search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆலங்கட்டி மழை"

    • மழை கிட்டத்தட்ட 45 நிமிடம் வரை நீடித்தது. சூறாவளி காற்றால் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.
    • கொங்கலம்மன் வீதியில் மழை நீருடன் கழிவு நீர் சென்றதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி வந்தது. தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேல் 100 டிகிரி வெயில் பதிவாகி வந்ததால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று காலை முதல் மாலை வரை வழக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. மாலை 5.30 மணி அளவில் கரு மேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது. பின்னர் சிறிது நேரத்தில் பயங்கர சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை கிட்டத்தட்ட 45 நிமிடம் வரை நீடித்தது. சூறாவளி காற்றால் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.

    இதேபோன்று மரங்களும் வேரோடு சாய்ந்தன. விளம்பர தட்டிகள், பேனர்கள் காற்றில் அடித்து செல்லப்பட்டன. பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் மின்தடையும் ஏற்பட்டது.

    ஈரோடு புதுமை காலனியில் உள்ள பழமையான மரம் வேரோடு சாய்ந்து அங்கிருந்த காளியம்மன் கோவில் கோபுரத்தில் விழுந்தது. இதில் கோபுரம் சேதம் அடைந்தது. மரக்கிளைகள் அங்கிருந்த டீ கடை மீது விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதேப்போல் ஈரோடு ஐஸ்வர்யா ஓட்டல் அருகே இருந்த மரம், பெரியண்ணா வீதியில் ஒரு மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது.

    மூலப்பட்டறையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பெரியார் நகர் மற்றும் ஏ.பி.சி, மருத்துவமனை பகுதியில் தலா ஒரு மரம் விழுந்தது. ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள சிறிய மரம் ஒன்று விழுந்தது. பழைய மோப்பநாய் பிரிவு பகுதியில் இருந்த மரக்கிளை முறிந்து விழுந்தது.

    இதேபோல் அந்த பகுதியில் உள்ள பல்வேறு மரக்கிளைகள் முடிந்து விழுந்தன. ஈரோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. ஈரோடு தாலுகா அலுவலகத்திலும் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. மணிக்கூண்டு எல்லை மாரியம்மன் கோவில் அருகே இருந்த பழமையான மரம் கீழே விழுந்தது. ஈரோடு அண்ணாமலை லேஅவுட் பகுதியில் வேருடன் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதேபோல் ஈரோடு கால்நடை மருத்துவமனை ரோட்டில் சுவர் இடிந்து விழுந்தது. ஈரோடு கொங்கலம்மன் வீதியில் மழை நீருடன் கழிவு நீர் சென்றதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளுக்காக குழிகள் தோண்டப்பட்டு இருந்தன. நேற்று மழை பெய்த கனமழையால் குழிகளில் மழைநீர் தேங்கி நின்றது. ஒரே நாளில் மட்டும் 15-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. 100-க்கும் மேற்பட்ட மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இதனால் பல்வேறு இடங்களில் மின் தடையும் ஏற்பட்டது. இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் மற்றும் ஈரோடு மாநகராட்சி பணியாளர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். ரோட்டில் விழுந்து கிடக்கும் மரம் மரக்கிளைகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர்.

    இதேபோல் நேற்று மாலை மழை பெய்து கொண்டிருந்தபோது ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து 55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பஸ்சில் ஏறி தீயணைப்பு நிலைய பஸ் நிறுத்தத்தில் இறங்கினார்.

    அப்போது பலத்த மழை பெய்து கொண்டிருந்ததால் அங்கு இருந்த சாக்கடை கால்வாய் முழுவதும் தண்ணீர் சென்று கொண்டிருந்தது. இதை கவனிக்காத அவர் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்தார்.

    இதுகுறித்து ஈரோடு தீயணைப்பு நிலத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு உடனடியாக வந்து கழிவுநீர் கால்வாயில் விழுந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே அந்த நபர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து சூரம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 45 நிமிடம் பெய்த மழையால் ஈரோடு மாநகரம் ஸ்தம்பித்தது.

    இதேப்போல் கவுந்தப் பாடி, மொடக்குறிச்சி, கோபி போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. ஈரோட்டில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    ஈரோடு-40, கவுந்தப்பாடி-26.80, மொடக்குறிச்சி-9, கோபி-4.20, சென்னிமலை, அம்மாபேட்டை-3 பெருந்துறை-2.

    • தீர்த்தமலை, ஆண்டியூர், மொண்டுக்குளி பகுதிகளில் ஆலங்கட்டி மலையும் பெய்தது.
    • கூரை வீடுகள் ஓட்டு வீடுகள் சேதமடைந்தது.

