search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எவ வேலு"

    • சுமார் 5 ஏக்கர் நில பரப்பளவில் திராவிட கலை மற்றும் பல்லவர் கட்டிடக்கலையுடன் வள்ளுவர் கோட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
    • 2025-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் பணிகளை முடிக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது எழிலன் எம்.எல்.ஏ., வள்ளுவர் கோட்டத்தின் புனரமைக்கும் பணிகள் எப்போது முடிவடையும் என கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-

    வள்ளுவர் கோட்டம் அமைப்பதற்காக கடந்த 1974-ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கலைஞரால் அடிக்கல் நாட்டப்பட்டு 1976-ம் ஆண்டு பணிகள் முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

    மேலும், சுமார் 5 ஏக்கர் நில பரப்பளவில் திராவிட கலை மற்றும் பல்லவர் கட்டிடக்கலையுடன் வள்ளுவர் கோட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    கல் தேர் 128 அடி உயரம் கொண்டதாகவும் 67 மீட்டர் நீலம் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    10 ஆண்டுகளாக வள்ளுவர் கோட்டம் பாழடைந்து இருந்த நிலையில் தி.மு.க. அரசு பொறுப்பேற்றவுடன் வள்ளுவர் கோட்டத்தை புனரமைக்க ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    தற்போதுள்ள தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கலையரங்கம், மாற்றுத்திறனாளிகள் நடைபாதை, உணவு கூடம், விற்பனை கூடம், மழை நீர் சேகரிப்பு வசதி, ஒலி ஒளி காட்சி கூடம், நுழைவாயில் புதுப்பிக்கும் பணி உள்ளிட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

    2025-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் பணிகளை முடிக்க வேண்டும். ஆனால் முன்னதாகவே பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம். விரைவில் முதலமைச்சர் புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை திறந்து வைப்பார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • அண்ணா நினைவிடம் புதுப்பிக்கும் பணியும் இப்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • மதுரவாயல்-துறைமுகம் ஈரடுக்கு மேம்பாலத்தை கட்டி முடிக்க வேண்டும் என அரசு உறுதியாக உள்ளது.

    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சென்னை மெரினா கடற்கரை அண்ணா நினைவிட வளாகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

    இந்த கட்டுமானப் பணி கள் 97 சதவீதம் முடிவடைந்துவிட்டது. கருணாநிதி நினைவிடத்துடன் சேர்த்து அண்ணா நினைவிடமும் புதுப்பிக்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டதன் அடிப்படையில், அண்ணா நினைவிடம் புதுப்பிக்கும் பணியும் இப்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ஒரு வாரத்திற்குள் அனைத்து பணிகளும் முடிவடையும். அதன்பின் முதலமைச்சருடன் கலந்தாலோசித்து தேதி பெற்று நினைவிடம் திறக்கப்படும்.

    மதுரவாயல்-துறை முகம் ஈரடுக்கு மேம்பாலம் கட்டுமானத்திற்கு ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. மதுரவாயல்-துறைமுகம் ஈரடுக்கு பாலம் கட்ட ஏற்கனவே மத்திய அரசிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டது. மதுரவாயல்-துறைமுகம் ஈரடுக்கு மேம்பாலத்தை கட்டி முடிக்க வேண்டும் என அரசு உறுதியாக உள்ளது.

    அண்ணா மேம்பாலம் புனரமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. அண்ணா மேம்பாலத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் பூங்கா, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு வருகிறது.

    ஓரிரு மாதங்களில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அண்ணா மேம்பாலத்தை திறந்து வைப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நான் ஒன்றும் வெளிநாட்டில் இருந்து வரவில்லை. இந்த மண்ணுக்கு சொந்தகாரன்.
    • எனது மூத்த மகன் குமரன் தான் சரஸ்வதி அறக்கட்டளையின் தலைவராக உள்ளார்.

