என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
- ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மிக குறைந்த விலையில் பிராட்பேண்ட் பேக்கப் சலுகையை அறிவித்து இருக்கிறது.
- முன்னதாக ஜியோ ஃபைபர் சேவையை பெறுவதற்கான குறைந்தபட்ச கட்டணம் மாதம் ரூ. 399 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
பிராட்பேண்ட் பிரிவில் கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில், ஜியோ நிறுவனம் ரூ. 198 விலையில் மாதாந்திர சலுகையை அறிவித்து இருக்கிறது. பிராட்பேண்ட் பேக்கப் பெயரில் அறிவிக்கப்பட்டு இருக்கும் இந்த சலுகையில் நொடிக்கு 10 மெகாபைட் வேகத்தில் இணைய சேவை வழங்கப்படுகிறது.
இதுவரை ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் சேவையில் இணைய மாதாந்திர கட்டணம் ரூ. 399 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய சலுகை அறிவித்து இருப்பதோடு இணைய வேகத்தை நொடிக்கு 30 மெகாபைட் அல்லது 100 மெகாபைட் வரை உயர்த்திக் கொள்வதற்கான வசதியை வழங்குகிறது. இதற்கான கட்டணம் ஏழு நாட்களுக்கு ரூ. 21-இல் துவங்கி அதிகபட்சம் ரூ. 152 வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஃபிக்சட் லைன் பிராட்பேண்ட் சேவை பிரிவில் ஜியோ நிறுவனம் தற்போது சுமார் 84 லட்சம் வாடிக்கையாளர்களுடன் சந்தையில் 30.6 சதவீத பங்குகளை கொண்டிருக்கிறது. புதிய வாடிக்கையாளர்கள் ரூ. 1490 கட்டணத்தை முதலில் செலுத்த வேண்டி இருக்கும். இதில் ஐந்து மாதத்திற்கான கட்டணம் மற்றும் இன்ஸ்டால் செய்வதற்கான கட்டணம் சேர்க்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் போட்டி நிறுவனமான பாரதி ஏர்டெல் தனது பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் மொபைல் கட்டணங்களை மாற்றியமைத்தது. பிரீபெயிட் பிரிவில் துவக்க சலுகைகளின் விலையை ஏர்டெல் அதிகரித்து இருக்கிறது. போஸ்ட்பெயிட் சலுகையில் அதிக டேட்டா, அன்லிமிடெட் 5ஜி போன்ற சேவைகள் வழங்கப்படுகிறது.
- அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் எவ்விதமான ரோபோட் டெஸ்டிங்கையும் சாமர்த்தியமாக எதிர்கொண்டு விடுகின்றன.
- டுவிட்டர் புளூ வெளியானதை அடுத்து டுவிட்டர் நிறுவனம் தனது பழைய வெரிஃபைடு திட்டத்தை நிறுத்த இருக்கிறது.
டுவிட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் வெரிஃபைடு அக்கவுண்ட்கள் மட்டுமே For You பிரிவில் பரிந்துரை செய்யப்படும் என அறிவித்து இருக்கிறார். இதன் மூலம் ஏஐ பாட்கள் தளத்தில் ஆதிக்கம் செலுத்துவதை தடுக்க முடியும் என எலான் மஸ்க் அறிவித்து இருக்கிறார்.
"ஏப்ரல் 15 ஆம் தேதி முதல், வெரிஃபைடு அக்கவுண்ட்கள் மட்டுமே பரிந்துரைக்கப்படும். இது தான் ஏஐ பாட்கள் ஆதிக்கம் செலுத்துவதை தடுக்கும் உண்மையான வழியாக இருக்கும். இதைதவிர மற்ற நடவடிக்கைகள் தோல்வியிலேயே முடியும். வாக்கெடுப்புகளில் கலந்து கொள்ளவும் வெரிஃபிகேஷன் பெற்றிருக்க வேண்டும்," என எலான் மஸ்க் டுவிட் செய்திருக்கிறார்.

அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பிறப்பிக்கும் ரோபோட் டெஸ்டில் இருந்து விடுபட செய்யும் ஒரே வழிமுறை கட்டண சமூக வலைதள அக்கவுண்ட்கள் தான் என எலான் மஸ்க் முன்னதாக தெரிவித்து இருந்தார். தற்போதைய அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் எவ்விதமான ரோபோட் டெஸ்டிங்கையும் சாமர்த்தியமாக எதிர்கொண்டு விடுகின்றன.