    தருமபுரி,

    தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை முதல் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

    தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆங்காங்கே மழை பெய்தது. பின்னர் வெயில் வாட்டி வந்த நிலையில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. மாலை நேரத்தில் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் அரூர் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்று இடி மின்னலுடன் கனமழை பெய்தது. தீர்த்தமலை, ஆண்டியூர், மொண்டுக்குளி பகுதிகளில் ஆலங்கட்டி மலையும் பெய்தது. இதனால் கூரை வீடுகள் ஓட்டு வீடுகள் சேதமடைந்தது.

    • பல நாட்களாக வெயிலில் வாட்டி வதைத்த வெப்பம் தணிந்து சில்லென்று காற்று வீசியது
    • ஏராளமான மின்கம்பங்கள் சாய்ந்தன

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பகல் நேரங்களில் கடுமையான வெப்பம், சுட்டெரித்தது.

    அனல் காற்று வீசியது, வயதானவர்கள் பெண்கள் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர மிகவும் அச்சப்பட்டனர், இதேபோல் இரவு நேரங்களிலும் வெப்பக் காற்று வீசியது.

    இந்நிலையில் நேற்று மாலை குடியாத்தத்தில் சுமார் அரை மணி நேரம் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது.

    குடியாத்தம் அடுத்த பரதராமி பகுதியில் ஒரு மணி நேரம் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இந்திரா நகர் பகுதியில் ஏராளமான மின்கம்பங்கள் சாய்ந்தன. வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தது பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன.

    அதேபோல் குடியாத்தம் சுற்றுப்புற கிராமங்களான கல்லப்பாடி, சைனகுண்டா உள்ளிட்ட கிராம பகுதிகளிலும் மாலை மழை பெய்தது. இதனால் பல நாட்களாக வெயிலில் வாட்டி வதைத்த வெப்பம் தணிந்து சில்லென்று காற்று வீசியது. பொதுமக்கள் மகிச்சியடைந்தனர்.

    • அரை மணி நேரத்திற்கும் மேலாக இந்த மழை நீடித்தது.
    • 10க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் சேதம் அடைந்தன.

    கோவை,

    கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கடுமையான வெயில் கொளுத்தி வந்தது. இதனால் மக்கள் பெரும் சிரமம் அடைந்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று காலை முதலே கோவை மாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெயில் குறைந்து மிதமான கால நிலையே நிலவி வந்தது.

    அவ்வப்போது லேசான வெயில் அடித்தாலும், வானம் மேகமூட்டத்துடனேயே காணப்பட்டது. இதனால் எப்போது வேண்டுமானலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்த நிலையில் மாலையில் கோவை மாநகர் பகுதிகளில் திடீரென இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. அரை மணி நேரத்திற்கும் மேலாக இந்த மழை நீடித்தது.

    காந்திபுரம், ராமநாதபுரம், பீளமேடு, கலெக்டர் அலுவலகம், உக்கடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழை கொட்டியது. இதில் காந்திபுரம், ராமநாதபுரம் பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது.

    இந்த மழையால் அவினாசி சாலை, சத்தி சாலை, திருச்சி சாலை, ரெயில் நிலைய சாலை, அரசு ஆஸ்பத்திரி சாலை உள்பட நகரின் முக்கிய சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.இதனால் சாலையில் சென்ற வாகனங்கள் ஊர்ந்தபடியே சென்றன.மழை காரணமாக கோவை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் தண்ணீர் தேங்கியது. ஆம்புலன்ஸ் வாகனங்கள் தேங்கிய நீரில் சிக்கி வெளியே வர முடியால் தவித்தது.

    அவினாசி ரோடு லட்சுமில் பகுதி, அரசு ஆஸ்பத்திரி லங்கா கார்னர் பகுதி உள்பட பல்வேறு இடங்களில் சாக்கடை நீர் கழிவுநீருடன் கலந்து தண்ணீர் கருப்பாக ஓடியது. இதனால் அந்த பகுதிகள் சேறும், சகதியுமாக மாறியது.

    லங்கா கார்னர், குட் சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தண்ணீரை அகற்றிய பிறகு போக்குவரத்து சீரானது.

    இந்த மழைக்கு கலெக்டர் அலுவலகத்தில் நின்றிருந்த மூங்கில் மரம், உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள ஒரு மரம் முறிந்து விழுந்தது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் மரத்தை அப்புறப்படுத்தினர்.

