என் மலர்
பொது மருத்துவம்
- மனித உடலுக்கு நார்ச்சத்துக்கள் மிகவும் அவசியமான ஊட்டச்சத்துக்கள் ஆகும்.
- செரிமான அமைப்பு வழியாகத்தான் நார்ச்சத்துக்கள் ஜீரணிக்கப்படுகிறது.
மனித உடலுக்கு நார்ச்சத்துக்கள் மிகவும் அவசியமான ஊட்டச்சத்துக்கள் ஆகும். பல உணவுகளில் இருந்து இந்த நார்சத்துக்களை நம்மால் பெற முடியும். ஆனால் நமது உடலால் இந்த நார்ச்சத்துக்களை முழுமையாக உறிஞ்சவோ அல்லது ஜீரணிக்கவோ முடியாது. செரிமான அமைப்பு வழியாகத்தான் இந்த நார்ச்சத்துக்கள் ஜீரணிக்கப்படுகிறது. குடல் இயக்கங்களுக்கு ஏற்றதாக நார்ச்சத்து பார்க்கப்பட்டாலும், அதிகப்படியாக இதை எடுத்துக்கொள்வதால் நமக்கு சில பக்க விளைவுகளும் ஏற்படும். எனவே இத்தகைய நார்ச்சத்துக்களை அதிகமாக உட்கொள்வதால் வரும் பிரச்சினைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
பொதுவாக நார்ச்சத்துக்களை எடுத்துக்கொண்டால், நீரில் கரையக்கூடிய மற்றும் நீரில் கரையாத நார்ச்சத்துக்கள் என இரு வகைகள் உள்ளது. நீரில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் பக்கவாதம், இதய நோய்கள், நீரிழிவு நோய் மற்றும் கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. அமெரிக்காவில் ஒரு ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வுகளின்படி, கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் உடலில் உள்ள கொழுப்பின் அளவை கணிசமாக குறைக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் நீரில் கரையாத நார்சத்துக்கள் முறையாக உணவுடன் செரிக்கப்படுவதில்லை. இவை நேரடியாக இரைப்பை குடல் வழியாக பயணித்து மலத்தில் கலக்கிறது. இவை மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது.
நீங்கள் நார்ச்சத்துக்களை உங்கள் உணவில் சேர்க்க விரும்பினால், பருப்பு வகைகள், பழங்கள், பச்சை காய்கறிகள், தானியங்கள், விதைகள் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். அதேசமயம் நார் சத்துக்களை அதிகமாக உட்கொள்வதால், சில எதிர்மறை பக்க விளைவுகள் உண்டாக வாய்ப்புள்ளது.
அதிகப்படியாக நார்ச்சத்துக்கள் உட்கொள்வதால் சிலருக்கு மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, வாயு, செரிமான கோளாறு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.
மேலும் இவை துத்தநாகம், மெக்னீசியம், கால்சியம் போன்ற சில தாது வகைகளை உறிஞ்சுவதில் சிக்கலை உண்டாக்கலாம். எனவே இவை இரைப்பை குழாயில் சேதத்தை ஏற்படுத்தி ஊட்டச்சத்துக்கள் மற்றும் கலோரிகளை உறிஞ்சுவதில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தலாம். சில மருந்துகளின் செயல் திறனையும் இது பாதிப்பதாக சொல்லப்படுகிறது.
அதிகப்படியான நார்ச்சத்து எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க அதிகப் படியான தண்ணீர் எடுத்துக்கொள்வது நல்லது. அதிகப்படியான நார்ச்சத்து உணவுகளை எடுப்பதை தவிருங்கள். நடைப்பயிற்சி போன்ற சில மிதமான உடற்பயிற்சிகளை செய்யலாம். குறிப்பாக மருத்துவ உதவி தேவைப்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.
- நம்முடைய முன்னோர்கள் சின்ன சின்ன கை வைத்தியத்தை செய்து உடல் உபாதைகளை நிரந்தரமாக நீக்கிவிடுவார்கள்.
- மருத்துவ குணம் கொண்ட பொருட்களையே உணவிலும் அன்றாடம் சேர்த்து வந்தனர்.
தலைவலி, கை, கால் வலி, சளி, காய்ச்சல், இருமல், தும்மல் எது வந்தாலும் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆங்கில மருந்தை நாடுகின்றோம். உடல் நிலை சரியில்லாமல் போனால் மருத்துவரை பார்ப்பது தவறு ஒன்றும் கிடையாது. இருப்பினும், சாதாரண உடல் உபாதைகளுக்கு கூட செயற்கையான முறையில் மருந்தை உட்கொண்டிருந்தால் அதன் மூலம் பக்கவிளைவுகள் கட்டாயம் அதிகமாகும். நம்முடைய முன்னோர்கள் அந்த காலத்தில் சின்ன சின்ன கை வைத்தியத்தை செய்து, அடிக்கடி வரக்கூடிய சில உடல் உபாதைகளை நிரந்தரமாக நீக்கிவிடுவார்கள். அந்த வரிசையில் சின்ன சின்ன கை வைத்தியத்தை பற்றித்தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.
நம் முன்னோர்களான பெரியவர்கள் நமது வீட்டிலேயே அன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களையே நோய் குணப்படுத்தும் மருந்துகளாக பயன்படுத்தி உள்ளனர். உண்மையில் இந்த பொருட்கள் எல்லாம் நோயை குணப்படுத்தும் மருந்துகள் என்று தெரிந்தே அவற்றை சமையலில் பயன்படுத்தி வந்துள்ளனர். மருத்துவ குணம் கொண்ட பொருட்களையே உணவிலும் அன்றாடம் சேர்த்து வந்தனர். இதனாலேயே நம் பாட்டி, தாத்தாக்கள் பல ஆண்டுகாலம் நலமுடன் வாழ்ந்தனர்.
வயிற்று வலி குணமாக சிறிதளவு வெந்தயத்தை எடுத்து கொஞ்சம் நெய்யில் வறுத்து பொடி செய்து அதனை புதிதாக செய்த மோரில் கலந்து குடிக்க வயிற்று வலி முற்றிலுமாக நீங்கும்.
தலைவலி நீங்க ஐந்து துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கும், 2 லவங்கமும் சேர்த்து நன்கு அரைத்து பற்று போடும் பதத்தில் வைத்துக்கொண்டு நெற்றியில் பற்று போட்டால் தலைவலி சில மணி நேரங்களில் குணமாகும்.
நாட்டு மருந்து கடையில் இருந்து கொஞ்சம் வேப்பங்கொட்டையை வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். அதை நன்றாக இழைத்து தலையில் பத்து போட்டுக்கொண்டால் எப்பேர்ப்பட்ட தலைவலியும் சீக்கிரம் குணமடைந்து விடும்.
குழந்தைகளுக்கோ அல்லது பெரியவர்களுக்கோ நெஞ்சில் சளி சேர்ந்துகொண்டு இருமல் அதிகமாகிவிடும். இந்த நெஞ்சு சளி கரைய சிறிதளவு தேங்காய் எண்ணையில் பச்சைக் கற்பூரம் கொஞ்சம் சேர்த்து நன்கு சுடவைத்து இளம் சூட்டில் நெஞ்சில் தடவி வர நெஞ்சில் உறைந்துள்ள சளி கரையத்தொடங்கும்.
பசி எடுக்க புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சை பழம் சாறு 3 பங்கு சேர்த்து கலந்து கொஞ்சம் சர்க்கரை சேர்த்து குடித்து வந்தால் உடனடியாக பசி ஏற்படும்.