    சென்னை:

    தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான சென்னை, திருவண்ணாமலை உள்பட இடங்களில் 5 நாட்கள் நடைபெற்ற வருமான வரி சோதனை நேற்று நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு திருவண்ணாமலையில் உள்ள தனது இல்லத்தில் நேற்று இரவு நிருபர்களிடம் கூறியதாவது:-

    என்னுடைய கோப்புகளை பார்க்கும் உதவியாளர் சுப்பிரமணி மற்றும் எனது டிரைவரிடம் 5 நாட்களாக கேள்வி என்ற பெயரில் வருமான வரித்துறையினர் மன உளைச்சலை உருவாக்கி விட்டார்கள். கண்ணீர் வரவைக்கும் வகையில் கேள்விகளால் துளைத்து விட்டார்கள். நான் தனியாக வசித்து வருகிறேன். எனது மனைவி தனியே வசிக்கிறார். எனது மகன்கள் இருவரும் தனித்தனியே வசிக்கிறார்கள். அனைவருமே வருமான வரியை சரியாக கட்டி வருகிறோம். ஆனால் அனைவரிடமுமே வருமான வரித்துறையினர் கேள்விகளால் துளைத்தெடுத்து மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இறுதியாக நான் தங்கியிருந்த கல்லூரிக்கே வந்து, சல்லடை போட்டு ஆய்வும் நடத்தினார்கள். என்னை தொடர்புபடுத்தி விழுப்புரம், வந்தவாசி, கரூர், கோவை, திருவண்ணாமலையில் பல இடங்களில் சோதனை நடத்தி இருக்கிறார்கள். எல்லோருமே பயந்துபோயிருக்கிறார்கள்.

    வருமான வரித்துறை அதிகாரிகள் மீது எனக்கு கோபம் இல்லை. அம்புதான் இவர்கள். அம்பு விட்டவர்கள் எங்கேயோ இருக்கிறார்கள்.

    இந்த 4 நாட்கள் நடந்த வருமான வரி சோதனை தொடர்பான வெளியாகி உள்ள கற்பனை கதைகளுக்கு பதில் சொல்ல வேண்டிய சூழ்நிலையில் நான் இருக்கிறேன். நான் ஒன்றும் வெளிநாட்டில் இருந்து வரவில்லை. இந்த மண்ணுக்கு சொந்தகாரன். நான் அடிப்படையில் விவசாய வீட்டு பிள்ளையை சேர்ந்தவன் என்பது அனைவருக்கும் தெரியும்.

    சென்னை வந்து படத்தொழிலில் ஈடுபட்டேன். பல திரைப்படங்களுக்கு வினியோகஸ்தராக இருந்தேன். பட தயாரிப்பாளராகவும் ஆனேன். இப்படி நான் ஈட்டிய பணத்தின் மூலம்தான் என்னுடைய தாயார் சரஸ்வதி அம்மாள் என்ற பெயரில் அறக்கட்டளையை 1991-ம் ஆண்டு தொடங்கினேன்.

    இந்த அறக்கட்டளையின் நிறுவனராக இருந்து அதன் மூலம் பல்வேறு கல்வி நிறுவனங்களை நாங்கள் உருவாக்கினோம். இந்த பகுதியில் நாங்கள் தொடங்கிய கல்லூரிகளால் பல என்ஜினீயர்கள் உருவாகி உள்ளனர். தொழிற்புரட்சி ஏற்பட்டது.

    நான் பொதுவாழ்க்கையில் ஒழுக்கத்தை கடைபிடித்துக் கொண்டிருப்பவன்.

    என் வீட்டிலோ, என் மனைவி வீட்டிலோ அல்லது எனது 2 மகன்கள் வீட்டிலோ, கல்லூரி வளாகத்திலோ ஒரு பைசா கூட பறிமுதல் செய்திருந்தால் கூட அதற்கு பொறுப்பேற்று பதில் சொல்வதற்கு நான் தயாராக இருக்கிறேன்.

    எனது மூத்த மகன் குமரன் தான் சரஸ்வதி அறக்கட்டளையின் தலைவராக உள்ளார். எனக்கும் அறக்கட்டளைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனக்குள்ள சொத்து என்றால் 48 ஏக்கர் 33 செண்டு நிலம் இருக்கிறது. காந்திநகரில் உள்ள எனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ஒரு மருத்துவமனைக்காக 33 ஆண்டுகள் லீசுக்கு வழங்கியுள்ளோம். சென்னையில் ஒரு வீடு உள்ளது. இது மட்டும் தான் எனக்கான சொத்து. இதைத்தான் தேர்தல் பிரமாண பத்திரத்திலும் குறிப்பிட்டுள்ளேன்.

