search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "quality"

    • உரிமம் பெறாத நிறுவனங்களை கட்டுப்படுத்த வேண்டும்.
    • தரமான பால் உற்பத்தியை அதிகப்படுத்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் பால்வளத்துறை சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசீலன், எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன் ரகுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை தாங்கினார். அவர் பேசியதாவது:-

    மாவட்ட அளவிலான ஆலோசனை குழு மூலமாக ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் செய்யும் இடங்களில், உரிமம் பெறாத நிறுவ னங்கள் பால் கொள்முதல் செய்வதை கட்டுப்படுத்தி டவும் மற்றும் உரிமை பெறாத தனியார் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை யாளர்களை தடை செய்திட வும், தரமான பால் உற்பத்தி யினை அதிகப்படுத்திடவும் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.

    இக்குழுக்களில் மாவட்டத்திற்கு உட்பட்ட சில முக்கிய துறைகள் சார்ந்த அலுவலர்களை குழு உறுப்பினர்களாக உள்ளடக்கி மாவட்ட அளவி லான ஆலோசனை குழுக்கள் உருவாக்கி பணி களை மேற்கொள்ள வேண்டும். மேலும் இந்த குழுவின் மூலம் இப்பணி களை மேற்கொள்ளப்படு வதை மாத ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி உறுதி செய்திட வேண்டும்.

    மேலும் தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு அதிக அளவிலான கறவை மாடுகள் வழங்கப்பட உள்ளது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள மேய்ச்சல் நிலங்களை மீட்டெடுத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் உணவு பாதுகாப்பு துறை இணைந்து பாலில் கலப்படம் செய்வதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சில தனி யார் நிறுவனங்கள் தங்களது பால்கோவா தயாரிப்பில் அரசு தயாரிப்பு என குறிப்பிடுவது தனியா ருக்கு உரிமை இல்லை. ஆவின் நிறுவனம் மட்டுமே அரசு தயாரிப்பு என குறிப்பிட உரிமை உண்டு.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    பின்னர் சூலக்கரையில் அமைந்துள்ள பால் குளி ரூட்டும் நிலையம் மற்றும் ரூ.36 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் கால்நடை தீவன உற்பத்தி நிலையத்தையும் அமைச்சர் நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

    இக்கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் செந்தில்குமார், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் கோவில்ராஜா, உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வராஜ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பாண்டிசெல்வம், ஆவின் பொது மேலாளர் ஷேக் முகம்மது ரபி, துணை பதிவாளர்(பால்வளம்) நவராஜ் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பாலின் எடை அளவு குறைவதால் நுகர்வோர் மட்டுமின்றி, பால் உற்பத்தியாளர்கள் பாதிக்கின்றனர்.
    • பெரும்பாலான பகுதிகளில் பாலின் தரம் மற்றும் எடையை சோதனை செய்து அதற்குரிய ரசீது வழங்கப்படுவதில்லை.

    உடுமலை:

    உடுமலை, பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதி விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் பால், ஆவின் மற்றும் தனியார் கொள்முதல் நிலையங்களுக்கு அளிக்கப்படுகிறது. மக்களுக்கும் நேரடியாக பால் விற்பனை செய்யப்படுகிறது.ஆனால் பெரும்பாலான பகுதிகளில் பாலின் தரம் மற்றும் எடையை சோதனை செய்து அதற்குரிய ரசீது வழங்கப்படுவதில்லை. பாலின் எடை அளவு குறைவதால் நுகர்வோர் மட்டுமின்றி, பால் உற்பத்தியாளர்கள் பாதிக்கின்றனர்.

    அதேநேரம் பாலின் தரத்தை கண்டறியும் வகையில் இமெட் எனும் எலக்ட்ரானிக் மில்க் அடல்ட்ரேஷன் டெஸ்ட் கருவிகளை இத்தகைய இடங்களில் பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

    அதிக அளவில் பால் உற்பத்தி மற்றும் கொள்முதல் செய்யப்படும் இடங்களை தேர்வு செய்து அங்குள்ள பொது இடங்களில் உணவு பாதுகாப்பு துறையால் இமெட் கருவி வைக்க வேண்டும்.அதன் வாயிலாக, நுகர்வோர் அனைவரும் பாலின் தரத்தை இலவசமாக பரிசோதிக்கலாம். ஏற்கனவே இக்கருவிகள் சில இடங்களில் வைக்கப்பட்டது. ஆனால் கருவியின் பயன்பாடு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு இல்லை.பெரும்பாலான தனியார் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யப்படும் பாலின் தரம் குறைவாகவே உள்ளது. அங்கு இமெட் கருவி பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கலப்படம் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • நிலுவையில் உள்ள அனைத்து திட்டப் பணிகளையும் விரைவாக தரமாகவும் முடித்திட உத்தரவு.
    • சாலைப்பணிகள், பூங்கா அமைக்கும் பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் ஆய்வு செய்யப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நகராட்சி நிர்வாக துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் திரு. கே. என் .நேரு தலைமையில் நடைபெற்றது.

