search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனித சங்கிலி"

    • தமிழக அரசு கடந்த ஆண்டு ஜூலை மாதம் மின் கட்டணத்தை உயர்த்தியது.
    • வருகிற டிசம்பர் 4-ந் தேதி, மாவட்ட தலைநகரங்களில் திட்டமிட்டபடி மனித சங்கிலி போராட்டம் நடக்கும்.

    திருப்பூர்:

    தமிழக அரசு கடந்த ஆண்டு ஜூலை மாதம் மின் கட்டணத்தை உயர்த்தியது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் என்றும் பாராமல், பீக் ஹவர் மின்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. மின்சார நிலை கட்டணம் 430 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டது. தொழில் நிறுவனங்கள் சொந்த முயற்சியில் அமைத்த மேற்கூரை சோலார் மின் கட்டமைப்புக்கு யூனிட்டுக்கு 1.54 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இத்தகைய கட்டண உயர்வு மற்றும் பீக்ஹவர் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய கோரி தொழில்துறையினர் போராடி வருகின்றனர்.

    தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பை உருவாக்கி மாநில அளவிலான, அறப்போராட்டங்கள் நடத்தப்படுகிறது. அதன் ஒருபகுதியாக மனிதசங்கிலி போராட்டம், வருகிற 4-ந் தேதி, மாவட்ட தலைநகரங்களில் நடக்குமென, அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூர் தொழில் அமைப்பு கூட்டமைப்பினர் கூறியதாவது:- மின் கட்டண உயர்வால், திருப்பூர் பனியன் தொழில் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறது. இனியும் தொழில் நடத்த முடியாது என்பதால் பீக் ஹவர் மின் கட்டணம் உள்ளிட்ட கட்டண உயர்வுகளை திரும்ப பெறக்கோரி போராட்டம் நடத்தி வருகிறோம். அதன்படி வருகிற டிசம்பர் 4-ந் தேதி, மாவட்ட தலைநகரங்களில் திட்டமிட்டபடி மனித சங்கிலி போராட்டம் நடக்கும். அன்றைய தினம், திருப்பூர் குமரன் சிலையில் இருந்து மாநகராட்சி அலுவலகம் வரை மனித சங்கிலி நடத்தப்படும். தொழில்துறையினர் மட்டுமல்லாது, தொழிலாளர்களும் குடும்பத்துடன் இப்போராட்டத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளனர். மனித சங்கிலி போராட்டத்துக்கு பின்னரும் தமிழக அரசு அழைத்து பேசி, தீர்வு வழங்காதபட்சத்தில் 18-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் மிகப்பெரிய ஏரி தூசூர் ஏரியாகும்.
    • சுமார் 350 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரி பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் மிகப்பெரிய ஏரி தூசூர் ஏரியாகும். இது நாமக்கல்-துறையூர் ரோட்டில் 8 கி.மீ. தொலைவில் உள்ளது. சுமார் 350 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரி பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தின் மிக முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. தூசூர் ஏரியின் மூலம் சுமார் 1000 ஏக்கர் ஆயக்கட்டு நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்த ஏரி நீர் மூலம் இப்பகுதி விவசாயிகள் நெல், கரும்பு, கேழ்வரகு, சோளம் போன்ற பயிர்களை பயிரிட்டு வருகின்றனர்.

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலையில் மழை பெய்யும் போது அங்கிருந்து காட்டாற்றின் வழியாக வரும் வெள்ள நீர், காரவள்ளி, நடுக்கோம்பை, சின்னக் குளம், பெரியக் குளம், பழையபாளையம் உள்ளிட்ட 6 குளங்கள் முதலில் நிரம்பும். பின்னர் வழிந்தோடும் உபரி நீர் தூசூர் ஏரிக்கு வந்தடையும்.

    இங்கிருந்து வெளியேறும் உபரி நீர் பின்னர் ஆண்டாபுரம் வழியாக திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே காவிரியில் சென்று கலக்கும். ஏரியில் ஒப்பந்த அடிப்படையில் மீன் வளர்ப்பும் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக, நாமக்கல் நகராட்சிப் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ஓடை வழியாக வந்து தூசூர் ஏரியில் கலக்கிறது.

    இதனால் ஏரி நீர் மாசடைந்து மீன்கள் செத்து மிதக்கின்றன. ஏரி நீர் மட்டுமல்லாது இப்பகுதியில் உள்ள நிலத்தடி நீரும் மாசடைந்து விவசாயம் பாதிக்கப்படுவதுடன் பொதுமக்களுக்கும் உடல் நிலை பாதிக்கப்படுகிறது.

    தூசூர் ஏரியில் கழிவு நீர் ஏரியில் கலப்பதைக் கண்டித்தும், அதை தடை செய்யக்கோரியும், தூசூர் ஏரிக்கரையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. சங்க மாவட்ட உதவி செயலாளர் சதாசிவம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மத்திய கமிட்டி உறுப்பினர் பெருமாள் உள்ளிட்ட திரளான விவசாயிகள் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினா்.

