search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kamal political"

    கமல்ஹாசன் நாக்கை அறுப்பேன் என கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
    கடலூர்:

    மக்கள் நீதி மய்யம் கடலூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சரவணன், மேற்கு மாவட்ட பொறுப்பாளர் முகமது ரபிக் மற்றும் நிர்வாகிகள் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணனிடம் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் கடந்த 13-ந்தேதி பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை மிரட்டும் வகையில் அவரது நாக்கை அறுப்பேன் என்றும் மற்றும் மக்களை வன்முறைக்கு தூண்டும் வகையில் மக்கள் கமல்ஹாசனின் நாக்கை அறுப்பார்கள் எனவும் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.

    இந்த செயல் ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும். எனவே அமைச்சர் வன்முறையைத் தூண்டும் விதமாக பேசியதால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
    கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்தும் வன்முறையை தூண்டும் விதத்தில் அவரது நாக்கை அறுப்பேன் என்று பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.
    வேலூர்:

    அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்தபோது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என பேசினார்.

    இதைத்தொடர்ந்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டுமென பேசியிருந்தார்.

    இந்தநிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேலூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சுரேஷ் தலைமையில் இன்று வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்தும் வன்முறையை தூண்டும் விதத்தில் அவரது நாக்கை அறுப்பேன் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது கண்டிக்கதக்கது.

    எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறியிருந்தனர்.

    தொகுதி பொறுப்பாளர் சிவக்குமார், நந்தகோபால், கிரிராஜ், சேகர், மணி, சிவராமன், சந்தோஷ்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வரலாறு தெரியாமல் பேசுவதாக பாரதிய ஜனதா தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    முதல் தீவிரவாதி ஒரு ‘இந்து’ என்று சர்ச்சையை கிளப்பிய கமல் இந்து என்பது இந்துக்கள் பெயர் அல்ல என்று மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பி இருக்கிறார். இது தொடர்பாக அவர்கூறி இருப்பதாவது:-

    ஆழ்வார்களோ, நாயன்மார்களோ, ‘இந்து’ என்ற வார்த்தையை சொல்லவில்லை.

    முகலாயர் அல்லது அதற்கு முன் ஆள வந்தவர்களால் ‘இந்து’ என நாமகரணம் செய்யப்பட்டோம். ஆங்கிலேயர் அந்த அடைமொழியை வழிமொழிந்தனர். நமக்கென பல்வேறு அடையாளங்கள் இருக்கும் போது, மாற்றான் கொடுத்த பட்டயத்தை நாம் ‘பெயராக’, ‘மதமாக’ கொள்வது எத்தகைய அறியாமை என்று குறிப்பிட்டுள்ளார். கமலின் சர்ச்சைக்குரிய இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

    இது தொடர்பாக பாரதிய ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் கூறியுள்ளதாவது:-

    கமல் எதற்காக இப்படி பேசுகிறார் என்று தெரியவில்லை. ஆனால், அவர் வரலாறு தெரியாமல் பேசுகிறார் என்பது மட்டும் தெரிகிறது.

    விஷ்ணுபுராணத்தில் ஒரு ஸ்லோகம் ‘இமயம் தொடங்கி இந்து மகா சமுத்திரம் வரை பரந்து விரிந்த இந்த நிலப்பரப்பு இந்துஸ்தானம்’ என்று விவரிக்கிறது. இந்துஸ்தான் என்பது மட்டுமல்ல. இந்த நாட்டின் எல்லையையும் குறிப்பிடுகிறது. இது ஆண்டவனால் உருவாக்கப்பட்ட தேசம்.

    நம்நாட்டில் இருக்கும் மதங்களை சனாதன தர்மம் என்போம். நம் நாட்டில் தோன்றிய எல்லா மதங்களுக்கு இடையேயும் ஒரு ஒற்றுமை உண்டு.

    ஆனால், பின்நாளில் அந்நிய மண்ணில் தோன்றி இங்கு வந்த முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ மதங்களின் அடிப்படை கூறுகள் வேறுபட்டவை.

