search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல்"

    அ.தி.மு.க. அரசை காத்து செயல்பட இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டியது அவசியம் என்று எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர். #ADMK #Edappadipalaniswami #OPanneerSelvam
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பேரறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்த நாளை முன்னிட்டு, அ.தி.மு.க.வின் ஒன்றரை கோடித் தொண்டர்களையும் இந்த மடல் வழியாக சந்திப்பதில், நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

    பேரறிஞர் அண்ணா தனது 30 வருட பொது வாழ்வின் மூலம் ஆற்றிய பணிகள் இந்திய நாட்டின் அரசியல் போக்கினை மாற்றியதோடு மட்டுமல்லாமல், இந்திய மொழிகள் ஒவ்வொன்றும் அவற்றைப் பேசும் மக்களால் பெரிதும் நேசிக்கப்படவும், தொன்மை சிறப்பு வாய்ந்த இந்தியப் பண்பாடு புதிய கோணத்தில் புரிந்துகொள்ளப்படவும் காரணமாக அமைந்தன என்பதை வரலாறு நமக்கு உணர்த்துகிறது.

    இந்தியத் திருநாடு வலுப்பெற்றும், பொருளாதார வளம் பெற்றும் உயர்ந்திட வேண்டுமானால், இந்நாட்டின் மாநிலங்கள் வலிமை பெறவேண்டும்; மாநில மொழிகள் மதிக்கப்பட வேண்டும்.

    ஒரு மொழியை மற்றவர்கள் மீது திணிக்கப்படுவது நாட்டின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் என்பனவற்றை எல்லாம் எடுத்துரைத்து, அவற்றை மக்கள் ஏற்றுக்கொள்ளச் செய்த மாமேதை பேரறிஞர் அண்ணா.

    மாநிலக் கட்சிகள் அந்தந்த மாநிலங்களில் ஆட்சி அமைக்க முடியும் என்பதை முதன் முதலாக நிகழ்த்திக் காட்டினார் பேரறிஞர் அண்ணா. அதன் தொடர்ச்சியாகத்தான் இன்று பல்வேறு அரசியல் கட்சிகள் நம் நாட்டில் தோன்றி, மாநிலங்களின் ஆட்சிப் பொறுப்புக்கு வருவதும், அதன் காரணமாக அந்தந்த மாநிலங்களின் மொழிகள், பண்பாடு, நாகரீகம், புத்துயிர் பெறுவதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

    ஓய்வறியா கடும் உழைப்பால், அறிவுத்திறத்தால் தமிழகத்தில் பேரறிஞர் அண்ணா ஏற்படுத்திய புரட்சியின் விளைவாகத்தான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும், புரட்சித் தலைவி அம்மாவும் சிறப்பான ஆட்சிகளை நடத்திக் காட்ட முடிந்தது.

    அதன் தொடர்ச்சியாக, புரட்சித் தலைவி அம்மா அமைத்துத் தந்த கழக அரசு இன்றளவும் தொடர்ந்து சிறப்பாக வெற்றிப்பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது.

    நாட்டு மக்கள் அனைவரும் நலம் பெற வேண்டும் என்றால், அது அண்ணா எடுத்துரைத்த சமத்துவ, ஜனநாயக வழியில்தான் சாத்தியமாகும் என்பதை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நன்கு உணர்ந்திருந்தார்கள்.

    அதன் காரணமாகத்தான், தான் ஆரம்பித்த மக்கள் இயக்கத்திற்கு ``அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’’ என்று இயக்கத்தின் பெயரிலேயே அண்ணாவின் திருப்பெயரை இணைத்தார்கள். பேரறிஞர் அண்ணா காண விரும்பி, அயராது உழைத்த புதிய தமிழ்ச் சமூகத்தைப் படைப்பதற்கு தனது ஆற்றல் முழுவதையும் செலவிட்டார் புரட்சித் தலைவி அம்மா.

    பேரறிஞர் அண்ணா தனது ஆட்சிக் காலத்தில் தொடங்கி வைத்த மக்கள் நலப் பணிகளை மிகப்பெரிய அளவுக்கு விரிவுபடுத்தி, எல்லா நிலைகளிலும் உள்ள மக்கள் குறிப்பாக, ஏழை, எளிய மக்கள், பெண்கள் பயன்பெறும் திட்டங்களை நாடு போற்றும் வண்ணம் செயல்படுத்திக் காட்டினார் புரட்சித் தலைவி அம்மா.

