search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Diets"

    • நீர்க்கடுப்பு மற்றும் சிறுநீரகக் கல்லால் அதிகம் பேர் பாதிக்கப்படுகிறார்கள்.
    • சிறுநீர் பாதையில் உள்ள கிருமிகள் பன்மடங்காகப் பெருக வாய்ப்புள்ளது.

    கோடை காலத்தில் சிறுநீர் எரிச்சல் அல்லது 'நீர்க் கடுப்பு' மற்றும் சிறுநீரகக் கல்லால் அதிகம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். கோடையில் தேவையான அளவில் தண்ணீர் குடிக்காமல் இருப்போமானால் ஏற்கனவே நம் உடலில் இருக்கும் தண்ணீர் வியர்வையாகி அதிக அளவில் வெளியேறும்போது சிறுநீர் கழிக்கும் அளவு குறையும்.

    கோடைகாலத்தில் மிக அதிக நேரம் வெயிலில் வேலை செய்பவர்கள் சரியான அளவு நீர்ச்சத்து ஆகாரங்களை குடிக்காமல் இருப்பதாலும் சிறுநீர் வெளியேறும் அளவு குறையும். இதனால் சிறுநீர் சற்று அடர்த்தி அதிகமாகி சற்று அடர் மஞ்சள் நிறமாக வெளியேறும் போது எரிச்சல் வலி, கடுப்பு ஏற்படலாம்.

    கோடைகாலங்களில் ரெயில் மூலமாகவோ, பேருந்து மூலமாகவோ நெடுந்தூரப் பயணம் மேற்கொள்கிறார்கள். இந்த மாதிரியான நேரங்களில் நாம் நெடுநேரம் சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைப்பதன் மூலம் சிறுநீர் கடுப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

    இந்த மாதிரியான நேரங்களில் சிறுநீர் பாதையில் உள்ள கிருமிகள் பன்மடங்காகப் பெருக வாய்ப்புள்ளது. இது ஆண்களைவிட பெண்களுக்கு அதிக அளவில் வருகிறது. பெரும்பாலும் 'ஈகோலை' என்னும் பாக்ட்டீரியாவால் இந்த 'நீர் கடுப்பு நோய்' வருகிறது.

    அறிகுறிகள்:

    அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்பதுபோன்ற உணர்வு வரும். அப்படி முயற்சி செய்யும்போது எரிச்சல் அல்லது கடுப்புடன் சிறுநீர் வெளியேறும். லேசாக அடிவயிற்றில் வலியும் ஏற்படும்.

    குழந்தைகள் தன்னை அறியாமல் அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள். நோய் அதிகமாகும்போது சிலருக்கு பயங்கர குளிருடன் கூடிய காய்ச்சல் ஏற்படும்.

    கோடைகாலத்தில் நீர் சரியாக பருகாத காரணத்தால் சிறுநீர் வெளியேறும் அளவு குறைவாகும். இதனால் சிறுநீரகத்தில் செயல்பாட்டால் உப்பு கலந்த கழிவுப் பொருட்கள் முழுமையாக வெளியேறாமல் கொஞ்சம், கொஞ்சமாக படிந்து அது கல்லாக உருவாகும் வாய்ப்புகள் அதிகம்.

    இந்த பிரச்சினை வராமல் தடுப்பதற்கு சிறந்த வழி கோடை காலத்தில் தேவையான அளவு நீர்ச்சத்துள்ள பானங்களை குடிப்பதுதான்.

    அப்பொழுதுதான் சிறுநீர் சரியான அளவில் வெளியேறி சிறுநீர் பாதையில் உள்ள கிருமிகளும், சிறுநீரில் உள்ள உப்புகளும் வெளியேற வாய்ப்புகள் ஏற்படும்.

    மேலும் சுற்றுலா மற்றும் நெடுந்தூர பயணம் மேற்கொள்வோர் சிறுநீரை அடக்கி வைக்காமல் அவ்வப்போது கழிப்பது நல்லது.

    உணவுமுறைகள்:

    * இளநீர், மோர், பழச்சாறு மற்றும் நீர்ச்சத்துள்ள ஆகாரங்களை போதிய அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.

    * கர்ப்பிணிப் பெண்கள் மற்ற காலங்களை விட நிறைய தண்ணீர் குடிப்பது நல்லது.

    * கோடை காலத்தில் வெயிலில் விளையாடச் சென்றுவிடும் குழந்தைகளை அழைத்து அடிக்கடி நிறைய நீர்ச்சத்துள்ள ஆகாரங்களை கொடுப்பதுடன் குழந்தைகளை அடிக்கடி சிறுநீர் கழிக்கவும் அறிவுறுத்த வேண்டும்.

    * 'நீர்க் கடுப்பு' அதிகமானாலோ அல்லது அடிவயிற்றில் வலி அதிகமானாலோ மருத்துவரை அணுகி மருத்துவரின் அறிவுறுத்தலின் பேரில் எந்த வகை கிருமியால் இந்த 'நீர்க் கடுப்பு' நோய் ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து அதை அழிப்பதற்கு தகுந்த மாத்திரைகளை உட்கொள்வது நல்லது.

    மருந்துகள்:

    ஹோமியோபதியில் ஆபிஸ் மெல், லைகோபோடியம், காந்தாரிஸ், பெர்பெரிஸ் வல்காரிஸ், ஹய்ட்ரஜ்யா போன்ற மருந்துகள் சிறுநீர் கடுப்பிற்கும், சிறுநீரகக் கற்கள் தோன்றுவதை தடுப்பதற்கும் மிகச் சிறந்தவை.

    • வைட்டமின் ஏ குறைபாடு சிறுநீரக கற்களை உருவாக்கும்.
    • சிறுநீரக கற்களுக்கு சித்த மருத்துவத்தில் சிறந்த சிகிச்சைகள் உள்ளன.

    சிறுநீரகத்தில் கால்சியம் ஆக்சலேட், கால்சியம் பாஸ்பேட், யூரிக் அமிலம் சிஸ்டின், ஷேந்தீன் வகை கற்கள் உருவாகிறது. சிறுநீரக கற்களுக்கு சித்த மருத்துவத்தில் சிறந்த சிகிச்சைகள் உள்ளன. அவை வருமாறு:-

     1) சிறுகண் பீளை குடிநீர், நெருஞ்சில் குடிநீர், நீர்முள்ளி குடிநீர் இவைகளில் ஒன்றை ஒரு டீஸ் பூன் எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து 100 மி.லி. வீதம் காலை, மாலை என இரு வேளை குடிக்கவும்.

    2) அமிர்தாதி சூரணம் 1 கிராம், நண்டுக்கல் பற்பம் 200 மி.கி., சிலாசத்து பற்பம் 200 மி.கி., வெடியுப்பு சுண்ணம் 100 மி.கி. வீதம் இருவேளை தண்ணீர் அல்லது இளநீரில் சாப்பிடலாம்.

    3) கல்லுடைக்குடோரி - காலை, இரவு ஒரு மாத்திரை வீதம் சாப்பிட வேண்டும். கல்லுருக்கி இலை மற்றும் இரணகள்ளி இலை போன்றவற்றை தினமும் சாப்பிட்டு வர சிறுநீரக கல் குணமாகும். இதை இன்றைக்கும் கிராமங்களில் பயன்படுத்தி வருகின்றனர்.

