என் மலர்tooltip icon

    செய்திகள்

    • தகவல் தொடர்பு சேவைக்காக 6,500 கிலோ எடையில் புளூ பேர்ட் செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளது.
    • தொலைதூர கிராமங்களுக்கு மொபைல் போன், அதிவேக இணையதள சேவைகளை வழங்க இது உதவும்.

    பெங்களூரு:

    அமெரிக்காவைச் சேர்ந்த ஏ.எஸ்.டி. நிறுவனம், தகவல் தொடர்பு சேவைக்காக 6,500 கிலோ எடையில், புளூ பேர்ட் செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளது. இது தொலைதூர கிராமங்களுக்கு மொபைல் போன், அதிவேக இணையதள சேவைகளை வழங்க உதவும். இந்த செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் செலுத்த உள்ளது.

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வுமைய ஏவுதளத்தில் இருந்து நாளை மறுதினம் காலை 8:54 மணிக்கு LVM 3 ராக்கெட் வாயிலாக புளூ பேர்ட் செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.

    இம்மாதம் 15 மற்றும் 21-ம் தேதிகளில் புளூபேர்ட் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட இருந்த நிலையில், அத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுதொடர்பாக, இஸ்ரோ நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இன்றைய கிட்டத்தட்ட ஆறு பில்லியன் மொபைல் சந்தாதாரர்கள் எதிர்கொள்ளும் டவர் பிரச்சினை நீக்குவதற்கும், பில்லியன் கணக்கானவர்களுக்கு பிராட்பேண்டைக் கொண்டுவருவதற்கும் நாங்கள் பணியில் ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்துள்ளது.

    • இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
    • சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் ஸ்மிருதி மந்தனா 4,000 ரன்கள் எடுத்தார்.

    விசாகப்பட்டினம்:

    இந்தியா, இலங்கை பெண்கள் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.

    இந்தப் போட்டியில், இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இந்நிலையில், சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக ஸ்மிருதி மந்தனா 153 போட்டிகளில் விளையாடி 4,000 ரன்கள் எடுத்துள்ளார்.

    இதன்மூலம், சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் 4,000 ரன்கள் குவித்த முதல் இந்திய வீராங்கனை என்ற உலக சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார்.

    சர்வதேச அளவில் 2வது வீராங்கனை ஆவார். இதற்கு முன் நியூசிலாந்தைச் சேர்ந்த சுசி பேட்ஸ் மட்டுமே 4000 ரன்களைக் கடந்துள்ளார்.

    மேலும், சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் 4000 ரன்கள் அடித்த முதல் ஆசிய வீராங்கனை என்ற வரலாற்றையும் ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார்.

    • சிசிஐ வெஸ்டர்ன் இந்தியா ஸ்குவாஷ் தொடர் மும்பையில் நடைபெற்றது.
    • இதில் பெண்கள் ஒற்றையரில் ஜோஷ்னா சின்னப்பா வெற்றி பெற்றார்.

    மும்பை:

    சிஐஐ வெஸ்டர்ன் இந்தியா ஸ்குவாஷ் தொடர் மும்பையில் நடைபெற்றது.

    பெண்களுக்கான இறுதிப்போட்டியில் ஜோஷ்னா சின்னப்பா, சன்யா வார்ஸ் உடன் மோதினார். இதில் ஜோஷ்னா 7-11, 11-8, 11-8, 11-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    இதேபோல், ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் வீர் சோட்ரானி, சூரஜ் சந்த் உடன் மோதினார். இதில் வீர் சோட்ரானி 11-9, 11-9, 11-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

    • வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பா.ஜ.க கூட்டணி அநேக இடங்களில் முன்னிலை பெற்றன.
    • அருணாச்சல பிரதேசத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலிலும் பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது.

    புதுடெல்லி:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. 246 நகராட்சி, 42 நகர பஞ்சாயத்து ஆகிய 288 உள்ளாட்சிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.

    உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது முதலே பா.ஜ.க கூட்டணி பெரும்பாலான இடங்களில் முன்னிலை பெற்றன.

    இதேபோல, அருணாச்சல பிரதேசத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலிலும் பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

    இந்நிலையில், பா.ஜ.க.வுக்கு வாக்களித்த மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்.

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், மகாராஷ்டிரா மக்கள் வளர்ச்சியுடன் உறுதியாக நிற்கின்றனர். நகராட்சி மற்றும் நகர பஞ்சாயத்துத் தேர்தல்களில் பா.ஜ.க. மற்றும் மகாயுதி கூட்டணியை ஆசிர்வதித்த மகாராஷ்டிரா மக்களுக்கு நன்றி. வளர்ச்சிக்கான எங்களின் தொலைநோக்குப் பார்வை மீதான மக்களின் நம்பிக்கையை இது பிரதிபலிக்கிறது. மகாராஷ்டிரா மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவும், புத்துணர்ச்சியுடன் பணியாற்றவும் உறுதி பூண்டுள்ளோம். இந்த வெற்றிக்காக கடுமையாக உழைத்த பா.ஜ.க. மற்றும் மகாயுதி தொண்டர்களுக்கு பாராட்டுக்கள் என பதிவிட்டுள்ளார்.

    இதேபோல, அருணாச்சல பிரதேச உள்ளாட்சி தேர்தல் வெற்றி குறித்து அவர் விடுத்த பதிவில், நல்லாட்சி வழங்கிய அரசுக்கு அருணாச்சலப் பிரதேச மக்கள் அசைக்க முடியாத ஆதரவைக் கொடுத்துள்ளனர். இது மாநிலத்தை மேம்படுத்துவதற்காக தொடர்ந்து பணியாற்றும் எங்களின் நம்பிக்கையை வலுப்படுத்துகிறது என தெரிவித்துள்ளார்.

    • பெற்றால் மட்டும்தான் பிள்ளையா, நட்டாலும் அது தன் வாரிசு தானே என நினைத்தார்.
    • ஆலும் வேலும் பல்லுக்குறுதி என்பதில் உள்ள ஆலமரங்களை நடும் பணியை தேர்வு செய்தார்.

    புதுடெல்லி:

    "தென்னைய பெத்தா எளநீரு, பிள்ளைய பெத்தா கண்ணீரு"

    இது 'எங்க ஊரு ராஜா' என்ற திரைப்படத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள். எவ்வளவு தத்துவமான வரிகள்.

    தந்தை பிள்ளையிடம் காட்டிய பாசத்தை விரக்தியின் எல்லைக்கே கொண்டு சென்ற வரிகள்.

    அப்படிப்பட்ட பிள்ளைப் பாசத்தை விட தாய்மைப் பேறு எவ்வளவு மகத்தானது.

    அந்தத் தாய்மைப் பேறு தனக்கு இல்லை என்றாகிப் போனதும் இந்த பெண்மணி எடுத்த ஒரு முடிவு ஒட்டுமொத்த உலகத்தையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

    திருமணம் முடிந்து பிள்ளைப் பேறுக்காக கோவில் கோவிலாக சென்று அரச மரத்தையும் ஆல மரத்தையும் சுற்றியவர் சற்றே மாறுபட்டு சிந்தித்தார்.

    பிள்ளைக்காக மரங்களைச் சுற்றுவதை விட்டு அந்த மரங்களையே தன் பிள்ளைகளாக உருவாக்கினால் என்ன என தனக்குள் கேள்வி கேட்டுக் கொண்டார்.

    பெற்றால் மட்டும்தான் பிள்ளையா, நட்டாலும் அது தன் வாரிசு தானே என நினைத்த அந்தப் பெண்மணி, மரங்களை நடும் முயற்சியை தொடங்கினார். அதுவும் ஆலும் வேலும் பல்லுக்குறுதி என்பதில் உள்ள ஆல மரங்களை நடும் பணியைத் தேர்வு செய்தார்.


