என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு பதார்த்தம் என்றால், அது பன்னீரில் செய்யப்படும் உணவுகள் தான். இன்று பன்னீரை வைத்து செய்யப்படும் பன்னீர் பாப்கார்ன் ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பன்னீர்  150 கிராம்
    கார்ன் பிளக்ஸ்  - 100 கிராம்
    மைதா மாவு - 3 டீஸ்பூன்
    சோள மாவு  - 3 டீஸ்பூன்
    மிளகாய் தூள்  - 2 டீஸ்பூன்
    சில்லி சாஸ் -  2 டீஸ்பூன்
    உப்பு  - தேவையான அளவு
    எண்ணெய்  - தேவையான அளவு
    பூண்டு  - 4 (அரைத்து)
    வெங்காயம்  - 1/2 (அரைத்து)
    மிளகு தூள் - 2 டீஸ்பூன்

    செய்முறை

    முதலில், பன்னீரை சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ள வேண்டும்.

    பின், ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சோள மாவு, மிளகாய் தூள், உப்பு, பூண்டு மற்றும் வெங்காயம் இவை அனைத்தையும் போட்டு நன்றாக பிரட்டி கொள்ளவும்.

    பின், இதில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கிண்டி விட்டு கொண்டே இருக்க வேண்டும். பின், இதில் நாம் எடுத்து வைத்துள்ள பன்னீரை சேர்த்து கிளறி கொள்ள வேண்டும்.

    ஒரு தட்டில் கார்ன் பிளக்ஸ் எடுத்து அதனை நொறுக்கி வைத்து கொள்ள வேண்டும்.

    பின், ஊற வைத்துள்ள பன்னீர் துண்டுகளை போட்டு பிரட்டி எடுக்கவும்.

    பன்னீரை தனி தனியாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.

    இதனை ஒரு அரை மணி நேரம் பிரிட்ஜில் வைத்து எடுத்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பன்னீரை பிரிட்ஜில் இருந்து எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து கொள்ளவும்.

    இதனை அப்படியே சூடாக பரிமாறலாம்.


    டெல்லி, ஆக்ரா, உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் மிகவும் பிரபலமான உணவென்றால் அது பெட்மி பூரி தான். மிகவும் சத்து நிறைந்த இந்த பூரிதான் ஆக்ராவாசிகளின் காலை நேர பிரதான உணவு.
    தேவையான பொருட்கள்

    கோதுமை மாவு - 2 கப்
    ரவை - கால் கப்
    முழு உளுந்து - அரை கப்
    உப்பு - தேவையான அளவு
    மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    கஸ்தூரி மேத்தி - 1 டேபிள் டீஸ்பூன்
    எண்ணெய் பொரிக்க - 2 டேபிள் டீஸ்பூன்

    பூரணத்துக்கு

    முழு உளுந்து - 1 கப்
    ப.மிளகாய் - 2
    இஞ்சி  - 1 துண்டு
    பெருங்காயம் - சிறிதளவு
    சோம்பு தூள் - அரை டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    தனியா தூள் - 1 டேபிள் டீஸ்பூன்
    ஆம்சூர் தூள் - 1 டீஸ்பூன்
    சீரகத்தூள் -  1 டீஸ்பூன்
    கொத்தமல்லி தழை - சிறிதளவு
    எண்ணெய் -  டேபிள் டீஸ்பூன்
    உப்பு - சுவைக்கு

    செய்முறை

    உளுந்தை 2 மணிநேரம் ஊறவைத்து சிறிது தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து கொள்ளவும்.

    இஞ்சி, ப.மிளகாயை விழுதாக அரைத்து கொள்ளவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அதில் ஒரு பகுதியை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பூரி மாவுக்கான பொருட்களை சேர்த்து பிசைத்து இரண்டு டேபிள் டீஸ்பூன் எண்ணெய் தடவி அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

    அடுப்பில் கடாயை வைத்து அதில் ஒரு டேபிள் டீஸ்பூன் எண்ணெய் விட்டு மசாலா பொருட்களையும் அரைத்த பச்சைமிளகாய், இஞ்சி விழுதையும் அத்துடன் சேர்க்கவும். சிறிது வதங்கியபின் மீதமுள்ள உளுந்து விழுது, உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.

