என் மலர்
- பொங்கல் திருநாள் என்பது தமிழர்கள் அனைவருக்குமான திருவிழா.
- தை முதல் நாளில், தமிழர்களின் இல்லங்கள்தோறும் மகிழ்ச்சி பொங்கட்டும்.
சென்னை:
பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பொங்கட்டும் மகிழ்ச்சி, வெல்லட்டும் தமிழ்நாடு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் தமிழர் திருநாளாம் பொங்கல் வாழ்த்து மடல்.
தை முதல்நாள் தமிழர் வாழ்வில் சிறப்புமிக்க நாள். இல்லங்களிலும் உள்ளங்களிலும் இன்பம் பொங்கிடும் பொங்கல் விழா தொடங்குகிற நன்னாள். உழைப்பைப் போற்றுகின்ற திருநாள். தமிழ்ப் பண்பாட்டை உலகம் அறிந்திடும் வகையில் மகிழ்ச்சியான கலை, பண்பாட்டு நிகழ்வுகளும் பாரம்பரியமிக்க விளையாட்டுப் போட்டிகளுமாகக் கொண்டாடப்படுகிற நாள். அந்த மகிழ்ச்சி இந்த ஆண்டில், இன்னும் கூடுதலாக இருப்பதை தமிழ்நாடு முழுவதும் காண முடிகிறது.
கடந்த 5 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் இயற்கையும் அரசு நிர்வாகமும் பருவம் தவறாமல் பணி செய்ததன் விளைவாக, விளைநிலங்கள் செழித்து, உழவர்களுடைய உழைப்பின் விளைச்சலையும், அதற்குரிய பலன்களையும் அதிகமாக்கியிருப்பதால் அவர்களின் நெஞ்சத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. இயற்கை சீற்றங்கள் ஏற்பட்ட போதும், விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் துணையாகவும் அரணாகவும் நின்றது உங்களில் ஒருவனான என் தலைமையிலான திராவிட மாடல் அரசு.
பொங்கல் திருநாள் என்பது தமிழர்கள் அனைவருக்குமான திருவிழா. அதில் சாதி பேதம் கிடையாது. மத வேறுபாடுகள் கிடையாது. ஏழை - பணக்காரர் என்ற ஏற்றத்தாழ்வு கிடையாது. பெண் - ஆண் என்ற பாகுபாடு கிடையாது. எல்லாருக்குமான திருநாள் பொங்கல். எல்லாருக்குமான அரசு, திராவிட மாடல்.
ஆட்சிப் பொறுப்பேற்றபோது கொரோனா இரண்டாவது பேரலையின் கடுமையான தாக்கம், அதனைத் தொடர்ந்து நிரந்தரக் கொரோனா போல தாக்கிக் கொண்டே இருக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசின் தமிழ்நாட்டின் மீதான வஞ்சகம், அவ்வப்போது எதிர்கொண்ட இயற்கைப் பேரிடர்கள் என எல்லாவற்றையும் கடந்து, தமிழ்நாடு இன்று பல்வேறு இலக்குகளில் இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. அதை ஒன்றிய அரசின் துறைகள் வெளியிடும் புள்ளிவிவரங்களும் தரவரிசைகளுமே உறுதிப்படுத்துகின்றன.
ஐந்து ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் தமிழ்நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களிடமும் சென்று சேர்ந்து, அவர்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பதுடன், ஒட்டுமொத்த மாநிலத்தின் வளர்ச்சியையும் உறுதி செய்துள்ளது. நிரந்தரத் தடைகளை ஏற்படுத்த முயலும் சக்திகளைக் கடந்து, நிரந்தர மகிழ்ச்சியை மக்களுக்குத் தருவதுதான் திராவிட மாடல் அரசின் உன்னத நோக்கமாகும்.
திராவிட மாடல் அரசின் திட்டங்களை நாம் பட்டியலிட்டுச் சொல்வதைவிட, அதனால் பயனடைந்து வரும் மக்களும், இத்தகைய திட்டங்களால் தமிழ்நாடு கண்டுள்ள வளர்ச்சியை உணர்ந்துள்ள பல்வேறு துறைகளின் பிரமுகர்களும் தங்களின் உள்ளத்திலிருந்து பேசுவதை, 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு', 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்', 'உலகம் உங்கள் கையில்' உள்ளிட்ட நிகழ்வுகளில் கண்டோம். இதுதான் திராவிட மாடல் அரசு கட்டி எழுப்பியுள்ள இன்றைய தமிழ்நாடு. எனினும், இது போதாது என்பதே உங்களில் ஒருவனான என்னுடைய எண்ணம். இன்னும் பல உயர்வுகளை நாம் அடைந்திட வேண்டும். அதற்கேற்ப நம் அரசு உழைத்திடும். உழைக்கின்ற மக்களின் உணர்வுகளை மதித்திடும்.
1 கோடியே 30 இலட்சம் குடும்பத் தலைவியருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் வாயிலாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வரும் திராவிட மாடல் அரசு, தமிழ்நாட்டில் உள்ள ஏறத்தாழ 2 கோடியே 23 இலட்சம் அரிசி அட்டைதாரர்களுக்கு மூவாயிரம் ரூபாய் ரொக்கத்துடனான பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கியுள்ளது. தமிழர் திருநாளில், தமிழர்களின் வீடுகள்தோறும் மகிழ்ச்சி பொங்குகிற வகையில் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள இந்தப் பொங்கல் தொகுப்பைப் பெற்றுச் செல்லும் தாய்மார்களின் மலர்ந்த முகமும் அவர்களின் உள்ளத்திலிருந்து வெளிப்படும் நல்வாழ்த்துகளும்தான் திராவிட மாடல் ஆட்சிக்கான நற்சான்று.
தமிழ்நாட்டின் பத்தாண்டுகால இருளை விரட்டி, விடியலைக் கொண்டு வந்த திராவிட மாடல் ஆட்சி அமைவதற்கு ஓயாது பாடுபட்டவர்கள் நம் உடன்பிறப்புகள். அந்த உடன்பிறப்புகளின் மனதிலும் மகிழ்ச்சி பொங்க வேண்டும் என்பதால்தான் கழகத்தின் மாவட்ட – ஒன்றிய – நகர – பகுதி -பேரூர் கிளைகள் சார்பில் மாநிலம் முழுவதும் பொங்கல் விழாக்கள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கழகத்தினர் நடத்துகின்ற பொங்கல் விழாக்கள் பற்றிய செய்தி ஒவ்வொன்றையும் நான் ஆர்வத்துடன் கவனித்து வருகிறேன்.
