என் மலர்
வழிபாடு
- திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது.
- பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. திருவண்ணாமலையில் மலையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள "அண்ணாமலை" என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
இதில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்படும் நாளிலும், சித்ரா பவுர்ணமி அன்றும் சுமார் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
இந்த நிலையில் ஆடி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.
அதன்படி பவுர்ணமி வருகிற 20-ந் தேதி (சனிக்கிழமை) மாலை 6.05 மணிக்கு தொடங்கி மறுநாள் 21-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.48 மணிக்கு நிறைவடைகிறது.
பவுர்ணமி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தையொட்டி வருவதால் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
- வடமதுரை ஸ்ரீ சவுந்தரராஜப் பெருமாள் யானை வாகனத்தில் புறப்பாடு.
- திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் காளிங்க நர்த்தன காட்சி.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஆடி-2 (வியாழக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: துவாதசி இரவு 7.23 மணி வரை பிறகு திரயோதசி
நட்சத்திரம்: கேட்டை பின்னிரவு 2.54 மணி வரை பிறகு மூலம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். வடமதுரை ஸ்ரீ சவுந்தரராஜப் பெருமாள் யானை வாகனத்தில் புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் காளிங்க நர்த்தன காட்சி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் வார திருமஞ்சனம். ஆலங்குடி குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சிறப்பு அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி சிறப்பு குரு வார திருமஞ்சனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நிறைவு
ரிஷபம்-நலம்
மிதுனம்-சாதனை
கடகம்-சிறப்பு
சிம்மம்-திறமை
கன்னி-வெற்றி
துலாம்- விருத்தி
விருச்சிகம்-தாமதம்
தனுசு- தேர்ச்சி
மகரம்-கடமை
கும்பம்-கண்ணியம்
மீனம்-கட்டுப்பாடு
- அற்புதங்களுக்கெல்லாம் சிகரமாக விளங்குவது சங்கர நாராயண சுவாமி சிலை.
- சங்கர நாராயண சந்நிதியில் வனக்குழி என்ற ஒரு பள்ளம் உள்ளது.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் வேறு எந்த ஒரு கோவிலிலும் இல்லாத ஒரு சிறப்பு உள்ளது. இங்கு இருக்கும் நாகராஜர் கோவில் பாம்பு புற்றை சுற்றி கோவில் எழுப்பி இருக்கிறார்கள்.
நாகதோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து பழம், பால் படைத்து வணங்கி செல்கின்றனர். அவரவர் வாழ்க்கையில் நினைத்த காரியங்கள் தடையின்றி நடைபெறுவதாக சொல்கிறார்கள்.
இந்த தலத்தில் உள்ள புற்று மண் மிகவும் விசேஷமானது. பல சரும நோய்களை குணமாக்க வல்ல மண் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். இந்த புற்றில் இருந்து மண்ணை எடுத்து அருகிலுள்ள தொட்டியில் போட்டிருக்கிறார்கள்.
அம்பாள் சன்னதியிலும் புற்று மண் இருக்கிறது. இந்த மண்ணை சிலர் மருந்தாக சாப்பிட்டு வருகிறார்கள். நெற்றியிலும் இதை திலகமாக வைத்துக் கொள்கிறார்கள்.

இந்த கோவில் அற்புதங்களுக்கெல்லாம் சிகரமாக விளங்குவது சங்கர நாராயண சுவாமி சிலை. காரணம் ஒரே சிலையில், ஒரு பாதி சிவனும், மறுபாதி விஷ்ணுவும் போன்ற தோற்றம் உடையது. தலையில் கங்கையை முடிந்து இருக்கிறார். ரத்ன கிரீடம் சூடியிருக்கிறார். கழுத்தில் ருத்திராட்ச மாலை அணிந்திருக்கிறார். இடுப்பில் புலித்தோல் கட்டியிருக்கிறார். இவை அனைத்தும் சிவனின் வடிவங்கள்.
மறுபாதியில் தலையில் கிரீடம், காதில் மசியக் குண்டலம், கையில் சங்கு, சிம்மகரணம், இடுப்பில் பட்டு பீதாம்பரம் இருக்கிறது. இந்த வடிவம் விஷ்ணுவின் வடிவமாகும். எனவே சிவனும், விஷ்ணுவும் சேர்ந்திருப்பதால் சங்கரநாராயண சுவாமி என்கிறார்கள்.

ஒருமுறை பார்வதி தேவியாருக்கு சிவன் பெரியவரா? விஷ்ணு பெரியவரா? என்று சந்தேகம் வந்துவிட்டது. அதை சிவனிடம் நேரடியாகவே கேட்டுவிட்டார். உடனே சிவபெருமான் பாதி சிவனாகவும், பாதி விஷ்ணுவாகவும் தோன்றினார்.
உடனே சிவனார், பெரியவர் யார், சிறியவர் யார் என்பது பார்ப்பவர் கண்ணில் தான் உள்ளது. இரண்டு பேருமே ஒன்று தான் என்று விளக்கமும் கூறினார். இதை உணர்த்தும் விழா, சங்கரன் கோவிலில் காட்சி அளிக்கும் ஈசனை காண தேவி புறப்பட்டு வரும் வைபவமாக ஆடித்தபசு எனும் நிகழ்வாக கொண்டாடப்படுகிறது.
அம்பாள் தவக் கோலத்தில் காணப்படுகிறார். அம்பாள் சன்னதியை சுற்றி உள்ள கிரிவீதியை 108 முறை சுற்றினால் நினைத்தது நடக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது இத்தலத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை.
அதுவும் ஆடித்தபசுக்கு முன்பு சுற்ற வேண்டும். ஆடித்தபசு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் உத்திரட்டாதி நட்சத்திரத்தன்று நடந்தேறுகிறது.