வண்டுக்கடியால் ஏற்படு தடிப்புகள் மறைய வெட்பாலை இலை, கொடி, வேர் முதலிய சேர்த்து அரைத்த விழுது ஒரு கைப்பிடி எடுத்து ½ லிட்டர் பசும்பாலில் கலந்து சாப்பிடவும். 3 நாள் காலையில் சாப்பிட கரப்பான், வண்டுக்கடியால் ஏற்பட்ட விஷம், வடு நீங்கும்.
மலை வாழைப்பழத்தை நல்லெண்ணெய்யில் சேர்த்து சாப்பிட சீதபேதி குணமாகும். அஜீரண கோளாறு இருக்கும் சமயங்களில் மிளகை வறுத்து பொடி செய்து தேனில் உட்கொண்டு வந்தால் அஜீரண கோளாறால் ஏற்படும் சீதபேதி குணமாகும்.
உடல் சூட்டினால் ஏற்படும் தொண்டை வலி குணமாக இரவில் தூங்குவதற்கு முன்னர் ஒரு ஸ்பூன் தேன், சிறிதளவு சுண்ணாம்பு இவற்றை உள்ளங்கையில் நன்றாக குழைத்தால் சூடாக இருக்கும். இந்த கலவையை அந்த சூட்டிலேயே தொண்டை பகுதியில் தடவி மறுநாள் காலையில் ஈரத்துணிகொண்டு துடைத்து எடுத்தால் உடல் சூட்டினால் ஏற்படும் தொண்டை வலி குணமாகும்.
அதிமதுரத்தை பொடியாக்கி அதை ஒரு ஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் சேர்க்க வேண்டும். அதனை நன்றாக கலந்து இரவு முழுவதும் வைத்து, மறுநாள் அரிசி கஞ்சியுடன் சேர்த்து, இந்த நீரை குடித்து வர வயிற்று புண் (அல்சர்) குணமாகும். இதனையே கஷாயமாக செய்து குடிக்க மூட்டு வலிக்கு மிகவும் சிறந்தது.
சிறு குழந்தைகள் சில சமயம் விடாமல் அழும். நமக்கு காரணம் புரியாது. அதற்கு இரண்டு வெற்றிலைகளை எடுத்து, விளக்கெண்ணெய்யை ஒரு பக்கம் தடவி, விளக்கில் லேசாக சூடு செய்து இளம்சூட்டில் குழந்தையின் வயிற்றின் மேல் போட சில நொடிகளில் அழுகை நின்று குழந்தை சிரிக்க ஆரம்பித்து விடும்.
சிறு குழந்தைகளுக்கு வசம்பை ஒரு துண்டு எடுத்து நல்லெண்ணெயில் ஊற்றி விளக்கில் காட்டி நன்கு கருக்கி அதன் பொடியை சிறிது நாக்கில் தேய்த்துவிட வயிற்று உப்புசம், வயிற்றுப் பொருமல், பேதி போன்றவை குணமாகும்.
- தொடர் வலிகள் நமக்கு அசவுகரியத்தை ஏற்படுத்துவதுடன் நம் அன்றாட வாழ்வையும் பாதிக்கிறது.
- தொடர்ச்சியாக இருக்கும் வலிகளை எப்போதும் இருப்பதுதானே என்று புறக்கணிக்கக் கூடாது.
உடம்பு வலி என்பது பொதுவாக அனைவருக்கும் வரும் ஒரு உடல் நல பிரச்சனைதான். சில சமயங்களில் உடல் வலி பின்னி எடுக்கும். அதற்கு காய்ச்சல் அல்லது அதிக அளவில் ஏதேனும் பளு தூக்கியது போன்றவை காரணமாக இருக்கலாம். ஆனால், அடிக்கடி உடல் வலி ஏற்படுகிறது அல்லது காரணமே இல்லாமல் உடல் வலி ஏற்படுகிறது என்றால், அலட்சியம் வேண்டாம். உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். ஏனென்றால், அது ஃபைப்ரோமியால்ஜியா என்னும் தசைநார் வலி என்னும் நோயாக இருக்கலாம்.
ஃபைப்ரோமியால்ஜியா என்பது சோர்வு, தூக்கம், நினைவாற்றல் மற்றும் மனநிலை பிரச்சினைகள் ஆகியவற்றுடன் பரவலான தசைக்கூட்டு வலியால் வகைப்படுத்தப்படும் ஒரு கோளாறு ஆகும். பரவலான வலி, சோர்வு, அறிவாற்றல் சிரமங்கள், ஒற்றைத்தலைவலி மற்றும் பிறவகையான தலைவலி போன்றவையாக இருக்கலாம்.
சிலருக்கும் உடல் ரீதியான காயம், தொற்று, அறுவை சிகிச்சை, குழந்தை பேறு ஆகியவற்றின் காரணமாவோ அல்லது மிக மோசமான மன நிலை பாதிப்பின் காரணமாகவோ ஏற்படக் கூடும். உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாகவும் தசைநார் வலி ஏற்படக் கூடும்.
இந்த தசை நார் நோயினால், ஆண்களை விட அதிக அளவில் பெண்கள் தான் பாதிக்கப்படுகின்றனர் என புள்ளி விபரங்கள் கூறுகின்றன. இந்த நோய் எதனால் ஏற்படுகிறது என்பதற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை என்றாலும், மரபு ரீதியாக இந்த நோய் ஏற்பட்டிருந்தால், அவர்களுக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
உடம்பு வலி என்பது பொதுவாக அனைவருக்கும் ஏற்படும். ஆனால், அடிக்கடி உடல் வலி ஏற்படுகிறது அல்லது காரணமே இல்லாமல் உடல் வலி ஏற்படுகிறது என்றால் அலட்சியம் செய்யாமல் உடனடியாக டாக்டரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.
தொடர் வலிகள் நமக்கு அசவுகரியத்தை ஏற்படுத்துவதுடன் நம் அன்றாட வாழ்வையும் பாதிக்கிறது. சில நேரங்களில் அவை பெரிய நோய்களின் அறிகுறியாகவும் இருக்கலாம். முடக்கு வாதம், கீல்வாதம், ஃபைப்ரோமியால்ஜியா, வயிற்றுப் புண்கள், புற்றுநோய், மல்டிபிள் ஸ்களீரோசிஸ், எய்ட்ஸ் மற்றும் பித்தப்பை நோய் போன்ற நோய்களுக்கான வலி சாதாரண வலி போன்றுதான் இருக்கும், ஆனால் சரியான நேரத்தில் கவனிக்காமல் விட்டால் பெரும் ஆபத்திற்கு வழிவகுக்கலாம்.
நெஞ்சு வலி: உயிருக்கு ஆபத்தான அறிகுறியாகும். இதனை எளிதாக எடுத்துக்கொண்டு கண்டிப்பாக புறக்கணிக்கக்கூடாது. மூட்டு வலி: இது காயம், வீக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் ஏற்படலாம். வலியின் அடிப்படைக் காரணத்தைக் கண்டறியவும்.
தசை வலி: இது முக்கியமாக வைட்டமின் டி குறைபாடு காரணமாக ஏற்படுகிறது, மேலும் நகர்ப்புறங்களில், இது உடலின் பல்வேறு பகுதிகளில் தசை வலிகளை ஏற்படுத்தும். வைட்டமின் டி போதுமான உடலுக்கு கிடைத்தால் இந்த சிக்கலைத் தீர்க்க முடியும்.