    இப்படிப்பட்ட தைரியமான முடிவெடுத்த அந்தப் பெண்மணி கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்.

    சாலுமரத திம்மக்கா என மக்களால் அன்புடன் அழைக்கப்படும் இவரது பிறந்த மண் கர்நாடக மாநிலத்திலுள்ள தும்கூர் கிராமம். 1911-ல் பிறந்த அவர், இளம் வயதிலேயே ஹூலிகல்லு ஊரைச் சேர்ந்த சிக்கையாவை மணமுடித்தார்.

    திருமணமாகி நீண்ட காலமாகியும் குழந்தை வரம் கிடைக்கவில்லை. கணவரின் ஆதரவு இவரின் பெரும் வரமானது.

    இருவரும் ஆலமரக் கன்றுகளை உருவாக்கி சில ஆலமரக் கன்றுகளை நட்டனர். அடுத்த ஆண்டு, அதற்கடுத்த ஆண்டு என ஆலமரக்கன்றுகள் பெருகின.

    மரங்களை நடுவதுடன், அவைகளைத் தொடர்ந்து பராமரித்து வந்தனர். கோடைகாலத் தேவைக்காக மழைக்கால நீர் சேமிப்பாக சிறு சிறு குளங்களை வெட்டினர். தீராத தண்ணீர் பஞ்சத்தின் போதும் தளராமல் தொலை தூரம் சென்று குடங்களில் தண்ணீர் சுமந்து வந்து ஆலமரங்களுக்கு உயிர் தந்தனர் இந்த தம்பதியினர்.

    கணவர் மறைந்த பிறகும் தன் முயற்சியிலிருந்து பின்வாங்காமல் தனது வாழ்நாள் முழுவதும் நூற்றுக்கணக்கான மரங்களை வளர்த்தார்.

    தேசிய குடிமகன் விருது (1995), இந்திரா பிரியதர்ஷினி விருக்ஷமித்ரா விருது (1997), ஹம்பி பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட நாடோஜா விருது (2010), இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது (2019) உள்பட பல சிறப்புமிக்க விருதுகள் மற்றும் கவுரவ டாக்டர் பட்டம் ஆகியவை இவரை பெருமைப்படுத்தின.

    கடந்த 2016-ம் ஆண்டில் உலகின் சக்திவாய்ந்த 100 பெண்களில் ஒருவராக பிபிசியின் அங்கீகாரத்தையும் பெற்றார்.

    இப்படி பல்வேறு புகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான சாலுமரதா திம்மக்கா, குழந்தைகள் தினமான நவம்பர் 14-ம் தேதி அன்று 114-வது வயதில் காலமானார்.


    கன்னடத்தில் 'மரங்களின் வரிசை' என பொருள்படும் சாலுமரதா என அன்புடன் அழைக்கப்படும் திம்மக்காவின் வாழ்க்கைப் பணி பல தலைமுறைகளுக்கு உத்வேகம் அளித்து வருகிறது.

    சாலுமரதா திம்மக்காவின் மரணத்துக்கு இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளின் தலைவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர்.

    "மரம் மனிதனைவிட உயர்ந்தது. அதற்கு தெரிந்தது எல்லாம் பிறருக்கு நன்மை செய்வதே" என அடிக்கடி கூறுவது திம்மக்காவின் வழக்கம். இன்று அவர் இந்த உலகில் இல்லை. ஆனால் அவர் நட்ட ஆயிரக்கணக்கான மரங்களின் உருவிலும், அவை விடும் மூச்சுக் காற்றிலும் திம்மக்கா நம்முடன் என்றென்றும் நிலைத்திருப்பார்.

    • டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவரில் 121 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    விசாகப்பட்டினம்:

    இந்தியா வந்துள்ள இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

    இந்நிலையில், இரு அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 121 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி வீராங்கனைகள் சிறப்பாக பந்து வீசி இலங்கை அணியை கட்டுப்படுத்தினர்.

    இதையடுத்து, 122 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ஷபாலி வர்மா 9 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 25 ரன்னும் எடுத்தனர்.

    ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்து அரை சதம் கடந்தார்.

    இறுதியில், இந்திய பெண்கள் அணி 14.4 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 122 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் டி20 தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. ஜெமிமா 69 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    • தந்தை பெரியார் கூறியபடி பகுத்தறிவு உள்ள உண்மையான தொண்டர்கள் நாங்கள்.
    • நாங்கள் ஆறறிவு கொண்ட மனிதர்கள்

    பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும், தவெக நிர்வாகி அருண்ராஜ்க்கும் இடையே நீண்டநாட்களாக ஒரு வார்த்தை போர் நடைபெற்று வருகிறது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய் வாய் திறக்காதது அண்ணாமலை கருத்துக்கூற, அதற்கு அவரை கிண்டலடிக்கும் விதமாக பதில் அளித்தார் அருண்ராஜ். 

    மீண்டும் இதற்கு பதிலளித்த அண்ணாமலை, நான் நடிகருக்கு ஜால்ரா போடுகிறவன் அல்ல, மோடியின் விஷ்வாச நாய் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் அண்ணாமலையின் இந்த கருத்துக்கு மீண்டும் பதிலளித்துள்ள தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் அருண்ராஜ், 

    "எனக்கு அவரைப்பற்றி தெரியாது. ஆனால் நாங்கள் யாரும் நாய்கள் கிடையாது. குறிப்பாக குரைக்கும் நாய்கள் கிடையாது. நாங்கள் ஆறறிவு கொண்ட மனிதர்கள்; தந்தை பெரியார் கூறியபடி பகுத்தறிவு உள்ள உண்மையான தொண்டர்கள் நாங்கள். தவெக தலைவர் கூறியவாறு தரம் தாழ்ந்து நாங்கள் பேசமாட்டோம். விஜய் இப்போது நடிகர் கிடையாது; அவர் முன்னாள் நடிகர்.

    நடிப்பை முழுவதுமாக விட்டுவிட்டு அரசியலுக்கு வந்திருக்கிறார். மக்கள் சேவை செய்யவேண்டும் என வந்திருக்கிறார். ஈரோட்டில் வந்தவர்கள் நடிகரை பார்க்க வரவில்லை. தமிழ்நாட்டின் முதன்மை அரசியல் சக்தியாக இருக்கக்கூடிய தவெக தலைவரை பார்க்க வந்தனர்" என தெரிவித்துள்ளார். 

    • பிரசாந்த் வீர் என்ற ஆல் ரவுண்டர் வீரரை சி.எஸ்.கே. அணி 14.20 கோடிக்கு ஏலம் எடுத்தது.
    • 19 வயதான கார்த்திக் சர்மாவை சி.எஸ்.கே. அணி 14.20 கோடிக்கு ஏலம் எடுத்தது.

    19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அபுதாபியில் நடந்தது. இந்த ஏலத்தில் பிரசாந்த் வீர் என்ற (அன்கேப்ட் வீரர்) ஆல் ரவுண்டர் வீரரை சி.எஸ்.கே. அணி 14.20 கோடிக்கு ஏலம் எடுத்தது. ஜடேஜாவிற்கு மாற்றாக பிரசாந்த் வீர் இருப்பர் என்று சி.எஸ்.கே அணி எதிர்பார்த்து இந்த விலையை கொடுத்துள்ளது.

    இதனையடுத்து ராஜஸ்தானை சேர்ந்த 19 வயதான கார்த்திக் சர்மா (அன்கேப்ட் வீரர்) அடிப்படை விலை ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.14.20 கோடிக்கு ஏலம் போனார். இவரையும் சிஎஸ்கே அணி ஏலம் எடுத்தது. இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன 2 அன்கேப்ட் வீரர் வீரர்களையும் சி.எஸ்.கே அணி வாங்கியுள்ளது.

