என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் உலக கோப்பையை கணக்கில் கொண்டு இங்கிலாந்து தொடருக்கான தென்ஆப்பிரிக்கா டி20 அணியில் டேல் ஸ்டெயின் சேர்க்கப்பட்டுள்ளார்.
    இங்கிலாந்து அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் போட்டி முடிந்த நிலையில் தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

    இந்தத் தொடர் முடிந்த உடன் டி20 தொடர் நடக்கிறது. இதற்கான தென்ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டு பிளிசிஸ், ரபாடா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    அனுபவ வீரரான டேல் ஸ்டெயின் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மீண்டும் டி20 போட்டிக்கு திரும்புவேன் எனத் தெரிவித்துள்ள ஏபி டி வில்லியர்ஸ் அணியில் சேர்க்கப்படவில்லை. இதனால் அவர் நேரடியாக டி20 உலக கோப்பை அணியில் இடம் பெறலாம்.

    ஸ்டெயின் உலக கோப்பை தொடரில் விளையாடுவேன் என்று தெரிவித்திருந்தார். மேலும் தென்ஆப்பிரிக்கா அணி சமீப காலமாக திணறி வருகிறது. இதனால் ஸ்டெயின் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    தென்ஆப்பிரிக்கா அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1.  டி காக்  (கேப்டன்), 2. ரீசா ஹென்றிக்ஸ், 3. டெம்பா பவுமா, 4. வான் டெர் துஸ்சன், 5. டேவிட் மில்லர், 6. பைட் வான் பில்ஜோன், 7. வெய்ன் பிரிட்டோரியஸ், 8. பெலுக்வாயோ, 9. ஜோன்-ஜோ ஸ்மட்ஸ், 10. பியூரன் ஹென்றிக்ஸ், 11. தப்ரைஸ் ஷம்சி, 12. லுங்கி நிகிடி, 13. சிசாண்டா மகாலா, 14. ஜோர்ன் போர்ச்சுன், 15. டேல் ஸ்டெயின், 16. ஹென்ரிச் கிளாசன்.
    ராவல்பிண்டியில் நடைபெறும் வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் ஷான் மசூத், பாபர் அசாம் சதமடித்து அசத்த, இரண்டாம் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுக்கு 342 ரன்கள் எடுத்துள்ளது.
    ராவல்பிண்டி:

    பாகிஸ்தான் - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ராவல்பிண்டியில் நேற்று முன்தினம் தொடங்கியது.

    டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி வங்காளதேசம் அணி முதலில் களமிறங்கியது. மொமினுல் ஹக் 30 ரன்னிலும், நஜ்முல் ஹொசைன் 44 ரன்னிலும், முகமது மிதுன் 63 ரன்னிலும்  ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், வங்காளதேசம் அணி 82.5 ஓவரில் 233 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

    பாகிஸ்தான் சார்பில் ஷாஹீன் ஷா அப்ரிடி 4 விக்கெட்டும், முகமது அப்பாஸ், ஹாரிஸ் சோஹைல் ஆகியோ தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் ஷான் மசூத் சிறப்பான தொடக்கம் அளித்தார்.
    அவருக்கு பாபர் அசாம் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இருவரும் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினர். ஷான் மசூத் 100 ரன்னில் ஆட்டமிழந்தார். 

    இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுக்கு 342 ரன்கள் எடுத்தது. பாபர் அசாம் 143 ரன்னுடனும், ஆசாத் ஷபிக் 60 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.  
    3-வது ஒரு நாள் போட்டியிலும் இந்திய அணியை வீழ்த்துவோம் என்று நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் தெரிவித்துள்ளார்.

    ஆக்லாந்து:

    நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியிலும் இந்தியஅணி தோற்று தொடரை இழந்தது.

    ஆக்லாந்தில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 273 ரன் எடுத்தது.

    குப்தில் 79 ரன்னும் (8 பவுண்டரி, 3 சிக்சர்), முன்னாள் கேப்டன் டெய்லர் 73 ரன்னும் (6 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். யசுவேந்திர சாஹல் 3 விக்கெட்டும், ‌ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். 274 ரன் இலக்குடன் இந்திய அணி பின்னர் களம் இறங்கியது.