    சிறுநீரகக் கற்களை தடுக்கும் முறைகள்:

    வைட்டமின் ஏ குறைபாடு சிறுநீரக கற்களை உருவாக்கும். ஆகவே, கேரட், பப்பாளி, முருங்கைக்காய் போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். பொட்டாசியம் சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கிறது, கரைக்கிறது. எனவே பொட்டாசியம்

    சத்து நிறைந்த இளநீர், பீன்ஸ், கொய்யா, வாழைப்பழம், தர்பூசணி போன்றவற்றை சாப்பிடலாம்.

    சிட்ரிக் அமிலம் சிறுநீரக கல்லை கரைப்பதுடன் கல் உருவாவதையும் தடுக்கும். ஆகவே, எலுமிச்சைச்சாறு, சாத்துக்குடி, ஆரஞ்சு போன்றவைகளை உணவில் சேர்க்க வேண்டும்.

    கால்சியம் அளவு குறைந்தால் அது ஆக்சலேட் உடன் இணைந்து கற்களை உருவாக்கும். ஆகவே, கால்சியம் நம் உடலில் சரியான அளவில் இருக்க வேண்டும்.

     இறைச்சி வகைகள், எலும்பு சூப், முட்டைக்கோஸ், காலிபிளவர், தக்காளி விதைகள், பீட்ருட், உப்பில் ஊறிய பொருட்கள் போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்ப்பதை கட்டுப்படுத்த வேண்டும்.

    நீர்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகளை தோல் நீக்கி சாறாக குடிக்கலாம். இதன் தோலில் அதிகளவு ஆக்சலேட் மற்றும் பாஸ்பேட்டுகள் உள்ள பருப்பு வகைகள், தோலை நீக்கி உணவில் சேர்க்க வேண்டும்.

    வெண்பூசணி, வெள்ளரிக்காய், கோவைக்காய். முள்ளங்கிக்காய், கரைக்காய், பாகற்காய், வாழைத்தண்டு இவைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். சிறுநீரகக் கற்கள் உள்ளவர்கள் தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். சிறுநீரை அடக்காமல் அவ்வப்போது கழிக்க வேண்டும். உடல் வெப்பத்தை நீக்க, வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் எடுக்க வேண்டும்.

    • புரோட்டீன் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.
    • டீ அருந்தினால் தான் உடலுக்கு புத்துணர்ச்சியாக இருக்கும்.

    காலையில் எழுந்ததும் எலுமிச்சை சாறு கலந்த தண்ணீரை அருந்துங்கள். அதில் சர்க்கரையை சேர்த்துக்கொள்ள கூடாது. காபி அல்லது டீ போன்ற காலைநேர குடிநீர் எதையும் எடுத்துக்கொள்ளக்கூடாது.

    காலை உணவை அரசனைப்போல் உண்ண வேண்டும். புரோட்டீன் சத்துக்கள் நிறைந்த ஓட்ஸ் மற்றும் முட்டை, பழங்கள் உண்ணலாம்.

    உப்புமா, சிறுபருப்பு தோசை, எண்னெய் சேர்க்காத ரொட்டி, ஆம்லெட், பனீர் போன்றவற்றை தொட்டுக்கொள்ளலாம்.

    மதியம் நிச்சயமாக உங்களுக்கு அளவுகடந்த பசி எடுக்கலாம். அப்போது ஒரு பவுல் நிறைய பழங்கள் அல்லது காய்கறிகள் நிறைந்த சாலட் வகைகளை எடுத்துக்கொள்ளலாம்.

     கார்போஹைட்ரேட் நிறைந்த சிகப்பு அரிசி, முட்டை, வேகவைத்த சிக்கன் என புரோட்டீன் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

    எண்ணெய் சேர்க்காத கோதுமை ரொட்டி மற்றும் பருப்பு குழம்பு போன்றவற்றையும் உண்ணலாம்.

    மாலையில் ஒரு கப் காபி அல்லது டீ அருந்தினால் தான் உடலுக்கு புத்துணர்ச்சியாக இருக்கும். இருப்பினும் எண்ணெயில் வறுத்த சமோசா, பஜ்ஜி என உண்பதை தவிர்த்துவிடுங்கள். அதற்கு பதில் ஆப்பிள், நட்ஸ் வகைகள், வேகவைத்த கடலைகள் போன்றவற்றை உண்ணலாம்.

    இரவு உணவிற்கு என தனியாக சமைக்க வேண்டாம். மதியம் என்ன உணவு சாப்பிட்டீர்களோ அதையே இரவும் சாப்பிடலாம். தூங்குவதற்கு முன்பு பசி இருந்தால் சூடாக ஒரு டம்ளர் பால் குடிக்கலாம்.

    இந்த டயட்டை நீங்கள் தினமும் பின்பற்றினால் போதும் உங்களது கண்களை நீங்களே நம்ப முடியாத அளவுக்கு உடல் எடையில் நிச்சயம் நல்ல மாற்றம் இருக்கும்.

    • போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும்.
    • துரித உணவுகளையும் ஒதுக்கிவிட வேண்டும்.

    மாதவிடாய் காலத்தில் பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும். ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே மாதவிடாய் அறிகுறிகள் தென்பட தொடங்கிவிடும். தலைவலி, மூட்டு வலி, முதுகு வலி, கை-கால் வலி போன்ற பாதிப்புகள் எட்டிப்பார்க்கும். உடலில் ஒருவித சோர்வும் குடிகொள்ளும். சிலருக்கு முகப்பருக்கள் வெளிப்பட தொடங்கும். திடீர் கோபம், எரிச்சல், கவனக்குறைவு, மன அழுத்தம் ஏற்படக்கூடும். தூக்கமும் தடைபடும். இதுபோன்ற அறிகுறிகள் எட்டிப்பார்க்கும்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    * உணவு விஷயத்தில் கட்டுப்பாடுகளை பின்பற்ற தொடங்கிவிட்டாலே சுமூகமாக சமாளித்து விடலாம். அதிலும் வயிறு தொடர்பான பிரச்சினைகளில் இருந்து விடுபட கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது அவசியம். உணவில் உப்பின் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும். அதுபோல் உப்பு அதிகம் சேர்க்கப்படும் ஊறுகாய், காரமான மசாலா பொருட்களை தவிர்க்க வேண்டும். எண்ணெய் பலகாரங்கள், நொறுக்குத்தீனிகள், துரித உணவுகளையும் ஒதுக்கிவிட வேண்டும்.

    * மாதவிடாய் சமயங்களில் மூன்று வேளை சாப்பிடுவதற்கு பதிலாக உணவை பிரித்து நான்கு அல்லது ஐந்து வேளையாக சாப்பிடலாம்.

    * இஞ்சி டீ பருகுவது வலியை கட்டுப்படுத்த உதவும். ஊட்டச்சத்துமிக்க காய்கறிகள், முழு தானியங்கள், கீரைகள், பழங்களை சாப்பிட வேண்டும். மதிய உணவில் முட்டை சேர்த்துக்கொள்ளலாம்.

    * மாதவிடாய் சமயத்தில் புராக்கோலி, தக்காளி, சோளம், ஆரஞ்சு பழம், வேர்க்கடலை போன்றவைகளை சாப்பிடுவதும் உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும்.

    * வாழைப்பழங்கள், வெண்ணெய், சர்க்கரை வள்ளிக் கிழங்கு ஆகியவற்றில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. அவைகளை சாப்பிடுவது மனநிலையை தெளிவாக்கும். குடல் இயக்கத்திற்கும் நன்மை சேர்க்கும்.

    * போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும். மூச்சுப்பயிற்சி, யோகா, தியானம் போன்றவைகளையும் செய்து வரலாம்.

    • கால்சியம் உடலில் சேர்வதற்கு வைட்டமின் டி இன்றியமையாதது.
    • வைட்டமின் டி' உடலில் எளிதில் உட்கிரகிக்கப்படும்.

    எலும்பு வளர்ச்சிக்கும், உறுதிக்கும் ஏற்ற உணவுகள்:

    பால், தயிர், பாலாடைக் கட்டி, முட்டை, மீன், கோழி, காடை, ஆட்டிறைச்சி வகைகள். கீரைகளில், எலும் பொட்டிக்கீரை, வெந்தயக்கீரை, முருங்கை கீரை, பாலக்கீரை, பசலைக்கீரை, கொத்தமல்லி கீரை, காய்கறி வகைகளில், சோயாபீன்ஸ், பட்டர் பீன்ஸ், பீன்ஸ், பிரண்டை ரண்டு, முட்டைக் கோஸ், வெண்பூசணி, அவரைக் காய், முருங்கைக்காய், காலிபிளவர், பிரக்கோலி,முள்ளங்கி, பீட்ரூட், கேரட், பழங்களில் பேரீச்சை, அத்திப்பழம், மாதுளம் பழம், பன்னீர் திராட்சை, மற்றும் கருப்பு உளுந்து, பாசிப்பயறு, துவரம் பருப்பு, கம்பு, வரகு, சோளம், சாமை, குதிரை வாலி, எள், கொள்ளு, பாதாம், பிஸ்தா, முந்திரி பருப்பு போன்ற உணவுகளில் கால்சியம் மிகுந்து காணப்படுகிறது.

    வைட்டமின் டி:

    தினமும் அதிகாலை வெயில் அல்லது மாலை இளவெயிலில் சிறிது நேரம் நடக்கலாம். இதனால் தோல் மூலம் உடம்புக்கு தேவையான வைட்டமின் டி கிடைக்கிறது. கால்சியம் உடலில் சேர்வதற்கு வைட்டமின் டி இன்றியமையாதது. ஒரு கிராம் குங்குமப்பூவை, 100 மி.லி. தேங்காய் எண்ணெய்யில் நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி, அதை இரண்டு துளி உள்ளுக்கு கொடுத்தும், உடம்பில் தேய்த்தும் மாலை இள வெயிலில் நடைப்பயிற்சி செய்து வந்தால் 'வைட்டமின் டி' உடலில் எளிதில் உட்கிரகிக்கப்படும்.

    பால் ஒவ்வாமை:

    லாக்டோஸ் இன்டாலரன்ஸ் என்னும் பால் ஒவ்வாமை உடையவர்கள் பாலுக்கு பதிலாக சோயா பால், தேங்காய் பால், பாதாம் பால் இவைகளில் ஒன்றை சாப்பிட்டு வந்தால் தினசரி தேவையான கால்சியம் நம் உடலுக்கு கிடைத்துவிடும்.

    கொள்ளு ரசம்:

    கொள்ளில் சோயாவுக்கு இணையாக கால்சியம் உள்ளது. எலும்பு உறுதிக்கு கொள்ளுரசம் மிகவும் நல்லது. எலும்பை உறுதிப்படுத்தி, தேவையற்ற கொழுப்பு, சதையை குறைக்கும். கொள்ளு - 10 கிராம், மிளகு, சீரகம், கொத்தமல்லி, பூண்டு, புளி அல்லது தக்காளி தேவையான அளவு எடுத்து ரசமாக வைத்துக் குடிக்க வேண்டும்.

    கீரை:

    எலும்பொட்டிக் கீரை என்றழைக்கப்படும் ஒரு கொடி வகை தாவரம். இந்த செடியின் இலையை பாலுடன் நன்கு அரைத்து காலை, மாலை இருவேளை ஒரு நெல்லிக்காய் அளவு உணவுக்கு முன்போ அல்லது பின்போ சாப்பிட்டு வர எலும்புகள் உறுதியடையும்.

    பிரண்டை:

    பிரண்டைத் தண்டில் ஏராளமான கால்சியம், பாஸ்பரஸ் படிம வடிவில் உள்ளது. பிரண்டையை நல்லெண்ணெய் விட்டு வதக்கி, புளி சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டு வர வேண்டும். இதை புளி சேர்க்காமல் உணவில் சேர்த்துக் கொண்டால் தொண்டைக் காறலுடன், எரிச்சல் உண்டாகும்.

    முடவாட்டுக்கால் கிழங்கு சூப்

    முடவாட்டுக்கால் என்பது மலைப்பகுதிகளில் வளருகின்ற பெரணி வகைத் தாவரத்தின் கிழங்கு ஆகும். இதை சிறு துண்டுகளாக நறுக்கி அல்லது அரைத்து இதனுடன் தேவையான அளவு உப்பு, சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம், கறி மசாலா சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வந்தால் எலும்பு அடர்த்தி அதிகரித்து எலும்புகள் உறுதியாகும். உடல் சோர்வு, களைப்பு, வலி நீங்கும். எலும்புகளை பலப்படுத்தும் சித்த மருந்துகள்:

    1) அமுக்கரா சூரணம் 1 கிராம், முத்துச் சிப்பி பற்பம் 200 மி.கி., குங்கிலிய பற்பம் 200 மி.கி.. சங்கு பற்பம் 200 மி.கி. அல்லது பலகரை பற்பம் 200 மி.கி. வீதம் இருவேளை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சாப்பிட்டு வந்தால் எலும்புகள் உறுதியாகும்.

    2) எலும்புகள் சார்ந்த வலிகள் நீங்குவதற்கு விடமுட்டி தைலத்தை வெளியே பூசி வர வேண்டும்.

    எலும்பு முறிவை சீராக்கும் தைலம்

    தேவையான பொருட்கள்: பிரண்டைச் சாறு 100மி.லி., எலும்பொட்டிக் கீரைச் சாறு 100 மி.லி., மஞ்சிட்டி 20 கிராம், சுக்கு 20 கிராம், நல்லெண்ணெய் 250 மி.லி. மேற்கண்ட பொருட்களை எடுத்து நல்லெண்ணெய்யில் கலந்து காய்ச்சி எண்ணெய் பதத்தில் எடுத்து கொள்ளவும். இதை தேய்த்து வந்தால் எலும்புகள் உறுதியாகும், வலிகள் நீங்கும்.

    • சாப்பிடும் உணவுகளில் இன்னும் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
    • கருவில் உள்ள குழந்தைக்கு உடல்நல பிரச்சினைகளை உண்டாக்கக் கூடும்.

    கர்ப்ப காலத்தின் போது நீங்கள் சாப்பிடும் உணவுகளில் இன்னும் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதிகப்படியான சர்க்கரை மற்றும் மதுபானம் போன்ற நச்சுப்பொருட்களை தவிர்ப்பது மட்டுமின்றி, சமைக்கப்படாத மீன், வறுத்த உணவுகள், அரைகுறையாக சமைக்கப்பட்ட மாமிசம், சரியாக கழுவப்படாத பழங்கள் மற்றும் குறிப்பிட்ட காய்கறிகளையும் உண்பதை தவிர்க்க வேண்டும். அவற்றில் தூய்மைக் கேடு ஏற்படும் வாய்ப்புள்ளதால் கருவில் உள்ள குழந்தைக்கு உடல்நல பிரச்சினைகளை உண்டாக்கக் கூடும்.

