search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தல் புறக்கணிப்பு"

    • தொண்டர்களிடையே விவாதம் நடக்கிறது.
    • இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது எளிதானதல்ல.

    சென்னை:

    விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்துள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடுத்த இந்த முடிவு சரியா? தவறா? கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லதுதானா? என்று தொண்டர்களிடையே விவாதம் நடக்கிறது.

    ஏற்கனவே பாராளு மன்றத் தேர்தலில் படு தோல்வியை சந்தித்து இருக்கும் இந்த நேரத்தில் இந்த தேர்தல் புறக்கணிப்பு தொண்டர்களை சோர்வடையச் செய்யும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

    கடந்த காலங்களில் சட்டமன்ற, உள்ளாட்சி மன்றத் தேர்தல்களை தி.மு.க.வும் புறக்கணித்த வரலாறு இருக்கிறது. எனவே இது ஒரு பிரச்சினையாக இருக்காது. எல்லாவற்றையும் வெற்றிகரமாக சந்தித்து 2026 சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றுவோம் என்கிறார்கள் அதி.மு.க.வினர்.

    பேராசிரியர் ராமு மணிவண்ணன் கூறும் போது, `ஆளுங்கட்சியின் முறைகேடுகள், அதிகார துஷ்பிரயோகத்தை பார்த்து ஒரு கட்சி இவ்வாறு முடிவெடுப்பது சரியாக இருக்காது.

    இப்போது போட்டிக் களத்தில் இருந்து அ.தி.மு.க. விலகி இருப்பதன் மூலம் பா.ஜ.க. மேலும் வளர வழிபிறக்கும். அதேநேரம் சமீபகாலமாக பா.ஜ.க.வை கடுமையாக விமர்சித்து வரும் எடப்பாடி பழனிசாமியின் நிலைப்பாடு விவாதத்துக்குள்ளாகும்.

    தற்போதைய நிலையில் அ.தி.மு.க. கட்சிக்கு உள்ளிருந்தும், வெளியில் இருந்தும் தாக்கப்படுகிறது. கட்சிக்குள்ளும் ஒருங்கிணைப்பு இல்லை என்பதையே காட்டுகிறது.

    அதனால்தான் புறக்கணிப்பு முடிவை எடப்பாடி பழனிசாமி எடுத்திருப்பார் என்று கூறுகிறார்கள்.

    இதற்கிடையில் தேர்தலை புறக்கணித்தது தவறு என்றும் கட்சியை ஒருங்கிணைக்க தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யப் போவதாகவும் சசிகலா தெரிவித்துள்ளார்.

    இதை அ.தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர் கடுமையாக விமர்சித்தார். எடப்பாடி பழனிசாமி எடுத்த முடிவு சரியானது என்பது தொண்டர்களுக்கு புரியும். இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது எளிதானதல்ல. தேவையில்லாமல் தொண்டர்களின் உழைப்பையும் பொருளையும் வீணடிக்க அவர் விரும்பவில்லை.

    அம்மா காலத்திலும் தேர்தல் புறக்கணிப்பு நடந்துள்ளது. 2009-ல் 5 தேர்தல்களை அவர் புறக்கணித்தார். எனவே இதனால் கட்சி பலவீனமாகி விடும் என்ற வாதம் சரியானதல்ல.

    சசிகலாவும் பேசி பேசி பார்க்கிறார். ஆனால் யாரும் அவர் பக்கம் போகவில்லை. எனவே எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வரிசையில் அ.தி.மு.க.வுக்கு தலைமை வகிப்பது எடப்பாடி பழனிசாமிதான் என்பதை தொண்டர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்றார்.

    எழுத்தாளர் துரைகருணா கூறும்போது, ஆளுங்கட்சியின் அதிகார அத்துமீறல்கள் இருந்தாலும் அதை எதிர்த்து நின்று ஆளும் கட்சிக்கு எதிராக இவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பதை தேர்தல் மூலம் வெளிப்படுத்தினால் தான் கட்சி வலுப்பெறும். மக்கள் நம்பிக்கையை பெறும் என்றார்.

    அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் சமரசம் இந்த கருத்துக்களை மறுத்தார். எடப்பாடி பழனிசாமி எடுத்திருப்பது சரியான முடிவுதான். அ.தி.மு.க.வின் இலக்கு 2026 சட்டமன்றத் தேர்தல்தான். இடைத்தேர்தல் அல்ல.

    திருமங்கலம், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்கள் எப்படி நடந்தது என்பது தொண்டர்களுக்கு தெரியும். எனவே தேவையற்ற சிரமத்தை தொண்டர்களும் விரும்பமாட்டார்கள் என்றார்.

