என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    • தினமும் சிறிதளவு மாதுளை தோல் பொடியை தண்ணீரில் கலந்து குடித்து வரலாம்.
    • கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களின் செயல்பாடு சீரான முறையில் இயங்கி நச்சுகளை வெளியேற்றும்.

    மாதுளையில் பலவித நன்மைகள் உள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் மாதுளையின் தோலில் கூட பல நன்மைகள் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? மாதுளையின் தோலில் ஏராளமான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளதாம். இந்த பதிவில் நாம் மாதுளை தோலில் உள்ள நன்மைகளைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

    மாதுளையின் தோலில் புரதம், பீனாலிக் கலவைகள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பொட்டாசியம், நார்ச்சத்து முதலானவை நிறைந்துள்ளது. நீங்கள் மாதுளை தோலை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். அதற்கு முன்பு உணவில் சேர்க்கக்கூடிய பதத்திற்கு மாதுளை தோலை வெயிலில் உலர்த்தி, நைசாக அரைத்துக்கொள்ள வேண்டும். இதை செய்ய முடியவில்லை என்றால், கடைகளிலேயே மாதுளை தோல் பொடி விற்கப்படுகிறது. அதைக்கூட வாங்கிக்கொள்ளலாம்.

    மாதுளையின் தோலில் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு சேர்மங்கள் நிறைந்துள்ளதால் சளி, இருமல் தொண்டை வலி முதலானவற்றைப் போக்க உதவுகிறது. தொண்டை வலிக்கு வெதுவெதுப்பான நீரில் இந்த பொடியைக் கலந்து வாய் கொப்பளிக்கலாம். சிலர் தேநீரிலும் கலந்து பருகுகிறார்கள்.

    எந்த உணவு சாப்பிட்டாலும் செரிமான பிரச்சனை இருக்கிறது என்று கவலைப்படுபவர்களுக்கு மாதுளைத் தோல் மாமருந்து என்றே சொல்லலாம். ஏனெனில் இதிலுள்ள நார்ச்சத்து, அழற்சி எதிர்ப்பு பண்புகள், வயிற்று வீக்கம், தொற்று முதலானவற்றை குறைத்து ஒட்டுமொத்த செரிமான பிரச்சனைகளையும் சரி செய்து குடல் இயக்கத்தை ஆரோக்கியமாக மாற்றுகிறது.



    உடலிலுள்ள தேவையற்ற கழிவுகளை, நச்சுகளை வெளியேற்றக் கூடிய ஆக்ஸிஜனேற்றிகள் மாதுளை தோலில் அதிகமாக உள்ளது. அதனால் தினமும் சிறிதளவு மாதுளை தோல் பொடியை தண்ணீரில் கலந்து குடித்து வரலாம். இதனால் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களின் செயல்பாடு சீரான முறையில் இயங்கி நச்சுகளை வெளியேற்றும்.

    மாதுளை தோல் பொடியை தேன் மற்றும் தயிருடன் கலந்து முகத்தில் தடவினால் முகம் பளபளப்பாக மாறும். இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் சருமத்தை சூரிய ஒளியினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கிறது. மேலும் வயதான தோற்றத்தை தடுத்து, கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து முக சுருக்கங்கள் முதலானவற்றை தடுப்பதில் பங்கு வகிக்கிறது.

    மேற்சொன்ன எல்லாவற்றிற்கும் மேலாக மாதுளை தோலானது நமது இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதிலுள்ள ஆக்ஸிஜனேற்றிகள் ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் கெட்ட கொழுப்பின் அளைவைக் குறைக்கிறது. மேலும் சிறந்த ரத்த ஓட்டத்திற்கும், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.

    அடுத்த முறை மாதுளையை உரிக்கும் போது அதன் தோலை வீணாக தூக்கியெறியாமல், மேற்சொன்ன எல்லா நன்மைகளையும் நினைவில் வைத்து, உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை சேர்க்கும் விதமாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்...

    • மலச்சிக்கலைத் தடுத்து செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
    • எல்லாவற்றிற்கும் மேலாக வெல்லம் மிகச்சிறந்த நச்சு நீக்கி என்றே சொல்லலாம்.

    சர்க்கரை அதிகமாக எடுத்துக்கொள்பவரா நீங்கள். அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்காகத்தான். ஒரு நாளில் நீங்கள் எடுத்துக்கொள்ளும் சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் எடுத்துக்கொண்டால் உங்கள் உடலுக்கு அவ்வளவு நன்மை கிடைக்கபெறும்.

    வெல்லத்தில் ஆன்டி ஆக்சிடன்டுகள், இரும்புச்சத்து, செலினியம், மக்னீசியம் முதலான சத்துகள் அதிகமாக உள்ளது. அதனால் தான் சித்த மருத்துவத்தில் கூட வெல்லம் சேர்க்கப்படுகிறது.

    வெல்லத்தில் இரும்புச் சத்து அதிகமாக உள்ளதால், இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது. இதன்மூலம் சருமத்தை மேம்படுத்தி உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, வளர்சிதை மாற்றத்தை மேம்ம்படுத்துகிறது. ஒவ்வாமையால் ஏற்படும் ஆஸ்துமா பிரச்சனைகளுக்கு உகந்ததாகவும், தொண்டை புண் மற்றும் இருமலை போக்கவும் சளிக்கு அருமருந்தாகவும் செயல்படுகிறது.

    வெல்லத்தில் பொட்டாசியம் சத்து அதிகளவில் உள்ளதால் இதய செயல்பாட்டை சீராக்கவும், ரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது.

    வயிறு, உணவுக்குழாய், நுரையீரல் போன்ற உடல் உறுப்புகளை உறுதியாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க உதவுகிறது. மேலும், மலச்சிக்கலைத் தடுத்து செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. முக்கியமாக வெல்லத்தில் உள்ள நீர் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.



    நீங்கள் உணவு அருந்தியபிறகு வெல்லம் சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனென்றால், வெல்லம் செரிமான நொதிகளை சீராக செயல்படுத்துகிறது. இதனால் உணவானது எளிதில் உடைந்து ஜீரணமாக உதவி புரிகிறது.

    எல்லாவற்றிற்கும் மேலாக வெல்லம் மிகச்சிறந்த நச்சு நீக்கி என்றே சொல்லலாம். இயற்கையாகவே வெல்லத்தில் நச்சுகளை நீக்கும் தன்மை உள்ளது. இது நம்முடைய உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி கல்லீரலையும் சுத்தப்படுத்துகிறது.