பொதுவாக சிவன் அபிஷேகப்பிரியர். விஷ்ணு அலங்காரப் பிரியர். ஆனால் சங்கரன்கோவிலில் இருவரும் ஒரே சிலையாக அமைந்திருப்பதால் அதற்கு அபிஷேகம் செய்வது சிரமமாக இருந்தது. இதையறிந்த ஆதிசங்கரர் தாம் வைத்திருந்த ஸ்படிகலிங்கத்தை கோவிலுக்கு கொடுத்து அதற்கு அபிஷேகம் செய்யுமாறு கூறினார்.
இந்த லிங்கத்தை தண்ணீரில் போட்டால் லிங்கம் இருப்பதே தெரியாது. இது ஒரு இயற்கை அற்புதமாகும். அதுபோல் சங்கர நாராயண சந்நிதியில் வனக்குழி என்ற ஒரு பள்ளம் உள்ளது. இதில் சாமியை பிரதிஷ்டை செய்திருப்பதாக ஒரு ஐதீகம். எனவே பேய் மற்றும் பில்லி சூனியத்திற்கு ஆளான பலர் இந்த வனக்குழியில் அமர்ந்து பூஜை செய்வார்கள்.
- சங்கரன்கோவிலில் ஆடி தபசு கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
- பெரிய பாளையத்தம்மன் கோவிலில் ஆடி திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
1. ஆடி மாதத்தில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் பன்னிரண்டு நாட்கள் அம்மனின் ஆடி தபசு திருநாள் மிகக் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அரியும் சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்த இந்த விழா நடத்தப்படுகிறது.

2. சென்னை புறநகரில் உள்ள அம்மன் கோவில்களில் பெரிய பாளையத்தம்மன் கோவிலில் தான் ஆடி திருவிழா மிக, மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
3. கள்ளழகர் கோவிலில் விமரிசையாக ஆடித் தேரோட்டம் நடைெபறும்.
4. சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு 5 நாட்கள் நடை திறந்து பல்வேறு பூஜைகள் நடைபெறுகின்றன.
5. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஸ்ரீவனதுர்க்கை அம்மன் கோவில் உள்ளது. ஆடி மாதம் இந்த கோவிலில் பிரமாண்ட தீ மிதி திருவிழா நடைபெறும். சுற்று வட்டாரங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
6. ஆடிப்பெருக்கு திருவிழா ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் விமரிசையாக நடைபெறும். அப்போது பெருமாள் மண்டபத்துக்கு எழுந்தருள்வார்.

7. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆடி முளைக்கொட்டு விழா நடை பெறும் பத்து நாட்களில், ஆடி வீதி நான்கிலும் அம்மன் வலம் வருவார்.
8. கும்பகோணம் சாரங்கபாணி கோவில் ஆண்டாளுக்கு ஆடிப்பூர உற்சவம் மூன்று நாட்களுக்கு வெகு விமரிசையாக நடைபெறும்.
9. கொடுமுடி மகுடேசுவரர் வீர நாராயணப் பெருமாள் கோவில் ஆடிப் பதினெட்டில் மும்மூர்த்திகளும் காவிரிக்கு எழுந்தருள்வார்கள். அன்று இரவு பச்சை மண்ணில் பானை செய்து, மா விளக்கு, காதோலை, கருகமணி, தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு முதலியவற்றை அதில் வைத்து விட்டு வருவர்.

10. தமிழ்நாட்டில் பண்டை காலத்தில் காவிரி, கொள்ளிடம், தாமிரபரணி ஆகிய 3 நதிகளிலும் ஆடிப்பெருக்கு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த 3 ஆறுகளில் தண்ணீர் பெருகுவதை முவ்வாறு பதினெட்டு என்று குறிப்பிட்டுள்ளனர்.
11. ஆடி மாதம்தான் கிராம தெய்வங்களான மதுரை வீரன், கருப்பண்ணசாமி போன்றவைகளுக்கு சிறப்பான பூஜைகள் நடத்தப்படும்.
12. ஆடி மாதம் குற்றால ஈசனை வணங்கி அருவியில் குளித்தால் நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.
13. திருச்சி அருகே உள்ள திருநெடுங்காநாதர் கோவிலில் ஆடி மாதம் முழுவதும் சூரிய ஒளி மூலவர் மீது படுவது சிறப்பாக கருதப்படுகிறது.
14. சேலத்தில் ஆடிமாதம் நடக்கும் செருப்படிதிருவிழா தமிழகத்தில் வேறு எங்கும் காணமுடியாத விழாவாகும். வேண்டுதல் செய்த பக்தர்கள் ஒரு ஜோடி செருப்பு, துடைப்பம், முறம் கொண்டு வருவார்கள். பூசாரி பக்தர் மீது 3 தடவை மெல்ல நீவிவிடுவார்கள். இதுதான் செருப்படித் திருவிழா.
15. சென்னை திருநின்றவூரில் உள்ள நாகேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆடி முதல் நாள் சக்தி மாலை அணிந்து மஞ்சள் ஆடை தரித்து பய பக்தியுடன் ஒரு மண்டலம் விரதமிருந்து வேண்டுதல் நிறைவேற்றுவார்கள்.
16. கோவை ஈச்சனாரியில் உள்ள மகாலட்சுமி மந்திரில் மூன்று தேவிகளுக்கும் முதல் மூன்று வாரங்கள் பூக்களால் தினமும் அலங்காரம் செய்வார்கள். நான்காவது வாரம் காய்கறிகளால் அலங்காரம் செய்வார்கள். ஐந்தாவது வாரம் பல வகை பழங்களால் அலங்காரம் செய்வார்கள். கடைசி வெள்ளியன்று வரலட்சுமி நோன்பு விழா நடைபெறும். அதில் மாங்கல்ய சரடு வைத்துப் பூஜித்து பெண்மணிகள் அனைவருக்கும் வழங்குவார்கள்.
