என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    இயக்குநர் விஜய்யிடம் உதவி இயக்குநராக இருந்த சஞ்சய் பாரதி இயக்குநராக அறிமுகமாகும் ரொமாண்டிக் கலந்த காமெடி படத்தில் ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடிக்கிறார். #DhanusuRasiNeyargalae #HarishKalyan
    `இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்' படத்தை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குநரும், நடிகருமான சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்குகிறார். இவர் இயக்குனர் விஜய்யிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஸ்ரீகோகுலம் மூவீஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் இந்த படம் ரொமாண்டிக் காமெடி கதையாக உருவாகிறது. ஒரு இளைஞனின் ஜோதிட நம்பிக்கைகள் பற்றி இந்த படம் பேசுகிறது. முக்கியமாக திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஒரு இளைஞனுக்கு இந்த நம்பிக்கைகள் என்னனென்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதே படத்தின் கதையாக உருவாகிறது.



    இந்த படத்திற்கு `தனுசு ராசி நேயர்களே' என்று தலைப்பு வைத்துள்ளனர். படம் பற்ணுி பற்றி இயக்குனர் கூறும்போது, 

    "நம்மில் ஒவ்வொருவருமே நம்முடைய ராசி பலனை அறிய ஆர்வமுடன் இருக்கிறோம். ஆத்திகரோ, நாத்திரகரோ, கடுமையாக நம்பிக்கை அல்லது வேடிக்கையாகவாவது அதை கவனிக்கிறார்கள். 'தனுசு ராசி நேயர்களே' என்று பெயரிட காரணம், அது மற்ற ராசிகளுடன் ஒப்பிடுகையில் அதிகமாக கவனத்தை ஈர்க்கிறது. கூடுதலாக, நாயகன் ஹரீஷ் கல்யாண் இந்த குறிப்பிட்ட ராசிக்காரர் தான். இந்த ராசிக்கான அடையாளம் ஒரு வில் அம்பு வைத்திருப்பவர். இது லட்சிய நோக்கத்ததை குறிக்கிறது.



    இதேபோல், இந்த படத்தில் உள்ள ஹீரோ குறிக்கோளுடன் இருப்பவர், அவருடைய வாழ்க்கையில் நடப்பவை தொடர்ச்சியான சம்பவங்களின் மூலம் வெளிப்படுகிறது. 

    ஜிப்ரான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்படுவர். இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் இருக்கிறார்கள், அவர்களை இறுதிசெய்து வருகிறோம்" என்றார். #DhanusuRasiNeyargalae #HarishKalyan

    கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் - மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் மே மாதம் ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #ENPT #Dhanush
    கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ளது. 2016-ம் ஆண்டிலேயே இதன் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்தது. சமீபத்தில் தணிக்கை குழு படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கியது.

    படத்தின் டிரைலர் தயாராகி இருக்கும் நிலையில், விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தை வருகிற மே மாதம் திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.



    இதில், தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷும், முக்கிய கதாபாத்திரங்களில் சசிகுமார், ராணா, வேல ராமமூர்த்தி உள்ளிட்டோரும் நடித்துள்ளார்கள். 

    தர்புகா சிவா இசையமைத்திருக்கும் இந்த படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் சார்பில் மதன் தயாரித்துள்ளார். #ENPT #Dhanush #MeghaAkash #Sasikumar GauthamMenon

    தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வால் அளித்த பேட்டியில், தனது நட்சத்திர அந்தஸ்தை தக்க வைக்க வேண்டிய நெருக்கடி தனக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். #KajalAggarwal
    காஜல் அகர்வாலின் ‘பாரிஸ் பாரிஸ்’ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. கோமாளி படத்திலும் நடிக்கிறார். தெலுங்கில் 2 படங்கள் கைவசம் வைத்துள்ளார். சினிமா வாழ்க்கை குறித்து காஜல் அகர்வால் கூறியதாவது:-

