search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜார்ஜ்"

    குட்கா ஊழல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராக அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் 5 பேருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. #MinisterVijayabaskar #gutkhaissue
    புதுடெல்லி:

    இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ரூ.40 கோடி குட்கா ஊழல் வழக்கை டெல்லி சி.பி.ஐ. போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதில் குட்கா வியாபாரியும், தொழில் அதிபருமான மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, கலால் வரித்துறை அதிகாரி பாண்டியன், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் செந்தில்முருகன், சிவக்குமார் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த ஊழல் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆகியோரின் வீடுகள் உள்பட 35 இடங்களில் சி.பி.ஐ. போலீசார் சோதனை நடத்தினார்கள். பின்னர் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பத் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி சி.பி.ஐ. போலீசார் விசாரித்தார்கள். இருவரிடமும் தலா 2 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது. இந்தநிலையில் சி.பி.ஐ. போலீசார் குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக திடீரென்று கடந்த மாதம் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் முதல்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அந்த குற்றப்பத்திரிகையில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட தொழில் அதிபர் மாதவராவ் உள்ளிட்ட 6 பேர் மீது மட்டும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    முதல்கட்ட குற்றப்பத்திரிகையில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் பெயர்கள் இடம் பெறவில்லை. ஆனால் தொடர்ந்து விசாரணை நடப்பதாகவும், தேவைப்பட்டால் 2-வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் சி.பி.ஐ. போலீசார் தெரிவித்தனர். இந்தநிலையில் டெல்லியில் இருந்து சி.பி.ஐ. அதிகாரிகள் சென்னை வந்து முகாமிட்டனர். அடுத்தக்கட்ட விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணைக்கு ஆஜராகுமாறு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனுக்கு சி.பி.ஐ. போலீசார் சம்மன் அனுப்பினர். அவரிடம் விசாரணையை மேற்கொண்டனர். 

    இப்போது குட்கா ஊழல் வழக்கில் நாளை விசாரணைக்கு ஆஜராக  அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் 5 பேருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.  #MinisterVijayabaskar #gutkhaissue
    குட்கா வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரி திடீரென்று மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக இன்னொரு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. #gutkhacase #cbiofficer
    சென்னை:

    மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட ரூ.40 கோடி குட்கா ஊழல் வழக்கில் தொழில் அதிபர் மாதவராவ் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 6 பேர் மீதும் சமீபத்தில் சி.பி.ஐ. போலீசார் குற்ற பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் அமைச்சர் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் பெயர் குற்ற பத்திரிகையில் இடம்பெறவில்லை.

    இந்தநிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த சி.பி.ஐ. போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் திடீரென்று மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக இன்னொரு போலீஸ் சூப்பிரண்டு பாபு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த வழக்கில் இடம்பெற்றிருந்த கேரளாவை சேர்ந்த இன்ஸ்பெக்டர் பிரமோத்குமார் என்பவரும் மாற்றப்பட்டு உள்ளார்.

    ஆனால் இதுபற்றி விசாரித்தபோது பிரமோத்குமார் சி.பி.ஐ.யில் பணியாற்றும் கால அவகாசம் முடிந்துவிட்டதாகவும், அதனால் தான் அவர் மாற்றப்பட்டார் என்றும் சி.பி.ஐ. வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. #gutkhacase #cbiofficer 
    முட்டை, பருப்பு கொள்முதல் செய்ததில் ரூ.2,400 கோடி ஊழலில் சிக்கியுள்ள அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #mkstalin #tnministers #corruption
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பள்ளிக்குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கும் திட்டத்திற்கான முட்டை, பருப்பு உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்ததில் 2,400 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்திருப்பதாக வருமானவரித்துறை சோதனைகளின் மூலம் வெளிச்சத்திற்கு வந்திருக்கும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது. சத்துணவுத்திட்டத்தை உண்மையிலேயே சத்து உள்ள திட்டமாக மாற்ற வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் கருணாநிதி ஆட்சியிலிருந்த போது முட்டை வழங்கும் திட்டத்தை அறிவித்தார். அதுமட்டுமல்ல, தி.மு.க. ஆட்சி இருந்தவரை பள்ளிகளில் முட்டை வழங்கும் திட்டம் மிகச் சிறப்பாகவும் முறையாகவும் நேர்மையுடனும் செயல்படுத்தப்பட்டது.