17. ஆடி மாதத்தில் திருநெல்வேலி திரிபுரபேரவியையும் மகாமாரியம்மனையும் வணங்குவது சிறப்பாகும்.
18. செஞ்சிக் கோட்டை அருகே உள்ள கமலக்கண் ணியம்மன் ஆலயத்தில் ஆடிமாதம் பெரிய அளவில் விழா நடைபெறும். அப்ேபாது 10,000 ேபருக்கு அன்னதானம் அளிப்பார்கள்.
19. தகடூரில் உள்ள கோட்டை கல்யாண காமாட்சி ஆலயத்தில் உள்ள சூலினி துர்க்கை அம்மனின் முழு உருவத்தை ஆடி மாதம் மூன்றாம் செவ்வாயில் மட்டுமே மாலை 4 மணி முதல் இரவு 9 மணிவரை தரிசிக்கலாம். மற்ற நாட்களில் முக தரிசனம் மட்டுமே.
20. தருமபுர ஆதீன தேவஸ்தான அம்மன் ஆலயங்களில் ஆடிவெள்ளியில் நவசக்தி அர்ச்சனை செய்வார்கள். 9 சிவாச்சாரியார்கள் 9 வகை மலர்களால் 9 சக்திகளை ஒரே சமயத்தில் அர்ச்சிப்பதே நவசக்தி அர்ச்சனை எனப்படும்.
21.புதுச்சேரி அருகே வங்க கடலோரம் அமைந்துள்ள வீராம்பட்டினத்தில் உள்ள செங்கழுநீர் அம்மன் ஆலயத்தில் முதல் வெள்ளியில் இருந்து கடைசி வெள்ளிவரை எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் விசேஷ பூஜைகளும் விதவிதமான பல்லக்கில் வீதியுலாவும் நடைபெறும். தேரோட்டத்தை அரசாங்க விழாவாகக் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை விடுவார்கள். புதுச்சேரி கவர்னர் தேர்வடத்தை இழுத்து விழாவைத் தொடங்கி வைக்கும் வழக்கம் இன்றும் உள்ளது. ஆடி மாதம் முழுவதும் இவ்வூரில் விழாக் கோலம்தான்.
22.சக்தி பீடங்களில் ஒன்றான திருவானைக் காவல் ஜம்புகேஸ்வரர் ஆலய அம்மன் அகிலாண்டேஸ்வரிக்கு ஆடி வெள்ளியில் ஸ்ரீ வித்யா பூஜை வைதீக முறைப்படி நடத்துகின்றனர். இந்த அம்மன் காதுகளில் உள்ள தாடகங்களில் ஸ்ரீசக்கரம் உள்ளது. ஆடி வெள்ளியன்று இந்த அம்மன் மாணவியாக இருக்க, ஈசன் குருவாக இருந்து உபதேசம் செய்தார். எனவே பள்ளிப் பிள்ளைகள் இங்கு வந்து வேண்டிக் கொள்கின்றனர்.
23. திருவானைக்காவலில் ஆடி வெள்ளியன்று அம்பாள் காலையில் லட்சுமிதேவியாகவும் உச்சிக்கால வேளையில் பார்வதியாகவும் மாலையில் சரஸ்வதியாகவும் காட்சி தருவாள்.
24. ஆடிப் பவுர்ணமி அன்றுதான் திருச்சி உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் ஆலய பஞ்சவர்ண லிங்கம் உதங்க முனிவருக்கு ஐவண்ணங்களைக் காட்டியருளியது. அதனால் இவருக்கு ஐவண்ணநாதர் எனப் பெயர். காலை முதல் மாலை வரை இந்த லிங்கம் ஐந்து வண்ணங்களில் காட்சியளிக்கும்.
25. திருவல்லிக்கேணி எல்லை அம்மன் கோவிலில், ஆடிப்பூரத்தன்று அம்மனுக்கு வளையல் அடுக்கி ''சுவாசினி பூஜை'' நடைபெறுகிறது. இப்பூஜை, சுமார் 50 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.
- புண்ணிய தினத்தில் மகாவிஷ்ணுவை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
- சிறுவர்-சிறுமிகளுக்கு நல்ல கல்வி அறிவு கிடைக்கும்.
புதன்கிழமையும் அனுஷம் நட்சத்திரமும் ஒன்றாக சேர்ந்து வரும் தினத்தை புதானூராதா புண்ணிய கால தினம் என்று சொல்வார்கள். இது விசேஷமான தினமாகும். இந்த புண்ணிய தினம் இன்று.
இந்த தினத்தை அட்சய திருதியை தினத்துக்கு சமமானதாக சொல்வார்கள். அதாவது இன்றைய தினம் நாம் ஒரு நல்ல செயலை செய்தால் அது பல மடங்கு பெருகி நமக்கு பலனாக வந்து கை கொடுக்கும் என்பது ஐதீகம்.
இந்த புண்ணிய தினத்தில் மகாவிஷ்ணுவை வழிபாடு செய்வது மிகவும் நல்லது. இன்று பெருமாள் ஆலயங்களுக்கு செல்லும்போது தயிர் சாதம் தயாரித்து ஊறுகாயுடன் சேர்த்து வைத்து வழிபட வேண்டும். பிறகு அந்த தயிர் சாதம்-ஊறுகாயை ஆழ்வார்கள் சன்னதியில் வைத்து பக்தர்களுக்கு தானமாக கொடுக்கலாம்.
