என் மலர்
வழிபாடு
- திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவர் காலை நாச்சியார் திருக்கோலம்.
- குருபகவான் தலங்களில் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, தை 25 (வியாழக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: திரயோதசி காலை 9.45 மணி வரை பிறகு சதுர்த்தசி
நட்சத்திரம்: உத்திராடம் நள்ளிரவு 1.50 மணி வரை பிறகு திருவோணம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று சுபமுகூர்த்த தினம். மாத சிவராத்திரி. சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவர் காலை நாச்சியார் திருக்கோலம், இரவு யாளி வாகனத்தில் பவனி. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் தைலக்காப்பு சம்ரோக்ஷனம். திருமயம் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு குருவார திருமஞ்சன அலங்கார சேவை. ஆலங்குடி குருபகவான், தக்கோலம் தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-வெற்றி
ரிஷபம்-களிப்பு
மிதுனம்-நலம்
கடகம்-உதவி
சிம்மம்-இன்பம்
கன்னி-நற்செயல்
துலாம்- மாற்றம்
விருச்சிகம்-சுகம்
தனுசு- பதவி
மகரம்-போட்டி
கும்பம்-மேன்மை
மீனம்-உயர்வு
- வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் வந்து தரிசனம்.
- `கியூ.ஆர்.’ கோடு மூலம் பணம் செலுத்தும் வசதி.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் பக்தர்களும் வந்து தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள்.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் அம்மனுக்கு அபிஷேகம், நகை அலங்காரம், சந்தன காப்பு அலங்காரம், கன்னியா போஜனம், அரவணை நிவேத்தியம், பால் பாயாசம் நிவேத்தியம், பொங்கல் நிவேத்தியம் மற்றும் அன்னதானம் போன்றவைகளுக்கு பணம் செலுத்தி வழிபாடு நடத்து வது வழக்கம்.
மேலும் அர்ச்சனை, குழந்தைகளுக்கு சோறு கொடுப்பு, புடவை சாத்துதல், அஷ்டோத்திரம், குங்குமம் அர்ச்சனை, கோடி அர்ச்சனை போன்ற வழிபாடுகளும் கட்டணம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.
இது தவிர திருப்பணி களுக்கு பக்தர்கள் நன்கொடை வழங்குவதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. இந்த வழிபாடுகளுக்கும் நன்கொடைகளுக்கும் பக்தர்கள் நேரடியாக பணம் செலுத்தி வந்தனர். ஆனால் சில பக்தர்கள் பணப்பரிவர்த்தனை செய்யாமல் செல்போன் மூலம், போன் பே அல்லது கூகுள் பே வழியாக இந்த வழிபாடுகளுக்குரிய கட்டணங்களையும், நன்கொடைகளையும் செலுத்த முடியாத நிலை இருந்து வந்தது. இதனால் பெரும்பாலான பக்தர்கள் வழிபாடுகள் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற நிலை இருந்து வந்தது.
எனவே இந்த கோவிலில் வழிபாடுகள் நடத்துவதற்கும், நன்கொடைகள் வழங்குவதற்கும் செல்போன் வழியாக `கியூ.ஆர்.' கோடு மூலம் பணம் செலுத்தும் முறையை அமல்படுத்த வேண்டும் என்று பக்தர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் பயனாக தற்போது கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் செல்போன் வழியாக `கியூ.ஆர்.' கோடு மூலம் பணம் செலுத்தி வழிபாடுகள் மற்றும் திருப்பணிகளுக்கு நன்கொடை வழங்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் ஏராளமான பக்தர்கள் `கியூ.ஆர்.' கோடு மூலம் வழிபாடு கட்டணம் செலுத்தி வருகிறார்கள். கோவிலுக்கு நன்கொடையும் குவிந்த வண்ணமாக உள்ளது.
- சிபாரிசு கடிதம் கொண்டு வருவோருக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம்.
- தரிசன டிக்கெட் செல்போனில் வந்துவிடும்.
திருமலை:
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சிபாரிசு கடிதங்கள் கொண்டு வருவோருக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் தேவஸ்தானம் அனுமதி அளித்து வருகிறது.
இவர்கள் திருமலையில் உள்ள இணை நிர்வாக அதிகாரி (ஜே.இ.ஓ.) அலுவலகம் சென்று, சிபாரிசு கடிதத்துடன் தங்களின் ஆதார் விவரத்தை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு விண்ணப்பித்தவர்களுக்கு அன்று மாலை 4 மணிக்கு பிறகு செல்போனில் குறுஞ்செய்தி வரும். இவர்கள் திருமலையில் உள்ள எம்.பி.சி.-34 எனும் இடத்திற்கு சென்று, அந்த குறுந்தகவலை காண்பித்து மறுநாள் காலை தரிசனத்துக்கான வி.ஐ.பி. பிரேக் தரிசன டிக்கெட்டை பணம் செலுத்தி பெறவேண்டும்.