    “தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டேன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிப்பதில் தான் இப்போது ஆர்வமாக இருக்கிறேன். எனது சினிமா வாழ்க்கை இத்தனை காலமும் எந்த அதிருப்தியும் இல்லாமல் மகிழ்ச்சியாகவே கடந்துள்ளது. முதல் படத்தில் இருந்தே பெரிய இயக்குனர்கள் கதாநாயகர்கள் பார்வை என்மீது விழுந்தது. அவர்களுடன் பணியாற்றியதால் தான் இவ்வளவு உயர்ந்த இடத்துக்கு வந்து இருக்கிறேன். சினிமாவில் நம்மால் நிலையாக இருக்க முடியுமா என்ற பயம் எப்போதுமே ஏற்பட்டது இல்லை. அந்த அளவுக்கு தொடர்ந்து கைநிறைய படங்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

     

    நல்லதோ கெட்டதோ நான் எடுத்த எல்லா முடிவுகளுமே நல்ல பலனைத்தான் கொடுத்தது. இது ஓடுமா? ஓடாதா? என்றெல்லாம் யோசிக்காமல் சொன்ன உடனே ஒப்புக்கொண்டேன். அதுகூட என்னை பெரிய இடத்தில்தான் கொண்டுபோய் வைத்தது. இந்த நட்சத்திர அந்தஸ்தை தக்க வைக்க வேண்டிய நெருக்கடி இப்போது எனக்கு அதிகமாகி இருக்கிறது. நெருக்கடியை எதிர்கொள்ளும் தைரியமும் எனக்கு இருக்கிறது.” இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார். #KajalAggarwal

    ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., ராம்சரண் நடிக்கும் ஆர்ஆர்ஆர் படத்தில் இருந்து பிரபல நடிகை ஒருவர் விலகியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. #RRR #Rajamouli
    பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். டிவிவி தானய்யா தயாரிக்கும் இந்த படம் சுமார் ரூ. 350 கோடியில் உருவாகி வருகிறது.

    இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரணுடன் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, அலியா பட், டேய்சி ஜோன்ஸ் உள்ளிட்டோர் நடிப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த நிலையில், சில தவிர்க்க முடியாத காரணங்களால் டேய்சி ஜோன்ஸ் இந்த படத்தில் இடம்பெற முடியவில்லை என்று படக்குழு அறிவித்துள்ளது.


    படப்பிடிப்பு குஜராத்தில் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், குஜராத் படப்பிடிப்பு திட்டமிட்டபடி முடியும் என்று நம்புவதாக ராஜமவுலி தெரிவித்துள்ளார்.



    படத்தின் கதை சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி எழுதப்பட்டிருக்கிறது. படம் அடுத்த ஆண்டு ஜூலை 30-ந் தேதி உலகம் முழுவதும் 10 மொழிகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #RRR #Rajamouli #JrNTR #RamCharan #AjayDevgn #Samuthirakani #AliaBhatt 

    சுதா இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் சூர்யா 38 படம் தொடங்குவதையொட்டி அஜ்மீர் தர்காவில் சிறப்பு பிரார்த்தனை செய்துள்ளார். #Suriya
    ‘தானா சேர்ந்த கூட்டம்‘ படத்துக்குப் பிறகு நடிகர் சூர்யா நடித்து முடித்திருக்கும் திரைப்படம், ‘என்.ஜி.கே’. செல்வராகவன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில், சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத்சிங், சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருக்கின்றனர். படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன்பு வெளியானது.

    இதுதவிர, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ‘காப்பான்’ படத்திலும் நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் மூலமாக சூர்யா மூன்றாவது முறையாக கே.வி.ஆனந்துடன் கைகோர்த்துள்ளார். இதில், மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் ஆர்யா, சயீஷா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். மேலும், ‘உறியடி 2’ படத்தை தயாரித்தும் இருக்கிறார்.