    முட்டை வழங்கும் தனியார் நிறுவனத்தில் நடைபெற்ற ரெய்டில் அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுத்த கணக்குகள் ஆவண ஆதாரங்களாக வருமானவரித்துறையின் கையில் சிக்கியிருக்கின்றன. அதைவிட அபாயகரமானது என்னவென்றால் அரசாங்கத்தின் ரகசிய கோப்புகளும், அரசு ரகசியங்கள் அடங்கிய குறிப்புகளும் அந்த தனியார் முட்டை நிறுவனத்தில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

    லஞ்ச ஊழலுக்காக வஞ்சக எண்ணத்தோடு அரசு ரகசியத்தையே விற்பனை செய்த கேவலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தான் நடைபெற்று தமிழகமே வெட்கித்தலை குனிந்து நிற்கிறது. இந்த ரகசியங்கள் அனைத்தும் அரசின் மூத்த அதிகாரிகளின் ஆதரவு மற்றும் துணையின்றி முட்டை நிறுவனத்திற்கு சென்றிருக்க வாய்ப்பில்லை என்றும் வெளிவந்துள்ள செய்தி பேரதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. மூத்த அதிகாரிகளோடு கைகோர்த்து அமைச்சர்களும் இதற்கு உடந்தையாக இருந்திருப்பார்கள் என்ற நியாயமான கேள்வி எழுகிறது.

    அ.தி.மு.க. அமைச்சர்கள் மீதும், அவர்களுக்கு வேண்டிய நிறுவனங்கள் மீதும் நடத்தப்பட்ட ரெய்டுகளில் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படாத காரணத்தால் வருமானவரித்துறையின் நம்பகத்தன்மை மீது மக்களுக்கு மிகப்பெரிய சந்தேகம் உருவாகும் சூழலை மத்திய பா.ஜ.க. அரசு உருவாக்கி விட்டது. ஊழல் ஒழிப்பில் பா.ஜ.க. அரசின் இரட்டை வேடம் அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெறும் சோதனைகளில் வெளியாகி நடுநிலையாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்துகிறது.

    ஆகவே, பள்ளிக்குழந்தைகளுக்கு முட்டை வழங்கும் திட்டத்தில் நடைபெற்றுள்ள இந்த ஊழலையும் மூடி மறைக்கவோ அல்லது அ.தி.மு.க. அமைச்சர்களை எப்படியாவது தப்பிக்க வைக்கவோ மத்திய பா.ஜ.க. அரசு எவ்வித முயற்சியிலும் ஈடுபடக்கூடாது என்று எல்லோரும் எதிர்பார்க்கின்றனர்.

    2,400 கோடி ரூபாய் ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள அ.தி.மு.க. அமைச்சர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். இந்த ஊழலுக்கு துணை போன அதிகாரிகள் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    அப்பாவிகள் மீது எதற்கு எடுத்தாலும் தேசத்துரோக வழக்குப் போடும் அ.தி.மு.க. அரசு, தனியார் முட்டை நிறுவனத்திற்கு அரசாங்க ரகசியத்தை விற்று கொடுங்குற்றம் புரிந்திருக்கும் அதிகாரிகள் மற்றும் உடந்தையாக இருந்த அமைச்சர்கள் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

