search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் இபிஎஸ்-ஓ.பி.எஸ் ஆட்சிக்கு முடிவு கட்டும்: டிடிவி தினகரன்
    X

    திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் இபிஎஸ்-ஓ.பி.எஸ் ஆட்சிக்கு முடிவு கட்டும்: டிடிவி தினகரன்

    திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். ஆட்சிக்கு முடிவு கட்டும் என்று மதுரையில் டி.டி.வி. தினகரன் கூறினார். #TTVDhinakaran #ADMK #EdappadiPalaniswami #OPanneerSelvam
    மதுரை:

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் டி.டி. வி. தினகரன் மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், அமைச்சர்கள், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அத்தனை குற்றச்சாட்டுகளும் ஆதாரங்களாக இருக்கின்றன.

    இவர்களின் ஊழல்கள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படும் காலம் விரைவில் வரும்.

    அமைச்சர் வேலுமணி மீதான குற்றச்சாட்டு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. அது போல முதல் அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஆகியோர் மீதும் நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளன. ஆதாரங்கள் இல்லாமல் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர முடியாது.

    இப்போது மின்துறை அமைச்சரும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளார். யாருடைய பிளஸ்சிங்கோ அவருக்கு இருப்பதாக நினைக்கிறார். அவரை யாராலும் காப்பாற்ற முடியாது.

    அவர் மின்சாரத்துறைக்கு அமைச்சராக இல்லை. மின்வெட்டுத்துறைக்கு அமைச்சராக இருக்கிறார்.

    கடந்த தி.மு.க. ஆட்சியில் மின்வெட்டு ஏற்பட்டது. அதன் காரணமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இப்போதும் தமிழகம் முழுவதும் மின்வெட்டு நடைபெற்று வருகிறது.

    எனவே இந்த ஆட்சியின் முடிவின் அறிகுறியாக இந்த மின்வெட்டு உள்ளது.


    இ.பி.எஸ்.சும், ஓ.பி.எஸ்.சும் துரோக ஆட்சி நடத்தி வருகிறார்கள். தமிழக மக்கள் விரும்பாத இந்த ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும்.

    சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம் தேவையற்ற திட்டம். மக்கள் விரும்பாத திட்டம். மலைகள், நீராதாரங்கள், இயற்கை வளங்களை அழித்து 8 வழிச்சாலை திட்டம் கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன?

    தமிழகத்தில் எத்தனையோ சாலைகள் போக்குவரத்து நெருக்கடியில் உள்ளன. அவற்றை சரி செய்யாமல் இந்த திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது ஏன்? என்று தெரியவில்லை.

    இப்போது அந்த திட்டத்தை 6 வழிச்சாலையாக மாற்ற உள்ளதாக தெரிகிறது. அதுவும் கண்டிப்பாக நிறைவேறாது.

    ஒரு நோயாளி தனது இறுதிக்கட்டத்தில் நோய் முற்றி எப்படி இறப்பாரோ அது போல இந்த ஆட்சியும் நோயாளியின் இறுதிக் கட்டத்தை போல உள்ளது. இது விரைவில் முடிவுக்கு வரும்.

    கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும் மீட்டெடுக்க சட்ட போராட்டம் நடத்தி வருகிறோம்.

    முதல்-அமைச்சரை மாற்ற வேண்டும் என்று 18 எம்.எல்.ஏ.க்கள் கடந்த ஒரு ஆண்டாக போராடி வருகிறார்கள். அதற்கும் விரைவில் தீர்வு ஏற்படும்.

    எம்.எல்.ஏ.க்களை தக்க வைக்கும் அரசாகவே எடப்பாடி-பன்னீர் செல்வம் அரசு செயல்பட்டு வருகிறது. இவர்களுக்கு மக்கள் நலனில் எந்த அக்கறையும் இல்லை.

    இந்த துரோக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விரைவில் நடைபெற உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்களில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் வேட்பாளர்களை நிறுத்தும்.

    எங்கள் வேட்பாளர்கள் குக்கர் சின்னத்தில் போட்டியிடுவார்கள். அமோக வெற்றி பெறுவோம். 2 தொகுதிகளிலும் எங்கள் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது. 2-வது இடத்திற்கு தான் மற்றவர்கள் போட்டியிட வேண்டும். இந்த இடைத்தேர்தல் வெற்றி மூலம் இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். மக்கள் விரோத ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்.

    திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் நலத்திட்ட உதவிகள் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

    கடந்த 3 மாதங்களாக இந்த தொகுதிகளில் எங்கள் நிர்வாகிகள் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதுவும் தேர்தல் பணி தான். 90 சதவீத தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள்.

    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது லட்சியங்களை நிறைவேற்றுவதில் நாங்கள் முனைப்புடன் பணியாற்றி வருகிறோம்.

    எனவே மத்திய அரசின் அடிமையாக உள்ள இந்த ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும். தமிழக மக்களுக்கும் நல்லதொரு விடிவு காலம் பிறக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #ADMK #EdappadiPalaniswami #OPanneerSelvam
    Next Story
    ×