    அந்த இரு மதங்களும் வந்ததால் நம் நாட்டில் தோன்றிய மதங்களை இந்துஸ்தான மதங்கள் என்று வகைப்படுத்தினார்கள். பின்னர் இந்து மதங்கள், இந்து மதம் என்று நமது சவுகரியத்துக்காக நாம் வைத்துக்கொண்ட பெயர்தான் இது. மாற்றான் தரவில்லை. அவன் வருவதற்கு முன்பே நமக்கு நாமே உருவாக்கிக் கொண்ட பெயர்தான் இந்து.

    சங்கராச்சாரியார் தனது உதவியாளரிடம் பைலை கொடுத்து இதை வெங்கட்ராமனிடம் கொண்டுபோய் கொடு என்பது வழக்கம். திடீரென்று ஒரு நாள் இந்த பைலை ‘குடுமி’ வெங்கட்ராமனிடம் கொண்டுபோய் கொடு என்றாராம்.

    அதை கேட்டதும் உதவியாளருக்கு ஆச்சரியம். என்ன இப்படி குடுமி வெங்கட்ராமன் என்று சொல்கிறாரே என்று குழம்பிபோனார். அப்புறம்தான் அவருக்கு புரிந்தது அங்கு புதிதாக இன்னொரு வெங்கட்ராமன் வேலையில் சேர்ந்து இருந்தார்.

    எனவேதான் ஏற்கனவே இருந்த வெங்கட்ராமன் குடுமி வைத்திருந்ததை அடையாளப்படுத்துவதற்காக அப்படி கூறி இருக்கிறார். பல மதங்களின் வருகையால் இங்குள்ள மதங்களை அடையாளப்படுத்துவதற்காக இந்த நாட்டின் மதம் இந்து மதம் என்று அடையாளப்படுத்தப்பட்டது.

    இந்து என்று சொல்வதற்கு இங்குள்ளவர்கள் வெட்கப்படலாம். ஆனால், பாகிஸ்தான் தொலைக்காட்சியில் இன்றும் ‘மோடி பிரைம் மினிஸ்டர் அப் இந்துஸ்தான்’ என்றுதான் சொல்கிறார்கள்.

    இங்கிருந்து ஹஜ் புனித பயணம் செய்பவர்களையும் அங்குள்ளவர்கள் இந்து என்றே சொல்கிறார்கள். நம் தேசத்தவர் அனைவரும் இந்துக்களே.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    புதிய வரலாற்று ஆசிரியர் நமக்கு கிடைத்து இருப்பது மகிழ்ச்சி என்று கமலின் கருத்து குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் செய்துள்ளார்.
    சென்னை:

    மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே சுதந்திர இந்தியாவின் முதல் இந்து தீவிரவாதி என்று தேர்தல் பிரசார கூட்டத்தில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பேசிய கருத்து நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

    அவரின் கருத்து இந்திய அரசியலில் விவாதப் பொருளாகி உள்ள நிலையில் கமல் தனது டுவிட்டரில் நேற்று மீண்டும் ஒரு சர்ச்சை கருத்தை பதிவிட்டு இருந்தார்.

    ‘இந்து’ என்ற சொல் முகலாயர் காலத்திற்கு முன்னதாக பயன்படுத்தப்பட்டதாகவும் அதனை ஆங்கிலேயர் வழிமொழிந்ததாகவும், மாற்றான் கொடுத்த பட்டயத்தை நாம் மதமாக பின்பற்றுவதாக குறிப்பிட்டு இருந்தார்.

    அவரது கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் தமிழகத்தில் உருவாகி உள்ளன. வரலாற்று உண்மையைத் தான் கமல் கூறியுள்ளார் என்று ஆதரவாளர்கள் கூறியிருந்தனர்.

    இந்த நிலையில் தேர்தல் பிரசாரம் முடிந்து சென்னை திரும்பிய மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் கமல் கருத்து குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:-


    ஏற்கனவே கணக்கு வாத்தியார் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். தப்பு தப்பா கணக்கை கூட்டல் செய்பவர். இப்போது அந்த வரிசையில் வரலாற்று ஆசிரியர் கமலும் நமக்கு கிடைத்து இருப்பது மகிழ்ச்சி.

    நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கிறது. மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும். தொலைநோக்கு பார்வையுடன் திட்டமிட்டு மக்களுக்கு என்னென்ன நன்மைகள் செய்ய வேண்டும் என்று ஆக்கப்பூர்வமாக சிந்திப்பதை விட்டு விட்டு வரலாற்று ஆராய்ச்சிகளை செய்து வம்பில் மாட்டிக்கொள்ள வேண்டுமா?

    மக்கள் முன்னேற்றம் பற்றி சிந்திப்பது தான் தலைவர்கள். அதை விட்டு உறுப்படியற்ற வேலைகளை ஸ்டாலினும், கமலும் செய்வது கேலி கூத்தாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    இந்து மதத்தை விரோதமாக பேசுபவர்கள் மற்ற மதத்தை பற்றி ஏன் பேசுவதில்லை? மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் கேள்வி எழுப்பியுள்ளார்.
    மன்னார்குடி:

    மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

    மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஷ் ஆகிய தேச தலைவர்கள் 2 பேரும் நாட்டுக்கு சுதந்திரம் பெற்று தந்ததில் முக்கிய பங்காற்றியவர்கள். காந்தி அகிம்சை வழியை கையாண்டார். சுபாஷ் சந்திரபோஷ் ஆயுதம் ஏந்தினார். இதனால் சுபாஷ் சந்திரபோசை தேசவிரோதி என்று சொல்லி விட முடியுமா?. கோட்சே ஒரு இந்து தீவிரவாதி என்று கமல்ஹாசன் சொன்னதால் தான், நான் கோட்சே தேசபக்தர் என்று கூறினேன்.

    இந்து மதம் போதிப்பது சகிப்பு தன்மையையும், பொறுமையும் தான். ஆனால் அந்த பொறுமைக்கும் எல்லை உண்டு. கிருஷ்ணர் பொறுமை பொறுமை என்று இருந்திருந்தால் மகாபாரத யுத்தமே நடந்திருக்காது. கோட்சே செய்தது சரி என்று நாங்கள் எங்கேயும் நியாயப்படுத்தவில்லை. கோட்சேவும் தேச பக்தர் என்று தான் கூறினோம். சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் நாம் நினைத்து பார்ப்பதில்லை. ஒரு சிலரை தான் நினைவில் வைத்துள்ளோம். நான் ஒரு இந்து மத சந்நியாசி. இந்து விரோத கருத்துக்கள் வரும்போது அது தொடர்பாக கருத்தை தெரிவிப்பது எனது கடமை.


    இந்துவாக இருந்து கொண்டு இந்து விரோதமாக பலர் பேசி வருகின்றனர். குறிப்பாக ராமசாமி நாயக்கர் (பெரியார்) இந்து பெயரை வைத்து கொண்டு இந்து விரோதமாக தான் பேசினார். தற்போது மு.க.ஸ்டாலின் மசூதிக்கும், தேவாலயங்களுக்கும் செல்கிறார். ஆனால் தன் நெற்றியில் இடப்படும் விபூதியை மட்டும் அழிக்கிறார். இவரது குடும்பத்தினர் இந்துவாக இருக்கின்றனர். இதை தான் நாங்கள் சுட்டி காட்டுகிறோம். இந்து மதத்தை விரோதமாக பேசுபவர்கள் மற்ற மதத்தை பற்றி ஏன் பேசுவதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கமலின் பிடிவாதத்தின் பின்னணி என்ன? வேண்டுமென்றே சர்ச்சைகளை ஏற்படுத்தி தன்னை விளம்பரப்படுத்திக் கொள்கிறாரா? என்பது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைமை நிர்வாகிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
    சென்னை:

    கமல்ஹாசன் அரசியலுக்குள் நுழையப்போகிறார் என்ற வதந்தி 2013-ம் ஆண்டு ‘விஸ்வரூபம்’ படத்துக்கு சிக்கல் ஏற்பட்ட போதே பரவியது.

    அப்போது பாரதிராஜாவிடம் கமல் அரசியலுக்குள் நுழைவது பற்றி கேட்டபோது அவர் சொன்ன பதில், “கமலுக்கு அரசியல் தெரியாது என்று மட்டும் சொல்லாதீர்கள். அவன் வந்தான் என்றால் முழுதாக கற்றுக்கொண்டு வருவான். தாங்கமாட்டீர்கள்...’ என்றார்.  அவர் சொன்னது இப்போது பலித்துக்கொண்டு இருக்கிறது.