    உளுந்த நன்றாக வெந்து உதிரி உதிரியாக வரும் வரை வதக்கி கொண்டே இருக்க வேண்டும். கட்டியில்லாமல் பொடி போன்று உதிரியாக வரும் போது கொத்தமல்லி தழையை சேர்த்து இறக்கி விட வேண்டும்.

    சிறிது ஆறியவுடன் பூரி செய்ய தொடங்க வேண்டும். பிசைந்து வைத்துள்ள மாவை, சிறிதளவு எடுத்து கப் போன்று செய்து கொள்ள வேண்டும். இதில் பூரணத்தை உள்ளே வைத்து மூடி பூரியாக திரட்டி கொள்ள வேண்டும்.

    உருட்டி வைத்துள்ள பூரியை எண்ணெயில் போட்டு மிதமான சூட்டில் பொரித்து எடுக்க வேண்டும். இந்த பூரியை ஆலு சப்ஜியுடன் பரிமாறினால் சுவையாக இருக்கும்.
    குழந்தைகளுக்கு மாலைநேரத்தில் சத்தான ஸ்நாக்ஸ் கொடுக்க விரும்பினால் சர்க்கரைவள்ளிக்கிழங்கு உருண்டை செய்து கொடுக்கலாம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சர்க்கரைவள்ளிக்கிழங்கு - அரை கிலோ
    தேங்காய் துருவல் - அரை கப்
    பொடித்த வெல்லம் - 200 கிராம்
    முந்திரி பருப்பு - 5 (பொடிக்கவும்)
    மில்க்மெய்டு - 2 டீஸ்பூன்

    செய்முறை:

    வாணலியில் தேங்காய் துருவலை கொட்டி பொன்னிறமாக வதக்கவும்.

    சர்க்கரைவள்ளிக்கிழங்கின் தோலை சீவி விட்டு இட்லி தட்டில் வேகவைத்து துருவிக்கொள்ளவும்.

    அதனுடன் வெல்லம், முந்திரி பருப்பு, மில்க்மெய்டு ஆகியவற்றை கலந்து உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.

    அதனை தேங்காய் துருவலில் புரட்டி சுவைக்கலாம்.
    மாலையில் குழந்தைகளுக்கு செய்து கொடுக்க அருமையான ஸ்நாக்ஸ் இது. இந்த ரெசிபியை 10 நிமிடத்தில் செய்யலாம். இன்று இந்த ஸ்நாக்ஸ் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ரவை - அரை கப்
    மைதா - அரை கப்
    சர்க்கரை - முக்கால் கப்
    வாழைப்பழம் - 1
    தேங்காய் துருவல் - கால் கப்
    நெய் - தேவையான அளவு

    செய்முறை :

    தண்ணீரில் ரவையை மூன்று மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவும்.

    பின்னர் அதனுடன் சர்க்கரை, மைதா, தேங்காய் துருவல், வாழைப்பழத்தை போட்டு பிசைந்து கொள்ளவும்.

    சர்க்கரை நன்கு கரைந்து கட்டிப்பிடிக்காமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.

    வாணலியில் நெய் ஊற்றி அது சூடானதும் மாவு கலவையை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு இருபுறமும் திருப்பி போட்டு பொரித்தெடுக்கவும்.