    பிரபல சுழற்பந்துவீச்சாளர் ராகுல் சஹாரை ரூ. 5.20 கோடிக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஆல்ரவுண்டர் அகீல் ஹொசைனை ரூ. 2 கோடிக்கும் சி.எஸ்.கே. ஏலம் எடுத்தது. மேலும் சர்ஃபராஸ் கான் ரூ. 75 லட்சம், மேத்யூ ஷார்ட் ரூ. 1.50 கோடி மற்றும் மாட் ஹென்றி ரூ. 2 கோடிக்கும் சிஎஸ்கே அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.

    இந்நிலையில், 2026 ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்சின் பிளேயிங் 11 இதுவாக தான் இருக்கும் என்று முன்னாள் சிஎஸ்கே அஸ்வின் கணித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    அஸ்வினின் CSK பிளேயிங் 11

    ஆயுஷ் மாத்ரே, சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, டெவால்ட் ப்ரீவிஸ், பிரசாந்த் வீர், எம்.எஸ். தோனி, அகீல் ஹொசைன்/மாட் ஹென்றி, கலீல் அகமது, நாதன் எல்லிஸ், நூர் அகமது,

    இம்பாக்ட் வீரர்கள் : அன்ஷுல் கம்போஜ் / கார்த்திக் சர்மா / ஷ்ரேயாஸ் கோபால் / சர்ஃப்ராஸ் கான் (சூழ்நிலையின் அடிப்படையில்)

    • நாங்கள் அந்த நாயுடன் மிகவும் பாசமாகிவிட்டதால், அதை அதன் பழைய இடத்திற்கே திருப்பி அனுப்ப மனம் வரவில்லை.
    • பீச்சஸ் எங்கள் செல்லப் பிராணியாக அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது

    அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது அலுவலகத்தின் முன்பு இருந்த தெருநாயை வளர்ப்பு பிராணியாக பதிவு செய்துள்ளதாக  தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 

    2021-ல் நான் அமைச்சரான சில மாதங்களில், செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள எனது அலுவலகத்திலிருந்து வெளியேறும்போது உடைந்த காலுடன் ஒரு நாயை கண்டேன் (செயலகத்தில் இருந்த பல நாய்களில் அதுவும் ஒன்று). சமீபத்தில் ஒரு விபத்தில் அதன் கால் உடைந்ததாகக் கிடைத்த தகவலின் பேரில் (அது தவறான தகவல் என்று பின்னர் தெரியவந்தது), அதன் காலைச் சரிசெய்து, அதை மீண்டும் அதன் இடத்திற்கே கொண்டு சேர்க்க முடிவு செய்தேன்.

    ஆனால் மருத்துவரிடம் சென்றபோது, அது பல மாதங்களுக்கு முன் நடந்த விபத்து என்றும் உடைந்த கால் தவறான முறையில் கூடிவிட்டதும் தெரியவந்தது. பின்னர் அதற்கான சிகிச்சை சில மாதங்கள் நீடித்தது. நாயின் காலில் ஒரு உலோகத் தகடு மற்றும் திருகுகள் பயன்படுத்தப்பட்டன. அதுமட்டுமின்றி, அதன் காலை சரிசெய்ய ஒரு கால்நடை மருத்துவர், ஒரு கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் ஒரு (மனிதர்களுக்கான) எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிபுணர் ஆகியோரின் உதவியும் தேவைப்பட்டது!