    கமலின் கோட்சே பற்றிய கருத்து நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிரதமர் வரை சென்றும்கூட பிடிவாதமாக தான் சொன்னதை மறுக்காமல் தீவிரம் காட்டி வருகிறார்.

    நேற்று வெளியிட்ட வீடியோவிலும் கமலின் உறுதி தெரிகிறது. கமலின் பிடிவாதத்தின் பின்னணி என்ன? வேண்டுமென்றே சர்ச்சைகளை ஏற்படுத்தி தன்னை விளம்பரப்படுத்திக் கொள்கிறாரா? இன்னமும் அவரை தொடரும் பா.ஜனதாவின் பி டீம் என்ற சர்ச்சை... ஆகியவற்றை மக்கள் நீதி மய்யத்தின் தலைமை நிர்வாகிகளிடம் கேட்டோம். அவர்கள் கூறியதாவது:-

    ‘இவர்கள் சர்ச்சை ஆக்குகிற கருத்தை, தலைவர் கமல் பேசுவது இது முதல் முறை அல்ல. அதை பல தடவை பேசியிருக்கிறார். பாராளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளில், மெரினா கடற்கரையில் காந்தி சிலை முன்பாகவும் இதைப் பேசினார்.

    வழக்கமாக, பிரசாரத்துக்காகப் போகிற இடங்களில் உள்ளூர் பிரச்சனைகளை அவர் பேசுகிறார். அத்துடன் நாட்டின் ஒருமைப்பாடு, மத நல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை ஆகியவை குறித்தும் வலியுறுத்திப் பேசுவதை வழக்கமாகவே வைத்திருக்கிறார்.


    அரவக்குறிச்சி பேச்சின் முன் பகுதியையும், பின் பகுதியையும் வெட்டி எறிந்து விட்டு, ஒரு வார்த்தையை மட்டும் வைத்து சர்ச்சை ஆக்குகிறார்கள். வி‌ஷயத்தை வேண்டுமென்றே திசை திருப்பி, அபத்தமான அர்த்தம் கற்பிக்கிறார்கள். திருப்பரங்குன்றத்தில் பிரசாரம் செய்த எங்கள் தலைவர், இதற்கு மிகத் தெளிவாக விளக்கம் கொடுத்திருக்கிறார்.

    கமல் பின்வாங்கும் மனிதர் கிடையாது. அவர் பேசியது தமிழ்நாட்டில் விவாதிக்க கூடிய ஒரு வி‌ஷயம் தான். கோட்சேவை திட்டிவிட்டாரே என்ற கோபத்தை நேரடியாக காட்ட முடியாமல் இந்துக்களை சொல்லிவிட்டார் என்று இந்து பின்னால் ஒளிந்து கொள்கிறார்கள்.

    எங்கள் கட்சியில் மதம் தொடர்பான எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது. பொதுச்செயலாளர் குங்குமம் வைத்துக்கொண்டு சாமி கும்பிடுபவர் தான். கமல் தன்னுடைய கடவுள் மறுப்பு கொள்கையை எங்களிடம் கூட திணித்தது இல்லை. கமல் மாற்றத்துக்கான தலைவராக உருவாகி வருவதை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் தான் இந்த சர்ச்சைகளை உருவாக்குகிறார்கள்.

    கமல் கேட்கும் மற்ற கேள்விகளான குடிநீர் பிரச்சனை உள்ளிட்ட கேள்விகள் அவர்களை உறுத்துவதால் இதை பெரிதாக்குகிறார்கள். கமல் கோட்சே பற்றி பேசிய இடத்தில் தான் ஆற்றுமணல் கொள்ளை, தண்ணீர் பிரச்சனை, முருங்கைக்காய் தொழிற்சாலை, அரசு மருத்துவமனை என உள்ளூர் பிரச்சனைகளை பற்றியும் பேசினார். ஆனால் அவைகளை பற்றி யாரும் பேசவில்லை.