கழகத்தினருடன் பொதுமக்களும் இந்தப் பொங்கல் விழாக்களில் பங்கேற்று, திராவிடப் பொங்கலைக் கொண்டாடி வருவதைக் கண்டு உள்ளத்தில் மகிழ்ச்சி ததும்புகிறது. பொங்கல் விழாவையொட்டித் தலைமைக் கழகம் அறிவித்தவாறு, கழகத்தினர் சார்பில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை, தொடர்ந்து நடத்தி வருவதுடன், கோலப் போட்டிகளும் மிகப் பிரம்மாண்டமான முறையிலே நடத்தப்பட்டுப் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
கோலப்போட்டிகளில் பங்கேற்கும் மகளிர் வண்ணக் வண்ணக் கோலங்களை வரைந்து, சமத்துவம் பொங்கட்டும், தமிழ்நாடு வெல்லட்டும், திராவிட மாடல் அரசு தொடரட்டும் என்ற வாசகங்களை எழுதுவதும், கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், அதிலும் மகளிர் நலன் காக்கும் திட்டங்களையே வண்ணக் கோலங்களாக வரைந்து, பார்வையாளர்களின் கண்களை ஈர்த்து, நெஞ்சில் பதிய வைப்பதும் அருமையான நிகழ்வுகளாகத் தொடர்கின்றன.
உங்களில் ஒருவனான என்னுடைய கொளத்தூர் தொகுதியிலும் சமத்துவப் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. சென்னை தெற்கு மாவட்டத்தில் துணை முதலமைச்சர் தம்பி உதயநிதி பங்கேற்ற பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றுள்ளது. மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்புடன் கழக நிர்வாகிகள் நடத்துகிற ஒவ்வொரு பொங்கல் விழாவும் தமிழ் மணத்துடனும் தமிழர் பண்பாட்டுத் திறத்துடனும் கொண்டாடப்படுகின்றன.
கழகம் நடத்துகின்ற பொங்கல் விழாக்களில் வழங்கப்படும் அன்பான பரிசுகள், அனைத்து நிர்வாகிகளுக்கும், செயல் வீரர்களுக்கும், அல்லும் பகலும் அயராது பணியாற்றும் உடன்பிறப்புகளின் கைகளுக்கும் சென்று சேர வேண்டும் என்பதை உங்களில் ஒருவனாக உரிமையுடன் தெரிவித்திடக் கடமைப்பட்டுள்ளேன்.
தமிழரின் தனிப்பெரும் திருவிழாவாக பொங்கலைக் கொண்டாடும் பண்பாட்டு மரபை மீட்டெடுத்ததில் திராவிட இயக்கத் தலைவர்களான தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோருக்கு முதன்மையான பங்கு உண்டு. மாநகரம் தொடங்கி சிறு கிராமம் வரை தமிழர்களின் மரபை உணர்த்திடும் வகையிலான கலை - இலக்கிய நிகழ்ச்சிகள், விளையாட்டுகள் ஆகியவற்றை நடத்துவதை திராவிட அரசியல் பேரியக்கமான திராவிட முன்னேற்றக் கழகம் முக்கால் நூற்றாண்டு காலமாகக் கடைப்பிடித்து வருகிறது.
தமிழ் இனத்தின் பண்பாட்டுப் பெருமைகளில் ஒன்றான, ஜல்லிக்கட்டு எனப்படும் ஏறுதழுவுதல் நிகழ்வைப் பார்ப்பதற்கு உங்களில் ஒருவனான நான், உங்களால் தமிழ்நாட்டு முதலமைச்சரான நான் ஜனவரி 17-ஆம் நாள் அதாவது, தை மாதம் 3-ஆம் நாள் மதுரை அலங்காநல்லூருக்கு நேரில் செல்கிறேன். அந்த அலங்காநல்லூரில் உலகத்தரத்திலான ஏறுதழுவுதல் அரங்கத்தை நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் அவரது நூற்றாண்டு நினைவாக அமைத்துத் திறந்ததும் நமது திராவிட மாடல் அரசுதான்.
தலைவர் கலைஞர் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட தமிழர் பண்பாட்டு நிகழ்வான சென்னை சங்கமம் நிகழ்வை, இந்த ஆண்டும் பொங்கல் விழாவின்போது கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர், நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவர் தங்கை கனிமொழி கருணாநிதி எம்.பி. முன்னின்று நடத்துகிறார். தமிழர்களின் கலைத்திறனைக் காட்டும் பாரம்பரியக் கலைகள் அரங்கேறும் சென்னை சங்கமம் நிகழ்வையும் உங்களில் ஒருவனான நான் ஜனவரி 14 அன்று தொடங்கி வைக்க இருக்கிறேன். சென்னை மட்டுமல்லாது, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் சென்னை சங்கமம் 2026 கலைவிழாக்களில் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டு, நம் மண்ணின் மரபார்ந்த நாட்டுப்புறக் கலைவடிவங்களையும் கலைஞர்களையும் ஆதரித்திட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
தை முதல் நாளில், தமிழர்களின் இல்லங்கள்தோறும் மகிழ்ச்சி பொங்கட்டும். அந்த மகிழ்ச்சி நம் அனைவருக்கும் ஊக்கத்தையும் உத்வேகத்தையும் வழங்கட்டும். சூரியனைப் போற்றும் பொங்கல் நன்னாள், உடன்பிறப்புகளின் உழைப்பினால் கழகத்திற்கு வெற்றிப் பொங்கலாக அமையட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்! என கூறியுள்ளார்.
- நேற்று தங்கம் ஒரு சவரன் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 960 ரூபாய்க்கும் விற்பனையானது.
- வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை காலை, மாலை என இருவேளைகளில் உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தில் விற்பனையாகிறது. இதனால் சுபநிகழ்ச்சிகளுக்காக தங்கம் வாங்க நினைப்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், வார தொடக்க நாளான நேற்றும் தங்கம் விலை அதிரடியாக கிராமுக்கு 220 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,120-க்கும் சவரனுக்கு 1,760 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 960 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி விலையும் நேற்று ஒரே நாளில் கிராமுக்கு 12 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 287 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இன்றும் தங்கம் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,170-க்கும் சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 360 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதன்மூலம் தங்கம் புதிய உச்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்துக்கு போட்டியாக வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. அந்த வகையில், இன்று கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 292 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
12-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,960
11-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,03,200
10-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,03,200
9-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,400
8-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,000
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
12-1-2026- ஒரு கிராம் ரூ.287
11-1-2026- ஒரு கிராம் ரூ.275
10-1-2026- ஒரு கிராம் ரூ.275
9-1-2026- ஒரு கிராம் ரூ.268
8-1-2026- ஒரு கிராம் ரூ.272
- பேந்தர் ஹப் என்பது உணவகத்துடன் கூடிய மனமகிழ் மன்றமாக உருவாக்கப்பட்டுள்ளது.
- பிரமாண்ட திறப்பு விழாவில் ஷாருக்கானை காண ஏராளமான ரசிகர் கூட்டம் குவிந்தது.
துபாய் தேராவில் ஜுவல் ஆப் கிரீக் வளாகத்தில் நிறுவப்பட்ட 'பேந்தர் ஹப் மற்றும் ஏ.டி.கே. ஸ்கொயர் உணவக திறப்பு விழா பிரமாண்டமாக நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் ஷாருக்கான் கலந்துகொண்டு திறந்து வைத்தார்.
துபாயை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கண்ணன் ரவி குழுமத்தின் (கே.ஆர்.ஜி) சார்பில் தேரா பகுதியில் உள்ள ஜுவல் ஆப் கிரீக் வளாகத்தில் 'பேந்தர் ஹப் மற்றும் ஏ.டி.கே. ஸ்கொயர் உணவகம் நிறுவப்பட்டது. பேந்தர் ஹப் என்பது உணவகத்துடன் கூடிய மனமகிழ் மன்றமாக உருவாக்கப்பட்டுள்ளது.