தலைவலி: அடிப்படையில் தலைவலியின் வகைகள் மற்றும் தீவிரத்தன்மை அடிப்படைக் காரணங்களைத் தீர்மானிக்கிறது. அடிக்கடி ஏற்படும் தலைவலி ஒற்றைத் தலைவலியின் அறிகுறியாக இருக்கலாம், அதே நேரத்தில் தூக்கமின்மை, மன அழுத்தம், ஆகியவையும் தலைவலிக்கு வழிவகுக்கும். மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கும், இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கும் தலைவலி வரலாம்.
வயிற்று வலி: இது இரைப்பை குடல் கோளாறுகள், சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் அல்லது இனப்பெருக்க அமைப்பு பிரச்சினைகள் போன்ற பல காரணிகளால் ஏற்படலாம். வயிற்று வலி அஜீரணம் முதல் அல்சர் வரை எதனாலும் ஏற்படலாம், மேலும் நெஞ்சு வலி மாரடைப்பின் அறிகுறியாக கூட இருக்கலாம்.
முதுகு வலி: 5 மணி நேரத்திற்கும் மேலாக ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது, மரப்புத்தன்மையை ஏற்படுத்தலாம். பல மணிநேரம் உட்கார வேண்டிய வேலையில் இருந்தால், உங்கள் தோள்பட்டை பகுதியும் பாதிக்கப்படலாம். ஊட்டச்சத்து மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ளுதல் சிறந்தது. இந்த வலி தொடர்ந்தால் கீல்வாதம் மற்றும் பிற எலும்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
கால் வலி: தசை இறுக்கம் அல்லது ஆழமான நரம்பு இரத்த உறைவு போன்ற பல காரணங்களால் கால் வலி ஏற்படலாம். இருப்பினும், கால் வலி கடுமையாக இருந்தால், திடீரென்று வந்தால், அல்லது வீக்கம் அல்லது சிவத்தல் போன்ற பிற அறிகுறிகளுடன் சேர்ந்து இருந்தால், இரத்த உறைவு அல்லது நரம்பு சேதம் போன்ற மிகவும் தீவிரமான நிலையின் அறிகுறியாக இருக்கலாம்.
தொடர்ச்சியாக இருக்கும் வலிகளை எப்போதும் இருப்பதுதானே என்று புறக்கணிக்கக் கூடாது. மன அழுத்தம் மற்றும் பரபரப்பான வாழ்க்கை முறை என்று என்ன காரணம் கூறினாலும், பிற்காலத்தில் அது ஒரு ஆபத்தான பிரச்சனையாக மாறும்போது வருந்தப்போவது நாம்தான். தலைவலி தொடர்ச்சியாக இருந்தால் மூளை கட்டியாக இருக்க வாய்ப்புள்ளது, நெஞ்சுவலி தொடர்ந்து இருந்தால் இதய நோய்க்கு வாய்ப்புள்ளது, வயிற்று வலி இரைப்பை குடல் கோளாறுகளாக இருக்கலாம். எனவே எதையும் மருத்துவரிடம் ஆலோசித்துவிடுவது நல்லது. அன்றாட வாழ்வில் பொதுவாக வரும் வலிகளையும், அதன்பின் இருக்கும் தீவிரத்தன்மையையும் தெரிந்துகொள்ளுங்கள். விழிப்புணர்வுடன் செயல்படுங்கள்.
- ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களுக்கு ஃபைப்ரோமியால்ஜியா வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
- ஃபைப்ரோமியால்ஜியாவுக்கு எந்த சிகிச்சையும் இல்லை என்றாலும், பல்வேறு மருந்துகள் அறிகுறிகளை கட்டுப்படுத்த உதவும்.
சமீப ஆண்டுகளில் பல்வேறு நோய்களுக்கான சிகிச்சைகளை அடைவதில் மருத்துவ விஞ்ஞானம் வெகுவாக முன்னேறி வருகிறது. இருப்பினும், ஒரு முழுமையான சிகிச்சையுடன் ஒரு நோய் மற்றும் மனித உடலியல் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்க முடியாத சில நிபந்தனைகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் ஃபைப்ரோமியால்ஜியா.
ஃபைப்ரோமியால்ஜியா போன்ற ஒரு நோய் பெரும்பாலும் தசைக்கூட்டு (எலும்புக்கூடு, மூட்டுகள், தசைநாண்கள், தசைகள், தசைநார்கள், குருத்தெலும்பு மற்றும் பிற இணைப்பு திசுக்களை உள்ளடக்கிய ஒரு ஆதரவு அமைப்பு) மற்றும் உடலின் நரம்பு மண்டலங்களை பாதிக்கிறது. இது பல்வேறு அறிகுறிகளையும் அடையாளங்களையும் ஏற்படுத்துகிறது. ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களுக்கு ஃபைப்ரோமியால்ஜியா வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஃபைப்ரோமியால்ஜியாவால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோனோர் டெம்போரோமாண்டிபுலர் மூட்டு கோளாறுகள், பதற்றம், தலைவலி, மனச்சோர்வு மற்றும் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி ஆகியவற்றைக் கொண்டுள்ளனர்.
ஃபைப்ரோமியால்ஜியாவுக்கு எந்த சிகிச்சையும் இல்லை என்றாலும், பல்வேறு மருந்துகள் அறிகுறிகளைக் கட்டுப்படுத்த உதவும். தளர்வு, மன அழுத்தத்தைக் குறைக்கும் நடவடிக்கைகள் மற்றும் உடற்பயிற்சி ஆகியவை இதற்கு உதவக்கூடும்.
ஃபைப்ரோமியால்ஜியா என்பது தசைக்கூட்டு மற்றும் நரம்பு மண்டலங்களை உள்ளடக்கிய ஒரு நாள்பட்ட நோய் சிண்ட்ரோம் ஆகும், இது கடுமையான வலி உணர்வு மற்றும் மன உளைச்சல் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது. ஃபைப்ரோமியால்ஜியாவின் அறிகுறிகள் கீல்வாதத்தின் அறிகுறிகளைப் பிரதிபலிக்கும். ஆனால் மூட்டு அரிப்பு அல்லது சேதத்தை உள்ளடக்காது. ஃபைப்ரோமியால்ஜியா 18 வயதுக்கு மேற்பட்டவர்களை பாதிக்கிறது மற்றும் ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களில் மிகவும் பொதுவானது.
அறிகுறிகள்
உடல் முழுவதும் கடுமையான வலி மற்றும் மென்மை
சோர்வு
நினைவாற்றல் குறைபாடு மற்றும் செறிவு குறைதல் (ஃபைப்ரோ மூடுபனி)
கடுமையான பதட்டம்
மனச்சோர்வு
தூங்குவதில் சிரமம்
விரல் நுனிகள், பாதங்கள், கைகள் போன்றவற்றில் உணர்வின்மை மற்றும் கூச்ச உணர்வு.