    • உசிலம்பட்டியில் ஜாக்டோ- ஜியோ மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
    • அகவிலைப்படி நிலுவைத்தொகை சரண்டர், உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும்.

    உசிலம்பட்டி

    உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பொற்செல்வன் தலைமை தாங்கினார். வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் ரங்கநாதன், கார்த்திகேயன், மனோகரன், அய்யங்காளை, ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தீனன், செல்வி, தமிழ்மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத்தொகை சரண்டர், உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சங்கிலி நடந்தது.

    • மார்ச் 3-ந் தேதி உலக வனவிலங்கு தினம் அனுசரிக்கப்படுகிறது.
    • பறவைகளும், விலங்குகளும் மனிதன் தோன்றுவதற்கு முன்பே இந்த பூமியில் தோன்றியுள்ளது.

    திருப்பூர் :

    உலக வனவிலங்குகள் தினத்தை முன்னிட்டு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி சார்பாக இன்று கல்லூரி முன்பு வனவிலங்குகள் பாதுகாப்பை வலியுறுத்தி முகமூடி அணிந்தும், மனித சங்கிலி அமைத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    வனச்சரக அலுவலர் சுரேஷ்கிருஷ்ணா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். வனச்சரக அலுவலர் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 3-ந் தேதி உலக வனவிலங்கு தினம் அனுசரிக்கப்படுகிறது. இது பூமியில் உள்ள விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், உலகின் காட்டு விலங்கினங்கள் மற்றும் தாவரங்களைப் பற்றிய விழிப்புணர்வை கொண்டாடுவதும் வளர்ப்பதும் இந்த நாளின் நோக்கம். பறவைகளும், விலங்குகளும் மனிதன் தோன்றுவதற்கு முன்பே இந்த பூமியில் தோன்றியுள்ளது. அவைகள் மனிதனை நம்பி வாழ்வது இல்லை.மனிதர்கள் தான் அவைகளை நம்பி வாழவேண்டும். ஆகையால் வன உயிரினங்களை பாதுகாப்பது நமது கடமை. மேலும் அவற்றை பாதுகாக்கும் வழிமுறைகளை பற்றி கூறினார். கல்லூரி மாணவ மாணவிகள் வனவிலங்குகள் பாதுகாப்பை வலியுறுத்தி முகமூடி அணிந்தும், மனித சங்கிலி அமைத்தும், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.
    • சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்ட தேசத்தலைவர்களை வாழ்த்தி கோஷங்கள் எழுப்பினர்.

    ஓசூர்,

    குடியரசு தின விழாவை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், ஓசூரில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில், மேற்கு மாவட்ட தலைவர் எஸ்.ஏ. முரளிதரன் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.

    பின்னர் கட்சியினர் அனைவரும் தேச ஒற்றுமையை வலியுறுத்தி, கட்சி அலுவலகம் முன்பு மனித சங்கிலியாக கைகோர்த்து நீண்ட வரிசையில் நின்றனர். அப்போது, காந்தி, நேரு, சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்ட தேசத்தலைவர்களை வாழ்த்தி கோஷங்கள் எழுப்பினர்.

    முன்னதாக, முரளிதரன் தலைமையில் எம்ஜி.ரோடில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிகளில், மாவட்ட பொருளாளர் மகாதேவன், மாநகர தலைவர் தியாகராஜன், உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • மதசார்பற்ற கூட்டணிக் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    • இதில் மாரிமுத்து எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ, உலகநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய குழு உறுப்பினர் பழனிச்சாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டியில் சமூக நல்லிணக்கம் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

    இதில் மாரிமுத்து எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ, உலகநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய குழு உறுப்பினர் பழனிச்சாமி, ஒன்றியக்குழு தலைவர் பாஸ்கர் மணிமேகலை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் காரல் மார்க்ஸ், காங்கிரஸ் நகர தலைவர் எழிலரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் டி. பி .சுந்தர், ஒன்றிய செயலாளர் ஜெகவர், முத்துப்பேட்டை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் உமேஷ் பாபு, ம.தி.மு.க மாவட்ட பொருளாளர் கோவி சேகர், விடுதலை சிறுத்தை மாவட்ட செயலாளர் செல்வம், மனிதநேய மக்கள் கட்சி நகர தலைவர் இக்பால் ராஜா, மார்க்சிஸ்ட் நகரச் செயலாளர் கோபு மற்றும் மதசார்பற்ற கூட்டணிக் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்கவும், தமிழகத்தில் அமைதியை நிலைநாட்டவும் வலியுறுத்தி தஞ்சையில் மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது.
    • சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்கவும், தமிழகத்தில் அமைதியை நிலைநாட்டவும் வலியுறுத்தி தஞ்சையில் மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் மதத்தின் அடிப்படையில் பகைமையை ஏற்படுத்தி, அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கும் பிரிவினைவாதிகளை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்று மக்களிடையே தொடர்ந்து பரப்புரையை மேற்கொள்ளவும், சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்கவும், தமிழகத்தில் அமைதியை நிலைநாட்டவும் வலியுறுத்தி தஞ்சையில் மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது.