அதேபோல ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களின் உணவு வகைகளை வழங்கும் விதமாக ஏ.டி.கே. ஸ்கொயர் என்ற பெயரில் உணகவமும் நிறுவப்பட்டது.

இந்த பேந்தர் ஹப் மற்றும் ஏ.டி.கே. ஸ்கொயர் உணவகத்தை திறந்து வைக்க பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வருகை புரிந்தார்.
அவரை கே.ஆர் குழுமத்தின் தலைவர் கண்ணன் ரவி மற்றும் பராக் ரெஸ்டாரண்ட் மேலாண்மை இயக்குனர் தீபக் ரவி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
பிறகு அந்த நிறுவனங்களை நடிகர் ஷாருக்கான் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பிரமாண்ட திறப்பு விழாவில் அவரை காண ஏராளமான ரசிகர் கூட்டம் குவிந்தது.
தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் சுவீடன் நாட்டை சேர்ந்த பிரபல மேஜிக் நிபுணர் ஜோ லேபரோவின் நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
அவருடன் கனடாவில் வசித்து வரும் இந்திய வம்சாவளி நடிகையும், நடனக்கலைஞருமான நோரா பத்தேஹி கலந்துகொண்டு ரசிகர்களை மகிழ்வித்தார்.

தொடர்ந்து 2-வது நாளும் அந்த வளாகத்தில் திறப்பு விழா நிகழ்ச்சிகள் தொடர்ந்தது. இதில் குஷ்பு, ரோஜா, ஆர்.கே செல்வமணி, ஜெய், ஜெயப்பிரகாஷ், லைக்கா சுபாஸ்கரன், யுவன் சங்கர் ராஜா, மிர்ச்சி சிவா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி, அம்மா கிரியேஷன்ஸ் சிவா, சித்ரா லட்சுமணன், சுப்பு பஞ்சு, வைபவ், அஜய் ராஜ், ராஜீவ் கோவிந்தன், மாதம்பட்டி ரங்கராஜ், அரவிந்த் ஆகாஷ் மற்றும் வழக்கறிஞர் விஜயன் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரபலங்கள் வருகை புரிந்திருந்தனர்.
- மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் மிகுந்த கவனம் தேவை.
- பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் படிப்படியாக அகலும்.
சிம்ம ராசி நேயர்களே!
தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் ஜென்மத்தில் கேது சஞ்சரிப்பதால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். 6-ம் இடத்தில் சூரியன், செவ்வாய், சுக்ரன், புதன் ஆகிய கிரகங்கள் இருப்பதால் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வாழ்க்கை அமையும். உறவினர் பகை உருவாகாமல் பார்த்துக்கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும். வீடு, இடம் வாங்குவதன் மூலமாகவோ, மணவிழா, மணிவிழா போன்றவை நடத்துவதன் மூலமாகவோ, சுப விரயங்களை மேற்கொண்டால் வீண் விரயங்களில் இருந்து தப்பிக்க இயலும். சனியின் பார்வை இருப்பதால் ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும்.
வக்ர குரு
மிதுன ராசியில் சஞ்சரிக்கும் குரு, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு பகவான். அவர் வக்ரம் பெற்றிருக்கும் இந்த நேரம், பிள்ளைகளால் பிரச்சனைகள் அதிகரிக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்சனைகள் மீண்டும் தலைதூக்கும். காரியத்திலும் தாமதம் ஏற்படும். உறவினர்களுக்கு உதவி செய்யப்போய் உபத்திரவத்தில் முடியலாம். பிள்ளைகளாலும் பிரச்சனைகள் வந்து அலைமோதும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத மாற்றங்கள் வந்து மனக்கிலேசத்தை உருவாக்கும். வியாபாரத்தில் நண்பர்களால் இழப்புகள் ஏற்படலாம். குருவின் பார்வை 3, 5, 7 ஆகிய இடங்களில் பதிகிறது. பஞ்சம ஸ்தானம் குரு வீடு. குரு வீட்டை குருவே பார்ப்பது யோகம்தான். பூர்வ புண்ணிய ஸ்தானத்தின் பயனாக கிடைக்க வேண்டிய பலன்கள் இப்பொழுது கிடைக்கும். இருந்தாலும் மனக்கசப்பு தரும் தகவல்களும் வந்துசேரும். நண்பர்களை நம்பிப் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். சில காரியங்கள் தாமதமாக வந்தாலும் முடிவில் நல்லவிதமாக முடிவடையும். இக்காலத்தில் சுபச்செலவுகள் செய்வதன் மூலம் தேவையற்ற விரயங்களை தவிர்க்க இயலும். பஞ்சாயத்துக்களில் இடையூறாக இருந்தவர்கள் விலகுவர். 'வியாபாரத்தில் பழைய கூட்டாளிகளை விலக்கிவிட்டு, புதிய கூட்டாளிகளைச் சேர்க்கலாமா?' என்று சிந்திப்பீர்கள்.
கும்ப - புதன்
உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், புதன். அவர் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது, `வாழ்க்கைத் துணைக்கு வேலை இல்லையே' என்ற கவலை அகலும். வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டினால் நல்லபடி அமையும். பொதுவாக நினைத்தது நிறைவேறும் நேரம் இது. மாமன், மைத்துனர் வழியில் ஒத்துழைப்பு திருப்தி தரும். அவர்களது இல்லங்களில் நடைபெறும் சுப நிகழ்வுகளை முன்னின்று நடத்துவீர்கள். முக்கியப் புள்ளிகளின் வரிசையில் உங்கள் பெயர் இடம்பெறும் வண்ணம் நல்ல காரியமொன்றை செய்து முடிப்பீர்கள்.
கும்ப - சுக்ரன்
மகரத்தில் சஞ்சரிக்கும் சுக்ரன் 7.2.2026 அன்று கும்ப ராசிக்கு செல்கிறார். இக்காலத்தில் உடன்பிறப்புகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். அவர்கள் மூலமாக ஒருசில நல்ல காரியங்கள் நடைபெறும். 'பழைய தொழிலை பைசல் செய்துவிட்டு புதிய தொழில் தொடங்கலாமா?' என்று சிந்திப்பீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை முன்னிட்டு சீர்வரிசைப் பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கவில்லையே என்று, வேறு இடத்திற்கு மாறும் எண்ணத்தை உறுதிப்படுத்திக்கொள்வர். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு புதிய கூட்டாளிகள் வந்திணைவர். கலைஞர்களுக்கு பெருமை சேரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் மிகுந்த கவனம் தேவை. பெண்களுக்கு ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. சுபச்செலவுகள் அதிகரிக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜனவரி: 15, 26, 27, 30, 31, பிப்ரவரி: 5, 6, 10, 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கரும்பச்சை.
கன்னி ராசி நேயர்களே!
தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன், தனாதிபதி சுக்ரனோடு இணைந்து பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எனவே, பொருளாதாரத்தைப் பொறுத்தவரை நிறைவு ஏற்படும். புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து காரியங்களை முடித்துக்கொடுப்பர். 10-ல் குரு இருப்பதால் புதிய பொறுப்புகள் வந்துசேரும். உத்தியோகத்தில் பதவி மாற்றம் ஏற்படலாம். பொதுவாழ்வில் இருப்பவர்கள் வீண்பழியில் இருந்து விடுபடுவர். அவர்கள் விரும்பியபடியே பதவி வாய்ப்பு கிடைக்கும்.
வக்ர குரு
மிதுன ராசியில் சஞ்சரிக்கும் குரு, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவர் வக்ரம் பெறுவது நன்மைதான். கேந்திராதிபத்திய தோஷம் பெற்ற குரு, வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கும் பொழுது இனிய பலன்கள் ஏராளம் நடைபெறும். குறிப்பாக இடம், பூமி வாங்கும் முயற்சியில் இருந்த தடை அகலும். கடன் சுமை குறைய எடுத்த முயற்சி கைகூடும். 'வரன்கள் வந்து வந்து திரும்புகின்றதே.. எதுவும் முடிவாகவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இனி வரும் வாய்ப்புகள் நல்லதாக அமையும். குருவின் பார்வை 2, 4, 6 ஆகிய மூன்று இடங்களில் பதிகின்றது. அந்த மூன்று இடங்களுக்குரிய பலன்கள் உங்களை வந்தடையும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் படிப்படியாகக் குறையும். கொடுக்கல் - வாங்கலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. வாடகைக் கட்டிடத்தில் இருந்தவர்கள் சொந்தக் கட்டிடத்திற்கு மாற எடுத்த முயற்சி கைகூடும். தாயின் உடல்நலம் சீராகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் திறமைக்கேற்ற அங்கீகாரத்தை அளிப்பர். குடும்பத்தில் கருத்து வேறுபாடு அகல, விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. இருப்பினும் அதைச் சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. பழைய பிரச்சனைக்குப் புதிய அணுகுமுறையில் தீர்வு காண்பீர்கள்.
கும்ப - புதன்
உங்கள் ராசிநாதனாகவும், 10-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் புதன். 'மறைந்த புதனால் நிறைந்த தனலாபம்' என்பார்கள். அதன்படி 6-ல் சஞ்சரிக்கும் புதனால், பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகம் சம்பந்தமாக ஊதிய உயர்வுடன் நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். திட்டமிட்ட காரியங்கள் சிறப்பாக நடைபெறும். தொடர் கடனால் அவதிப்பட்டவர்களுக்கு, கொடுக்கல்- வாங்கலை ஒழுங்கு செய்துகொள்ள வழிபிறக்கும். பெற்றோரின் ஆதரவோடு பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். ஒரு சிலருக்கு உத்தியோக மாற்றம் உறுதியாகும்.
கும்ப - சுக்ரன்
மகரத்தில் சஞ்சரிக்கும் சுக்ரன் 7.2.2026 அன்று கும்ப ராசிக்கு செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவரது பெயர்ச்சி மூலம் குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. பழுதாகி செலவு வைக்கும் பழைய வாகனத்தால் அவதிப்பட்டவர்களுக்கு, புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு உருவாகும். பெற்றோர் வழி ஆதரவு திருப்தி தரும் விதம் அமையும். போட்டிக்கு மத்தியில் வியாபாரம் வெற்றிநடைபோடும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு பொறுப்புகளில் மாற்றம் ஏற்பட்டு மனக்குழப்பத்தை உருவாக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு மாதத்தின் முற்பாதியில் லாபம் வரும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வருவதில் தாமதம் ஏற்படும். மாணவ - மாணவிகள் கல்வியில் வெற்றி பெற, கடினமாக முயற்சிக்க வேண்டியதிருக்கும். உறவினர் பகை உருவாகும் என்பதால், பெண்கள் கவனமாக செயல்படுங்கள்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜனவரி: 17, 18, 25, 29, பிப்ரவரி: 1, 2, 7, 8.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.
துலாம் ராசி நேயர்களே!
தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் புதனுடன் இணைந்து 'புத சுக்ர யோக'த்தை வழங்குகிறார். மேலும் குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு குரு பகவான் பகைக் கிரகமாவார். அவர் வக்ரம் பெற்றிருப்பது யோகம்தான். எனவே உங்கள் ராசி புனிதமடைகிறது. சென்ற மாதத்தில் தாமதப்பட்ட காரியங்கள் இப்பொழுது தடையின்றி நடைபெறும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த முன்னேற்றம் இப்பொழுது வந்துசேரும். ஆரோக்கியத் தொல்லை அகன்று உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள்.
வக்ர குரு
மிதுன ராசியில் சஞ்சரிக்கும் குரு, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். அவரது பார்வை உங்கள் ராசியிலும், 3, 5 ஆகிய இடங்களிலும் பதிகிறது. குரு, உங்கள் ராசியின் சகோதர ஸ்தானத்திற்கு அதிபதி. மேலும் எதிர்ப்பு, வியாதி, கடன் ஆகியவற்றைக் குறிக்கும் இடங்களுக்கும் அதிபதி. எனவே இந்த காலகட்டத்தில் எதிர்ப்புகள் விலகும். எதிர்காலத்தைப் பற்றிய பயம் அகலும். ஜீவனத்திற்கு கவலை இல்லாத சூழ்நிலை உருவாகும். ஆரோக்கியத் தொல்லையால் அவதிப்பட்டு வந்தவர்கள், குணமடைவர். குருவின் பார்வை பலத்தால் உடன்பிறப்புகளின் திருமணம் அல்லது அவர்களின் வாரிசு திருமணத்தை முன்னின்று நடத்தி வைப்பீர்கள்.
பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் படிப்படியாக அகலும். இதுவரை பாகப்பிரிவினைக்கு ஒத்து வராத உடன்பிறப்புகள் இப்பொழுது மனம் மாறி ஒத்துழைப்பு தருவர். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சி பலன்தரும். உத்தியோகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் இப்பொழுது மாற்றப்படுவர். 'இடம் வாங்க வேண்டும், வீடு கட்ட வேண்டும், அதற்கு பண உதவி கிடைக்குமா?' என்று காத்திருந்தவர்களுக்கு இப்பொழுது நல்ல தகவல் கிடைக்கும். தொழில் நடத்துபவர்கள் பழைய பங்குதாரர்களை விலக்கிவிட்டு, புதிய பங்குதாரர்களை சேர்த்துக்கொள்வர்.
கும்ப - புதன்
உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிப்பது யோகம்தான். 'ஐந்தும் ஒன்பதும் மிஞ்சும் பலன் தரும்' என்பார்கள். எனவே மிதமிஞ்சிய பொருளாதாரம் ஏற்படும். துணிந்து சில முடிவுகளை எடுத்து, மற்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவீர்கள். எந்த ஒரு வேலையையும் எளிதில் முடித்து வெற்றி காண்பீர்கள். அலுவலகப் பணிகளில் உங்கள் திறமைகளைப் பார்த்து மேலதிகாரிகள் வியப்பர். பதவி உயர்வு தானாக தேடிவரும். மாமன், மைத்துனர் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள்.