தலைவலி
எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி
வலிமிகுந்த மாதவிடாய் அல்லது வயிற்றுப் பிடிப்புகள்
சிறுநீர் கழிப்பதில் சிரமம்
பார்வை பிரச்சினைகள்
குமட்டல்/வாந்தி
தசையில் மென்மையான புள்ளிகள் மற்றும் இழுப்புகள்
ஃபைப்ரோமியால்ஜியா ஏற்படுவதற்கான காரணம் ஃபைப்ரோமியால்ஜியாவின் காரணங்கள் இன்னும் அறியப்படவில்லை. இருப்பினும், ஒரு நபரின் மூளை மற்றும் முதுகுத் தண்டு உடலின் பல்வேறு தொலைதூர நரம்புகளில் இருந்து வரும் வலி சமிக்ஞைகளை செயல்படுத்த முடியாது என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
- சிற்றூர்களில்கூட `பிசியோதெரபி மையங்கள்’ முளைத்துவிட்டன.
- குறுகிய மற்றும் நீண்ட காலத்திற்கு வலியை குறைக்கிறது.
பிசியோதெரபி என்றும் அழைக்கப்படும் பிசிக்கல் தெரபி என்பது உடல் சார்ந்த நோய் அல்லது மூட்டு வலி, தசை வலி, பக்கவாதம், சிதைவு போன்ற நிலைமைகள் உள்ள பெரும்பாலான மக்களுக்கு சிகிச்சையின் ஒரு முக்கிய பகுதியாகும். இது பிசியோதெரபிஸ்ட்டால் நடத்தப்படுகிறது. வீட்டிலும் வேலையிலும் சுறுசுறுப்பான மற்றும் சுதந்திரமான வாழ்க்கையை மீண்டும் தொடங்க அல்லது பராமரிக்க உதவுகிறது.
சிற்றூர்களில்கூட `பிசியோதெரபி மையங்கள்' முளைத்துவிட்டன. சரி, அது என்ன பிசியோதெரபி? எலும்பு மூட்டு, தசைகளின் இயக்கம் பாதிக்கப்பட்டால், அவற்றைச் சரிசெய்யவும், பராமரிக்கவும், மேம்படுத்தவும் உதவும் சிகிச்சை. ஊசி, மருந்துகளை பயன்படுத்தாமல் உடற்பயிற்சி, தெரபியூடிக் மசாஜ், வெப்ப சிகிச்சை, மின் சிகிச்சை ஆகியவற்றின் மூலம் பிரச்னைகளுக்கு தீர்வுகாணும் ஒரு வழிமுறை.உடலில் அடிபட்டால் காயத்தின் தீவிரத்தைக் குறைக்கவும், பாதிப்பிலிருந்து மீளவும் இது உதவும்.
உடற்பயிற்சி சிகிச்சை
பிசியோதெரபிஸ்டுகள் நோயாளிகள் இயக்கம், நெகிழ்வுத்தன்மை மற்றும் வலிமையை மேம்படுத்துவதற்கு உடற்பயிற்சியை பயன்படுத்துகின்றனர், இது குறுகிய மற்றும் நீண்ட காலத்திற்கு வலியைக் குறைக்கிறது.
பிசியோதெரபிஸ்டுகள் ஒவ்வொரு நோயாளியும் சரியான உடற்பயிற்சி திட்டத்தைப் பெறுவதை உறுதிசெய்ய பயிற்சி பெற்றுள்ளனர், மேலும் உங்கள் சிகிச்சையில் இருந்து நீங்கள் அதிக பலன்களை பெறுவதை உறுதிசெய்யும் திட்டத்தை கற்றுக்கொள்ளவும், செயல்படுத்தவும் அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.
மூட்டுகள் மற்றும் தசைகளுக்கு சிகிச்சையளிப்பதன் மூலம் வலியைக் குறைக்கவும், உடலை சுதந்திரமாக நகர்த்தவும் உதவும். பிசியோதெரபிஸ்டுகள் நோயாளிகளுக்கு இந்த நுட்பங்களை உடற்பயிற்சி சிகிச்சை போன்ற மற்ற சிகிச்சை அணுகுமுறைகளுடன் பயன்படுத்தி நோயாளிகள் விரைவாக குணமடைய உதவலாம்.
அக்குபஞ்சர் மற்றும் உலர் ஊசி
பல பிசியோதெரபிஸ்டுகள் வலி நிவாரணம் மற்றும் தசை செயல்பாட்டிற்கு உதவுவதற்காக குத்தூசி மருத்துவம் மற்றும் உலர் ஊசி துறையில் கூடுதல் பயிற்சி பெற்றுள்ளனர்.
மின் சிகிச்சை:
எலக்ட்ரோதெரபி சிகிச்சை, அல்ட்ராசவுண்ட், (இன்டர்ஃபெரன்ஷியல் தெரபி), இழுவை, அகச்சிவப்பு, பாரஃபின் மெழுகு குளியல் சிகிச்சை, மின் தூண்டுதல், குறுகிய வேவ் டயதர்மி, சிபிஎம், லேசர் ஆகியவை எலக்ட்ரோ மோடலிட்டிகள் பல்வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன.
வயோதிகம் மற்றும் அதிக இயக்கம் காரணமாக எலும்பு, மூட்டுகள் தேய்மானம் அடையும். அதனால் ஏற்படும் வலியைப் போக்கவும், தேய்மானத்தைச் சரிசெய்யவும் பிசியோதெரபி அவசியம். இந்த சிகிச்சையை தொடர்ந்து அளித்தால்தான் பாதிக்கப்பட்ட மூட்டுகளை மீண்டும் செயல்படவைக்க முடியும்.
பிசியோதெரபியை எப்போது நிறுத்த வேண்டும்?
நமக்கு ஏற்படும் சில பிரச்னைகளுக்கு சில நாட்கள் மட்டும் கிளினிக் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். பிறகு, வீட்டில் பயிற்சிகளை செய்தாலே போதும். சில பிரச்னைகளுக்கு நீண்டகாலம் சிகிச்சை எடுக்கவேண்டி இருக்கும். அது முடிந்ததும், பிசியோதெரபிஸ்ட்டின் ஆலோசனைப்படி சிகிச்சையை நிறுத்திக்கொள்ளலாம்.
- பிசியோதெரபி பல்வேறு துணை சிறப்புகளின் வடிவத்தில் உருவாகியுள்ளது.
- பாதிக்கப்பட்ட பகுதிகளை வலுப்படுத்த உதவுகிறது.
பிசியோதெரபி என்பது ஒரு சுகாதார பாதுகாப்பு தொழிலாகும், இது மசாஜ், வெப்ப சிகிச்சை, உடற்பயிற்சி, மின் சிகிச்சை, நோயாளி கல்வி மற்றும் காயம், நோய் அல்லது குறைபாடு சிகிச்சைக்கான ஆலோசனை போன்ற பல்வேறு சிகிச்சை முறைகளை உள்ளடக்கியது.
பிசியோதெரபி பல்வேறு துணை சிறப்புகளின் வடிவத்தில் உருவாகியுள்ளது. பிசியோதெரபி பல்வேறு நிலைமைகளை மிகவும் பயனுள்ள மற்றும் பொருத்தமான வழியில் சமாளிக்க உதவுகிறது. பல்வேறு துணை சிறப்புகள் மற்றும் அவற்றின் பயன்பாடுகளின் பட்டியல்:
நரம்பியல் பிசியோதெரபி - நரம்பியல் நிலைமைகள் தீவிர தசை பலவீனம், சமநிலை மற்றும் ஒருங்கிணைப்பு இழப்பு, தசை பிடிப்பு, நடுக்கம், செயல்பாடு இழப்பு மற்றும் உணர்வு குறைதல். நரம்பியல் பிசியோதெரபி என்பது பக்கவாதம், முதுகுத்தண்டு காயங்கள், அதிர்ச்சிகரமான மூளை காயங்கள், மல்டிபிள் ஸ்களீரோசிஸ், சியாட்டிகா, அனியூரிசம் மற்றும் பார்கின்சன் நோய் போன்ற நரம்பு மற்றும் நரம்புத்தசை அமைப்பில் இருந்து உருவாகும் இயக்கம் மற்றும் செயல்பாட்டு கோளாறுகளுக்கு சிகிச்சையளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
எலும்பியல்/ தசைக்கூட்டு பிசியோதெரபி - தசைகள், தசைநார்கள், எலும்புகள், மூட்டுகள் மற்றும் தசைநாண்களை சரிசெய்வது உள்ளிட்ட மனித தசைக்கூட்டு அமைப்பு தொடர்பான குறைபாடுகளை சரிசெய்தல் மற்றும் நோய்களுக்கு சிகிச்சையளிப்பது. இதன் முக்கிய நோக்கம் வலியை குறைப்பது மற்றும் எலும்பு காயத்தை சரிசெய்வதாகும்.
