search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரவீந்திரநாத்குமார்"

    தமிழகத்துக்கு மந்திரி பதவி வழங்குவது குறித்து பிரதமர் மோடி முடிவு எடுப்பார் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

    ஆலந்தூர்:

    டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இரண்டாவது முறையாக பிரதமராக மோடி பதவி ஏற்று கொண்ட அற்புதமான நிகழ்விற்கு கட்சிக்காக உழைத்த தொண்டர்களான மாவட்ட தலைவர்கள் சுமார் 150-க்கும் மேற்பட்டவர்களுக்கு சிறப்பு அழைப்பாளர்கள் போலவே அழைப்பு விடுத்து அவர்களும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள். இது தொண்டர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த உற்சாகத்தோடு தமிழ்நாட்டில் கட்சியை பலப்படுத்தி பணியாற்றுவோம்.

    இன்னும் நிறைய வாய்ப்புகள் வரும். மோடி தலைமையிலான இந்த அமைச்சரவை இந்தியாவை வல்லரசு நாடாக எடுத்துச் செல்லும்.

    இன்னும் பல வெற்றிகள் பல மாநிலங்களில் குவிக்க இருக்கிறது. தமிழகத்திலும் பா.ஜனதா பலம் பெற இருக்கிறது. தமிழகத்தில் பா.ஜனதா பலம் பெற பலம் பெற தமிழகத்திற்கு அதிக பிரதிநிதித்துவம் கிடைக்கும்.

    மக்களுக்கு எதிரான, மக்களுக்குத் துன்பம் தரக் கூடிய பிரச்சனைகளை இந்த அரசு ஆதரிக்க போவதில்லை, பாஜகவிற்கு தமிழகத்தின் மீது அக்கறை இல்லை என்ற தவறான பிரசாரம் எதிர்கட்சிகளால் செய்யப்படுகிறது. பா.ஜனதா தமிழகத்தின் மீது மிகுந்த அக்கறையோடு இருக்கிறது. பல நல்ல திட்டங்களை கொண்டு வருவதற்கான அடிப்படையில் எங்களுடைய பணி இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.


    மத்திய அமைச்சரவையில் தமிழகத்திற்கு பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் உங்கள் கூட்டணியில் வெற்றிபெற்ற ஒரே எம்.பி.யான ரவீந்திரநாத் பெயரை தமிழகத்திலிருந்து மேலிடத்திற்கு பரிந்துரை செய்வீர்களா? என்ற கேள்விக்கு,

    ‘இதுகுறித்து கட்சி தலைமையும், பிரதமர் மோடியும் தான் முடிவு எடுக்க வேண்டும். இப்போது அது பற்றி எதுவும் கூற விரும்பவில்லை’ என்று தெரிவித்தார்.

    மோடி தலைமையிலான புதிய மந்திரிசபையில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு இடம் வழங்கப்படவில்லை.
    புதுடெல்லி:

    மத்தியில் பாஜக தலைமையிலான கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றிருந்தாலும், மோடி தலைமையிலான புதிய மந்திரி சபையில் கூட்டணி கட்சிகளுக்கும் வாய்ப்பு கொடுக்க முடிவு செய்யப்பட்டது. 

    எனவே, தமிழ்நாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 2 மந்திரி பதவி கொடுக்க முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியானது. கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் அல்லது மேல்-சபை எம்.பி.யான வைத்திலிங்கம் ஆகியோரில் ஒருவருக்கு மத்திய மந்திரி பதவி கிடைக்கலாம் என பேசப்பட்டது. 

    ஆனால், இன்று மோடி தலைமையிலான புதிய மந்திரிசபை பதவியேற்றபோது, அதிமுகவைச் சேர்ந்த யாரும் அதில் இடம்பெறவில்லை. 

    இதேபோல் தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு மந்திரி பதவி கிடைக்கலாம் என்றும் கட்சி வட்டாரங்களில் பேசப்பட்டது. அவருக்கும் மந்திரிசபையில் இடம் வழங்கப்படவில்லை. 
    மத்திய அமைச்சரவையில் அதிமுக எம்பி வைத்திலிங்கத்திற்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று பேசப்பட்ட நிலையில், அவர் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
    சென்னை:

    பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு நாளை பதவி ஏற்கிறது. இதையொட்டி பா.ஜனதா தலைவர் அமித்ஷா பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இன்று இரண்டாவது நாளாக நடைபெற்ற சந்திப்பின்போது, அமைச்சரவை பட்டியலை இறுதி செய்வது தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தினர். மத்திய அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கும் இடம் அளிக்க பாஜக முடிவு செய்துள்ளது.