    ருசியான ரவை வாழைப்பழம்பணியாரம் தயார்.
    கேரளா ஸ்டைல் உணவுகளின் சுவையே தனி தான். அதிலும் மலபார் சிக்கன் ரோஸ்ட் மிகவும் அருமையாக இருக்கும். சரி, இப்போது அந்த மலபார் சிக்கன் ரோஸ்ட் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
    தேவையான பொருட்கள்:

    சிக்கன் லெக் பீஸ் - 6
    வெங்காயம் - 20 (பொடியாக நறுக்கியது)
    பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
    இஞ்சி - 1 துண்டு (நீளமாக நறுக்கியது)
    தேங்காய் எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
    மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    சமையல் எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

    சிக்கன் ஊற வைப்பதற்கு தேவையான பொருட்கள்:

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    சோள மாவு - 2 டீஸ்பூன்
    அரிசி மாவு - 2 டீஸ்பூன்
    மிளகு - 1 டீஸ்பூன்
    எலுமிச்சை - 1

    செய்முறை:

    முதலில் சிக்கன் லெக் பீஸை நீரில் சுத்தமாக கழுவி, அதில் ஆங்காங்கே கத்தியால் கீறி விட வேண்டும்.

    பின் ஒரு பாத்திரத்தில் சிக்கன் லெக் பீஸை வைத்து, அதில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பிரட்டி, 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை எண்ணெயில் போட்டு நன்கு பொரித்து எடுக்க வேண்டும். சிக்கன் நன்றாக சிவக்கும் படி பொரிக்க வேண்டும்.

    பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து வதக்கவும்.

    பின் அதில் வெங்காயத்தை சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும்.

    அடுத்து அதில் வறுத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து, அதோடு மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி இறக்கினால், சூடான மற்றும் சுவையான மலபார் சிக்கன் ரோஸ்ட் ரெடி!!!
    மாலை வேளையில் எப்போதும் பஜ்ஜி, போண்டா என்று செய்து சுவைத்து போர் அடித்துவிட்டதா? அப்படியெனில் இன்று மும்பை ஸ்டைல் பேல் பூரியை செய்து சுவையுங்கள்.
    தேவையான பொருட்கள்:

    பொரி - 1 கப்
    ஓமப்பொடி - 1 டேபிள் ஸ்பூன் + 1 டேபிள் ஸ்பூன்
    தட்டுவடை - 4
    கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
    வேர்க்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
    நறுக்கிய வெங்காயம் - 1 டேபிள் ஸ்பூன்
    தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
    நறுக்கிய மாங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
    வேக வைத்த உருளைக்கிழங்கு - 1/4 கப் (துண்டுகளாக்கப்பட்டது)
    புதினா/கொத்தமல்லி சட்னி - தேவையான அளவு
    தக்காளி சாஸ் - தேவையான அளவு ]
    எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
    சாட் மசாலா - 1/4 டீஸ்பூன்
    சீரகப் பொடி - 1/4 டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிது

    செய்முறை:

    முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடலைப் பருப்பு மற்றும் வேர்க்கடலையை பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு பௌலில் பொரியைப் போட்டு, அதில் தட்டுவடையை கையால் உடைத்து சேர்த்து, அத்துடன் எலுமிச்சையைத் தவிர, மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு கிளறி விட்டு, இறுதியில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி மீண்டும் கிளறினால், சூப்பரான மும்பை ஸ்டைல் பேல் பூரி ரெடி.
    கொழுக்கட்டையில் தேங்காய் பூரணம் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று கேரட் அல்வா பூரணம் வைத்து கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கொழுக்கட்டை மாவு - 1 கப்
    தண்ணீர் - ஒன்றரை கப்
    கேரட் துருவல் - அரை கப்
    தூளாக்கிய வெல்லம் - அரை கப்
    தேங்காய் துருவல் - கால் கப்
    ஏலக்காய் தூள் - சிறிதளவு
    நெய் - சிறிதளவு
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு

    செய்முறை:

    வாணலியில் தண்ணீர் ஊற்றி அதனுடன் சிறிதளவு உப்பு, எண்ணெய் சேர்த்து கொதிக்கவிடவும். கொதிக்க தொடங்கியதும் கொழுக்கட்டை மாவை கொட்டி கட்டி பிடிக்காமல் கிளறி இறக்கவும். ஆறியதும் மாவு கலவையை நன்றாக பிசைந்து கொள்ளவும்.