    நன்றாக சமைக்கப்பட்ட, ஊட்டச்சத்து மிகுந்த, ஃபோலிக் அமிலம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போன்ற வைட்டமின்களும், மினரல்களும் நிறைந்த உணவினை தினமும் அதிகமாக எடுத்துக்கொள்வது நல்லது.

    தவிர்க்க வேண்டியவை:

    * மீன்களில் அதிக அளவில் மெர்க்குரி இருக்கும், இதனை அதிக அளவில் உட்கொள்ளும் பட்சத்தில், குழந்தைக்கு நரம்பு சம்பந்தமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். சுறா, மர்லின், ப்ளூஃபின் டியூனா, மற்றும் ஆரஞ்சு மற்றும் ஸ்வார்ட் மீன் போன்ற மீன்களை கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டும்.

    * பச்சை உணவுகளையும், மாமிசம் போன்ற அரைகுறையாக சமைக்கப்பட்ட உணவுகளையும் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், அவை லிஸ்டீரியா பாக்டீரியாவினால் மாசுபடுத்தப்பட்டிருக்கலாம், இதன்மூலம் கருக்கலைப்பு, குறைப்பிரசவம் போன்றவை ஏற்படலாம்.

    * பலருக்கு பச்சை முட்டை சாப்பிடுவது வழக்கமாக இல்லாமல் இருக்கலாம், ஆயினும் மயோனேஸ், சீஸர் சாலட் இந்த உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். மேலும் சமைத்த முட்டைகளையே உண்ண வேண்டும்.

    * பதப்படுத்தப்படாத பால் அல்லது பதப்படுத்தப்படாத பால் சார்ந்த பொருட்களைத் தவிர்க்க வேண்டும், ஏனென்றால் இவற்றில் லிஸ்டீரியா உள்ளது. இந்த பாக்டீரியாவால் கர்ப்பத்திலுள்ள சிசு அல்லது பிறந்த குழந்தைக்கு மோசமான தீங்குகள், குறைப்பிரசவம் கூட ஏற்படலாம்.

    * பச்சை நிற பப்பாளியில் கருச்சிதைவிற்கு இட்டுச் செல்கிற, கருப்பை சுருக்கத்தை ஏற்படுத்தக் கூடிய நொதி உள்ளது. பழுக்காத பப்பாளியை உண்பது குறைப்பிரசவத்திற்கு இட்டுச் செல்லக் கூடிய வாய்ப்புள்ளது. எனவே, கர்ப்ப காலத்தின் போது இந்த உணவினை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

    * நன்றாக சுத்தம் செய்யப்பட்ட பழங்களையும், காய்கறிகளையும் நீங்கள் உண்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். ஒரு வேளை அவை சரியாக கழுவப்படாவிட்டால், இவைகளின் மூலம் டாக்ஸோப்ளாஸ்மோசிஸ் என்னும் நோய் பரவும் வாய்ப்புள்ளது.

    * காரமான உணவுகள் என்பது சில சமயங்களில், கர்ப்பகாலத்தின் போது உண்பதற்கு பரிந்துரைக்கப்படுவதில்லை. ஏனென்றால், அவற்றால் வயிற்று அமிலம் அல்லது பிற இரைப்பை சிக்கல்கள் போன்றவை உருவாக வாய்ப்பிருப்பதால் இவ்வாறு கருதப்படுகிறது.

    * துளசி, கற்பூரவள்ளி, பெருஞ்சீரகம், அல்லது கடுங்காரமுள்ள சிவப்பு மிளகு போன்றவை கருப்பை சுருக்கத்திற்கு உதவுவதாக நம்பப்படுகிறது. எனினும், ஒரு சில பொருட்களால் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்புள்ளதால், அவற்றை கர்ப்ப காலத்தின் போது சாப்பிடுவது தடை செய்யப்பட்டுள்ளது.

    • உடலின் உறுப்புகளுக்கு முக்கிய அம்சம் எலும்புகள் தான்.
    • உறுப்புகளை பாதுகாக்கவும் எலும்புகள் மிகவும் அவசியம்.

    நம் உடலின் உறுப்புகளுக்கு முக்கிய அம்சம் எலும்புகள் தான். அவை தான் உடலுக்கு உரிய கட்டமைப்பையும், வலிமையையும் வழங்கும். அதோடு தசைகளை பாதுகாக்கவும், உறுப்புகளை பாதுகாக்கவும் எலும்புகள் மிகவும் அவசியம். அப்படிப்பட்ட எலும்புகள் வலிமையின்றி போனால் அவை உங்களை பலவீனம் அடையச்செய்யும். எலும்புகளின் ஆரோக்கியத்தை கண்டுகொள்ளாமல் இருப்பது உடலின் கால்சியம் இழப்புக்கு வழிவகுக்கும்

    இதனைத் தவிர்க்கவும், எலும்புகளை வலுப்படுத்தவும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும். அப்படி இயற்கையாகவே எலும்புகளை வலுப்படுத்துவது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க...

    எலும்புகளை பலவீனமாக்கும் உணவுப்பழக்கம்

    தற்போதைய உணவுப்பழக்கம் நமது எலும்புகளை பெரிதும் பாதிக்கிறது. ஏனெனில், நாம் சாப்பிடும் பல உணவுகளில் கால்சியம் மட்டுமின்றி, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஏதும் இருப்பதில்லை. இதுபோன்ற உணவுகளையே தொடர்ந்து எடுத்துக் கொள்வது ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

    மெக்னீசியம் நிறைந்த காலை உணவுகள்

    நட்ஸ் வகைகளான முந்திரி, பாதாம், அக்ரூட் பருப்புகள் போன்ற மெக்னீசியம் நிறைந்த உணவுகள் மட்டுமின்றி சியா விதைகள், ஆளி விதைகள், பூசணி விதைகள், சோயா விதைகள் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இவை எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், அதன் அடர்த்தியை அதிகரிக்கவும், வலுப்படுத்தவும் உதவும். நட்ஸ் சாப்பிட விரும்புவோர் இரவு முழுவதும் அதனை ஊற வைத்துவிட்டு பின் காலையில் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். அதேபோல், சியா விதையை காலையில் ஒரு கிளாஸ் வெந்நீரில் 10 நிமிடம் ஊறவைத்து சாப்பிடலாம்.

    கால்சியம் நிறைந்த உணவுகள்

    நம் உடலில் உள்ள எலும்புகள் மற்றும் பற்கள் கால்சியத்தால் ஆனது ஆகும். இவை தான் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமான தாதுக்கள் ஆகும். பொதுவாக நம் உடலுக்கு ஒரு நாளைக்கு 1000 மில்லிகிராம் கால்சியம் தேவைப்படும். பெரும்பாலும் மதிய உணவில் தயிரை சேர்த்துக் கொள்ளுங்கள். அதேபோல் பால் பொருட்களான பன்னீர் போன்றவை, பச்சை இலை காய்கறிகளை சேர்த்துக் கொள்ளுங்கள். இவை மெக்னீசியம் மற்றும் கால்சியத்தின் சிறந்த ஆதாரமாகும்.

    புரதம் நிறைந்த உணவுகள்

    எலும்புகள் 50 சதவீதம் புரதத்தால் ஆனது. அதனால் போதுமான அளவு புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்வது எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். அதேபோல், இவை கால்சியத்தை உறிஞ்சவும் உதவும். காலை உணவு அல்லது மாலை நேர சிற்றுண்டியில் வேர்க்கடலையை சேர்த்துக் கொள்ளலாம். இது புரதம் நிறைந்த சிறந்த உணவாகும். அதேபோல், வறுத்த கொண்டைக்கடலை, ஹம்முஸ் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். இது சுவையுடன், ஆரோக்கியத்தையும் உங்களுக்கு அளிக்கும்.

