search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "O Panneerselvam son"

    மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க புறப்பட்டு சென்றுள்ள முதலமைச்சர், துணை முதலமைச்சர் மத்திய மந்திரி சபையில் அதிமுக சார்பில் இடம் பெறுபவர் பற்றி பா.ஜனதா மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவார்கள் என்று தெரிய வந்துள்ளது.
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் 350-க்கும் மேற்பட்ட இடங்களில் பா.ஜனதா கூட்டணி இமாலய வெற்றி பெற்றுள்ளது.

    2014-ம் ஆண்டு தேர்தலில் உருவான மோடி அலை 2019-ம் ஆண்டு தேர்தலில் சுனாமியாக மாறி சுழன்றடித்து காங்கிரஸ் கூட்டணியை துவம்சம் செய்துவிட்டது. பா.ஜனதாவின் எழுச்சியால் படுதோல்வியைத் தழுவியுள்ள காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காத அளவுக்கு 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி கிடைத்தது.

    பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து, புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. அதற்கு வசதியாக நேற்று மாலை 16-வது பாராளுமன்றம் நிறைவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்று (சனிக்கிழமை) மாலை பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் மோடி பிரதமராக ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்படுகிறார்.

    அப்போது மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழாவை எங்கு, எப்போது, எப்படி நடத்துவது என்பது முடிவு செய்யப்படும். புதிய அமைச்சரவை வருகிற 28-ந் தேதி அல்லது 30-ந்தேதி பதவி ஏற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து புதிய அமைச்சரவையில் யார்-யார் இடம் பெற வாய்ப்புள்ளது என்று டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    2014-ம் ஆண்டு மோடி தனது அமைச்சரவையில் 66 பேரை மந்திரிகளாக இடம் பெறச் செய்திருந்தார். அவர்களில் 27 பேர் காபினெட் அந்தஸ்து மந்திரிகள், 39 பேர் ராஜாங்க மந்திரிகள். இவர்களில் பா.ஜனதா கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்களும் இடம் பிடித்திருந்தனர்.

    இந்த தடவையும் இதே அளவுக்கு மத்திய மந்திரி சபையில் புதிய அமைச்சர்கள் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பா.ஜனதா மூத்த தலைவர்களில் அருண்ஜெட்லி தவிர அமித்ஷா, ராஜ்நாத்சிங், சுஷ்மா சுவராஜ், நிதின் கட்காரி, ரவிசங்கர் பிரசாத், பியூஸ்கோயல், நரேந்திரசிங் தோமர், நிர்மலா சீதாராமன், பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் இடம் பெறுவது உறுதியாகியுள்ளது.

    பா.ஜனதாவுக்கு இந்த தடவை மேற்கு வங்காளம், ஒடிசா, கர்நாடகா உள்பட பல மாநிலங்களில் அதிக எம்.பி.க்கள் கிடைத்துள்ளனர். எனவே அதிக எம்.பி.க்கள் தேர்வாகியுள்ள மாநிலங்களில் இருந்து புதுமுகங்களை மத்திய மந்திரிகளாக்க மோடி திட்டமிட்டுள்ளார். பா.ஜனதாவை அடுத்த தலைமுறையினரிடமும் வலிமை பெறச் செய்யும் வகையில் இளைஞர்களுக்கு அதிக அளவில் மந்திரிசபையில் பிரதிநிதித்துவம் கிடைக்க வாய்ப்புள்ளது.

    பா.ஜனதா கூட்டணி கட்சிகளான சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம், அ.தி.மு.க. ஆகிய கட்சிகளையும் மத்திய மந்திரி சபையில் சேர்த்துக்கொள்ள மோடி முடிவு செய்துள்ளார். மராட்டியத்தில் சிவசேனாவுக்கு 18 எம்.பி.க்களும், பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 16 எம்.பி.க்களும். தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வுக்கு 1 எம்.பி.யும் கிடைத்துள்ளனர். அதன் அடிப்படையில் மந்திரிசபையில் இந்த கட்சிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் என்று தெரிகிறது.