கார்டியோபுல்மோனரி பிசியோதெரபி - இதயத்தடுப்பு மற்றும் நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய் போன்ற இதய நுரையீரல் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இந்த துணை சிறப்பு சிகிச்சை அளிக்கிறது. பிசியோதெரபிஸ்டுகள் இருதய மறுவாழ்வு மையங்களை நடத்துகிறார்கள் மற்றும் நோயாளிகளுக்கு அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கை தரத்தை மேம்படுத்த உதவும் சில வகையான பயிற்சிகள் மற்றும் பயிற்சி நுட்பங்களை பற்றி அவர்களுக்கு கற்பிக்கிறார்கள்.
குழந்தைகளுக்கான பிசியோதெரபி - குழந்தைகளுக்கான பிசியோதெரபிஸ்ட்கள் கடுமையான காயங்கள், பிறக்கும் போது இருக்கும் குறைபாடுகள், உடல் வளர்ச்சியில் தாமதம், அல்லது பெருமூளை வாதம் போன்ற சில மரபணு குறைபாடுகளை மேம்படுத்த உதவுகிறார்கள். பிசியோதெரபிஸ்டுகள் குழந்தைகளில் பல்வேறு சிகிச்சை பயிற்சிகளை பயன்படுத்துகின்றனர். இது பாதிக்கப்பட்ட பகுதிகளை வலுப்படுத்த உதவுகிறது. அதன் மூலம் அந்த பகுதிகளின் துல்லியமான மற்றும் ஒட்டுமொத்த இயக்கத்தை மேம்படுத்துகிறது.
முதியோர் பிசியோதெரபி - கீல்வாதம் (மூட்டுகளில் வலி), ஆஸ்டியோபோரோசிஸ் (உடையக்கூடிய மற்றும் உடையக்கூடிய எலும்புகள்) போன்ற வயது தொடர்பான சில மருத்துவ நிலைகளை கையாள்கிறது. முதியோர் பிசியோதெரபிஸ்டுகள் முதியோர்களுக்கு வலியை அதிகரிக்கக்கூடிய சில அசைவுகளை கட்டுப்படுத்தி, நோயாளிகளுக்கு நடை உதவியாளர்களை வழங்கி ஒட்டுமொத்த இயக்கத்தை மேம்படுத்தவும், பல்வேறு நுட்பங்கள் மற்றும் பயிற்சிகளை பயன்படுத்தி வலியை குறைக்கவும் வழிகாட்டுகிறார்கள்.
- கொழுப்பே இல்லாத புரத உணவுகள் தான் லீன் புரோட்டின் என்று அழைக்கப்படுகின்றன.
- இந்த ஊட்டச்சத்துக்கள் பற்றாக்குறை ஏற்படும்போது தான் உடலில் பல்வேறு நோய்கள் உண்டாகின்றன.
லீன் புரோட்டீன் உணவுகளை டயட்டில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலின் தசை வளர்ச்சியில் எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாமல் தசையின் வளர்ச்சியை மேம்படுத்துவதோடு உடலில் தேங்கியிருக்கும் தேவையற்ற கெட்ட கொழுப்பை எரிக்கவும் முடியும்.
புரத உணவுகள் எல்லாவற்றிலும் குறிப்பிட்ட அளவில் கொழுப்பும் இருக்கும். ஆனால் கொழுப்பே இல்லாத புரத உணவுகள் தான் லீன் புரோட்டின் (மெலிந்த உணவுகள்) என்று அழைக்கப்படுகின்றன. அதோடு மெலிந்த புரத உணவுகள் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி கொழுப்பை வேகமாக எரிக்கின்றன.
நம்முடைய உடலின் உள்ளுறுப்புகள் செயல்பாட்டுக்கும் செல் வளர்ச்சியை மேம்படுத்தவும் உடலுக்கு சீரான ஊட்டச்சத்துக்களும் தாதுக்களும் தேவை.
இந்த ஊட்டச்சத்துக்கள் பற்றாக்குறை ஏற்படும்போது தான் உடலில் பல்வேறு நோய்கள் உண்டாகின்றன. அத்தகைய சிக்கலை சரிசெய்யும் வேலையை தான் இந்த லீன் புரோட்டீன் செய்கிறது. லீன் புரோட்டீன் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு உடலில் உள்ள கொழுப்பையும் குறைக்க உதவி செய்யும்.
லீன் புரோட்டீன் உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் உடலின் உள்ளுறுப்பு கொழுப்புகளை கரைத்து வெளியேற்றும் வேலையை செய்யும். பொதுவாக உள்ளுறுப்பு கொழுப்புகள் அவ்வளவு எளிதாகக் கரையாது. அதை கரைக்க இந்த மெலிந்த புரதங்களை டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
ஆனால் அளவுக்கு அதிகமாக எடுத்துக்கெண்டால் டைப் 2 நீரிழிவு, இதய நோய், புற்றுநோய் போன்ற உடல்நல சிக்கல்களை ஏற்படுத்தும். அதனால் அளவோடு எடுத்துக்கொண்டால் உடல் எடையையும் குறைக்கலாம். ஆரோக்கியமாகவும் வாழலாம்.
பயறு வகைகள்
பருப்பு மற்றும் பயறு வகைகளில் அதிக அளவில் புரதங்கள் இருக்கின்றன. 100 கிராம் பயறுகளில் கிட்டதட்ட 24 கிராம் அளவுக்கு புரதச்சத்துக்கள் கிடைக்கும். அதேசமயம் அவற்றில் கொழுப்பு 0 சதவீதம். அதனால் கொழுப்பு அதிகமுள்ள புரதங்களான இறைச்சியை எடுத்துக்கொள்வதை விட பயறு வகைகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
காய்கறி சாலட் போன்றவற்றில் வேகவைத்த அல்லது முளைகட்டிய பயறு வகைகளை சேர்த்துக் கொள்ளலாம். அது சுவையையும் அதிகரிக்கும். வைட்டமின் தேவையையும் நிறைவு செய்யும்.
சோயா பீன்ஸ், கிட்னி பீன்ஸ், ராஜ்மா போன்ற பீன்ஸ் வகைகளில் அதிக அளவு மெலிந்த புரதங்கள் இருக்கின்றன. 100 கிராம் பீன்ஸ் வகைகளில் இருந்து 21 கிராம் அளவு புரதம் கிடைக்கும். ஆனால் இவற்றில் கொழுப்பு கிடையாது. ஜீரண ஆற்றலை மேம்படுத்த காய்கறிகளுடன் சேர்த்து வேகவைத்த பீன்சை சேர்த்து சாலட்டாக எடுத்துக் கொள்ளலாம். இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி உடல் எடையையும் குறைக்க உதவி செய்யும்.
