா-ஒர்லியை இணைக்கும் கடல் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
அவரது மகன் கொடுத்த தகவலின் பேரில் அங்கு சென்ற பாந்த்ரா போலீசார் சேத் உடலைக் கைப்பற்றினர். இதுகுறித்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக பாந்த்ரா போலீசார் கூறியதாவது:
இறந்தவரின் மகன் மாலை 4:30 மணியளவில் எங்களை அணுகினார். வாட்ஸ்அப் வீடியோ காலில் தந்தை அழைத்ததையும், கடலில் குதித்ததையும் தெரிவித்தார்.
தகவலறிந்து சென்ற தீயணைப்புப் படை அதிகாரிகள் மற்றும் மீட்புக் குழுவினர் நடத்திய 3 மணி நேர தேடுதலுக்குப் பிறகு அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
ஒரு வாகன ஓட்டியிடம் லிப்ட் கேட்டு பாந்த்ரா-ஒர்லி பாலத்தின் தென் பகுதியில் இறங்கிய அவர், மகனுக்கு வீடியோ கால் செய்து பாலத்தில் இருந்து குதிக்கப் போவதாகவும், குடும்பத்தை பார்த்துக் கொள்ளும்படியும் தெரிவித்துள்ளார். தொழிலில் ஏற்பட்ட கோடிக்கணக்கான நஷ்டம் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டார் என தெரிவித்தனர்.
தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் மகனுக்கு வீடியோ கால் செய்து தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- வாரிசு திரைப்படத்தில் நடிகர் விஜய் அந்த அருவிக்கு செல்வது போல பாடல் காட்சி படமாக்கப்பட்டிருக்கும்.
- இவரை இன்ஸ்டாவில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்.
மகாராஷ்டிராவில் உள்ள கும்பே அருவி இந்தியாவில் உள்ள ஒரு புகழ்பெற்ற கருவியாகும். வாரிசு திரைப்படத்தில் நடிகர் விஜய் அந்த அருவிக்கு செல்வது போல பாடல் காட்சி படமாக்கப்பட்டிருக்கும்.
அப்போது இந்த அருவி இந்தியாவில் எங்குள்ளது என்று தமிழர்கள் பலரும் இணையத்தில் தேடி பயணம் செய்ய ஆரம்பித்தனர்.
இந்நிலையில், இந்த கும்பே அருவிக்கு சுற்றுலா சென்ற இன்ஸ்டா பிரபலம் அன்வி காம்தர் (27) ரீல்ஸ் எடுத்துக்கொண்டிருந்தபோது 300 அடி பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப்படையினர் 6 மணி நேரம் போராடி அன்வி காம்தரை பலத்த காயங்களுடன் பள்ளத்தில் இருந்து மீட்டுள்ளனர். எனினும் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே அவரின் உயிர் பிரிந்தது.
பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொண்டு அதை வீடியோவாக பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ள இவரை இன்ஸ்டாவில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்த அந்தரங்க வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சில நாட்களுக்குப் பிறகு இன்ஸ்டாகிராமில் பரவியது.
- மன உளைச்சலுக்கு ஆளான பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மும்பையில் ஒரு பெண் தனது கணவருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி பெண்ணை மிரட்டிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஜோசுவா பிரான்சிஸ் இடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்துள்ளது.
பெண்ணின் கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இந்த தம்பதியினர் சிறு சிறு பிரச்சனைகளுக்கு அவ்வப்போது சண்டையிட்டுக் கொண்டுள்ளனர். அதனால் தனது மனைவியை அவமானப்படுத்த அவர்கள் அந்தரங்கமாக இருக்கும் தருணங்களை அவர் புகைப்படம், வீடியோ எடுத்துள்ளார்.
இந்த வீடியோ, புகைப்படங்களை அவர் தனது நண்பர் ஜோசுவா பிரான்சிஸ் இடம் கொடுத்துள்ளார்.