    யோகாசனங்கள்

    சில வகை ஆசனங்கள் மூட்டு வலியைத் தடுக்கவும், எலும்புகளை வலுப்படுத்தவும் மட்டுமின்றி, ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்சனைகளையும் தடுக்க உதவும். அவை என்னவென்றால், ஏகபாதாசனம் மற்றும் நடராஜாசனம். இவை ஒற்றைக் காலால் செய்யும் ஆசனங்கள்.

    அதுமட்டுமின்றி, அதோமுக ஸ்வனாசனத்தையும் முயற்சிக்கலாம். யோகாசனம் மட்டுமின்றி, ஸ்கிப்பிங், ஜாக்கிங், வாக்கிங் போன்றவற்றையும் முயற்சி செய்யலாம். இதனால் உடல் எடை குறையும். உடலுக்கேற்ற சரியான உடல் எடையை விட, அதிக எடை கூட எலும்புகளை வலுவிழக்கச் செய்து உங்களை பலவீனமாக்கும்.

    • தினமும் காலை உணவை தவறாமல் சாப்பிட்டுவிடுங்கள்.
    • உடலுக்கு வைட்டமின் டி சத்து மிக அவசியம்.

    பெண்கள் 40 வயதை தொடும்போதே பிடித்தமான உணவுகளை சாப்பிடுவதை விடுத்து, உடலுக்கு பொருத்தமான உணவுகளை சாப்பிட முன்வரவேண்டும். ஏனென்றால் 40 வயதில் இருந்து 50 வயதிற்குள் எப்போது வேண்டுமானாலும் அவர்கள் 'மனோபாஸ்' என்கிற மாதவிலக்கு நிரந்தரமாக நின்றுபோகும் கட்டத்தை அடையலாம்.

    எனவே அப்போது பெண்களின் உடலில் பெருமளவு ஹார்மோன் மாற்றங்கள் நிகழும். அது உடலிலும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும். அதற்கு ஏற்றபடி உணவில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டால் மட்டுமே ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும். ஆரோக்கியத்தை பாதுகாத்தால் தான் அழகாகவும் தோன்ற முடியும்.

    * காலை எட்டு மணிக்குள் தினமும் காலை உணவை தவறாமல் சாப்பிட்டுவிடுங்கள்.

    * உடலுக்கு வைட்டமின் டி சத்து மிக அவசியம். அதனால் வாரத்தில் மூன்று நாட்களாவது காலை வெயில் உடலில் பட வேண்டும்.

    * கொழுப்பு சத்து நிறைந்த உணவுகள் சாப்பிடுவதை முழுமையாக தவிர்த்திடுங்கள். வறுத்த, பொரித்த உணவுகளை அறவே ஒதுக்கிவிடுங்கள்.

    * வாரத்தில் இரண்டு நாட்கள் முட்டை சாப்பிடுங்கள். அதில் மிளகுதூள் கலந்து சாப்பிடுவது எல்லா வயதினருக்கும் சக்தி தரும்.

    * மூன்று நேரமும் சாதம் உண்ணும் பழக்கம் இருந்தால், அதை முதலில் இரண்டு நேரமாக குறைத்து, பின்பு மதியம் ஒரு நேரம் மட்டும் சாப்பிடுங்கள். சாதத்தை மூன்று நேரமும் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிப்பதை தவிர்க்க முடியாமல் போய் விடும்.

    * 40 வயதிற்கு மேல் தசை பலமிழப்பு, கண்பார்வை குறைபாடு போன்றவை ஏற்படும். அவைகளை சரிசெய்ய கேரட் ஜூஸ் தயார் செய்து அதில் எலுமிச்சை சாறு கலந்து தினமும் பருகிவரவேண்டும். இது பார்வை நரம்புகளை பலப்படுத்தும் தன்மை கொண்டது.

    * பெண்கள் 40 வயது தொடங்கும்போதே மாமிசம் உண்பதை நிறுத்திவிடுவது நல்லது. அதேபோல் கடைகளில் விற்கப்படும் குளிர்பானங்களையும் பருகக்கூடாது. அதில் இருக்கும் பாஸ்பரஸ் அவர்கள் உடலில் இருக்கும் கால்சியத்தை வீணாக்கிவிடும். சிறுவயதில் இருந்தே பெண்களுக்கு கால்சியம் நிறைந்த உணவுகளை வழங்கிவரவேண்டும்.

    * முட்டை, இறைச்சி மூலம் உடலுக்கு அதிக புரோட்டீன் கிடைத்தால், அது உடலில் இருக்கும் கால்சியத்தை சிறுநீர் வழியாக வெளியேற்றிவிடும். அதனால் பெண்கள் 40 வயதுக்கு மேல் அத்தகைய புரோட்டீனை தவிர்த்து, இயற்கை உணவுகள் மூலம் கிடைக்கும் புரோட்டீனை உட்கொள்ளவேண்டும். சோயாவில் இது அதிக அளவில் உள்ளது.

    * 40 வயதுக்கு மேல் இளநரை, முடி உதிர்தல், பார்வைக்குறைபாடு, தசை சுருக்கம் போன்ற பல பிரச்சினைகள் தோன்றும். அதற்கு நிவாரணம் தருவது, கறிவேப்பிலை. இதனை தினமும் எல்லா வகை உணவிலும் சேர்க்கிறோம். ஆனால் சாப்பிடும்போது அதனை மட்டும் எடுத்து அப்புறப்படுத்திவிடுகிறோம். இனியும் அவ்வாறு செய்யாதீர்கள். கறிவேப்பிலையை உணவில் அதிகம் சேர்த்து சாப்பிடுங்கள். கறிவேப்பிலை துவையல், கறிவேப்பிலை பொடி போன்றவைகளையும் பயன்படுத்துங்கள்.

    * நாற்பது வயதாகும்போது ஊட்டச்சத்தியல் நிபுணரின் ஆலோசனையை பெற்று, உங்கள் உடலுக்கு பொருத்தமான உணவுகள் பட்டியலை பரிந்துரைக்க செய்யுங்கள். அந்த பட்டியல்படி உணவுகளை சாப்பிட்டு வாருங்கள். அதுபோல் டாக்டரை சந்தித்து உடல் பரிசோதனையும் செய்யுங்கள். அவர் பரிந்துரைத்தால் கால்சியம், வைட்டமின்-டி போன்ற மாத்திரைகளையும் உட்கொள்ளுங்கள்.

    • உடல் உழைப்பானது மிகவும் குறைந்துவிட்டது.
    • உடல் பெரிதாக சதைபோடுவதை உடல் பருமன் அல்லது உடல் கொழுப்பு என்கிறோம்.

    தற்போதைய தொழில்நுட்ப மயமான வாழ்க்கை முறையில் உடல் உழைப்பானது மிகவும் குறைந்துவிட்டது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. உலகம் முழுவதிலுமே தற்போது தொழில்நுட்பத்தை அதிகப்படுத்தி குறைவான உடல் உழைப்பை மேற்கொள்கின்றனர். இது உடல் பருமனில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. கட்டுக்குள் அடங்காத வகையில் உடல் பெரிதாக சதைபோடுவதை உடல் பருமன் அல்லது உடற் கொழுப்பு என்று கூறுகிறோம்.