    மேலும் சில கட்சி நிர்வாகிகள் கூறும்போது, `ஒரு தொகுதி இடைத்தேர்தலை வைத்து கட்சி பலவீனமாகிவிடும் எனறு கணிக்க முடியாது. தொண்டர்களை பொறுத்தவரை கட்சி தலைமை என்ன முடிவெடுக்கிறதோ அதை ஆதரிப்பார்கள்.

    முக்கியமாக தி.மு.க.வை வீழ்த்த அ.தி.மு.க.வால்தான் முடியும் என்பது கட்சியினரையும் தாண்டி பொதுமக்களுக்கும் தெரியும். எனவே செல்வாக்கு எந்த வகையிலும் குறையாது' என்றனர்.

    • இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
    • இரட்டை இலை இல்லாமல் ஒரு தேர்தல் நடக்கிறது.

    சென்னை:

    விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. வேட்பாளராக சி.அன்புமணி போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி வேட்பாளராக டாக்டர் அபிநயா போட்டியிடுகிறார். அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருந்தது.

    இந்தநிலையில் விக்கிரவாண்டி தொகுதி சட்டசபை இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இடைத்தேர்தல் நியாயமாக நடக்காது என்பதால் இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பதாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    இந்தநிலையில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிக்க கூடாது என்று நடிகை கஸ்தூரி கூறியுள்ளார். இது தொடர்பாக நடிகை கஸ்தூரி அளித்த பேட்டி வருமாறு:-

    ஜனநாயக நாட்டில் தேர்தலை மக்கள் புறக்கணிக்கவே கூடாது. அதற்கான விழிப்புணர்ச்சியை நாம் ஒவ்வொரு முறையும் சொல்லிக்கொண்டிருக்கும் போது தமிழ்நாட்டின் 2-ம் பெரிய கட்சியான அ.தி.மு.க.வே தேர்தலை புறக்கணிக்கிறது என்பது எனக்கு ஏற்புடையது இல்லை. அவர்கள் போட்டியிட வேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன்.

    இரட்டை இலை இல்லாமல் ஒரு தேர்தல் நடக்கிறது என்பது தமிழ்நாட்டில் இது முதல் தடவை என்று நான் நினைக்கிறேன். எனவே இது எனக்கு ஏற்க முடியாத ஒரு அறிவிப்பாக இருக்கிறது. இதை எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகி கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதுதான் என்னைப் போன்ற பலரது விருப்பமாக இருக்கிறது.

    தி.மு.க. இருக்கும் இடத்தில் அ.தி.மு.க. அதை எதிர்க்க வேண்டும். அப்போதுதான் அது எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் உருவாக்கிய ஒரு அ.தி.மு.க.வாக இருக்கும். அவர்கள் ஒதுங்கிப்போவது என்பது கண்டிப்பாக பா.ஜ.க. தான் இன்றைக்கு பிரதான எதிர்க்கட்சி, நாங்கள் 3-வது இடத்துக்கு வந்து விட்டோம் என்று அவர்களே வாக்குமூலம் கொடுப்பது போல் இருக்கிறது. என்னாலும், என்னைப்போல் இருப்பவர்களாலும் அதை ஜீரணிக்கவே முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இரட்டை குவளை முறை நடைமுறையில் இல்லை என எப்படி உறுதியாக சொல்ல முடியும்?
    • இரட்டை குவளை முறை நடைமுறையில் இருப்பதை நிரூபித்து விட்டால் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் பதவி விலக தயாரா?

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே சங்கம் விடுதியில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

    மக்கள் அளித்த புகார் தொடர்பாக கந்தர்வகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் விசாரணை நடத்தினார். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சண்முகம் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

    அந்த மனுவில், சங்கம் விடுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்ட வழக்கை காவல்துறை சரியாக விசாரிக்கவில்லை என்றும் இந்த வழக்கை வேறு விசாரணை அமைப்பு மாற்றவேண்டும் என்றும் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்ட கிராம மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், புதுக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரட்டை குவளை முறை இன்றும் நடைமுறையில் உள்ளது என்றும் சில தனியார் திருமண மண்டபங்கள் பட்டியலின மக்களுக்கு வழங்கப்படுவதில்லை என்றும் இது தொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே இதில் நீதிமன்றம் தலையிட்டு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

    அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குடிநீர் தொட்டியில் மாட்டுசாணம கலக்கப்படவில்லை எனவும் அதில் பாசி தான் கலந்துள்ளது எனவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளது போல இரட்டை குவளை முறை போன்ற பாகுபாடுகள் அங்கு இல்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதற்கு குறுக்கிட்ட நீதிபதிகள், "இரட்டை குவளை முறை நடைமுறையில் இல்லை என எப்படி உறுதியாக சொல்ல முடியும்? இரட்டை குவளை முறை நடைமுறையில் இருப்பதை நிரூபித்து விட்டால் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் பதவி விலக தயாரா? என நீதிபதிகள் கடுமையாக கேள்வி எழுப்பினர்.