    குட்கா ஊழலை விசாரித்து வந்த இரு அதிகாரிகளை மாற்றம் செய்திருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட அமைச்சர், போலீஸ் டி.ஜி.பி. மீது குற்றப்பத்திரிகை இன்னும் தாக்கல் செய்யாமல் விசாரணை நடத்தும் அதிகாரிகளை தொடர்ந்து மாற்றம் செய்வது உண்மை குற்றவாளிகளை தப்ப வைக்கும் முயற்சி. மாறுதல்களை உடனே ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #mkstalin #tnministers #corruption
    குட்கா ஊழல் வழக்கில் உரிய விசாரணை கோரி சி.பி.ஐ. இயக்குனர் மற்றும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் ஆகியோருக்கு தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கடிதம் அனுப்பியுள்ளார். #dmk #gutkhacase #cbidirector #ministervijayabaskar
    சென்னை:

    சி.பி.ஐ. இயக்குனர் மற்றும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் ஆகியோருக்கு, தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தையே உலுக்கிய குட்கா ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக கண்ணன், உதவி அதிகாரியாக பிரமோத்குமார் ஆகியோர் இருந்து வந்தனர். அவர்கள் மூலம் இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் இருவருமே மாற்றப்பட்டு இருக்கின்றனர்.

    அதேநேரம் சி.பி.ஐ. இயக்குனரும் கட்டாய விடுப்பில் சென்றிருக்கிறார். அவருக்கு பதிலாக புதிய இயக்குனர் அவசரமாக பொறுப்பேற்றிருக்கிறார். அதேவேளை இந்த வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட குற்றபத்திரிகையிலும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளின் பெயர் இடம்பெறவில்லை. இந்த போக்கு குட்கா வழக்கில் தவறான முன்னுதாரணமாக இருக்கிறது.

    எனவே குட்கா ஊழல் வழக்கில் உரிய விசாரணை நடத்தப்பட்டு உண்மையான குற்றவாளிகள் அடையாளம் காட்டப்பட வேண்டும். இந்த தவறான போக்கு தொடரும் பட்சத்தில் சரியான நீதியை அடைய சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்று வழக்கு தொடரவேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்படுவோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #dmk #gutkhacase #cbidirector #ministervijayabaskar
    குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றப்பத்திரிகையில் அமைச்சர், டிஜிபி பெயர்கள் இடம்பெறவில்லை. #gutkhascam #cbi #ministervijayabaskar

    சென்னை:

    தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.

    செங்குன்றம் குட்கா குடோனில் வருமான வரி துறையினர் நடத்திய சோதனையின் எதிரொலியாக அங்கு கைப்பற்றபட்ட டைரியே குட்கா விவகாரத்தின் பின்னணியில் இருந்தவர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.

    தமிழக போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், ஓய்வு பெற்ற முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளின் பெயர்களும் இதில் அடிபட்டன.

    குட்கா குடோனில் சோதனை நடந்த போது புழல் உதவி கமி‌ஷனராக பணியாற்றிய மன்னர் மன்னன், செங்குன்றத்தில் இன்ஸ்பெக்டராக இருந்த சம்பத் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

    தமிழக சுகாதாரத்துறை அமைச்சரான விஜயபாஸ்கர் பெயரும் குட்கா விவகாரத்தில் சிக்கியது. இதன் காரணமாக குட்கா வழக்கில் போலீஸ் அதிகாரிகள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றே எதிர் பார்க்கப்பட்டது.


    ஆனால் குட்கா வழக்கில் குடோன் அதிபர் மாதவராவ் மற்றும் அவரது கூட்டாளிகளிடம் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட அரசு அதிகாரிகள் ஆகியோரே கைது செய்யப்பட்டனர். 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அடுத்த கட்டமாக போலீசார் மீது சி.பி.ஐ.யின் பாய்ச்சல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இதனை உறுதி செய்யும் வகையில் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் கமி‌ஷனர் ஜார்ஜ், உதவி கமி‌ஷனர் மன்னர் மன்னன், இன்ஸ்பெக்டர் சம்பத் ஆகியோரது வீடுகளிலும் அதிரடி சோதனை நடத்தபட்டது.