இந்த முறையில், மறுநாள் காலை தரிசனத்திற்கு வரும் பக்தர்கள், முந்தைய நாள் இரவு எம்.பி.சி.-34 கட்டிடத்தின் அருகே நூற்றுக்கணக்கில் காத்திருப்பார்கள். இவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் பெறவேண்டி இருக்கும்.
சில நேரங்களில் சிபாரிசு கடிதம் கூட ரத்தாகி, டிக்கெட்டுக்கான குறுஞ்செய்தி வராமல் போவதும் உண்டு. இதைக்கூட அறிந்து கொள்ள முடியாமல் பலர் திருமலையிலேயே காத்திருப்பது வழக்கம்.
இந்த பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு புதிய திட்டத்தை தேவஸ்தானம் கடந்த பிப்ரவரி 1-ந் தேதி அமல்படுத்தி உள்ளது.
அதாவது, திருமலையில் சிபாரிசு கடிதத்தை, ஆதாருடன் விண்ணப்பித்த பக்தர்கள் டிக்கெட்டுக்காக அன்று இரவு வரை காத்திருக்க தேவையில்லை. சிபாரிசு கடிதங்கள் பரிசீலிக்கப்பட்டு மாலை 4 மணிக்குபிறகு செல்போனில் குறுஞ்செய்தியும், டிக்கெட் தொகையை செலுத்துவதற்காக பே லிங்க்கும் வரும்.
இதன் மூலம் பக்தர்கள் ஆன்லைனில் டிக்கெட்டுக்கான பணத்தை செலுத்தினால், உடனே தரிசன டிக்கெட் செல்போனில் வந்துவிடும். இதை வைத்து மறுநாள் காலை வி.ஐ.பி. பிரேக் தரிசனத்திற்கு பக்தர்கள் செல்லலாம். இந்த புதிய திட்டத்துக்கு பக்தர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
- மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது.
- பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரிக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக தை, ஆடி மாத அமாவாசை, சிவராத்திரி தினத்தன்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரிக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள். வருகிற 9-ந்தேதி தை அமாவாசையை முன்னிட்டு இன்று முதல் வருகிற 10-ந்தேதி வரை சதுரகிரிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
அதன்படி பிரதோஷ நாளான இன்று (7-ந் தேதி) அதிகாலையிலேயே மலையேற அடிவார பகுதியான தாணிப்பாறை பகுதியில் சென்னை, கோவை, நெல்லை, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட் டங்களை சேர்ந்த ஆயிரக் கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர்.
காலை 6.40 மணிக்கு வனத்துறையினரின் தீவிர சோதனைக்கு பின்னர் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். பெண்கள் உள்பட ஏராளமானோர் ஆர்வத்துடன் மலையேறி சென்றனர்.
மலைப்பாதையில் உள்ள சங்கிலி ஓடை, மாங்கனி ஓடை, பிலாவடி கருப்பசாமி கோவில் உள்ளிட்ட பகுதிகளில் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தை மாத அமாவாசையை முன்னிட்டு இந்த முறை வழக்கத்தை விட அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் செய்யப் பட்டிருந்தது. மலை அடிவாரம் மற்றும் கோவில் பகுதிகளில் பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.
மலையேறி சென்ற பக்தர்கள் சுந்தர மகாலிங்கம் கோவிலில் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். ஏராளமானோர் முடி காணிக்கை செய்தனர்.
பிரதோஷத்தை முன்னிட்டு இன்று மாலை சுந்தர மகாலிங்கத்தக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்களும், சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.
- உலக பிரசித்தி பெற்ற புண்ணிய ஸ்தலம் ராமேசுவரம்.
- தீர்த்த கடற்கரையில் வைத்து திதி, தர்ப்பணம் கொடுப்பது ஜதீகமாக உள்ளது.
ராமேசுவரம்:
தென்னகத்து காசியாகவும், உலக பிரசித்தி பெற்ற புண்ணிய ஸ்தலமாகவும் விளங்கும் ராமேசுவரத்தில் அமைந்துள்ள ராமநாத சுவாமி கோவிலில் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து, கோவிலில் இருக்கும் 22 தீர்த்தங்களில் நீராடி சுவாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருகின்றனர்.