கொண்டைக்கடலை நிறைய ஊட்டச்சத்துக்களையும் ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டிருக்கிறது. அதில் மிக முக்கியமாக அதிக அளவு புரதங்களைக் கொண்டிருக்கிறது. 100 கிராம் கொண்டைக்கடலையில் இருந்து 20 கிராம் அளவு புரதங்களை பெற முடியும். இதை உணவில் சூப், சுண்டல், சாலட் என பல வழிகளில் இந்த கொண்டைக்கடலையை உணவில் சேர்த்து்க் கொள்ளலாம்.
முந்திரி பருப்பை சூப்பர் ஃபுட்ஸ் என்று சொல்லுவோம். முந்திரியில் ஊட்டச்சத்துக்கள் மிக அதிக அளவில் கொண்டது. குறிப்பாக லீன் புரதங்கள் முந்திரியில் அதிகம். 100 கிராம் முந்திரியில் 25 கிராம் அளவு புரதங்கள் கிடைக்கும். ஆனால் இதை அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அளவோடு தான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இதில் குறைந்த அளவில் எல்டிஎல் கொலஸ்டிராலும் இருக்கிறது.
அவகேடோவில் 100 கிராமில் இருந்து வெறும் 2 கிராம் அளவு மட்டுமே புரதங்கள் கிடைக்கின்றது. ஆனால் இந்த அவகேடோவில் நிறைய கொழுப்பு அமிலங்களும் நார்ச்சத்துக்களும் நிறைந்திருக்கின்றன. தினசரி உணவில் அவகேடோ பழத்தை சாப்பிட்டு வருவதன் மூலம் போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதோடு உடல் எடையைக் குறைக்கவும் உதவி செய்யும்.
லீன் புரோட்டீன்களை உங்களுடைய டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பினால் அதற்கு முட்டை ஒரு பெஸ்ட் சாய்ஸ். ஒரு வேகவைத்த முழு முட்டையில் 6 கிராம் அளவு புரதங்களும் 70 கலோரிகளும் இருக்கின்றன. அதில் பெரும்பகுதி புரதம் முட்டையின் வெள்ளைப் பகுதியி்ல இருந்து தான் கிடைக்கிறது. கொலஸ்டிரால் பிரச்சினை உள்ளவர்கள் மஞ்சள் கருவை தவிர்த்துவிடலாம். ஆனால் சிறப்பான புரதங்கள் நிறைந்த காலை உணவிற்கு முட்டையைத் தேர்வு செய்யுங்கள். எடையும் குறையும். ஊட்டச்சத்தும் கிடைக்கும்.
வால்நட்டில் புரதங்கள் அதிகம். அதோடு ஊட்டச்சத்து மதிப்புகளும் அதிகமாக இருக்கின்றன. புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு உடலுக்கு கிடைக்க வால்நட் மிகச்சிறப்பாக உதவி செய்யும். இதனால் ஆரோக்கியமான முறையில் எடையையும் குறைக்கலாம். 100 கிராம் அளவு வால்நட்டில் 15 கிராம் அளவு புரதங்கள் நிறைந்திருக்கிறது. இது ஜீரண ஆற்றலை மேம்படுத்தி குடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது.
100 கிராம் அளவு சோயா மாவில் இருந்து மட்டும் கிட்டதட்ட 35 கிராம் அளவுக்கு மெலிந்த புரதங்களும் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்களும் அதிகப்படியான நார்ச்சத்துக்களும் நிறைந்திருக்கின்றன. அதனால் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் பல வழிகளில் தங்களுடைய டயட்டில் சோயாவை சேர்த்துக் கொள்ள முடியும். சோயா எண்ணெய், சோயா பீன்ஸ் சுண்டல், டோஃபு, சோயா சங்க் மசாலா, சோயா சாலட் என தினமும் வெவ்வேறு வகைகளில் சோயாவை எடுத்துக் கொள்ளலாம்.
பொதுவாக விதைகளை நாம் சூப்பர் ஃபுட்ஸ் என்று சொல்லுவோம். அதில் முதன்மையானது இந்த பூசணி விதை. பூசணி விதையில் 100 கிராம் உலர்ந்த விதையில் 24 கிராம் அளவுக்கு புரதங்கள் இருக்கின்றன. இவற்றிலுள்ள ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் சரும செல்கள் சேதமடையாமல் பார்த்துக் கொள்ளும்.
- ஹீமோகுளோபின் செயல்பாட்டிற்கு இரும்புச்சத்து மிகவும் முக்கியம்.
- இரும்புச்சத்து குறைபாட்டால் உடலில் ஹீமோகுளோபின் அளவுகள் குறையும்.
நம் உடல் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு தேவைப்படும் ஒரு அத்தியாவசியமான மினரல் இரும்பு சத்து ஆகும். முக்கியமாக ரத்த உற்பத்திக்கு உடலுக்குத் தேவையான ஒரு முக்கியமான சத்து. இந்த இரும்புச்சத்தை பயன்படுத்தி தான் நம் உடல் நுரையீரலில் இருந்து உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஆக்சிஜனை ஹீமோகுளோபின் எடுத்துச் செல்லும்.
மேலும் தசைகளுக்கு ஆக்சிஜனை வழங்கும் புரதமான மயோகுளோபினுக்கும் போதுமான இரும்பு சத்து தேவைப்படுகிறது. இரும்பு சத்து குறைபாடு காரணமாக நம் உடல் ஆரோக்கியமான சிவப்பு ரத்த அணுக்களின் குறைவான எண்ணிக்கையால் பாதிக்கப்படலாம்.
மற்றவர்ளுடன் ஒப்பிடும் போது பெண்கள், அடிக்கடி ரத்த தானம் செய்பவர்கள், குழந்தைகள், சைவ உணவை மட்டுமே சாப்பிடுபவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஹீமோகுளோபின் எனும் புரவிதமானது உடலின் உள் உறுப்புகளுக்கு ரத்தத்தை கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஹீமோகுளோபின் செயல்பாட்டிற்கு இரும்புச்சத்து மிகவும் முக்கியம். ரத்த சோகை அதாவது இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும் பொழுது உடலில் ஹீமோகுளோபின் அளவுகள் குறையலாம்.
இதனால் சுவாசிப்பதில் சிரமம், சோர்வு, தலைவலி, மார்பு வலி, சீரற்ற இதயத்துடிப்பு, மயக்கம் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி போன்ற பல அறிகுறிகளை உணரலாம்.
இரும்புச்சத்து குறைபாட்டின் இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள். உணவில் ஒரு சில மாற்றங்களை செய்வதன் மூலம் இதை சரி செய்ய முடியும்.
உலர்ந்த அத்திப்பழம்
இது உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க செய்கிறது. இன்றைய வாழ்க்கை சூழலில் பெரும்பாலான பெண்கள் ரத்த சோகையால் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் ரத்த பற்றாக்குறையை பூர்த்தி செய்ய காலையில் இரண்டு உலர்ந்த அத்திப்பழங்களை சாப்பிடலாம். மேலும் இதில் உள்ள கால்சியம் மற்றும் நார்ச்சத்து எலும்புகள் மற்றும் செரிமானத்திற்கு நன்மை தருகின்றன.
