search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "constitutional law"

    • ஏப்ரல் 9 ஆம் தேதி திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவாலை சுனிதா கெஜ்ரிவால் சந்தித்தார்
    • ஆம் ஆத்மி தொண்டர்கள் நாட்டில் சர்வாதிகாரத்தை ஒழிக்கவும், ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் போராடுவோம் என்று உறுதிமொழி எடுக்க வேண்டும்

    முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அதிகாரபூர்வ இல்லத்தில் ஆம் ஆத்மி கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் சந்தித்து பேசினர். இக்கூட்டத்தில், முதல்வரின் மனைவி சுனிதா கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், டெல்லி அரசின் செய்தி தொடர்பாளர் கோபால் ராய், தேசிய பொதுச்செயலாளர் சந்தீப் பதக், மாநிலங்களவை எம்பி சஞ்சய் சிங், டெல்லி அமைச்சர் சவுரப் பரத்வாஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ஏப்ரல் 9 ஆம் தேதி திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவாலை சுனிதா கெஜ்ரிவால் சந்தித்தார். இந்த சந்திப்பில் அவர் 2 தகவல்களை சுனிதாவிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

    அது தொடர்பாக டெல்லி அரசின் செய்தி தொடர்பாளர் கோபால் ராய் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, நமது நாட்டின் அரசியலமைப்பு, ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஆகவே வரும் அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14-ம் தேதி அரசியல் சாசனத்தை காக்கும் தினமாகவும் சர்வாதிகாரத்திற்கு முடிவுகட்டும் நாளாகவும் கடைப்பிடிக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் கூறினார்.

    மேலும், நாடு முழுவதும் உள்ள ஆம் ஆத்மி தொண்டர்கள் நாட்டில் சர்வாதிகாரத்தை ஒழிக்கவும், ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் போராடுவோம் என்று உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் கூறியதாக அவர் தெரிவித்தார்.

    அரசியல் சாசனத்தை மாற்ற வேண்டும் என்று பாஜக எம்.பிக்கள் பேசி வருவதற்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி இதனை அறிவித்துள்ளது.

    • பொதுமக்களை போலவே வழக்கறிஞர்களுக்கும் சொந்த அரசியல் விருப்பங்களும் நம்பிக்கைகளும் இருக்கும்.
    • வழக்கறிஞர்களின் உண்மையான விசுவாசம் நீதிமன்றங்களுக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு மட்டுமே இருக்க வேண்டும் - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

    நாக்பூரின் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் நூற்றாண்டு விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கலந்து கொண்டார்.

    அந்நிகழ்வில் பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட், "வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தையும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும் தங்கள் "அரசியல் விருப்பங்கள் மற்றும் நம்பிக்கைகளுக்கு" மேலாக வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்து அண்மை காலங்களில் வழக்கறிஞர்கள் கருத்து தெரிவிக்கும் போக்கு கண்டு நான் மிகவும் கவலை அடைந்துள்ளேன்.

    நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போது வழக்கறிஞர்கள் பொதுமக்களிடம் இருந்து தங்களை வேறுபடுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.

    பொதுமக்களை போலவே வழக்கறிஞர்களுக்கும் சொந்த அரசியல் விருப்பங்களும் நம்பிக்கைகளும் இருக்கும். ஆனால், அவர்கள் அதற்கு மேல் சிந்திக்க வேண்டும். அவர்களின் உண்மையான விசுவாசம் நீதிமன்றங்களுக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு மட்டுமே இருக்க வேண்டும்.

    செய்தித்தாள்கள், ஊடகங்கள் வழியாக நீதிமன்ற தீர்ப்புகள் பற்றிய விவரங்களை பொதுமக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டிய கடமை வழக்கறிஞர்களுக்கு உள்ளது .

    இந்த வகையில், நீதிமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையே பாலமாகச் செயல்படும் ஆற்றல் வழக்கறிஞர்களுக்கு உள்ளது. சிக்கலான சட்ட கருத்துக்கள் மற்றும் நடைமுறைகளை பொதுமக்களுக்கு புரியும் படி எடுத்து சொல்வதன் மூலம் தான் நமது புரிதலை நாம் மேம்படுத்த முடியும்.

