search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெளிநாட்டு பறவைகள்"

    • தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக வேடந்தாங்கல் ஏரியில் தண்ணீர் நிரம்பி உள்ளன.
    • வரும் நாட்களில் வெளிநாடுகளில் இருந்து மேலும் ஏராளமான பறவைகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மதுராந்தகம்:

    மதுராந்தகம் அருகே உள்ள வேடந்தாங்கலில் புகழ்பெற்ற பறவைகள் சரணாலயம் உள்ளது. இயற்கையான குளிர்ச்சியான சூழ்நிலை, உணவு மற்றும் இனப்பெருக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இங்கு வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து பல்லாயிரம் கிலோ மீட்டர்களை தாண்டி ஆண்டுதோறும் ஏராளமான பறவைகள் வருவது வழக்கம்.

    வடகிழக்கு பருவமழையால் வேடந்தாங்கல் ஏரிக்கு நீர் வரத்தாலும், பருவமழைக்கு பின்னர் காணப்படும் இயற்கையான குளிர்ச்சியான சூழ்நிலைக்காக அக்டோபர் மாதத்தின் கடைசி வாரத்தில் பறவைகளின் வருகை இருக்கும்.

    தொடர்ந்து 6 மாதம் பறவைகள் தங்கி இருக்கும் பல்வேறு வகையான வெளிநாட்டு பறவைகள் குஞ்சு பொரித்து மே அல்லது ஜூன் மாதம் தங்களது சொந்த நாட்டிற்கு திரும்பி செல்லும்.

    இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் பறவைகள் மட்டும் இன்றி மட்டுமின்றி பாகிஸ்தான், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, சைபிரியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து பறவை மற்றும் வாத்து வகை இனங்கள் உள்ளிட்ட 23 அரிய வகை பறவையினங்கள் வரும்.

    இந்த நிலையில் தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக வேடந்தாங்கல் ஏரியில் தண்ணீர் நிரம்பி உள்ளன. இதனால் கடந்த சில நாட்களாக வேடந்தாங்கல் ஏரிக்கு வெளிநாடுகளில் இருந்து பறவைகள் வரத்தொடங்கி உள்ளன.

    இதில் கூழைக்கடா, மிளிர் உடல் அரிவாள் மூக்கன், பாம்பு தாரா, நத்தக்குத்தி நாரை, கரண்டிவாயன், தட்டவாயன், நீர்காகம், வக்கா, உள்ளிட்ட 8 வகையான பறவைகள் அடங்கும்.

    வரும் நாட்களில் வெளிநாடுகளில் இருந்து மேலும் ஏராளமான பறவைகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்பொழுது வந்துள்ள பறவையினங்கள் மரத்தில் கூடுகட்டி உள்ளன. மரங்களில் பறவைகள் கூட்டமாக அமர்ந்து இருப்பதை பார்த்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    தற்போதுவரை வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு 5 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பறவைகள் வந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து வேடந்தாங்கல் வனச்சரக அலுவலர் லெஸ்லி கூறியதாவது:-

    வேடந்தாங்கல் ஏரிக்கு வளையப்புத்தூரில் இருந்து வரக்கூடிய நீர்வரத்து கால்வாய் சீரமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏரிக்கு நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. அருகில் உள்ள மதுராந்தகம் ஏரி பறவைகளுக்கு அதிக அளவிலான மீன் மற்றும் பூச்சி இனங்கள் கிடைக்கும் பகுதியாக இருந்து வந்தது.

    தற்போது கடந்த இரண்டு வருடங்களாக மதுராந்தகம் ஏரியில் தூர்வாரும் பணி நடைபெறுவதால் அங்கு தண்ணீர் இல்லை.

    எனவே பறவைகளின் உணவு தேவைக்காக 3 மாதத்துக்கு ஒரு முறை 50 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடப்படுகின்றன. வரும் நாட்களில் கூடுதலாக வெளிநாடுகளில் இருந்து கூடுதலாக பறவையினங்கள் வரும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பறவைகள் சரணாலயத்தில் 290 வகையான பறவைகள் வந்து செல்வது வழக்கம்.
    • ஆர்டிக் பிரதேசத்தில் இருந்து ஆலாபறவைகள் வந்துகுவிந்துள்ளது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.

    இந்த பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டு தோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை ரஷ்யா, ஈரான், ஈராக், இலங்கை, சைபீரியா, உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்து அங்கு நிலவும் குளிரை போக்க கோடியக்கரைக்கு 290 வகையான பறவைகள் வந்து செல்வது வழக்கம்.

    தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி அதிகமாக மழை பெய்த நிலையில் நீர் நிலைகள் நிரம்பி உள்ளதால் பறவைகள் வருவதற்கு ஏற்ற சூழ்நிலை நிலவி வருவதால் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஆர்டிக் பிரதேசத்தில் இருந்து ஆலா பறவைகள் வந்துகுவிந்துள்ளது.

    ரஷ்யா, ஈராக் நாட்டிலிருந்தும் இலங்கையிலிருந்து பூநாரை மற்றும் கரண்டி மூக்குநாரை.

    சைபீரியாவில் இருந்து உள்ளான் வகையைச் சேர்ந்த பட்டாணி உள்ளான், கொசு உள்ளான், கடற்காகம்.உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகள் லட்சக்கணக்கில் வந்து குவிந்துள்ளது.

    பறவைகள் சரணாலயத்தில் கூட்டம், கூட்டமாக அமர்ந்துள்ள பறவைகளை பார்ப்பதற்கு கண் கொள்ளா காட்சியாக அமைந்துள்ளது.

    இந்த பறவைகளை இரட்டைதீவு, கோவை தீவு ,நெடுந்தீவு, உள்ளிட்ட பகுதிகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் காணலாம் பிளம்மிங்கோ (பூநாரை,) பறவைகள் வந்து குவிந்துள்ளன இதற்கு காரணம் அதற்கு ஏற்ற உணவான பிளாங்டன் லார்வா அதிக அளவில் இந்த சரணயத்தில் கிடைக்கின்றன. மேலும் பறவைகள் வரத்து ஏற்ற சூழல் நிலவுவதால் அதிக அளவில் வந்து குவிந்துள்ளன வழக்கத்துக்கு மாறாக இலங்கையில் இருந்து பூநாரை சிறு குஞ்சுகளும் வந்துள்ளன.

    பறவைகளின் நூழைவாயிலாக கருதப்படும் சரணாலயத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தங்கும் இடம், உணவு வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யபட்டுள்ளது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    • சாம்பல்தலை, மஞ்சள் வால்பறவை, நீலசிறகு வாத்து, தட்டைவாயன் உள்ளிட்ட ஏராளமான வகை வாத்துக்கள், பறவைகள் ஏரி முழுவதும் நிரம்பி உள்ளன.
    • வெள்ளை வாலாட்டி பறவை, கொசு உள்ளான், நீளக்கால் உள்ளான், பொரிஉள்ளான் உள்ளிட்ட பறவைகளை சதுப்பு நிலத்தில் காணலாம்.

    சோழிங்கநல்லூர்:

    பள்ளிக்கரணை சதுப்புநில ஏரி சமீபத்தில் பெய்த மழை காரணமாக தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது.

    இதனால் கடந்த சில நாட்களாக வெளிநாடுகளில் இருந்து வரும் வலசை பறவைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பள்ளிக்கரணை ஏரி முழுவதும் பல்வேறு வகையிலான பறவைகள் முகாமிட்டு உள்ளதால் அப்பகுதியை பார்வையிட ஏராளமானோர் வந்து செல்கிறார்கள்.

    சாம்பல் கூழைக்கடா, அரிவாள் மூக்கன் ஆகிய இரண்டு இன பறவைகள் பள்ளிக்கரணை ஏரியில் கூடு கட்டத்தொடங்கி உள்ளன. இவை ஏராளமாக மரங்களில் இருப்பதை காண முடிகிறது. வேடந்தாங்கலில் பறவைகள் கூடுகட்ட தொடங்காத நிலையில் பள்ளிக்கரணையில் பறவைகள் கூடுகள் கட்டி வருவது பறவைகள் ஆர்வலர்களை ஆச்சரியம் அடைய செய்து உள்ளது.

    சாம்பல்தலை, மஞ்சள் வால்பறவை, நீலசிறகு வாத்து, தட்டைவாயன் உள்ளிட்ட ஏராளமான வகை வாத்துக்கள், பறவைகள் ஏரி முழுவதும் நிரம்பி உள்ளன. இதேபோல் பெரும்பாக்கம் ஏரிக்கும் ஏராளமான பறவைகள், பலவகை வாத்து இனங்கள் வந்து உள்ளன.