    தமிழக மக்கள் முன்னேற்றத்திற்காக பேரறிஞர் அண்ணாவும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும், புரட்சித் தலைவி அம்மாவும் வகுத்தளித்த பாதையில் கழக அரசு தொடர்ந்து நடைபோடும் என்ற உறுதியை, பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில் தெரிவித்துக் கொள்கிறோம்.

    பேரறிஞர் அண்ணாவின் அரும் பணிகளையும், சாதனைகளையும், சிறப்புடன் நினைவுகூர்ந்து, அவருக்கு ``பாரத் ரத்னா’’ விருது வழங்க வேண்டும் என்று அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் இயற்றி மத்திய அரசை வலியுறுத்தி இருக்கிறோம். இது குறித்து பாரதப் பிரதமருக்கும் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. விரைவில் இது பற்றிய நல்ல செய்தி மத்திய அரசிடம் இருந்து வரும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.


    பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா, ஆகியோரது வழியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்கள் தொண்டாற்றுவதற்கு கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் உறுதி ஏற்று, கழக அரசைக் காத்து, மக்களிடையே நற்பெயர் பெற்று எதிர்வரும் இடைத்தேர்தல், பொதுத் தேர்தல் என அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெறுவது மிகவும் அவசியம் என்பதை கழக உடன்பிறப்புகளுக்கு நினைவூட்ட கடமைப்பட்டிருக்கிறோம்.

    பேரறிஞர் அண்ணாவின் புகழ் காப்போம்; புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் வழியில் நடப்போம்; புரட்சித் தலைவி அம்மா அரசின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துக் கூறி வெற்றி மேல் வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.  #ADMK #Edappadipalaniswami #OPanneerSelvam
    திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். ஆட்சிக்கு முடிவு கட்டும் என்று மதுரையில் டி.டி.வி. தினகரன் கூறினார். #TTVDhinakaran #ADMK #EdappadiPalaniswami #OPanneerSelvam
    மதுரை:

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் டி.டி. வி. தினகரன் மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், அமைச்சர்கள், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அத்தனை குற்றச்சாட்டுகளும் ஆதாரங்களாக இருக்கின்றன.

    இவர்களின் ஊழல்கள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படும் காலம் விரைவில் வரும்.

    அமைச்சர் வேலுமணி மீதான குற்றச்சாட்டு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. அது போல முதல் அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஆகியோர் மீதும் நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளன. ஆதாரங்கள் இல்லாமல் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர முடியாது.

    இப்போது மின்துறை அமைச்சரும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளார். யாருடைய பிளஸ்சிங்கோ அவருக்கு இருப்பதாக நினைக்கிறார். அவரை யாராலும் காப்பாற்ற முடியாது.

    அவர் மின்சாரத்துறைக்கு அமைச்சராக இல்லை. மின்வெட்டுத்துறைக்கு அமைச்சராக இருக்கிறார்.

    கடந்த தி.மு.க. ஆட்சியில் மின்வெட்டு ஏற்பட்டது. அதன் காரணமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இப்போதும் தமிழகம் முழுவதும் மின்வெட்டு நடைபெற்று வருகிறது.

    எனவே இந்த ஆட்சியின் முடிவின் அறிகுறியாக இந்த மின்வெட்டு உள்ளது.


    இ.பி.எஸ்.சும், ஓ.பி.எஸ்.சும் துரோக ஆட்சி நடத்தி வருகிறார்கள். தமிழக மக்கள் விரும்பாத இந்த ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும்.

    சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம் தேவையற்ற திட்டம். மக்கள் விரும்பாத திட்டம். மலைகள், நீராதாரங்கள், இயற்கை வளங்களை அழித்து 8 வழிச்சாலை திட்டம் கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன?

    தமிழகத்தில் எத்தனையோ சாலைகள் போக்குவரத்து நெருக்கடியில் உள்ளன. அவற்றை சரி செய்யாமல் இந்த திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது ஏன்? என்று தெரியவில்லை.