பின்னர் பிரான்சிஸ் அந்தப் பெண்ணுக்கு போன் செய்து அவரது அந்தரங்க வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் ஒரு ஆபாச இணையதளத்தில் பதிவேற்றியதாக தெரிவித்து, ஆபாச தளத்தின் இணைய URL ஐ பகிர்ந்துள்ளார்.
இந்த அந்தரங்க வீடியாக்களை நீக்க வேண்டும் என்றால் 50,000 ரூபாய் பணம் தரவேண்டும் என்று மிரட்டி அந்த பெண்ணிடம் இருந்து பிரான்சிஸ் பணம் வாங்கியுள்ளார்.
ஆனால் இந்த அந்தரங்க வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சில நாட்களுக்குப் பிறகு இன்ஸ்டாகிராமில் பரவியது.
அதனால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆறு மணி நேரம் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 12 பேர் சுட்டுக்கொலை.
- இரண்டு பாதுகாப்புப்படை வீரர்கள் காயம் அடைந்தனர்.
சத்தீஷ்கர் மாநிலம் எல்லை அருகே உள்ள மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டம் வண்டோலி கிராமத்தில் போலீசாருடன் இணைந்து கமோண்டோ படை வீரர்கள், நக்சலைட்டைடுகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது இரு தரப்பினருக்கும் இடையில் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. சுமார் ஆறு மணி நேரம் நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சண்டையில் 12 நக்சலைட்டுகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இந்த சண்டையில் இரண்டு பாதுகாப்புப்படை வீரர்கள் காயம் அடைந்தனர்.
12 நக்சலைட்டுகளின் உடல்களை மீட்ட நிலையில் போலீசார் ஏகே 47 துப்பாக்கிகள், இரண்டு INSAS துப்பாக்கிகள் உள்ளிட்டவைகளை கைப்பற்றினர்.
நக்சலைட்டுகளுக்கு எதிரான இந்த சண்டையில் ஈடுபட்ட போலீசார் மற்றும் கமோண்டோ வீரர்களுக்கு 51 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என மகாராஷ்டிர மாநில உள்துறை மந்திரி துதேவேந்திர பட்நாவிஸ் தெரிவித்துள்ளார்.
- அஜித் பவார் அணியிலிருந்து 18 முதல் 19 எம்எல்ஏக்கள் சரத் பவார் அணிக்கு வந்துவிடுவார்கள் என்று கூறப்பட்டது
- சட்டமன்றத் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் முக்கியத் தலைவர்களின் இந்த கட்சித் தாவல் அம்மாநில அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது.
மகாராஷ்டிராவின் பழம்பெரும் கட்சியான சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. முன்னதாக சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் கட்சியை உடைத்து தனது ஆதரவாளர்களுடன் பாஜகவுக்கு ஆதரவு அளித்து கடந்த 2022 ஆம் ஆண்டு பாஜக - ஷிண்டே சிவசேனா கூட்டணி ஆட்சியைப் பிடித்தபோது மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சர் ஆனார்.
சரத் பவார் அணி - அஜித் பவார் அணி என தேசியவாத காங்கிரஸ் பிரிந்து மகாராஷ்டிர அரசியல் களத்தை விறுவிறுப்பாக்கியுள்ள நிலையில் விரைவில் அம்மாநிலத்தில் வர உள்ள சட்டமன்ற தேர்தல் அந்த விறுவிறுப்பை இரட்டிப்பாக்கியுள்ளது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் சரத் பவார் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா காங்கிரசின் இந்தியா கூட்டணியை ஒருங்கிணைத்த மஹா விகாஸ் அகாதி கூட்டணி மொத்தம் உள்ள 48 இடங்களில் 30 இடங்களை கைப்பற்றியது.
அஜித் -பவார் தேசியவாத காங்கிரஸ், ஏக்நாத் ஷிண்டே சிவசேனா, பாஜகவின் என்டிஏ கூட்டணியை ஒருங்கிணைத்த மஹாயுதி கூட்டணி 17 இடங்களை மட்டுமே கைபற்றி பின்தங்கியது.