    வாணலியில் நெய் ஊற்றி அது உருகியதும் கேரட் துருவலை கொட்டி வதக்கிக்கொள்ளவும்.

    அது வதங்கியதும் தேங்காய் துருவலை கொட்டி வதக்கவும்.

    அதனுடன் வெல்லம், ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும்.

    பின்னர் சிறிதளவு நெய் ஊற்றி கிளறி பூரணம் பதத்துக்கு வந்ததும் இறக்கவும்.

    மாவு கலவையை உருண்டை பிடித்து அதன் நடுப்பகுதியில் பூரணத்தை வைத்து மூடி இட்லி தட்டில் வேகவைத்து எடுக்கவும்.

    ருசியான கேரட் அல்வா ஸ்டப்ஃடு கொழுக்கட்டை தயார்.
    நாண், சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த இறால் கிரீன் மசாலா. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இறால் - கால் கிலோ
    நறுக்கிய இஞ்சி - சிறிதளவு
    பெ.வெங்காயம் - 2 (நறுக்கவும்)
    நறுக்கிய பூண்டு - 4 பல்
    பச்சை மிளகாய் - 2
    சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
    கொத்தமல்லி தூள் - கால் டீஸ்பூன்
    தேங்காய் பால் - கால் கப்
    எலுமிச்சை சாறு - சிறிதளவு
    தண்ணீர் - 2 கப்
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு
    புதினா - 1 கட்டு
    கொத்தமல்லி தழை- ஒரு கைப்பிடி

    செய்முறை:

    இறாலை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

    அதனுடன் எலுமிச்சை சாறு, உப்பு கலந்து ஊறவைத்துக்கொள்ளவும்.

    மிக்சியில் இஞ்சி, பூண்டு, புதினா, கொத்தமல்லி தழை, மிளகாய், கொத்தமல்லி தூள், சீரகத்தூள் போன்றவற்றை கொட்டி விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் வெங்காயத்தை கொட்டி பொன்னிறமாக வதக்கிக்கொள்ளவும்.

    அதனுடன் மிக்சியில் அரைத்து வைத்த கலவையை கொட்டி கிளறவும்.

    பின்னர் அடுப்பை சிறுதீயில் வைத்துவிட்டு தேங்காய் பால் ஊற்றி கொதிக்கவிடவும்.

    நன்கு கொதிக்க தொடங்கியதும் இறால் கலவையை கொட்டி உப்பு, தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.

    ஓரங்களில் எண்ணெய் பிரிந்து கிரேவி பதத்துக்கு வரும் வரை வேகவைத்துவிட்டு இறக்கி பரிமாறலாம்.

    சுவையான இறால் கிரீன் மசாலா ரெடி.
    குழந்தைகளுக்கு கேக் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் கப் கேக் என்றால் சொல்லவே வேண்டாம் குஷியாகி விடுவார்கள். இன்று வீட்டிலேயே எளிய முறையில் எக்லெஸ் சாக்கோ சிப்ஸ் கப் கேக் செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையானவை:

    மைதா மாவு -  40 கிராம்
    சர்க்கரை - 50 கிராம்
    கோகோ பவுடர் - 10 கிராம்
    பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன்
    பேக்கிங் சோடா -  கால் டீஸ்பூன்
    எண்ணெய் - 50 மில்லி
    வெனிலா எசென்ஸ் - அரை டீஸ்பூன்
    வெதுவெதுப்பான நீர் -  60 மில்லி
    சாக்கோ சிப்ஸ் - 10 கிராம்

    செய்முறை:

    அகலமான பாத்திரத்தில் மைதா மாவுடன், கோகோ பவுடர், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, சாக்கோ சிப்ஸ் சேர்த்துக் நன்றாக கலக்கவும்.