    இத்தனை சிறப்பம்சங்களைக் கொண்ட வெல்லத்தை சர்க்கரைக்கு மாற்றாக தாராளமாக பயன்படுத்தலாம். இருப்பினும் சர்க்கரையோ வெல்லமோ எதுவாக இருந்தாலும் அளவோடு எடுத்துக்கொள்வது நல்லது.

    • செரிமானத்திற்காக சிறிதளவு நெய், சீரகம், பெருங்காயம் முதலானவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
    • சூப்பை வெதுவெதுப்பான சூட்டில் குடிக்க வேண்டும்.

    நீரிழிவு நோயாளிகள் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்வதற்காக பெரும்பாலும் இரவில் குறைவாகத்தான் சாப்பிடுவார்கள். அப்படி குறைவாக சாப்பிடுவதால் இரவு 2 மணியளவில் கண்டிப்பாக பசி எடுத்துவிடும். ஆனால் பசியில் அதிகமாக சாப்பிட்டு விட்டாலும் சரி, தவறான உணவைத் தேர்ந்தெடுத்து சாப்பிட்டாலும் சரி ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

    உண்மையைச் சொன்னால் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கக் கூடாது ஆனால் அதே சமயம் பசியும் அடங்க வேண்டும், அதற்கான உணவைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே சாதனையாகத்தான் கருதப்படுகிறது.

    இரவு நேரத்தில் ஏற்படும் பசியைப் போக்க வேண்டும். ஆனால், ரத்த சர்க்கரை அளவை பாதிக்கக் கூடாது. இந்தவகை உணவுகளைப் பற்றிதான் இப்போது பார்க்கப் போகிறோம்...

    முதலில் பிளைன் க்ரீக் யோகர்ட் அதாவது கிரேக்க தயிர். இதில் புரதமும் மிகக்குறைந்த அளவிலான இயற்கை சர்க்கரையும் உள்ளது. இதில் உள்ள புரதம் உங்கள் பசியை போக்குவதோடு இல்லாமல் செரிமானத்தையும் சீராக்கும். அத்துடன் ரத்த சர்க்கரை அதிகரிப்பைத் தடுக்கவும் உதவி செய்யும். 2019 -யில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், கிரேக்க தயிர் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காது என்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் இரவு நேர பசியின் போது பயப்படாமல் கிரேக்க தயிரை சாப்பிடலாம்.

    அடுத்ததாக பாதாம் பருப்பு. பாதாம் பருப்பில் குறைந்த கார்போஹைட்ரேட், அதிக நார்ச்சத்துகள் நிறைந்துள்ளதாகவும் இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை பராமரிக்க உதவுவதாக 2002 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. எனவே நீங்கள் தூங்க செல்வதற்கு முன் ஒரு கைப்பிடி பாதாம் பருப்பை தாராளமாக சாப்பிடலாம். வயிறு முழுமையாக உள்ளது போன்ற உணர்வையும் தரும். அதேசமயம் உங்கள் தூக்கத்தை சீர்குலைக்காமல் பார்த்துக்கொள்ளும்.



    தினமும் நள்ளிரவில் பசிக்கிறது என்றால், தூங்க செல்வதற்கு முன் நீங்கள் தாராளமாக வேக வைத்த முட்டையை சாப்பிடலாம். 2023-இல் நடத்தப்பட்ட ஆய்வின்படி முட்டையில் கார்போஹைட்ரேட் குறைவாக இருந்தாலும் நல்ல கொழுப்புகள் மற்றும் புரதம் அதிகமாக இருப்பதால் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி, மெலடோனின் உற்பத்தியை அதிகரிக்க செய்து தூங்குவதற்கும் உதவி செய்கிறது.

    கடைசியாக பாசிப்பருப்பு சூப் மற்றும் பனீர் முதலானவற்றை எடுத்துக்கொள்ளலாம். பாசிப்பருப்பு சூப் செய்யும் போது அதில் செரிமானத்திற்காக சிறிதளவு நெய், சீரகம், பெருங்காயம் முதலானவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும். சூப்பை வெதுவெதுப்பான சூட்டில் குடிக்க வேண்டும். பாசிப்பருப்பு சூப்பும் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. பனீர் எடுத்துக்கொள்ளும் போது அதனுடன் கருப்பு மிளகு சேர்த்துக்கொள்ளலாம். 2019 ஆய்வு முடிவின் படி பனீரில் கார்போஹைட்ரேட் குறைவாகவும், கேசீன் புரதம் அதிகமாகவும் உள்ளதாகவும் இதனால் பசியைக் கட்டுப்படுத்தி முழுமையாக சாப்பிட்ட உணர்வையும் வழங்குவதாக கூறுகிறது.

    உங்கள் நள்ளிரவு நேர பசியை போக்கிக்கொள்ளவும் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்கும் மேற்கண்ட உணவுகளை நீங்கள் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.

    • மன அழுத்தத்தை உணரும்போது அதற்கான காரணங்களை அடையாளம் காண வேண்டும்.
    • எந்தெந்த காரணிகள் நமக்கு பிரச்சனையை ஏற்படுத்துகின்றன என்பதை பகுப்பாய்வு செய்ய வேண்டும்.

    இளைஞர்களில் பலர் எல்லாவற்றிலிருந்தும் அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். கல்வி, வேலை, நிதி சிக்கல்கள், அதிகரித்த செல்போன் பயன்பாடு, போட்டித்தன்மை போன்ற பல காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுகிறது.

    கடுமையான மன அழுத்தத்தில் இருப்பவர்களிடையே பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரித்து வருவதாக அமெரிக்க நரம்பியல் அகாடமி எச்சரித்துள்ளது.

    வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாக அதிகரித்து வரும் மன அழுத்தம் பல பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அது விளக்கம் அளித்துள்ளது.

    இதனால் பாதிக்கப்படுபவர்களுக்கு மூளையின் ஒரு பகுதிக்கு ரத்த விநியோகம் துண்டிக்கப்படுகிறது. அவர்கள் சோம்பேறியாக மாறுகிறார்கள், பேச முடியாத நிலை ஏற்படும். அவர்கள் பார்வையை இழக்கிறார்கள். சில சந்தர்ப்பங்களில் மரணம் ஏற்படுகிறது.



    பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு மாதத்திற்கு முன்பு கடுமையான மன அழுத்தத்தை அனுபவித்ததாக இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.

    பின்லாந்தில் உள்ள ஹெல்சின்கி பல்கலைக்கழக மருத்துவமனை உட்பட பல்வேறு மருத்துவ நிறுவனங்கள் இந்த ஆய்வில் பங்கேற்றன. மன அழுத்தத்தில் இருக்கும்போது. கார்டிசோல் அட்ரினலின் மற்றும் நோராட்ரெனலின் போன்ற ஹார்மோன்கள் வெளியிடப்படுகின்றன.