    அரசு தலைமை கொறடா முனைவர் கோவி.செழியன், நகராட்சி நிர்வாகத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா , தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மேலாண்மை இயக்குனர்தட்சிணாமூர்த்தி , பேரூராட்சிகள் ஆணையர் செல்வராஜ் , மாவட்ட கலெக்டர்கள் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் (தஞ்சாவூர்), அருண் தம்புராஜ் (நாகப்பட்டினம்), லலிதா (மயிலாடுதுறை) ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    இந்த ஆய்வுக் கூட்டத்தில் கே.என்.நேரு பேசியதாவது:- 

    தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களின் உள்ள மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம், எரிவாயு தகனமேடை, சாலைப்பணிகள், பூங்கா அமைக்கும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் ஆய்வு செய்யப்பட்டது.

    நிலுவையில் உள்ள அனைத்து திட்டப் பணிகளையும் விரைவாக தரமாகவும் முடித்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

    மேலும் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், திருப்பனந்தாள் மற்றும் திருவிடைமருதூர் ஒன்றியங்களைச் சார்ந்த 67 ஊரகக் குடியிருப்புகள் மற்றும் திருவிடைமருதூர். வேப்பத்தூர் பேரூராட்சிகளைச் சார்ந்த 2 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ.117.09 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.82 சதவீதம் பணிகள் முடிவுற்றுள்ளது.

    தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர், திருவையாறு, தஞ்சாவூர், ஒன்றியங்களுக்குட்பட்ட 214 குடியிருப்புகளுக்கு ரூ.265.29 கோடி மதிப்பீட்டில் 1.79 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் கொள்ளிடம் ஆற்றினை நீராதாரமாக கொண்ட கூட்டுக்குடிநீர் திட்டம். தஞ்சாவூர் மாவட்டம் பாநாசம் மற்றும் அம்மாப்பேட்டை ஒன்றியங்களைச் சார்ந்த 252 குடியிருப்புகளுக்கு ரூ. 288.02 கோடி மதிப்பீட்டில் 2.09 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் கூட்டுக் குடிநீர் திட்டம் ஆகிய திட்டங்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் செயலாக்கத்தில் உள்ள திட்டங்கள் ஆகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இக்கூட்டத்தில் எம்.பி.க்கள் கல்யாணசுந்தரம், ராமலிங்கம், செல்வராஜ், டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திரசேகரன், திரு. டி.கே.ஜி.நீலமேகம் , அன்பழகன் ,அண்ணாதுரை ,ஜவாஹிருல்லா ,ஷாநவாஸ் , ராஜ்குமார் , பன்னீர்செல்வம், நிவேதா முருகன் , நாகைமாலி , பூண்டி கலைவாணன்,டி. ஆர்.பி.ராஜா,மாரிமுத்து , கூடுதல் கலெக்டர்கள்சுகபுத்ரா , ஸ்ரீகாந்த், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் ஜானகி ரவீந்திரன், மாநகராட்சி மேயர்கள் சண் ராமநாதன் (தஞ்சாவூர்), சரவணன் (கும்பகோணம்), மாவட்ட ஊராட்சித்தலைவர்உஷா புண்ணியமூர்த்தி, மாநகராட்சி துணை மேயர்கள்அஞ்சுகம் பூபதி (தஞ்சாவூர்), தமிழழகன் (கும்பகோணம்), மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர்முத்து, மாநகராட்சி ஆணையர்கள் சரவணகுமார் (தஞ்சாவூர்), செந்தில் முருகன் (கும்பகோணம்) மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பயிற்சியின் முடிவில் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் சான்றிதழ் வழங்கப்படும்.
    • தற்போதைய படிப்பிற்கு இடையூறு இல்லாமல் தமது கல்வி தகுதியினை உயர்த்தி கொள்ள இப்பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் சாமியப்பா கூட்டுறவு ேமலாண்மை நிலையத்தில் 2022-ம் ஆண்டிற்கான நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும் பட்டயச் சான்றிதழ் சேர்க்கை நடைபெறுகிறது.

    இது குறித்து முதல்வர் (பொ) அன்பு பசும்படியார் வெளிட்டுள்ள செய்திகுறிப்பு:

    மேற்படி பயிற்சிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. பட்டதாரிகளும் இப்பயிற்சியில் சேரலாம். 01.09.2022 அன்று குறைந்தபட்சம் 17 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் அதிக பட்ச வயது வரம்பு இல்லை.

    மேலும் ''நகை மதிப்பீட்டாளர் பயிற்சி'' 10.09.2022 தேதி துவக்கப்பட உள்ளது.

    நகைக் கடைகளிலும், அடகு கடைகளிலும் மற்றும் வங்கிகளிலும் நகைகளின் புழக்கம் அதிகமாகவுள்ளது.

    தங்கத்தை மதிப்பீடு செய்து அதன் தரத்தை கண்டறிய வேண்டியது அவசியம்.

    இதற்கு அறிவியல் பூர்வமான பயிற்சி தேவை.