    அமைச்சர் பதவிக்கு வந்தபிறகு ஒரு செண்டு நிலம் கூட நான் சொத்தாக சேர்த்துக்கொள்ளவில்லை. ஒவ்வொரு ஆண்டும் வருமான வரித்துறைக்கு எனது வரவு செலவு கணக்கை சரியாக தாக்கல் செய்து வருகிறேன். வருமான வரித்துறையை ஏமாற்றுபவன் அல்ல நான்.

    என்னிடம் மக்கள் மனு அளிக்க வருவது தவறா? என்னுடன் தொடர்புபடுத்தி அவர்கள் அனைவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வருவது நியாயமா?

    பா.ஜ.க.வில் தொழில் அதிபர்களே இல்லையா... அங்கெல்லாம் வருமான வரித்துறை போகிறதா? தி.மு.க. மீது மட்டும் வருமான வரித்துறையினர் ரெய்டுக்கு வருவது ஏன்? இந்த ரெய்டுக்கெல்லாம் நாங்களோ, தி.மு.க.வோ, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினோ பயப்பட போவது கிடையாது. ரெய்டு மூலமாக எங்களை அடக்கிவிட முடியாது. இந்த ரெய்டால் 5 நாட்கள் எனது அரசுப்பணி முடங்கி இருக்கிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிசாவையே பார்த்தவர். அவரது அரவணைப்பில் இருப்பவர்கள் நாங்கள். வருகிற பாராளுமன்ற தேர்தல் தான் எங்களது இலக்கு. அந்த தேர்தலில் 40-க்கு 40 தொகுதிகளை வென்று காட்டுவதே குறிக்கோள். அந்த குறிக்கோளை முன்வைத்தே நாங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது அமைச்சர் எ.வ.வேலுவின் மூத்த மகன் குமரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • 2 கார்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 10-க்கு மேற்பட்டோர் சோதனையில் ஈடுபட்டனர்
    • அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் மணப்பாறை சாமிநாதன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.

    திருச்சி:

    தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருக்கும் எ.வ.வேலு வீடு, அலுவலகங்கள், அவர் தொடர்புடையவர்கள் அலுவலகங்கள் வீடுகளில் கடந்த சில நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    அந்த வகையில் அவருடன் தொடர்பு இருப்பதாக கருதப்படும் திருச்சி தென்னூர் அண்ணா நகர் கண்ணதாசன் சாலை பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் மணப்பாறை சாமிநாதன் வீட்டில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

    2 கார்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 10-க்கு மேற்பட்டோர் இந்த சோதனையில் ஈடுபட்டனர். நிதி நிறுவன அதிபரான சாமிநாதன் காப்பி தூள் ஏஜென்சியாகவும் உள்ளார். சோதனைக்கு பின்னர் சாமிநாதன் குடும்பத்தினரை வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்காக காரில் அழைத்து சென்றனர் சென்றனர்.

    அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் மணப்பாறை சாமிநாதன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.

    ஏற்கனவே கரூர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் 80-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்ட நிலையில் திருச்சியிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • காசாகிராண்ட், ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களிலும் இன்று 5-வது நாளாக சோதனை நடந்தது.
    • அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் தொடர் சோதனை நடந்து வருவது திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வேங்கிக்கால்:

    தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

    சென்னை, திருவண்ணாமலை உள்பட எ.வ.வேலுவுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் பாதுகாப்புடன் வருமானத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    திருவண்ணாமலையில் எ.வ.வேலுவுக்கு சொந்தமான வீடு மற்றும் கல்லூரியிலும் இன்று 5-வது நாளாக வருமான வரி சோதனை நடந்தது.

    இது தவிர காசாகிராண்ட், ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களிலும் இன்று 5-வது நாளாக சோதனை நடந்தது.

    கடந்த வெள்ளிக்கிழமை 3-ந் தேதி முதல் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. எனினும் இதுவரை நடைபெற்ற சோதனையில் கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள் குறித்து எந்த தகவலையும் வருமான வரித்துறை வெளியிடவில்லை.

    அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் தொடர் சோதனை நடந்து வருவது திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான ஆழ்வார்பேட்டை வீட்டில் சோதனை எதுவும் நடைபெறவில்லை.
    • மீனா ஜெயக்குமார் வீடு மற்றும் அருகே வசிக்கும் அவரது மகன் ஸ்ரீராம் வீடுகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    சென்னை:

    தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று தொடர்ந்து 4-வது நாளாக வருமான வரி சோதனை நடந்தது.

    சென்னை, திருவண்ணாமலையில் உள்ள அவரது வீடு, கல்லூரிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    சென்னை கிண்டியில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சிறப்பு விருந்தினர் மாளிகையில் கடந்த 3 நாட்களாக அதிகாரிகள் சோதனை நடத்தினர். அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான ஆழ்வார்பேட்டை வீட்டில் சோதனை எதுவும் நடைபெறவில்லை.

    இது தவிர காசாகிராண்ட், அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் இன்று சோதனை நடந்தது. மேலும் கோவையில் உள்ள அமைச்சரின் நெருக்கமான பிரமுகர் ஒருவர் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.

    எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை 3-ந் தேதி முதல் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    எனினும் இதுவரை நடைபெற்ற சோதனையில் கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள் குறித்து எந்த தகவலையும் வருமான வரித்துறை வெளியிடவில்லை.

    சோதனையின் முடிவில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த தகவலை வருமான வரித்துறை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பொதுப்பணி ஒப்பந்ததாரர் வீடுகள் அலுவலகங்கள், பிரபல கட்டுமான நிறுவனங்கள், ரியல் எஸ்டேட், காசா கிராண்ட் ஆகியவற்றிலும், கரூரில் உள்ள தி.மு.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ.வான வாசுகி முருகேசன் சகோதரி பத்மா வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

    எனினும் அதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவும் எ.வ.வேலு வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவு மாநில துணை செயலாளராக இருப்பவர் மீனா ஜெயக்குமார். இவர் தனது குடும்பத்தினருடன் கோவை நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள பார்சன் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி இவரது வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவதற்காக 2 கார்களில் வந்தனர்.

    மீனா ஜெயக்குமார் வீடு மற்றும் அருகே வசிக்கும் அவரது மகன் ஸ்ரீராம் வீடுகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதே போல் சவுரிபாளையத்தில் உள்ள ஸ்ரீராமின் அலுவலகத்திலும் சோதனை நடந்தது.

    இதேபோல் சிங்காநல்லூரில் உள்ள தி.மு.க. பிரமுகர் எஸ்.எம்.சாமி வீட்டிலும் சோதனை நடந்தது. சோதனை முடிவுக்கு பிறகு எஸ்.எம்.சாமியை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

    இதுதவிர சிங்காநல்லூர் அடுத்த கள்ளிமடையில் உள்ள காசா கிராண்ட் முன்னாள் இயக்குனர் செந்தில்குமார் வீடு, சவுரி பாளையத்தில் உள்ள காசா கிராண்ட் அலுவலகத்திலும் வருமான வரித்துறை சோதனை நடந்தது.

    இதில் மீனா ஜெயக்குமார் மகன் ஸ்ரீராம் மற்றும் தி.மு.க. பிரமுகர் எஸ்.எம்.சாமி வீட்டில் சோதனை நிறைவடைந்து விட்டது.

    மற்ற இடங்களில் 3 நாட்களை கடந்து சோதனை சென்று கொண்டிருக்கிறது.

    இன்று 4-வது நாளாக மீனா ஜெயக்குமார் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

    சோதனையின்போது வீட்டில் இருந்து பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக தெரிகிறது. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் வீட்டில் இருப்பவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    இதேபோல் சவுரிபாளையத்தில் உள்ள மீனா ஜெயக்குமாரின் மகன் ஸ்ரீராம் அலுவலகத்திலும் 4-வது நாளாக சோதனை நடந்தது.

    சிங்காநல்லூர் கள்ளிமடையில் உள்ள காசா கிராண்ட் முன்னாள் இயக்குனர் செந்தில்குமார் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. அவரது வீட்டிலும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு விசாரணை நடந்தது.