    தமிழகத்தில் தேனி எம்.பி. ப.ரவீந்திரகுமார் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கலாம். அல்லது இருவரில் ஒருவருக்கு கிடைக்கலாம் என கூறப்படுகிறது.

    இந்நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வைத்திலிங்கம் எம்பி இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. 
    மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க புறப்பட்டு சென்றுள்ள முதலமைச்சர், துணை முதலமைச்சர் மத்திய மந்திரி சபையில் அதிமுக சார்பில் இடம் பெறுபவர் பற்றி பா.ஜனதா மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவார்கள் என்று தெரிய வந்துள்ளது.
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் 350-க்கும் மேற்பட்ட இடங்களில் பா.ஜனதா கூட்டணி இமாலய வெற்றி பெற்றுள்ளது.

    2014-ம் ஆண்டு தேர்தலில் உருவான மோடி அலை 2019-ம் ஆண்டு தேர்தலில் சுனாமியாக மாறி சுழன்றடித்து காங்கிரஸ் கூட்டணியை துவம்சம் செய்துவிட்டது. பா.ஜனதாவின் எழுச்சியால் படுதோல்வியைத் தழுவியுள்ள காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காத அளவுக்கு 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி கிடைத்தது.

    பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து, புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. அதற்கு வசதியாக நேற்று மாலை 16-வது பாராளுமன்றம் நிறைவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்று (சனிக்கிழமை) மாலை பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் மோடி பிரதமராக ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்படுகிறார்.

    அப்போது மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழாவை எங்கு, எப்போது, எப்படி நடத்துவது என்பது முடிவு செய்யப்படும். புதிய அமைச்சரவை வருகிற 28-ந் தேதி அல்லது 30-ந்தேதி பதவி ஏற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து புதிய அமைச்சரவையில் யார்-யார் இடம் பெற வாய்ப்புள்ளது என்று டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    2014-ம் ஆண்டு மோடி தனது அமைச்சரவையில் 66 பேரை மந்திரிகளாக இடம் பெறச் செய்திருந்தார். அவர்களில் 27 பேர் காபினெட் அந்தஸ்து மந்திரிகள், 39 பேர் ராஜாங்க மந்திரிகள். இவர்களில் பா.ஜனதா கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்களும் இடம் பிடித்திருந்தனர்.

    இந்த தடவையும் இதே அளவுக்கு மத்திய மந்திரி சபையில் புதிய அமைச்சர்கள் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பா.ஜனதா மூத்த தலைவர்களில் அருண்ஜெட்லி தவிர அமித்ஷா, ராஜ்நாத்சிங், சுஷ்மா சுவராஜ், நிதின் கட்காரி, ரவிசங்கர் பிரசாத், பியூஸ்கோயல், நரேந்திரசிங் தோமர், நிர்மலா சீதாராமன், பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் இடம் பெறுவது உறுதியாகியுள்ளது.

    பா.ஜனதாவுக்கு இந்த தடவை மேற்கு வங்காளம், ஒடிசா, கர்நாடகா உள்பட பல மாநிலங்களில் அதிக எம்.பி.க்கள் கிடைத்துள்ளனர். எனவே அதிக எம்.பி.க்கள் தேர்வாகியுள்ள மாநிலங்களில் இருந்து புதுமுகங்களை மத்திய மந்திரிகளாக்க மோடி திட்டமிட்டுள்ளார். பா.ஜனதாவை அடுத்த தலைமுறையினரிடமும் வலிமை பெறச் செய்யும் வகையில் இளைஞர்களுக்கு அதிக அளவில் மந்திரிசபையில் பிரதிநிதித்துவம் கிடைக்க வாய்ப்புள்ளது.

    பா.ஜனதா கூட்டணி கட்சிகளான சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம், அ.தி.மு.க. ஆகிய கட்சிகளையும் மத்திய மந்திரி சபையில் சேர்த்துக்கொள்ள மோடி முடிவு செய்துள்ளார். மராட்டியத்தில் சிவசேனாவுக்கு 18 எம்.பி.க்களும், பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 16 எம்.பி.க்களும். தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வுக்கு 1 எம்.பி.யும் கிடைத்துள்ளனர். அதன் அடிப்படையில் மந்திரிசபையில் இந்த கட்சிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் என்று தெரிகிறது.

    ஆனால் புதிய அமைச்சரவையில் தங்களுக்கு 4 இடங்கள் தர வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தி உள்ளது. நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 3 அல்லது 4 மந்திரி பதவிகளை எதிர்பார்க்கிறது.