    கமல் மீது வன்முறையை ஏவ தூண்டுபவர்கள் அந்தந்த கட்சியில் கண் துடைப்புக்காக கண்டிக்கப்படுகிறார்கள். இன்னும் சில மாதங்களில் அவர்கள் அந்த கட்சியின் முக்கிய பொறுப்புகளுக்கு வருவார்கள்.

    பி டீம் என்பது எங்களால் பாதிக்கப்படும் இன்னொரு அணியினர் எங்கள் மீது காழ்ப்புணர்ச்சியால் வைக்கப்படும் குற்றச்சாட்டு. ஆட்சியை கைப்பற்ற நினைக்கும் எல்லோருக்குமே எதிரானவர்கள் தான் நாங்கள். அது இந்த சர்ச்சை மூலம் நிரூபணமாகி இருக்கிறது.

    இதுவரை வேறு எந்த தமிழ் தலைவருக்கும் இல்லாத துணிச்சலும் நேர்மையும் எங்கள் தலைவரிடம் இருக்கிறது. எனவே எங்கள் இலக்கு சட்டமன்ற தேர்தலும், கமலை முதல் அமைச்சர் பதவியில் அமர வைப்பதும் தான்.

    விரைவில் தமிழக ஆட்சியை நாங்கள் கைப்பற்றுவோம். கமல் எப்போதும் இதே மாதிரி தான் இருப்பார். ஆட்சியை காப்பாற்றுவதற்காக பூசி மெழுகவோ கண்ணை மூடி சிலரை ஆதரிப்பதோ செய்ய மாட்டார்.’

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இறுதி கட்ட பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்ட கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில் ‘உங்கள் கோபத்தால் மாற்றவேண்டியதை மாற்றிக் காட்டுங்கள்’ என குறிப்பிட்டுள்ளார்.
    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

    ‘நான் பரப்புரை செய்ய எனக்கு ஒரு ஊரில் அனுமதி மறுக்கப்பட்டது.  இதையடுத்து என் பரப்புரை தமிழ்நாடு காணுவதற்கு விஞ்ஞானத்திற்கு நன்றி .

    என்னை நீங்கள் உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொண்டதற்கும், என்னை நீங்கள் வரவேற்ற விதத்திற்குமான நன்றி ’ என கூறும் கமல் தொடர்ந்து பேசுவதை வீடியோவில் காண...,


    கமல்ஹாசனை மிரட்டுவதும், அவர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டங்களில் வன்முறையை உருவாக்குவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று மார்க்சிஸ்டு கம்யூ.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனர் கமல்ஹாசன் மகாத்மா காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சேவை பற்றி பேசியவை தவறானவையல்ல. தேச விடுதலைப்போராட்டத்தின் தந்தையான மகாத்மா காந்தியை கொடூரமாக கொலை செய்த நாதுராம் கோட்சேவை பற்றி பேசியவை தவறானவையல்ல. தேச விடுதலைப் போராட்டத்தின் தந்தையான மகாத்மா காந்தியை கொடூரமாக கொலை செய்த நாதுராம் கோட்சே ஒரு தீவிரவாதி என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

    கமல்ஹாசன் பேசியதற்கு மாற்றுக்கருத்து உள்ளவர்கள் தங்களது கருத்தினை வெளியிட உரிமை உண்டு.

    ஆனால், கமல்ஹாசனை மிரட்டுவதும், அவர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டங்களில் வன்முறையை உருவாக்குவதும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவரது நாக்கை அறுக்க வேண்டுமென கூறுவதும், மன்னார்குடி ஜீயர் கமல்ஹாசனை நடமாட விட மாட்டோம் என தெரிவித்திருப்பதும் கருத்து சுதந்திரத்திற்கு விரோதமானதாகும். இத்தகைய போக்கினை அனுமதிக்கக்கூடாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    தேர்தல் விதிமுறையை பின்பற்றி அரசியல் தலைவர்கள் பேசினால் எந்த பிரச்சனையும் ஏற்படாது என்று மதுரை விமான நிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
    மதுரை:

    அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் மருது அழகு ராஜின் மகன் திருமணம் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் இன்று நடந்தது.

    இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.