    இதேபோல் சவுரிபாளையத்தில் உள்ள காசா கிராண்ட் அலுவலகத்திலும் 4-வது நாளாக சோதனை நீடிக்கிறது.

    சோதனை நடைபெறும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை 3-ந் தேதி முதல் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
    • கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவும் எ.வ.வேலு வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது.

    வேங்கிக்கால்:

    தமிழக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் அமைச்சர் எ.வ.வேலு வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று தொடர்ந்து 4-வது நாளாக வருமான வரி சோதனை நடந்தது.

    சென்னை, திருவண்ணாமலையில் உள்ள அவரது வீடு, கல்லூரிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை 3-ந் தேதி முதல் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    எனினும் இதுவரை நடைபெற்ற சோதனையில் கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள் குறித்து எந்த தகவலையும் வருமான வரித்துறை வெளியிடவில்லை.

    சோதனையின் முடிவில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த தகவலை வருமான வரித்துறை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பொதுப்பணி ஒப்பந்தாரர் வீடுகள் அலுவலகங்கள், பிரபல கட்டுமான நிறுவனங்கள், ரியல் எஸ்டேட், காசா கிராண்ட், ஆகியவற்றிலும், கரூரில் உள்ள தி.மு.க.வின் முன்னாள் எம்.எல்.ஏவான வாசுகி முருகேசன் சகோதரி பத்மா ஆகியோரின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

    எனினும் அதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவும் எ.வ.வேலு வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்தது.

    • அமைச்சர் எ.வ. வேலு தொடர்புடைய பல்வேறு இடங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
    • 3 வாகனங்களில் வந்த சுமார் 10 அதிகாரிகள் 4 குழுக்களாக பிரிந்து சென்று துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    கரூர்:

    தமிழக பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தொடர்புடைய பல்வேறு இடங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    அந்த வகையில் அமைச்சருக்கு தொடர்புடைய கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் பகுதியில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் கரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் வாசுகி முருகேசனின் சகோதரி பத்மா வீட்டில் இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    மேலும் காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள அனைத்து அனெக்ஸ் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான நிதி நிறுவன அலுவலகம், வையாபுரி நகர் பகுதியில் அமைந்துள்ள அவரது வீடு ஆகிய இடங்களிலும், தோட்டக்குறிச்சி பகுதியில் உள்ள தி.மு.க. முன்னாள் சேர்மன் சக்திவேல் என்பவரது வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    3 வாகனங்களில் வந்த சுமார் 10 அதிகாரிகள் 4 குழுக்களாக பிரிந்து சென்று துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர் எ.வ.வேலு கரூரில் நிதிநிறுவனத்தில் முதலீடு செய்தது தொடர்பாக வெளியான தகவலின் பேரில் இந்த சோதனை நடந்ததாக தெரிகிறது.

    இந்த சோதனை கரூர் மாவட்டத்தில் கட்சியினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • அருணை மருத்துவக் கல்லூரி, அருணை பொறியியல் கல்லூரி, கம்பன் கலைக்கல்லூரியில் சோதனை நடந்தது.
    • சோதனை நடந்தபோதிலும் அமைச்சர் எ.வ.வேலுவின் கல்லூரிகள் வழக்கம்போல் செயல்பட்டன.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமானவரித் துறையினர் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

    அருணை மருத்துவக் கல்லூரி, அருணை பொறியியல் கல்லூரி, கம்பன் கலைக்கல்லூரியில் சோதனை நடந்தது.

    உள்ளூர் போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சோதனை நடந்தபோதிலும் அமைச்சர் எ.வ.வேலுவின் கல்லூரிகள் வழக்கம்போல் செயல்பட்டன.

    கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மட்டும் அடையாள அட்டையை சரிபார்த்த பின்பு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.

    • சென்னையில் தி.நகர், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் சோதனை
    • திருவண்ணாமலையில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது

    தமிழக பொதுப்பணித்துறை அமைச்சராக இருப்பவர் எ.வ.வேலு. இவரது வீடு, கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமாக திருவண்ணாமலையில் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் அருணை என்ஜினீயரிங் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, கம்பன் கலைக் கல்லூரி ஆகியவை ஒரே இடத்தில் இயங்கி வருகின்றன.