    இதன் தொடர்ச்சியாக அவர்கள் மீது கண்டிப்பாக மேல் நடவடிக்கை பாயலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த சோதனை முடிந்த பின்னர் போலீஸ் அதிகாரிகளுக்கு சம்மனும் அனுப்பப்பட்டது. இன்ஸ்பெக்டர் சம்பத் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

    இதனால் எந்த நேரத்திலும் அவர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் சம்பத், முன்ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு செய்தார். இதனை விசாரித்த நீதிபதி, இதற்கு விளக்கம் அளிக்குமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டார். இது தொடர்பாக கோர்ட்டில் பதில் அளித்த சி.பி.ஐ. இன்ஸ்பெக்டர் சம்பத் மீது வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை என்று விளக்கம் அளித்தது. இதனால் முன்ஜாமீன் தேவை இல்லை என்று கோர்ட்டு உத்தரவிட்டது. இன்ஸ்பெக்டர் சம்பத்திடம் விசாரணை முடிந்த பின்னர் அதில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்பப்படும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுபோன்று எதுவும் நடைபெறவில்லை.

    இந்த நிலையில் குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மாதவராவ் உள்ளிட்ட 6 பேர் மீது அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இந்த குற்றப்பத்திரிகையில் அமைச்சர் விஜயபாஸ்கர் பெயர் இடம்பெறவில்லை. டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் கமி‌ஷனர் ஜார்ஜ், உதவி கமி‌ஷனர் மன்னர் மன்னன், இன்ஸ்பெக்டர் சம்பத் ஆகியோரது பெயர்களும் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    குட்கா ஊழல் வழக்கில் போலீஸ் துறையினர் மீதே சரமாரியாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்தன.

    ஆனால் அது தொடர்பாக எந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படாததும், குற்றப்பத்திரிகையில் யாருடைய பெயரும் சேர்க்கப்படாமல் இருப்பதும் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. #gutkhascam #cbi #ministervijayabaskar

    குட்கா ஊழல் வழக்கு தொடர்பான விசாரணையை முடித்துக் கொள்ள வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது. #GutkhaScam #IncomeTax

    புதுடெல்லி:

    தமிழ்நாட்டில் தடையை மீறி குட்கா விற்பனை செய்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கப்படுவதாக வந்த தகவல்களின் பேரில் கடந்த 2016-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னை செங்குன்றத்தில் உள்ள குட்கா குடோன்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    அப்போது ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதன் மூலம் குட்கா விற்பனையில் மிகப் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்து இருப்பது தெரிய வந்தது.

    ஆவணங்களை ஆய்வு செய்தபோது சுமார் ரூ.250 கோடி அளவுக்கு குட்கா நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்து இருப்பதை வருமான வரித்துறை அதிகாரிகள் உறுதி செய்தனர். இதையடுத்து அவர்கள் மீதும் விசாரணை செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இதற்கிடையே சோதனையின்போது சிக்கிய ரகசிய டைரி மூலம் குட்கா விற்பதற்கு அமைச்சர், உயர் போலீஸ் அதிகாரிகள், தமிழக அரசு அதிகாரிகளுக்கு ரூ.40 கோடி வரை லஞ்சம் கொடுக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கும் வருமான வரித்துறை கடிதம் அனுப்பியது.

    தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் திருப்தி அளிக்காததால் குட்கா முறைகேடுகள் பற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. அதன் பேரில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி 6 பேரை கைது செய்தது.


    இந்த நிலையில் வருமான வரித்துறையினர் குட்கா தொடர்பான முறைகேடுகளை விசாரித்து வந்தனர். தற்போது இந்த விசாரணையை முடித்துக் கொள்ள வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.

    வருமான வரித்துறை சட்டப்படி இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந்தேதிக்குள் குட்கா வழக்கை முடிக்க வேண்டிய நிலை வருமான வரித்துறைக்கு ஏற்பட்டுள்ளது. எனவே 2016-ம் ஆண்டு சோதனையின் போது சிக்கிய ஆவணங்களை சி.பி.ஐ.யிடம் கொடுத்து விட வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.