பேரிச்சம்பழம்
ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் பேரிச்சம்பழங்களை தங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் இதில் உள்ள இரும்புச்சத்து வைட்டமின்கள் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகின்றன. சிறந்த பலன்களை பெற காலையில் எழுந்தவுடன், வெறும் வயிற்றில் பேரிச்சம் பழங்களை சாப்பிடவும்.
உலர் திராட்சை மற்றும் பாதாம் பருப்பு
உலர் திராட்சை மற்றும் பாதாம் பருப்பில் இரும்பு சத்து அதிக அளவில் உள்ளது. பாதாமில் கால்சியம், மெக்னீசியம் போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன. இரும்புச்சத்து குறைபாட்டை போக்க பாதாம் மற்றும் உலர் திராட்சையை இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.
சாலியா விதைகள்
இதில் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் ஆசிட் நிறைந்துள்ளது. சாலியா விதைகளை சாப்பிடுவதால் ஹீமோகுளோபின் அளவுகள் அதிகரிப்பதோடு மட்டுமின்றி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் வலுப்பெறும்.
- பார்ஸ்லியில் இருக்கும் சத்துக்கள் எலும்புகளின் வலிமையை அதிகரிக்கிறது.
- சமையலில் சேர்க்கப்படும் சில மூலிகைகள், உடல் ஆரோக்கியத்துக்கும் நன்மை அளிப்பவையாக இருக்கின்றன.
சமையலில் உணவுக்கு சுவை கூட்டுவதற்காகவும், நிறத்துக்காகவும், வாசனைக்காகவும் சேர்க்கப்படும் சில மூலிகைகள், உடல் ஆரோக்கியத்துக்கும் நன்மை அளிப்பவையாக இருக்கின்றன. அவற்றைப் பற்றிய தொகுப்பு இங்கே…
பார்ஸ்லி: பார்ஸ்லி தோற்றத்தில் கொத்தமல்லி போன்று இருக்கும். இதன் இலை, விதை, வேர் என அனைத்தும் உணவுக்கு சுவை கூட்டுவதற்காக உபயோகப்படுத்தப்படுகிறது. பார்ஸ்லி விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய், அழகு சாதனப் பொருட்கள், சோப், ஷாம்பு, வாசனைத் திரவியங்கள் தயாரிப்பில் பயன்படுகிறது. இதில், ஆன்டி-ஆக்ஸிடண்டுகள், கரோட்டினாய்டுகள், நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. பார்ஸ்லியில் இருக்கும் சத்துக்கள் எலும்புகளின் வலிமையை அதிகரிக்கிறது. உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்துகிறது. செரிமானத்தை சீராக்குகிறது. சிறுநீர் உற்பத்தியை பெருக்குகிறது. மேலும் ஆயுர்வேத மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது.
பிரிஞ்சி இலை: பிரிஞ்சி இலை எனப்படும் பிரியாணி இலையை, பச்சையாக எடுத்து தேநீர் தயாரித்து பருகி வரலாம். இதனால் ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும். சர்க்கரை நோயாளிகளுக்கு பிரிஞ்சி இலை மிகவும் பயனுள்ளது. இது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது. இதில் ஆன்டி ஆக்ஸிடண்டுகள், வைட்டமின் ஏ, சி, இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன.
லெமன் கிராஸ்: லெமன் கிராசில் போலிக் அமிலம், பொட்டாசியம், தாமிரம், தயாமின், இரும்புச்சத்து, துத்தநாகம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதைக்கொண்டு தேநீர் தயாரித்துக் குடிக்கலாம். இதனால், உயர் ரத்த அழுத்தம் குறையும். புற்றுநோய் செல்கள் அழியும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். வயிற்றுக் கோளாறுகள் நீங்கும். கல்லீரல் சுத்தமாகும். பூஞ்சைத் தொற்று குறையும். இந்த புல்லில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்யைத் தோல் பாதிப்புகளுக்குத் தடவலாம். பொடுகு பிரச்சினை இருப்பவர்கள் லெமன் கிராஸ் எண்ணெய்யை தினமும் தடவி வந்தால் நாளடைவில் பொடுகுத் தொல்லை குறைவதுடன், முடி வளர்ச்சி அதிகரிக்கும். இந்த எண்ணெய்யில் விளக்கேற்றும்போது, கொசு தொல்லை நீங்கும்.
ஓரிகானோ: இது ஒரு சுவையூட்டி. இந்த மூலிகையைப் பசுமையாக மட்டுமின்றி, காய்ந்த நிலையிலும் பயன்படுத்தலாம். ஓரிகானோவை உணவில் சேர்த்துவந்தால் இருமல், பதற்றம், தலைவலி, ஒழுங்கற்ற மாதவிடாய், பல் வலி ஆகியவை நீங்கும். வயிறு மற்றும் சிறுநீரக பிரச்சினைகள் தீரும்.
ரோஸ்மேரி: புதினா குடும்பத்தைச் சேர்ந்த ரோஸ்மேரி, வாசனை மூலிகைகளில் ஒன்று. இதை தேநீராகத் தயாரித்துக் குடிக்கும்போது மனச்சோர்வு நீங்கி, புத்துணர்வு கிடைக்கும். தூக்கமின்மை பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும். இதில், வைட்டமின் பி6 நிறைந்துள்ளது. இதனால் நினைவாற்றல் மேம்படும். தசை வலி நீங்கும். குடலில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் அதிகரிக்கும். மூளையின் உணர்ச்சிகள் சமநிலை அடையும்.
- பெண்களுக்கு (நீரிழிவு உள்ள) ஆண்களை விட அதிகமாக இதயநோய் வரும்
- இதய நோய் வராமல் தடுக்க நீரிழிவு நோயாளிகள் கீழ்கண்டவற்றை பின்பற்றலாம்
நீரிழிவு நோயாளிகள் தங்கள் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கா விட்டால் அது இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தி மாரடைப்பு (ஹார்ட் அட்டாக்) மற்றும் இதயத்தின் பம்ப் செய்யும் திறனை குறைத்து இதய செயலிழப்பையும் (ஹார்ட் பெயிலியர்) ஏற்படுத்துகிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கு இதய பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு நீரிழிவு நோய் இல்லாதவர்களை ஒப்பிட்டு பார்க்கும்போது 2 மடங்கு அதிகம்.
1. டைப் – 2 நோயாளிகளுக்கு உயிராபத்து அதிகம் வருவது இதய நோய்களால்
2. மற்றவர்களை விட நீரிழிவு உள்ளவர்களுக்கு 3 – 4 மடங்கு அதிகம் வரும்
3. பெண்களுக்கு (நீரிழிவு உள்ள) ஆண்களை விட அதிகமாக இதயநோய் வரும்.
மார்பு வலி, மாரடைப்பு, இரத்தக்குழாய் அடைப்பு, இதனால் உடலின் பல பாகங்கள் இரணமாகி, காயப்பட்டு, பயனற்று போதல் இவையெல்லாம் நீரிழிவு ஏற்படுத்தும் அபாயங்கள்.