    சிறிது மன அழுத்தத்துடன் இந்த ஹார்மோன்கள் உடலுக்கு அவசியமானவை. ஆனால் அவை அதிகமாக வெளியிடப்பட்டால் ஆரோக்கியத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். இதயத்துடிப்பு அதிகரிக்கிறது. உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

    இது உறுப்புகளை சேதப்படுத்தும் மன அழுத்தம் மூளை மற்றும் இதயம் உட்பட அனைத்து உறுப்புகளிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

    தொடர்ச்சியான மன அழுத்தம் நினைவாற்றலைக் குறைக்கிறது. படிக்கும் திறன் குறைகிறது. முடிவுகளை சரியாக எடுக்க முடியாது. கவனம் குறைகிறது. உணர்ச்சிகளில் அதன் தாக்கத்தால் பயம் மற்றும் பதட்டம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. நீரிழிவு நோயாளிகளுக்கு இது மிகவும் ஆபத்தானது. சிலர் எடை கூடுகிறார்கள். சிலர் எடை குறைகிறார்கள். பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. பாலியல் திறன் குறைகிறது. மனச்சோர்வு அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

    மன அழுத்தத்தை உணரும்போது அதற்கான காரணங்களை அடையாளம் காண வேண்டும். எந்தெந்த காரணிகள் நமக்கு பிரச்சனையை ஏற்படுத்துகின்றன என்பதை பகுப்பாய்வு செய்ய வேண்டும்.

    நீங்கள் விரும்பும் விஷயங்களைச் செய்வது உங்கள் அன்புக்குரியவர்களுடன் நேரத்தைச் செலவிட வேண்டும். இயற்கையில் நடப்பது. தியானம் செய்வது, இசை கேட்பது. புத்தகங்கள் படிப்பது மற்றும் நடனம் ஆடுவது ஆகியவை உதவும்.

    நீண்ட நேர செல்போன் பயன்பாடுகளை தவிர்க்க வேண்டும். எதிர்மறை எண்ணங்களை விட்டுவிட்டு நேர்மறை சிந்தனையை ஏற்றுக்கொள்ள வேண்டும். மன அழுத்தத்தைக் குறைப்பது நம் கையில்தான் உள்ளது. நமது வாழ்க்கை முறையிலும் உணவு முறையிலும் மாற்றங்களைச் செய்ய வேண்டும்.

    சர்க்கரை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளைக் குறைத்து புரதம் அதிகம் உள்ள உணவுகளை உண்ணுங்கள். தேவைப்பட்டால் ஒரு உணவியல் நிபுணரின் ஆலோசனையுடன் சீரான உணவை உண்ணுங்கள். தினமும் அரை மணி நேரம் வாரத்தில் குறைந்தது 5 நாட்களாவது உடற்பயிற்சி செய்யுங்கள்.

    எல்லாவற்றிலும் மன அழுத்தத்தில் இருப்பவர்கள் அறிவாற்றல் நடத்தை சிகிச்சையைப் பரிசீலிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    • நீரிழிவு நோயாளிகள், காடை இறைச்சியை உணவில் எடுத்துக்கொண்டால் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம்.
    • சிறுநீரகம், கல்லீரல், பித்தப்பை போன்றவற்றில் கற்கள் உருவாவதை காடை முட்டைகள் தடுக்கும் என்று கூறப்படுகிறது.

    கோழி இறைச்சியைவிட மிகவும் சுவையும், சத்தும் கொண்டது காடை இறைச்சி. `கட்டில் கிடப்பார்க்கு காட்டில் படும் காடை' என்கிறது, சித்த மருத்துவ பாடல் ஒன்று. நோய்களால் உடல் இளைத்த ஒருவன் காடை இறைச்சியுடன் சோறு சாப்பிட்டால், கட்டழகன் ஆவான் என்கிறது தமிழ் நூல் ஒன்று.

    கோழி இறைச்சியை ஒப்பிடும்போது மிகக் குறைவான கொழுப்பு, ஏராளமான உயிர்ச்சத்துகள் காடை இறைச்சியில் உள்ளன. மூளைக்கு முக்கியமான கோலின் சத்து, வைட்டமின்கள் ஏ, பி-1, பி, டி, கே மற்றும் புரதம், கால்சியம், இரும்பு, துத்தநாகம் உள்பட பல சத்துக்கள் இவற்றின் மூலம் கிடைக்கின்றன. காடை இறைச்சியில் அதிக ஒலிக் அமிலம் இருப்பதால், இதய நோய் அபாயத்தை குறைக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

    நீரிழிவு நோயாளிகள், காடை இறைச்சியை உணவில் எடுத்துக்கொண்டால் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம். மேலும் கண்பார்வை பாதிப்புகளை தடுத்து விழித்திரைகளை மேம்படுத்துகிறது. காடை இறைச்சியில் உள்ள பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்கள் மூட்டு தேய்மானத்தை தடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.

    இதே போல், காடை முட்டைகள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி, மூளையின் செயல்பாட்டை அதிகரிப்பதுடன், நரம்பு மண்டலத்தை உறுதிப்படுத்துகின்றன. உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதன் மூலம் ரத்த சோகையை தடுக்கிறது. காசநோய், ஆஸ்துமா மற்றும் நீரிழிவு நோய்க்கான சிகிச்சையில் காடை முட்டையை சிறந்த மருந்தாக சீனர்கள் பயன்படுத்துகின்றனர். சிறுநீரகம், கல்லீரல், பித்தப்பை போன்றவற்றில் கற்கள் உருவாவதை காடை முட்டைகள் தடுக்கும் என்று கூறப்படுகிறது.

    இத்தாலி, மெக்சிகோ, ஜப்பான், போலந்து, பிரெஞ்சு போன்ற நாடுகளில் காடை, மிகவும் விரும்பி உண்ணப்படும் இறைச்சியாக உள்ளது.

    • உடலுக்கு விரைவான ஊட்டச்சத்து, ஆன்டிஆக்சிடென்டுகள் தேவைப்படும்போது ஜூஸ் பருகலாம்.
    • பழங்கள், காய்கறிகளை கொண்டு ஜூஸ் தயாரிக்க சாறு பிழிந்து வடிக்கட்டப்படும்.