    உயிரை பறிக்கும் உடல்பருமன்

    2016-ல் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கைல் 1980-ம் ஆண்டுக்கு பின்னர் உடல் பருமன் உள்ளோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாகவும் உடல் நிறை குறைவினால் ஏற்படும் மரணங்களை விட உடல் பருமனால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை அதிக அளவு இருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.

    உடல் பருமன் என்பது தடுக்கப்பட வேண்டிய நிலை எனவும் உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. தற்போது உலகளாவிய ரீதியில் 30 சதவீதமான மக்கள் குறைவான உடல் உழைப்பை மேற்கொள்கின்றனர். உடல் பருமன் ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணம் சிறுகுழந்தைகள் மற்றும் இளைஞர்கள் தொலைக்காட்சி மற்றும் செல்போன் பார்ப்பதிலேயே அதிக நேரத்தை செலவிடுகின்றனர். இது உடல் பருமன் ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணமாக கருதப்படுகின்றது.

    முந்தைய காலங்களில் குழந்தைகள், இளைஞர்கள் மாலை நேரங்களில் வீதிகளில் விளையாடுவதை காணமுடிந்தது. ஆனால் இன்று அத்தகைய நிலை மாறி விளையாடுவதும் கூட செல்போனிலும், கம்ப்யூட்டரிலும் என்ற அவல நிலை ஏற்பட்டுவிட்டது.

    மேலும் அதிக உடல் எடையானது மனிதர்களில் பல்வேறு மாற்றங்களுக்கும் நோய்களுக்கும் வழிவகுக்கிறது. முக்கியமாக உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மூச்சுத்திணறல், மூட்டுவலி, முதுகு வலி, மாரடைப்பு, மார்பக புற்றுநோய், பித்தப்பை கற்கள், குடல் இறக்கம், மலட்டுத்தன்மை போன்ற நோய்கள் உடல் பருமன் அதிகரிப்பால் ஏற்படும் அபாயகரமான விளைவுகள் என்பது நம்மில் பலரும் அறியாத விசயம்.

    மிகவும் சிலருக்குதான் அது மரபு வழியாகவும் சில மருத்துவ காரணங்களினாலும் சில உளப்பிரச்சினைகளாலும் ஏற்படுவதாக மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

    மேலும் போதிய தூக்கம் இன்மை, நாளமில்லா சுரப்பிகளில் ஏற்படும் பாதிப்புகள், அதிக புகைப்பழக்கம், தாமதமான குழந்தை பேறு போன்ற காரணங்களும் உடல் பருமனுக்கு வழிவங்குகின்றது.

    உலகளாவிய அளவில் தடுக்கக் கூடிய நோயினால் மனிதர்கள் இறப்பதில் உடல் பருமன் முதன்மை வகிப்பது மிகவும் வருந்தத்தக்கது. உடல் பருமன் என்பது உடல் அளவில் மட்டுமன்றி மனதளவிலும் மனிதர்களை பாதிப்படைய செய்கின்றது.

    தெருவுக்கு மூன்று ஜிம்கள் முளைப்பதற்கும் உடல் பருமன் முக்கிய காரணமாக உள்ளது. உடல் பருமனை காட்டுப்படுத்த அனைவரும் ஜிம்மின் உதவியை நாட ஆரம்பித்துவிட்டனர். இதற்கெல்லாம் காரணம் நாம் உடல் பருமன் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதால் தான்.

    அழகும் ஆரோக்கியமும் எப்போதும் ஒன்றையொன்று சார்ந்திருக்கிறது. ஆரோக்கியம் இல்லாத அழகு அஸ்திவாரம் இல்லாத கட்டிடம் போன்றது. உடல் பருமனை கட்டுக்குள் வைப்பதற்கு நாம் எப்போதும் ஆரோக்கியமான முறைகளையும், உணவுகளையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.

    இப்போதெல்லாம் மனிதர்களுக்கு எதிலும் பொறுமை என்பதே இருப்பதில்லை. உடல் பருமனை குறைக்கவும் உடனடி தீர்வையே நாடுகின்றனர். இது முற்றிலும் தவறானது. உடனடியாக கிடைக்கும் தீர்வு நிலையானதாக இருக்காது.

    உடல் பருமனை குறைக்க நாள் முழுவதும் ஜிம்மில் கிடப்பதும், மெடிக்களில் ஆலோசனை இன்றி உடலை குறைக்க மருந்துக்களையும், பானங்களையும் உபயோகித்து குறைப்பது மிகவும் சாதாரணமாக மாறிவிட்டது. இதன் விளைவுகள் எவ்வளவு அபாயகரமாக இருக்கும் என்பது குறித்து பலரும் அக்கறை செலுத்துவதில்லை. உடல் பருமன் உடனடியாக தோன்றுவது அல்ல. கொழுப்பு என்பது உடலுக்கு ஆற்றல் தேவைப்படும் போது எடுத்துக்கொள்ள வைத்திருக்கும் தேக்கம் ஆகும்.

    பெண்களுக்கு 20 முதல் 25 சதவீதமும், ஆண்களுக்கு 12 முதல் 15 சதவீதமும் உடலில் கொழுப்பு காணப்படுகிறது. பெண்களுக்கு அவர்களின் மகப்பேறுக்காக மார்பகம், கூபகம், தொடை பகுதிகளில் 12 சதவீதம் கூடுதலாக அத்தியாவசிய கொழுப்பு காணப்படுகின்றது. ஆண்களுக்கு இது 3 சதவீதம் தான் காணப்படும். உடல் பருமன் தேக்கி வைத்துள்ள கொழுப்பு அதிகரிப்பத்தால் மட்டுமே உருவாகின்றது. கூடுதல் உணவு, குறைந்த உடல் உழைப்பு, சில நேரங்களில் பரம்பரை காரணங்கள் போன்ற காரணங்களால் உடல் பருமன் அதிகரிக்கிறது.

    குறைவான கலோரியில் நிறைவான நார்சத்து கொண்ட உணவை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும். சர்க்கரை, எண்ணெயில் பொரித்த உணவுகளை முழுமையாக தவிர்க்க வேண்டும். கடைகளில் கிடைக்கும் ஜங்க்புட் வகைகளை நாடுவதை உடல் பருமன் உடையவர்கள் முற்றிலுமாக நிறுத்த வேண்டும்.

    மேலும் தொடர் உடற்பயிற்சி மற்றும் யோகா போன்றவற்றுடன் ஆரோக்கியமான உணவு பழக்கத்தை கடைப்பிடித்தால் மட்டுமே உடல் பருமனை எளிதாக விரட்டியடிக்க முடியும்.

    • மற்ற குழந்தைகளை போல் தனது குழந்தையும் புத்திசாலியாக இருக்க வேண்டும்.
    • குழந்தைகளின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க சில உணவுகள் இருக்கின்றன.

    இந்த உலகத்தில் வாழும் ஒவ்வொரு பெற்றோரும் விரும்பும் ஒரே விஷயம் மற்ற குழந்தைகளை போல் தனது குழந்தையும் புத்திசாலியாக இருக்க வேண்டும் என்று தான். அதற்காக பல வழிகளை கையாளுவதும் உண்டு. ஆனால், உடலுக்கு நல்ல சத்தான உணவுகளை கொடுக்காமல் என்ன செய்தாலும் பலனில்லை. அதாவது, குழந்தைகளின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க சில உணவுகள் இருக்கின்றன. அவற்றை அவர்களுக்கு சரிவர கொடுத்துவந்தாலே குழந்தை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியமான இருப்பார்கள். குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிக்க என்னென்ன உணவுகளை கொடுக்க வேண்டும் என்பதை பார்க்கலாம் வாங்க....