    இப்போது அந்த திட்டத்தை 6 வழிச்சாலையாக மாற்ற உள்ளதாக தெரிகிறது. அதுவும் கண்டிப்பாக நிறைவேறாது.

    ஒரு நோயாளி தனது இறுதிக்கட்டத்தில் நோய் முற்றி எப்படி இறப்பாரோ அது போல இந்த ஆட்சியும் நோயாளியின் இறுதிக் கட்டத்தை போல உள்ளது. இது விரைவில் முடிவுக்கு வரும்.

    கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும் மீட்டெடுக்க சட்ட போராட்டம் நடத்தி வருகிறோம்.

    முதல்-அமைச்சரை மாற்ற வேண்டும் என்று 18 எம்.எல்.ஏ.க்கள் கடந்த ஒரு ஆண்டாக போராடி வருகிறார்கள். அதற்கும் விரைவில் தீர்வு ஏற்படும்.

    எம்.எல்.ஏ.க்களை தக்க வைக்கும் அரசாகவே எடப்பாடி-பன்னீர் செல்வம் அரசு செயல்பட்டு வருகிறது. இவர்களுக்கு மக்கள் நலனில் எந்த அக்கறையும் இல்லை.

    இந்த துரோக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விரைவில் நடைபெற உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்களில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் வேட்பாளர்களை நிறுத்தும்.

    எங்கள் வேட்பாளர்கள் குக்கர் சின்னத்தில் போட்டியிடுவார்கள். அமோக வெற்றி பெறுவோம். 2 தொகுதிகளிலும் எங்கள் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது. 2-வது இடத்திற்கு தான் மற்றவர்கள் போட்டியிட வேண்டும். இந்த இடைத்தேர்தல் வெற்றி மூலம் இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். மக்கள் விரோத ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்.

    திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் நலத்திட்ட உதவிகள் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

    கடந்த 3 மாதங்களாக இந்த தொகுதிகளில் எங்கள் நிர்வாகிகள் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதுவும் தேர்தல் பணி தான். 90 சதவீத தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள்.

    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது லட்சியங்களை நிறைவேற்றுவதில் நாங்கள் முனைப்புடன் பணியாற்றி வருகிறோம்.

    எனவே மத்திய அரசின் அடிமையாக உள்ள இந்த ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும். தமிழக மக்களுக்கும் நல்லதொரு விடிவு காலம் பிறக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #ADMK #EdappadiPalaniswami #OPanneerSelvam
    ஆர்.கே.நகரைப் போன்று திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஹவாலா வேலை ஈடுபடாது என்று இல.கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். #BJP #LaGanesan
    அலங்காநல்லூர்:

    பாலமேட்டில் பா.ஜனதா கட்சியின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    சோழவந்தான் தொகுதி அமைப்பாளார் கோவிந்த மூர்த்தி தலைமை தாங்கினார். பொறுப்பாளர் சந்திரபோஸ் , நகர் தலைவர் குமரேசன் முன்னிலை வகித்தனர்.

    மாநில செயாலளர் சீனிவாசன்,மாவட்ட தலைவர் சுசீந்திரன், தேனி பாராளுமன்ற பொறுப்பாளர்கள் ராஜபாண்டியன், கர்னல்பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வழி முறைகள் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

    இதில் கலந்து கொண்ட இல. கணேசன் எம்.பி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தற்போது தமிழ்நாட்டில் நிலவிவரும் விலைவாசி உயர்வுக்கு பெட்ரோல்,டீசல் விலை மட்டுமே காரணம் இல்லை. மாநில அரசுகள் ஜி.எஸ்.டி. வரி வரம்பிற்குள் எரிபொருள் விற்பனையை கொண்டு வந்தால் 25 சதவீதம் வரை விலை குறைய வாய்ப்புள்ளது.

    வரவுள்ள திருப்பரங்குன்றம் சட்டமன்றம் இடைத்தேர்தலில் ஆர்.கே. நகரில் ஒரு கட்சி வெற்றி பெற்றது. அதைபோல் இங்கும் அவர்களது ஹவாலா வேலை எடுபடாது.

