என் மலர்
விளையாட்டு



விசாகப்பட்டினம்:
விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த 2-வது ஒரு நாள் போட்டியில் இந்தியா 107 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை தோற்கடித்து அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க ஜோடியான ரோகித்சர்மா (159 ரன்), லோகேஷ் ராகுல் (102 ரன்) சதம் அடித்தனர். அவர்கள் முதல் விக்கெட்டுக்கு 227 ரன் எடுத்தனர். கேப்டன் கோலி டக்-அவுட் ஆனார். அதன் பின் ஸ்ரேயாஸ் அய்யர் (53 ரன் 32 பந்து), ரிஷப்பண்ட் (39 ரன் 16 பந்து) ஆகியோரின் அதிரடியில் இந்திய அணி 50 ஓவர் 5 விக்கெட் இழப்புக்கு 387 ரன் குவித்தது.
கடினமான இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 43.3 ஓவருக்கு 280 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அந்த அணி தொடக்கத்தில் ரன்கள் சேர்த்தது. ஆனால் முகமது சமி, குல்தீப் யாதவ் ஆகியோரின் அபார பந்து வீச்சால் விக்கெட்டுகளை இழந்தது.
இதில் குல்தீப் யாதவ் 2-வது முறையாக ஹாட்ரிக் விக்கெட் சாதனை படைத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷாய்ஹோப் 78 ரன்னும், நிகோலஸ் பூரன் 75 ரன்னும் எடுத்தனர்.

நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் பீல்டிங் மோசமாக இருந்தது. தவறவிட்ட கேட்சுகளை பிடித்து இருந்தால் வெஸ்ட் இண்டீசை இன்னும் குறைவான ரன்னில் ஆல்-அவுட் ஆக்கி இருக்கலாம்.
வெற்றி குறித்து இந்திய கேப்டன் வீராட்கோலி கூறியதாவது:-
கடந்த 3 ஆட்டங்களில் (மும்பையில் நடந்த கடைசி 20 ஓவர் போட்டியை சேர்த்து) நல்ல விஷயம் என்னவென்றால் நாங்கள் முதலில் பேட்டிங் செய்து நன்றாக விளையாடினோம் என்பதுதான். 2-வது பேட்டிங் செய்வது பிரச்சினையல்ல. சேசிங்கில் நாங்கள் சிறந்த அணிகளில் நன்றாக இருக்கிறோம். 40 முதல் 50 ரன்கள் கூடுதலாக எடுப்பது எப்போதுமே நல்லது.
ரோகித்சர்மா-லோகேஷ் ராகுல் சிறப்பாக விளையாடினார்கள். அவர்களது தொடக்க ஜோடி ரன் குவிப்பால் வெற்றி கிடைத்தது. ஸ்ரேயாஸ் அய்யர்- ரிஷப்பண்ட் ஆட்டமும் அற்புதமாக இருந்தது. 20 ஓவர் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து ரன் குவித்ததால் நம்பிக்கை மேலும் அதிகரித்தது.
தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் பெரிய தொடர்கள் எதுவும் இல்லாததால் பயமின்றி விளையாடலாம். ஒரு கேப்டனாக டாசை தோற்றாலும், முதலில் பேட்டிங் செய்து ரன் குவித்த விதம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இது நாங்கள் டாஸ் ஜெயிப்பதை நம்பியிருக்கவில்லை என்பதை காட்டுகிறது.
பேட்டிங் மூலம் எதிரணியை போட்டியில் இருந்து வெளியேற்ற விரும்புகிறோம். பீல்டிங்கில் முன்னேற்றம் காண்பது அவசியம். கேட்ச்களை நாங்கள் தவறவிட கூடாது. பீல்டிங்கிலும் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம் என்றார்.
இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளது. முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் வென்று இருந்தது. 3-வது மற்றும் கடைசி போட்டி 22-ந்தேதி கட்டாக்கில் நடக்கிறது.
சேஸ் வீசிய 47-வது ஓவரில் ஷ்ரேயாஸ் அய்யர் 4 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார். அந்த ஓவரில் 31 ரன் எடுக்கப்பட்டது. ஒரு ஓவரில் இந்தியா எடுத்த அதிகபட்ச ரன் இதுவாகும்.

இந்தியா 350 ரன் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மிடில் ஆர்டர் வரிசையில் ஷ்ரேயாஸ்- ரிஷப் பண்ட் அதிரடியால் 387 ரன் எடுத்தது. இந்திய வீரர்களில் அஜித் அகர்கர் 21 பந்தில் அரை சதம் அடித்து முதலிடத்தில் உள்ளார். அவரது சாதனையை ரிஷப் பண்ட் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவர் 16 பந்தில் 39 ரன்னில் அவுட் ஆனார். காட்ரெல் வீசிய 46-வது ஓவரில் ரிஷப் பண்ட் 3 பவுண்டரி, இரண்டு சிக்சருடன் 24 ரன்கள் அடித்தார்.