கும்ப - சுக்ரன்
உங்கள் ராசிநாதன் மற்றும் அஷ்டமாதிபதியான சுக்ரன் 7.2.2026 அன்று பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது, பிள்ளைகளால் விரயம் ஏற்படும். எனவே அவர்களை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. அவர்களின் கல்வி சம்பந்தமாகவோ, கல்யாணம் சம்பந்தமாகவோ எடுத்த முயற்சி தடைப்பட்டு வந்திருக்கலாம். அது இப்போது கைகூடும். இடமாறுதல் இனிமை தரும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் உயரும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வரும் மாற்றம் நல்ல மாற்றமாக அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு உண்டு. கலைஞர்களுக்கு மாதத்தின் பிற்பாதியில் ஒப்பந்தங்கள் வந்துகொண்டே இருக்கும். மாணவ - மாணவிகளுக்கு ஆசிரியர் மற்றும் பெற்றோரின் ஆதரவு உண்டு. பெண்களுக்கு குடும்பத்தில் பாசமும், நேசமும் அதிகரிக்கும். உங்கள் பெயரிலேயே தொழில் தொடங்கும் முயற்சி கைகூடலாம்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜனவரி: 17, 18, 19, 28, 29, பிப்ரவரி: 3, 4, 10, 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.
விருச்சிக ராசி நேயர்களே!
தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் செவ்வாய் சகாய ஸ்தானத்தில் உச்சம்பெற்றுச் சஞ்சரிக்கிறார். அவரோடு லாபாதிபதி புதனும், தொழில் ஸ்தானாதிபதி சூரியனும் இணைந்திருக்கின்றனர். இதனால் செல்வ நிலை உயரும். செல்வாக்கு அதிகரிக்கும். முன்னேற்றத்தின் முதல்படிக்கு செல்ல கிரக நிலைகள் சாதகமாக விளங்குகின்றன. தொழில் வெற்றிநடை போடும். இதயம் மகிழும் செய்தி வந்துகொண்டே இருக்கும். தன ஸ்தானத்தைக் குரு பார்ப்பதால் தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும். எல்லா வழிகளிலும் ஏற்றமும், நல்ல மாற்றமும் கிடைக்கும் நேரம் இது.
வக்ர குரு
மிதுன ராசியில் சஞ்சரிக்கும் குரு, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். அவரது பார்வை உங்கள் ராசிக்கு 2, 4, 12 ஆகிய இடங்களில் பதிகிறது. 'குரு பார்க்க கோடி நன்மை' என்பதால், அந்த இடங்களெல்லாம் புனிதமடைந்து அற்புதமான பலன்களை அள்ளி வழங்கப்போகிறது. உங்கள் ராசியைப் பொறுத்தவரை தன - பஞ்சமாதிபதியானவர் குரு. 'அவர் வக்ரம் பெற்றிருக்கிறாரே' என்று நினைக்க வேண்டாம். அவரது பார்வை தன ஸ்தானத்தில் பதிவதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் கணிசமான தொகை கைகளில் புரளும். மதிப்பு, மரியாதை உயரும். எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். இல்லத்தில் இனிய நிகழ்வுகள் நடைபெற வழிபிறக்கும். நல்லவர்களின் சந்திப்பால் நலம் காண்பீர்கள். சமுதாயப் பணிகளில் ஈடுபடுவோருக்கு விருதுகளும், பாராட்டுக்களும் கிடைக்கும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு பொறுப்புகளும், புதிய பதவிகளும் கிடைக்கும்.
கும்ப - புதன்
உங்கள் ராசிக்கும் 8, 11-க்கும் அதிபதியான புதன் 29.1.2026 அன்று அவர் சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும்போது, துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். குடும்ப ஒற்றுமை பலப்படும். தொழிலில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை நனவாக்க எடுத்த முயற்சி வெற்றிபெறும். 'புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வரவேண்டும்' என்ற எண்ணம் நிறைவேறும். 'புதிய வாகனம் வாங்க வேண்டும்' என்று நினைத்தவர்களுக்கு, அந்த வாய்ப்பு அமையும். நவீனமான வாகனத்தை வாங்கி மகிழ்வீர்கள். 'வெளிநாட்டில் பணிபுரிய வேண்டும்' என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு, நல்ல நிறுவனங்களில் இருந்து ஊதிய உயர்வுடன் கூடிய வேலை கிடைக்கும்.
கும்ப - சுக்ரன்
உங்கள் ராசிக்கு 7, 12-க்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 4-ம் இடத்தில் சஞ்சரிப்பது நல்ல நேரம்தான். வீடு கட்டிக் குடியேற வேண்டும் அல்லது வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறும். ஆடை, ஆபரணப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இல்லத்திற்கு தேவையான அத்தியாவசிய மற்றும் ஆடம்பரப் பொருட்களை வாங்கும் முயற்சியும் கைகூடும். பிள்ளைகளின் கல்யாணத்தை சிறப்பாகச் செய்து முடிக்கும் எண்ணம் நிறைவேறும். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து உதிரி வருமானம் வரும் வாய்ப்பும் உண்டு. வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ்வீர்கள். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கூடும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெண்களுக்கு போதுமான வருமானம் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜனவரி: 17, 18, 19, 22, 23, பிப்ரவரி: 1, 2, 6, 7, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.
- இப்படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
- ‘தாய் கிழவி’ அடுத்த மாதம் 20-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் படக்குழு தெரிவித்து இருந்தது.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடித்துள்ள புதிய படம் 'தாய் கிழவி'. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். இதில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
உசிலம்பட்டி கிராமத்தில் உள்ள காடுபட்டியில் வாழும் 75 வயது மூதாட்டி மற்றும் அவரது குடும்பத்தை மையமாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் 75 வயது மூதாட்டியாக முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா நடித்துள்ளார். இதனை தொடர்ந்து இப்படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. டீசர் முழுவதும் நடிகை ராதிகா வயதான கெட்டப்பில் வந்து அடாவது செய்யும் காட்சிகள் இடம்பெற்று இருந்தன.
இதனை தொடர்ந்து 'தாய் கிழவி' அடுத்த மாதம் 20-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் படக்குழு தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், 'தாய் கிழவி' படத்தின் டிஜிட்டல் உரிமத்தை பிரபல ஓ.டி.டி. தளம் பெற்றுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, 'தாய் கிழவி' படத்தின் செயற்கைக்கோள் உரிமத்தை விஜய் டிவியும், டிஜிட்டல் உரிமத்தை ஜீயோ ஹாட்ஸ்டாரும் பெற்றுள்ளது.
- ’அல்மான்ட் கிட் சிரப்’ மருந்தில், சிறுநீரகத்தை பாதிக்கும் ’எத்திலீன் கிளைகோல்’ அதிகளவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
- விநியோகிஸ்தர்கள், மருந்துக் கடை உரிமையாளர்கள் இந்த மருந்தை விற்க வேண்டாம்.