    பின்னர் அவர் சென்னை செல்வதற்காக மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-



    கமல் கூறிய கருத்து தொடர்பாக பேச வேண்டாம் என மதுரை ஐகோர்ட் தெரிவித்துள்ளது. எனவே இது தொடர்பாக எனது கருத்தை கூற இயலாது.

    தமிழகத்தில் பருவமழை சரியாக பெய்யாததால் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. குடிநீர் பிரச்சனையை தீர்க்க தேர்தலுக்கு முன்பாகவே வறட்சி மிகுந்த பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    குடிநீர் பிரச்சனை உள்ள பகுதிகளில் கலெக்டர்கள் தலையிட்டு குடிநீர் முறையாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டை தீர்ப்பதற்கான நிதியும் முன்கூட்டியே ஒதுக்கப்பட்டுள்ளது.

    அண்ணா பல்கலைக் கழகத்தில் அரசியல் தலையீடு உள்ளதாக கூறும் துணைவேந்தர் சூரப்பாவின் குற்றச்சாட்டு தவறானது.

    தேர்தல் பிரசாரத்தின் போது மத உணர்வுகளை தூண்டும் விதமாக பேசுவோர் மீது தேர்தல் ஆணையம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நடவடிக்கை எடுக்க முடியாது.

    தேர்தல் விதிமுறையை பின்பற்றி அரசியல் தலைவர்கள் பேசினால் எந்த பிரச்சனையும் ஏற்படாது.

    மேற்கண்டவாறு அவர் கூறினார்.
    நடிகர் கமல்ஹாசன் கட்சியுடன் பா.ஜ.க.வுக்கு எந்த ரகசிய உடன்பாடும் இல்லை, எங்கள் உறவுகள் வெளிப்படையானது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
    திருச்சி:

    திருச்சியில் இன்று பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    4 தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது .தமிழக மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். தமிழகத்தில் தற்போது நடைபெறும் ஆட்சி நிலையாக இருக்க வேண்டும். மத்தியில் உள்ள பா.ஜ.க. ஆட்சி தொடர வேண்டும். 23-ந்தேதி தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்கிறார். ஆனால் அப்படி எதுவும் நடக்காது. 4 தொகுதி இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும்.

    மத்தியில் தாமரை மீண்டும் மலரும். தமிழ்நாட்டில் தி.மு.க. பல முறை ஆண்டு இருக்கிறது. ஆனால் அப்போது எல்லாம் தமிழகத்திற்கு அவர்கள் எதுவும் செய்யவில்லை. இன்று மு.க.ஸ்டாலின் ஏதேதோ பேசுகிறார். அவர்கள் அதிகாரத்தில் இருந்த போது அவற்றை எல்லாம் செய்து இருக்கலாம். குறிப்பாக குடிநீர் பிரச்சனையில் தி.மு.க. ஆட்சி காலத்தில் தொலைநோக்கு எண்ணத்தில் செயல்படாததால் இப்போது பிரச்சனை இருக்கிறது.

    காவிரி பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தது மோடி ஆட்சிதான். காங்கிரஸ், தி.மு.க. பலமுறை ஆட்சியில் இருந்த போதும் இதில் நிரந்தர தீர்வு ஏற்படவில்லை.


    நடிகர் கமல்ஹாசன் தேவையில்லாத கருத்துக்களை கூறுகிறார். சினிமாவில் பேசினாலே எதிர்ப்புகள் ஏற்படும். இந்நிலையில் யார் எப்படி வேண்டுமானாலும் நினைக்கட்டும். நாம் பிரபலமாக இருப்பதால் பேசுவதை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என நினைக்கிறார். இப்படி பேசினால் சிறுபான்மை ஓட்டு கிடைக்கும் என்று நினைக்கிறார். நம்முடைய பேச்சுக்கு எதிர் விளைவுகள் வரும் என்பதை உணர்ந்து பேச வேண்டும்.