இந்த தானத்தால் குடும்பத்தில் உள்ள சிறுவர்-சிறுமிகளுக்கு நல்ல கல்வி அறிவு கிடைக்கும். சிலருக்கு சனி தோஷம் மிகவும் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும். அத்தகைய நிலையில் இருப்பவர்கள் இந்த புதானூராதா புண்ணிய கால வழிபாட்டை செய்தால் சனி தோஷத்தில் இருந்து சற்று ஆறுதல் பெறலாம்.
மேலும் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுள் கிடைக்க செய்யும் ஆற்றலும் இந்த வழிபாட்டுக்கு உண்டு.
- பிரகாரங்களை வலம் வந்து வழிபடுவது லட்சபிரதட்சணம் எனப்படும்.
- அறிந்தும் அறியாமல் செய்த பாவங்கள் நம்மை விட்டு விலகும்.
ஆலய வழிபாட்டில் இறைஅருளை பெற எத்தனையோ வழிகள் இருந்தாலும் ஆலய பிரகாரங்களை வலம் வந்து தரிசனம் செய்யும் முறைக்கு அதிக பலன்கள் தரும் ஆற்றல் உண்டு. எனவேதான் ஆலயத்துக்கு சென்றதும் பிரகாரங்களை அவசியம் சுற்றி வர வேண்டும் என்றார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் வரும் சயன ஏகாதசி தொடங்கி கார்த்திகை மாதம் வரும் உத்தான ஏகாதசி வரை தினமும் ஆலயங்களுக்கு சென்று பிரகாரங்களை வலம் வந்து வழிபட வேண்டும் என்று நமது முன்னோர்கள் வகுத்து வைத்து இருக்கிறார்கள்.

பிரகாரங்களை வலம் வந்து வழிபடும் இந்த வழிபாட்டை லட்சபிரதட்சணம் என்று அழைக்கிறார்கள். ஜூலை மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை செய்ய வேண்டிய இந்த வழிபாட்டின் போது லட்சம் தடவைக்கு மேல் ஆலய பிரகாரங்களை வலம் வந்து விட முடியும் என்று நமது முன்னோர்கள் கணித்துள்ளனர். எனவே இதற்கு லட்சபிரதட்சண வழிபாடு என்று சொல்கிறார்கள்.

ஆண்டுக்கு ஒரு தடவையே வரும் இந்த சிறப்பான வழிபாடு இன்று விஷ்ணு சயனிக்கும் ஏகாதசி அன்று தொடங்குகிறது. 12.11.2024 வரை தினமும் இந்த பிரகாரம் வலம் வரும் வழிபாட்டை செய்ய வேண்டும்.
ஆலயத்தில் அரச மரம், துளசி இருந்தால் அவற்றை காலையில் மட்டுமே வலம் வந்து வழிபட வேண்டும். இந்த வழிபாட்டை வேதவியாசர் ஒரு தடவை தர்மருக்கு அறிவுறுத்தி செய்ய வைத்ததாக புராணங்களில் சொல்லப்பட்டு உள்ளது.
ஆலயத்தை வலம் வரும் இந்த வழிபாட்டை செய்து முடித்தால் மிகுந்த பலன்கள் கிடைக்கும். குறிப்பாக அறிந்தும் அறியாமல் செய்த பாவங்கள் நம்மை விட்டு விலகும்.
- இன்று சர்வ ஏகாதசி.
- பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஆடி-1 (புதன்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: ஏகாதசி இரவு 7.16 மணி வரை பிறகு துவாதசி
நட்சத்திரம்: அனுஷம் பின்னிரவு 2.14 மணி வரை பிறகு கேட்டை
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று சர்வ ஏகாதசி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் ராஜாங்க சேவை. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் பூப்பல்லக்கில் பவனி. மதுரை ஸ்ரீ கடலழகர் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் ஸ்ரீ ரங்கம் நம் பெருமாள் காலை சிறப்பு திருமஞ்சனம். திருவல்லிக் கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சனம். நாகப்பட்டினம் ஸ்ரீ நீலாயதாட்சியம்மன் அபிஷேகம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி சிறப்பு திருமஞ்சனம், பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-மகிழ்ச்சி
ரிஷபம்-ஆக்கம்
மிதுனம்-பாராட்டு
கடகம்-வெற்றி
சிம்மம்-சாந்தம்
கன்னி-வாழ்வு
துலாம்- நிம்மதி
விருச்சிகம்-ஈகை
தனுசு- தேர்ச்சி
மகரம்-கவனம்
கும்பம்-இன்பம்
மீனம்-ஆசை
- ஆடி மாதம் மகாவிஷ்ணு சயன கோலத்தில் இருக்கும் ஏகாதசி.
- நைவேத்தியமாக பால் பாயாசம் படைத்து வழிபடலாம்.
விரதங்களில் மிக மிக உயர்ந்தது ஏகாதசி விரதம் என்று சொல்வார்கள். ஒவ்வொரு ஆண்டும் 24 அல்லது 25 ஏகாதசி விரதங்கள் வரும். இந்த ஏகாதசி விரதங்களில் சில ஏகாதசி விரதங்கள் மிகுந்த பலன்களை தரும் ஆற்றலை கொண்டது.
குறிப்பாக ஆடி மாதம் மகாவிஷ்ணு சயன கோலத்தில் இருக்கும் ஏகாதசி. அடுத்து மகாவிஷ்ணு படுக்கையில் திரும்பி படுக்கும் பரிவர்த்தனை ஏகாதசி மற்றும் மகாவிஷ்ணு படுக்கையில் இருந்து எழுந்திருக்கும் உத்தான ஏகாதசி ஆகிய 3 ஏகாதசிகளும் மிகவும் சிறப்பானவை.
ஆனி மாத அமாவாசைக்கு பிறகு வரும் சயன ஏகாதசியான இன்று குடும்பத்தில் யார் யாருக்கு முடியுமோ அவர்கள் அனைவரும் முழு உபவாசம் இருக்க வேண்டும். இயலாதவர்கள் பால், பழம் மட்டும் சாப்பிட்டு உண்ணாவிரத நோன்பு இருக்கலாம்.