இதில் ஆண்டுதோறும் வரக்கூடிய முக்கிய அமாவாசை நாட்களான தை, ஆடி, புரட்டாசி ஆகிய அமாவாசை நாட்களில் தங்களுடைய முன்னோர்களுக்கு ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரையில் வைத்து திதி, தர்ப்பணம் கொடுப்பது ஜதீகமாக உள்ளது. அந்த வகையில் நாளை மறுநாள் (9-ந்தேதி, வெள்ளிக்கிழமை) தை அமாவாசை வருவதால் அந்நாளில் தங்களுடைய முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து சுவாமி வழிபாடு செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பணியானது கோவில் நிர்வாகம் சார்பில் முழுவீச்சில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கிழக்கு கோபுர வாசல் பகுதியில் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்காமல் இருக்க மூங்கில் கம்புகள் வைத்து வரிசைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
மேலும், கூட்டம் இருக்கும் என்பதால் நீண்டநேரம் வரிசையில் நின்று செல்வதற்கு வசதியாக தற்காலிக நிழற்குடை அமைக்கும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியானது கோவில் நான்கு ரத வீதிகளிலும் தை அமாவாசை வரையிலும் தற்காலிகமாக அமைக்கப்பட்டு வருகிறது..
தை அமாவாசையை முன்னிட்டு நாளை மறுநாள் அதிகாலையிலேயே கோவில் நடைதிறக்கப்படு கிறது. இதுகுறித்து கோவில் இணை ஆணையர் சிவராம் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தை அமாவாசையை முன்னிட்டு ராமநாதசுவாமி கோவில் வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு காலை 5 மணி முதல் 5.30 வரை ஸ்படிக லிங்க பூஜையும், அதனை தொடர்ந்து சாயரட்சை பூஜை வரையிலான கால பூஜைகள் நடைபெறும். காலை 10.25 மணிக்கு மேல் சுவாமி, அம்பாள் பஞ்ச மூர்த்திகள் சகிதம் புறப்பாடாகி பகல் 12.10 மணிக்கு அக்னி தீர்த்த கரைக்கு எழுந் தருளி தீர்த்த வாரி உற்சவம் நடைபெறும்.
அதனைதொடர்ந்து பகல் முழுவதிலும் கோவில் நடை திறந்திருக்கும். மாலை 5.30 மணிக்கு மண்டகப்படியில் தீபாரதணை நடைபெற்று இரவு 7 மணிக்கு சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகள் மற்றும் ஸ்ரீ ராமர் வெள்ளி ரத புறப்பாடு வீதி உலா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தர்ப்பணம் எனும் சொல்லுக்கு திருப்திப்படுத்துதல் என்று பொருள்.
- சிரார்த்தம் செய்யும் முன்பாக மங்கள நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது.
1. வீட்டில் பசியால் வாடும் தனது வயதான பெற்றோர்களுக்கு சாப்பாடு கொடுக்காமல் தெய்வத்திற்கு சர்க்கரைப் பொங்கல் போன்ற பொருட்களை நிவேதனம் செய்வதாலும் ஆடை இன்றி பெற்றோர்கள் கஷ்டப்படும் போது தெய்வங்களுக்கு பட்டு வஸ்திரங்களை அணிவிப்பதாலும் எந்த பலனும் கிடைக்காது. பித்ருதோஷம்தான் ஏற்படும்.
2. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய மாதத்தில் தர்ப்பணம் நடைபெறும் நாளுக்கு முன்பாக தர்ப்பணம் செய்பவர் தனது வீட்டில் தினசரி தெய்வங்களுக்கு செய்யும் பூஜையைத் தவிர வேறு எந்த ஒரு விசேஷமான பூஜைகளையோ ஹோமத்தையோ செய்யக் கூடாது.
3. தர்ப்பணம் செய்ய வேண்டிய மாதத்தில் சிரார்த்தம் செய்யும் முன்பாக தங்கள் வீட்டு மங்கள நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது.
4. தர்ப்பணம் செய்யும் நபர் தர்ப்பணம் செய்யும் முன்பாக அந்த மாதத்தில் மற்ற இடங்களில் நடைபெறும் எந்த ஒரு பூஜைகளிலும் ஹோமங்களிலும், ஆலய நிகழ்ச்சிகளிலும் தனது பெயர் சொல்லி சங்கல்பம் செய்து கொள்ளக் கூடாது.
5. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளன்று, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை நிறுத்தி வைத்து விட்டு, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய தெய்வ சம்பந்தமான பூஜைகளைச் செய்ய வேண்டும்.
