search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெர்மனி"

    • ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே அல்பேனியா கோல் அடித்தது.
    • 11-வது நிமிடத்தில் பதில் கோல் அடித்து இத்தாலி சமன் செய்தது.

    டார்ட்மென்ட்:

    17-வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நேற்று முன்தினம் தொடங்கியது.

    24 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியின் தொடக்க ஆட்டத்தில் ஜெர்மனி 5-1 என்ற கோல் கணக்கில் ('ஏ' பிரிவு) ஸ்காட்லாந்தை வீழ்த்தியது.

    நேற்று நடந்த ஒரு ஆடடத்தில் சுவிட்சர்லாந்து 3-1 என்ற கோல் கணக்கில் அங்கேரியை ('ஏ') தோற்கடித்தது. மற்றொரு ஆட்டத்தில் 'பி' பிரிவில் உள்ள ஸ்பெயின் -குரோஷியா அணிகள் மோதின.

    இதில் ஸ்பெயின் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. ஸ்பெயின் அணிக்காக மொரட்டா (29-வது நிமிடம்) பேபியன் (32-வது நிமிடம்) கார்வஜல் (47-வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர்.

    நள்ளிரவு 12.30 மணிக்கு நடந்த போட்டியில் இத்தாலி- அல்பேனியா ('பி' பிரிவு) அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே அல்பேனியா கோல் அடித்தது. பஜ்ராமி இந்த கோலை அடித்தார்.

    11-வது நிமிடத்தில் பதில் கோல் அடித்து இத்தாலி சமன் செய்தது. பஸ்டோனி தலையால் முட்டி இந்த கோலை அடித்தார். இதனால் 1-1 என்ற சமநிலை ஏற்பட்டது.

    16-வது நிமிடத்தில் இத்தாலி 2-வது கோலை அடித்தது. நிக்கோலா பாரெல்லா இந்த கோலை மிகவும் அற்புதமாக அடித்தார். இதன் மூலம் இத்தாலி 2-1 என்ற முன்னிலையை பெற்றது. முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் இதே நிலை இருந்தது.

    2-வது பாதி ஆட்டத்திலும் இதே நிலை தான் நீடித்தது. இத்தாலி வீரர்கள் 3-வது கோலை அடிக்க கிடைத்த பல வாய்ப்புகளை தவற விட்டனர். இதேபோல 2-வது கோலை அடித்து சமன் செய்ய அல்பேனியா வீரர்கள் கடைசி வரை போராடி னார்கள். ஆனால் அது பலன் அளிக்கவில்லை.

    இறுதியில் இத்தாலி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இத்தாலி 2-வது ஆட்டத்தில் ஸ்பெயினுடன் 20-ந் தேதியும், அல்பேனியா 2-வது போட்டியிலும் குரோஷியாவுடன் 19-ந் தேதியும் மோதுகின்றன.

    இன்று நடைபெறும் ஆட்டங்களில் போலந்து- நெதர்லாந்து (மாலை 6.30 மணி), சுலோவெனியா- டென்மார்க் (இரவு 9.30), இங்கிலாந்து - செர்பியா (நள்ளிரவு 12.30) அணிகள் மோதுகின்றன.

    • போட்டியின் தொடக்கத்தில் இருந்தே ஜெர்மனி ஆதிக்கம் செலுத்தியது.
    • ஆட்டத்தின் 87வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் ருடிகர் செய்த தவறால் ஸ்காட்லாந்துக்கு ஒரு கோல் கிடைத்தது.

    ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நேற்று தொடங்கியது. சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் பரிசுத்தொகை கொண்ட இந்தப் போட்டியில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றுள்ளன.

    ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 6 பிரிவுகளாக பிரித்து லீக் போட்டி நடைபெறுகிறது. நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் ஜெர்மனியும் ஸ்காட்லாந்தும் மோதின.