    ஆனால் புதிய அமைச்சரவையில் தங்களுக்கு 4 இடங்கள் தர வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தி உள்ளது. நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 3 அல்லது 4 மந்திரி பதவிகளை எதிர்பார்க்கிறது.

    அ.தி.மு.க.வுக்கு ஒரே ஒரு இடம்தான் கிடைத்துள்ளது என்பதால் மத்திய மந்திரிசபையில் ஒரு இடம் கொடுக்க மோடி முன் வந்துள்ளார். அந்த ஒரு இடம் காபினெட் அந்தஸ்துடன் இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. சார்பில் யாரை மந்திரி ஆக்க விரும்புகிறீர்கள்? அவரது பெயரை தெரிவியுங்கள் என்று பா.ஜனதா மேலிடம் கேட்டுக் கொண்டுள்ளது. இதை உறுதிபடுத்திய அ.தி.மு.க. மூத்த தலைவர் ஒருவர் மத்திய மந்திரிசபையில் அ.தி.மு.க. இடம் பெற சம்மதம் தெரிவிக்கப்பட்டு விட்டது என்றார்.

    இதன் மூலம் மத்திய மந்திரிசபையில் அ.தி.மு.க. இடம் பெறுவது உறுதியாகி விட்டது. அ.தி.மு.க.வில் இருக்கும் ஒரே மக்களவை எம்.பி.யான ஓ.பி.எஸ்.சின் மகன் ரவீந்திரநாத்குமார், மத்திய மந்திரியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.



    இதற்கிடையே இன்று காலை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் டெல்லி சென்றனர். மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க இருக்கும் அவர்கள் அதற்கு முன்னதாக அமைச்சரவையில் அ.தி.மு.க. சார்பில் இடம் பெறுபவர் பற்றி பா.ஜனதா மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவார்கள் என்று தெரிய வந்துள்ளது.

    ஓ.பன்னீர்செல்வத்தின் மகன், மிகவும் இளையவர் என்பதால் மூத்த தலைவர்களில் ஒருவரை மத்திய மந்திரி ஆக்கலாம் என்ற கருத்து அ.தி.மு.க.வில் வலுத்துள்ளது. இதை ரவீந்திரநாத்குமாரும் சூசகமாக உணர்த்தியுள்ளார்.

    ரவீந்திரநாத் குமார் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறுகையில், “நான் வெற்றி பெறுவதற்காக பிரசாரத்தில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மத்திய மந்திரிசபையில் இடம் பெறுவதற்காக வெற்றி பெறவில்லை. கனவிலும் அந்த எண்ணம் கிடையாது.

    மக்களின் நலனுக்காக வெற்றி பெற்றதாக நினைக்கிறேன். தேனி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட உசிலம்பட்டி பகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

    ரவீந்திரநாத் குமார் மத்திய மந்திரி ஆகாத பட்சத்தில் அ.திமு.க. மேல்-சபை எம்.பி. வைத்திலிங்கம் மத்திய மந்திரியாக அதிக வாய்ப்புள்ளது. ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு அ.தி.மு.க.வில் குழப்பம் ஏற்பட்டபோது, வைத்திலிங்கம் யார் பக்கமும் சாயாமல் நடுநிலை வகித்தார். தற்போது அவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உள்ள அணியில் உள்ளார்.

    தஞ்சை மாவட்டம் ஒரத்த நாடு தொகுதியில் இருந்து 3 தடவை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ள அவர் 2016-ம் ஆண்டு தேர்தலில் தோல்வி அடைந்தார். இதைத் தொடர்ந்து 2016-ம் ஆண்டு அவர் மேல்-சபை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். எனவே அவரை மத்திய மந்திரி ஆக்குவதில் எந்தவித பிரச்சினையும் இருக்காது என்று கூறப்படுகிறது.
    ×