இதன் விளைவாக ஜூன் 27 தொடங்கி ஜூலை 12 வரை நடந்த சட்டமன்ற மழைக்காலக் கூட்டத் தொடருக்குப்பின் பாஜகவுடன் உள்ள அஜித் பவார் அணியிலிருந்து 18 முதல் 19 எம்எல்ஏக்கள் தங்கள் அணிக்கு வந்துவிடுவார்கள் என்று பேச்சு அடிபட்டது.

சரத் பவாரும், எதிர்க் கூட்டணியில் உள்ள எம்.எல்.ஏக்கள் மீண்டும் எங்களிடம் வருவதில் மகிழ்ச்சிதான். ஆனால் எங்களின் கட்சியை பலவீனப்படுத்தும் நோக்கத்தில் வருபவர்களை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். மாறாக எங்கள் கட்சியை வலுப்படுத்த விரும்புபவர்களாகவும் கட்சியின் கண்ணியத்தை குலைக்காதவர்களாகவும் இருந்தால் மட்டுமே அவர்களை ஏற்றுக்கொள்வோம் என்று தெரிவித்திருந்தார்.
சமீபத்தில் நடந்த மேலவைத் தேர்தலில் எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களிக்காமல் இருக்க ரிஸார்டுகளில் பாதுகாக்கப்பட்ட சம்பவமும் அரங்கேறியது.
இந்த நிலையில் பாஜக கூட்டணி தேசியவாத காங்கிரஸ் அஜித் பவார் அணியிலிருந்து பிம்ப்ரி சின்ச்வாட் பகுதியைச் சேர்ந்த நான்கு முக்கிய தலைவர்கள் விலகி உள்ளனர். பிம்ப்ரி சின்ச்வாட் பிரிவின் தலைவரான அஜித் கவாஹனே, மாணவர் தலைவர் யாஷ் சானே மற்றும் ராகுல் போஸ்லே, பங்கஜ் பாலேகர் அஜித் பவாரிடமிருந்து பிரிந்துள்ள நிலையில் சரத் பவாரை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் முக்கியத் தலைவர்களின் இந்த கட்சித் தாவல் அம்மாநில அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது. இவர்களைத் தொடர்ந்து விரைவில் பலர் சரத் பவாரிடமே திரும்பி வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- டோம்பிவலியில் உள்ள குளோப் ஸ்டேட் கட்டிடத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
- காவல்துறை விபத்து மரண அறிக்கையை (ADR) பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகே தனது நண்பர்களுடன் ஜாலியாக விளையாடிக் கொண்டிருந்த பெண் ஒருவர் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் இருந்து 30 கிமீ தொலைவில் உள்ள டோம்பிவலியில் உள்ள குளோப் ஸ்டேட் கட்டிடத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பாதிக்கப்பட்ட நாகினா தேவி மஞ்சிரம் என அடையாளம் காணப்பட்ட பெண், கட்டிடத்தில் இருந்து விழுந்தது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மணப்பாடா காவல்துறை விபத்து மரண அறிக்கையை (ADR) பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கியுள்ளது.
முதற்கட்ட விசாரணையின்படி, நேற்று நாகினா தேவி தனது நண்பர்களுடன் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் பிராங்க் செய்து விளையாடிக் கொண்டிருந்தபோது, தவறி விழுந்தார்.
அவரது நண்பர்களில் ஒருவர் அதே சம்பவத்தில் இருந்து நூலிழையில் உயர் தப்பினார். இவை, அங்கு பொருத்தப்பட்டிருந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
பரபரப்பான இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
- கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணறினர்.
- விண்ணப்பத்தாரர்கள் உடல் ரீதியாக வலுவாக இருக்க வேண்டும்.