இன்று மாலை சூரியன் மறைந்த பிறகு மகாலட்சுமியுடன் கூடிய மகாவிஷ்ணு படத்தை பூஜை அறையில் அலங்கரித்து வைத்து நைவேத்தியம் படைத்து தீபதூபங்கள் காட்டி வழிபட வேண்டும். மகாவிஷ்ணுவை அலங்கரிக்கும்போது தாமரை அல்லது மல்லிகைப்பூவை பயன்படுத்துவது நல்லது.
நைவேத்தியமாக பால் பாயாசம் படைத்து வழிபடலாம். பூஜைகள் முடிந்ததும் மகாவிஷ்ணு போற்றி சொல்ல வேண்டும். இன்றைய தினம் இந்த வழிபாட்டை செய்தால் ஆண்டு முழுவதும் ஏகாதசி விரதம் இருந்ததற்கு சமமான பலன்கள் கிடைக்கும்.
பிரம்மகத்தி தோஷம் உள்ளிட்ட தோஷங்கள் விலகிச் செல்லும். மேலும் நல்ல வீடும், அமைதியான வாழ்க்கையையும் இந்த வழிபாடு பெற்று தரும்.
சயன ஏகாதசியான இன்று மேற்கொள்ளப்படும் விரதத்திற்கு கோபத்ம விரதம் என்று பெயர். காலை மற்ற கடமைகளை முடித்து விட்டு பூஜை அறையில் 3 கோலங்கள் போட்டு தாமரை மலர்களால் அலங்கரித்து அதன் நடுவில் மகாலட்சுமியுடன் மகாவிஷ்ணு இருக்கும் படத்தை வைத்து வழிபட வேண்டும்.
33 முறை வலம் வந்து 33 முறை வழிபட வேண்டும். படம் இல்லாமல் கலசம் வைத்தும் இந்த வழிபாட்டை செய்யலாம். பிறகு 33 நபர்களுக்கு பிரசாதம் அளிப்பது சாப்பிட செய்ய வேண்டும். இந்த பூஜை செய்பவர்களுக்கு பாவங்கள் விலகும். பேரன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் உண்டாகும் என்று பத்ம புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- அன்னையை வழிபட்டால் நிறைய பலன்களைப் பெறலாம்.
- ஆடி மாதம் தமிழ்நாட்டில் அம்மன் வழிபாடு மிகவும் சிறப்பாக நடைபெறும்.
நாளை (புதன்கிழமை) ஆடி மாதம் பிறக்கிறது. ஆடி மாதம் முழுவதும் அம்மனை வழிபட்டு அருள் பெற வேண்டும் என்பது தமிழகத்தில் எழுதப்படாத விதியாக உள்ளது.
ஆடி மாதத்தில் எத்தனையோ சிறப்புகள் உள்ளன. அவற்றை தெரிந்து கொண்டால் நீங்களும் ஆடி மாதம் முழுவதும் அம்மன் ஆலயத்துக்கு தவறாமல் செல்வீர்கள். அதைப் பார்க்கலாம்...
தமிழகத்தில் பெரும்பான்மையான ஊர்களில் மாரியம்மன்தான் காவல் தெய்வம். காரணம், ஒரு தாயாக இருந்து தன்னை நாடியவர்களைக் காப்பதில் மாரியம்மனுக்கு ஈடு இணை கிடையாது. தன் குழந்தைகளை பாதுகாப்பதில் தாய்க்கு சமமாக வேறு எவரைச் சொல்ல முடியும்.
மாரியம்மன் கோவில் இல்லாத ஊர் இருக்கவே முடியாது. ஆடி மாதங்களில் கூழும், வேப்பிலையுமாகக் கொண்டாடப்படும் மாரியம்மன் தான் மக்களை காக்க மண்ணில் உதித்த மாபெரும் தெய்வம்.
ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்றும் அம்பாள் மாதம் என்றும் சிறப்பித்து கூறுவார்கள். அந்தளவுக்கு வீடுகளிலும், கோவில்களிலும் விழாக்களும், விரத வழிபாடுகளும் களைகட்டி விடும்.
ஆடி மாதத்தில் பால்குடம் எடுத்தல், பொங்கல் வைத்து வழிபடுதல், சிறப்பு பூஜைகள் செய்தல், தீ மிதித்தல், கூழ் ஊற்றுதல், அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபடுதல் என்று இந்த மாதம் முழுவதும் வழிபாடு மாதமாகிறது.
தமிழ் மாதங்களை உத்ராயணம், தட்சணாயணம் என இரு பிரிவுகளாக பிரிக்கலாம். தை முதல் ஆனி வரையான 6 மாதங்களை உத்ராயணம் எனவும் ஆடி முதல் மார்கழி வரையான 6 மாதங்களை தட்சணாயண காலமாகவும், பிரிக்கப்பட்டுள்ளது.
தட்சணாயணம் துவங்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சும சக்திகள் வெளிப்படும். வேத பாராயணங்கள், மந்திரங்கள், ஜெபங்கள், வழிபாடுகள் ஆகியவற்றுக்கு ஆடி மாதம் சிறந்ததாக கருதப்படுகிறது.
சுற்றுப்புறத்தை தூய்மையாக்கி, அம்மன் வழிபாட்டை மேம்படுத்திக் கொள்ளவும் ஆடி மாதம் பயன்படுகிறது. அம்மனுக்கு வேப்பிலை சாற்றி வழிபடுவது, கூழ் படைத்து சாப்பிடுவதும் ஆடி மாதத்தின் சிறப்பாகும்.
ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசிக்குள் புனர்பூசம் 4-ம் பாதத்தில் நுழைவார். கடகம் சந்திரன் வீடு பெண் ராசி. பெண் வீட்டில் ஆண் கிரகமான சூரியன் நிற்பதால் ஆடி மாதம் தட்ப வெப்ப நிலை சீராக இருக்காது என்பதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்.
ஆடி மாதத்தில் புதிதாக துளிர் விடும் கொழுந்து வேப்பிலைக்கு அதீத மருத்துவ, தெய்வீக குணம் உண்டு உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சக்தியும் உண்டு. மேலும் எளிதாக ஜீரணிக்கக் கூடிய உணவான கூழ் சாப்பிட்டால் ஆரோக்கியம் சீராக இருக்கும்.
ஆடி மாதம் முழுவதும் தமிழ்நாட்டில் அம்மன் வழிபாடு மிகவும் சிறப்பாக நடைபெறும். அம்மன் வீற்றிருக்கும் தலங்களில் விதம், விதமான வழிபாடுகள் நடத்தப்படும். எங்கு பார்த்தாலும் "ஓம் சக்தி... பராசக்தி" என்ற கோஷம் ஆத்மார்த்தமாக, அருள் அலையாக பரவி நிற்கும்.
சக்தி வழிபாடு என்பது மிக, மிக தொன்மையானது. ஆதி காலத்தில் இந்த வழிபாட்டை 'தாய்மை வழிபாடு" என்றே கூறினார்கள்.
உலகின் முதல் வழிபாடாக சக்தி வழிபாடு கருதப்படுகிறது. சதாசிவன், மகேஸ்வரன், ருத்ரன், விஷ்ணு, பிரம்மா ஆகிய 5 பேரை தனது அம்சமாக உருவாக்கிய அன்னை, பிறகு "ஹ்ரீம்" எனும் பீஜத்தில் எழுந்தருளியதாக திருமூலர் கூறியுள்ளார்.
"ஹ்ரீம்" என்ற மந்திரம் ஓம் எனும் பிரணவ மந்திரம் போல சிறப்பு வாய்ந்தது. "ஹ்ரீம்" என்ற பீஜ மந்திரத்தை மனதில் இருத்தி, மனதை அலைபாய விடாமல், ஒருமுகப்படுத்தி படித்தால், முக்காலமும் உணர்ந்து மரணத்தை வென்று மகத்தான வாழ்வை பெற முடியும் என்று திருமூலர் குறிப்பிட்டுள்ளார்.
அம்பிகையைச் சரண் அடைந்தால் அதிக வரம் பெறலாம் என்பது மகாகவி பாரதியாரின் வாக்கு. "முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே" என்கிறார் அபிராமிபட்டார்.
கல்வி, செல்வம், வீரம் மூன்றையும் தருபவள் சக்தியே. சிவனிடம் இருந்து சக்தியை ஒரு போதும் பிரிக்க முடியாது. உலகமே சிவசக்தி மயமாக உள்ளது. எனவே ஆலயங்களிலும் வீடுகளிலும் அம்பிகையை பராசக்தியாக போற்றி அவசியம் வழிபட வேண்டும்.
வீட்டில் தினமும் காலை, மாலை இரு வேளையும் விளக்கேற்றி வைத்து செம்பருத்தி, அரளி ஆகிய மலர்களால் அர்ச்சித்து வழிபடலாம்.
குறிப்பாக செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் அம்பிகையை பூஜிக்க மிகவும் ஏற்ற தினங்களாகும். அதிலும் முறைப்படி, பயபக்தியுடன் அன்னையை வழிபட்டால் நிறைய பலன்களைப் பெறலாம்.
வேதங்கள் வகுத்தபடி பராசக்தியை வழிபடுபவர்களுக்கு இந்திர பதவியை தருவாள் என்கிறார் அபிராமி பட்டார்.
லோக மாதாவான பராசக்திக்கு நாம் எல்லாருமே பிள்ளைகள் தான். நம் மீது கருணை, அன்பு காட்டி, நம்மையெல்லாம் பக்குவப்படுத்தி அவள் வளர்த்துள்ளாள்.
அன்னையை வணங்கி நாம் தொடங்கும் செயல்கள் அனைத்தும் வெற்றியே பெறும். அவள் அருளைப் பெற்றவர்களுக்கு எந்த செயலிலும் எந்தவித இடர்பாடும், இடையூறும் வராது.
இப்படி கடவுளாகவும், குருவாகவும் அன்னையை ஏற்றுக் கொண்டால், அவள் நமக்கு என்றென்றும் வழிகாட்டியாக இருப்பாள். அத்தகைய தெய்வத்துக்கு நாம் நன்றியை காட்ட வேண்டாமா?
அந்த கடமையை செய்யும் மாதமாக ஆடி மாதம் மலர உள்ளது. இந்த மாதம் முழுவதும் அம்மனின் மலர்ப்பாதங்களில் நமது எண்ணம் அனைத்தையும் குவித்து விட வேண்டும்.
அவளிடம் முழுமையாக நாம் சரண் அடைதல் வேண்டும். உடல், பொருள், ஆன்மா அனைத்தையும் அவள் காலடியில் ஒப்படைக்க வேண்டும். ஆடியில் அம்மனுக்கு மிகவும் பிடித்த நைவேத்தியமான கூழ் படைத்து வழிபடுதல் மிகவும் நல்லது. அதில்தான் அன்னை பராசக்தி மகிழ்ச்சி அடைவாள்.