    எவ்வாறாயினும், நீதித்துறையின் சுதந்திரத்திற்கும் வழக்கறிஞர்களின் சுதந்திரத்திற்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது" என்று தலைமை நீதிபதி எச்சரித்தார்.

    • 1972ல் உச்ச நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்ற தொடங்கினார் நாரிமன்
    • எமர்ஜென்சிக்கு எதிராக குரல் கொடுத்தவர்களில் முக்கியமானவர் பாலி நாரிமன்

    உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் காலமானார். அவருக்கு வயது 95.

    சுமார் 70 வருட காலம் சட்டத்துறையில் பணியாற்றிய பாலி நாரிமன், 1929 ஜனவரி 10 அன்று மியான்மர் (அப்போது பர்மா) நாட்டின் தலைநகர் யாங்கோன் (அப்போதைய ரங்கோன்) நகரில் பிறந்தவர்.

    1950ல் மும்பை (அப்போதைய பம்பாய்) நகரில், உயர் நீதிமன்ற வழக்கறிஞராக பதிவு செய்து, படிப்படியாக வளர்ந்து, 1961ல் மூத்த வழக்கறிஞராக உயர்ந்தார்.

    1972ல் உச்ச நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்ற தொடங்கினார்.


    அரசியலமைப்பு சட்டம் (constitutional law) சம்பந்தமான சட்ட நுணுக்கங்களில் புகழ் பெற்ற வழக்கறிஞரான பாலி நாரிமன் பல முக்கிய வழக்குகளில் வாதாடி உள்ளார்.

    தேசிய ஜுடிஷியல் அப்பாயின்ட்மென்ட்ஸ் கமிஷன் (NJAC) எனப்படும் நீதிபதிகள் நியமன ஆணைய வழக்கு, கொலிஜியம் (Collegium) எனப்படும் நீதிபதிகள் தேர்வு குறித்த உச்ச நீதிமன்ற "அட்வகேட்ஸ் ஆன் ரெகார்ட்" அணியினரின் (SC AoR Association) வழக்கு, சிறுபான்மையினரின் உரிமைகளுக்கான டிஎம்ஏ பய் (TMA Pai) வழக்கு உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளை கையாண்டவர் நாரிமன்.

    1975 ஜூன் 25 அன்று, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கொண்டு வந்த "எமர்ஜென்சி" உத்தரவிற்கு எதிராக தான் வகித்து வந்த மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் (additional Solicitor General) பதவியை ராஜினாமா செய்தார் நாரிமன்.

    பொதுமக்களின் உரிமைகள் மற்றும் மதசார்பின்மைக்காக குரல் கொடுத்து வந்தவரான அவர், நீதிமன்றங்களின் முக்கிய தீர்ப்புகளின் நிறை-குறைகளை பொது மக்களுக்கு புரியும் வகையில் சிறப்பாக விமர்சனம் செய்து வந்தார்.

    அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை கடுமையாக விமர்சித்தவர் நாரிமன்.


    சட்டக்கல்லூரி மாணவர்கள் விரும்பி பிடிக்கும் சட்ட நுணுக்கங்கள் சம்பந்தமான முக்கிய நூல்களில் ஒன்றான "பிஃபோர் மெமரி ஃபேட்ஸ்" (Before Memory Fades), "தி ஸ்டேட் ஆஃப் நேஷன்" (The State of Nation), "காட் சேவ் தி ஹானரபிள் சுப்ரீம் கோர்ட்" (God Save the Honourable Supreme Court) ஆகிய நூல்கள் நாரிமன் எழுதியவை.

    1991ல் இந்திய அரசு பாலி நாரிமனுக்கு பத்ம பூஷன் விருதும், 2007ல் பத்ம விபூஷன் விருதும் வழங்கி கவுரவித்தது.

    மேலும், 1999லிருந்து 2005 வரை நாரிமன் மாநிலங்களவையின் நியமன உறுப்பினராக பதவி வகித்தார்.

    பாலி நாரிமனின் மகன் ரோஹிங்க்டன் நாரிமன் (Rohington Nariman) உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×