    இந்தப் போட்டியின் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி வந்த ஜெர்மனியில் ஃப்ளேரியன், முசைலா 10 மற்றும் 19-வது நிமிடங்களில் கோல் அடித்தனர். இதனால் ஸ்காட்லாந்து அணி வீரர் ரியான் போர்டியஸ் ஆக்ரோஷமாக விளையாடியதால் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். இதனால், ஜெர்மனிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் ஹவர்ட்ஸ், நிக்லஸ், கேன் தலா ஒரு கோல் அடித்தனர். ஆட்டத்தின் 87வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் ருடிகர் செய்த தவறால் ஸ்காட்லாந்துக்கு ஒரு கோல் கிடைத்தது.

    அதன் பின் போட்டி நேரமான 90 நிமிடங்கள் முடிவடைந்து கூடுதல் நேரம் அளிக்கப்பட்டது. அதில் ஜெர்மனி தனது ஐந்தாவது கோலை அடித்தது. அந்த அணியின் எம்ரே கேன் ஐந்தாவது கோலை அடித்தார். இதன் மூலம் 5 - 1 என்ற கோல் கணக்கில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி ஜெர்மனி அபார வெற்றியை பெற்றது.

    • ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் மட்டுமே பங்கேற்கும் இந்த போட்டி 1960-ம் ஆண்டு பிரான்சில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • 2021-ம் ஆண்டு நடந்த போட்டியில் இத்தாலி கோப்பையை வென்றது.

    உலக கோப்பை கால் பந்துக்கு அடுத்து பிரபலம் பெற்றது ஐரோப்பிய கோப்பை (யூரோ) போட்டியாகும். ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் மட்டுமே பங்கேற்கும் இந்த போட்டி 1960-ம் ஆண்டு பிரான்சில் அறிமுகம் செய்யப்பட்டது.

    ஐரோப்பிய கால்பந்து

    4 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த திருவிழா நடைபெற்று வருகிறது. இதுவரை 16 தொடர் முடிந்துள்ளன. கடைசியாக 2021-ம் ஆண்டு நடந்த போட்டியில் இத்தாலி கோப்பையை வென்றது.

    17-வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நாளை (14-ந் தேதி) தொடங்குகிறது. ஜூலை 14 வரை 1 மாதகாலத்துக்கு இந்த திருவிழா நடைபெறுகிறது.

    இதில் 24 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றுள்ளன. அதன் விவரம்:-

    ஜெர்மனி, ஸ்காட்லாந்து, அங்கேரி, சுவிட்சர்லாந்து (குரூப் ஏ), ஸ்பெயின், குரோஷியா, இத்தாலி, அல்பேனியா (பி), சுலோவேனியா, டென்மார்க், செர்பியா, இங்கிலாந்து (சி), நெதர் லாந்து, பிரான்ஸ், போலந்து, ஆஸ்திரியா ( டி), பெல்ஜியம், சுலோவாக்கியா, ருமேனியா, உக்ரைன் (இ ), போர்ச்சுக்கல், செக் குடியரசு, துருக்கி, ஜார்ஜியா (எப்).

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப் படையில் முதல் 2 இடங்களை பிடிக்கும் நாடுகள் நாக் அவுட் சுற்றுக்கு நுழையும். 3-வது இடத்தை பிடிக்கும் சிறந்த 4 அணிகளும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும். 2-வது ரவுண்டில் 16 அணிகள் விளையாடும்.

    நாளைய தொடக்க ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ஜெர்மனி-ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

    26-ந் தேதி வரை லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. 29-ந் தேதி நாக் அவுட் சுற்று தொடங்குகிறது. ஜூலை 9 மற்றும் 10-ந் தேதிகளில் அரைஇறுதி ஆட்டங்களும், இறுதிப் போட்டி ஜூலை 14-ந் தேதியும் நடக்கிறது.

    பெர்லின், முனிச், டார்ட்மன்ட், ஸ்டட்கர்ட், ஹம்பர்க் உள்பட 10 நகரங்களில் மொத்தம் 51 போட்டிகள் நடக்கிறது. இதனால் கால்பந்து ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் இருக்கின்றனர்.