    அதற்குள் நாங்கள் அந்த நாயுடன் மிகவும் பாசமாகிவிட்டதால், அதை அதன் பழைய இடத்திற்கே திருப்பி அனுப்ப மனம் வரவில்லை. அதனால் நாங்கள் அதற்கு 'பீச்சஸ்' என்று பெயரிட்டோம், அது எங்கள் குடும்பத்தில் ஒரு அங்கமாகிவிட்டது.  சமீபத்திய உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, செயலகத்தில் இருந்த நாய்கள் அங்கிருந்து அகற்றப்பட்டன... அவை எங்கு கொண்டு செல்லப்பட்டன என்று தெரியவில்லை.

    மறுபுறம் மறுபுறம், சென்னை மாநகராட்சியின் புதிய விதிகளின் கீழ், இப்போது பீச்சஸ் எங்கள் செல்லப் பிராணியாக அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது." எனக் குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்த பதிவிற்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

    • நாட்டிய விழா வரும் ஜனவரி 19-வரை மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் நடைபெறுகிறது.
    • தினமும் மாலை-5:30க்கு துவங்கி இரவு-8:30வரை நடைபெறும்.

    மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா இன்று மாலை 5:30-க்கு சென்னை இசைக் கல்லூரி மாணவர்களின் மங்கல இசையுடன் துவங்கியது. தமிழ்நாடு சுற்றுலாதுறை மற்றும் இந்திய சுற்றுலாதுறை இணைந்து நடத்தும் இந்த நாட்டிய விழா வரும் ஜனவரி 19-வரை மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் நடைபெறுகிறது.

    இதில் பரதநாட்டியம், நாட்டுப்புற கலைகள், கதகளி, ஒடிசி, குச்சிப்புடி, கரகாட்டம், தப்பாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், மோகினி ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு நாட்டிய நடனங்கள் நடைபெறுகிறது. சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.ராஜேந்திரன் மற்றும் குறு, சிறு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் இதனை துவக்கி வைத்தனர்.


    சுற்றுலாத்துறை கூடுதல் தலைமை செயலர் க.மணிவாசன், சுற்றுலாதுறை இயக்குநர் தா.கிறிஸ்துராஜ், இணை இயக்குநர் சிவப்பிரியா, மாவட்ட சப்-கலெக்டர், சுற்றுலா அலுவலர் சக்திவேல், நகராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ், முன்னாள் தலைவர் விசுவநாதன், கவுன்சிலர் மோகன்குமார் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர். இந்த நாட்டிய விழா தினமும் மாலை-5:30க்கு துவங்கி இரவு-8:30வரை நடைபெறும். 

    • முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது.
    • இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது

    இந்தியா வந்துள்ள இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது. இதில் இந்தியா-இலங்கை பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது.

    சமீபத்தில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பையை வென்ற பிறகு இந்திய அணி பங்கேற்கும் முதல் போட்டி இதுவாகும்.

    இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ரன் குவிக்க திணறியது. இறுதியில் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு இலங்கை அணி 121 மட்டுமே எடுத்தது. இதனையடுத்து 122 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கவுள்ளது. 

    • 2015-ஆம் ஆண்டு முதல் இப்போது வரை மொத்தம் 14 ஆயிரம் செவிலியர்கள் ஒப்பந்த முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
    • ஒப்பந்த செவிலியர்கள் பணியாற்றும் 8322 பணியிடங்களும் காலி இடங்கள் தான்.

    'சம வேலைக்கு சம ஊதியம்' உள்ளிட்ட திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி, இன்று 4-வது நாளாக செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் செவிலியர்களை பணி நிலைப்பு செய்ய என்ன தடை? அதிகாரத் திமிர், ஆணவத்தில் தி.மு.க அரசு ஆட்டம் போடக்கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

    "தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறையில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக தற்காலிக பணியாளர்களாக பணி செய்து வரும் 8 ஆயிரத்திற்கும் கூடுதலான செவிலியர்களை தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று கடந்த 4 நாள்களாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் அவர்களை பணி நிலைப்பு செய்ய முடியாது என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது ஆட்சியாளர்களின் அதிகாரத் திமிரையும், ஆணவத்தையும் தான் காட்டுகிறது. அதுமட்டுமின்றி, செவிலியர்களை மிரட்டி பணியவைக்கப் பார்ப்பது கண்டிக்கத்தக்கதாகும். 