    இதுகுறித்து பறவைகள் ஆர்வலர் ஒருவர் கூறும்போது, "சைபீரியாவில் இருந்து 4 வகையான வாத்துகள் பள்ளிக்கரணை ஏரிப்பகுதிக்கு வந்து உள்ளன. தட்டைவாயன் வாத்து, ஊசிவால் வாத்து, நீலச்சிறகு, கிருவைத்தாரா பறவைகள் கூடுகள் கட்டாது.

    வெள்ளை வாலாட்டி பறவை, கொசு உள்ளான், நீளக்கால் உள்ளான், பொரிஉள்ளான் உள்ளிட்ட பறவைகளை சதுப்பு நிலத்தில் காணலாம். இது தவிர வேட்டையாடும் பறவைகளான பொரி வல்லூறு, சேற்று பூனைப் பருந்து மற்றும் அதிக புள்ளிகள் கொண்ட கழுகு உள்ளிட்டவையும் வந்து உள்ளன. தற்போது வேடந்தாங்கல், மதுராந்தகம் ஆகிய இரண்டு ஏரிகளிலும் போதிய அளவு தண்ணீர் இல்லை" என்றார்.

    • கடும் பனிப்பொழிவால் பனிமலை உருவாகும் நாடுகளை சேர்ந்த பறவைகள் மித தட்பவெப்ப மண்டலமான நம் நாட்டுக்கு வலசை வருகின்றன.
    • தற்போது 82 வகையான 2,164 பறவைகள் குளத்தில் தங்கியுள்ளன

    திருப்பூர்:

    திருப்பூர் நஞ்சராயன் குளம், பறவைகள் சரணாலயமாக திகழ்கிறது. கடும் பனிப்பொழிவால் பனிமலை உருவாகும் நாடுகளை சேர்ந்த பறவைகள் மித தட்பவெப்ப மண்டலமான நம் நாட்டுக்கு வலசை வருகின்றன.கடும் குளிரில், இரை தேடி வாழ முடியாது என்பதால், 4முதல் 6மாதங்கள் வரை நஞ்சராயன் குளத்தில் வந்து தங்கி செல்கின்றன.

    ஒரு வார பயணமாக இங்கு வந்தடையும் பறவைகள், மிதவெப்ப சூழலில் தங்கி இரையெடுத்து, தங்கள் உடலை வலுவாக்கி கொள்கின்றன. கோடை வெப்பம் துவங்கும் போது, மீண்டும் தாய் நாட்டுக்கு சென்று கூடு கட்டி, இனப்பெருக்கம் செய்கின்றன.

    குளிர்பருவம் துவங்கும், அக்டோபர் மாதத்தில் வலசை வரும் வெளிநாட்டு பறவைகள், தற்போது நஞ்சராயன் குளத்தில் தலைகாட்ட துவங்கியுள்ளன. ஏற்கனவே, ஏராளமான உள்நாட்டு பறவைகளும், கூட்டம், கூட்டமாக தங்கியிருப்பதால், பறவைகள் சரணாலயம் இப்போதிருந்தே களைகட்ட துவங்கிவிட்டது.

    திருப்பூர் வரும் பறவைகள், கூட்டம் கூட்டமாக தங்கியிருந்து மார்ச் மாதம் வரை குளத்தில் இளைப்பாறும்.அதற்கு பிறகு, தாய்நாடுகளுக்கு திரும்பி செல்லுமென, பறவை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

    திருப்பூர் இயற்கை கழக தலைவர் ரவீந்திரன் கூறியதாவது:-

    பருவநிலை மாற்றம் காரணமாக, பறவைகள் வலசை வருவது சில ஆண்டுகளாக தாமதம் ஏற்பட்டு வருகிறது. விரைவில், சைபீரியா மற்றும் வட ஐரோப்பிய நாட்டு பறவைகள் திருப்பூர் வரும். திருப்பூர் இயற்கை கழகம் சார்பில் கடந்த 14ல் கணக்கெடுப்பு நடத்தினோம்.

    தற்போது 82 வகையான 2,164 பறவைகள் குளத்தில் தங்கியுள்ளன. உள்நாட்டு பறவைகள் மட்டுமல்லாது, வெளிநாடுகளில் இருந்தும், 286 வகையான பறவைகள், நஞ்சராயன் குளம் வந்து செல்வது வழக்கம்.