    பால்

    புரோட்டீன், வைட்டமின் மற்றும் மினரல்ஸ் நிறைந்த பால் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் ஞாபக சக்தியை அதிகரிக்கவும் மிகவும் அவசியமானது. குழந்தைகள் தினமும் ஒரு கிளாஸ் பால் குடிக்கும்போது, அவர்களின் எலும்புகளின் ஆரோக்கியமும் மேம்படுகிறது. அதுமட்டுமல்லாமல், குழந்தைகளுக்கு நல்ல பல் ஆரோக்கியம் இருக்கும், பலவீனமான ஈறுகள் மற்றும் பல் சிதைவு அபாயமும் குறையும். அதேபோல், தயிரிலும் துத்தநாகம், பி 12 மற்றும் செலினியம் போன்ற மூளை வளர்ச்சிக்கு தேவையான முக்கியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதை தினந்தோறும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    மீன்

    ஞாபக சக்தி அதிகரிப்பதில் முக்கியமான உணவுப்பொருளாக மீன் மற்றும் பிற கடல் உணவுகள் விளங்குகின்றன. காரணம், இவற்றில் மூளை வளர்ச்சியை அதிகரிக்க உதவும் புரோட்டீன், துத்தநாகம், இரும்பு, கோலின், அயோடின் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன. அந்தவகையில், நண்டு, இறால், சால்மன், கானாங்கெளுத்தி, மத்தி மீன் போன்றவற்றை சமைத்துக் கொடுக்கலாம். வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை கொடுக்கலாம். இருப்பினும், பாதரசம் அதிகம் உள்ள டுனா மற்றும் வாள்மீன் போன்ற மீன்களை தவிர்க்கவும். மீன் உண்பவர்களுக்கு சாம்பல் சத்து அதிகம் இருப்பதாக ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

    முட்டை

    முட்டையின் நன்மைகளை நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. ஏனென்றால், நமது ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் இதில் நிறைந்துள்ளன. அவை குழந்தைகளின் ஞாபக சக்தியை மேம்படுத்தும் தன்மை கொண்டது. அதுமட்டுமல்லாமல், குழந்தையை நாள் முழுவதும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் வைத்திருக்கும் "செரடோனின்" என்ற மகிழ்ச்சி ஹார்மோன் உருவாக்கத்திற்கு முட்டை உதவுகிறது. எனவே தினமும் ஒரு முட்டையாவது குழந்தைகளுக்கு சாப்பிட கொடுங்கள்.

    நட்ஸ்:

    வால்நட் மற்றும் பாதாம் போன்ற நட்ஸ் வகைகளில் வைட்டமின் இ, துத்தநாகம், ஃபோலேட், டிஹெச்ஏ, இரும்பு மற்றும் புரதம் அதிகளவு காணப்படுகிறது. இவை குழந்தையின் மூளைக்கு எரிபொருளை அளித்து, நினைவாற்றலை மேம்படுத்தவும், குழந்தைகளின் மனநிலை மாற்றங்களைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. மேலும், இவை மூளையில் வரக்கூடிய அல்சைமர் என்ற நோய் குழந்தைகளை தாக்காமல் பார்த்துக் கொள்கிறது. எனவே, தினமும் 5 அல்லது 6 பாதாம் அல்லது ஒரு வால்நட் பருப்பையாவது சாப்பிட கொடுக்க வேண்டும்.

    ஆரஞ்சு பழம்:

    ஆரஞ்சு பழங்களில் வைட்டமின் சி நிரம்பி உள்ளது, இது ஆரோக்கியமானது. மூளைக்கு இன்றியமையாதது. ஆரஞ்சு பழங்களை உட்கொள்வதால் குழந்தைகளின் செயல்திறன், ஞாபக சக்தி அதிகரிக்கிறது. எனவே, ஒருநாள் விட்டு ஒரு நாள் முழு ஆரஞ்சு பழத்தை சாப்பிட கொடுக்கலாம். சிறுகுழந்தைகளுக்கு கொடுக்கும் போது அதில் இருக்கும் கொட்டைகளை நீக்கிவிட்டு கொடுக்க மறந்துவிடாதீர்கள்.

    • வீங்கி பருத்து வலிக்கும் நரம்புகள் வெரிகோஸ் வெயின்.
    • வயதான காலத்தில் வரக்கூடிய பொதுவான பிரச்சனை.

    வீங்கி பருத்து வலிக்கும் நரம்புகள் வெரிகோஸ் வெயின் என்று அழைக்கப்படுகின்றன. வயதாகும் போது பெரும்பாலானோர் இந்த பிரச்சனையை எதிர்கொள்கின்றனர்.

    வெரிகோஸ் வெயின் நரம்புகள் வயதான காலத்தில் வரக்கூடிய பொதுவான பிரச்சனை. ஆனால் இவை எப்போது வேண்டுமானாலும் தோன்றலாம். உடலில் கால்கள் மற்றும் முகம் போன்ற முக்கிய பகுதிகளில் ஏற்படும் போது இது சங்கடத்தை உண்டு செய்யும். சில சிலந்தி நரம்புகள் வெளிப்படையாக பார்க்க முடியும். இந்த வெரிகோஸ் வெயினுக்கு உரிய வீட்டு மருத்துவம் என்ன என்பதை பார்க்கலாம்.

    வீங்கி பருத்து வலிக்கிற நரம்புகள் அல்லது வெரிகோஸ் வெயின் என்பது அடர் நீலம் அல்லது ஊதா நிறத்தை கொண்டிருக்கும். இது தோலின் அடியில் இருந்து வெளியேறலாம். இந்த நரம்புகளில் சிறிய வால்வுகள் பலவீனமடையும் போது வீங்கி பருத்து வலிக்கும் நரம்புகள் உருவாகலாம். இது நரம்புகள் இரத்தம் பின்னோக்கி பாய்வதை நிறுத்துகின்றன. இவை சேதமடையும் போது ரத்தம் நரம்புகளில் தேங்கும். இதனால் நரம்புகளில் வீக்கம் உண்டு செய்கிறது.

    நோயின் அறிகுறிகள்:

    * கால்களில் எரியும் உணர்வு இருக்கும்

    * கால்கள் கனமாக இருக்கும்

    * தசைப்பிடிப்பு இருக்கும்

    * இரவில் அதிகமாக இருக்கும்.

    * கால்கள் மற்றும் கணுக்கால் வீக்கம்

    * வீங்கி பருத்து வலிக்கும் நரம்புகள்

    * நரம்புக்கு மேல் மெல்லியதாக தோன்றும்

    * உலர்ந்த அல்லது அரிப்பு தோல்

    உடற்பயிற்சி

    வழக்கமான உடற்பயிற்சி கால்களில் சிறந்த ரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது. இது நரம்புகளில் தேங்கியிருக்கும் ரத்தத்தை வெளியேற்ற செய்கிறது. உடற்பயிற்சி செய்வதால் ரத்த அழுத்தம் குறைக்க உதவுவதோடு வீங்கி பருத்து வலிக்கும். தசைகள் அதிக சிரமமின்றி வேலை செய்ய பயிற்சிகள் உதவுகின்றன. நீச்சல், நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், யோகா போன்றவற்றை செய்யலாம்.