    பிறகு சர்க்கரை, எண்ணெய், வெனிலா எசென்ஸ், வெதுவெதுப்பான நீர் சேர்த்துக் கலக்கவும்.  `

    கப் கேக் லைனர்ஸ்’ஸில் கேக் கலவையை ஊற்றி 150 டிகிரி செல்‌ஷியஸுக்கு ப்ரீஹீட் செய்த அவனுள் வைத்து 20 நிமிடங்கள் வரை `பேக்’ செய்து எடுக்கவும்.

    இப்போது சூப்பரான எக்லெஸ் சாக்கோ சிப்ஸ் கப் கேக் ரெடி.
    தயிர் சாதம், சாம்பார் சாதம், தோசை, நாண், சப்பாத்தியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த கொத்தமல்லி - உருளைக்கிழங்கு வறுவல். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    உருளைக்கிழங்கு - 3,
    உப்பு - தேவையான அளவு,
    எண்ணெய் - 3 டீஸ்பூன்.

    அரைக்க...

    கொத்தமல்லி - 1/2 கப்,
    பச்சை மிளகாய் - 2,
    பூண்டு - 3.

    செய்முறை

    உருளைக்கிழங்கை நன்கு வேக வைத்து, தோல் நீக்கி, நறுக்கிக் கொள்ளவும்.

    மிக்ஸியில் அரைக்க வேண்டிய பொருட்களை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

    அரைத்த விழுதை உருளைக்கிழங்குடன் சேர்த்து கலந்து 15 நிமிடங்கள் ஊற விடவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு வறுக்கவும். சாதத்துடன் பரிமாறவும்.
    மதியம் செய்த சாதம் மீந்து விட்டால் கவலைப்படாதீங்க. அந்த சாதத்தில் சூப்பரான ஸ்நாக்ஸ் செய்யலாம். இன்று மீதமான சாதத்தில் சூப்பரான கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    அரிசி சாதம் - 1 கப்.
    உருளைக்கிழங்கு - 1
    மிக்ஸ்டு வெஜிடேபிள் (பீன்ஸ், கேரட், குடைமிளகாய்) - 1 கப் (பொடியாக நறுக்கியது).
    வெங்காயம் - 1
    இஞ்சி - 2 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 1
    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்.
    கொத்தமல்லி - சிறிது.
    உப்பு - தேவையான அளவு.
    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை.
    சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்.
    மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்.
    சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்.
    கடலை மாவு - 3 டேபிள் ஸ்பூன்.
    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.

    செய்முறை:

    உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

    வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தவிர அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து, கையால் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு தட்டில் பிசைந்து வைத்துள்ளதை கட்லெட் வடிவில் தட்டி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தட்டி வைத்துள்ள கட்லெட்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், அரிசி சாத கட்லெட்ரெடி!!!
    சேமியாவில் எப்போது உப்புமா, கிச்சடி செய்து அலுத்து விட்டதா. இன்று முட்டை, சேமியா சேர்த்து சூப்பரான பிரியாணி செய்யலாம். இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம்.
    தேவையான பொருட்கள்:

    சேமியா - 1 கப்
    நெய் - 3 டீஸ்பூன்
    பட்டை - 2
    வெங்காயம் - 1
    தக்காளி - 1
    முட்டை - 3
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லி - தேவையான அளவு

    செய்முறை:

    கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சேமியாவை நெய் விட்டு வறுத்து கொள்ள வேண்டும்.

    அதே கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, வெங்காயம், தக்காளி போட்டு நன்கு வதக்கி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி பின்பு முட்டையை உடைத்து ஊற்ற வேண்டும்.

    இதில் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவேண்டும். கொதித்த பிறகு, சேமியாவை சேர்க்க வேண்டும்.

    நன்கு வெந்தபிறகு கொத்தமல்லி தூவி இறக்கவும்.

    சுவையான சேமியா முட்டை பிரியாணிதயார்.
    ×