6. அமாவாசை திதியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு தங்களுக்குத் தரப்படும் எள் கலந்த தண்ணீரை பெற்றுக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக் கிறார்கள் என்று நம்பப்படுகிறது. அன்றைய தினம் வீட்டில் தர்ப்பணம் செய்து அவர்களுக்கு எள் கலந்த தண்ணீர் தரப்பட வில்லை என்றால் அவர்கள் ஏமாற்ற மடைந்து வருத்தப்பட்டு கோபத்தோடு செல்கிறார்கள் என்றும், ஒரு சில பித்ருக்கள் சாபம் கூட தந்து விட்டுச் செல்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
7. ஒரு வருடத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள் மொத்தம் தொன்னூற்று ஆறு நாட்கள். இவைகளில் 14 மன்வாதி நாட்கள், யுகாதி நாட்கள் 4, மாதப்பிறப்பு நாட்கள் 12, அமாவாசை 12, மகாளய பட்சம் 16, வ்யதீபாதம் 12, வைத்ருதி 12, அஷ்டகா 4, அன்வஷ்டகா 4, பூர்வேத்யு 4 நாட்கள். இந்த நாட்களில் செய்யப்படும் தர்ப்பணத்தால் பித்ருக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
8. ஒரே நாளில் ஏராளமான பித்ருக்களுக்கு தனித்தனியாக பல பேர் சிரார்த்தம் செய்யும்போது சிரார்த்த உணவு அவரவர்களின் பித்ருக்களுக்கு எவ்வாறு சரியான முறையில் சென்றடைகிறது என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படும். இதை கருத்தில் கொண்டுதான் மறைந்த முன்னோர்களின் கோத்ரத்தையும் பெயரையும் தர்ப்பணம் செய்யும்போது சொல்கிறார்கள். இதனால் ஒருவர் கொடுக்கும் தர்ப்பணம் அவரவர்களுக்கு சரியாகச் சென்றடையும்.
9. பெற்றோர்களின் வருட சிரார்த்தமும் மாதப்பிறப்பும் சேர்ந்தால் மாதப்பிறப்பை முதலில் செய்து விட்டு பிறகு பெற்றோர்களின் வருட சிரார்த்தத்தைச் செய்ய வேண்டும்.
10. வீட்டில் வயதானவர்கள் படுக்கையோடு அவதியுற்றால் பாய், தலையணை, படுக்கை விரிப்பு போன்றவற்றை தானம் செய்வது நன்மை அளிக்கும். எள்ளுருண்டை, கடலை உருண்டை போன்றவற்றை அளிப்பது பித்ருக்களின் ஆசியைக் கூட்டும்.
11. மங்கள நிகழ்ச்சிகள் நம் வீட்டில் நடக்கும் பொழுது முதலில் பித்ருக்களின் ஆசியை நாம் முழுமையாக பெற வேண்டும். இது மிக, மிக முக்கியம்.
12. தர்ப்பணம் எனும் சொல்லுக்கு திருப்திப்படுத்துதல் என்று பொருள். இதில் வரும் மந்திரங்கள் அர்த்தம் பொதிந்தவை. அவற்றை நன்கு தெரிந்து கொண்டு செய்வதால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.
13. தாய், தந்தையின் இறந்த திதிகளை மட்டும் நினைவு கொண்டு தர்ப்பண காரியங்கள் செய்தால் போதும் எனும் பழக்கம் இன்று பலரிடத்தில் ஏற்பட்டுள்ளது. குடும்பத்தில் இறந்த முன்னோர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து தர்ப்பண காரியங்கள் செய்ய வேண்டும். அது தான் சிறப்பானது. முழு பலன்களையும் தரவல்லது.
14. கோவில்கள், குளங்கள், கடல் போன்ற இடங்களில் செய்யப்படும் தர்ப்பணங்களுக்கு மிக அதிகமான சக்தி உண்டு.
15. திருவாலாங்காடு, திருவள்ளூர், ராமேஸ்வரம், திருமயம் அடுத்து வரும் அரண்மனைப்பட்டி, திரு வண்ணாமலை, திருவிடைமருதூர், காசி, திருநள்ளாறு ஆகிய இடங்களில் தர்ப்பணம் செய்வது மிக சிறந்தது.
16. திலதர்ப்பணபுரி எனும் ஊரில் (திருவாரூர்- பூந்தோட்டம் இடையில் உள்ளது) தர்ப்பணம் செய்வது மிக, மிக விசேஷமாக கருதப்படுகிறது. இங்கு ஸ்ரீராமரும் லட்சுமணரும் தம் தந்தையான தசரத மகாராஜாவிற்கு தர்ப்பணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- அமாவாசை வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது.
- ஒவ்வொரு மாத அமாவாசை அன்றும் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
அமாவாசையன்று எந்த கிரகமும் சூன்யம் அடையாது என்பதால், அமாவாசை வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. துன்பங்களில் இருந்து விடுபட இறந்த முன்னோர்களுக்கு வருடாந்திர திதி கொடுப்பதுடன், ஒவ்வொரு மாத அமாவாசை அன்றும் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். காலச் சூழல் காரணமாக திதி கொடுக்க முடியாத நிலையில் இருப்பவர்கள் ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை, தை அமாவாசை ஆகிய தினங்களில் கண்டிப்பாக தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
சாஸ்திரப்படி ஆடி முதல் மார்கழி வரையுள்ள காலத்தில் முன்னோர்களான பித்ருக்கள் தங்களது உறவுகளைப் பார்ப்பதற்காக இந்த பூலோகத்துக்கு வருகின்றனர். அவர்கள் பித்ருலோகத்தில் இருந்து புறப்படும் நாள் ஆடி அமாவாசை.