முன்னதாக ஏப்ரல் 1, 2023 முதல் டுவிட்டரில் அக்கவுண்ட்களை வெரிஃபை செய்யும் நடைமுறை நிறுத்தப்படுகிறது. டுவிட்டர் புளூ சந்தா அமலுக்கு வரும் முன் தங்களின் அக்கவுண்ட்களை வெரிஃபைடு செய்து புளூ டிக் பெற்றவர்களுக்கு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் புளூ டிக் நீக்கப்படும் என டுவிட்டர் அறிவித்து இருந்தது.
உலகளவில் டுவிட்டர் புளூ வெளியானதை அடுத்து டுவிட்டர் நிறுவனம் தனது பழைய வெரிஃபைடு திட்டத்தை நிறுத்த இருக்கிறது. பழைய வழக்கப்படி டுவிட்டர் பயனர்களின் ஐடி மற்றும் பொது மக்கள் இடையே பிரபலமாக இருப்போருக்கு மட்டும் குறிப்பிட்ட வழிமுறைகளின் கீழ் வெரிஃபைடு அங்கீகாரம் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
- சோனி நிறுவனத்தின் PS5 கன்சோல் விலை இந்தியாவில் குறைக்கப்பட இருக்கிறது.
- விலை குறைப்பு PS5 அனைத்து வேரியண்ட்களுக்கும் வழங்கப்படும் என தெரிகிறது.
சோனி இந்தியா நிறுவனம் தனது PS5 கன்சோலின் அனைத்து வேரியண்ட்களுக்கும் சிறப்பு தள்ளுபடி வழங்குவதை உறுதிப்படுத்தி இருக்கிறது. முன்னதாக இங்கிலாந்து, மத்திய கிழக்கு மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் PS5 கன்சோலுக்கு அசத்தல் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. விளம்பர சலுகையாக PS5 கன்சோல்களுக்கு ரூ. 5 ஆயிரம் வவரை விலை குறைப்பு வழங்கப்பட இருக்கிறது.
பிளே ஸ்டேஷன் இந்தியா அனைத்து PS5 வேரியண்ட்களுக்கும் ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி வழங்குகிறது. இந்த சலுகை ஏப்ரல் 1 ஆம் தேதி துவங்கி, குறுகிய காலத்திற்கு வழங்கப்பட இருக்கிறது. சிறப்பு விளம்பர சலுகையின் கீழ் PS5 இந்திய விலை ரூ. 49 ஆயிரத்து 990 என்றும் PS5 டிஜிட்டல் எடிஷன் ரூ. 39 ஆயிரத்து 990 என்றும் PS5 காட் ஆஃப் வார் ராங்னராக் பண்டில் விலை ரூ. 54 ஆயிரத்து 990 என குறைக்கப்பட உள்ளது.

தற்போது PS5 விலை ரூ. 54 ஆயிரத்து 990 என்றும், PS5 டிஜிட்டல் எடிஷன் விலை ரூ. 44 ஆயிரத்து 990 என்றும் PS5 காட் ஆஃப் வார் ராங்னராக் பண்டில் விலை ரூ. 59 ஆயிரத்து 990 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய விலை குறைப்பு ஏப்ரல் 1 ஆம் தேதி அமலுக்கு வருகிறது. இதற்கான முன்பதிவு அமேசான், ப்ளிப்கார்ட், கேம்ஸ் தி ஷாப், ஷாப் அட் எஸ்சி, விஜய் சேல்ஸ், ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் க்ரோமா உள்ளிட்ட தளங்களில் நடைபெறுகிறது.
2021 பிப்ரவரி வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்தே PS5 மாடலுக்கு இந்தியாவில் கடும் தட்டுப்பாடு நிலை இருந்து வந்தது. 2022 ஆண்டில் மட்டும் சோனி நிறுவனம் சுமார் பத்து லட்சம் PS5 யூனிட்களை விற்பனை செய்து இருப்பதாக டிப்ஸ்டரான ரிஷி அல்வானி தெரிவித்து இருக்கிறார். இந்த ஆண்டில் மட்டும் சோனி நிறுவனம் சுமார் 20 ஆயிரம் PS5 யூனிட்களை இந்தியாவுக்கு இறக்குமதி செய்திருக்கிறது.
- டுவிட்டர் நிறுவனத்தின் சான்ஃபிரான்சிஸ்கோ அலுவலகம் நேற்று ஊழியர்கள் இன்றி காலியாக இருந்தது.