    2015-ஆம் ஆண்டு முதல் இப்போது வரை மொத்தம் 14 ஆயிரம் செவிலியர்கள் ஒப்பந்த முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் போட்டித்தேர்வு நடத்தி தான் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் இரு ஆண்டுகளுக்குப் பிறகு பணி நிலைப்பு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர்களில் 6 ஆயிரம் பேர் மட்டுமே இதுவரை பணி நிலைப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 8.322 செவிலியர்கள் இன்னும் நிரந்தரமாக்கப்படவில்லை. இது மிகப்பெரிய சமூக அநீதியாகும். இதை எதிர்த்து பல ஆண்டுகளாக அவர்கள் போராடி வருகின்றனர்.

    கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக ஒப்பந்த செவிலியர்களாக பணியாற்றி வரும் அவர்கள் பணி நிலைப்புக் கோரி கடந்த 18-ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுக்கும் திமுக அரசு, அவர்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டு வருகிறது. மேலும் பேச்சு நடத்த அழைக்கப்பட்ட தங்களிடம், தேர்தல் வாக்குறுதி கொடுத்தா நிறைவேத்தணுமா? இது அரசோட கொள்கை முடிவு அவ்வளவுதான்.

    நானே பார்க்குறேன் நிறைய இடங்கள்ல தேவைக்கும் அதிகமா வேலையே செய்யாம ஆட்கள் இருக்காங்க. தேர்தல் நேரத்துல போராட்டம் பண்ணி நெருக்கடி கொடுக்க பார்க்குறீங்களா? என்ன பண்ணுவீங்க? போராடுவிங்க.... போராடிக்கோங்க என்று சுகாதாரத் துறை அமைச்சர் மிரட்டியதாக செவிலியர் சங்க நிர்வாகிகள் குற்றஞ்சாட்டியது. இந்த அணுகுமுறையை ஏற்கவே முடியாது.

    அதுமட்டுமின்றி, ஒப்பந்த செவிலியர்கள் அனைவரும் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்டவர்கள் என்றும், காலியிடங்களே இல்லாத நிலையில் அவர்களை பணி நிலைப்பு செய்யவே முடியாது என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார். அமைச்சரின் இந்த விளக்கம் மிகவும் விநோதமாக இருக்கிறது. அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு இணையாக புதிய செவிலியர் பணியிடங்களை திமுக அரசு ஏற்படுத்தவில்லை என்பது ஒருபுறமிருக்க, காலியிடங்களே இல்லை என்பது அப்பட்டமான பொய் தான்.

    நிரந்தரப் பணியாளர்களைக் கொண்டு நிரப்பப்படாத அனைத்து பணியிடங்களும் காலியிடங்கள் தான். அந்த வகையில் ஒப்பந்த செவிலியர்கள் பணியாற்றும் 8322 பணியிடங்களும் காலி இடங்கள் தான். அந்த இடங்களில் ஒப்பந்த செவிலியர்களை நிரந்தர செவிலியர்களாக நியமிக்க எந்தத் தடையும் இல்லை, அவ்வாறு செய்ய ஆட்சியாளர்களுக்கு மனம் இல்லாதது தான் ஒரே ஒரு தடை ஆகும். 