    இம்மாத இறுதியில் இருந்து வெளிநாட்டு பறவைகள் வருகை துவங்கும் என எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • கழிவு பொருட்கள் மிதப்பதால் துர்நாற்றம் வீசுகிறது
    • வெளிநாட்டு பறவைகள் அதிக அளவில் வருவதற்கான ஏற்பாடுகளையும் செய்ய வனத்துறை நடவடிக்கை

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்ட நீர் நிலைகளான குளங்கள் மற்றும் வயல் வெளிப் பகுதிகளில் வெளிநாட்டு பறவைகளை அதிக அளவில் காண முடியும்.சில வருடங்களில் ஜூன் மாதம் வரும் பறவைகள் ஆகஸ்ட் மாதம் இறுதிவரை இங்கேயே தங்கி இருப்பதை காணமுடியும். குமரி மாவட்டத்தில்2பருவ மழை காலம் இருப்பதாலும் இயற்கை வளம் மிகுதியாக காணப்படுவதாலும் குளங்கள், வயல் வெளிகள் மற்றும் தண்ணீர் பகுதிகள் அதிகம் இருப்பதாலும் பறவைகள் இந்த பகுதியை தங்களின் புகலிடமாக தேர்வு செய்ய காரணமாக அமைந்துள்ளது.

    நீர்க்காகம், முக்குளி ப்பான், வெண் கொக்கு, பாம்பு தாரா, நத்தை கொத்தி நாரை, கூழக்கடா, வர்ண நாரை, இருட்டு கொக்கு, மஞ்சள் மூக்கு வாத்து, தாமரை இலைக் கோழி, கானங்கோழி, நரமத்தாரா, வெள்ளைஐபீஸ், கருப்பு ஐபீஸ், ஆற்றுமயில் ஆகிய பறவைகளை எப்போதும் பார்க்க முடிகிறது. வெளி நாடுகளில்இருந்து ஆஸ்பி ரே, புலவர், சிவப்புஷாங்க், பச்சைஷாங்க், டெர்ன், ஊசிவால்முனைவாத்து, சாண்ட்பைப்பர், சாதா ரணடில், சிறிய டெர்ன், காஸ்பியன்டெர்ன், ஹோவெலர் பிளமிங்கோ போன்றவைக ளும்படை யெடுக்கின்றன. இதன் காரணமாக கொட்டாரம் அச்சன்குளம், சுசீந்திரம் குளம், தேரூர்பெரியகுளம், மணக்குடி காயல், தத்தையார்குளம், மாணிக்க புத்தேரி குளம் உள்பட ௧௦ குளங்களை பறவைகள் சரணாலயமாக மாற்றுவ தற்காக பறவைகள் பாதுகாப்பு பகுதிகளாக தமிழக அரசு அறிவித்துஉள்ளது. இதில் முதல்கட்டமாக கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் அச்சன்குளத்தில் ரூ.2 லட்சம் செலவில் தொலைவில் நிற்கும் பறவைகளை குளத்தின் கரையில் அமர்ந்து பார்க்க கண்காணிப்பு கூடம், பூங்கா, நடைபாதை, கேன்டின், குளத்தின்கரை யில்மக்கள் அமர்ந்து பறவை களைப் பார்த்து ரசிப்ப தற்கான இருக்கைகள் உள்பட பல்வேறு கட்ட மைப்பு வசதிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த பணிகள் அனைத்தும் முடிந்து பிறகும் இவைகள் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை.

    இதனால் இந்தப் பறவை கள் சரணாலயம் பகுதிக்கு பொதுமக்கள் யாரும் இது வரை வந்ததாகத் தெரிய வில்லை. இந்த நிலையில் தற்போது பறவைகளுக்கு பெரும் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு உள்ளன. குளங்களில் ஆக்கிரமிப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன குளங்களில் தாமரை பயிரிடப்பட்டு அவற்றின் இலைகளை சேகரிப்பது பறவைகள் நீரில் உலாவு வதை அச்சுறுத்துவது ஆகும்.

    சில இடங்களில் சுற்று வட்டார ஊர்களில் உள்ள கழிவு நீர் குளங்களில் நேரடியாக வந்து சேருவதால் நீரின் தரம் குறைவதுடன் நீரில் நச்சுத்தன்மை அதிக ரித்து பறவைகளின் அடி ப்படை உணவுப் பொரு ளான மீன்களும் இறந்து போகின்றன. குறிப்பாக அச்சன்குளத்தில் மண் நிறைந்து ஆகாயத்தாமரை, கோரைப்புல், சம்பைபுல், போன்றவை வளர்ந்து ஆக்கிரமித்துள்ளது. இத னால் வாத்து இன பறவைகள் தண்ணீரில் நீந்தி மீன் பிடிக்க முடிய வில்லை. மேலும் இந்த குளத்தில் தாமரைபயிரிடப் படுவத ால்தாமரை இலைகளின் மேல் மிதக்கும் கூடுகளை கட்டும் தாமரை இலைக் கோழியின் இனம் அழிகின்றன.