    • பாராளுமன்ற தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்தது.
    • தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி ஜூன் 4-ம் தேதி நடைபெறுகிறது.

    பெர்லின்:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற்றது. நேற்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்தது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி ஜூன் 4-ம் தேதி நடைபெற உள்ளது.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலை ஜனநாயக முறைப்படி சிறப்பாக நடத்தி முடித்துள்ள இந்தியாவுக்கு ஜெர்மனி, நைஜீரிய நாடுகள் பாராட்டு தெரிவித்துள்ளன.

    இதுதொடர்பாக ஜெர்மன் வெளியுறவு அலுவலகம் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தலை வெற்றிகரமாக முடித்த இந்திய மக்களுக்கு வாழ்த்துகள். இந்தியாவின் புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றவும், இந்தியா உடனான நமது ஒத்துழைப்பை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லவும் நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம் என பதிவிட்டுள்ளது.

    இதேபோல், நைஜீரிய வெளியுறவுத்துறை மந்திரி யூசுப் மைதாமா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஜனநாயகத்தில் உலகின் கோட்டையாக விளங்கும் இந்திய மக்களுக்கு வாழ்த்துகள். 1.4 பில்லியன் மக்கள்தொகையில் 968 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்களைக் கொண்டு, 44 நாட்கள் நீடித்த இந்த தேர்தல் வரலாற்றிலேயே மிகப் பெரியது. ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக நாங்கள் உங்களுடன் இணைந்து கொள்கிறோம். வெற்றிகரமான தேர்தல் காலத்திற்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார். இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    • கைதில் இருந்து தப்பிக்க பிரஜ்வால் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பிச் சென்றார்.
    • விமான நிலையத்திற்கு வந்திறங்கியதும் ரேவண்ணாவை கைது செய்ய போலீஸார் தயார் நிலையில் உள்ளனர்.

    இந்தியாவின் முன்னாள் பிரதமர் தேவகௌடாவின் பேரனும் பாஜக கூட்டணி கட்சியான ஜேடிஎஸ் கட்சி எம்.பியுமான பிரஜ்வால் ரேவண்ணா பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் சுமார் 2000 ஆபாச வீடியோக்கள் வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்கள் முன்வந்து புகார் அளிக்கத் தொடங்கினர். இதனால் கைதில் இருந்து தப்பிக்க பிரஜ்வால் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பிச் சென்றார்.பாதிக்கப்பட்ட பெண்களுள் ஒருவரை கடத்திய குற்றத்திற்காக ஜேடிஎஸ் கட்சித் தலைவரும் பிரஜ்வாலின் தந்தையுமாகிய ஹச்.டி.ரேவண்ணா கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் வெளிவந்தார்.

    இந்த விவகாரத்தில் துரித கதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக ஆளும் காங்கிரஸ் கட்சி உறுதியளித்துள்ளது. இதற்கிடையில் பிரஜ்வாலை நாடு திரும்புமாறு அவரது தாத்தா தேவகௌடா எச்சரித்தார்.

    இந்நிலையில் நாளை மறுநாள் (மே 31) நாடு திரும்புவதாக பிரஜ்வால் ரேவண்ணா வீடியோ வெளியிட்டு தெரிவித்தார். அதன்படி நாளை (மே 30)  ஜெர்மனி தலைநகர் 'முனிக்'கிலுருந்து பெங்களூருவுக்கு விமானம் முன்பதிவு செய்துள்ள ரேவண்ணா, நாளை மறுநாள் பெங்களூரு கேம்பகௌடா விமான நிலையத்தில் தரையிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விமான நிலையத்திற்கு வந்திறங்கியதும் ரேவண்ணாவை கைது செய்ய போலீஸார் தயார் நிலையில் உள்ளனர். 

     

     

    • சீனாவுக்கு உளவு பார்த்ததாக அந்த தம்பதி உள்பட 3 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
    • ரஷியாவுக்கு உளவு பார்த்ததாக 2 பேர் அங்கு கைது செய்யப்பட்டனர்.