    சமூகத்தில் நிகழும் தவறுகளை தனிநபர் சுட்டிக் காட்டினால் அதனை களைந்து சரிசெய்வதை விடுத்து சுட்டிக்காட்டிய நபர் மீது நடவடிக்கை எடுப்பது ஏற்கத்தக்கது அல்ல என்றும் தவறுகளை சுட்டிக்காட்டுபவர்கள் மீது குண்டாஸ் போன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

    பின்பு இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்தும், மாட்டுச்சாணம் கலப்பு வழக்கின் ஆவணங்களை ஒருவாரத்திற்குள் சிபிசிஐடி வசம் ஒப்படைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்தது.

    • சங்கன் விடுதியில் மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாக புகார்
    • புகார் தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் விசாரணை

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே சங்கன் விடுதியில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

    மக்கள் அளித்த புகார் தொடர்பாக கந்தர்வகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் விசாரணை நடத்தினார். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

    இதே புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டிருந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    ஆனால், இதுவரையிலும் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவுகளை கலந்தவர்கள் யார் என்பதைக் கண்டறிய முடியவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் தற்போது நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலை புறக்கணித்தனர். 

    • வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
    • இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படாததால் மதியம் 1 மணி வரை அங்கு ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை.

    புதுக்கோட்டை:

    இந்தியாவில் 18-வது பாராளுமன்ற தேர்தல் இன்று தொடங்கி ஜூன் மாதம் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

    இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படாததால் எதிர்ப்பு தெரிவித்து அக்கிராம மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் மதியம் 1 மணி வரை அங்கு ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை, அதிகாரிகள் வாக்காளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் 5 கிராம மக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • உரத் தொழிற்சாலை மூடப்படும் வரை தேர்தலை புறக்கணிக்க போவதாக மக்கள் தெரிவித்ததால் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி-காரியாபட்டி சாலையில் உள்ள கே.சென்னம்பட்டி கிராமத்தில் கேரளாவைச் சேர்ந்த தனியார் உரத்தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் கோழி இறைச்சிக் கழிவுகள், மருத்துவக்கழிவுகளை சுத்திகரித்து உரம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த உர தொழிற்சாலையால் கே.சென்னம்பட்டி, குராயூர், ஓடைப்பட்டி, மேலப்பட்டி, பேய்குளம் உள்ளிட்ட ஐந்து கிராமங்களில் ஆலையிலிருந்து வெளியேறும் புகையால் சுற்று வட்டார பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும் இதனால் குழந்தைகள், வயதானவர்கள் மூச்சுத் திணறலால் பாதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது.

    மேலும் இந்த ஆலையால் 5 கிராமங்களில் மண்வளம், நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளதாகவும், இன்னும் ஒரு சில ஆண்டுகளில் இந்த பகுதி வறண்ட பூமியாக மாறிவிடும் என்று கூறி சம்பந்தப்பட்ட உர ஆலையை மூட வேண்டும் என வலியுறுத்தி ஏற்கனவே கிராமத்தினர் மனு அளித்திருந்தனர்.

    இந்தநிலையில் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் 5 கிராம மக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய தாசில்தார் செந்தாமரை, ஆலையை மூட நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் உறுதியளித்தார்.

    இதைத்தொடர்ந்து தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனர். ஆனால் தொடர்ந்து ஆலையை மூட நடவடிக்கை எடுக்காததால் நேற்று தாசில்தார் செந்தாமரையிடம் உரத் தொழிற்சாலையை மூடநடவடிக்கை எடுக்காவிட்டால் தேர்தலை புறக்கணிக்க போவதாக ஐந்து கிராம மக்கள் மனு அளித்திருந்தனர். இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று தேர்தல் நடைபெறுவதையொட்டி 5 கிராம மக்களும் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்து தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனால் 5 கிராமங்களில் வாக்குச்சாவடி மையம் வெறிச்சோடி கிடக்கிறது. இதனை அறிந்த திருமங்கலம் தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தி, தாசில்தார் செந்தாமரை, திருமங்கலம் டி.எஸ்.பி. அருள் தலைமையில் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து சம்பந்தப்பட்ட உரத் தொழிற்சாலை மூடப்படும் வரை தேர்தலை புறக்கணிக்க போவதாக மக்கள் தெரிவித்ததால் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

    இதற்கிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மற்றொரு கிராமமான கருக்கனஅள்ளி கிராமத்திலும் தேர்தலை புறக்கணித்து வாக்காளர் யாரும் வாக்களிக்கவில்லை.
    • வாக்காளர்கள் யாரும் வராததால் வாக்கு சாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டன.