    உணவுவகைகள்

    உப்பு அல்லது சோடியம் நிறைந்த உணவுகள் உடலில் தண்ணீரை தக்க வைக்கும். உப்பு உணவை குறைப்பதன் மூலம் நீர் தக்கவைப்பை குறைக்கலாம். பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுகள் நீர் தேக்கத்தை குறைக்க செய்யும். பாதாம் மற்றும் பிஸ்தா பருப்புகள், பருப்புகள், வெள்ளை பீன்ஸ், உருளைக்கிழங்கு, இலை காய்கறிகள், சால்மன் மற்றும் டுனா போன்ற சில மீன்கள் மற்றும் நார்ச்சத்து உள்ள உணவுகளான கொட்டைகள், விதைகள் மற்றும் பருப்பு வகைகள், ஓட்ஸ், கோதுமை மற்றும் ஆளிவிதை, முழு தானிய உணவுகள் இதன் மூலம் எடையை கட்டுக்குள் வைக்கலாம். ஏனெனில் அதிக எடையுடன் இருக்கும் போது கால்கள் வீங்கி பருத்து நரம்புகள் வலிக்க வாய்ப்புகள் அதிகம்.

    நீண்ட நேரம் உட்காருவதை தவிர்ப்பதன் மூலம் வெரிகோஸ் வெயின் குறையலாம். இரத்த ஓட்டம் சீராக இருக்க, அவ்வபோது சுற்றி செல்ல அடிக்கடி எழுந்து செல்வது நிலையை மாற்றி வைப்பது நோக்கமாக கொண்டிருக்க வேண்டும். குறுக்கு கால்களில் உட்காரக்கூடாது. இது கால்களுக்கு ரத்தஓட்டத்தை மேம்படுத்தலாம். சுழற்சி சிக்கல்களை சேர்க்கலாம்.

    பாதிக்கப்பட்ட பகுதிகளை மெதுவாக மசாஜ் செய்வது நரம்புகள் வழியாக இரத்தத்தை நகர்த்த செய்யலாம். ஒரு நபர் உகந்த விளைவுகளை அறிய மென்மையான மசாஜ் எண்ணெய்கள் அல்லது மாய்சுரைசர் பயன்படுத்தலாம். நரம்புகளில் நேரடியாக அழுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது திசுக்களை சேதப்படுத்தும்.

    • இரவில் தாமதமாக சாப்பிடுவது செரிமான உறுப்புகளுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும்.
    • தூக்கத்திற்கு இடையூறு ஏற்படும்.

    நம் முன்னோர்கள் ஊட்டச்சத்துமிக்க உணவு வகைகளை தேர்வு செய்து அவற்றை சரியான நேரத்தில் உட்கொள்ளவும் செய்தார்கள். அதிலும் குறிப்பாக இரவு உணவை 7 மணிக்குள் சாப்பிடுமாறு அறிவுறுத்தினார்கள். இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் அது சாத்தியமில்லாததாக இருக்கலாம். ஆனால் அவர்கள் கையாண்ட உணவுப்பழக்கமும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் ஆயுளை நீட்டிக்க செய்தன. இரவு 7 மணிக்குள் ஏன் சாப்பிட வேண்டும் என்று முன்னோர்கள் கூறி சென்றதன் பின்னணியில் இருக்கும் ஆரோக்கியம் சார்ந்த தகவல்கள் உங்கள் கவனத்திற்கு....

    செரிமானம் மேம்படும்:

    இரவு 7 மணிக்கு முன்பு இரவு உணவை சாப்பிட்டால் அதனை ஜீரணமாக்குவதற்கு உடலுக்கு போதுமான நேரம் கிடைக்கும். அதைவிடுத்து இரவில் தாமதமாக சாப்பிடுவது செரிமான உறுப்புகளுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும். அவற்றின் செயல்பாடு தாமதமாகும். இரவு 7 மணிக்குள் சாப்பிடுவது செரிமான அமைப்பு சுமூகமாக செயல்பட வழிவகை செய்யும்.

    ஊட்டச்சத்து உறிஞ்சப்படும்:

    உணவில் இருந்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உடலுக்கு போதுமான நேரம் கிடைக்க வேண்டும். இரவு உணவை முன்கூட்டியே உண்ணும்போது உடல் சுறுசுறுப்பாக இயக்கி ஊட்டச்சத்து உறிஞ்சுதல் செயல்முறையை துரிதப்படுத்தும். இரவு தாமதமாக உட்கொள்ளும்போது அந்த செயல்முறையும் தாமதமாகும்.

    தூக்கத்தை வரவழைக்கும்:

    இரவில் தாமதமாக சாப்பிடும்போது உணவு ஜீரணமாவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். அதனால் தூக்கத்திற்கு இடையூறு ஏற்படும். இரவு உணவை முன்கூட்டியே சாப்பிடுவதன் மூலம் உடல் தூக்கத்திற்கு சீக்கிரமாகவே இசைந்து கொடுக்கும். ஆழ்ந்த தூக்கத்தையும் பெற முடியும்.

    ஆற்றல் மேம்படும்:

    தூக்கத்தின்போது உடல் இயற்கையாகவே புத்துணர்ச்சி பெறுவதற்கான செயல்முறை நடைபெறும். ஆனால் இரவில் தாமதமாக சாப்பிடும்போது செரிமானம் ஆவதற்கே உடலின் ஆற்றல் முழுவதும் செலவிடப்படும். அதனால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்காது. இரவில் தூங்கினாலும் கூட காலையில் மந்தமான உணர்வு எட்டிப்பார்க்கும். இரவு உணவை முன்கூட்டியே சாப்பிட்டுவிட்டு தூங்கினால் உடலுக்கு போதுமான ஓய்வு கிடைக்கும். உடலுக்கும் புத்துணர்ச்சி கிடைத்து, அடுத்த நாள் முழுவதும் உற்சாகத்துடன் செயல்பட முடியும்.

    ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படும்:

    தூங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு அதிக அளவு உணவு உட்கொள்வது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யும். குறிப்பாக நீரிழிவு நோய் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும். இரவு 7 மணிக்கு முன்பு சாப்பிடுவது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவும். வளர்சிதை மாற்றத்தில் கோளாறுகள் ஏற்படுவதையும் தடுக்கும். ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

    குடும்ப நேரம்:

    இரவு உணவை குடும்பத்தினருடன் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்கு குறிப்பிட்ட நேரத்தை நிர்வகிக்க வேண்டும். அந்த நேரத்தில் அனைவரும் ஒன்று கூடி உணவருந்தும் பழக்கத்தை பின்பற்ற வேண்டும். அப்படி செய்வது இரவு உணவை தாமதமாக சாப்பிடும் பழக்கத்தை தடுத்துவிடும்.

    உடல் எடை நிர்வகிக்கப்படும்:

    மாலை, இரவு நேரங்களில் வளர்சிதை மாற்றத்தின் செயல்பாடு குறைந்துவிடும். அதனால் உடலில் சேரும் கலோரிகளை எரிப்பது சவாலானது. தாமதமாக சாப்பிடும்போது உடலில் சேரும் அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்படாமல் கொழுப்பாக மாறக்கூடும். அதனால் உடல் எடை அதிகரிக்க தொடங்கும். உடல் பருமன் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் உடல் எடையை நிர்வகிப்பதற்கு இரவு உணவை சீக்கிரமாக உட்கொள்வது நல்லது.

    ×