    பெர்லின்:

    ஜெர்மனியின் டஸ்ஸல்டோர்ப் நகரில் வசித்து வந்த தம்பதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தனர். பின்னர் ஜெர்மனியில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்துடன் அவர்கள் போர்க்கப்பல்களின் எந்திரங்கள் தயாரிப்பது தொடர்பான ஒப்பந்தம் செய்தனர். இதற்கிடையே சீன பாதுகாப்பு துறையை சேர்ந்த ஒருவருடன் அவர்களுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனால் ஜெர்மனி ராணுவ தொழில்நுட்பங்களை அவருக்கு அறிவித்தனர்.

    இதனையடுத்து சீனாவுக்கு உளவு பார்த்ததாக அந்த தம்பதி உள்பட 3 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. அதன்பேரில் போலீசார் அவர்களை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் ரஷியாவுக்கு உளவு பார்த்ததாக 2 பேர் அங்கு கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில் தற்போது சீனாவுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜெர்மனியில் நிலவும் குறைந்த பணியாளர்கள் பிரச்சினையும் தீர்வுக்கு வரும் என எதிர்பார்ப்பு.
    • ஜெர்மனி நாட்டில் உள்ள முக்கிய 45 நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

    உலகம் முழுவதும் பல வளர்ந்த நாடுகள் குறைவான வேலை நேரத்தை செயல்படுத்தி வருகின்றன. குறிப்பாக, பெல்ஜியம், நெதர்லாந்து, டென்மார்க், ஆஸ்திரேலியா, ஜப்பான், ஸ்பெயின், பிரிட்டன் போன்ற நாடுகளில் குறைந்த நேரம் மட்டுமே வேலை செய்யப்படுகின்றன.

    இந்தப் பட்டியலில் தற்போது ஜெர்மனி நாடும் இணைந்து உள்ளது. 

    ஜெர்மனி நாட்டில் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள்வதற்கு புதிய சோதனை முயற்சியை மேற்கொள்ளப்பட இருக்கிறது. 

    நாளை 1ம் தேதி முதல், வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலை என்ற திட்டம் நடைமுறைக்கு வருகிறது. வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது. 4 நாட்கள் வேலை செய்வதன் மூலம் பணியாளர்களின் உடல் மற்றும் மனநிலை ஆரோக்கியம் அடைவதோடு பணியாளர்களின் செயல்திறனும் அதிகரிக்கும் என ஜெர்மனி நாடு எதிர்பார்க்கிறது.

    தொழிற்சங்கங்கள் 4 நாள் வேலையை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தன. இந்தநிலையில் சோதனை நடைமுறையாக நாளை முதல் இது அமல்படுத்தப்படுகிறது.

    இது நல்ல பலன்களை தரும் என தொழிற்சங்கங்களும் அரசும் எதிர்பார்க்கின்றன. இந்த சோதனையில் ஜெர்மனி நாட்டில் உள்ள முக்கிய 45 நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 

    வாரத்தில் 4 நாள் வேலை செய்வது ஒருநிறுவனத்தின் உற்பத்தி திறனை அதிகரித்து பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என ஜெர்மனி எதிர்பார்க்கிறது. இந்த சோதனை அடுத்த ஆறு மாதங்களுக்கு ஜெர்மனியில் நடைமுறைபடுத்தப்படுகிறது.

    உற்பத்தி திறனை அதிகரிப்பதன் மூலம் ஜெர்மனியில் நிலவும் குறைந்த பணியாளர்கள் பிரச்சினையும் தீர்வுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

    பெல்ஜியத்தில் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். வாரத்தில் 40 மணி நேரம் வேலை. நெதர்லாந்தில் வாரத்திற்கு 29 மணிநேரம் மட்டுமே மக்கள் வேலை செய்கிறார்கள். இந்த நடைமுறைகள் நல்ல பலன்களை அளிப்பதாக பல நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

    ஜெர்மனியில் நாளை 1ம் தேதி (பிப்ரவரி) முதல் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற திட்டம் நடைமுறை படுத்தப்படுகிறது.