அவர்களை நாம் நினைவில் வைத்திருக்கிறோம் என்பதைத் தெரிவிப்பது போலவும், அவர்களை பூமிக்கு வரும்படி அழைப்பு விடுப்பது போலவும் ஆடி அமாவாசையன்று அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அவர்கள் பூமிக்கு வந்து சேரும் நாள் மகாளய அமாவாசை ஆகும். அன்றும் அவர்களுக்கு நாம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
பித்ருலோகத்தில் இருந்து வந்த நம் முன்னோர்கள் திரும்பவும் பித்ரு லோகத்துக்குச் செல்லும் நாள் தை அமாவாசை. அன்று அவர்களை வழியனுப்பும் விதமாக தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
தை அமாவாசை, இந்த வருடம் வருகிற 9-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வருகிறது. சூரியன் பிதுர்க்காரகன், சந்திரன் மாதூர்காரகன். இவர்களை சிவசக்தி சொரூபமாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதிலும் காலபுருஷனுக்கு கர்ம ஸ்தானமான மகர ராசியில், கர்ம காரகன் சனியின் வீட்டில் சந்திரனு டன் சூரியன் சேரும் நாள் மிகவும் விசேஷமான தை அமாவாசையாகும். அதிலும் உத்திராண புண்ணிய காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் கூடுதல் சிறப்பாகும்.
தற்போதைய கோட்சாரத்தில் மகர ராசியில் கர்மகாரகன் சனி பகவான் ஆட்சிபலம் பெற்று, தர்மாதிபதி குருவுடன் இணைந்து, தர்ம கர்மாதிபதி யோகத்தை உலகிற்கு குருவும் சனியும் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் காலத்தில் சூரியனும், சந்திரனும் இணையும் போது உத்திராடம் மற்றும் திருவோணம் நட்சத்திரத்தில் உரு வாகும் தை அமாவாசை மிகமிக சிறப்பான- உன்னதமான பலன்களை வழங்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.
சூரியோதயத்திற்கு முன்பாக கடற்கரை, மகாநதிகள், ஆறு, குளம், கிணறு போன்ற நீர்நிலைகளில் பித்ருகளுக்கு தர்ப்பணம் தர வேண்டும்.
- காவிரி வடகரைத் தலங்களில் 33-வது தலமாகும்.
- விநாயகரின் ஆறாவது படைவீடாக போற்றப்படுகிறது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் தாலுகாவில் உள்ளது திருநாரையூர். இங்குள்ள சவுந்தர்யேசுவரர் கோவில், தேவாரப் பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் 33-வது தலமாகும். இக்கோவிலின் இடது பக்கம் உள்ள பொள்ளாப்பிள்ளையார் சன்னிதி, விநாயகரின் ஆறாவது படைவீடாக போற்றப்படுகிறது. இந்த பொள்ளாப் பிள்ளையார். சுயம்பு விநாயகராக அருள்பாலிக்கிறார்.
துர்வாச முனிவர் சிவனை நோக்கி கடும் தவம் செய்து கொண்டிருந்தார். தனது தவத்திற்கு இடையூறு செய்த கந்தர்வன் ஒருவனை நாரையாகும்படி சாபமிட்டார். கந்தர்வன், தன் தவறை மன்னிக்கும்படி வேண்டினான். முனிவர் மறுத்து விட்டார். எனவே இத்தலம் வந்து சிவபெருமானிடம் முறையிட்டான்.
சிவன் அந்த கந்தர்வனிடம், 'தினமும் காசியில் இருந்து இத்தலத்துக்கு தீர்த்தம் கொண்டு வந்து என்னை அபிஷேகித்து வழிபட்டால் சாப விமோசனம் கிடைக்கும் என்றார்.
நாரை வடிவில் இருந்த கந்தர்வனும் தன் சக்தியால், அதிவேகத்தில் பறந்து சென்று தீர்த்தத்தை அலகில் சுமந்து வந்து இத்தல இறைவனுக்கு அபிஷேகம் செய்தான். அதைத்தொடர்ந்து நாரையாக இருந்த கந்தர்வனுக்கு, சிவபெருமான் விமோசனம் அளித்தார்.
நம்பியாண்டார் நம்பியின் தந்தை இங்குள்ள பிள்ளையாருக்கு தினமும் நைவேத்தியம் செய்வார். அவருடன் தினமும் வரும் நம்பியாண்டார் நம்பி இதைப் பார்ப்பார். 'அப்பா வைக்கும் நைவேத்தியத்தை பிள்ளையார் சாப்பிடுவாரா என சிறுவனான அவருக்கு சந்தேகம் எழுந்தது.