    அரசியலில் கமலுக்கு இன்னும் பக்குவம் தேவை. இப்படி பேசினால் இந்துக்கள் மனம் புண்படும் என்று இவர் உணரவில்லை. கமல் பிரசாரத்தில் ஏற்பட்ட சலசலப்பை நாங்கள் வரவேற்கவில்லை . யார் தாக்கப்படுவதையும் நாங்கள் ஆதரிப்பது இல்லை. தேர்தல் பிரசாரத்தில் பல தரப்பட்ட மக்கள் கூடுவார்கள். ஆனால் மேற்கு வங்கத்தில் நடந்தது போல இங்கு நடைபெறவில்லை. நடிகர் கமல்ஹாசன் கட்சியுடன் பா.ஜ.க.வுக்கு எந்த ரகசிய உடன்பாடும் இல்லை, எங்கள் உறவுகள் வெளிப்படையானது. தி.மு.க. உறவுதான் ரகசியமானது. தி.மு.க., தினகரனும் ரகசிய உறவு வைத்து உள்ளனர். கோட்சேவை தேசப்பக்தர் என்று எங்கள் கட்சிக்காரர் கூறியதற்கு அவரை கட்சி கண்டித்து இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தன் மீதான வழக்கில் முன் ஜாமீன் கோரி கமல் தொடர்ந்த மனு மீதான தீர்ப்பை உயர்நீதிமன்றம் மதுரை கிளை ஒத்திவைத்தது.
    மதுரை:

    அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட கமல் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதையடுத்து கமலுக்கு எதிராக போலீஸ் நிலையத்தில் 2 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்நிலையில் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என பேசியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் வழங்க கோரி உயர்நீதிமன்றம் மதுரை  கிளையில் கமல்  மனு தாக்கல் செய்திருந்தார்.


    அம்மனுவில், இந்து-முஸ்லிம்கள் இடையே நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் எந்த கருத்தையும் பேசவில்லை. கோட்சேவை பற்றி மட்டுமே பேசிய நிலையில் இந்துக்கள் பற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. நான் தெரிவித்த கருத்து பொது வாழ்வுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தவறாக பகிரப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே கமலுக்கு எதிராக 76 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற கிளையில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  கமல் பேசிய வீடியோ பதிவு விசாரணையின் போது நீதிபதியிடம் காண்பிக்கப்பட்டது.

    அப்போது கோட்சேவுக்கு இந்து என்பதை தவிர வேறு அடையாளம் இல்லையா? என கேள்வி எழுப்பினர். காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட போது ரேடியோவில் காந்தியை சுட்டவர் ஒரு இந்து என அறிவிக்கப்பட்டது என்று கமல் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.

    கமலை கைது செய்து விசாரிக்க முகாந்திரம் உள்ளதா என அரசு தரப்பிடம் நீதிபதி கேட்டார். அதற்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும். அதனால் கைது பற்றி அச்சப்படதேவையில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். மேலும் தேர்தல் முடியும் வரை சர்ச்சைக்குரிய கருத்துக்களை ஊடகங்கள், அரசியல் கட்சிகள் விவாதிக்க வேண்டாம் என வலியுறுத்தினார். 
    சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கமல் பேசியதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்யும்படி மனுதாரருக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட கமல் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதையடுத்து கமலுக்கு எதிராக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது.  டெல்லி நீதிமன்றத்தில் கமலுக்கு எதிராக இந்து சேனா அமைப்பின் தலைவர் விஷ்ணு குப்தா வழக்கு தொடர்ந்தார்.


    இவ்வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது நீதிபதிகள் முன்பு, இந்துக்களுக்கு எதிராக பேசியதால் கமல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.  

    இதற்கிடையே குறுக்கிட்ட நீதிபதிகள் நீங்கள் ஏன் இதில் தலையிடுகிறீர்கள்? என மனுதாரருக்கு கேள்வி எழுப்பினர்.

    தான் ஒரு இந்து என்பதால் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளேன் என்று மனுதாரர் விஷ்ணு குப்தா தரப்பில் வாதிடப்பட்டது.

    இதையடுத்து நீதிபதிகள், கமல் பேசியதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய வேண்டும். ஆதாரங்களை ஆய்வு செய்த பின் கமலுக்கு சம்மன் அனுப்பலாமா, வேண்டாமா என்பது பற்றி முடிவு செய்யப்படும் என்று கூறினர்.

    இந்நிலையில் இந்து சேனா அமைப்பு தொடர்ந்த வழக்கை ஆக.2-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
    ×