புதுச்சேரி:
பீகார் மாநிலம், ஹாஜிபூர் வைஷாலியில் உள்ள ட்ரிடஸ் ரெமிடீஸ் நிறுவன தயாரிப்பான, 'அல்மான்ட் கிட் சிரப்' மருந்தில், சிறுநீரகத்தை பாதிக்கும் 'எத்திலீன் கிளைகோல்' அதிகளவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து கிழக்கு மண்டலத்தின் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு துறை, அல்மான்ட் கிட் மருந்தை தடை செய்து, அனைத்து மாநில மருந்து கட்டுப்பாட்டு துறைக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. கொல்கத்தா மற்றும் தெலுங்கானாவில் இம்மருந்து விற்பனைக்கு உடனடியாக தடை விதிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து புதுச்சேரியிலும் இம்மருந்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி மருந்து தர கட்டுப்பாட்டு ஆணைய அதிகாரி ஆனந்த கிருஷ்ணன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
அல்மான்ட் கிட் சிரப்பில் எத்திலின் கிளை கோலின் அதிகளவு இருப்பது தெரியவந்துள்ளது. எனவே இந்த சிரப்பை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம்.
விநியோகிஸ்தர்கள், மருந்துக் கடை உரிமையாளர்கள் இந்த மருந்தை விற்க வேண்டாம். இருப்பில் உள்ள மருந்துகளை நிறுவனத்திற்கே திருப்பி அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
- நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
- இந்த போட்டியின் ஆட்டநாயகனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல்போட்டி வதோதராவில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 300 ரன்கள் குவித்து, இந்தியாவிற்கு 301 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
அதனைத்தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 49 ஓவரில் வெற்றி பெற்று அசத்தியது. இந்த போட்டியில் 93 ரன்கள் எடுத்த விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இதன்மூலம் அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்ற 2-வது வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். விராட் 71 முறை ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார். முதல் இடத்தில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உள்ளார். அவர் 75 முறை ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார்.
3 முதல் 5 இடங்கள் முறையே இலங்கை வீரர் ஜெயசூர்யா (58), தென் ஆப்பிரிக்கா வீரர் கல்லீஸ் (57) இலங்கை வீரர் சங்ககாரா (50) ஆகியோர் உள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் சச்சினுக்கு அடுத்தப்படியாக விராட் கோலி 2-வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
- சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
- பாலமேட்டில் வருகிற 16-ந் தேதியும், அலங்காநல்லூரில் 17-ந் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.
- அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார்.
அலங்காநல்லூர்:
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாலமேடு, அலங்காநல்லூரில் உலகப்புகழ் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பொங்கல் பாலமேட்டில் வருகிற 16-ந் தேதியும், அலங்காநல்லூரில் 17-ந் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.
இதற்காக பாலமேட்டில் உள்ள மஞ்ச மலை சுவாமி ஆற்று திடலில் தயார் நிலையில் வாடிவாசல், பார்வையாளர் மாடம் மற்றும் இரண்டு அடுக்கு பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
இதே போல் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதன்படி கோட்டைமுனி சாமி திடல், வாடிவாசல், பார்வையாளர்கள் அமரும் இரும்பு தடுப்பு மேடை, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அமரும் இடம் மற்றும் இரண்டு அடுக்கு பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடந்து வருகிறது. பாலமேட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார்கள். இதை முன்னிட்டு போலீசாரும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.
- வியாழக்கிழமை விரதமும், குரு வழிபாடும் வெற்றியை வழங்கும்.
- பெண்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டு.
மேஷ ராசி நேயர்களே!
தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் செவ்வாய், தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். அவரோடு சூரியன், புதன், சுக்ரன் ஆகிய மூன்று கிரகங்களும் இணைந்திருக்கின்றன. பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி சூரியனோடு செவ்வாய் சேர்க்கை இருப்பதால், இம்மாதம் ஒரு இனிமையான மாதமாக அமையும். பூர்வ புண்ணியத்தின் பலனால் கிடைக்க வேண்டிய அத்தனை யோகமும் உங்களுக்கு வரப்போகிறது. பொருளாதார நிலை உச்சம்பெறும். புனிதப் பயணம் அதிகரிக்கும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். லாப ஸ்தானத்தில் சனி இருப்பதால், லாபம் அதிகரிக்கும் மாதமாகவே இம்மாதம் இருக்கும்.
வக்ர குரு
மிதுன ராசியில் உள்ள குரு, இந்த மாதம் முழுவதும் வக்ர நிலையிலேயே இருக்கிறார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. பாக்கிய - விரயாதிபதியான குரு, வக்ரம் பெறுவதால் சுபவிரயம் அதிகரிக்கும். 'இல்லத்தில் சுப காரியங்கள் நடைபெறவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது சுபச்செய்திகள் வந்து மனதை மகிழ்விக்கும். அதேநேரத்தில் பூர்வீக சொத்துப் பிரச்சனை சம்பந்தமாக பாகப் பிரிவினை செய்துகொள்ள எடுத்த முயற்சி தாமதமாகும். சகோதரர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பஞ்சாயத்துக்கள் முடிவடையாமல் இழுபறி நிலையில் இருக்கும்.
குருவின் பார்வை 7, 9, 11 ஆகிய மூன்று இடங்களில் பதிவதால் அந்தந்த இடங்கள் புனிதமடைகின்றன. குடும்ப ஒற்றுமை கூடும். உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்களுக்கோ திருமணம் முடிவாக வாய்ப்புண்டு. வெளிநாட்டு முயற்சி அனுகூலம் தருவதாக அமையும். தந்தை வழி பிரச்சனைகள் மறையும். தனித்து இயங்க நினைத்தவர்களுக்கு இப்பொழுது நல்ல சந்தர்ப்பங்கள் வந்துசேரும். கூட்டுத்தொழிலை, தனித் தொழிலாக மாற்றும்போது லாபம் அதிகரிக்கும். வியாழக்கிழமை விரதமும், குரு வழிபாடும் வெற்றியை வழங்கும்.
கும்ப - புதன்
உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், 29.1.2026 அன்று கும்ப ராசிக்குச் செல்கிறார். அவர் லாப ஸ்தானத்திற்கு வரும் நேரம், நல்ல நேரம்தான். சகோதர ஒற்றுமை பலப்படும். படித்து முடித்து வேலை இல்லாமல் இருக்கும் உடன்பிறப்புகளுக்கு வேலை கிடைக்கும். வியாபாரம் தொடங்க நினைத்தவர்களுக்கு அது கைகூடும். குடும்பத்தில் உதிரி வருமானங்களால், பணப்புழக்கம் அதிகரிக்கும். மாமன், மைத்துனர் வழியில் மகிழ்ச்சி தரும் சம்பவம் நடைபெறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும் நேரம் இது.
கும்ப - சுக்ரன்
மகரத்தில் சஞ்சரித்து வரும் சுக்ரன், 7.2.2026 அன்று கும்ப ராசிக்குச் செல்கிறார். உங்கள் ராசிக்கு தன - சப்தமாதிபதியானவர் சுக்ரன். அவர் லாப ஸ்தானத்திற்கு வரும்போது பணவரவு அதிகரிக்கும். பாராட்டும், புகழும் கூடும். மனதிற்கு இனிய சம்பவங்கள் ஏராளமாக நடைபெறும். வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். வரும் அழைப்புகளை ஏற்றுக்கொள்வது நல்லது. இளைய சகோதரருடன் இருந்த பகை மறையும். வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்ற முயற்சிப்பீர்கள். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழில் வெற்றிநடை போடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் அனுகூலம் கிடைக்கும். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் வந்துசேரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு இல்லம் கட்டிக் குடியேறும் வாய்ப்பும், சுபநிகழ்வுகளும் நடைபெறக்கூடும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜனவரி: 17, 18, 22, 23, 28, 29, பிப்ரவரி: 1, 2.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.