    • ஜெர்மனியின் பெரும்பாலான கட்டிடங்கள் போர் முடியும் தறுவாயில் தரைமட்டமானது
    • வெளியெறிய மக்களில் ஒரு சிலர் தங்கள் வளர்ப்பு பிராணிகளையும் கொண்டு சென்றனர்

    19-ம் நூற்றாண்டின் மத்தியில் 1939-லிருந்து 1945 வரை உலகின் பெரும்பாலான நாடுகள், ஆக்ஸிஸ் (Axis) மற்றும் அல்லீஸ் (Allies) என இரு அணிகளாக பிரிந்து நின்று போரிட்டன. இந்த பெரும் போர், இரண்டாம் உலக போர் என அழைக்கப்படுகிறது.

    இப்போரில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து 2.7 மில்லியன் டன் வெடிகுண்டுகளை ஜெர்மனி கூட்டணி நாடுகள் மீது வீசின. அதில் பெரும்பகுதி ஜெர்மனி மீது வீசப்பட்டது. இவற்றில் பல வெடித்தாலும் ஒரு சில வெடிக்காமல் பூமியில் புதைந்தன.

    போர் முடியும் நேரத்தில் ஜெர்மனியின் பெரும்பாலான கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டது. அந்நாட்டில் இதனால் பல வெடிகுண்டுகள் பூமிக்கு அடியில் வெடிக்காமல் புதையுண்டு போனது. பல தசாப்தங்கள் ஆன பிறகும் ஆங்காங்கே அவற்றில் சில கண்டெடுக்கப்பட்டதாக அவ்வப்போது தகவல்கள் வருவதுண்டு.

    ஜெர்மனியின் மேற்கு பகுதி நகரமான டஸ்ஸல்டார்ஃப் (Dusseldorf) பகுதியில் உள்ள ஒரு மிருககாட்சி சாலையில் இம்மாதம் முதல் வாரத்தில் 1 டன் எடையுள்ள ஒரு வெடிகுண்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனையடுத்து காவல்துறையும், வெடிகுண்டு நிபுணர்களும் இணைந்து அதனை அப்புறப்படுத்த தேவையான நடவடிக்கைகளை திட்டமிட்டனர்.

    இதன் ஒரு பகுதியாக, அந்த குண்டு கிடப்பதாக சொல்லப்படும் இடத்திற்கருகே சுமார் 1640 சதுர அடி சுற்றளவில் (500 meter radius) உள்ள இடங்களில் உள்ள அனைத்து மக்களையும் வெளியேறும்படி அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

    இதனால் சுமார் 13 ஆயிரம் பேர் தற்காலிகமாக அந்த இடத்தை விட்டு வெளியேறினர். வெளியெறியவர்களில் ஒரு சிலர் தங்கள் வளர்ப்பு பிராணிகளையும் கொண்டு சென்றனர். இந்த நடவடிக்கையின்போது அந்த இடத்தை இணைக்கும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டது.

    தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த நடவடிக்கை எப்போது முடிவடையும் என்பதும் தற்காலிக தடை நீக்கப்பட்டதா? என்பது குறித்தும் தற்போது வரை தகவல்கள் இல்லை.

    • மர்ம ஆசாமி கத்தியால் குத்தியதில் காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த 2 பேருக்கு தீவிர சிகிச்சை.
    • வாலிபருக்கு தீவிரவாத கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என ஜெர்மனி போலீசார் கருதுகின்றனர்.

    ஜெர்மனி பலரைன் நகர் அருகே உள்ள அன்ஸ்பக் பகுதியில் நேற்று 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் திடீரென தான் கையில் வைத்து இருந்த கத்தியால் ரோட்டில் நடந்து சென்ற பொதுமக்களை கண்மூடித்தனமாக சரமாரியாக குத்தினான்.

    இந்த கத்திக்குத்து தாக்குதலில் 2 பேர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தனர். இதைபார்த்த மற்ற பொதுமக்கள் அலறியடித்து கொண்டு உயிருக்கு பயந்து ஓட்டம் பிடித்தனர்.