    பாரதிய ஜனதாவின் கூட்டணி வரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும். பா.ஜ.க. சாதாரண மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பல்வேறு வகையில் நலதிட்ட உதவிகளையும் வழங்கி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #LaGanesan
    திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.ம.மு.க. வெற்றி பெறுவது உறுதி என்று அதன் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்தார். #TTVDhinakaran #ThangaTamilselvan
    ஆண்டிப்பட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் தற்போது அ.ம.மு.க. துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் தேனி மாவட்ட மக்களை விரைவில் சந்திக்க உள்ளார்.

    தேனி மாவட்டத்தில் 2½ லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்த்துள்ளோம். இன்னும் புதிய நிர்வாகிகள் சேர்க்கப்பட்டு கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். கடந்த 3 ஆண்டுகளாக தொகுதி பக்கமே எட்டிபார்க்காத ஓ.பன்னீர்செல்வம் தற்போது ஊர் ஊராக சென்று மக்களிடம் மனுக்கள் வாங்கி வருகிறார். அவர் ஏற்கனவே வாங்கிய மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்தாரா?

    திருப்பரங்குன்றம் தொகுதிக்கு முறைப்படி இடைத்தேர்தல் நடத்த வேண்டும். மத்திய-மாநில அரசுகள் 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தினால் தான் உண்மையாகவே மக்கள் ஆதரவு யாருக்கு உள்ளது என தெரிய வரும்.

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம். அதன் மூலம் அடுத்து வர உள்ள பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்கு இது முன்னோட்டமாக அமையும்.


    இரட்டை இலை மற்றும் அ.தி.மு.க. குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேட்சையாக நின்றே நாங்கள் வெற்றி பெற்றோம். அ.தி.மு.க. ஓட்டுக்கு ரூ.6 ஆயிரம் வரை கொடுத்தும் தோற்று போனது. ஆட்சி அதிகாரம் பண பலத்துடன் மோதியும் நாங்கள் மக்களை நேரடியாக சந்தித்து வெற்றி பெற்றோம். தற்போது இருக்கும் அ.தி.மு.க.வுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #ThangaTamilselvan
    திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கூறியுள்ளார். #TTVDhinakaran
    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தேரடியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது.

    கூட்டத்திற்கு அ.ம.மு.க பொருளாளர் ரெங்கசாமி தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் சிவா.ராஜமாணிக்கம், வக்கீல்கள் பிரிவு செயலாளர் சீனிவாசன், அண்ணா தொழிற்சங்க பேரவை இணைச்செயலாளர் சத்தியமூர்த்தி ,தேர்தல் பிரிவு துணை செயலாளர் மலர்வேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ் வரவேற்றார்.

    கூட்டத்தில் 5 ஆயிரம் பேருக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் எம்.எல்.ஏ., வழங்கினார்.

    முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதியை எதிர்த்து தி.மு.க. ஆட்சியை அகற்ற 1972-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கினார். 40 ஆண்டுகளுக்கு பிறகு அதே சரித்திரம் திரும்பி உள்ளது. தற்போது நடைபெறும் ஆட்சி மக்களுக்கு அநீதியை உருவாக்கி உள்ளது.

    எம்.ஜி.ஆர். உருவாக்கிய, ஜெயலலிதா கட்டிக்காத்த அந்த இயக்கம் இன்று துரோகிகளிடம் உள்ளது. அதை நாம் மீட்டெடுப்போம். தேர்தல் எப்போது வந்தாலும் 200 தொகுதிகளுக்கு மேல் நாங்கள் வெற்றி பெறுவோம். நாங்கள் காசு கொடுத்து கூட்டத்தை கூட்டுவது இல்லை.

    முட்டை ஊழல், பருப்பு ஊழல், ரோடு ஒப்பந்த ஊழல் என அனைத்து துறைகளிலும் ஊழல் தலை விரித்தாடுகிறது. டெல்டா மாவட்டங்களில் தூர் வார ஒதுக்கப்பட்ட ரூ.400 கோடியில் 10 கோடி கூட செலவழிக்கவில்லை. அதிலும் மெகா ஊழல் நடந்துள்ளது.

    இதற்கு காரணமான அனைவரும் பதில் சொல்லும் காலம் நெருங்கி விட்டது. 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வர உள்ளது. அப்போது சட்டசபையில் எங்களுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும். அப்போது ஆட்சி மாற்றம் ஏற்படும். அப்போது ஊழல் செய்தவர்கள் அனைவரும் சிறை செல்வது உறுதி.