    பழங்கள், காய்கறிகளை கொண்டு பானங்கள் தயாரித்து பருகாமல் அதன் தன்மையிலேயே ருசிப்பதுதான் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஏனெனில் அவற்றில் அதிக நார்ச்சத்து கலந்திருக்கும். ஊட்டச்சத்துக்களும் மிகுந்திருக்கும். பானங்களாக மாற்றும்போது அவை குறையக்கூடும். இருப்பினும் பழங்கள், காய்கறிகளை ஜூஸாகவும், ஸ்மூத்தியாகவும் தயாரித்து ருசிக்கவே நிறைய பேர் விரும்புகிறார்கள். இதில் எதனை பருகுவது ஆரோக்கியமானது என்ற கேள்வியும் எழாமல் இல்லை. எதில் ஊட்டச்சத்து அதிகம்? எதனை பருகுவது சிறந்தது என்பதை விரிவாக பார்ப்போம்.

    ஊட்டச்சத்து அடர்த்தி

    பழ ஜூஸில் வைட்டமின்கள், தாதுக்கள், கரோட்டினாய்டுகள் மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் தனியாக பிரித்தெடுக்கப்படுகின்றன. பீட்டா கரோட்டின் போன்ற சில சேர்மங்கள் சாறு வடிவத்தில் மிகவும் திறமையாக உறிஞ்சப்படலாம். ஸ்மூத்திகளை பொறுத்தவரை ஆன்டி ஆக்சிடென்டுகள் நார்ச்சத்துடன் பிணைக்கப்பட்டு ஊட்டச்சத்துக்கள் பரவலாக உடலுக்கு கிடைக்க வழிவகை செய்கின்றன. ஸ்மூத்திகள் அப்படியே தயாரிக்கப்படுவதால் ஊட்டச்சத்துக்கள் இழக்கப்படுவது மிகக் குறைவு. அதனால் ஊட்டச்சத்து தேவைப்படுபவர்கள் ஸ்மூத்தி பருகுவது சிறப்பானது.

    ஆற்றல் இழப்பு

    ஜூஸ் பருகுவது இன்சுலின் மற்றும் குளுக்கோஸை விரைவாக ரத்தத்தில் அதிகரிக்கக்கூடும். அதிலும் சர்க்கரை அதிகம் கலந்த ஜூஸ் வகைகளை பருகுவது பசி, நீரிழிவு, உடல் ஆற்றல் செயலிழப்பு உள்ளிட்ட அபாயங்களுடன் தொடர்புடையது. நார்ச்சத்து, புரதம் மற்றும் கொழுப்பு உள்ளிட்டவை சம நிலையில் கலந்த ஸ்மூத்திகளை பருகுவது உடல் ஆற்றலையும், அறிவாற்றலையும், வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்தக்கூடும்.

    சர்க்கரை வெளிப்பாடு

    ஜூஸ்களில் நார்ச்சத்து இல்லாத சூழலில் பழங்களில் இருக்கும் சர்க்கரை ரத்த ஓட்டத்தில் விரைவாக கலந்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்துவிடும். பழ ஜூஸ்கள் பொதுவாக 65 முதல் 85-க்கு இடைப்பட்ட அளவில் கிளைசெமிக் குறியீட்டை கொண்டிருக்கும். சர்க்கரையை விரைவாக கலக்கச் செய்வதுதான் அதற்கு காரணம். ஆனால் ஸ்மூத்திகளில் இயற்கையான சர்க்கரையே அதிகம் கலந்திருக்கும். நார்ச்சத்தும் குறைவில்லாமல் இருப்பதால் சர்க்கரையை மெதுவாகவே வெளியிடும். மேலும் புரதம், ஆரோக்கியமான கொழுப்பும் கொண்டிருக்கும். ஐரோப்பிய மருத்துவ ஊட்டச்சத்து இதழில் நடத்தப்பட்ட ஆய்வில் பழங்களை விட ஸ்மூத்திகள் 57 சதவீதம் வரை ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டை மேம்படுத்துவதாகவும், செரிமானத்தை பொறுத்தவரை ஜூஸை விட பயனுள்ளதாக இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

    எது சிறந்தது?

    காலை உணவு, சிற்றுண்டி அல்லது உணவுக்கு மாற்றாக நார்ச்சத்து நிறைந்த, சமச்சீரான ஊட்டச்சத்துகள் மிகுந்த பானத்தை பருக நினைத்தால் ஸ்மூத்தி சிறந்த தேர்வாக அமையும்.

    உடலுக்கு விரைவான ஊட்டச்சத்து, ஆன்டிஆக்சிடென்டுகள் தேவைப்படும்போது ஜூஸ் பருகலாம். எனினும் அன்றாட ஆரோக்கியத்திற்கு அதிக ஆரோக்கிய நன்மைகளை ஸ்மூத்திகளே வழங்குகின்றன.

    திருப்தி

    நீண்ட நேரம் சாப்பிட்ட திருப்தி நிலைத்திருக்கவும், விரைவாக பசி எட்டிப்பார்ப்பதை தவிர்க்கவும் விரும்புபவர்கள் ஸ்மூத்தி பருகுவதே நல்லது. ஏனெனில் ஸ்மூத்தி, ஜூஸை விட அடர்த்தியாக இருக்கும். அதில் சத்துக்களும் நிறைவாக இருக்கும். ஜூஸ்களில் கலோரிகள் குறைவாக இருந்தாலும் நார்ச்சத்து திருப்தியாக இருப்பதில்லை. ஸ்மூத்தியுடன் ஒப்பிடும்போது விரைவாகவே பசி உணர்வை தூண்டிவிடும்.

    பல் ஆரோக்கியம்

    ஸ்மூத்திகள் உமிழ்நீர் உற்பத்தியைத் தூண்டும். பற்களை சுத்தப்படுத்தவும், பாதுகாக்கவும் உதவும். பழ ஜூஸ்கள் அமிலத்தன்மை கொண்டவை, சர்க்கரை நிறைந்தவை. அவை பற்களில் அரிப்பு, பல்சிதைவு உள்ளிட்ட பிரச்சினைகளை உருவாக்கக்கூடும்.

    நார்ச்சத்து

    பழங்கள், காய்கறிகளை கொண்டு ஜூஸ் தயாரிக்க சாறு பிழிந்து வடிக்கட்டப்படும். ஆனால் பழங்கள், காய்கறிகளை அப்படியே போட்டு ஸ்மூத்தி தயாரிக்கப்படும். அதனுடன் கெட்டியான பால், ஐஸ்கிரீம் உள்ளிட்ட ஊட்டச்சத்துமிக்க பொருட்கள் சேர்க்கப்படும். முக்கியமாக கரையாத மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் தக்கவைக்கப்படும். ரத்தத்தில் சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்தவும், குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவிடும். ஜூஸை பொறுத்தவரை பழங்கள், காய்கறிகளில் இருக்கும் திரவம் மட்டுமே பிரித்தெடுக்கப்படும். அவற்றின் தசைப்பகுதிகள் வடிகட்டப்பட்டு அப்புறப்படுத்தப்படும். அதனால் நார்ச்சத்துக்கள் காணாமல் போய்விடக்கூடும்.