ரிஷப ராசி நேயர்களே!
தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சுக்ரன், தனாதிபதி புதனோடு இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்குகிறார். அதோடு செவ்வாய் உச்சம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். எனவே தைரியத்தோடு எதையும் செய்ய முன்வருவீர்கள். 'கட்டிய வீட்டை விற்றுவிட்டோமே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது வீடு வாங்கும் யோகமும், வியக்கும் தகவல்களும் வந்த வண்ணமாக இருக்கும். கூட்டுக்கிரக யோகத்தோடு இந்த மாதம் பிறப்பதால், அதற்கு ஏற்ற விதத்தில் வாழ்க்கைத் தரம் உயரும். சுபகாரியங்கள் கைகூடும்.
வக்ர குரு
மிதுன ராசியில் உள்ள குரு, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு, குரு பகைக் கிரகம் ஆவார். எனவே குரு வக்ரம் பெறுவது ஒரு வகையில் நன்மைதான். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கேற்ப திடீர் மாற்றங்களையும், திரவிய லாபத்தையும் தந்து உள்ளத்தை மகிழ்விக்கப்போகிறார். உங்கள் ராசிக்கு 8, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு என்பதால், இதுவரை ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகளை உருவாக்குவார். இடமாற்றம் அல்லது வீடு மாற்றத்தைக் கொடுத்து நன்மைகள் பெற வழிகாட்டுவார்.
குருவின் பார்வை 6, 8, 10 ஆகிய இடங்களில் பதிவதால், உத்தியோகத்தில் ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த இலக்கை அடைய குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர். ஆன்மிகப் பயணம் அதிகரிக்கும். பிரிந்துசென்ற உறவினர்கள் மீண்டும் வந்து இணைவர். தொல்லை கொடுத்து வந்த தொழில் பங்குதாரர்கள், இப்பொழுது உங்கள் சொல்லுக்கு கட்டுப்படுவர். நூதனப் பொருள் சேர்க்கை உண்டு. 'தொழிலை விரிவு செய்யவும், மேலும் முதலீடு செய்யவும் பணமில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும்.
கும்ப - புதன்
உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், புதன். அவர் 29.1.2026 அன்று தொழில் ஸ்தானத்திற்கு செல்கிறார். எனவே தொழில் முன்னேற்றம் திருப்திகரமாகவே இருக்கும். 'பழைய கூட்டாளிகளை விலக்கிவிட்டு, புதிய கூட்டாளிகளை இணைத்துக் கொள்ளலாமா?' என்று சிந்தித்தவர்களுக்கு இப்பொழுது நல்ல முடிவு கிடைக்கும். புதிய பணியாளர்கள் வந்திணைந்து பொருளாதாரநிலை உயர வழிவகுத்துக் கொடுப்பர். அதிக முயற்சி எடுத்தும் முடிவடையாத காரியங்கள், இப்பொழுது முடிவடையும். உயர்ந்த மனிதர்களின் சந்திப்பால் உங்கள் வாழ்வில் பலவிதமான மாற்றங்கள் ஏற்படும் மாதம் இது.
கும்ப - சுக்ரன்
மகரத்தில் சஞ்சரித்து வரும் சுக்ரன், 7.2.2026 அன்று கும்ப ராசிக்கு செல்லவிருக்கிறார். உங்கள் ராசிநாதன் தொழில் ஸ்தானத்திற்குச் செல்வது, அற்புதமான நேரமாகும். தொழிலில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். வாகனம் வாங்கி மகிழும் யோகம் உண்டு. ஆன்மிகச் சுற்றுலாக்களில் அதிக கவனம் செலுத்துவீர்கள். வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்ப முடியாமலும், சொந்த ஊரில் இருந்து வெளிநாடு செல்ல முடியாமலும் தத்தளித்தவர்களுக்கு, இப்பொழுது நல்ல பதில் கிடைக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு யோகமான நேரம் இது. புதிய பொறுப்புகளும், பதவி வாய்ப்புகளும் கிடைக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் அரங்கேறும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்கள் அதன் நெளிவு, சுளிவுகளை அறிந்து செய்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் வாசல் தேடிவரும். கலைஞர்களுக்கு கவுரவம், அந்தஸ்து உயரும். மாணவ - மாணவிகளுக்கு மதிப்பெண் உயர்வும், அதனால் மகிழ்ச்சியும் ஏற்படும். பெண்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டு. கொடிகட்டிப் பறந்த குடும்ப பிரச்சனை படிப்படியாக குறையும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜனவரி: 20, 21, 24, 25, 30, 31, பிப்ரவரி: 3, 4.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.
மிதுன ராசி நேயர்களே!
தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் அஷ்டமத்தில் சஞ்சரிக்கிறார். மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் கிடைக்கும். ஆனால் அஷ்டமத்தில் சூரியன், செவ்வாய், சுக்ரன் ஆகிய மூன்று கிரகங்களும் சஞ்சரித்து வலிமை அடைவதால் திடீர் தாக்கங்கள், மன அமைதிக் குறைவு, ஆரோக்கியத் தொல்லை, கடன் நெருக்கடி, குடும்பச்சுமை அதிகரித்தல் போன்றவை ஏற்பட்டு மன வருத்தத்தை உருவாக்கும். எனவே அமைதியும், நிதானமும் தேவைப்படும் நேரம் இது. அனுபவஸ்தர்களின் ஆலோசனைப்படி நடந்தால் ஓரளவேனும் துன்பங்களில் இருந்து விடுதலை அடைய முடியும்.
வக்ர குரு
மிதுன ராசியில் உள்ள குரு, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் குரு என்பதால், அவர் வக்ரம் பெறுவது ஒருவழிக்கு நன்மைதான். ஜென்ம குருவாக இருப்பதால் இடமாற்றம், ஊர் மாற்றம், வீடு மாற்றம் போன்றவை நிகழலாம். வரும் மாற்றங்களை ஏற்றுக்கொள்வது நல்லதுதான். 'உத்தியோகத்தில் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையே' என்று கவலைப்படுவீர்கள். சகப் பணியாளர்களால் சில பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். குருவின் பார்வை 5, 7, 9 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே இந்த இடங்களுக்குரிய ஆதிபத்தியங்கள் எல்லாம் சிறப்பாக நடைபெறும். எதையும் திட்டமிட்டுச் செய்து வெற்றி காண, குரு பகவான் பார்வை கைகொடுக்கும். சப்தம ஸ்தானத்தைக் குரு பார்ப்பதால் கல்யாண முயற்சிகள் கைகூடும். விட்டுப்போன வரன்கள் கூட மீண்டும் வரலாம். பாக்கிய ஸ்தானத்தைப் பார்க்கும் குருவால் பெற்றோரின் ஆதரவு திருப்தி தரும். உற்றார், உறவினரின் ஆதரவு உண்டு. கற்ற கல்விக்கேற்ற வேலை கிடைக்கும். கடமையைச் செவ்வனே செய்து முடிப்பீர்கள்.