    அ.தி.மு.க.வுக்கு ஒரே ஒரு இடம்தான் கிடைத்துள்ளது என்பதால் மத்திய மந்திரிசபையில் ஒரு இடம் கொடுக்க மோடி முன் வந்துள்ளார். அந்த ஒரு இடம் காபினெட் அந்தஸ்துடன் இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. சார்பில் யாரை மந்திரி ஆக்க விரும்புகிறீர்கள்? அவரது பெயரை தெரிவியுங்கள் என்று பா.ஜனதா மேலிடம் கேட்டுக் கொண்டுள்ளது. இதை உறுதிபடுத்திய அ.தி.மு.க. மூத்த தலைவர் ஒருவர் மத்திய மந்திரிசபையில் அ.தி.மு.க. இடம் பெற சம்மதம் தெரிவிக்கப்பட்டு விட்டது என்றார்.

    இதன் மூலம் மத்திய மந்திரிசபையில் அ.தி.மு.க. இடம் பெறுவது உறுதியாகி விட்டது. அ.தி.மு.க.வில் இருக்கும் ஒரே மக்களவை எம்.பி.யான ஓ.பி.எஸ்.சின் மகன் ரவீந்திரநாத்குமார், மத்திய மந்திரியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.



    இதற்கிடையே இன்று காலை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் டெல்லி சென்றனர். மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க இருக்கும் அவர்கள் அதற்கு முன்னதாக அமைச்சரவையில் அ.தி.மு.க. சார்பில் இடம் பெறுபவர் பற்றி பா.ஜனதா மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவார்கள் என்று தெரிய வந்துள்ளது.

    ஓ.பன்னீர்செல்வத்தின் மகன், மிகவும் இளையவர் என்பதால் மூத்த தலைவர்களில் ஒருவரை மத்திய மந்திரி ஆக்கலாம் என்ற கருத்து அ.தி.மு.க.வில் வலுத்துள்ளது. இதை ரவீந்திரநாத்குமாரும் சூசகமாக உணர்த்தியுள்ளார்.

    ரவீந்திரநாத் குமார் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறுகையில், “நான் வெற்றி பெறுவதற்காக பிரசாரத்தில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மத்திய மந்திரிசபையில் இடம் பெறுவதற்காக வெற்றி பெறவில்லை. கனவிலும் அந்த எண்ணம் கிடையாது.

    மக்களின் நலனுக்காக வெற்றி பெற்றதாக நினைக்கிறேன். தேனி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட உசிலம்பட்டி பகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

    ரவீந்திரநாத் குமார் மத்திய மந்திரி ஆகாத பட்சத்தில் அ.திமு.க. மேல்-சபை எம்.பி. வைத்திலிங்கம் மத்திய மந்திரியாக அதிக வாய்ப்புள்ளது. ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு அ.தி.மு.க.வில் குழப்பம் ஏற்பட்டபோது, வைத்திலிங்கம் யார் பக்கமும் சாயாமல் நடுநிலை வகித்தார். தற்போது அவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உள்ள அணியில் உள்ளார்.

    தஞ்சை மாவட்டம் ஒரத்த நாடு தொகுதியில் இருந்து 3 தடவை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ள அவர் 2016-ம் ஆண்டு தேர்தலில் தோல்வி அடைந்தார். இதைத் தொடர்ந்து 2016-ம் ஆண்டு அவர் மேல்-சபை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். எனவே அவரை மத்திய மந்திரி ஆக்குவதில் எந்தவித பிரச்சினையும் இருக்காது என்று கூறப்படுகிறது.
    பெரியகுளம் செவன்த்டே பள்ளியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது குடும்பத்துடன் வாக்கை பதிவு செய்தார். #Loksabhaelections2019 #OPS
    பெரியகுளம்:

    தேனி பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளராக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் போட்டியிடுகிறார். வாக்குப்பதிவு நாளான இன்று செவன்த்டே மெட்ரிக்பள்ளியில் ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி தனது மகன் ரவீந்திரநாத்குமார், ஆகியோருடன் வாக்குப்பதிவை செலுத்தினார்.



    முன்னதாக இந்த மையத்தில் எந்திரம் பழுது காரணமாக 40 நிமிடம் வாக்குப்பதிவு தாமதமானது. அதன்பிறகு பழுது நீக்கப்பட்டு வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கியது. இந்த மையத்தில் காலை முதலே கைக்குழந்தையுடன் பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.


    துணைமுதல்வரும், அவரது மகனும் வரிசையில் வந்து தங்களது வாக்கை பதிவு செய்தனர்.

    இதேபோல் தேனி பாராளுமன்ற தொகுதி அ.ம.மு.க வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வன் கம்பம் அருகில் உள்ள நாராயணத்தேவன்பட்டி கள்ளர் உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கை பதிவு செய்தார்.