    இந்நிலையில், சூர்யா நடிக்க இருக்கும் அடுத்த படத்தை ‘இறுதிச்சுற்று’ சுதா இயக்க இருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க இருக்கும் இந்தப் படத்தின் டைட்டில் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில், படத்தின் இயக்குநர் சுதாவுடன் அஜ்மீர் தர்காவுக்கு சென்றிருக்கிறார் சூர்யா. தன்னுடைய நண்பரும் 2டி நிறுவன நிர்வாகியுமான ராஜசேகரன் கற்பூரபாண்டியனையும் உடன் அழைத்துச் சென்றிருக்கிறார். பிரார்த்தனையின் போது இவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.
    தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்த ரெஜினா, தெலுங்கு நடிகரை காதலிப்பதாக வந்த செய்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளார். #Regina
    தமிழ், தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ரெஜினா. தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் சகோதரியின் மகன் சாய் தரம் தேஜ் ஹீரோவாக அறிமுகமான பிள்ளா நுவ்வு லேனி ஜீவிதம் படத்தில் ரெஜினா ஜோடியாக நடித்தார். அதில் இருந்து அவர்கள் இருவரும் காதலிப்பதாக கிசுகிசு பரவியது. இதுபற்றி ரெஜினா அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    கடந்த சில நாட்களாக எனக்கும், சக நடிகர் ஒரு வருக்கும் இடையே காதல் என்று செய்திகள் வெளியாகின. அந்த செய்திகளில் உண்மை இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அவை ஆதாரமற்ற வதந்தி.



    என் வாழ்வில் தற்போது உள்ள ஒரே காதல் என் வேலை தான். அதை தவிர வேறு எந்த காதலும் இல்லை. நான் காதலித்தால் நானே உங்களிடம் தெரிவிப்பேன். எனக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பதற்கு நன்றி’.

    இவ்வாறு ரெஜினா கூறி உள்ளார்.

    ரெஜினாவும், சாய் தரம் தேஜும் நாங்கள் நெருங்கிய நண்பர்கள் என்று முன்பு கூறி வந்தனர். கடந்த 2017-ம் ஆண்டு அவர்களின் காதல் பற்றி அடிக்கடி பேசப்பட்டது. இந்நிலையில் தற்போது இருவருமே மறுத்துள்ளனர்.
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு வில்லனாக பிரபல நடிகர் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. #Rajini
    ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்களில் வில்லன் கதாபாத்திரங்களுக்கான நடிகர்கள் இந்தியில் இருந்தே கொண்டு வரப்படுகின்றனர். காலா படத்தில் நானா படேகர், 2.0 படத்தில் அக்‌‌ஷய் குமார், பேட்ட படத்தில் நவாசுதீன் சித்திக் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் ரஜினிகாந்துக்கு யார் வில்லனாக நடிக்க உள்ளார் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டிருந்தது.

    ஏப்ரல் 10ந்தேதி மும்பையில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. கதாநாயகிகளாக நயன்தாராவும், கீர்த்தி சுரேசும் நடிக்க வாய்ப்புள்ளது. மேலும், ரஜினியின் மகளாக நிவேதா தாமஸ் புதிதாக அணியில் இணைந்துள்ளார். இந்த நிலையில் இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யாவை வில்லனாக நடிக்க படக்குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக புதிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.



    ‘மெர்சல்’ மற்றும் ‘ஸ்பைடர்’ படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனம்கவர்ந்த வில்லனாக எஸ்.ஜே.சூர்யா வலம் வந்தார். தற்போது அவர் கள்வனின் காதலி இயக்குநர் தமிழ்வாணனின் இயக்கத்தில் அமிதாப் பச்சன் மற்றும் ரம்யா கிருஷ்ணனுடன் ‘உயர்ந்த மனிதன்’ படத்தில் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பும் மும்பையில்தான் நடைபெற்று வருகிறது. இது அமிதாப் பச்சன் நடிப்பில் வெளிவரும் முதல் நேரடி தமிழ்த் திரைப்படமாகும். இந்தப் படத்தின் போஸ்டரையும் ரஜினிகாந்த் வெளியிட்டிருந்தார்.
    ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘வாட்ச்மேன்’ படக்குழுவினர், பாலியல் குற்றங்களை தடுக்க சிசிடிவி கேமராக்களை பொருத்தியிருக்கின்றனர். #Watchman
    விஜய் இயக்கத்தில் ‘வாட்ச்மேன்’ என்னும் படம் உருவாகி இருக்கிறது. டபுள் மீனிங் புரடக்‌‌ஷன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரிக்க ஜி.வி.பிரகாஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த படம் வரும் 12-ந்தேதி வெளியாக இருக்கிறது. இந்த பட நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் பேசியதாவது:-

    ‘இந்த படம் முழுக்க குழந்தைகளோடு குடும்பமாக ரசிக்கும் வகையில் எடுக்கப்பட்டது. படத்தின் தயாரிப்பாளர் வித்தியாசமான முறையில் படத்தை விளம்பரப்படுத்தி வருகிறார். முக்கியமாக பொள்ளாச்சியில் சமீபத்தில் பெண்கள் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டனர்.

    இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காத வகையில் அந்த நகரின் முக்கிய இடங்களில் 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை பொருத்த இருக்கிறார். வாட்ச்மேன் பொள்ளாச்சி நகரத்தையே கண்காணிப்பார்’.

    இவ்வாறு அவர் பேசினார்.



    தயாரிப்பாளர் அருண் மொழி மாணிக்கம் பேசும் போது, ‘பொள்ளாச்சியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது தொடக்கம் தான். இதுபோல பல நல்ல வி‌ஷயங்கள் செய்ய உள்ளோம். கோடைகாலம் என்பதால் ஆங்காங்கே வெயிலில் தவிக்கும் சிறு வியாபாரிகளுக்கு குடை அமைத்து தர உள்ளோம். சென்னை நகரம் முழுக்க கேமரா பொருத்தி கண் காணித்ததால் குற்றங்கள் குறைந்து இருக்கின்றன என்று கேள்விபட்டோம்.

    அதனால் தான் இந்த யோசனை வந்தது. எங்களை பார்த்து பலர் ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிசிடிவி கேமரா அமைக்க முன்வந்தால் மகிழ்ச்சி அடைவோம்’ என்றார்.

    நடிகர் ஜி.வி.பிரகாஷ் பேசும்போது, ‘நல்ல வி‌ஷயம் செய்கிறீர்கள். நாங்கள் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். பாதுகாப்புக்கு நீங்கள் எடுத்த முயற்சிக்கு பாராட்டுகள். என்னால் முடிந்த உதவிகளை நான் செய்வேன். இந்த படம் குழந்தைகளை மகிழ்விக்கும். நாச்சியார், சர்வம் தாளமயம் படங்களுக்கு பிறகு இந்த படம் எனக்கு பெரிய பெயரை ஏற்படுத்தி கொடுக்கும்’ என்றார்.

    வரும் 10-ந்தேதி புதன் கிழமை பொள்ளாச்சியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் ஜீ.வி. பிரகாஷ், இயக்குனர் விஜய் கலந்துகொள்கிறார்கள்.
    மோடி படத்துக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டிருப்பதாக கூறி சினிமா தணிக்கை குழு தலைவருக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. #PMNarendraModi #ModiBiopic
    பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட பி.எம் நரேந்திர மோடி திரைப்படம் ஏப்ரல் 11-ந்தேதி வெளியாக உள்ளது. ஓமங் குமார் இயக்கி விவேக் ஓபராய் நடித்திருக்கும் இந்தத் திரைப்படத்துக்கு ஏற்கனவே எதிர்க்கட்சிகள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தின. இந்த திரைப்படம் தேர்தல் நேரத்தில் வெளியாவது பா.ஜனதாவுக்குச் சாதகமாக அமையும் என கருத்து தெரிவித்துள்ளன.

    படம் வெளியாகும் அன்று பாராளுமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், அசாம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட 20 மாநிலங்களின் வாக்குப்பதிவு அன்று நடைபெற உள்ளது.



    இதுபற்றி மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சியின் அமேய் கோப்கர் தன்னுடைய அறிக்கையில், “ஒரு திரைப்படத்தை வெளியிடுவதற்கு முன் அதன் தயாரிப்பாளர் தணிக்கை குழுவுக்கு 58 நாட்களுக்கு முன் சமர்ப்பித்திருக்க வேண்டுமென்பது தணிக்கை விதி.

    ஆனால், ஏன் மோடியின் திரைப்படத்துக்கு மட்டும் சிறப்புச் சலுகைகள் அளிக்கப்படுகின்றன? அரசாங்கத்தைச் சமாதானப்படுத்த இந்தப் படத்துக்காக தங்கள் விதிகளைத் தளர்த்திய தணிக்கைக் குழுவுக்குக் கண்டனம் தெரிவிக்கிறோம். தணிக்கைக் குழுவின் தலைவர் பிரசூன் ஜோஷி உடனடியாக தன் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும்”

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    நடிகர் சிம்புவின் தம்பி குறளரசனின் திருமணத்திற்கு ரஜினியை நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்திருக்கிறார் டி.ராஜேந்தர். #Kuralarasan #Rajinikanth
    டி.ராஜேந்தரின் இளைய மகனும், நடிகர் சிம்புவின் தம்பியுமான குறளரசனுக்கு வருகிற ஏப்ரல் 29-ந் தேதி சென்னையில் திருமணம் நடைபெற இருக்கிறது. இதற்காக நடிகர் ரஜினியை நேரில் சந்தித்து அழைப்பிதழை கொடுத்திருக்கிறார் டி.ராஜேந்தர். மேலும் இவருடன் குறளரசனும் சென்றிந்தார்.