    நிரந்தர செவிலியர்கள் எவ்வாறு நியமிக்கப்படுவார்களோ, அதே முறையை பின்பற்றி தான் ஒப்பந்த செவிலியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நியமனத்தில் போட்டித் தேர்வு, இட ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளன. அத்தகைய சூழலில் அவர்கள் அனைவரையும் ஒரே ஓர் அரசாணையின் மூலம் பணி நிலைப்பு செய்ய முடியும். அவ்வாறு செய்தால் அதை உச்ச நீதிமன்றம் கூட கேள்வி கேட்க முடியாது. ஆனால், வாய்கிழிய சமூகநீதி பேசும் திமுக அரசுக்கு அதை செயல்படுத்துவதற்கு மட்டும் மனம் வராது. சமூகநீதி என்றாலே மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு வேப்பங்காயாக கசக்கிறது.

    ஒப்பந்த முறையில் பணியாற்றும் செவிலியர்களும் நிரந்தர செவிலியர்கள் செய்யும் அதே பணியைத் தான் செய்கின்றனர். அதனால், தங்களுக்கும் சம ஊதியம் வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. உயர்நீதிமன்றமும் அதை ஏற்று சம ஊதியம் வழங்க ஆணையிட்டது. ஆனால், அதை செய்ய மறுத்து விட்ட திமுக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, தமிழக அரசின் அணுகுமுறையை கடுமையாக விமர்சித்தது.

    செவிலியர்களிடம் அளவுக்கு அதிகமாக உழைப்பு சுரண்டல் செய்கிறீர்கள். ஒப்பந்த செவிலியர்கள் நிரந்தர செவிலியர்களாக நியமிக்கவும் மறுக்கிறீர்கள். அவர்களுக்கு சம ஊதியம் வழங்கவும் மறுக்கிறீர்கள். மத்திய அரசு பணம் தரவில்லை என்று கூறாதீர்கள். எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை சொல்லிக் கொண்டே இருக்காதீர்கள். நீங்கள் ஏன் ஒரு தனித்திட்டத்தை தொடங்கக்கூடாது? உங்களது ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டியது உங்கள் பொறுப்பு தானே? அதை நீங்கள் எக்காரணத்தைக் கொண்டும் தட்டிக் கழிக்க முடியாது. இலவசங்களை கொடுக்க பணம் இருக்கிறது. ஒரு சட்டமன்றத் தேர்தலுக்கு எவ்வளவு பணம் செலவழிக்கிறீர்கள்? ஆனால் செவிலியர்களுக்கு கொடுக்க பணம் இல்லையா? என்று கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி கண்டனம் தெரிவித்தது. அதற்குப் பிறகாவது செவிலியர்களுக்கு பணி நிலைப்பும், சம ஊதியமும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி செப்டம்பர் 16-ஆம் தேதி வலியுறுத்தினேன். ஆனால். சமூகநீதியில் அக்கறை இல்லாத திமுக அரசு, செவிலியர்களுக்கு நீதி வழங்க மறுத்துவிட்டது.

    இப்போது ஒப்பந்த செவிலியர்கள் எவ்வாறு நியமிக்கப்பட்டார்களோ,  அதேபோல் தான் கடந்த 2004-ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் 45 ஆயிரம் ஆசிரியர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டனர். 2006-ஆம் ஆண்டில் பா.ம.க. ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த கலைஞர், 01.06.2006 முதல் அவர்கள் அனைவரையும் பணி நிலைப்பு செய்தார். அதேபோல் இப்போது செய்ய எந்தத் தடையும் இல்லை.

    ஆனால். அதிகாரம் தந்த போதை, ஆணவம், அதிகாரத் திமிர் ஆகியவை தலைக்கு ஏறி ஆட்டம் போடும் ஆட்சியாளர்களுக்கு சமூகநீதி குறித்து சிந்தித்துக் கூட பார்க்க முடியவில்லை. ஆட்சியாளர்களின் தலையில் ஏறிய அனைத்தும் இறங்கும் வகையில் அதிரடியான தீர்ப்பை வரும் தேர்தலில் மக்கள் வழங்குவார்கள். அதன்பின் அமையும் ஆட்சியில் ஒப்பந்த செவிலியர்கள் அனைவரும் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள்." எனக் குறிப்பிட்டுள்ளார். 

    ×