    ஜெயலலிதா ஆட்சி நடைபெறுவதாக கூறுகிறார்கள். அவர் கொண்டுவந்த திட்டங்களை இன்று பல மாநிலங்கள் செயல்படுத்துகின்றன. ஆனால் ஜெயலலிதா பெயரில் ஆட்சி நடத்துபவர்கள் மத்திய அரசுக்கு அடிமையாக இருக்கிறார்கள். அ.தி.மு.க.வின் 90 சதவீத தொண்டர்கள் எங்களிடம் தான் உள்ளனர்.

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 41 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். ஆனால் நான் 20 ரூபாய் நோட்டை காட்டி ஓட்டு வாங்கியதாக கூறுகிறார்கள். அதில் ஒரு சதவீதம் கூட உண்மை இல்லை.

    நீங்கள் ரூ.10 ஆயிரம் ஓட்டுக்கு கொடுத்தாலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெறும். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்பது தான் எங்கள் லட்சியம். அதை இந்த மாத இறுதிக்குள் எட்டி விடுவோம்.

    ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் மக்கள் இந்த ஆட்சியில் நிம்மதியாக இருக்க முடியவில்லை. இந்த ஆட்சியை தமிழக மக்கள் விரும்பவில்லை. தமிழக மக்கள் விரும்பாத ஆட்சியை தூக்கி எறிந்து, தலைநிமிர்ந்த தமிழகத்தை உருவாக்க அடிமை ஆட்சியை ஒழிப்போம். கம்பீரமாக இருந்த அ.தி.மு.க. அடிமை தி.மு.க.வாகி விட்டது. அண்டை மாநில முதல்வர்கள் எல்லாம் தமிழக அரசை மத்திய அரசின் கீழ் உள்ள அடிமை அரசு என விமர்சிக்கும் நிலையை உருவாக்கிவிட்டனர்.

    விரைவில் நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டசபைக்கும் தேர்தல் வர உள்ளது. அப்போது நாங்கள் யார் என்பதை நிரூபிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் கொள்கை பரப்பு செயலாளர் தங்க.தமிழ்செல்வன், கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி, செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி, விவசாய பிரிவு செயலாளர் துரை.கோவிந்தராஜன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #TTVDhinakaran
    திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ. மரணம் அடைந்த நிலையில் ஜெயலலிதா விரல் ரேகை சர்ச்சையாகி இருப்பதால் கோர்ட்டு தீர்ப்பு வரும் வரை திருப்பரங்குன்றத்தில் தேர்தல் நடக்குமா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
    சென்னை:

    திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஏ.கே. போஸ் சமீபத்தில் மரணம் அடைந்தார். அந்த தொகுதி விரைவில் இடைத்தேர்தலை சந்திக்க உள்ளது.

    ஏற்கனவே கடந்த 2016-ம் ஆண்டில் நடைபெற்ற இடைத்தேர்தலில்தான் ஏ.கே. போஸ் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்ட டாக்டர் சரவணன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணையில் உள்ளது.

    வழக்கு விசாரணையின் போது வேட்பாளரை பரிந்துரை செய்து தேர்தல் கமி‌ஷனுக்கு அ.தி.மு.க. சார்பில் அனுப்பிய படிவத்தில் ஜெயலலிதாவின் பெருவிரல் ரேகை பதிவு செய்ததில், சந்தேகம் எழுப்பப்பட்டது.

    இதையடுத்து டாக்டர் பாலாஜி ஐகோர்ட்டில் ஆஜராகி, தன் முன்புதான் ஜெயலலிதாவின் பெருவிரல் ரேகை பதிவு செய்யப்பட்டது என்று வாக்குமூலம் அளித்தார்.

    இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் வி.அருண் ஆஜராகி வாதிட்டார்.