    ராயக்கோட்டை:

    கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேட அக்ரஹார ஊராட்சியில் உள்ள கடவரஅள்ளி கிராமத்தில் இன்று காலை வாக்கு பதிவுக்கான பணிகள் நடைபெற்று தயார் நிலையில் இருந்தன.

    ஆனால், கடவரஅள்ளி கிராமத்தில் உள்ள வாக்காளர்கள் ஒருவர் கூட காலை 10 மணி நிலவரப்படி வாக்களிக்க வரவில்லை.

    இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் கூறியதாவது:

    கடவரஅள்ளி கிராமமானது வனபகுதியையொட்டி உள்ளது. இந்த பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    மேலும், இந்த பகுதியில் 450 வாக்காளர்கள் உள்ளனர். இந்த நிலையில் இந்த பகுதியில் வீட்டுமனை பட்டா கேட்டு பல ஆண்டுகளாக அதிகாரிகளிடம் மனு அளித்தும், அவர்கள் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இதனால் இன்று நடைபெறுகிற தேர்தலை புறக்கணிக்கும் விதமாக ஒருவர் கூட நாங்கள் வாக்களிக்கவில்லை என்றனர்.

    இதேபோல் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மற்றொரு கிராமமான கருக்கனஅள்ளி கிராமத்திலும் தேர்தலை புறக்கணித்து வாக்காளர் யாரும் வாக்களிக்கவில்லை.

    மேலும், அந்த பகுதியில் 1050 வாக்காளர்கள் உள்ளனர். இந்த பகுதியில் 4 வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருவதால், பொதுமக்கள் சாலையை கடக்கும் விதமாக எந்தவித மேம்பாலமும் அமைக்கவில்லை. இதனால் பொதுமக்கள் 4 வழிச்சாலை கடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் இன்று தேர்தலை புறக்கணித்து ஒருவர் கூட வாக்களிக்கவில்லை.

    இதேபோன்று தேன்கனிக்கோட்டை அருகே காரண்டஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட கச்சுவாடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்காளர் ஒருவர் கூட காலை 7 மணி முதல் 10 மணி வரை வாக்களிக்க வரவில்லை. இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறும்போது, கச்சுவாடி பகுதியில் சாலை வசதி கோரி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாக நாங்கள் தேர்தலை புறக்கணிக்கின்றோம் என்றனர்.

    இந்த பகுதியில் 961 பேர் வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    வாக்காளர்கள் யாரும் வராததால் வாக்கு சாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டன.

    • கடந்த இரு மாதமாக முறையாக குடிநீரும் வழங்காததால் பொதுமக்கள் அதிருப்தியில் இருந்தனர்.
    • கால்நடைகளிடம் மனு அளித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே பொகலூர் ஊராட்சிக்குட்பட்ட 9-வது வார்டில் கோபிராசிபுரம், கூலே கவுண்டன்புதூர் கிராமங்கள் உள்ளது.

    இந்த கிராமங்களில், 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் பெரும்பாலும் விவசாய கூலித் தொழிலாளர்கள்.

    கோபிராசிபுரம், கூலே கவுண்டன்புதூர் கிராமங்களுக்கு சொந்தமாக 3½ ஏக்கர் பரப்பளவில் குட்டை உள்ளது. இந்த குட்டைக்கு அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் கீழ் தண்ணீர் கொண்டு வர கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    ஆனால் பணிகள் ஆரம்பிக்கப்படாமலேயே திடீரென நின்று விட்டது. இதுகுறித்து பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. கடந்த இரு மாதமாக முறையாக குடிநீரும் வழங்காததால் பொதுமக்கள் அதிருப்தியில் இருந்தனர்.

    இதுகுறித்து அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை பலமுறை நேரில் சந்தித்து மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த கோபிராசிபுரம், கூலே கவுண்டன்புதூர் கிராம மக்கள் அன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தங்கள் ஊரின் பஸ் நிறுத்தம் பகுதியில் தேர்தலை புறக்கணிக்க போவதாக பதாகைகள் வைத்தனர்.

    இன்று பாராளுமன்றத் தேர்தல் தமிழகம் முழுவதும் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

    இந்த நிலையில் கோபி ராசிபுரம், கூலே கவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், தங்கள் பகுதிக்கு அத்திக்கடவு-அவினாசி திட்டம் கொண்டு வரப்படாததை கண்டித்து தேர்தலை புறக்கணித்தனர்.