    சோதனையின்போது பணம் மற்றும் சொத்து ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றி இருந்தனர். அந்த சொத்து ஆவணங்கள் அனைத்தையும் வரி ஏய்ப்புக்கு ஈடுகட்டும் வகையில் பயன்படுத்த வருமான வரித்துறையினர் தீர்மானித்துள்ளனர். #GutkhaScam #IncomeTax

    குட்கா ஊழல் தொடர்பாக மேலும் 2 அதிகாரிகளின் வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். #gutkhaissue #cbi

    சென்னை:

    குட்கா ஊழல் வழக்கில் செங்குன்றம் குடோன் அதிபர் மாதவராவ் அவரது பங்குதாரர்கள் உமாசங்கர், குப்தா, சீனிவாசராவ், மத்திய கலால் துறை அதிகாரி என்.கே.பாண்டியன், உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில் முருகன், திருவள்ளூர் மாவட்ட சுகாதார ஆய்வாளர் சிவகுமார் ஆகிய 6 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் அனைவரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். வருகிற 17-ந்தேதி வரை 6 பேரையும் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    இந்த நிலையில் குட்கா ஊழல் தொடர்பாக மேலும் 2 அதிகாரிகளின் வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். மத்திய சரக்கு மற்றும் சேவை (ஜி.எஸ்.டி) வரி துறையை சேர்ந்த கூடுதல் கமி‌ஷனர் செந்தில் வளவன், மத்திய கலால் வரி துறையில் நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையராக பணியாற்றி ஓய்வு பெற்ற ஸ்ரீ தரன் ஆகிய 2 பேரின் வீடுகளிளும் சோதனை நடந்தது.

    குட்கா ஊழலில் இருவருக்கும் தொடர்பு இருக்கலாம் என்கிற சந்தேகத்தின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.

    குட்கா ஊழல் வழக்கில் டி.ஜி.பி. ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ், உதவி கமி‌ஷனர் மன்னர் மன்னன், இன்ஸ்பெக்டர் சம்பத் ஆகியோரது வீடுகளில் ஏற்கனவே சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் இன்ஸ்பெக்டர் சம்பத்திடம் மட்டுமே சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. #gutkhaissue #cbi

    குட்கா ஊழல் தொடர்பாக மாதவராவ் உள்பட 6 பேர் சிக்கி உள்ள நிலையில் சி.பி.ஐ. மீண்டும் அதிரடி விசாரணை நடத்தி வருவதால் போலீஸ் அதிகாரிகளும் கைது ஆகலாம் என தெரிகிறது. #GutkhaScam #CBI

    சென்னை:

    குட்கா ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ. அதிகாரிகள், குட்கா வியாபாரி மாதவராவ் உள்பட 6 பேரை இதுவரை கைது செய்துள்ளனர்.

    செங்குன்றம் அருகே உள்ள குட்கா குடோன் உரிமையாளரான மாதவராவ், பங்குதாரர்கள் சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, மத்திய கலால் துறை அதிகாரி பாண்டியன், உணவு பாதுகாப்பு துறை அதிகாரியான செந்தில் முருகன் ஆகியோர் கடந்த 6-ந்தேதி கைதானார்கள். இவர்களை சி.பி.ஐ. அதிகாரிகள் காவலில் எடுத்தும் விசாரணை நடத்தினர்.

    செங்குன்றம் குட்கா குடோனில் மீண்டும் சோதனை நடத்தப்பட்டது. இதில் குட்கா தயாரிக்க பயன் படுத்தப்பட்ட எந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    குட்கா ஊழலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள போலீஸ் அதிகாரிகளான டி,ஜி.பி. டி.கே. ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ், மற்றும் உதவி கமி‌ஷனர் மன்னர் மன்னன், இன்ஸ்பெக்டர் சம்பத் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. இவர்களில் மன்னர்மன்னன் சம்பத் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதில் சம்பத் மட்டும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார். விசாரணைக்கு பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். இதோடு குட்கா விவகாரம் முடிவுக்கு வந்து விட்டதாகவே கூறப்பட்டது.