    நியூசிலாந்து வீரர்களின் நேர்த்தியான பந்துவீச்சால் இந்திய அணி 48.3 ஓவர்களில் 251 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் 22 ரன் வித்தியாசத்தில் தோற்றது.

    ஜடேஜா அதிகபட்சமாக 55 ரன்னும் (2 பவுண்டரி, ஒரு சிக்சர்), ஸ்ரேயாஸ் அய்யர் 52 ரன்னும் (7 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தனர். பென்னட், சவுத்தி, ஜேமிசன், கிராண்ட்கோம் தலா 2 விக்கெட்டும், நீசம் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

    இந்திய அணி ஏற்கனவே முதல் ஒருநாள் போட்டியில் 347 ரன்குவித்து தோற்றது. தற்போது 274 ரன் இலக்கை எடுக்க முடியாமல் மீண்டும் பரிதாப நிலை அடைந்தது. இந்த தோல்வி மூலம் தொடரை இழந்தது.

    இந்த தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

    விராட் கோலி

    இந்த ஆண்டில் 20 ஓவர் போட்டிகள் எங்களுக்கு சிறப்பாக அமைந்தது. ஆனால், ஒரு நாள் ஆட்டங்கள் சரியாக அமையவில்லை. முதல் 2 ஆட்டமும் சிறப்பாகவே இருந்தது. ஜடேஜா, சைனி கடைசிவரை போராடினார்கள். சைனி சிறப்பாக பேட்டிங்கை செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை. நியூசிலாந்து அணிக்கு கூடுதலாக ரன்களை விட்டுக் கொடுத்து விட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வெற்றி குறித்து நியூசிலாந்து அணியின் தற்காலிக கேப்டன் டாம் லாதம் கூறியதாவது:-

    இது ஒரு சிறந்த வெற்றியாகும். பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு இந்த வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். கடந்த ஆட்டத்தை விட இந்த போட்டியில் எங்களது திறமையில் முன்னேற்றம் காணப்பட்டது.

    3-வது ஒருநாள் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி 3-0 என்ற கணக்கில் ஓயிட் வாஷ் செய்ய விரும்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    20 ஓவர் தொடரை 0-5 என்ற கணக்கில் இழந்த நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை கைப்பற்றியது. அந்த அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் ஆட்டம் வருகிற 11-ந் தேதி மவுண்ட் மவுக்கானுவில் நடக்கிறது.

    சேலத்தில் நடந்த கிரிக்கெட் மைதான திறப்பு விழாவில் பேசிய பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசன், சேலத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் தோனி கண்டிப்பாக பங்கேற்பார் என தெரிவித்தார்.
    சேலம்:

    சேலம் மாவட்டம் வாழப்பாடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய கிரிக்கெட் மைதானத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 9 மணிக்கு திறந்து வைத்தார்.

    இந்த விழாவில் முன்னாள் இந்திய வீரர் ராகுல் டிராவிட், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் ரூபா கோபிநாத் மற்றும் பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

    இந்நிலையில், கிரிக்கெட் மைதான திறப்பு விழாவில் பேசிய பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசன், சேலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் தோனி கண்டிப்பாக பங்கேற்பார் என தெரிவித்துள்ளார்.
    ஒடிசாவின் புவனேசுவரத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் உலக சாம்பியன் பெல்ஜியத்தை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்திய அணி.
    புவனேசுவரம்:

    உலகின் தலைசிறந்த ஹாக்கி அணிகள் பங்கேற்கும் ஆண்களுக்கான 2-வது புரோ லீக் ஹாக்கி போட்டி கடந்த மாதம் ஒடிசாவில் தொடங்கியது. இந்த தொடர் ஜூன் மாதம் வரை பல்வேறு நாடுகளில் நடக்கிறது.
     
    இதில் ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினா, ‘நம்பர் ஒன்’ அணியான ஆஸ்திரேலியா, உலக சாம்பியன் பெல்ஜியம், இந்தியா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின், நெதர்லாந்து, நியூசிலாந்து ஆகிய 9 அணிகள் கலந்து கொள்கின்றன.

    ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதவேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் நடைபெறுகிறது. அந்த போட்டிக்கு தயாராவதற்கு புரோ லீக் கனகச்சிதமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    இந்நிலையில், ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, உலக சாம்பியன் பெல்ஜியத்தை எதிர்கொண்டது.

    இந்திய அணியில் மன்தீப் சிங் 2-வது நிமிடத்திலும், ரமன்தீப்சிங் 47-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். பெல்ஜியம் அணியில் கவுதிர் போக்கார்ட் 33-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி கோல் திருப்பினார்.

    இறுதியில், இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தியது. இந்த தொடரில் இந்திய அணி தொடர்ச்சியாக 3-வது வெற்றியை ருசித்தது. இதன்மூலம் இந்திய அணி தரவரிசையில் ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளது.
    ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்காள தேசத்தை வீழ்த்தி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லுமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
    போட்செப்ஸ்ட்ரூம்:

    13-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) கடந்த மாதம் 17-ம் தேதி தென்ஆப்பிரிக்காவில் தொடங்கியது.

    மொத்தம் 16 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றுகள் முடிவில் ஆசிய அணிகளான நடப்பு சாம்பியன் இந்தியாவும், வங்காளதேசமும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.

    இந்நிலையில், போட்செப்ஸ்ட்ரூமில் இன்று இறுதி ஆட்டம் நடைபெற உள்ளது. இதில் இந்தியா-வங்காளதேச அணிகள் மோத உள்ளன. நடப்பு தொடரில் இவ்விரு அணிகளும் தோல்வியே சந்திக்காமல் இந்த நிலையை எட்டியுள்ளன.

    பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் வலுமிக்கதாக விளங்கும் பிரியம் கார்க் தலைமையிலான இந்தியாவுக்கே கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டு உள்ளது. அரைஇறுதியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பந்தாடியது இந்தியாவின் நம்பிக்கைக்கு தீனி போட்டுள்ளது.

    இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்தவராக வலம் வரும் தொடக்க ஆட்டக்காரர் யஷாஸ்வி ஜெய்ஸ்வால் (ஒரு சதம், 3 அரைசதம் உள்பட 312 ரன்), திவ்யான்ஷ் சக்சேனா (2 அரைசதத்துடன் 148 ரன்), கேப்டன் பிரியம் கார்க் ஆகியோரைத் தான் இந்திய அணி பேட்டிங்கில் அதிகமாக சார்ந்து இருக்கிறது. குறிப்பாக நமக்கு தொடக்கம் நேர்த்தியாக அமைந்து விட்டால், எதிரணிக்கு உதறல் தானாகவே வந்துவிடும்.

    இதேபோல் பந்துவீச்சில் சுழற்பந்து வீச்சாளர் ரவிபிஷ்னோய் (13 விக்கெட்), வேகப்பந்து வீச்சாளர்கள் கார்த்திக் தியாகி (11 விக்கெட்), ஆகாஷ் சிங் (7 விக்கெட்) ஆகியோர் கலக்குகிறார்கள். ஓவருக்கு சராசரியாக 4-க்கும் குறைவான ரன்களை விட்டுக்கொடுத்து சிக்கனத்தை காட்டியுள்ள இவர்கள் இறுதி ஆட்டத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

    ஏற்கனவே 4 முறை இந்த கோப்பையை வென்றுள்ள இந்திய அணி, மீண்டும் மகுடம் சூடினால் அது புதிய உச்சமாக அமையும்.

    அக்பர் அலி தலைமையிலான வங்காளதேச அணியை எந்த வகையிலும் குறைத்து மதிப்பிட முடியாது. நியூசிலாந்துக்கு எதிரான அரைஇறுதியில் 212 ரன் இலக்கை சேசிங் செய்து அமர்க்களப்படுத்தியது. பேட்டிங்கில் மமுதுல் ஹசன் ஜாய் (ஒரு சதத்துடன் 176 ரன்), தன்ஜித் ஹசன் (149 ரன்), ஷகதத் ஹூசைன் (130 ரன்), பந்து வீச்சில் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ஷகிபுல் ஹசன் (11 விக்கெட்), வேகப்பந்து வீச்சாளர் ஷோரிபுல் இஸ்லாம் (7 விக்கெட்) ஆகியோர் மிரட்டியுள்ளனர். இவர்கள் கைவரிசை காட்டுவதை பொறுத்தே வங்காளதேசத்தின் வெற்றி வாய்ப்பு அமையும்.