    ஆனாலும் அந்த மர்ம வாலிபர் கத்தியால் ஆக்ரோஷத்துடன் கத்திக்கொண்டு இருந்தான். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த போலீசார் இதனை பார்த்து அவனை பிடிக்க முயன்றனர்.

    அவன் கத்தியால் போலீசாரை மிரட்டிவிட்டு தப்பி ஓடினான். உடனே போலீசார் அவனை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் அந்த மர்ம மனிதன் சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து இறந்தான்.

    மர்ம ஆசாமி கத்தியால் குத்தியதில் காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த 2 பேரை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சுட்டுக்கொல்லப்பட்ட வாலிபர் யார்? என்று தெரியவில்லை. அவனை பற்றிய விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். அவனுக்கு தீவிரவாத கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என ஜெர்மனி போலீசார் கருதுகின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • ஜி-7 நாடுகளின் தலைவர்களை சந்தித்துப் பேசுவதையும் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன்.
    • ஐரோப்பா முழுவதும் வசிக்கும் இந்திய வம்சாவளியினரை சந்திக்க இருக்கிறேன்.

    ஜி-7 நாடுகளின் உச்சி மாநாடு இன்று ஜெர்மனியில் தொடங்குகிறது. தெற்கு ஜெர்மனியில் உள்ள ஸ்க்லோஸ் எல்மா லில் நடைபெறும் 2 நாள் மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு ஜெர்மனி அதிபர் ஒலாப் ஸ்கோல்ஸ் அழைப்பு விடுத்தார்.

    இதை ஏற்று கொண்ட மோடி, ஜி-7 மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்றிரவு தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து ஜெர்மனிக்கு புறப்பட்டு சென்றார்.

    #WATCH | Delhi: Prime Minister Narendra Modi departs for Germany for the G7 Summit.

    முன்னதாக பிரதமர் தமது பயணம் குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

    ஜி7 அமைப்புக்கு தலைமைதாங்கும் நாடு என்ற அடிப்படையில், ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கால்ஷ் விடுத்த அழைப்பின் பேரில், நான் ஸ்கிளாஸ் எல்மாவோ-வுக்கு பயணம் மேற்கொள்கிறேன்.

    கடந்த மாதம் இந்தியா-ஜெர்மனி அரசுகளுக்கு இடையே நடைபெற்ற ஆக்கப்பூர்வ ஆலோசனைக்கு பிறகு ஜெர்மன் பிரதமர் ஸ்கால்சை சந்திப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும்.

    முக்கிய சர்வதேச விவகாரங்களில், சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்தும் விதமாக, பிற ஜனநாயக நாடுகளான அர்ஜென்டினா, இந்தோனேஷியா, செனகல் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கும் ஜி-7 உச்சிமாநாட்டில் பங்கேற்க ஜெர்மனி அழைப்பு விடுத்துள்ளது.

    இந்த உச்சிமாநாட்டின் பல்வேறு அமர்வுகளின் போது, சுற்றுச்சூழல், எரிசக்தி, பருவநிலை, உணவுப் பாதுகாப்பு, சுகாதாரம், தீவிரவாத எதிர்ப்பு, பாலின சமத்துவம் மற்றும் ஜனநாயகம் போன்ற முக்கியமான அம்சங்கள் குறித்து நான் கருத்துக்களை எடுத்துரைக்க உள்ளேன்.

    உச்சிமாநாட்டின் இடையே ஜி-7 மற்றும் விருந்தினராக அழைக்கப்பட்டுள்ள நாடுகளின் தலைவர்களை சந்தித்துப் பேசுவதையும் நான் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன். ஜெர்மனியில் தங்கியிருக்கும் போது, ஐரோப்பா முழுவதும் வசிக்கும் இந்திய வம்சாவளியினரையும் நான் சந்திக்க உள்ளேன்.