ஒருமுறை தந்தை வெளியூர் சென்றிருந்த நிலையில், விநாயகருக்கு பூஜை செய்து நைவேத்தியம் படைக்கும் பொறுப்பு நம்பியாண்டார் நம்பிக்கு கிடைத்தது. அவர் தன் தந்தைபையப் போல் பிள்ளையாருக்கு பூஜைகளை செய்து, நைவேத்தியம் படைத்தார்.

பின்னர் அதனை சாப்பிடும்படி பிள்ளையாரை வேண்டினார். பிள்ளையாரோ அமைதியாக இருந்தார். மனம் வருந்திய நம்பி. பிள்ளையாரின் மடியில் தன் தலையை முட்டி அழுதார். உண்மையான பக்திக்கு மகிழ்ந்த பிள்ளையார் உடனடியாக அங்கே தோன்றி, அந்த நைவேத்தியத்தை சாப்பிட்டார்.
பன்னிரு திருமுறைகளான தேவாரம், திருவாசகம் போன்றவை இன்று நமக்கு கிடைக்க காரணமாக இருந்தவரும், நம்பியாண்டார் நம்பிதான்.

ஒரு முறை திருமுறை இருக்கும் இடத்தைக் காட்டி அருள வேண்டும் என்று ராஜராஜ சோழன், நம்பியாண்டார் நம்பியை வேண்டினான். அவரும் ஈசனை வேண்டினார். அப்போது 'தில்லை நடராஜர் ஆலயத்தின் தென்மேற்கு மண்டபத்தில் பிள்ளையார் அருளால் சுவடிகள் கிடைக்கும்' என தெய்வவாக்கு ஒலித்தது.
இதையடுத்து சமயக்குரவர்கள் நால்வரின் சிலைகளையும் வடித்து வைத்து, அவற்றின் முன்னிலையில் திருமுறைச் சுவடிகள் இருந்த அறையை திறக்கச்செய்தான் ராஜராஜ சோழன். பின்னர் திருநாரையூர் நம்பியைக் கொண்டு அவற்றை திருமுறைகளாய்த் தொகுக்கச் செய்தான். இப்படி பன்னிரு திருமுறைகளும் நமக்கு கிடைக்க, நம்பியாண்டார் நம்பி, ராஜராஜ சோழனுடன், திருநாரையூர் பொள்ளாப் பிள்ளையாருக்கும் பங்குண்டு.
கோவிலுக்கு வெளியே சற்று தூரத்தில் நம்பியாண்டார் நம்பி அவதரித்து வசித்து வந்த பவித்ரமான இடத்தில், தற்போது சிறிய மண்டபத்தில் நம்பி யாண்டார் நம்பி சிற்ப வடிவில் நமக்கு அருள்பாலிக்கின்றார். சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார் கோயில் செல்லும் வழியில் 18 கி.மீ. தொலைவில், திருநாரையூர் உள்ளது.
- ஒவ்வொரு மாதமும் மூல மந்திர ஹோமம் நடைபெறும்.
- பக்தர்களுக்கு பல விதமான வளங்களை தரும் சக்தி கொண்டது.
திருவள்ளூர் பெரியகுப்பம், ராஜாஜிபுரம், தேவி மீனாட்சி நகரில் 40 அடி உயரம் உள்ள விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் ஒரே பச்சைக் கல்லால் ஆனது. பெங்களூர் ஆர்சன் மடப்பகுதியில் இருந்து கொண்டு வந்து இங்கு நிறுவப்பட்டதாகும்.
இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் மூல மந்திர ஹோமம் நடைபெற்று வருகிறது. அனுமன் ஜெயந்தி மற்றும் முக்கிய விழா காலங்களில் 40 அடி உயரம் உள்ள விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு, வடைமாலை சாற்றி சிறப்பு அபிஷேகம் செய்யப்படும். இந்த விஸ்வ ரூப பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமியின் பஞ்சமுகங்களும் வழிபடும் பக்தர்களுக்கு பல விதமான வளங்களை தரும் சக்தி கொண்டது.

பஞ்சமுகங்களும்.. நன்மைகளும்...
கிழக்கு நோக்கியபடி இருக்கும் ஆஞ்சநேய சுவாமியின் முகம், பாவங்களை நீக்கி, தூய்மையான மனதைக் கொடுக்கும். தெற்கு நோக்கியபடி அமைந்த நரசிம்ம சுவாமியின் முகம், எதிரிகள் மீதான பயத்தை நீக்கி, வெற்றியை பெற்றுத் தரும். மேற்கு நோக்கியபடி இருக்கும் மகா வீர கருட சுவாமியின் முகம், பில்லி சூனியம் - ஏவல் ஆகியவற்றால் ஏற்படக்கூடிய தீய விளைவுகளை போக்கும்.