    இந்த கல்லூரிகள் செயல்பட்டு வரும் வளாகத்திலேயே எ.வ. வேலுவின் வீடு மற்றும் முகாம் அலுவலகம் ஆகியவையும் உள்ளன. இந்த நிலையில் அருணை என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் உள்ள 3 கல்வி நிறுவனங்கள், அமைச்சர் எ.வ. வேலுவின் வீடு, அலுவலகம் என 5 இடங்களிலும் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    காலை 6 மணி அளவில் 10 கார்களில் சென்ற 30-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அருணை என்ஜினீயரிங் கல்லூரி உள்பட கல்வி நிறுவனங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர். கல்வி நிறுவனங்களில் மாணவ- மாணவிகளிடம் இருந்து பெறப்பட்ட கல்வி கட்டணங்கள் எவ்வளவு? என்பது பற்றி கம்ப்யூட்டர்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

    கல்வி நிறுவனங்கள் சார்பில் முறையாக வருமான வரி கட்டப்பட்டு உள்ளதா? என்பது பற்றியும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த கல்லூரிகளில் வரி ஏய்ப்பு நடைபெறுவதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரிலேயே வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். துப்பாக்கி ஏந்திய மத்திய போலீஸ் பாதுகாப்புடன் சோதனை நடைபெற்று வருகிறது.

    இதேபோன்று சென்னை, கோவை, கரூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அமைச்சர் எ.வ. வேலுவுக்கு தொடர்புடையதாக கருதப்படும் இடங்களிலும் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது. மொத்தம் 80 இடங்களில் வருமானவரி சோதனை நடந்து வருகிறது. சென்னையில் வேப்பேரி, தி.நகர், கீழ்ப்பாக்கம், அண்ணாநகர், அண்ணா சாலை உள்ளிட்ட இடங்களிலும் வருமானவரி அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சென்னையில் உள்ள கட்டுமான நிறுவனங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. 2 கட்டுமான நிறுவனங்களில் ஒரு நிறுவனத்துக்கு சொந்தமாக தி.நகர் பகுதியில் 2 நட்சத்திர ஓட்டல்கள் உள்ளன. இங்கும் வருமானவரித்துறை அதிகாரிகள் 8 பேர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    80 இடங்களில் நடத்தப்படும் சோதனையில் சுமார் 50 சதவீத இடங்கள் பொதுப் பணித்துறை ஒப்பந்ததாரர்களுக்கு சொந்தமான இடங்களாகும். ஒப்பந்ததாரர்களுக்கு சொந்தமான 40 இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ஆவணங்களை சரிபார்த்தனர்.

    பொதுப்பணித்துறையின் கீழ் நடைபெறும் பல்வேறு கட்டிட பணிகளை இந்த ஒப்பந்ததாரர்கள்தான் மேற்கொண்டு வருகிறார்கள். அதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதா? அவர்கள் வரிஏய்ப்பில் ஈடுபட்டுள்ளார்களா? என்பது பற்றியும் அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

    • விருந்து கொடுப்பது எ.வ.வேலுவுக்கு புதிதல்ல.
    • தம்பியும் சீக்கிரம் தீவிர அரசியலுக்கு வரும் என்று உடன் பிறப்புகள் உற்சாகமாக பேசிக் கொண்டார்கள்.

    கட்சி கூட்டத்தை கழக கல்யாணம் போல் நடத்திவிட்டார். அமைச்சர் எ.வ வேலு என்பதுதான் இப்போது தி.மு.க.வில் நடக்கும் பேச்சு தி.மு.க. பாக பொறுப்பாளர்கள் கூட்டத்தை வடக்கு மண்டலத்தில் அமைச்சர் எ.வ.வேலு பொறுப்பு ஏற்று திருவண்ணாமலையில் நடத்தினார்.