இதய நோய் வராமல் தடுக்க நீரிழிவு நோயாளிகள் கீழ்கண்டவற்றை பின்பற்றலாம்:
1) புகைப்பிடிக்கும் பழக்கம் மற்றும் மது அருந்துதல் பழக்கம் இருந்தால் அதை உடனே நிறுத்துதல்,
2) ரத்தக் கொதிப்பு மற்றும் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருத்தல்,
3) அதிக உடல் எடை இருந்தால், அதைக்குறைத்தல்,
4) உங்கள் மூன்று மாத ரத்த சர்க்கரையின் சராசரியான எச்.பி.ஏ1 சி யை 7 சதவீதத்திற்கும் குறைவாக வைத்திருத்தல்,
5) மன அழுத்தத்தை குறைத்துக்கொள்ளுதல்,
6) தினமும் உடற்பயிற்சி செய்தல்,
7) நார்ச்சத்து நிறைந்த உணவுகள், காய்கறிகள், கீரைகள், பழங்கள், புரதம் நிறைந்த பால், முட்டையின் வெள்ளை, கோழி இறைச்சி ஆகியவற்றை அதிகமாக உணவில் சேர்த்து கொள்ளுதல்.
நீரிழிவு வியாதி உள்ளவர்கள் மேல்மூச்சு, தலைச்சுற்றல், மயக்கம், தடுமாற்றம், கிறுகிறுப்பு, நெஞ்சில் பார உணர்வு, பளு அழுத்துவது போல் உணர்வு இவை இருந்தால் உடனே மருத்துவரை அணுகவும். இவை மாரடைப்பின் அறிகுறிகளாக இருக்கலாம். உடனடி இ.சி.ஜி மற்றும் சிகிச்சை தேவைப்படலாம்.
நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- இது விலை குறைந்த சத்து மிக்க பழம்.
- இது எலுமிச்சை குடும்ப வகையை சேர்ந்தது.
சாத்துக்குடி இனிப்பும் புளிப்பும் நிறைந்த, விலை குறைந்த சத்து மிக்க பழம். இது எலுமிச்சை குடும்ப வகையை சேர்ந்தது. இந்த சிட்ரஸ் பழத்தில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளன. இது உடலுக்கு நீர்ச்சத்தை வழங்குவதோடு மட்டுமின்றி, உடலைக் குளிர்ச்சியாகவும் வைத்துக் கொள்கிறது.இந்த சிட்ரஸ் பழத்தில் 90 சதவிகிதம் நீர்ச்சத்து நிறைந்திருக்கிறது. இருப்பினும் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கொழுப்பு, பொட்டாசியம், கால்சியம், வைட்டமின்-சி என நிறைவான சத்துக்களையும் கொண்டிருக்கிறது.
இந்த பழத்தின் சிறப்பு, இதில் கலோரிகள் மிகவும் குறைவு. ஒரு பெரிய அளவு சாத்துக்குடியில் அதிகபட்சமாக 43 கலோரிகள் இருக்கும். எடையைக் குறைக்கும் முயற்சியில் நீங்கள் ஈடுபட்டிருந்தால், உங்கள் டயட்டில் சாத்துக்குடி ஜூஸை தவறாமல் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் உடல் எடை வேகமாகவும், ஆரோக்கியமான முறையிலும் குறைவதைக் காணலாம்.
சாத்துக்குடி உடலுக்கு தேவையான பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழம். உடல், நீர் பற்றாக்குறையை சந்திக்கும் போது அதிக களைப்பை உணரும். அப்போது களைப்பை தீர்க்கும் பானமாகவும், ஆற்றல் தரும் பானமாகவும் சாத்துக்குடி ஜூஸ் இருக்கும்.
தினமும் ஒரு டம்ளர் சாத்துக்குடி ஜூஸ் குடிப் பதன் மூலம் உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்க முடியும். இதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் முடியும். இதில் இருக்கும் வைட்டமின்-சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. நமது உடலை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கு வைட்டமின்-சி அத்தியாவசியமானது என்பதால், அடிக்கடி சாத்துக்குடி ஜூஸ் குடித்து உடலை ஆற்றலாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருங்கள்.
அல்சர், நீரிழப்பு, செரிமான பிரச்சினைகளை குணப்படுத்தும் சக்தி சாத்துக்குடிக்கு உண்டு. மேலும் கண்களை பாதுகாக்கவும் உதவும்.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்ட பழங்களுள் ஒன்று வாழைப்பழம்.
- ஒரு வாழைப்பழத்தில் சுமார் 100 கலோரிகள் உள்ளன.
நமது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்ட பழங்களுள் ஒன்று வாழைப்பழம். இதனை உட்கொள்வது உடலுக்கு உடனடி ஆற்றலை கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்கவும் உதவும்.
வாழைப்பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள், சர்க்கரை, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன. மேலும் செரிமானத்துக்கு முக்கிய பங்கு வகிக்கும் நார்ப்பொருளை கொண்டுள்ளது. இது குடல் இயக்கங்களை ஒழுங்குபடுத்த உதவும்.
ஆனால் வாழைப்பழத்தை அதிகமாக சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?
ஒரு வாழைப்பழத்தில் சுமார் 100 கலோரிகள் உள்ளன. தினமும் இரண்டு வாழைப்பழங்களுக்கு மேல் சாப்பிட்டால், உங்கள் உடல் எடை வேகமாக அதிகரிக்கும். மேலும் பொட்டாசியத்தின் அளவும் மிக அதிகமாக இருப்பதால், வாழைப்பழத்தை அதிகமாக உட்கொண்டால், தலைசுற்றல், வாந்தி, நாடித் துடிப்பு அதிகரிப்பு போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்.
வாழைப்பழம் சாப்பிடுவதால் பல்லில் துவாரம் ஏற்படும் என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. ஏனெனில் இதில் நிறைய மாவுச்சத்து உள்ளது. அது பற்களுக்கு இடையில் எளிதில் ஒட்டிக்கொள்ளும். எனவே வாழைப்பழத்தை சாப்பிட்டதும் பற்களை சுத்தம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அதில் இருக்கும் மாவுச்சத்து பற்களில் படிந்து பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
வாழைப்பழத்தில், வைட்டமின் பி6 அதிக அளவில் காணப்படுகிறது. அதனை அதிகம் உட்கொள்வது நரம்புகளில் பாதிப்பை ஏற்படுத்தும். 'பாடிபில்டிங்' பயிற்சி செய்து கட்டுடல் அழகை பேணுவதற்காக வாழைப்பழங்களை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு இந்த பிரச்சினை ஏற்படலாம். ஒவ்வாமை உள்ளவர்களுக்கும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
பச்சை வாழைப்பழத்தில் ஸ்டார்ச் அதிக அளவில் காணப்படுகிறது. அதனை சமையலில் சேர்த்து தினமும் உட்கொண்டால், வாயு தொந்தரவு, வயிற்று வலி, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும். பழுத்த வாழைப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் கலந்திருக்கும். இது செரிமானத்திற்கு நல்லது. எனினும் வாழைப்பழத்தில் தண்ணீர் குறைவாக இருப்பதால் மலச்சிக்கலை ஏற்படுத்தும். எனவே அதிகம் உட்கொள்ளக்கூடாது.
வாழைப்பழத்தில் கிளைசெமிக் கூறுகள் உள்ளன. அவை ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கச்செய்யும். நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால் வாழைப்பழங்களை குறைந்த அளவுஉட்கொள்ளுங்கள். மருத்துவரிடம் ஆலோசனை பெற்று உட்கொள்வதுதான் சரியானது.
சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைஉள்ளவர்கள் பொட்டாசியம் நிறைந்த உணவைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவர்கள் குறைந்த அளவே வாழைப்பழம் உட்கொள்ள வேண்டும்.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health