உடலில் உள்ள எல்லா விஷத் தன்மையையும் நீக்கும். வடக்கு நோக்கிய லட்சுமி வராக சுவாமியின் முகம் கிரக தோஷங்களை போக்கி, அஷ்ட ஐஸ்வர்யங்களை அளிக்கும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, மேல்நோக்கியபடி அமைந்த ஹயக்ரீவ சுவாமியின் முகமானது, சுபிட்சமான வாழ்வையும், கல்வி, தொழில், பயிற்சியில் தேர்ச்சி, கணவன் - மனைவி ஒற்றுமை, புத்திரபாக்கியம் போன்றவற்றை நல்கும்.
இந்த 40 அடி உயரம் உள்ள விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயரை வழிபட செவ்வாய் மற்றும் சனிக்கிழமை உகந்த நாட்கள் ஆகும். கோவில் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டு இருக்கும்.
அமைவிடம்
சென்னையில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, இந்த ஆஞ்சநேயர் திருத்தலம். ரெயில் மார்க்கத்தில் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம், திருத்தணி மார்க்கத்தில் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இறங்க வேண்டும். ரெயில் நிலையத்திற்கு அருகாமையிலேயே இந்தக் கோவில் அமைந்திருக்கிறது.
- வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து சாமி தரிசனம்.
- ஆஞ்சநேயருக்கு வெள்ளி அங்கி சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடு.
சுசீந்திரம்:
குமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இங்கு 18 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர்சாமி சிலை உள்ளது.
ஆஞ்சநேயர் சாமிக்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தன்று ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். மேலும் மாதந்தோறும் மூலம் நட்சத்திரத்தன்று ஆஞ்சநேயர் சாமிக்கு வெள்ளி அங்கி சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.
அது போல் நேற்றும் மூலம் நட்சத்திரத்தையொட்டி ஆஞ்சநேயர் சாமிக்கு வெள்ளி அங்கி சார்த்தி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகம் செய்திருந்தது.
- அம்பாளுக்கு மாங்கல்யம் சாற்றினால் விரைவில் மாங்கல்ய பாக்கியம் கிட்டும்.
- நாக பிரதிஷ்டைசெய்து, தோஷநிவர்த்தி அடைகின்றனர்.
தொண்டை நாட்டில் உள்ள மிகப் பழமை வாய்ந்த திருத்தலங்களுள் ஒன்று, பழங்காமூர் காசிவிசுவநாதர் ஆலயம். ஈசனின் இடப்பாகம் பெற நினைத்த அம்பிகை, காஞ்சிபுரத்தில் இருந்து புறப்பட்டு திருவண்ணாமலை நோக்கி சென்றார். வழியில் ஓர் வாழைக்காட்டில் (கதலிவனம்) வாழைப்பந்தல் அமைத்தார். பின்னர் அங்கேயே மணல் லிங்கம் அமைத்து ஈசனை வழிபட நினைத்தார். ஆனால் அதற்கு நீர் தேவைப்பட்டது. உடனே தனது மைந்தர்களான கணபதியையும், கந்தனையும் அழைத்து நீர் கொண்டுவர கட்டளையிட்டார்.
அதன்படி கணபதி மேற்கு நோக்கிச் சென்றார். அங்கே ஜவ்வாதுமலை அடிவாரத்தில் ஜமதக்னி முனிவர் தவம் இயற்றிக் கொண்டிருப்பதைக் கண்டார். குண்டலிபுரம் என்று முன்பு போற்றப்பட்ட படைவீட்டில் வாழ்ந்த இந்த முனிவர், கடுமையான தவசீலர்.
ரிஷி பத்தினிகளில் ஒருவரான ரேணுகையின் கணவர். அத்தகைய ஜமதக்னி முனிவரிடம் வந்த கணபதி, காக வடிவம் எடுத்து, அந்த முனிவர் அருகில் இருந்த கமண்டலத்தை தட்டி விட்டார். அதில் இருந்து கங்கையைக் காட்டிலும் புண்ணியம் மிகுந்த நீர், நதியாகப் பெருக்கெடுத்து ஓடியது. (அகத்தியரின் கமண்டலத்தை கணபதி காகமாக வந்து தட்டிவிட்டு காவிரி நதி உருவான கதை வேறு). அந்த நதியே கமண்டல நதியானது. இந்த தீர்த்தமானது, கங்கையை விடவும் கால் மடங்கு புண்ணியம் மிகுந்தது.
தர்மாரண்ய ஷேத்திரம் என்னும் ஆரணி வழியே இந்த கமண்டல நதி பாய்ந்து, வாழைப்பந்தலில் கந்தனால் ஏற்படுத்தப்பட்ட செய்யாற்றுடன் கலக்கின்றது. தர்மாரண்ய ஷேத்திரத்தின் வடபுறம், கமண்டல நாகநதியின் வடகரையில் காசியைப் போன்றே அமையப்பெற்றுள்ள ஊர்தான் பழங்காமநல்லூர் என்னும் பழங்காமூர். வாரணாசியைப் போன்று இங்கும் காசி விசுவநாதர் - விசாலாட்சி அம்மனோடு கோவில் கொண்டு அருள்பாலித்து வருகிறார்.