ஒருநாள் போட்டியில் முதல் விக்கெட்டுக்கு இந்திய ஜோடி 200 ரன்னுக்கு மேல் எடுப்பது இது 6-வது முறையாகும்.
25 வயதான குல்தீப் யாதவ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்துவது இது 2-வது முறையாகும். ஏற்கனவே 2017-ம் ஆண்டு கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி இருந்தார். அதிலும் 33-வது ஓவரில் தான் ஹாட்ரிக் நிகழ்ந்தது ஆச்சரியமான ஒற்றுமையாகும்.
இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இரண்டு முறை ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்திய முதல் இந்தியர் என்ற மகத்தான சாதனையை தன்வசப்படுத்தினார். ஒட்டுமொத்தத்தில் பார்த்தால் பாகிஸ்தானின் வாசிம் அக்ரம், சக்லைன் முஷ்டாக், இலங்கையின் மலிங்கா, சமிந்தா வாஸ், நியூசிலாந்தின் டிரென்ட் பவுல்ட் ஒன்றுக்கு மேற்பட்ட ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தவர்கள் ஆவர். இந்த அரிய பட்டியலில் குல்தீப் யாதவ் இணைந்துள்ளார். இதில் மலிங்கா மட்டும் 3 முறை ஹாட்ரிக் நிகழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியர்களில் குல்தீப் யாதவை தவிர்த்து சேத்தன் ஷர்மா, கபில்தேவ், முகமது ஷமி தலா ஒரு முறை ஹாட்ரிக் விக்கெட் எடுத்திருப்பது நினைவு கூரத்தக்கது.
* ரோகித் சர்மா இந்த ஆண்டில் ஒரு நாள் கிரிக்கெட்டில் 27 ஆட்டத்தில் விளையாடி 7 சதம் உள்பட 1,427 ரன்கள் குவித்து முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். 2-வது இடத்தில் ஷாய் ஹோப்பும் (1,303 ரன்), 3-வது இடத்தில் விராட் கோலியும் (1,292 ரன்) உள்ளனர்.
* ஒரு நாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா இந்த ஆண்டில் 7 சதங்கள் அடித்துள்ளார். இதன் மூலம் ஒரு ஆண்டில் அதிக சதங்கள் விளாசியவர்களின் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சவுரவ் கங்குலி (2000-ம் ஆண்டில் 7 சதம்), ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் (2016-ம் ஆண்டில் 7 சதம்) ஆகியோரை சமன் செய்துள்ளார். இந்த வகையில் இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் முதலிடம் வகிக்கிறார். அவர் 1998-ம் ஆண்டில் ஒரு நாள் கிரிக்கெட்டில் 9 சதங்களை சுவைத்திருந்தார்.
* நேற்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மா எடுத்த 159 ரன்களே, இந்த ஆண்டில் ஒரு நாள் போட்டியில் இந்தியர் ஒருவரின் தனிநபர் அதிகபட்சமாகும். 2013-ம் ஆண்டில் இருந்து ரோகித் சர்மாவின் ஸ்கோரே இந்தியாவின் தனிநபர் அதிகபட்சமாக நீடிக்கிறது. 2013-ம் ஆண்டில் 209 ரன், 2014-ம் ஆண்டில் 264 ரன், 2015-ல் 150 ரன், 2016-ல் 171* ரன், 2017-ல் 208*ரன், 2018-ல் 162 ரன் என்றவாறு தனிநபர் அதிகபட்சத்தை பதிவு செய்துள்ளார்.
* ஒரு போட்டியில் அதிக முறை 150 ரன்களை கடந்தவர்களில் ரோகித் சர்மா முதலிடத்தில் (8 முறை) தொடருகிறார். ஆஸ்திரேலியாவின் வார்னர் 2-வது இடத்தில் (6 தடவை) உள்ளார்.
* ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் 2019-ம் ஆண்டில் மட்டும் ரோகித் சர்மா 77 சிக்சர்கள் கிளப்பியிருக்கிறார். இதன் மூலம் ஒரு ஆண்டில் அதிக சிக்சர்கள் விரட்டிய தனது முந்தைய சாதனையை (2018-ம் ஆண்டில் 74 சிக்சர்) மாற்றி அமைத்திருக்கிறார்.
* ரோகித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் முதல் விக்கெட்டுக்கு 227 ரன்கள் திரட்டினர். ஒரு நாள் போட்டியில் தொடக்க விக்கெட்டுக்கு இந்திய ஜோடி 200 ரன்களுக்கு மேல் எடுப்பது இது 6-வது நிகழ்வாகும். இந்த வரிசையில் இந்தியாவின் 4-வது சிறந்த பார்ட்னர்ஷிப்பாக அமைந்துள்ளது.