    அன்னூர் அடுத்த தெலுங்குபாளையத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டியது. இந்த மழையால் தெலுங்கு பாளையம், பிள்ளையப்பம் பாளையம் பகுதிகளில் ஓட்டு வீடுகள், சிமெண்ட் சீட் வீடுகள், குடிசை வீடுகள் என 10க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் சேதம் அடைந்தன.

    மேலும் சில இடங்களில் வீடுகள் மீது மரங்கள் முறிந்து விழுந்தன. சாலை யோரத்தில் மின் கம்பங்களும் முறிந்து விழுந்ததால் மின்வினியோகம் பாதிக்கப்பட்டது.

    • விவசாயிகள் மகிழ்ச்சி
    • 2 நாட்களாக பெய்து வருகிறது

    நெமிலி:

    நெமிலி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மேகமூட்டத்துடன் கூடிய கன மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று வரலாறு காணாத அளவில் எதிர்பாராத விதமாக ஆலங்கட்டி மழை பெய்தது.

    இதனால் அப்பகுதியில் உள்ளவர்கள் வியந்து பார்த்தனர். மேலும் இந்த ஆலங்கட்டி மழை பெய்யும் போது விவசாய நிலத்தில் வேலை செய்தவர்கள் கற்களை கொண்டு எறிவது போல உடம்பின் மீது ஆலங்கட்டி விழுந்ததாக அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

    இது போன்ற பெரிய அளவிலான ஆலங்கட்டி மழை இதற்கு முன் பார்த்தது இல்லை என பெரும்பாலானோர் கூறினர். இந்த எதிர்பாராத மழையால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    • மரம் விழுந்து கோவில் இடிந்தது
    • போக்குவரத்து பாதிப்பு

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் சுற்றுப்புற கிராமங்களில் இன்று அதிகாலை 2 மணி அளவில் பலத்த சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.

    அப்போது வேகமான சூறாவளி காற்று வீசியது. அப்போது மின்தடை ஏற்பட்டது சுமார் ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழையால் குடியாத்தம் நகரில் காட்பாடி ரோட்டில் பல மரங்களும் நகரின் முக்கிய பகுதிகளான கொச அண்ணாமலை தெரு, ராஜாஜிதெரு உள்ளிட்ட தெருக்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து போக்குவரத்து தடை ஏற்பட்டது.

    காமராஜர் பாலத்தில் ஒரு அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி இருந்தது தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது. இதுகுறித்து நள்ளிரவே தகவல் அறிந்ததும் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, நகர் மன்ற தலைவர் எஸ்.சௌந்தரராஜன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப் இன்ஸ்பெக்டர் யுவராஜ், நகர்மன்ற உறுப்பினர்கள் பி.மேகநாதன், எம்.எஸ். குகன் உள்பட நகராட்சி ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்கள், காவல்துறையினர் காட்பாடி ரோட்டில் விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி சாலையில் சாய்ந்த ராட்சத மரங்களை அகற்றினார்கள். மேலும் சாலையில் சரிந்து கிடந்த மின் கம்பங்களை ஒதுக்கி வைத்தனர்.

    அதேபோல் கொச அண்ணாமலை தெரு, ராஜாஜி தெரு பகுதியில் சாய்ந்த மரங்களையும் ஜேசிபி எந்திரங்கள் மூலம் கொட்டும் மழையும் பொருட்படுத்தாமல் நகர மன்ற தலைவர் சௌந்தர்ராஜன் முன்னிலையில் அகற்றினார்கள்.

    அதேபோல் குடியாத்தம்- சித்தூர் செல்லும் சாலையில் பாக்கம் பகுதியில் சாலையின் நடுவே இரு பக்கத்திலும் இருந்த ஏராளமான புளிய மரங்கள் சாய்ந்தன பாக்கம் கிராமத்தில் 15-க்கும் அதிகமான வீடுகளில் மீது மரங்கள் சாய்ந்தன.

    பாக்கம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இருந்த 4 மரங்கள் சாய்ந்து சுற்று சுவரை சேதப்படுத்தியது. ஏராளமான மின்கம்பங்களை சாய்த்தது தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு நள்ளிரவே விரைந்து வந்த குடியாத்தம் உதவி கலெக்டர் வெங்கட்ராமன், ஒன்றிய குழு தலைவர் என்.இ. சத்யானந்தம், தாசில்தார் விஜயகுமார், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபாரதி மணவாளன், ஒன்றிய குழு உறுப்பினர் சுரேஷ்குமார் உள்பட மின்வாரிய ஊழியர்கள், காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர், கிராம மக்கள் ஏராளமானோர் மீட்பு பணியில் ஈடுபட்டனர் பல மணி நேரம் ஜேசிபி எந்திரங்கள் கொண்டு சாலையில் கிடந்த மரங்களை அப்புறப்படுத்தினர்.