திரேதா யுகத்தின்போது இத்தலத்தில் ரிஷ்யசிருங்கர் என்னும் கலைக்கோட்டு முனிவர் வாழ்ந்து வந்தார். இவர் பன்னெடுங்காலமாக கமண்டல நதியில் நீராடி, வடகரையில் உள்ள காசி விசுவநாதரை அனுதினமும் வழிபட்டு வந்தார். அப்போது ஒரு சமயம் வசிஷ்டரின் ஆலோசனைப்படி தென்னகம் வந்த தசரதரின் வேண்டுகோளுக்கிணங்க, அக்கரைக்கு (கமண்டல நதியின் தென்கரைக்கு) அவரை அழைத்துச் சென்று புத்திரகாமேஷ்டி யாகத்தை நடத்தி வைத்தார்.
மேலும் தசரதரின் விருப்பப்படி புத்திரகாமேஷ்டி ஈசுவரரையும் நிறுவி வழிபாடு நடத்தினார். ரிஷ்யசிருங்கரின் காலத்திற்கும் முன்பே கமண்டல நதியின் வடகரையில், தானாக தோன்றியப் பெருமானாக காசி விசுவநாதர் வீற்றிருந்து அருள்பாலித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

பழங்காமூர் ஊரின் மையத்தில் கிழக்கு பார்த்தபடி காசி விசுவநாதர் ஆலயம் அமைந்துள்ளது. கருவறைக்குள் சற்றே இடதுபுறம் சாய்ந்த நிலையில் லிங்கத் திருமேனியாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார், காசி விசுவநாதர். ஆலயத்தின் தென்புறமாக அரசும் - வேம்பும் இணைந்து காணப்படுகிறது. அதன் கீழே நாகர் சிலைகள், அருகே சமயக்குரவர்கள் நால்வர் உள்ளனர். நிருதி திசையில் தல கணபதி சன்னிதி கொண்டுள்ளார். மேற்கில் வள்ளி - தெய்வானையுடன் சண்முகர் எழுந்தருளியுள்ளார்.
அம்பிகையாக விசாலாட்சி புன்னகை ததும்ப புன்முறுவலுடன் தனி சன்னிதியில் அருள்மழை பொழிகிறாள். ஏனைய சிவாலய தெய்வங்களும் ஆலயத்தை அலங்கரிக்கின்றன. தல விருட்சமாக வில்வ மரம் உள்ளது. இத்தல அம்பாளுக்கு மாங்கல்யம் சாற்றுவதாக வேண்டிக்கொள்ள விரைவில் மாங்கல்ய பாக்கியம் கிட்டும்.
நாகதோஷத்தால் பாதிப்படைந்தவர்கள், இங்கு நாக பிரதிஷ்டையை முறைப்படி செய்து, தோஷநிவர்த்தி அடைகின்றனர். சிறந்த வேலை வேண்டுவோர் பிரதோஷத்தை நடத்திட, நல்ல வேலை கிடைக்கப் பெறுகின்றனர். பிள்ளைச் செல்வம் இல்லாதோர் சுவாமி - அம்பாளுக்கு தேன் கலந்த பால் மற்றும் தயிரினால் அபிஷேகம் செய்து பலன் அடைகின்றனர்.
அமைவிடம்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டத்தில், ஆரணியில் இருந்து செய்யாறு செல்லும் வழியில் ஆரணியில் இருந்து ௩ கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பழங்காமூர் திருத்தலம்.
- கீழ்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சன சேவை.
- திருமயம் ஸ்ரீ ஆண்டாள் திருவீதி உலா.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, தை 24 (புதன்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: துவாதசி காலை 11.18 மணி வரை பிறகு திரயோதசி
நட்சத்திரம்: பூராடம் பின்னிரவு 2.57 மணி வரை பிறகு உத்திராடம்
யோகம்: அமிர்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று பிரதோஷம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் மண்டபம் எழுந்தருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை. திருமயம் ஸ்ரீ ஆண்டாள் திருவீதி உலா. வேதாரண்யம் சிவபெருமான் புறப்பாடு. பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோண்டராம சுவாமி காலை சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் கோவில்களில் மாலை சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி. சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். கீழ்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆக்கம்
ரிஷபம்-பரிசு
மிதுனம்-வரவு
கடகம்-செலவு
சிம்மம்-சிரத்தை
கன்னி-தனம்
துலாம்- பாராட்டு
விருச்சிகம்-சுகம்
தனுசு- சுபம்
மகரம்-ஆதரவு
கும்பம்-பயணம்
மீனம்-பண்பு