    இதுகுறித்து தங்கதமிழ்ச்செல்வன் கூறுகையில், ஏராளமான இடங்களில் மின்னணு எந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் வாக்களிக்க தாமதமாகியுள்ளது. எனவே வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்றார்.  #Loksabhaelections2019 #OPS

    போடி அருகே ஓட்டுக்கு பணம் வழங்காததை கண்டித்து மக்கள் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக ரவீந்திரநாத்குமார் போட்டியிடுகிறார். தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும், அ.ம.மு.க. சார்பில் தங்கதமிழ் செல்வனும் களத்தில் உள்ளனர்.

    இதனால் தேனி பாராளுமன்ற தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது. வெற்றியை எட்டி பறிப்பதில் 3 கட்சி வேட்பாளர்களும் தீவிரமாக போட்டி போட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    போடி டவுன் 1-வது வார்டு புதூர் பகுதியில் ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கள் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்ததாக தெரிகிறது. பணம் பெற்றவர்கள் இது குறித்து மற்றவர்களிடம் தெரிவிக்கவே பணம் கிடைக்காதவர்கள் போடி-குரங்கணி சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் போடி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். போலீசாரிடம் ஒரு தரப்பினருக்கு மட்டும் பணம் கொடுத்து விட்டு எங்களுக்கு பணம் தரவில்லை என கூறினர்.

    இதை கேட்டதும் அதிர்ச்சியடைந்த போலீசார் ஓட்டுக்கு பணம் வாங்குவது சட்டப்படி குற்றமாகும். அதற்காக சாலை மறியல் ஈடுபடக்கூடாது என அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

    பிரசாரத்தில் விதி மீறலில் ஈடுபட்டதாக நடிகர் செந்தில் மற்றும் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #RavindranathKumar #ActorSenthil
    போடி:

    தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வனை ஆதரித்து நடிகர் செந்தில் பிரசாரம் செய்தார். போடி டவுன் பகுதியில் அவருக்கு பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் போடி டி.வி.கே.கே. பிரதான சாலையில் தனது பிரசார வாகனத்தை நிறுத்தி விட்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

    இதனையடுத்து அங்கு வந்த போலீசார் அனுமதி இல்லாமல் பிரசாரம் செய்யக்கூடாது என தெரிவித்தனர். எனவே சில நிமிடங்கள் மட்டும் பேசிய செந்தில் பின்னர் பிரசார வாகனத்தில் வாக்கு கேட்டபடி சென்று விட்டார்.

    தேர்தல் பறக்கும்படை அலுவலர் உதயகுமார் இதுகுறித்து போடி டவுன் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் நடிகர் செந்தில் மற்றும் அ.ம.மு.க. நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    இதேபோல் போடி வாரச்சந்தை அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அ.தி.மு.க. கரை பதித்த வேட்டிகளை வழங்குவதாக தேர்தல் பறக்கும்படை அலுவலர் சிவபிரபுவிற்கு தகவல் கிடைத்தது.

    இது குறித்து போடி டவுன் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் மற்றும் அ.தி.மு.க.வினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். #RavindranathKumar #ActorSenthil
    தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ஓபிஎஸ் மகன் மனுவை தள்ளுபடி செய்யக்கோரி நீதிமன்றத்தை அணுகி முறையீடு செய்ய உள்ளதாக தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். #LSPolls #Thangatamilselvan
    தேனி:

    தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தேனி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. பரிசீலனை முடிவடைந்த நிலையில் அ.ம.மு.க. வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் வேட்புமனு தாக்கலின் போது அளித்த சொத்து பட்டியலில் விஜயானந்த் நிறுவனத்தில் அவரும், அவரது சகோதரி கவிதாபானு, சகோதரர் ஜெயபிரதீப் ஆகியோர் இயக்குனர்களாக இருப்பதை மறைத்துள்ளார். மேலும் இந்நிறுவனத்தின் பெயரில் ரூ.24 லட்சம் மதிப்பிலான இடம் உள்ளதையும், இந்நிறுவனத்தின் சார்பில் ரூ.3.15 கோடி மதிப்பிலான காற்றாலை உள்ள தகவலையும் மறைத்துள்ளார். இது சட்டப்படி குற்றம்.

    இதனை ஆதாரப்பூர்வமாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவித்தேன். ஆனால் அதிகாரி என்ன காரணத்தாலோ மனுவை ஏற்றுக் கொண்டுள்ளார். எங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளோம். நீதிமன்றத்தை அணுகி முறையீடு செய்ய உள்ளோம். எங்களுக்கு நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #LSPolls #Thangatamilselvan
    ×