- ஊழியர்கள் குறைந்தபட்சம் வாரத்திற்கு 40 மணி நேரம் பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
டுவிட்டர் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் தனது ஊழியர்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி இருக்கிறார். கடந்த புதன் கிழமை அனுப்பிய மின்னஞ்சல் பற்றிய விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன் படி, எலான் மஸ்க் தனது ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றுவது குறித்து டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தகவல்கள் இடம்பெற்றுள்ளது.
அதிகாலை 2.30 மணிக்கு எலான் மஸ்க் அனுப்பிய மின்னஞ்சலில், "Office is not optional" அதாவது அலுவலகம் விருப்பம் இல்லை என தெரிவித்து இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. டுவிட்டர் நிறுவனத்தின் சான்ஃபிரான்சிஸ்கோ அலுவலகம் நேற்று ஊழியர்கள் இன்றி காலியாக இருந்தது என்று எலான் மஸ்க் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.

முன்னதாக எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கியதில் இருந்து அதில் பணியாற்றி வந்த ஆயிரக்கணக்கான ஊழியர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்தார். எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தின் புதிய கார்ப்பரேட் திட்டங்கள் பற்றிய அறிவிப்பை இரவு நேரத்திலோ அல்லது அதிகாலை சமயங்களிலோ வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் நள்ளிரவு 2.30 மணிக்கு ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் அவர்களுக்கு பழகிப் போன ஒன்றுதான்.
எலான் மஸ்க் கைப்பற்றுவதற்கு முன் டுவிட்டர் நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்தபடி பணியாற்றுவதற்கான அனுமதி பரவலாக வழங்கப்பட்டு இருந்தது. நிறுவனத்தை கைப்பற்றிய எலான் மஸ்க் ஊழியர்கள் குறைந்தபட்சம் வாரத்திற்கு 40 மணி நேரம் பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றுவதை எலான் மஸ்க் ஆரம்பத்தில் இருந்தே ஊக்குவித்தது இல்லை. கடந்த ஆண்டு டெஸ்லா நிறுவன தலைவரான எலான் மஸ்க், "டெஸ்லா ஊழியர்கள் வாரத்திற்கு குறைந்தபட்சம் 40 மணி நேரம் அலுவலகத்தில் பணியாற்ற வேண்டும். இவ்வாறு செய்யாதவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக கருதப்படுவர்," என்று தெரிவித்து இருந்தார்.
- ஜார்டன் மூரெ தொழில்நுட்ப துறையில் முன்னோடியாக விளங்கினார்.
- சிலிகான் வேலியில் மதிப்புமிக்க மனிதர்களில் ஒருவராக ஜார்டன் மூரெ இருந்து வந்தார்.
இண்டெல் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜார்டன் மூரெ தனது 94 வயதில் உயிரிழிந்தார். இன்று புழக்கத்தில் இருக்கும் ஏராளமான கம்ப்யுடிங் சாதனங்கள் உருவாக மூலக் காரணமாக விளங்கியவர்களில் ஜார்டன் மூரெ இடம்பெற்று இருந்தார். மார்ச் 24 ஆம் தேதி அமைதியான முறையில் இவரின் உயிர் பிரிந்ததாக இண்டெல் நிறுவன வலைத்தள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மரணிக்கும் தருவாயில் ஜார்டன் மூரெ அவரின் குடும்பத்தாருடன் ஹவாயில் உள்ள தனது வீட்டில் இருந்துள்ளார். சிலிகான் வேலியில் மதிப்புமிக்க நபர்களில் ஒருவராக ஜார்டன் மூரெ இருந்து வந்தார். ஜார்டன் மூரெ மறைவுக்கு ஆப்பிள் தலைமை செயல் அதிகாரியான டிம் குக் மற்றும் கூகுள் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை ஆகியோர் இரங்கல் தெரிவிக்கும் பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.
"இந்த உலகம் மிகப்பெரிய மனிதரான ஜார்டன் மூரெ இழந்துள்ளது. இவர் சிலிகான் வேலியை உருவாக்கிய தந்தைகளில் ஒருவர் ஆவார். தொழில்நுட்ப துறையில் புரட்சியை ஏற்படுத்த உதவியர்களில் இவரும் ஒரவர் ஆவார். இவர் பின்பற்றிய நாம் அனைவரும் அவருக்கு கடமைப்பட்டுள்ளோம்," என டிம் குக் தெரிவித்து இருக்கிறார்.