    தஞ்சை ரெயிலடியில் இருந்து பழைய பஸ் நிலையம் வரை இந்த மனிதசங்கிலி போராட்டத்தில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, உள்பட 24 கட்சிகள், அமைப்புகளை சேர்ந்த தொண்டர்கள் கலந்து கொண்டு கைகோர்த்து நின்றனர்.

    இதற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் முத்து.உத்திராபதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சின்னை.பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சொக்கா.ரவி ஆகியோர் தலைமை தாங்கினர்.

    இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி கலந்து கொண்டார். தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் வக்கீல் கோ.அன்பரசன், பொது செயலாளர்கள் பூதலூர் மோகன்ராஜ், சித்திரைக்குடி ஆண்டவர் வாண்டையார், மாநில பொதுக்குழு உறுப்பினர் கண்டிதம்பட்டு கோவிந்தராஜ், வட்டார தலைவர்கள் ரவிச்சந்திரன், நாராயணசாமி, மேலஉளூர் சிவானந்த வாண்டையார், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் நாஞ்சி கி.வரதராஜன், தஞ்சை மாநகர் மாவட்ட மனித உரிமை துறை காங்கிரஸ் தலைவர் ஒய்.அலாவூதீன், மாவட்ட ராகுல் காந்தி பேரவை தலைவர் திருவையாறு பூபதி, தகவல் அறியும் உரிமை பிரிவு மாநகர மாவட்ட தலைவர் செல்வம், மாநில விவசாய பிரிவு செயலாளர் மணிவண்ணன், நிர்வாகிகள் பாட்ஷாபாய், அய்யாறு, கோபால்அய்யர், ஏ.ஐ.டி.யூ.சி மாநில செயலாளர் சந்திரகுமார், திராவிடர் கழக மாவட்ட தலைவர்அமர்சிங், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.ஜெய்னுல் ஆப்தீன்,சிபிஐ எம் எல் மாவட்ட நிர்வாகிராஜன், சிபிஎம்எல் மக்கள் விடுதலை மாவட்ட செயலாளர்அருணாச்சலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மத சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதலைக் கண்டித்தும் இந்த மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
    • விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கட்சி மற்றும் அமைப்பினர் பங்கேற்றனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கட்சி மற்றும் அமைப்பினர் பங்கேற்ற மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

    தமிழகத்தில் வன்முறையை தூண்டி பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், சங்பரிவார் அமைப்புகளைக் கண்டித்தும், மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும், தலித், பழங்குடியின மக்கள் மற்றும் மத சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதலைக் கண்டித்தும் இந்த மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

    மயிலாடுதுறை காமராஜர் பேருந்து நிலையம் அருகில் காந்திஜி சாலையில் நடைபெற்ற இந்த மனித சங்கிலி போராட்டத்துக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.சீனிவாசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

    இதில், ராஜகுமார் எம்.எல்.ஏ, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் உள்ளிட்ட பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    • அனைத்து கட்சிகளின் சார்பில் மனித சங்கிலி பல்லடம் பஸ் நிலையம் முன்பு நடைபெற்றது.
    • மதவெறி மாய்ப்போம், மக்கள் ஒற்றுமை காப்போம் என்ற பதாகைகளுடன் மனித சங்கிலியில் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    தமிழகத்தில் மதவெறியை வளர்த்து தமிழர்களை பிரித்து அரசியல் ஆதாயத்திற்காக பிரிவினைவாதத்தை வளர்த்துக் கொண்டிருக்கக்கூடிய அமைப்புகளின் வகுப்புவாத அரசியலை கண்டித்து பல்லடத்தில் அனைத்து கட்சிகளின் சார்பில் மனித சங்கிலி பல்லடம் பஸ் நிலையம் முன்பு நடைபெற்றது. இதில் காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், திராவிடர் கழகம் மற்றும் பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு மதவெறி மாய்ப்போம், மக்கள் ஒற்றுமை காப்போம் என்ற பதாகைகளுடன் மனித சங்கிலியில் கலந்து கொண்டனர்.