நாடு முழுவதும் வேலையின்மை பிரச்சனை தீவிரமடைந்துள்ளது. குறைந்தபட்ச காலியிடங்களுக்கு ஆயிரக்கணக்கானோர் போட்டியிடும் அவலம் அரங்கேறி வருகிறது. சமீபத்தில் குஜராத்தின் அங்கலேஷ்வரில் 10 பணியிடங்களுக்கு 1,800 பேர் விண்ணப்பிக்க முண்டியடித்தனர். தற்போது அதேபோல் மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
மும்பை விமான நிலையத்தில் 600 காலி பணியிடங்களுக்கு 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் குவிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
விமானத்தில் பொருட்களை ஏற்றுதல், இறக்குதல் மற்றும் பேக்கேஜ் பெல்ட்கள் மற்றும் ராம்ப் டிராக்டர்களை இயக்குதல். ஒவ்வொரு விமானத்திற்கும் பொருட்கள், சரக்கு மற்றும் உணவுப் பொருட்களைக் கையாள குறைந்தபட்சம் 5 பேர் தேவை.
விமான நிலையத்தில் பொருட்களை ஏற்றிச் செல்வோரின் சம்பளம் மாதத்திற்கு ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம் வரை இருக்கும். ஆனால் பெரும்பாலானவர்கள் கூடுதல் நேரம் பணி செய்து ரூ.30 ஆயிரத்திற்கும் மேல் சம்பாதிக்கிறார்கள். வேலைக்கான கல்வி அடிப்படை தகுதி. ஆனால் விண்ணப்பத்தாரர்கள் உடல் ரீதியாக வலுவாக இருக்க வேண்டும்.
வேலைக்கு ஆட்கள் தேவை என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்திருந்த நிலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அலுவலகத்தின் முன் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணறினர். இதையடுத்து, அனைவரின் சுயவிவரங்கள் அடங்கிய ரெஸ்யூம்களை வாங்கிக் கொண்டு, தகுதியுள்ளவர்களை நேர்முக தேர்வுக்கு அழைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
புல்தானா மாவட்டத்தைச் சேர்ந்த பிரதமேஷ்வர் என்பவர் நேர்காணலுக்காக 400 கிலோமீட்டர்கள் பயணம் செய்து வந்துள்ளார். ஹேண்டிமேன் பணிக்கு விண்ணப்பிக்க வந்துள்ளேன், ரூ.22 ஆயிரத்து 500 சம்பளம் தருவதாக கூறி இருந்தார்கள் என்றார். பிரதமேஷ்வர் பிபிஏ இரண்டாமாண்டு மாணவர் என்பதால் வேலை கிடைத்தால் படிப்பை நிறுத்திவிடுவீர்களா என்று கேட்டதற்கு, "என்ன செய்வது? வேலையில்லா திண்டாட்டம் அதிகம். அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," என கூறினார்.
பிஏ பட்டம் பெற்ற மற்றொருவர், தனக்கு ஒரு ஹேண்டிமேன் வேலையைப் பற்றி அதிகம் தெரியாது, ஆனால் "வேலை தேவை" என்று கூறினார். மற்றொருவர் ராஜஸ்தானின் அல்வாரில் இருந்து மும்பைக்கு பயணம் செய்துள்ளார். அவர் எம்காம் பட்டம் பெற்றுள்ளார். ஆனால் அடிப்படைக் கல்வித் தேவையுள்ள வேலைக்கு விண்ணப்பித்துள்ளார். "நானும் அரசு வேலை தேர்வுக்கு தயாராகி வருகிறேன், இங்கு சம்பளம் நன்றாக இருக்கிறது என்று ஒருவர் சொன்னார். அதனால் வந்துள்ளேன்." என்றார்.
- நாராயண் சுர்வேவை பற்றி திருட்டில் ஈடுபட்டவருக்கு நன்றாக தெரிந்து இருந்தது.