"ஆர்.ஐ.பி. ஜார்டன் மூரெ. இவரின் இலட்சியம் நம்மை போன்று பலருக்கு தொழில்நுட்ப துறையில் கவனம் செலுத்த தூண்டியது. இவர் எனக்கு தூண்டுகோளாக இருந்துள்ளார். இவரின் பிரிவால் வாடும் குடும்பத்தார் மற்றும் இண்டெல் நிறுவனத்தார் அனைவருக்கும் இரங்கல்கள்," என்று சுந்தர் பிச்சை தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
1968 ஜூலை மாத வாக்கில் இண்டெல் நிறுவனத்தை ஜார்டன் மூரெ மற்றும் ராபர்ட் நைஸ் இணைந்து துவங்கினர். இருவரும் நீண்டகால நண்பர்கள் ஆவர். மூரெ இண்டெல் நிறுவனத்தின் நிர்வாக துணை தலைவராக பணியாற்றி வந்தார். பின் 1979 ஆம் ஆண்டு இவர் இண்டெல் நிறுவன நிர்வாக குழு தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றார்.
- மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் சைபர் குற்றத்தில் சிக்கி ரூ. 7 லட்சம் வரை இழந்துள்ளார்.
- மின்துறையில் இருந்து குறுந்தகவல் அனுப்புவது போல் மோசடி பேர்வழிகள் மும்பை பெண்மணியை ஏமாற்றியுள்ளனர்.
மும்பையின் அந்தேரி பகுதியை சேர்ந்த 65 வயது பெண்மணி சைபர் ஊழலில் சிக்கி ரூ. 7 லட்சம் வரை இழந்துள்ளார். மின் கட்டணத்தை செலுத்தவில்லை என பெண்மணிக்கு குறுந்தகவல் வந்துள்ளது. இதற்கு பதில் அளித்த பெண்மணி ஹேக்கர்களிடம் சிக்கி, தனது பணத்தை இழந்திருக்கிறார்.
மின் கட்டணம் செலுத்தவில்லை என ஹேக்கர்கள் அனுப்பிய குறுந்தகவலை நம்பி, அவர்களை பாதிக்கப்பட்ட பெண் தொடர்பு கொண்டிருக்கிறார். மறுபுறம் பெண்மணிக்கு பதில் அளித்த ஹேக்கர்கள் பெண்ணின் கணினியில் டீம் வியூவர் (வேறொரு இடத்தில் இருந்தபடி மற்றவர் கணினியை இயக்கச் செய்யும் சேவை) எனும் செயலியை இன்ஸ்டால் செய்யக் கூறி இருக்கின்றனர்.

இதை கேட்ட பெண், ஹேக்கர்களிடம் தனது கணினியை பயன்படுத்த அனுமதித்துள்ளார். இவ்வாறு செய்த சிறிது நேரத்தில், பெண்மணியின் வங்கி கணக்கில் இருந்து லட்சக்கணக்கான ரூபாய் எடுக்கப்பட்டதை கூறும் நோட்டிஃபிகேஷன்கள் வந்துள்ளது. இதை பார்த்த பெண்மணி, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து இருக்கிறார்.
வங்கி பரிவர்த்தனைகள் குறித்து எஸ்பிஐ வங்கியை சேர்ந்த குழு ஆய்வு செய்து வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அந்தேரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மின் கட்டண பாக்கி இருப்பதை கூறும் எஸ்எம்எஸ் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மொபைல் போனிற்கு வந்துள்ளது. இவ்வாறு வந்த எஸ்எம்எஸ்-இல் பணத்தை திரும்பி செலுத்த தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் நம்பர் இடம்பெற்று இருக்கிறது. இதில், மின் கட்டண பாக்கியை செலுத்தாத பட்சத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதன் காரணமாக அந்த பெண் எஸ்எம்எஸ்-இல் இருந்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டிருக்கிறார். இதைத் தொடர்ந்தே ஹேக்கர்கள் நூதனமாக பேசி பெண்ணிடம் இருந்து அவரின் கணினியை பயன்படுத்தும் வசதியை பெற்றுள்ளனர். இவ்வாறு செய்த பின் பாதிக்கப்பட்ட பெண்ணின் வங்கியில் இருந்து ரூ. 4 லட்சத்து 62 ஆயிரத்து 959, ரூ. 1 லட்சத்து 39 ஆயிரத்து 900 மற்றும் ரூ. 89 ஆயிரம் பரிவர்த்தனைக்கான எஸ்எம்எஸ் வந்துள்ளது.