    இந்தியா திரும்பும் வழியில் ஜூன் 28ந் தேதி அபுதாபி சென்று ஐக்கிய அரபு எமிரேட்சின் மன்னரும், அந்நாட்டின் முன்னாள் அதிபருமான ஷேக் கலிஃபா பின் சையது அல் நஹ்யான் மறைவையொட்டி, தற்போதைய மன்னரும், அதிபருமான ஷேக் முகமது பின் சையது அல் நஹ்யானை சந்தித்து நேரில் இரங்கல் தெரிவிக்க இருக்கிறேன்.

    இவ்வாறு பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

    • இயற்கை எரிவாயு சப்ளையை ரஷியா குறைத்ததைத் தொடர்ந்து எரிவாயு விநியோக அவசர திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
    • எரிபொருள் வர்த்தக பிரச்சனை நீடிப்பதால், ஜெர்மனியும் பிற நாடுகளும் நிலக்கரிக்கு திரும்புகின்றன.

    பெர்லின்:

    ஜெர்மனி அரசு இன்று இயற்கை எரிவாயு விநியோகத்திற்கான தனது மூன்று-நிலை அவசரத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை செயல்படுத்தியது. ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதார நாடான ஜெர்மனி, இயற்கை எரிவாயு நெருக்கடியை எதிர்கொள்வதாகவும், பல்வேறு நாடுகளுக்கான எரிபொருள் விநியோகத்தை ரஷியா குறைத்த பின்னர், குளிர்காலத்திற்கான சேமிப்பு மிகவும் குறைவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த வாரம் முதல் உக்ரைன் போர் காரணமாக எரிபொருட்களின் விலைகள் உயர்ந்து, இயற்கை எரிவாயு சப்ளையை ரஷியா குறைத்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஜெர்மனி அரசு கூறியது.

    மேலும், தொழில்துறை நிறுவனங்கள் தாங்கள் பயன்படுத்தும் இயற்கை எரிவாயுவின் அளவைக் குறைக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் ரஷியாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையே எரிபொருள் வர்த்தக பிரச்சனை நீடிப்பதால், ஜெர்மனியும் பிற நாடுகளும் நிலக்கரிக்கு திரும்புகின்றன. இது, ஐரோப்பாவில் பருவநிலை இலக்குகளை அடைவதற்கு அச்சுறுத்தலாக உள்ளது.

    நம்மால் இன்னும் உணர முடியாவிட்டாலும், நாம் இப்போது எரிவாயு நெருக்கடியில் இருக்கிறோம் என ஆற்றல்துறை மந்திரி ராபர்ட் ஹாபெக் கூறினார்.

    ஜெர்மனி நாட்டின் ஹம்பர்க் நகரில் பெற்றோர்கள் செல்போனே கதி என இருந்ததால் 7 வயதே நிரம்பிய குழந்தைகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
    முனீச்:

    ஜெர்மனி நாட்டில் இருக்கும் ஹம்பர்க் என்ற நகரில் ஏழு வயது நிரம்பிய குழந்தைகள் தங்களது பெற்றோர்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    “போராட்டத்தில் நாங்கள் இருக்கிறோம். உங்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்புகிறோம். ஏனென்றால் நீங்கள் எப்போதும் மொபைல் போன்களை மட்டும் தான் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்” என எழுதப்பட்ட பதாகைகளை தூக்கிகொண்டு அவர்கள் கோஷங்களை எழுப்பியுள்ளனர். 

    இந்த போரட்டத்தை ஏழு வயது எமில் என்ற சிறுவனின் தலைமையில் தான் நடைபெற்றது என்பது ஆச்சரியப்பட வைக்கிறது. “இந்த போரட்டத்துக்கு பிறகாவது பெற்றோர்கள் செல்போன்களை பார்ப்பதை விட்டுவிட்டு குழந்தைகளை பார்ப்பார்கள்” என்று நம்புகிறோம் என எமில் கூறியுள்ளார்.

    ஹம்பர்க்கில் எமில் தலைமையில் நடந்துள்ள இந்த போராட்டம் அவர்களின் பெற்றோர்களுக்கு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள பெற்றோர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள ஒரு எச்சரிக்கை செய்தி. 
    ×