அவளிடம் ஏற்படும் மகிழ்ச்சி, நம் வாழ்வை உயர்த்தும். இந்த பிறவியை இன்னலின்றி நிறைவு செய்ய உதவும். அண்டங்கள் அனைத்தையும் அதிர வைக்கும் ஆற்றலை அன்னை பெற்றிருந்தாலும், தூய்மையான பக்தியுடன் வழிபடும் பக்தர்களிடம் அன்பையும் அரவணைப்பையும் காட்டுவாள். அதை பெற நாம் இந்த ஆடி மாதத்தில் சக்தி தலங்களுக்கு சென்று மனதை ஒருமுகப்படுத்தி வழிபட வேண்டும்.

ஆடி மாதம் மழை தீவிரமாகும் காலம் என்ப தால் நோய் பரவலும் அதிகமாக இருக்கும். இதைத் தவிர்க்க வீடுகளில் தினமும் தீபம் ஏற்ற வேண்டும்.
குறிப்பிட்ட எண்ணை மற்றும் திரியில் ஏற்றப்படும் தீபம் நோய்களை விரட்டும் என்பார்கள். எனவே ஆடி மாதம் முழுவதும் மறக்காமல் தீபம் ஏற்றுங்கள்.
தீபமாகிய நெருப்பு என்னும் ஒளி வடிவமே அக மற்றும் புற இருளாகிய அஞ்ஞானத்தை நீக்கி ஞானத்தை வழங்கக் கூடியது. தீபத்தின் ஒளியில் கலைமகளான சரஸ்வதி தேவியும், சுடரில் திருமகளான லட்சுமியும், வெப்பத்தில் மலைமகளாகிய உமையம்மையும் இருப்பதாகக் கருதப்படுகிறது. எனவே தான் கோவில்களில் கோடி தீபம், லட்ச தீபம் ஆகியவை ஏற்றப்படுகின்றன.
வீடுகளில் தீபத்தை காலையில் பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் ஏற்றுவது நல்லது. அதே போல் மாலையில் பிரதோச வேளையான 4.30 மணி முதல் 6 மணிக்குள் ஏற்றுவது சிறந்த பலன்களைக் கொடுக்கும். கோவில்களில் எந்த நேரமும் தீபம் ஏற்றி வழிபாடு மேற்கொள்ளலாம்.
- 3 முறை தங்கக்கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி அருள்பாலிப்பார்.
- பெரியாழ்வார் சாற்றுமுறை உற்சவமும் நடைபெற்றது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் உள்ள சிறப்பு பெற்ற வரதராஜப் பெருமாள் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசித் திருவிழாவில் 3-வது நாளிலும், ஆனி மாதம் மற்றும் ஆடி மாதம் என 3 முறை தங்கக்கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
இந்த நிலையில் இந்த ஆண்டு மாத கருட சேவையை யொட்டி உற்சவர் தேவராஜ சுவாமிக்கு சிறப்புத் திருமஞ்சனம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. பின்னர் பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து வாகன மண்டபத்துக்கு வந்து தங்ககருட வாகனத்தில் பச்சைப் பட்டு உடுத்தியும், முத்துக்கிரீடம் மற்றும் தங்க ஆபரணங்கள், மாலைகள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
பின்னர் பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனை நடை பெற்றது. மஞ்சள் பட்டாடை அணிந்து தங்கக்கருட வாகனத்திற்கு வந்த பெருமாள் முதலா வதாக கோவில் வளாகத்தில் உள்ள ஆழ்வார் சுற்றுப் பிரகாரத்திற்குள் வலம் வந்தார். பின்னர் கோவிலின் நுழைவு வாயிலில் ராஜகோ புரத்தின் முன்பாக கோபுர தரிசனம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து ஆஞ்சநேயர் சந்நிதியில் சிறப்பு தீபாராதனையும் அதனைத் தொடர்ந்து கோவில் மாட வீதியில் உலா வந்து பெருமாள் எழுந்தருளினார். பின்னர் பெரியாழ்வார் சாற்றுமுறை உற்சவமும் நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சீனிவாசன் தலைமையில் கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- 7 முதல் 8-ம் நூற்றாண்டு வரையான காலகட்டத்தைச் சேர்ந்தவை.
- கட்டிடக்கலை வட இந்திய பாணியில் அமைந்துள்ளது.
கர்நாடக மாநிலம் பாதாமியில் உள்ள அகத்தியர் ஏரியின் கிழக்கே அமைந்திருக்கிறது, பூதநாதர் குழு கோவில்கள். இவை கி.பி. 7-ம் நூற்றாண்டு முதல் 12-ம் நூற்றாண்டு காலகட்டத்தைச் சேர்ந்த இந்து சமய ஆலயங்களாகும். இவை இரண்டு துணைக் குழுக்களாக அமைந்துள்ளன.
அதில் ஒன்று கிழக்கு பூதநாதர் குழு அல்லது பூதநாதர் முதன்மை குழு என்று அழைக்கப்படுகிறது. இது 7 முதல் 8-ம் நூற்றாண்டு வரையான காலகட்டத்தை சேர்ந்தவை. இவை பெரும்பாலும் திராவிட கட்டிடக் கலை பாணியில் கட்டப்பட்டுள்ளன.
மற்றொன்று வட பூமிநாதர் குழு அல்லது மல்லிகார்ஜூன குழு என்று அழைக்கப்படுகிறது. இவை 11 முதல் 12-ம் நூற்றாண்டு வரையான காலகட்டத்தில் கட்டப்பட்டவை. இதன் பெரும்பாலான கட்டிடக்கலை வட இந்திய பாணியில் அமைந்துள்ளது.

இந்த பூதநாதர் கோவிலானது, பழமையான இந்து கோவில்களில் ஒன்று. இந்த ஆலயம் ஒரு மைய மண்டபத்துடன், எண்கோணம், கனசதுரம், வட்டம் ஆகிய அமைப்புகளில் நான்கு விதமாக கட்டிட அமைப்புகளைக் கொண்டு காட்சியளிக்கிறது.