    பறவை களைப் பார்வை யிட இந்த குளத்தின் வடக்கு கரையில் அமைக்கப்பட்டு உள்ள கண்காணிப்பு கூடங்கள் பராமரிப்பின்றி கிடக்கின்றன. இவை இரவு நேரங்களில் மது பிரியர்க ளின் திறந்தவெளி பாராக மாறியுள்ளது. மேலும் இந்த குளத்தில் கரையோரப் பகுதிகளில் சில மர்ம நபர்கள் பிளாஸ்டிக் கழிவு கள் மற்றும் குப்பைகளை கொட்டி தீ வைத்து விடுகி றார்கள். இது தவிர சிலர் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை இந்த குள த்தின் கரையில் கொண்டு வந்து கொட்டுகி றார்கள். இதனால் இந்த குளம் மாசுபடுகிறது.துர்நாற்றம் வீசுகிறது. இது போன்ற காரணங்களினால் கொட்டாரம் அச்சன்கு ளத்துக்கு வெளிநாட்டு பறவைகள் வரத்து அடி யோடு குறைந்து விட்டது.

    எனவே இந்த குளத்தில் வளர்க்கப்படும் தாமரை களை அகற்றி குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டுவதை தடுத்து வெளி நாட்டு பறவைகள் அதிக அளவில் வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சூழியல் ஆர்வலர்களும் பொதுமக்க ளும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • கிராம மக்கள் மகிழ்ச்சி
    • 3 மாதங்களுக்கு பிறகு திரும்பி சென்றுவிடும் என்கின்றனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம், வேடந்தவாடி கிராமத்தில் பறவைகள் குவிந்து வருவதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இயற்கையான சூழல், தட்பவெப்ப நிலை, உணவு உள்ளிட்ட காலநிலைக்கு ஏற்ப ஏதுவாக இருக்கும் இடங்களை தேடி பல்வேறு நாடுகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் பறவைகள் வருகை தொடர்கிறது.

    இதன்மூலம் பறவைகளின் இனப்பெருக்கம் நிகழ்கிறது. பறவைகள் சரணாலயம் என்றால் வேடந்தாங்கல் என கூறப்பட்டு வந்த நிலையில், திருவண்ணாமலை அடுத்த மங்கலம் அருகே வேடந்தவாடி கிராமமும் வேடந்தாங்கலாக உருவெடுத்துள்ளது.

    இந்த கிராமத்தில் 140 ஏக்கர் பரப்பளவில் உள்ள பெரிய ஏரியில் நீர் நிரம்பியுள்ளது. ஏரியின் நடுவே மரங்கள் உள்ளன. இயற்கையான சூழல் இருப்பதால் கடந்த சில வாரங்களாக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்துபறவைகளின் வருகை அதிகரித்துள்ளன.

    கூட்டம், கூட்டமாக வரும் பறவைகளை, கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர்.

    இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது, எங்கள் கிராமத்துக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து நீர்காகம், அரிவாள் மூக்கன், கூழைக்கடா, நீர் மத்தி, நாரை என 10 - க்கும் மேற்பட்ட வகைகளைச் சேர்ந்த பறவைகள் வந்துள்ளன. பறவைகள் கூட்டமாக கூடுவதற்கு ஏற்ற கிராமமாக, எங்கள் கிராமம் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    எங்கள் கிராமத்தில் நிலவும் தட்ப வெப்ப நிலையானது பறவைகளை கவர்ந்துள்ளன. இனப்பெருக்கத்துக்காக பறவைகள் வருவது மகிழ்ச்சியாக உள்ளன. 3 மாதங்களுக்கு பிறகு திரும்பி சென்றுவிடும் என்கின்றனர்.

    காலையில் இரை தேடி செல்லும் பறவைகள், மாலையில் திரும்பி விடுகிறது. பறவைகள் வருவது, இதுவே முதன்முறை. பறவைகள் எழுப்பும் ஒசையை கேட்கும்போது, மனதிற்கு மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் உள்ளது என்றனர். பறவைகளை காண சுற்றுப் புற பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் வந்து செல்கின்றனர் என்றனர்.