    நார்ச்சத்து ஏன் முக்கியமானது:

    நார்ச்சத்து செரிமானத்தை மெதுவாக்கி வயிறு நிறைந்த உணர்வை ஏற்படுத்தும். ஊட்டச்சத்து உறிஞ்சுதலுக்கும் உதவும். ஆரோக்கியமான நுண்ணுயிர்களை வளர்க்கும். உமிழ்நீர் உற்பத்தியை தூண்டி பற்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும்.

    • உடலின் தசைகளிலும், ரத்தத்திலும் காணப்படும் 80 சதவீத கொழுப்பு உடலால் உற்பத்தி செய்யப்படுகிறது.
    • கொழுப்பை ரத்தத்தில் உள்ள கொழுப்பு எனவும், உணவு மூலம் பெருகும் கொழுப்பு எனவும் 2 வகைகளாக பிரிக்கலாம்.

    கொழுப்பு என்ற சொல்லைக் கேட்டாலே பலருக்கு பயம் வரும். ஏனெனில் உடலில் கொழுப்பு அளவு அதிகரிக்கும்போது மாரடைப்பு போன்ற திடீர் மரணங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    உண்மையில், கொழுப்பு உடலுக்கு முக்கியமான ஒன்று. கொழுப்பு என்பது ஒவ்வொரு உயிர் அணுவிலும் இருக்கின்ற இயற்கையான பொருள் ஆகும். மனித உடலில் சுரக்கும் ஜீரண நீர்கள், ஹார்மோன்கள் மற்றும் வைட்டமின் 'டி'-யை உற்பத்தி செய்வதில் கொழுப்பு பெரும் பங்கு வகிக்கிறது. நரம்பு, தசைநார்களை காக்கும் பணியையும் செய்கிறது.

    உடலின் தசைகளிலும், ரத்தத்திலும் காணப்படும் 80 சதவீத கொழுப்பு உடலால் உற்பத்தி செய்யப்படுகிறது. 20 சதவீத கொழுப்பு மட்டுமே உணவு மூலம் உற்பத்தியாகிறது. மனித உடல் தனக்கு தேவையான கொழுப்பை தானே உற்பத்தி செய்து கொண்டு, உடலுக்கு தேவையான அளவு பயன்படுத்திக் கொள்கிறது.

    அதிக கொழுப்பு நிரம்பிய உணவுகளால் உடலில் அதிக அளவில் கொழுப்பு சேரும்போது, உடல் தனது கொழுப்பு உற்பத்தியை குறைத்துக்கொண்டு உடலின் கொழுப்பு அளவை சமநிலை செய்கிறது.

    கொழுப்பை ரத்தத்தில் உள்ள கொழுப்பு எனவும், உணவு மூலம் பெருகும் கொழுப்பு எனவும் 2 வகைகளாக பிரிக்கலாம். இதில் ரத்தத்தில் உள்ள கொழுப்பு அளவு அதிகமாகும்போது மட்டுமே அது இதய நோய்க்கு காரணமாக அமைகிறது.

    இதய நோய்க்கு உயர் ரத்த அழுத்தம், புகைத்தல், உடற்பயிற்சி இல்லாதது, நீரிழிவு நோய் ஆகியவையும் காரணங்களாக அமைகின்றன. உடலில் உருவாகும் நிறைவுற்ற கொழுப்பு ஏற்படுத்தும் விளைவை விடக் குறைந்த அளவு பாதிப்பே உணவில் உள்ள கொழுப்பு மூலம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    எனவே கொழுப்பை பொறுத்தவரை, ரத்த கொழுப்பின் அளவு சீராக இருக்கும் வண்ணம் கவனித்துக் கொள்வதுதான் இதய பாதிப்புகளை தடுக்கும் வழி என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.

    • தைராய்டு சுரப்பி குறைபாடு ஆண்களை விட பெண்களிடையே அதிகம் காணப்படுகிறது.
    • சர்க்கரை நோயாளிகளுக்கு செய்யப்படும் எச்.பி.ஏ1சி ரத்த பரிசோதனையில் ஒரு பொய்யான உயர்வை ஹைப்போ தைராய்டிசம் ஏற்படுத்தக்கூடும்.

    மருத்துவ ரீதியாக தைராய்டு ஹார்மோன் குறைபாடு 'ஹைப்போ தைராய்டிசம்' எனப்படும். மனிதனின் கழுத்தில் உள்ள பட்டாம் பூச்சி வடிவ தைராய்டு சுரப்பியில் தைராய்டு ஹார்மோன் உற்பத்தி ஆகிறது. உடல் தனக்கு கிடைக்கும் ஆற்றலை பயன்படுத்தி கொள்வதற்கும், வளர்சிதை மாற்றத்திற்கும் இது உதவுகிறது. தைராய்டு சுரப்பி குறைபாடு (ஹைப்போ தைராய்டிசம்) இந்தியாவில் 10 பேரில் ஒருவருக்கு இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது ஆண்களை விட பெண்களிடையே அதிகம் காணப்படுகிறது.

    தைராய்டு சுரப்பி குறைபாடு உள்ளவர்கள் சாப்பிட கூடாத உணவுகள்

    முட்டைக்கோஸ், காலிபிளவர், புரோக்கோலி மற்றும் முள்ளங்கி. இதில் உள்ள காயிட்ரோஜன் தைராய்டு சுரப்பி உற்பத்தியை குறைக்கிறது. சோயாபீன்ஸ், சோயா பால், டோபு. இவற்றில் உள்ள காயிட்ரோஜன் மற்றும் பைட்டோ ஈஸ்ட்ரோஜன் தைராய்டு செயல்பாட்டை தடுக்கிறது. பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் அல்லது உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள், துரித உணவுகள், பாட்டில் குளிர்பானங்கள், காபி (இது தைராய்டு மாத்திரைகள் உட்கொண்ட பின்னர், அவை வயிற்றில் இருந்து ரத்தத்தில் உறிஞ்சப்படுவதை தடுத்து அதன் செயல்பாட்டை குறைக்கிறது), மது பானங்கள், செயற்கை இனிப்பூட்டிகள்.