இதை பார்த்து அதிர்ந்து போன பெண் உடனே எஸ்பிஐ வங்கியை தொடர்பு கொண்டு மோசடி பரிவர்த்தனைகள் பற்றி புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அந்தேரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இதுபோன்ற சம்பவங்கள் பலருக்கு நடந்துள்ளன. இதன் காரணமாக மத்திய அரசு சார்பில் பொது மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என தொடர்ந்து எச்சரிக்கை தகவல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
- வாட்ஸ்அப் சேவையை பயனர்கள் ஒரே சமயம் நான்கு சாதனங்களில் பயன்படுத்தலாம்.
- வாட்ஸ்அப் விண்டோஸ் டெஸ்க்டாப் தளத்தில் புதிய அம்சத்திற்கான அப்டேட் வெளியாகி உள்ளது.
வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனர்கள் எளிதில் சாதனங்களுடன் இணைத்துக் கொள்ளும் வசதியை ஏற்கனவே வழங்கி வருகிறது. தற்போது வாட்ஸ்அப்-இன் தாய் நிறுவனமான மெட்டா, விண்டோஸ் தளத்திற்கென உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய செயலியை உருவாக்கி இருப்பதாக அறிவித்து இருக்கிறது.
விண்டோஸ் டெஸ்க்டாப்-க்கான புதிய வாட்ஸ்அப் ஆப் அதன் மொபைல் செயலியை போன்றதாகும். இது வாட்ஸ்அப் சேவையின் அதிவேக அனுபவத்தை கூடுதல் சாதனங்களில் வழங்குகிறது. இதுதவிர பயனர்கள் அதிகபட்சம் நான்கு சாதனங்களில் தங்களின் அக்கவுண்ட்-ஐ லின்க் செய்து கொள்ளலாம் என வாட்ஸ்அப் அறிவித்து இருக்கிறது.

இவ்வாறு செய்தபின் பயனர்களின் அக்கவுண்ட் சின்க் செய்யப்பட்டு இருக்கும். இப்படி செய்யும் போது போன் ஆஃப்லைனில் இருக்கும் போதிலும் சேவை சீராகவே இயங்கும். விண்டோஸ் டெஸ்க்டாப்-இல் வாட்ஸ்அப் ஆப்-ஐ அப்டேட் செய்த பின் பயனர்கள் புதிய அம்சங்களை பயன்படுத்த துவங்கலாம். இதில் வீடியோ, வாய்ஸ் காலிங் வசதி உள்ளிட்டவை அடங்கும்.
"சார்ஜர் இல்லையா, பிரச்சினையே இல்லை. இனி உங்களின் வாட்ஸ்அப்-ஐ அதிகபட்சம் நான்கு சாதனங்களுடன் லின்க் செய்து கொண்டு ஸ்மார்ட்போன் ஆஃப் ஆன பின்பும் சாட்களுடன் எந்நேரமும் சின்க், என்க்ரிப்ட் செய்யப்பட்ட நிலையில் தொடர முடியும்," என வாட்ஸ்அப் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்து இருக்கிறது.
பல்வேறு சாதனங்களில் வாட்ஸ்அப் லின்க் செய்வது எப்படி?
- மொபைல் போன் நம்பர் லின்க் செய்யப்பட்டு இருக்கும் சாதனத்தில் வாட்ஸ்அப்-ஐ திறக்க வேண்டும்.
- சாதனத்தில் செட்டிங்ஸ் (Settings) -- லின்க்டு டிவைசஸ் (Linked Devices) ஆப்ஷன்களை தேர்வு செய்ய வேண்டும்.
- இனி லின்க் எ நியூ டிவைஸ் (Link a new device) ஆப்ஷனை கிளிக் செய்து திரையில் வரும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
- விண்டோஸ் டெஸ்க்டாப்-இல் இரண்டாவது சாதனத்தை லின்க் செய்ய, வாட்ஸ்அப் வெப் வலைத்தளத்தை பிரவுசரில் திறக்க வேண்டும்.
- இரண்டாவது சாதனத்தில் இருந்தபடி வலைத்தளத்தில் தெரியும் கியூஆர் கோட்-ஐ ஸ்கேன் செய்ய வேண்டும்.
- சாதனங்கள் சின்க் ஆகும் வரை காத்திருக்க வேண்டும். உங்களின் சாட்கள் இரண்டாவது சாதனத்தில் தெரியும்.
- இதே வழிமுறைகளை கொண்டு மேலும் அதிக சாதனங்களில் வாட்ஸ்அப்-ஐ லின்க் செய்ய முடியும்.