    • கடந்த சில நாட்களாகவே நகர்பகுதியின் விரிவாக்கத்தால் சிட்டுக்குருவிகளின் ரிங்காரம் குறைந்துள்ளது.
    • தற்போது பிளாக் அண்ட் ஆரஞ்சு, பிளைகேட்சர், ஒயிட்பால்டி, லாபிங்திரஸ் உள்ளிட்ட பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலைச் சுற்றி இயற்றை எழில் கொஞ்சும் மலைகள் மற்றும் காடுகள் உள்ளன. இங்கு ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. கடந்த சில நாட்களாகவே நகர்பகுதியின் விரிவாக்கத்தால் சிட்டுக்குருவிகளின் ரிங்காரம் குறைந்துள்ளது.

    மேலும் பல அரியவகை பறவைகள் அழியும் நிலையில் உள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் பறவைகளின் வருகையும் குறைவாகவே இருந்தது.

    கொரோனா ஊரடங்கு காரணமாக மலைப்பகுதியில் வாகனங்கள் எண்ணிக்கை குறைந்தது. மேலும் காற்று மாசும் குறைந்ததால் வனப்பகுதியில் புத்துயிர் பெற்று சிட்டுக்குருவிகள் சத்தம் கேட்கதொடங்கியுள்ளது.பாம்பே சோலை, மதிகெட்டான்சோலை, புலிச்சோலை உள்ளிட்ட காடுகளில் பிளாக் அண்ட் ஆரஞ்சு, பிளைகேட்சர், ஒயிட்பால்டி, லாபிங்திரஸ் உள்ளிட்ட பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது.

    மேலும் வெளிநாட்டு பறவைகளான அக்கிடெல்லா, ஏசியன்குயில், ஜெசினா வகைகளும் வரத்தொடங்கியுள்ளதால் வனப்பகுதி உற்சாகமிக்க இடமாக மாறியுள்ளது.

    • பழவேற்காடு ஏரி மற்றும் பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதிகளிலும் புதிய வரவாக வெளிநாட்டு கடற்பறவைக் தென்படுவதாக பறவைகள் கண்காணிப்பாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
    • பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மற்றும் கேளம்பாக்கம் ஏரியில் ஆர்க்டிக் ஸ்குவா பறவைகளை பார்க்க முடிகிறது.

    சென்னை:

    வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் கடந்த வாரம் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. அப்போது பலத்த சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.

    தற்போது இந்த புயல் காற்றிற்கு பின்னர் சென்னை கடற்கரை பகுதிகளுக்கு தற்போது வெளிநாட்டில் இருந்து பல்வேறு வகை கடற்பறவைகள் வரத்தொடங்கி உள்ளன.

    கேளம்பாக்கம் ஏரிப்பகுதியில் லெசர் நோடி எனப்படும் சாம்பல் தலை ஆலா, சைபீரியாவில் இருந்து ஆர்க்டிக் ஸ்குவா, ஆஸ்திரேலியாவில் இருந்து டெர்ன்கள் மற்றும் இந்தியப் பெருங்கடலின் கிழக்குப் பகுதியில் உள்ள தீவுகளில் மட்டுமே இனப்பெருக்கம் செய்யும் சூட்டி டெர்ன் போன்ற பறவைகள் வந்து உள்ளன.

    இதே போல் பழவேற்காடு ஏரி மற்றும் பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதிகளிலும் புதியவரவாக வெளிநாட்டு கடற்பறவை தென்படுவதாக பறவைகள் கண்காணிப்பாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

    இது தொடர்பாக பறவைகள் கண்காணிப்பாளர் ஒருவர் கூறியதாவது:-

    மாண்டஸ் புயல் காற்றுக்கு பின்னர் சென்னை கடற்கரை பகுதிக்கு வெளிநாட்டு கடல் பறவைகள் வரத் தொடங்கி உள்ளன. ஆழ்கடலில் வாழும் பெலாஜிக் பறவைகள் இனப்பெருக்கத்திற்காக மட்டுமே நிலத்திற்கு வரும். அது குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டுமே செல்லும். ஒவ்வொரு முறை சென்னை புயலை சந்திக்கும் போதும் இந்த வகை பறவை இங்கு வருகிறது.

    கேளம்பாக்கம், பள்ளிக்கரணை, பழவேற்காடு பகுதிகளிலும் சில பறவைகள் வந்துள்ளன. சூறாவளியை உணர்ந்து சில பறவைகள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்போது, அந்த காற்று சில பறவைகளை நமது நீர்நிலைகளுக்கு கொண்டு வருகின்றன.