    இந்த நிலையில் குட்கா வழக்கில் சி.பி.ஐ. தனது அடுத்த அதிரடியை தொடங்கியுள்ளது. உணவு பாதுகாப்பு துறையில் திருவள்ளூர் மாவட்ட ஆய்வாளராக இருக்கும் சிவக்குமார், நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். குட்கா வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் இவர்தான் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    ஆனால் அதனை ஏற்க கோர்ட்டு மறுத்திருந்தது. இந்த நிலையில்தான் அதிகாரி சிவகுமாரை சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்த சி.பி.ஐ. அதிகாரிகள் கைது நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

    இதனை தொடர்ந்து குட்கா வழக்கில் போலீஸ் அதிகாரிகளையும் கைது செய்ய சி.பி.ஐ. மீண்டும் வேகம் காட்டுவதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

    குட்கா ஊழலை பொறுத்தவரையில் குடோன் உரிமையாளரான மாதவ ராவ் மற்றும் அவரது கூட்டாளிகள், இருவருடன் அரசு அதிகாரிகள் 3 பேரும் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸ் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகள் இருந்த போதிலும் இதுவரையில் யார் மீதும் கைது நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.

    இந்த நிலையில் சி.பி.ஐ. அதிகாரிகளின் அடுத்த குறி போலீஸ் அதிகாரிகள்தான் என்றும், விரைவில் இதில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. குட்கா விவகாரத்தில் இன்ஸ்பெக்டரிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில் உதவி கமி‌ஷனர் மன்னர் மன்னனிடம் இன்னும் விசாரணை நடத்தப்படவில்லை.

    எனவே விரைவில் அவரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது. அதன் பின்னரே குட்கா ஊழலில் போலீஸ் அதிகாரிகளுடனான தொடர்பு பற்றி இறுதியாக தெரிய வரும் என்று சி.பி.ஐ. அதிகாரிகள் நம்புகிறார்கள். உதவி ஆணையரிடம் நடத்தப்பட்ட விசாரணைக்கு பின்னர் குட்கா ஊழலில் போலீஸ் அதிகாரிகளும் அடுத்தடுத்து கைது செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது. #GutkhaScam #CBI

    குட்கா ஊழலை கண்டித்து தஞ்சையில் தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #DMK #GutkhaScam

    தஞ்சாவூர்:

    தமிழக அரசு பதவி விலகக்கோரியும், ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அமைச்சர்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்

    தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமை தங்கினார்.

    இதில் முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, தேர்தல் பணிக் குழுத் தலைவர் எல்.கணேசன், உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், மாநில வர்த்தக அணி தலைவர் உபயதுல்லா, ஒரத்தநாடு ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., தலைமை செயற்குழு உறுப்பினர் து.செல்வம், சட்டத் திருத்த குழு உறுப்பினர் இறைவன், தலைமை செயற்குழு உறுப்பினர் நீலமேகம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஏனாதி பாலசுப்பிரமணியன், மகேஷ் கிருஷ்ணசாமி, மாவட்ட அவை தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட துணைச் செயலாளர்கள் புண்ணியமூர்த்தி, பாக்கியவதி தாண்டவன், மாவட்ட பொருளாளர் எல்.ஜி.அண்ணா, காங்கிரஸ் தலைவர்கள் கிருஷ்ணசாமி வாண்டையார், பி.ஜி.ராஜேந்திரன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் உதயகுமார், தி.க. மாவட்ட தலைவர் வக்கீல் அமர்சிங், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தஞ்சை மாவட்ட செயலாளர் ஜெயினுலாபுதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சொக்காரவி, மனித நேய மக்கள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் பாதுஷா, காங்கிரஸ் கட்சி மாவட்ட துணைத்தலைவர் வக்கீல் அன்பரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #DMK #GutkhaScam

    குட்கா ஊழலில் போலீஸ் உயர் அதிகரிகள், உணவு பாதுகாப்புத்துறை, கலால் துறை அதிகாரிகளுக்கு கோடிக் கணக்கான ரூபாய் லஞ்சம் கொடுத்தது உண்மை என்று மாதவராவ் வாக்குமூலம் அளித்துள்ளார். #Gutkha #ministervijayabaskar

    சென்னை:

    சென்னை செங்குன்றம் அருகே குட்கா ஆலை மற்றும் குடோன் நடத்தி வந்தவர் மாதவராவ். இதன் பங்குதாரர்களாக உமாசங்கர் குப்தா சீனிவாசராவ் ஆகியோர் இருந்தனர்.