    25-க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் சேதமடைந்த மின் கம்பங்களையும் மின்கம்பிகளையும் கடும் சிரமத்திற்கிடையே கொட்டும் மழையில் அப்புறப்படுத்தினர்.

    அதேபோல் குடியாத்தம் பலமநேர் சாலையில் சாய்ந்த மரங்களையும் ஜேசிபி எந்திரங்கள் கொண்டு அகற்றினார்கள். 4 மணிநேரத்திற்கு பிறகு போக்குவரத்து சீரானது, குடியாத்தம் சித்தூர் சாலையில் 3 மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சீரானது குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் திரும்பிய திசையெல்லாம் மரங்களும் சாய்ந்தும், வீடுகளுக்கு பெருத்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த கனமழையால் குடியாத்தம் ஒன்றிய பகுதியில் மட்டும் 50க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் ஆகியிருக்கும் என கூறப்படுகிறது.

    கோவில் இடிந்தது

    குடியாத்தம் அடுத்த உப்பரப்பள்ளி கிராமத்தில் மரம் சாய்ந்து விழுந்ததில் கோவில் இடிந்தது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

    ஒரு மணி நேரம் கொட்டிய சூறை காற்று கனமழையால் பல இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது.

    இன்று அதிகாலை 2 மணி முதல் காலை 10 மணி வரை மின்சாரம் வரவில்லை மின்சாரம் வர இன்னும் பல மணி நேரம் ஆகும் எனவும் சில கிராமப்புற பகுதிகளில் சில நாட்கள் ஆகும் எனவும் கூறப்படுகிறது.

    வேலூர்

    வேலூரில் நேற்று இரவு சுமார் 2 மணியளவில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து லேசான மழை பெய்ய தொடங்கியது. படிப்படியாக மழையின் அளவு அதிகரித்து இடி, மின்னலுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. வேலூர், காட்பாடி, சத்துவாச்சாரி, வேலப்பாடி, சாய்நாதபுரம், சங்கரன் பாளையம், தொரப்பாடி, பாகாயம், கொணவட்டம் உள்ளிட்ட இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.

    மழை அளவு. மி.மீட்டரில் வருமாறு:-

    வேலூர் 21.8, காட்பாடி 23, குடியாத்தம் 52, பேர்ணாம்பட்டு 1.5, கே.வி.குப்பம் 43, பொன்னை 19.

    குடியாத்தம் பகுதியில் விவசாயிகள் ஏராளமான ஏக்கரில் தென்னை மரங்களை வைத்துள்ளனர். மேலும் வாழை மரங்களும் நெற்பயிர்களும், மா மரங்களும் ஏராளமாக உள்ளன இன்று அதிகாலை அடித்த சூறைக்காற்றால் பாக்கம், சேம்பள்ளி, உப்பிரபல்லி, தட்டப்பாறை, பரதராமி, சைனகுண்டா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சாய்ந்தன நூற்றுக்கணக்கான தென்னை மரங்கள் சாய்ந்தன. ஏராளமான மாமரங்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டது இந்த மழையால் பல லட்சம் ரூபாய் அளவில் விவசாயிகளுக்கு சேதம் ஏற்படுத்தியிருக்கும் என கூறப்படுகிறது.

    • காலை முதலே கருமேகங்கள் சூழ்ந்து மழை வருவதற்கான அறிகுறி தென்பட்டது.
    • மதியம் 2 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் சூளகிரி பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வந்தது.

    அதிக வெயில் காரணமாக பகல் நேரங்களில் மக்கள் வெளியில் செல்லவே அச்சப்பட்டனர். இரவில் புழுக்கம் காரணமாக தூங்க முடியாமல் அவதியடைந்தனர். இந்த நிலையில் ஓசூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதலே கருமேகங்கள் சூழ்ந்து மழை வருவதற்கான அறிகுறி தென்பட்டது.

    இதையடுத்து மதியம் 2 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. ஓசூரில் மிதமான மழையும், சூளகிரி பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழையும் பெய்தது.

    மேலும் புக்கசாகரம், அனுமந்தபுரம் ஆகிய இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. பின்னர் விட்டு, விட்டு பரவலாக இரவு வரை மழை பெய்தவாறு இருந்தது. மழையை தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இரவில் நிம்மதியாக தூங்கினர்.

    ×