    உள்ளூர் பறவைகள் அவற்றை விரட்டுவதால் அவை ஒரு வாரத்திற்கு மேல் உயிர்வாழ்வது கடினம் ஆகும். இந்த வகை பறவைகள் புயலுக்குப் பிறகு நிலத்தை நோக்கி வருகின்றன.

    இந்த முறை பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மற்றும் கேளம்பாக்கம் ஏரியில் ஆர்க்டிக் ஸ்குவா பறவைகளை பார்க்க முடிகிறது. இது மற்ற பறவைகள் மீன் பிடிக்கும் வரை காத்திருக்கும். பின்னர் அவற்றிடம் இருந்து அதனை பறித்து சென்று விடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பழவேற்காடு ஏரி மற்றும் கடற்கரை அருகில் செப்டம்பர் மாதம் தொடங்கி ஜனவரி வரை வெளிநாட்டு பறவைகள் வருவது வழக்கம். தற்போது குளத்துமேடு, கணவான் துறை ஏரி தீவு பகுதியில் வெளிநாட்டு பறவைகள் பல ஆயிரம் கிலோ மீட்டர் தாண்டி குறைந்த அளவில் வந்துள்ளன.

    பூ நாரை, கரியலிஸ் கோல்டன் ப்ளவர் மற்றும் உள்நாட்டு பறவைகளான பெலிக்கன் அரிவாள் மூக்கன், கொக்கு நாரை, கேர்தலின் வாத்து, சோ பிரிக்ஸ் உள்ளிட்ட பறவைகள் வந்துள்ளன. இனிவரும் நாட்களில் வெளிநாட்டு பறவைகள் அதிகமாக வருவதற்கு வாய்ப்புள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

    • நீலகிரி மாவட்டத்திற்கு ரோஸி ஸ்டார்லிங் என்ற பறவை குளிர்கால பயணியாக வந்துள்ளது.
    • ஆண்டுதோறும் ரோஸி ஸ்டார்டிங் பறவைகள் கிழக்கு ஐரோப்பாவில் இருந்து தெற்காசியா முழுவதும் இடம் பெயர்கின்றன.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் குளிர்காலத்தை வரவேற்கும் விதமாக வருகை புரிந்துள்ளது வெளிநாட்டு ரோஸி ஸ்டார்லிங் பறவைகள்.

    விளைநிலங்களில் உள்ள பயிர்களை சேதப்படுத்தும் வெட்டுக்கிளி, பூச்சிகளை உண்ணும் விவசாயிகளின் நண்பன் என அழைக்கப்படும் இந்த வெளிநாட்டு பறவைகளின் வருகையால் சுற்றுலா பயணிகள் மற்றும் பறவைகள் இன ஆவண புகைப்பட கலைஞர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    உயிர் சூழல் மண்டலத்தில் மிகப்பெரிய அங்கமாக நீலகிரி மாவட்டம் திகழ்வதால் ஆண்டுதோறும் பறவைகளின் வலசை காணப்படுகின்றன. நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டுக்கு உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பறவைகள் வலசை வருகின்றன.

    நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கொடநாடு, சோலூர் மட்டம், கேத்ரின் நீர்வீழ்ச்சி, கிளன்மார்கன், கோத்தகிரி, பர்லியார், குன்னூர் ஆகிய பகுதிகள் வெளிநாட்டு பறவைகள் வந்து செல்லும் பகுதிகளாக உள்ளன.

    தற்போது நீலகிரி மாவட்டத்திற்கு ரோஸி ஸ்டார்லிங் என்ற பறவை குளிர்கால பயணியாக வந்துள்ளது. இந்த பறவைகள் ரோசா, மைனா, சோளபட்சி என்றும் அழைக்கப்படுகிறது.

    இந்த பறவைகள் கூடு கட்டி வாழ்வதில்லை இருந்தாலும் 6 முதல் 8 முட்டைகள் வரை இடும். இந்த பறவை இனத்தில் ஆண், பெண் பறவைகள் 2ம் சேர்ந்தும் அடைகாக்கும் தன்மை கொண்டது. வெட்டுக்கிளி மற்றும் விவசாய பயிர்களை நாசம் செய்யும் பூச்சிகளை இவை சாப்பிடுவதால் இந்த பறவைகளையும் விவசாயிகளின் நண்பன் என்று அழைக்கிறார்கள்.