    தைராய்டு சுரப்பி குறைபாடு உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்

    உணவில் அயோடின் கலந்த உப்பு பயன்படுத்த வேண்டும். மீன், இறால், பால் பொருட்கள், முட்டை, செலீனியம் நிறைந்த உணவுகள் (கடல் உணவுகள், கோழி, காளான், பூண்டு), ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகள் (சால்மன், மத்தி, கானாங்கெளுத்தி போன்ற மீன்கள், ஆளி விதைகள், அக்ரூட்), முழு தானியங்கள் (பழுப்பு அரிசி, ஓட்ஸ் மற்றும் முழு கோதுமை), மெலிந்த புரதங்கள், காய்கறிகள் மற்றும் பெக்டின்கள் நிறைந்த பெர்ரி, ஆப்பிள், பேரிக்காய், பிளம்ஸ், சாத்துக்குடி, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்கள்.

    சர்க்கரை நோயாளிகளுக்கு செய்யப்படும் எச்.பி.ஏ1சி (HbA1c) ரத்த பரிசோதனையில் ஒரு பொய்யான உயர்வை ஹைப்போ தைராய்டிசம் ஏற்படுத்தக் கூடும். மேலும் இது சர்க்கரை நோயாளிகளுக்கு நரம்பியல் மற்றும் சிறுநீரக பாதிப்பு ஏற்படும் வாய்ப்பை அதிகரிப்பதாக ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது.

    • குடும்பத்தில் யாருக்காவது தோல் அலர்ஜி நோய் இருந்தால் மற்றவர்களுக்கும் வர வாய்ப்புண்டு.
    • கரப்பான் நோய் நிறைய பேருக்கு நீண்ட காலத்துக்கு இருக்கும்.

    கரப்பான் வறட்சி தோல் நோய் தோலில் ஏற்படும் அலர்ஜி (எக்சிமா) ஆகும். இந்த நோய் எந்த வயதிலும், யாரை வேண்டுமானாலும் பாதிக்கலாம். அலர்ஜி, ஆஸ்துமா இருப்பவர்களுக்கு இந்த நோய் வர அதிக வாய்ப்புண்டு. பொதுவாக, கைகள், கழுத்து, முழங்கைகள், கணுக்கால் மேல்பகுதி, முழங்கால்கள், பாதம், முகம், காதுகளுக்குள்ளும் அதைச் சுற்றியும், உதடுகள், மார்பகங்கள், ஆண், பெண் பிறப்புறுப்பைச் சுற்றியும் இந்த எக்சிமா நோய் வரலாம். ஆனால் 2 கால் பாதத்தின் மேல் பகுதிகளிலும், தொடை இடுக்குகளிலும் தான் அதிகமாக வருவதுண்டு.

    இந்தத் தோல் நோய் வந்த இடத்தில், முதலில் தோல் காய்ந்து போகும். பின் அரிப்பு எடுக்கும். நாம் நன்றாக சொரிந்து வைப்போம். பின் அந்த இடம் சிவந்து போகும். சில நேரங்களில் அந்த இடத்தில் கொப்புளங்கள் வரலாம். சிலருக்கு நீர் கூட வடிவதுண்டு. இந்த அரிப்பு எடுத்த இடங்களெல்லாம் திட்டு திட்டாக வீங்கிவிடும். நமது உடலுக்கு எரிச்சலூட்டும் அல்லது ஒத்துக்கொள்ளாமையை ஏற்படுத்தும் பொருட்களை நாம் தொடும்போது அல்லது தோலில் படும்போது, இந்த தோல் அலர்ஜி நோய் (எக்சிமாவின்) அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துவிடும்.

    இந்த எக்சிமா வரும், போகும். நன்கு குணமடைந்து விட்டது என்று நினைப்போம். ஆனால் அந்த இடத்தில் ஏதாவதொரு எரிச்சலூட்டும் பொருள் பட்டாலோ, அல்லது உடலுக்கு ஒத்துக்கொள்ளாத பொருள் பட்டாலோ, மறுபடியும் அது கொஞ்சம், கொஞ்சமாக அதிகமாகி, பின் தடிப்பாகி, வெடிப்பாகி, புண் ஆகிவிடும். இந்த கரப்பான் நோய் நிறைய பேருக்கு நீண்ட காலத்துக்கு இருக்கும். இதை 'கிரானிக் எக்சிமா' (நாள்பட்ட தோல் அரிப்பு நோய்) என்பார்கள்.

    மிக அரிதாக, குடும்பத்தில் யாருக்காவது தோல் அலர்ஜி நோய் இருந்தால் மற்றவர்களுக்கும் வர வாய்ப்புண்டு. இதுபோக, செல்லப்பிராணிகளின் முடி, ஆஸ்துமா, சில உணவுப் பொருட்கள் முதலியன இந்த நோயை உண்டு பண்ணலாம்.

    சிகரெட் புகை, காற்றிலுள்ள மாசுப்பொருட்கள், கம்பளித் துணிகள், சில சரும நிவாரணிகள், கிரீம்கள், சில துணி வகைகள் இவைகள் சூழ்நிலையோடு சேர்ந்து நோயை உண்டாக்கும். மன அழுத்தம், பதற்றம், மனச்சோர்வு, மனத் தளர்ச்சி போன்றவை அதிகமாக இருந்தால் கூட இந்தத் தோல் அலர்ஜி நோய் வர அதிக வாய்ப்புண்டு.

    இந்த நோய் வந்தவர்கள், தோலை உலர்ந்து போகவிடக்கூடாது. தேங்காய் எண்ணெய் அல்லது சோற்றுக்கற்றாழை கிரீம்கள் இப்படி ஏதாவதொன்றை அந்த இடத்தில் தடவி, வறண்டு போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தோல் அலர்ஜியை உண்டாக்கக்கூடிய பொருட்கள், உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். நிரந்தர தீர்வுக்கு சரும நோய் சிகிச்சை நிபுணரைச் சந்தித்து சிகிச்சை பெற்றுக் கொள்வது சிறந்தது.

    • நாம் உண்ணும் பல உணவுகளில் நிறைவுற்ற கொழுப்பு மற்றும் நிறைவுறா கொழுப்பு இரண்டுமே இருக்கின்றன.
    • வயதானவர்கள் ஒரு நாளைக்கு ஒரு முழு அவித்த முட்டை சாப்பிடலாம்.

    உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான சத்துக்கள் அவித்த முட்டையில் அடங்கியுள்ளன. நாம் உண்ணும் பல உணவுகளில் நிறைவுற்ற கொழுப்பு மற்றும் நிறைவுறா கொழுப்பு இரண்டுமே இருக்கின்றன.