    இவர்கள் 2013-ம் ஆண்டு தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை தயாரித்து தமிழகம் முழுவதும் சப்ளை செய்து பல கோடி ரூபாய் குவித்தனர்.

    சட்டவிரோத செயல்களை கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், அப்போதைய சென்னை போலீஸ் கமி‌ஷனராக இருந்த ஜார்ஜ், அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோருக்கு கோடிக் கணக்கில் லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்தது.


    இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரித்து மாதவராவிடம் வாக்குமூலம் பெற்றனர். அதேபோல் லஞ்ச ஒழிப்பு போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    இந்த வழக்கு விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்ட பிறகு சூடு பிடித்தது. கடந்த 5 மற்றும் 6-ந்தேதிகளில் முன்னாள் கமி‌ஷனர் ஜார்ஜ், அமைச்சர் விஜயபாஸ்கர் வீடுகள் உள்ளிட்ட 40 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    பின்னர் மாதவராவ், உமாசங்கர் குப்தா, சீனிவாச ராவ், உணவு பாதுகாப்பு மற்றும் கலால்துறை அதிகாரிகள் என 5 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். இவர்களில் மாதவராவ், சீனிவாசராவ் ஆகியோருக்கு இன்று வரை காவல் நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. அவர்களிடம் அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள்.

    குட்கா ஆலை மற்றும் குடோன் சட்டவிரோதமாக செயல்பட்ட காலகட்டத்தில் செங்குன்றம் இன்ஸ்பெக்டராக இருந்த சம்பத்குமாரிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்துள்ளனர்.

    அப்போது மாதவராவிடம் இருந்து லஞ்சம் பெற்று இடைத்தரகர்கள் 2 பேர் வாயிலாக ஐ.பி.எஸ் அதிகாரிகள் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு கொடுத்ததாக சம்பத்குமார் கூறி உள்ளார். மேலும் புழல் உதவி கமி‌ஷனராக இருந்த மன்னர்மன்னன் இதற்கு உடந்தையாக இருந்தார் என்றும் அவர் கூறியதாக சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    சி.பி.ஐ. அதிகாரிகளிடம் மாதவராவ், சீனிவாசராவ் ஆகியோர் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-

    போலீஸ் உயர் அதிகரிகள், உணவு பாதுகாப்புத்துறை, கலால் துறை மற்றும் சென்னை மாநகராட்சி உயர் அதிகாரிகளுக்கு கோடிக் கணக்கான ரூபாய் லஞ்சம் கொடுத்தது உண்மை. இது சத்தியம்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    அடுத்தகட்டமாக டி.எஸ்.பி. மன்னர் மன்னனிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். #Gutkha #ministervijayabaskar

    குட்கா ஊழல் வழக்கில் மாதவராவ், சீனிவாசராவுக்கு மேலும் 3 நாள் காவலில் வைத்து விசாரிக்க சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.#Gutkhascam #GutkhaCBIProbe

    சென்னை:

    தமிழக அரசு கடந்த 2013-ம் ஆண்டு குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடை விதித்தது. ஆனால், இந்த தடையை மீறி மாதவ ராவ், சீனிவாசராவ் ஆகியோர் குட்காவை தமிழகம் முழுவதும் விற்பனை செய்தனர்.

    இதற்காக அவர்கள், தமிழக அமைச்சர்கள், போலீஸ் டி.ஜி.பி., டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதுகுறித்து விசாரணை நடத்த சி.பி.ஐ. போலீசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதன்படி, சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்து, அமைச்சர், டிஜிபி, முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் உள்ளிட்டோர் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.