    மேலும் கால்நடைகளிடம் மனு அளித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதனிடையே கிராம மக்கள் யாரும் வாக்களிக்க செல்லாததால் கிராமத்திற்கு உட்பட்ட பொகலூர் 58-வது வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் யாரும் இன்றி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் காத்து வாங்கிக் கொண்டு உள்ளனர்.

    • கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதியில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன.
    • தி.மு.க. ஆட்சியிலும் பல முறை புகார் எழுப்பியும் யாரும் கண்டு கொள்ளவில்லை.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நல்லூர் சாலையில் டிரெண்ட் சிட்டி என்ற தனியார் லே அவுட்பகுதி உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

    இந்த நிலையில், கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதியில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன.

    கடந்த ஆட்சியிலும், தற்போதைய தி.மு.க. ஆட்சியிலும் பல முறை புகார் எழுப்பியும் யாரும் கண்டு கொள்ளவில்லை என இப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    எனவே எங்கள் பகுதியில் சாலை வசதி செய்து தர யாரும் முன்வராததால், பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து நோ ரோட், நோ வோட் " என்ற வாசகத்துடன் வீடுகள், கடைகள் என பகுதி முழுவதும் நோட்டீஸ் ஒட்டி எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

    • வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 75 பேரிடம் விசாரணை நடத்தினர்.
    • சென்னை உயர்நீதிமன்றம் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை ஆணையத்தையும் அமைத்துள்ளது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டிருந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதனைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. இதுகுறித்து வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 75 பேரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் மத்திய மண்டல ஐ.ஜி கார்த்திகேயன் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. அதன்பின்னர் சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.

    இதில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து வேங்கைவயல், இறையூர், முத்துக்காடு ஆகிய பகுதியிலுள்ள 147 நபர்களிடம் விசாரணை செய்து சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டது. இதில் சென்னை உயர்நீதிமன்றம் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை ஆணையத்தையும் அமைத்துள்ளது.

    இதுவரையிலும் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவுகளை கலந்தவர்கள் யார் என்பதைக் கண்டறிய முடியவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் வேதனையில் இருந்து வரும் நிலையில் தற்போது பாராளுமன்ற தேர்தலைப் புறக்கணிக்க போவதாக தெரிவித்துள்ளனர்.

    வேங்கைவயல் கிராமத்தின் முகப்பில் இதுகுறித்த வாசகங்கள் அடங்கிய பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததற்கு நீதி கிடைக்காததால் தேர்தல் புறக்கணிப்பு என்று தெரிவித்துள்ளனர்.

    • பொதுமக்கள் கோவில் முன்பு தரையில் அமர்ந்து தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பூதப்பாடியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.

    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடி ஊராட்சியில் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக அதே பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் 44 குடும்பத்தினருக்கு பட்டா வழங்கப்படவில்லை. இவர்கள் குடியிருந்து வரும் இடம் இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமானது. இந்த இடத்தில் பொதுமக்களுக்கு பட்டா வழங்கலாம் என இந்து சமய அறநிலைத்துறை சார்பில் தடை இல்லா சான்று வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் வருவாய் துறைனர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பட்டா வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாகம், இது குறித்து வருவாய் துறையிடம் பல முறை முறையிட்டும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பூதப்பாடி பூத காளியம்மன் கோவில் முன்பு தரையில் அமர்ந்து தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்மாபேட்டை போலீசார், அந்தியூர் வட்டாட்சியர் மற்றும் பவானி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தேர்தல் முடிந்தவுடன் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

    இதையடுத்து பொது மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் பூதப்பாடியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.

    • எங்களுக்கு தண்ணீர் வந்து 15 நாட்களுக்கு மேலாகிறது. இன்னும் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை.
    • பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி சின்னக்காம்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதிக்குட்பட்ட உடுமலை சாலை, மாருதி நகர் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் குடிநீர் சீராக வழங்க கோரி கவுண்டச்சிபுதூர் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு காலிகுடங்களுடன் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    எங்களுக்கு தண்ணீர் வந்து 15 நாட்களுக்கு மேலாகிறது. இன்னும் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் சாலை, மின்விளக்கு உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். இல்லையென்றால் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்றனர்.

    தாராபுரம் சின்னக்காம்பாளையத்தில் தனியார் கோழிப்பண்ணை உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு உள்ளது. எனவே கோழிப்பண்ணை இயங்க தடை விதிக்க வேண்டும். இல்லையென்றால் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி சின்னக்காம்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

    ×