    இளைய தலைமுறையினர் அனைவரும்இப்பயி ற்சியினை பயின்றுவேலை வாய்ப்பு பெறவும், சுய தொழில் தொடங்கவும், தங்கத்தைப் பற்றிய விழிப்பு ணர்வு பெறுவதையும் முக்கிய நோக்கமாக கொண்டு இப்பயிற்சி வழங்கப்படுகிறது.

    நகை மதிப்பீடும்அதன் நுட்பங்களும் குறித்த பயிற்சியின்போது வகுப்பறை பயிற்சியில் அடிப்படை உலோகவியல், உலோகத்தின் பயன்பாடு, தங்கத்தைப் பற்றியஅடிப்படை விபரம், தங்கத்தின் விலை கணக்கிடும் முறை, சுத்த தங்கம் கணக்கிடும் முறை, தங்கத்தை அழித்து தரம் அறியும் முறை, அழிக்காமல் தரம் அறியும் முறை, நகைகளின் வகைகளை கண்டறிதல், வங்கிகளில் நகைக்கடன் வழங்கும் முறை, ஹால்மார்க், அடகு பிடிப்போர் நடைமுறை சட்டம் மற்றும் விதிகள் போன்ற பாடங்கள் 40 மணிநேர வகுப்பறை பயிற்சியும், நகை செய்முறை 30 மணிநேரமும், உரைகல் முறையில் தங்கத்தின் தரம் கண்டறியம் செய்முறைப்பயிற்சி 30 மணி நேரமுமாக மொத்தம் 100 மணிநேரப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இந்த பயிற்சியின் போது தேவையான உபகரணங்கள் வழங்கப்படும். இப்பயிற்சியின் முடிவில் தமிழக அரசால் அங்கீகரி க்கப்பட்ட தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் சான்றிதழ் வழங்கப்படும் இப்பயிற்சியினை முடித்தவர்கள் தேசிய வங்கிகள், வணிக வங்கிகள், தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் நிதிநிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றவும், அடகு கடை, ஆபரணக்கடை, நகை வணிகம் செய்யவும் நல்ல வாய்ப்பு உள்ளது. சான்றிதழை வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் பதிவு செய்து கொள்ளலாம்.

    சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மொத்தம் 18 நாட்கள் பயிற்சி நடைபெறும். தற்போது விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

    இப்பயிற்சியில் சேர 18 வயதிற்கு மேற்பட்ட பள்ளி மாணவ/மாணவிகளும், ஆண்களும், பெண்களும் எந்த பகுதிதியினை சேர்ந்தவராக இருந்தாலும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்ற கல்லூரிகளில் படித்து வருபவர்கள் தற்போதைய படிப்பிற்கு இடையூறு இல்லாமல் தமது கல்வித் தகுதியினை உயர்த்திக் கொள்ள இப்பயிற்சி துவக்கப்பட்டுள்ளது.

    மேலும் விவரங்களுக்கு சாமியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையம், மெடிக்கல் காலேஜ் ரோடு, தஞ்சாவூர் தொலைபேசி எண்: 04362-238253, 9626011552 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உணவு பொருட்களில் கலப்படத்தை தரம் அறிவது எப்படி? என்பது குறித்து கரூர் கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
    கரூர்:

    கரூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில் கோடைகால உணவு மற்றும் ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வு முகாம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. இதையொட்டி உணவு பொருட்களின் தரம் பற்றி எப்படி அறிவது? என்பதை விளக்கும் வகையிலான அரங்கு ஒன்று அங்கு வைக்கப்பட்டிருந்தது. இதில் மிளகு, மிளகாய்தூள், டீத்தூள், பேரீச்சம்பழம், உப்பு, வெல்லம், நல்லெண்ணெய் உள்பட அத்தியாவசிய பொருட்களில் கலப்படம் செய்யப்பட்டால் அதன் நிலை எப்படி இருக்கும் என்பது பற்றியும், தரமான பொருள் எப்படி இருக்கும் என்பது பற்றியும் இருவிதமாக பாட்டிலில் அடைத்து வைத்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் விளக்கு ஏற்றுவதற்கான நல்லெண்ணெய் என பாக்கெட்டில் குறிப்பிடப்பட்டிருந்தால் அதனை சமையலுக்கு பயன்படுத்த கூடாது. தரமான மிளகு தண்ணீரில் மூழ்கி விடும் என்பன உள்ளிட்ட ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

    இந்த அரங்கினை மாவட்ட கலெக்டர் அன்பழகன் பார்வையிட்டார். அத்தியாவசிய பொருட்களின் தரத்தை கண்டறிவது பற்றி கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறுகையில், இந்த முகாம் மே மாத இறுதி வரை நடக்கும். முகாமில் பொதுமக்கள் பார்வையிட்டு கோடை காலத்தில் பாதுகாப்பான உணவு மற்றும் ஆரோக்கியத்தை கடைபிடிக்கும் வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம். மேலும், உணவுப்பொருள் குறித்த பொதுமக்களின் புகார்களை நியமன அலுவலரின் 94440 42322 என்கிற வாட்ஸ்-அப் எண் வழியாக தெரிவித்தால் 24 மணி நேரத்தில் புகார் குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் (பொறுப்பு) புஷ்பராஜ் மற்றும் அனைத்து வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  
    ×