அதிகபட்சம் நான்கு சாதனங்களில் உங்களின் வாட்ஸ்அப் அக்கவுண்ட்-ஐ லின்க் செய்ய முடியும். இணைய இணைப்பில் இருக்கும் வரை உங்களின் வாட்ஸ்அப் அக்வுண்ட் கனெக்ட் செய்யப்பட்டு இருக்கும். விரும்பாத பட்சத்திலோ அல்லது தேவையில்லாத சமயத்திலோ என்று எப்போது வேண்டுமானாலும், எந்த சாதனத்தில் இருந்தும் வாட்ஸ்அப் அக்கவுண்ட்-ஐ அன்-லின்க் செய்து விடலாம்.
- ஒப்போ நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகமானது.
- ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் ஸ்மார்ட்போனின் விற்பனை மார்ச் 17 ஆம் தேதி துவங்கியது.
ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஃபைண்ட் N2 ஃப்ளிப் ஸ்மார்ட்போனினை சமீபத்தில் அறிமுகம் செய்தது. புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் அந்நிறுவனத்தின் புதிய டாப் எண்ட் சாதனமாக அறிமுகமானது. எனினும், விற்பனை துவங்கிய சில நாட்களில் இதன் முதற்கட்ட யூனிட்கள் விற்றுத்தீர்ந்துள்ளன.
மார்ச் 17 ஆம் தேதி விற்பனைக்கு வந்த ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் ஸ்மார்ட்போன் முதல் வாரத்திலேயே விற்றுத்தீர்ந்ததாக ப்ளிப்கார்ட் தளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஒப்போ நிறுவனம் தனது ஃபைண்ட் N2 ஃப்ளிப் மாடலின் விலையை ரூ. 89 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்திருந்தது.

ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் ஸ்மார்ட்போனில் முற்றிலும் புதிய ஃபிலெக்சியன் ஹிஞ்ச் டிசைன் வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேவில் அதிகளவு கிரீஸ் இடம்பெறுவதை தவிர்க்க செய்கிறது. இத்துடன் இந்த மாடலில் 3.26 இன்ச் அளவில் பெரிய இரண்டாவது டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இது மற்ற கிளாம்ஷெல் ரக மாடல்களில் இருப்பதை விட பெரியது ஆகும்.
ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் அம்சங்கள்:
6.8 இன்ச் FHD+ டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்
3.26 இன்ச் கவர் AMOLED டிஸ்ப்ளே, 60Hz ரிப்ரெஷ் ரேட்
கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிளஸ் பிராசஸர்
8 ஜிபி ரேம்
256 ஜிபி மெமரி
50MP பிரைமரி கேமரா
8MP அல்ட்ரா வைடு கேமரா
32MP செல்ஃபி கேமரா
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
4ஜி, வைபை, ப்ளூடூத்
யுஎஸ்பி டைப் சி போர்ட்
4300 எம்ஏஹெச் பேட்டரி
44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
- பயனர்கள் புதிய சிம் கார்டு வாங்கும் போது தாங்களாகவே KYC செய்து கொள்ளும் வசதி 2021-இல் அறிவிக்கப்பட்டு இருந்தது.
- சுயமாக KYC செய்து கொள்ளும் வசதியை பயனர்களுக்கு அறிமுகம் செய்த முதல் நிறுவனமாக வி இருக்கிறது.
மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சகம் 2021 பயனர்கள் தாங்களாகவே KYC செய்து கொள்ளும் வசதியை அறிவித்து இருந்தது. தற்போது இதனை பயனர்களுக்கு அறிமுகம் செய்த முதல் நிறுவனம் என்ற பெருமையை வி பெற்றுள்ளது.
வி நிறுவனத்தின் Self-KYC வழிமுறை முதற்கட்டமாக கொல்கத்தா மற்றும் கர்நாடக மாநிலங்களை சேர்ந்த அனைத்து போஸ்ட்பெயிட் பயனர்களுக்கும் வழங்கப்படுகிறது. வி Self KYC பயனர்கள் புதிய சிம் கார்டு ஒன்றை ஆன்லைனில் ஆர்டர் செய்து, தாங்கள் விரும்பும் சலுகையை தேர்வு செய்து தங்களின் வீட்டில் இருந்தபடி KYC வழிமுறையை நிறைவு செய்து கொள்ளலாம்.