மைய மண்டபமானது, சிவலிங்கம் வீற்றிருக்கும் சிறிய சதுர வடிவ கருவறைக்கு முன்பு இருக்கிறது. மலையின் அடிவாரத்தில், நீர் நிலைக்குள் இருப்பது போல் இந்த ஆலயம் கட்டப்பட்டிருப்பது, பார்ப்பவர்களின் கண்களை கவர்வதாக இருக்கிறது.
கருவறையின் உச்சியில் (விமானம்) திராவிட கட்டிடக் கலை பாணியிலான 'திரிதால' (மூன்று தளங்கள்) கட்டுமானம் கொண்டிருக்கிறது. கீழ் பகுதியில் பாதபந்த மற்றும் கும்ப அமைப்பு உள்ளது. விமானச் சுவர்களில் பிரம்மகாண்ட பாணியில் செவ்வக வடிவ தூண்களும், கின்னரர்கள், கந்தர்வர்கள் ஆகியோரின் சிலைகளும் வடிக்கப்பட்டுள்ளன.
இரண்டாவது தளமானது, கீழ் தளத்தை விட சற்று சிறியதாக உள்ளது. மூன்றாவது தளம், இரண்டாவது தளத்தின் பாதி அளவில் காணப்படுகிறது. உச்சியில் குட்டையான சிகரத்துடன் காட்சி தருகிறது.
கோவிலின் அடிவாரத்தின் வலதுபுறத்தில் கங்கை தேவி தன் வாகனமான மகரத்தின் மீது அமர்ந்திருக்கிறார். இடது புறத்தில் யமுனாதேவி தன் வாகனமான ஆமையின் மீது வீற்றிருக்கிறார். தவிர விநாயகர், மகிஷாசுரமர்த்தினி உருவங்கள் காணப்படுகின்றன.

பிரதான கோவிலின் வடக்கே ஒரு சிற்றாலயம் உள்ளது. இது முதலில் மகாவிஷ்ணுவுக்காக கட்டப்பட்டிருக்கலாம் என்கிறார்கள். ஒரு கட்டத்தில் இந்தக் கோவிலை, லிங்காயத்து மரபினர் கைப்பற்றினர். அவர்கள்தான் இதற்கு ஒரு வெளிப்புற மண்டபத்தைக் கட்டி, கருவறைக்குள் நந்தியையும், சிவலிங்கத்தையும் நிறுவியுள்ளனர்.
முதன்மை பூதநாதர் கோவிலுக்கு அருகாமையிலேயே மல்லிகார்ஜூனா குழு கோவில்கள் உள்ளன. இவை ஏரியின் வடக்கு பகுதியில் உள்ளன. தெற்கு வாசலைக் கொண்ட இந்த ஆலயம், பாம்சனா நாகர பாணியில் கட்டப்பட்டவை. இது ஒரு காலத்தில் மிகப்பெரிய விஷ்ணு வழிபாட்டிற்குரிய கோவிலாக இருந்திருக்கலாம் என்கிறார்கள்.
பின் வழிபாடு இல்லாமல் போன இந்த ஆலயத்தில், பின்வந்தவர்கள் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளனர். கோவிலில் எட்டு தூண்களுடன் செவ்வக வடிவ மண்டபம் உள்ளது. இது உள் மண்டபம், அந்தரளம், கருவறை ஆகிய அமைப்புடன் காணப்படுகிறது. இந்த கோவில் சுவரில் விஷ்ணு, சிவன் ஆகிய இருவரும் இருக்கிறார்கள்.
- கர்நாடகத்தின் முக்கியமான இடங்களில் ஒன்று, பாதாமி குகை.
- மகாவிஷ்ணுவின் சிற்பம் காண்பவர்களை மயக்குவதாக இருக்கிறது.
கர்நாடகத்தின் முக்கியமான இடங்களில் ஒன்று, பாதாமி குகை. இதன் பழங்காலப் பெயர் வதாபி என்பதாகும். இது ஆரம்ப கால சாளுக்கிய வம்சத்தின் தலைநகராக செயல்பட்டது.
சாளுக்கியர்கள் 6-ம் நூற்றாண்டு முதல் 8-ம் நூற்றாண்டு வரை, கர்நாடகாவின் பெரும் பகுதியை ஆட்சி செய்தவர்கள். இவர்களின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பழமையான மந்திர்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பாதாமி சாளுக்கியர்களின் காலத்தைச் சேர்ந்த இரண்டு மந்திர்கள், தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் முடிமாணிக்யம் கிராமத்தில் உள்ள கிருஷ்ணா நதிக்கரையில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த கோவில்கள், இந்து வம்ச வரலாற்றில் ஒரு முக்கியமான காலகட்டத்தை பிரதிபலிக்கின்றன. அவை அந்த காலத்தின் பொதுவான கட்டிடக்கலை பாணிகளின் கலவையை வெளிப்படுத்துகின்றன.
கோவில்களில் ஒன்றில், கருவறைக்குள் ஒரு சிவலிங்கத்தின் அடித்தளமாக செயல்படும் ஒரு பாணவட்டத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். மற்றொரு கோவிலில் விஷ்ணு சிலையை மீட்டெடுத்துள்ளனர்.
இங்கு நின்ற கோல நரசிம்மர், திரிவிக்ரமன், வாராகர் என்று விஷ்ணுவின் பல்வேறு உருவங்கள் அழகுற அமைக்கப்பட்டிருந்தாலும், சுருண்ட பாம்பின் மீது அமர்ந்த நிலையில் காலை தொங்கவிடாமல், குத்துக்காலிட்டது போல் தூக்கி வைத்திருக்கும் மகாவிஷ்ணுவின் சிற்பம் காண்பவர்களை மயக்குவதாக இருக்கிறது.