    ஆண்டுதோறும் ரோஸி ஸ்டார்டிங் பறவைகள் கிழக்கு ஐரோப்பாவில் இருந்து தெற்காசியா முழுவதும் இடம் பெயர்கின்றன. குளிர்காலத்தில் இந்தியாவின் பயணம் மேற்கொள்கின்றன. இந்த பறவைகள் கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா ஆகிய பகுதிகளில் குளிர்கால சுற்றுலா பயணியாக இந்த பறவைகள் வந்து செல்கின்றனர். ரோஸி ஸ்டார்லிங் பறவைகள் தற்போது உதகைக்கு கூட்டம் கூட்டமாக படையெடுத்துள்ளது.

    இது குறித்து பறவைகளை ஆவணபடுத்தும் கலைஞர் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் குளிர்காலத்தில் ஏராளமான வெளிநாட்டு பறவைகள் வருகை தருவது வழக்கம். இந்த ஆண்டு ஊட்டியில் நீர் பணியின் தாக்கம் அதிகரித்து மாலை மற்றும் அதிகாலை நேரங்களில் கடும் குளிர் நிலவி வரும் நிலையில் ஆசிய பறவைகளான ரோஸி ஸ்டார்லிங் பறவைகள் பனிக்காலத்தை அனுபவிக்க வந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பறவை இனங்களுக்கு ஏற்ற பழ வகைகள் நிறைந்துள்ளதால் குளிர் காலங்களில் ரோஸ் ஸ்டார்லிங் பறவைகளின் வருகை அதிகரித்து காணப்படும் என கூறினார்.

    குறிப்பாக 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு பின் இந்த பறவைகளின் வருகை அதிகரித்துள்ளதால் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

    • புள்ளி வாத்து, தரை குருவி, கூழைக்கடா, சாம்பல் நாரை உள்ளிட்ட பலவகையான வெளிநாட்டு பறவைகள் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வந்துள்ளன.
    • வேடந்தாங்கல் ஏரிக்கரையில் மூங்கில் மரம், கடப்ப மரம் போன்றவை அதிகமாக உள்ளதால் பறவைகள் இனப்பெருக்கம் செய்வதற்கும் கூடு கட்டி குஞ்சு பொரிக்கவும் ஏதுவாக உள்ளது.

    மதுராந்தகம்:

    தமிழகத்தில் மிக முக்கியமான பறவைகள் சரணாலயத்தில் ஒன்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம். இங்கு ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் ஜூலை மாதம் வரை வெளிநாட்டு பறவைகள் வந்து தங்கி இனப்பெருக்கம் செய்து மீண்டும் தங்களது சொந்த நாடுகளுக்கு செல்வது வழக்கம்.

    இந்த ஆண்டு மலேசியா, பாகிஸ்தான், மியான்மர், ஸ்ரீலங்கா, ஆஸ்திரேலியா, கனடா, நேபாளம், அந்தமான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பல வகை பறவைகள் வர்ணநாரை, ஊசிவால் வாத்து, சாம்பல் நிற கூழாகடா, தண்டை வாயான், பாம்பு புத்திரா, வெள்ளை அரிவாள் மூக்கன், கரண்டிவாயன், புள்ளி வாத்து, தரை குருவி, கூழைக்கடா, சாம்பல் நாரை உள்ளிட்ட பலவகையான வெளிநாட்டு பறவைகள் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வந்துள்ளன.

    வேடந்தாங்கல் ஏரிக்கரையில் மூங்கில் மரம், கடப்ப மரம் போன்றவை அதிகமாக உள்ளதால் பறவைகள் இனப்பெருக்கம் செய்வதற்கும் கூடு கட்டி குஞ்சு பொரிக்கவும் ஏதுவாக உள்ளது.

    இந்த ஆண்டு வெளிநாட்டு பறவைகளின் வருகையையடுத்து சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது. பெரியவர்களுக்கு ரூ.10, சிறுவர்களுக்கு ரூ.5, கேமரா வாடகை ரூ.50 என வசூலிக்கப்படுகிறது.

    மேலும் வனத்துறைக்கு வனத்துறை சார்பில் ஏரிக்கரை மேல் தொலைதூர பறவைகளை பார்ப்பதற்கு கேமரா வசதி, கழிவறை வசதிகள் குடிநீர் வசதிகள் வனத்துறை சார்பில் செய்யப்பட்டுள்ளது. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வனசரக அலுவலர் ரூபஸ் லெஸ்லி ஆகியோர் தலைமையில் வனத்துறையினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

    ×