இந்த வழிமுறையின் மூலம் பயனர்கள் நேரடியாக ரிடெயில் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியத்தை போக்குகிறது. புதிய சேவை மத்திய தொலைத்தொடர்பு துறை வெளியிட்டு இருக்கும் விதிகளுக்கு உட்பட்டு வழங்கப்படுவதாக வி நிறுவனம் தெரிவித்துள்ளது. படிப்படியாக இந்த சேவை நாட்டின் அனைத்து பகுதிகள் மற்றும் பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கும் நீட்டிக்கப்படும்.
வி நிறுவனத்தின் Self KYC வழிமுறையை மேற்கொள்வது எப்படி?
வி வலைத்தளம் சென்று விரும்பிய சலுகையை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
தேர்வு செய்த சலுகையை உறுதிப்படுத்தி ஆர்டர் செய்யவும். இதற்கு மற்றொரு மொபைல் நம்பர் மூலம் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் அனுப்பப்படும்.
இனி Self KYC மேற்கொள்ள UIDAI வலைத்தளத்தில் ஆதார் சமர்பித்தல் வழிமுறையை நிறைவு செய்ய வேண்டும்.
அடுத்து குறைந்தபட்சம் பத்து நொடிகளுக்கு லைவ் புகைப்படம் அல்லது வீடியோ பதிவு செய்ய வேண்டும்.
ஆர்டர் செய்தபின் டிஜிட்டல் வெரிஃபிகேஷனை முடித்ததும், வாடிக்கையாளர்களுக்கு சிம் கார்டு அவர்களின் வீட்டிற்கே டெலிவரி செய்யப்பட்டுவிடும்.
- சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் A8 மாடலுக்கு திடீர் விலை குறைப்பு அறிவிப்பு.
- இந்திய சந்தையில் கேலக்ஸி A8 மாடலை சாம்சங் கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது.
சாம்சங் கடந்த ஆண்டு தனது கேலக்ஸி டேப் A8 ஆண்ட்ராய்டு டேப்லெட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இரண்டு வைபை மாடல்கள், இரண்டு எல்டிஇ மாடல்கள் என நான்கு வேரியண்ட்களில் கேலக்ஸி டேப் A8 விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், கேலக்ஸி டேப் A8 அனைத்து வேரியண்ட்களின் விலையும் அதிரடியாக குறைக்கப்பட்டு இருக்கிறது.
கேலக்ஸி டேப் A8 மாடலை சாம்சங் நிறுவனம் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மற்றும் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி கொண்ட வைபை மாடல்களை முறையே ரூ. 17 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 21 ஆயிரத்து 999 விலையில் அறிமுகம் செய்தது. விலை குறைப்பை தொடர்ந்து இவற்றின் விலை தற்போது முறையே ரூ. 14 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 16 ஆயிரத்து 999 என மாறி இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி டேப் A8 எல்டிஇ வெர்ஷனின் 3 ஜிபி ரேம் மாடல் ரூ. 21 ஆயிரத்து 999 என்றும் 4 ஜிபி ரேம் கொண்ட மாடலின் விலை ரூ. 23 ஆயிரத்து 999 என்றும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது விலை குறைப்புக்கு பின் இவற்றின் விலை முறையே ரூ. 18 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 20 ஆயிரத்து 999 என மாறி இருக்கிறது.
சாம்சங் கேலக்ஸி டேப் A8 அம்சங்கள்:
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் A8 மாடலில் 10.5 இன்ச் ஸ்கிரீன், மெல்லிய பெசல்கள், ஆக்டா கோர் பிராசஸர், 8MP பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமரா, ஸ்கிரீன் ரெக்கார்டர் அம்சம், டல்பி அட்மோஸ் வசதி கொண்ட ஸ்பீக்கர், 7040 எம்ஏஹெச் பேட்டரி உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.
- ஆப்பிள் நிறுவனத்தின் முதல் ரிடெயில் ஸ்டோர் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.
- முதல் ஆப்பிள் ரிடெயில் ஸ்டோர் திறப்பு விழாவில் ஆப்பிள் சிஇஒ டிம் குக் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்.
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் ரிடெயில் ஸ்டோரை அடுத்த மாதம் திறக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆப்பிள் தனது இ ஸ்டோர் மூலம் ஆப்பிள் சாதனங்களை அதிகாரப்பூர்வமாக 2020 முதல் விற்பனை செய்து வருகிறது. இதுதவிர ஆப்பிள் ஆஃப்லைன் ஸ்டோர்களை திறப்பதில் ஆர்வம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் புதிய தகவல்களின் படி, இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் ரிடெயில் ஸ்டோர் மும்பையில் திறக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஏப்ரல் முதல் ஜூன் மாதத்திற்குள் டெல்லியில் மற்றொரு ஆப்பிள் ஸ்டோர் திறக்கப்பட இருப்பதாக தெரிகிறது.