    சமீபத்தில் பெற்றோர் சம்மதத்துடன் இஸ்லாமிய மதத்திற்கு மாறிய குரளரசன், இஸ்லாமிய பெண் ஒருரை காதலித்து திருமணம் செய்ய இருக்கிறார். 



    நேற்று தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த்தை சந்தித்து அழைப்பிதழை டி.ராஜேந்தர் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #Rajini #Kuralarasan #TRajendar
    சுதா கோங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாக இருக்கும் ‘சூர்யா 38’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. #Suriya38 #Suriya
    சுதா கோங்கரா இயக்கத்தில் 'சூர்யா38' படத்தின் பூஜை இன்று நடந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு நாளை சென்னையில் துவங்குகிறது. சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் இவர்களுடன் இணைந்து, சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற சீக்யா என்டர்டெயின்மெண்ட்டின் குணீத் மோங்காவும் இணைந்து தயாரிக்கிறார்.



    இப்படத்தின் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். நாடு முழுவதுமுள்ள திறமை வாய்ந்த நடிகர், நடிகைகளும் இப்படத்தில் பங்கு பெறுகிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்குனராக ஜாக்கி பணியாற்றுகிறார். 
    ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் ஆர்.ஆர்.ஆர் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண் இருவரும் போராளிகளாக நடித்து வருகிறார்கள். #RRR
    மிக பிரமாண்டமான காட்சியமைப்புகளால் உலக அளவில் பேசப்பட்ட திரைப்படம் ‘பாகுபலி.’ எஸ்.எஸ்.ராஜமவுலியின் இயக்கத்தில் உருவான இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனையையும் செய்தது. இதையடுத்து ராஜமவுலி இயக்கத்தில் வரும் அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவானது. 

    ‘மகதீரா’ படம் மூலம் ராம்சரண், ‘ஸ்டூடண்ட் நம்பர் 1’, ‘சிம்ஹாத்ரி’ மற்றும் ‘எமதொங்கா’ ஆகிய படங்களின் மூலம் ஜூனியர் என்.டி.ஆர். ஆகிய இருவருக்கும் திருப்புமுனையைக் கொடுத்தவர் ராஜமவுலி. அவர்கள் இருவரையும் தன்னுடைய அடுத்தப் படத்தில் இணைத்த ராஜமவுலி, அந்த படத்தில் தற்காலிகமாக ‘ஆர்.ஆர்.ஆர்.’ என்று பெயரிட்டுள்ளார். இதன் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.



    பிரிட்டீஷ் ஆட்சி காலத்தில் நடைபெறுவதாக கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதில் கோமரம் பீம் என்ற கதாபாத்திரத்தில், பழங்குடியின மக்களுக்கான நியாயம் கேட்டு போராடும் தலைவராக ஜூனியர் என்.டி.ஆரும், பிரிட்டீஷாரை எதிர்த்து கலகத்தில் ஈடுபடும் அலுரி சீதாராம ராஜூ என்ற கதாபாத்திரத்தில் ராம்சரணும் நடிப்பதாக தகவல்கள் வெளியாயின. 

    ரூ.350 கோடி செலவில் பிரமாண்டமாக உருவாகும் இந்தத் திரைப்படத்தை, அடுத்த ஆண்டு ஜூலை 30-ந் தேதி வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பெரிய பட்ஜெட் மற்றும் பீரியட் படம் என்பதால், சொன்ன நேரத்தில் படத்தை வெளியிட முடியுமா என்பது சந்தேகம்தான். தாமதமானாலும், ராஜமவுலியிடம் இருந்து ஒரு தரமான படம் ரசிகர்களுக்கு கிடைக்கும் என்பதில் மட்டும் சந்தேகமே இல்லை.
    ×