    கொழுப்பு நீக்கப்படாத முழுமையான பால், வெண்ணெய், பாலாடைக்கட்டி, தேங்காய் எண்ணெய், சில தாவர எண்ணெய்கள், சிவப்பு இறைச்சி, வறுத்த வேர்க்கடலை, சாக்லெட், எண்ணெய்யில் முக்கி தயாரிக்கப்பட்ட அனைத்து வறுத்த உணவுகள், இன்னும் பல உணவுகளில் நிறைவுற்ற கொழுப்பு அதாவது கெட்ட கொழுப்பு அதிக அளவில் இருக்கின்றது. அதனால் நல்ல கொழுப்பு இந்த உணவுகளில் இல்லை என்று அர்த்தமில்லை.

    வால்நட் அதாவது அக்ரூட் பருப்பு, கடலை எண்ணெய், ஆலிவ் எண்ணெய், அவகேடோ பழம், பாதாம் பருப்பு, பூசணி விதை, எள், முட்டை, சால்மன் மீன், டூனா மீன், சூரியகாந்தி எண்ணெய், சோயாபீன் எண்ணெய், இன்னும் பல உணவுகளில் நிறைவுறா கொழுப்பு அதாவது நல்ல கொழுப்பு அதிக அளவில் இருக்கின்றது. அதனால் கெட்ட கொழுப்பு இந்த உணவுகளில் இல்லை என்று அர்த்தமில்லை.

    முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின்கள், அமினோ அமிலங்கள், செலினியம், பாஸ்பரம், கொலின், லூட்டின், ஆன்டிஆக்ஸிடன்ட் என்று சொல்லப்படும் ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்கள் மற்றும் உடலுக்குத் தேவையான முக்கிய சத்துக்கள் உள்ளன.

    நாம் அன்றாடம் சாப்பிடும் வழக்கமான உணவுகளில் என்ன கொழுப்புச் சத்துள்ள உணவை எடுத்துக் கொள்கிறோமோ அதே அளவு கொழுப்புதான் முட்டையின் மஞ்சள் கருவிலும் இருக்கின்றது. ஆனால் உங்களுக்கு இதயப் பிரச்சனை, அதிக ரத்த அழுத்தம் எதுவும் இல்லையென்றால், அதிக புரதச்சத்து உங்கள் உடலுக்கு வேண்டுமென்றால் 2 முட்டையின் வெள்ளைப் பகுதியுடன் ஒரு முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்து சாப்பிடலாம். வயதானவர்கள் ஒரு நாளைக்கு ஒரு முழு அவித்த முட்டை சாப்பிடலாம்.

    இதயப் பிரச்சனை, அதிக ரத்தக் கொழுப்பு, சர்க்கரை நோய் இருப்பவர்கள் வாரத்துக்கு 3 அல்லது 4 முட்டைகள் சாப்பிடலாம். ஏனென்றால் மஞ்சள் கருவில் நிறைவுற்ற கொழுப்பு அதாவது கெட்ட கொழுப்பு அதிகமாக இருக்கிறது. இது ரத்தக் கெட்ட கொழுப்பு அளவைக் கூட்டும். வயது அதிகம், நடமாட்டம் குறைவு என்றால் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் செரிமானப் பிரச்சனை ஏற்படலாம். தினமும் உடற்பயிற்சி செய்தால் சேர்த்துக் கொள்ளலாம்.

    • அதிக அளவு சர்க்கரை உள்ள காபி குடிப்பது நல்லதல்ல என்றும் கூறப்படுகிறது.
    • தினமும் 2-3 கப் குடிப்பவர்களுக்கு இந்த நன்மை 17 சதவீதம் ஆக சற்று அதிகரித்துள்ளது.

    தினமும் அதிகாலையில் பால் இல்லாத 'பிளாக்' காபி குடிப்பது உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது என்று புதிய ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. தி ஜர்னல் ஆப் நியூட்ரிஷன் நடத்திய புதிய ஆய்வில், காலையில் காபி குடிப்பதால் இறப்பு அபாயத்தைக் குறைப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது .

    காபி நுகர்வுக்கும் இறப்பு ஆபத்துக்கும் இடையிலான தொடர்பு, பானத்தில் சேர்க்கப்படும் இனிப்புகள் மற்றும் நிறைவுற்ற கொழுப்பின் அளவைப் பொறுத்து இது மாறுவதாக கண்டறிந்துள்ளனர்.

    ஒரு நாளைக்கு 1 முதல் 2 கப் பிளாக் காபி குடிப்பது இறப்பு அபாயத்தையும், இருதய நோயால் ஏற்படும் உயிரிழப்பையும் குறைப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.



    எனினும், அதிக அளவு சர்க்கரை உள்ள காபி குடிப்பது நல்லதல்ல என்றும் கூறப்படுகிறது. குறைந்த அளவு சர்க்கரை சேர்க்கப்பட்ட காபி குடிப்பதால் இறப்புக்கான ஆபத்து 14 சதவீதம் குறைவாக இருப்பதாக ஆய்வில் கூறப்பட்டு உள்ளது.

    இந்த ஆய்வு, 1999-ம் ஆண்டு முதல் முதல் 2018-ம் ஆண்டு வரையிலான தேசிய சுகாதார மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனை கணக்கெடுப்பின் புள்ளிவிவரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

    ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு கப் காபி குடிப்பதால், எந்த காரணத்தாலும் இறக்கும் அபாயம் 16 சதவீதம் குறைவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தினமும் 2-3 கப் குடிப்பவர்களுக்கு இந்த நன்மை 17 சதவீதம் ஆக சற்று அதிகரித்துள்ளது.

    இருப்பினும், 3 கப்களுக்கு மேல் குடிப்பது ஆரோக்கியமானது இல்லை என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். காபி குடிப்பதற்கும் புற்றுநோயால் பாதிப்பு ஏற்பட்டு இறப்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

    • குழந்தைகளை தவிர்த்து மற்றவர்கள் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒன்றரை லிட்டர் முதல் 3 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும்.
    • ஆரோக்கியமான சிறுநீரகங்கள் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 800 மி.லி. முதல் ஒரு லிட்டர் சிறுநீரை வெளியேற்றும் திறன் கொண்டது.

    உடல் நலனை பேணுவதற்கு தினமும் 8 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும் என்பது நெடுங்காலமாக வழக்கத்தில் இருக்கிறது. அப்படி 8 டம்ளர் தண்ணீர் மட்டும் பருகினால் போதுமானதா? என்ற கேள்விக்கு அது ஒரு கட்டுக்கதை என்கிறார், டாக்டர் சிரியாக் அபி பிலிப்ஸ். கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த இவர் கல்லீரல் நோய் நிபுணர். கல்லீரல் டாக்டர் என்றும் அழைக்கப்படும் இவர், தினமும் உடலில் ஏற்படும் திரவ இழப்பை ஈடு செய்வதற்கு ஏதுவாக தண்ணீர் பருக வேண்டும் என்றும் கூறுகிறார். உடல் தினமும் எவ்வளவு திரவ இழப்பை சந்திக்கிறது? அதற்கான காரணம் என்ன? தினமும் எவ்வளவு தண்ணீர் பருக வேண்டும்? என்பது பற்றி விளக்கி இருக்கிறார். அது பற்றி பார்ப்போம்.