மும்பையில் திறக்கப்பட இருக்கும் ஆப்பிள் ரிடெயில் ஸ்டோர் ஜியோ வொர்ல்டு டிரைவ் மாலில் அமைக்கப்படுகிறது. இரண்டாவது ஆப்பிள் ரிடெயில் ஸ்டோர் டெல்லியின் செலக்ட் சிட்டிவாக் மாலில் திறக்கப்பட இருக்கிறது. மும்பையில் உருவாகும் ஆப்பிள் ரிடெயில் ஸ்டோர் அளவில் பெரியதாக இருக்கும் என்றும் இது சுமார் 22 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
டெல்லியில் திறக்கப்படவுள்ள ஆப்பிள் ரிடெயில் ஸ்டோர் சுமார் 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் திறக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இரண்டு ஸ்டோர்களுக்கான இறுதிக்கட்ட பணிகள் ஏற்கனவே நிறைவுபெற்றுவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ரிடெயில் மற்றும் பொது மக்கள் பிரிவுக்கான துணை தலைவர் டியர்ட் ஒ பிரைன் ஆப்பிள் ரிடெயில் ஸ்டோர் திறப்பு விழாவில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் இந்த நிகழ்வில் கலந்து கொள்வாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. முன்னதாக பலமுறை டிம் குக் இந்தியாவுக்கு வந்துள்ளார். 2016 வாக்கில் இந்தியா வந்திருந்த ஆப்பிள் சிஇஒ டிம் குக் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருக்கிறார். இந்தியாவில் ஆப்பிள் சாதனங்கள் உற்பத்தி குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
- உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக ஆப்பிள் நிறுவனம் இருக்கிறது.
- திறக்கப்படாத நிலையில் இருக்கும் பழைய ஐபோன் மாடல்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் ஐபோன் 15 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. எனினும், முதல் தலைமுறை ஐபோனிற்கான மதிப்பு குறைந்ததாக தெரியவில்லை. கடந்த ஆண்டுகளில் பல்வேறு புதிய ஐபோன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுவிட்ட நிலையில், பழைய ஐபோன் அதிக விலைக்கு விற்பனையாகி இருக்கிறது.
அமெரிக்காவில் நடைபெற்ற ஏலத்தில் ஒரிஜினல் ஐபோன் மாடல் 50 ஆயிரம் டலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. முன்னதாக முதல் தலைமுறை ஐபோன் மாடல் அதன் ஒரிஜினல் பெட்டியில் இருக்கும் நிலையில் 63 ஆயிரத்திற்கும் அதிக டாலர்களுக்கு விற்பனையாகி இருந்தது. தற்போது சீல் செய்யப்பட்ட நிலையில், இருக்கும் ஒரிஜினல் ஐபோன் மாடல் 55 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 45 லட்சத்து 44 ஆயிரத்து 402-க்கு விற்பனையாகி இருக்கிறது.

முன்னதாக பலமுறை ஒரிஜினல் ஐபோன் மாடல்கள் அதன் திறக்கப்படாத நிலையில் 35 ஆயிரம் மற்றும் 39 ஆயிரம் டாலர்களுக்கு இந்திய மதிப்பில் ரூ. 28 லட்சத்து 91 ஆயிரத்து 892 மற்றும் ரூ. 32 லட்சத்து 22 ஆயிரத்து 394-க்கு விற்பனையாகி இருக்கின்றன. சுமார் 16 ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட பழைய ஐபோனிற்கான மதிப்பு இன்றும் குறையவில்லை. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மட்டுமின்றி பல்வேறு இதர பொருட்களுக்கும் இதே போன்ற மதிப்பு கிடைக்கிறது.
அதன்படி ஆப்பிள் 1 கம்ப்யூட்டர் மாடல் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் கையொப்பமிட்ட ஐபோன் 11 மாடல் 4 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 3 லட்சத்து 30 ஆயிரத்து 490-க்கு விற்பனையாகி இருக்கிறது. இதே போன்று ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ்-இன் தொழில்நுட்ப குறிப்புகள் 12 ஆயிரத்து 500 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 10 லட்சத்து 32 ஆயிரத்து 755-க்கு விற்பனையாகி இருக்கிறது.