    இதுதான் இப்போது பேசு பொருளாகி இருக்கிறது மொத்தம் 14000 நிர்வாகிகள்.... அவர்களுக்காக செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் தான் அடேயப்பா என்று எல்லோரையும் பிரமிக்க வைத்தது. பாக பொறுப்பாளர் மாநாட்டுக்கு சற்றும் குறையாத வகையில் நளபாக பொறுப்பாளர் மாநாடு என்று சொல்லும் வகையில் உணவு கூடமும் பிரமிக்க வைத்தது மாவட்டம், தொகுதி, பாகம் என்று தனித்தனியாக விருந்து கொடுக்கப்பட்டது. முன்னதாக அனைவருக்கும் தாம்பூல பை கொடுக்கப்பட்டது. அதில் குடி தண்ணீர் பாட்டில், பென், நோட்டு, ஸ்நாக்ஸ் இருந்தது.

    சாப்பாட்டில் மட்டன் பிரியாணி முதல் வகை வகையான சைவ உணவு வரை இடம் பெற்று இருந்தது. எல்லாமே 'அன்லிமிடெட்' தான்.

    இந்த மாதிரி விருந்து கொடுப்பது எ.வ.வேலுவுக்கு புதிதல்ல. அவ்வப்போது கட்சிக்காரர்களுக்கு சோறு போட்டு வளர்த்து வைக்கிறார் என்று நகைக்சுவையாக சொல்வதுண்டு.

    இந்த கல்யாண வைபோகத்தில் ஹைலைட் எ.வ.வேலு மகன் கம்பன் தான். பம்பரமாக சுழன்று கொண்டிருந்த அவர் கட்சியினர் பார்வையை அடிக்கடி கவர்ந்தார்.

    தம்பியும் சீக்கிரம் தீவிர அரசியலுக்கு வரும் என்று உடன் பிறப்புகள் உற்சாகமாக பேசிக் கொண்டார்கள்.

    • தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் கட்டுமான பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
    • தமிழர்களின் வீர விளையாட்டை அடையாளப்படுத்தவும், பெருமைப்படுத்தவும் இந்த விளையாட்டு மைதானம் கட்டப்பட்டு வருகிறது.

    அலங்காநல்லூர்:

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு மைதான பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழர்களின் வீர விளையாட்டின் அடையாளமான ஜல்லிக்கட்டுக்கு மைதானம் அமைய வேண்டும் என முதல்-அமைச்சர் சட்டசபையில் அறிவித்தபடி 66 ஏக்கர் பரப்பளவில் ரூ.44.6 கோடி மதிப்பீட்டில் திட்ட பணிகள் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் முழுவதுமாக நிறைவு பெறும். பணிகள் தொடங்கிய நாள் முதல் தொடர்ந்து 4-வது முறையாக மைதான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறேன்.

    இதுவரை 35 சதவீதம் பணிகள் முடிவு பெற்றுள்ளது. தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் கட்டுமான பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    தற்போது மைதான நுழைவு வாயில் வளைவு, மழைநீர் வடிகால் வசதி, செயற்கை புல் தரை, குடிநீர் வசதி, 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டி, வீரர்கள், உரிமையாளர்கள் ஓய்வு ஆறை, மருத்துவ வசதி, கால்நடை மருத்துவ வசதி, உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

    குறிப்பிட்ட நாளில் பணிகள் நிச்சயம் முடிவு பெறும். மைதானத்திற்கு விரைந்து வர புதிதாக சாலை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக ரூ.22 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இடையிடையே பாலங்கள் அமைக்கப்பட உள்ளது. அனைத்து பணிகளும் முழுமையாக முடிவு பெற்ற பின்னரே இந்த மைதானம் திறக்கப்படும். புதிய சாலை அமைக்கும்போது தனியார் நிலங்களும் கையகப்படுத்த வேண்டிய சூழல் உள்ளது. எனவே அதற்கான பணிகளும் விரைவில் நடைபெற உள்ளது.

    வழக்கம் போல் நடைபெறும் ஜல்லிக்கட்டுகள் ஆங்காங்கே வழக்கம்போல் நடக்கும். தமிழர்களின் வீர விளையாட்டை அடையாளப்படுத்தவும், பெருமைப்படுத்தவும் இந்த விளையாட்டு மைதானம் கட்டப்பட்டு வருகிறது. தி.மு.க. அரசை மக்கள் பாராட்டி கொண்டுதான் இருக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் விமர்சித்தால் அதைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக இந்த ஆய்வின்போது மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலுவலர்கள், பணியாளர்கள் உடனிருந்தனர்.

    ×