    எவ்வளவு தண்ணீர் உட்கொள்ள வேண்டும்?

    நீரிழப்பைத் தவிர்க்க குறைந்தபட்சம் ஒன்றரை லிட்டர் (பானங்கள் மற்றும் தண்ணீர் உட்பட) திரவம் உட்கொள்ள வேண்டும். இந்த நீரில் சுமார் 20 சதவீதம் உண்ணும் உணவில் உள்ள ஈரப்பதத்தில் இருந்து கிடைக்கும். இந்த அளவு உணவை பொறுத்து மாறுபடும். பழங்கள் மற்றும் காய்கறிகளில் அதிக நீர் உள்ளடங்கி இருக்கும். இறைச்சிகளில் மிதமான நீர் கலந்திருக்கும். பதப்படுத்தப்பட்ட, வேகவைத்த பொருட்களில் குறைவான அளவில் நீர் இருக்கும். ஒன்றரை லிட்டர் என்பது குறைந்தபட்ச அளவுதான். அவரவர் உடலமைப்பு, நீரிழப்புக்கு ஏற்ப தண்ணீர் பருகும் அளவு மாறுபடும்.

    வெப்பம்-உடல் செயல்பாடு: கடுமையான வெப்பம் மற்றும் கடின உடலுழைப்பு காரணமாக உடலில் இருந்து வியர்வை வெளிப்படுவதுண்டு. இந்த வியர்வை ஒரு மணி நேரத்திற்கு 300 மி.லி. முதல் 2 லிட்டர் வரை உடலில் திரவ இழப்பை ஏற்படுத்தக்கூடும். உடற்பயிற்சியினால் ஏற்படும் நீரிழப்பை தடுக்க ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 400 மி.லி. முதல் 800 மி.லி. திரவ பானங்களை பருகுமாறு அமெரிக்க விளையாட்டு மருத்துவக்கல்லூரி பரிந்துரை செய்துள்ளது.

    குழந்தைகள்: வயது மற்றும் உடல் செயல்பாட்டை பொறுத்து குழந்தைகளுக்கு நீரின் தேவை மாறுபடும். 2 முதல் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 1.3 லிட்டர் தண்ணீரும், 4 முதல் 8 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 1.6 லிட்டர் தண்ணீரும் பருக வேண்டும்.

    மற்றவர்கள்: குழந்தைகளை தவிர்த்து மற்றவர்கள் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒன்றரை லிட்டர் முதல் 3 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும். தாக உணர்வு, சிறுநீரக செயல்பாடுகளை பொறுத்து இந்த அளவு மாறுபடும்.

    நீரேற்ற திட்டம்

    மிதமான வானிலை நிலவும் சூழலில் ஒரு நாளைக்கு சுமார் 1.5 லிட்டர் (தண்ணீர், பானங்கள் மற்றும் உணவில் கலந்திருக்கும் ஈரப்பதம்) உட்கொள்வது போதுமானது. மற்ற சமயங்களில் ஒரு நாளைக்கு 2 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் பருகலாம்.

    அதே நேரத்தில் கடுமையான உடற்பயிற்சியோ, உடல் உழைப்போ மேற்கொள்பவர்கள் ஒரு நாளைக்கு 6 முதல் 7 லிட்டர் வரை பருகலாம். கடுமையான வெயில், அதிக வியர்வை வெளியேற்றம் போன்ற சமயங்களில் 10 லிட்டர் தண்ணீர் வரை பருக வேண்டியிருக்கும். மருத்துவரின் ஆலோசனை பெற்று தண்ணீர் பருகுவது நல்லது.

    உடல் எவ்வளவு தண்ணீரை இழக்கிறது?

    நாம் ஓய்வெடுக்கும்போது கூட உடல் தொடர்ந்து நீரிழப்புக்கு ஆளாகிக் கொண்டுதான் இருக்கிறது. 20 முதல் 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வசிக்கும்ஆரோக்கியமான நபர் தினமும் சிறுநீர் வழியாக தினமும் சுமார் 500 மி.லி. திரவ இழப்பை எதிர்கொள்கிறார். சுவாசம் மற்றும் சருமத்தில் இருந்து ஆவியாதல் செயல்முறை மூலம் கூட சுமார் 700 மி.லி. நீரை இழக்கிறார். ஒட்டுமொத்தமாக சிறுநீர் கழித்தல், வியர்த்தல், சுவாசித்தல் மற்றும் குடல் அசைவுகள் போன்ற பல்வேறு செயல்முறைகள் மூலம் மனித உடல் ஒரு நாளைக்கு சுமார் 2 லிட்டர் முதல் 3 லிட்டர் தண்ணீரை இழக்கிறது. இது வெப்பமான காலநிலையிலோ, கடுமையான உடற்பயிற்சியின்போதோ அதிகரிக்கக்கூடும்.

    சிறுநீரகங்களின் செயல்பாடு

    ஆரோக்கியமான சிறுநீரகங்கள் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 800 மி.லி. முதல் ஒரு லிட்டர் சிறுநீரை வெளியேற்றும் திறன் கொண்டது. அதற்காக ஒரு மணி நேரத்திற்கு ஒரு லிட்டர் என்ற அளவில் தண்ணீர் பருகுவது ஆபத்தானது.

    அப்படி அதிகமாக தண்ணீர் பருகுவது ரத்தத்தில் சோடியத்தை நீர்த்து போகச் செய்து ஹைபோநெட்ரீமியா எனப்படும் சோடியம் குறைபாடு சார்ந்த நோய் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

    நீரேற்றமாக இருப்பது எப்படி?

    8 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும் என்பதை மறந்துவிடுங்கள். அதற்கு பதிலாக உடலின் சமிக்ஞைகளை கவனியுங்கள். சிறுநீர் தெளிவாகவோ அல்லது வெளிர் மஞ்சள் நிறமாகவோ இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தால் தண்ணீர் கூடுதலாக பருக வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். கடைசியாக எப்போது தாகமாக உணர்ந்தீர்கள் என்பதை கருத்தில் கொண்டு அதற்கேற்ப தண்ணீர் பருகுங்கள்.

    ×