    அப்போது அவர், ‘டாக்டர் பாலாஜி ஐகோர்ட்டில் பொய்யான வாக்குமூலத்தை அளித்துள்ளார். 2016-ம் ஆண்டு அக்டோபர் 27-ந்தேதி மாலை 6 மணிக்கு ஜெயலலிதாவிடம் அனைத்து ஆவணங்களையும் வாசித்துக் காட்டி, படிவத்தில் பெரு விரல் ரேகையை பதிவு செய்ததாக டாக்டர் பாலாஜி வாக்குமூலம் அளித்தார். ஆனால், அது தொடர்பான அனுமதி உத்தரவை இந்திய தேர்தல் ஆணையம், அதேநாளில் இரவு 8 மணிக்குத்தான் பிறப்பித்துள்ளது. உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பாகவே, அதாவது 2 மணி நேரத்துக்கு முன்பாகவே ரேகையை பதிவு செய்ததாக டாக்டர் பாலாஜி கூறுவது பொய்’ என்று வாதிட்டார்.

    மேலும் அவரது வாதத்தில், ‘திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் அதிகாரிகளுக்கு, 2016-ம் ஆண்டு அக்டோபர் 28-ந்தேதி கடிதங்களை மாநில தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அனுப்பியுள்ளார். ஆனால், இந்த கடிதத்தையும், அக்டோபர் 27-ந்தேதி மாலை 6 மணிக்கே ஜெயலலிதாவுக்கு படித்து காட்டி விட்டதாக டாக்டர் பாலாஜி கூறியுள்ளார். எனவே, இவர் சொல்வது பொய். படிவத்தில் ஜெயலலிதாவின் விரல் ரேகைதான் பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்பதில் சந்தேகம் உள்ளது’ என்றார்.

    இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது ஏ.கே.போசின் இறப்பு சான்றிதழை ஒப்படைக்க உத்தரவிட்டார்.

    ஜெயலலிதாவின் விரல் ரேகை சர்ச்சையாகி இருப்பதால் அது போலியானதா? உண்மையானதா? என்பதை உறுதி செய்ய வேண்டி உள்ளது. எனவே கோர்ட்டு தீர்ப்பு வரும் வரை திருப்பரங்குன்றத்தில் தேர்தல் நடக்குமா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
    திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த தயார் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாஹு தெரிவித்தார். #Thiruparankundramconstituency
    சென்னை:

    இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி மாவட்ட தேர்தல் அதிகாரிகள்(கலெக்டர்கள்) மாவட்ட துணைத் தேர்தல் அதிகாரிகளுக்கு வாக்குபதிவு எந்திரத்தையும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய உதவும் ஒப்புகைச் சீட்டு எந்திரத்தையும் இயக்குவது குறித்த பயிற்சி கருத்தரங்கு சென்னை கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.

    கருத்தரங்கை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாஹு தொடங்கி வைத்தார். இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் துணைச் செயலாளர் சவுமியா ஜித் கோஷ் கலந்து கொண்டார். தேசிய அளவிலான தலைமை பயிற்சியாளர் என்.டி.பர்மர் கருத்தரங்கில் பங்கேற்றவர்களுக்கு பயிற்சி அளித்தார். பெங்களூரு பாரத மின்னணு நிறுவன தொழில் நுட்ப வல்லுனர்கள் உடன் இருந்து தொழில் நுட்ப ரீதியிலான வழிகாட்டுதல்களை வழங்கினர்.

    தமிழகத்தின் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளும், மாவட்ட துணை தேர்தல் அதிகாரிகளும், வாக்குபதிவு எந்திரத்திற்கான ஒருங்கிணைப்பு அதிகாரிகளும் பயிற்சி கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாஹு நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து முழுவதும் சொல்லித் தரப்படும். இந்த கூட்டத்தை தொடர்ந்தும் அவர்களுக்கு தேர்தல் நடத்துவது குறித்து பயிற்சியும் அளிக்கப்படும்.



    திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி காலியாக இருப்பதாக டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்து உள்ளோம் அங்கு இடைத்தேர்தல் நடத்த தயார் ஆக இருக்கிறோம். தேர்தல் ஆணையம் தேதியை அறிவித்தவுடன் அந்த தேதியில் தேர்தல் நடத்துவோம்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் அனைத்து வாக்குசாவடிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்தான் பயன்படுத்தப்படும். இந்த எந்திரங்களில் தவறு எதுவும் நடக்காது.

    யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் ஒப்புகைச் சீட்டு எந்திரம் வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பயன்படுத்தப்படும். தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் விடுபட்ட மற்றும் தகுதி உள்ள வாக்காளர்களை சேர்த்து புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.  #Thiruparankundramconstituency
    ×