    பின்னர், குட்கா வியாபாரிகள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர், அரசு அதிகாரிகள் பாண்டியன், செந்தில் முருகன் ஆகியோரை சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். பின்னர், இவர்களை சி.பி.ஐ. கோர்ட்டில் கடந்த 10-ந்தேதி ஆஜர்படுத்தி, 4 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி பெற்றனர்.

    இந்த நிலையில், விசாரணையை முடித்து, 5 பேரையும் கோர்ட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆஜர் படுத்தினர். அவர்கள் அனைவரையும் வருகிற 20-ந்தேதி வரை கோர்ட்டு காவலில் சிறையில் அடைக்க நீதிபதி திருநீலபிரசாத் உத்தரவிட்டார். இதன் பின்னர், சி.பி.ஐ. போலீசார், புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில், ‘மாதவ ராவ், சீனிவாசராவ் ஆகியோரை மேலும் 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி திருநீலபிரசாத், இருவரையும் 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். 17-ந் தேதி மாலையில் 4 மணிக்கு அவர்கள் இருவரையும் ஆஜர் படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மற்ற 3 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். #Gutkhascam #GutkhaCBIProbe

    குட்கா ஊழல் வழக்கில் இன்ஸ்பெக்டர் சம்பத் இன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்துக்கு சென்று அதிகாரிகள் முன் ஆஜரானார். #gutkhacorruption #cbi

    சென்னை:

    சென்னை செங்குன்றத்தில் உள்ள ஒரு குடோனில் தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருளை தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    வருமான வரித்துறை அதிகாரிகள், வரி ஏய்ப்பு தொடர்பாக நடத்திய சோதனையில் சட்ட விரோதமாக குட்கா தயாரிக்கப்பட்டு வருவது வெளிச்சத்துக் வந்தது.

    இன்ஸ்பெக்டர் முதல் உயர் அதிகாரிகள் வரை லஞ்சம் பெற்றுக் கொண்டு குட்கா தயாரிப்பை கண்டு கொள்ளாமல் இருந்து விட்டனர் என்று வருமான வரித்துறை விசாரணையில் தெரியவந்தது.

    இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக நடந்த அதிரடி சோதனைக்குப்பின் குடோன் உரிமையாளர் மாதவராவ் மற்றும் உணவு கலப்பட தடுப்பு பிரிவு அதிகாரிகள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    குட்கா பிடிபட்ட கால கட்டத்தில் செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டராக சம்பத்தும், உதவி கமி‌ஷனராக மன்னர் மன்னனும் பணியாற்றினார்கள். இவர்களது வீடுகளில் சி.பி.ஐ. சோதனை நடத்தி சீல் வைத்துள்ளது. அவர்கள் இருவரையும் விசாரணைக்கு வருமாறு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருந்தது. அதை ஏற்று இன்ஸ்பெக்டர் சம்பத் இன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்துக்கு சென்று அதிகாரிகள் முன் ஆஜரானார்.

    விசாரணை நடத்தப்பட்ட பின்பு ராயபுரத்தில் போலீஸ் குடியிருப்பில் சீல் வைக்கப்பட்ட அவரது வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சோதனையின் போது சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இன்ஸ்பெக்டர் சம்பத் லஞ்சப் பணத்தை பெற்று உயர் அதிகாரிகளுக்கு கை மாற்றியதில் முக்கிய பங்கு வகித்ததாக சி.பி.ஐ. தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. எவ்வளவு கால இடை வெளியில் யார்-யாருக்கு எந்த வகையில் பணம் கொடுக்கப்பட்டது என்றும் அவரிடம் விசாரிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

    அதற்கு சம்பத் அளித்த பதில்களை சி.பி.ஐ. பதிவு செய்து கொண்டது. இதனால் குட்கா ஊழல் விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. #gutkhacorruption #cbi

    ×