    • மனித சங்கிலியில் பொன்னேரியில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    • காரனோடையில் பஜாரில் இருந்து சோழவரம் வரை 1 கிலோ மீட்டர் தூரம் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    பொன்னேரி:

    மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு இயக்கங்கள் சார்பில் மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் ஒற்றுமை, மதசார்பின்மை, மத நல்லிணக்கம், சமூக அமைதி, மாநில வளர்ச்சி முன்னிறுத்தி சமூக நல்லிணக்க மனித சங்கிலி பொன்னேரி அண்ணா சிலை அருகில் இருந்து ஹரிஹரன் பஜார் வரையும், காரனோடை பஜாரில் இருந்து சோழவரம் வரையும் பல்வேறு கட்சியினர் கலந்துகொண்ட மனித சங்கிலியில் பொன்னேரியில், காங்கிரஸ் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, கம்யூனிஸ்டு இடது, வலது, முஸ்லிம் லீக் கட்சி, திராவிட கட்சி உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    காரனோடையில் பஜாரில் இருந்து சோழவரம் வரை 1 கிலோ மீட்டர் தூரம் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் காங்கிரஸ் கட்சி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிட கட்சி, மக்கள் விடுதலை, பழங்குடி மக்கள் இயக்கம், ஜனநாயக தொழிலாளர் கட்சி உட்பட கட்சிகளை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்

    • இன்று மாலை 4 மணி அளவில் திட்டமிட்ட இடங்களில் வெற்றிகரமாக நடைபெறும்.
    • 50க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள், இயக்கங்கள் கலந்து கொள்கின்றன.

    காரனை:

    மாமல்லபுரத்தை அடுத்த காரனையில் பஞ்சமி நில மீட்பு போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் நினைவு தினம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் நேற்று அனுசரிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களுக்கு திருமாவளவன் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:

    உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் முலாயம்சிங் யாதவ் மறைவிற்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் சாதி, மதவாத அரசியலுக்கு இடமில்லை. சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான வெறுப்பு அரசியலுக்கு இடமில்லை.

    சமூக நீதிக்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் மட்டுமே இந்த மண்ணில் எப்போதும் இடமுண்டு என்பதை உணர்த்தக் கூடிய வகையில் தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று சமூக நல்லிணக்க மனித சங்கிலி அறப்போர் நடைபெறுகிறது. இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் சுமார் 50க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள், இயக்கங்கள் கலந்து கொள்கின்றன.  


    இன்று மாலை 4 மணி அளவில் திட்டமிட்ட இடங்களில் இந்த அறப்போர் வெற்றிகரமாக நடைபெறும். லட்சக் கணக்கானோர் இதில் பங்கேற்க இருக்கிறார்கள். சென்னையில் பெரியார் சிலையில் இருந்து அண்ணா மேம்பாலம் வரை மனித சங்கிலி நடைபெறும். முக்கிய தலைவர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள்.

    சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக வன்முறைகளை கட்டவிழ்த்து விடும் சங்பரிவார் வலதுசாரி அமைப்புகளுக்கு தமிழகத்தில் இடமில்லை என்பது உணர்த்துவதற்காகதான் இந்த அறப்போர் நடைபெறுகிறது. வலதுசாரிகளுக்கு இது கடைசி எச்சரிக்கையாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • ராமேசுவரத்தில் 11-ந் தேதி நடைபெறும் அனைத்து கட்சி மனித சங்கிலி குறித்த ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
    • மக்கள் ஒற்றுமை, சமூக அமைதி, மாநில வளர்ச்சி ஆகியவற்றை காப்பாற்ற வலியுறுத்தி இந்த மனித சங்கிலி நடக்கிறது.

    ராமேசுவரம்

    ராமேசுவரத்தில் வருகிற 11-ந் தேதி அனைத்து கட்சி சார்பில் மனித சங்கிலி இயக்கம் நடத்தப்படுகிறது.

    மக்கள் ஒற்றுமை, மதச்சார்பின்மை, மத நல்லிணக்கம், சமூக அமைதி, மாநில வளர்ச்சி ஆகியவற்றை காப்பாற்ற வலியுறுத்தி சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடக்கிறது.

    இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் ம.தி.மு.க. மாநில இளைஞரணி துணைச் செயலாளர் கராத்தே பழனிச்சாமி தலைமையில் நடந்தது.

    இதில் மனித சங்கிலி இயக்கம் நடத்துவதற்கு அனைத்துக் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை மற்றும் கருத்துக்கள் கேட்கப்பட்டது.

    கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருணாகரன், ராமேசுவரம் தாலுகா செயலாளர் சிவா, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் முருகானந்தம்,, காங்கிரஸ் நகர் பொறுப்பாளர் ராஜீவ் காந்தி, ம.தி.மு.க. நகர் செயலாளர் பாஸ்கரன், விடுதலை சிறுத்தை நகர செயலாளர் நாகராஜன், மனிதநேய மக்கள் கட்சி நகர செயலாளர் செய்யது இப்ராஹிம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நகர பொருளாளர் மரியா ராபர்ட் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர்.

    ×