- கவிஞர் நாராயண் சுர்வே கடந்த 2010-ம் ஆண்டு தனது 84-வது வயதில் மரணம் அடைந்தார்.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டம் நேரல் பகுதியில் சமீபத்தில் திருட்டு ஆசாமி ஒருவர் நோட்டமிட்டு வந்தார். அப்போது ஒரு வீடு சில நாட்களாக பூட்டிக் கிடப்பதை கவனித்தார். நைசாக பூட்டை உடைத்த ஆசாமி, உள்ளே புகுந்து எல்.இ.டி.டி.வி. உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றார். மறுநாள் மீண்டும் அதே வீட்டில் மிச்சம் மீதி இருப்பதை திருட வந்தார்.
அப்போது வீட்டில் பிரபல மராத்தி எழுத்தாளரும், கவிஞருமான நாராயண் சுர்வேவின் புகைப்படம் இருப்பதை பார்த்தார். அப்போது தான் அது பிரபல கவிஞரின் வீடு என்பது திருட்டு ஆசாமிக்கு தெரியவந்தது.
கவிஞர் நாராயண் சுர்வே அடிமட்டத்தில் இருந்து எழுத்தால் உயர்ந்தவர் ஆவார். அவர் மும்பை தெருக்களில் ஆதரவற்ற சிறுவனாக வாழ்ந்தவர். வீட்டு வேலை, ஓட்டலில் பாத்திரம் கழுவும் வேலை, குழந்தை காப்பாளர், நாய் பராமரிப்பாளர், பால் டெலிவிரி செய்பவர், சுமை தூக்குபவர் என பல்வேறு வேலைகளை செய்து பின்னாட்களில் பிரபல எழுத்தாளர், கவிஞராக மாறியவர். அவரது கவிதைகள் நகர்ப்புற தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டங்களை தெளிவாக சித்தரித்தன.
நாராயண் சுர்வேவை பற்றி திருட்டில் ஈடுபட்டவருக்கு நன்றாக தெரிந்து இருந்தது. பிரபல கவிஞரின் வீட்டில் திருடி விட்டோமே.. என்ற குற்ற உணர்ச்சி அவரது மனதை உறுத்தியது.
கவிஞரின் வீட்டில் திருடிய டி.வி. உள்ளிட்ட பொருட்களை அந்த திருடர் மூட்டை கட்டி மீண்டும் கவிஞரின் வீட்டில் கொண்டு வந்து வைத்தார். மேலும் வீட்டில் ஒரு துண்டு சீட்டில் மன்னிப்பு கடிதம் ஒன்றையும் எழுதி சுவரில் ஒட்டிசென்றார்.

அதில், ''மிக உயர்ந்த எழுத்தாளர், கவிஞர் வீட்டில் திருடியதற்காக என்னை மன்னித்து விடுங்கள்'' என குறிப்பிட்டு இருந்தார்.
கவிஞர் நாராயண் சுர்வே கடந்த 2010-ம் ஆண்டு தனது 84-வது வயதில் மரணம் அடைந்தார். தற்போது அவரது வீட்டில் மகள் சுஜாதா, கணவர் கணேஷ் காரேவுடன் வசித்து வருகிறார். அவர்கள் கடந்த 10 நாட்களாக விராரில் உள்ள மகன் வீட்டுக்கு சென்று இருந்தனர். அவர்கள் திரும்பி வந்தபோது, வீட்டில் திருடன் எழுதி வைத்து சென்ற மன்னிப்பு கடிதத்தை பார்த்தனர். திருடனின் செயலை பார்த்து நெகிழ்ச்சி அடைந்தனர்.
இருப்பினும் திருட்டு செயலை ஏற்றுக்கொள்ள முடியாததால், அவர்கள் சம்பவம் குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். டி.வி. உள்ளிட்ட பொருட்களில் உள்ள கைரேகையை சேகரித்து கவிஞரின் வீட்டில் கைவரிசை காட்டிய திருடனை அடையாளம் காண போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
திருடன் ஒருவர் கவிஞரின் வீட்டில் திருடிய பொருட்களை திரும்ப வைத்து, மன்னிப்பு கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்ற சம்பவம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.