கும்ப - புதன்
உங்கள் ராசிநாதனாகவும், 4-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் புதன். அவர் 29.1.2026 அன்று கும்ப ராசியில் சஞ்சரிக்கப்போகிறார். எனவே பாக்கிய ஸ்தானம் பலம்பெறுகிறது. கொடுக்கல் - வாங்கல்கள் ஒழுங்காகும். மாமன், மைத்துனர் வழியில் இருந்த மனக்கசப்பு மாறும். அவர்களின் இல்லங்களில் நடைபெறும் சுப நிகழ்வுகளை முன்னின்று நடத்துவீர்கள். பெற்றோர் வழியில் இருந்த பிரச்சனைகள் படிப்படியாக மாறும். அவர்கள் மற்ற சகோதரர்களிடம் காட்டிய பாசத்தை இப்பொழுது உங்களிடமும் காட்டுவர். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் மாறும். கல்விக்காகவும், கலைக்காகவும் எடுத்த முயற்சி கைகூடும். பழைய வாகனத்தை சீர்செய்து உபயோகப்படுத்துவீர்கள்.
கும்ப - சுக்ரன்
மகரத்தில் சஞ்சரித்து வரும் சுக்ரன், 7.2.2026 அன்று கும்ப ராசிக்குச் செல்கிறார். இக்காலத்தில் தொழில் மாற்றம், இடமாற்றம் ஏற்படலாம். குரு-சுக்ர பார்வை இருப்பதால் குழப்பம் அதிகரிக்கும். கொடுக்கல் - வாங்கல்களில் திருப்தி ஏற்படாது. 'இதெல்லாம் நடக்குமா?' என்று நினைத்த காரியம் இப்போது நடந்து முடிந்து விடும். பிள்ளைகளின் முன்னேற்றம் திருப்தி தரும். பெண் பிள்ளைகளின் கல்யாணத்தை முன்னிட்டு சீர்வரிசைப் பொருட்கள் வாங்குவதில் அக்கறை காட்டுவீர்கள். இக்காலத்தில் குலதெய்வப் பிரார்த்தனை, தடைகளை அகற்றும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மாதத்தின் முற்பகுதி வளர்ச்சியையும், பிற்பகுதி தளர்ச்சியையும் ஏற்படுத்தும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு விறுவிறுப்பான சூழல் உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் கவனம் தேவை. கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் வந்தும், உபயோகப்படுத்திக்கொள்ள இயலாது. மாணவ - மாணவிகளுக்கு ஆசிரியரின் ஆதரவு உண்டு. பெண்களுக்கு வீடு மாற்றம் இனிமை தரும். வேற்று இனத்தாரின் ஒத்துழைப்போடு கூட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜனவரி: 22, 23, 26, 27, பிப்ரவரி: 1, 2, 6, 7.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.
கடக ராசி நேயர்களே!
தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, விரய ஸ்தானத்தில் குரு பகவான் வீற்றிருக்கிறார். அஷ்டமத்தில் சனியும், ராகுவும் பலம் பெற்று இருக்கிறார்கள். சப்தம ஸ்தானத்தில் கூட்டுக்கிரக யோகம் உள்ளது. எனவே விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றம், இடமாற்றம், உத்தியோக மாற்றம் உருவாவதற்கான அறிகுறி தென்படும். வீண் விரயங்களில் இருந்து விடுபட சுபவிரயங்களை செய்வது நல்லது. இல்லத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது, வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவது, வாசல் தேடி வந்த வரன்களை பரிசீலனை செய்வது போன்றவற்றில் கவனம் செலுத்தலாம். சனீஸ்வரர் வழிபாட்டினால் தடைகள் அகலும்.
வக்ர குரு
மிதுன ராசியில் சஞ்சரிக்கும் குரு, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்திலேயே இருக்கிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவர் வக்ர இயக்கத்தில் இருக்கும் பொழுது, நன்மை - தீமை இரண்டும் கலந்தே நடைபெறும். 6-க்கு அதிபதி 12-ம் இடத்தில் வக்ரம் பெறுவதால் 'விபரீத ராஜயோகம்' ஏற்படும். எனவே திட்டமிடாமல் செய்யும் காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். திடீர், திடீரென எண்ணங்களும், செயல்களும் மாறும். குருவின் பார்வை 4, 6, 8 ஆகிய இடங்களில் பதிவதால் தாய்வழி ஆதரவு கிடைக்கும். நோய் நொடியில் இருந்து விடுபடுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்பு உண்டு. மற்றவர்களுக்காக ஏற்றுக் கொண்ட பொறுப்பை சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். உங்களுக்கு இடையூறு செய்த உயர் அதிகாரிகள் மாற்றப்படுவர். தொழிலுக்குத் தேவையான மூலதனம் நண்பர்கள் வாயிலாகக் கிடைக்கும். சென்ற மாதத்தில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய எடுத்த முயற்சி வெற்றி தரும். 'வைத்திருக்கும் வாகனத்தால் பிரச்சனை அதிகம் வருகின்றதே.. அதை விற்று விடலாமா?' என்று யோசிப்பீர்கள்.
கும்ப - புதன்
உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் 29.1.2026 அன்று அஷ்டமத்தில் மறைவது யோகம்தான். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கேற்ப, இக்காலம் ஒரு பொற்காலமாக மாறப்போகிறது. ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. அதிகார வர்க்கத்தினரின் ஆதரவோடு பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். புதிய திருப்பங்கள் பலவற்றையும் சந்திக்கும் நேரம் இது. சகோதர வழியில் ஒற்றுமையும், பாசப்பிணைப்பும் ஏற்படும். வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு எதிர்பாராதவிதத்தில் நல்ல பொறுப்புகள் கிடைக்கும்.
கும்ப - சுக்ரன்
மகரத்தில் சஞ்சரிக்கும் சுக்ரன், 7.2.2026 அன்று கும்ப ராசிக்குச் செல்கிறார். இக்காலத்தில் விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். பெற்றோரின் உடல்நலத்தில் கவனம் தேவை. கொடுக்கல்- வாங்கல்களில் விழிப்புணர்ச்சி தேவை. வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சனைகள் ஏற்படலாம். அலுவலகப் பணிகளில் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்காது. உத்தியோக மாற்றம் செய்ய நினைத்தால் அதுவும் கைகூடாது. வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். எதிர்நீச்சல் போட்டு முன்னேற வேண்டிய நேரம் இது. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வந்துசேரும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு ஏற்றமும், இறக்கமும் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உழைப்பிற்குரிய அங்கீகாரம் கிடைக்காது. கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கைநழுவிச் செல்லலாம். மாணவ - மாணவிகளுக்கு மறதி அதிகரிக்கும். பெண்களுக்கு குடும்ப முன்னேற்றம் திருப்தி தர, விட்டுக் கொடுத்துச் செல்வது உத்தமம்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜனவரி: 23, 24, 25, 28, 29, பிப்ரவரி: 3, 4, 9, 10.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கிரே.