    உலக கோப்பை போட்டி ஒன்றில் வங்காளதேச அணி இறுதிசுற்றை எட்டியிருப்பது இதுவே முதல் முறையாகும். எனவே வெற்றி கண்டால், அது வங்காளதேச அணிக்கு சரித்திர சாதனையாக பதிவாகும்.

    இவ்விரு அணிகளும் ஏற்கனவே ஜூனியர் உலக கோப்பை போட்டியில் 4 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 3-ல் இந்தியாவும், ஒன்றில் வங்காளதேசமும் வெற்றி பெற்றுள்ளன. இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
    கொல்கத்தாவில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் ஒடிசாவை வீழ்த்திய கொல்கத்தா அணி மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.
    கொல்கத்தா:

    10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    மேற்கு வங்காளம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் இன்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் கொல்கத்தா மற்றும் ஒடிசா எப்.சி. அணிகள் மோதின.

    ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணி வீரர்களும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இதனால் முதல் பாதியில் 0-0 என சமனிலை வகித்தது.

    தொடர்ந்து ஆட்டத்தின் 2வது பாதியில் கொல்கத்தா வீரர் ராய் கிருஷ்ணா அபாரமாக ஆடி 3 கோல்கள் அடித்தார். 49,60, 63வது நிமிடங்களில் அவர் கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். ஒடிசா சார்பில் 67-வது நிமிடத்தில் ஒரு கோல் மட்டுமே அடிக்கப்பட்டது.

    இறுதியில், கொல்கத்தா அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஒடிசா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தது.
    சிட்னியில் நடந்த பிக் பாஷ் டி 20 லீக் போட்டியின் இறுதிப் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது சிட்னி சிக்சர்ஸ் அணி.
    சிட்னி:

    ஆஸ்திரேலியாவின் சிட்னியில் பிக் பாஷ் டி 20 லீக் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் சிட்னி சிக்சர்ஸ் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 12 ஓவராக குறைக்கப்பட்டது.

    அதன்படி, சிட்னி சிக்சர்ஸ் அணி முதலில் களமிறங்கியது.  தொடக்க ஆட்டக்காரர் ஜோஷ் பிலிப் சிறப்பாக ஆடி அரை சதமடித்தார். அவர் 52 ரன் எடுத்து அவுட்டானார். ஜோர்டான் சில்க் 27 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இறுதியில், சிட்னி சிக்சர்ஸ் அணி 12 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுக்கு 116 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து, 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மெல்போர்ன் ஸ்டார்ஸ் ஆடியது. அந்த அணியின் நிக் லார்கின் 38 ரன்னும், நாதன் கவுல்டர் நைல் 19 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், மெல்போர்ன் ஸ்டார்ஸ் 12 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 97 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 19 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

    பிக் பாஷ் டி20 லீக் தொடரின் சாம்பியன் பட்டத்தை சிட்னி சிக்சர்ஸ் அணி இரண்டாவது முறையாக கைப்பற்றி அசத்தியுள்ளது.
    இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் மெதுவான பந்துவீச்சு விகிதத்திற்காக நியூசிலாந்து அணிக்கு 60% அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
    ஆக்லாந்து:

    நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியது. அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஹாமில்டனில் நடந்த முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

    இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன்பார்க் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது.  இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்தது.  இந்திய அணிக்கு 274 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.  பந்து வீச்சில் இந்திய அணி தரப்பில், சஹால் 3 விக்கெட்டுகளையும் தாகூர் 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

    இதனை அடுத்து இந்திய அணி பேட்டிங் செய்தது.  இந்திய அணியில் ஸ்ரேயாஸ் அய்யர் (52) மற்றும் ஜடேஜா (54) அரை சதம் பூர்த்தி செய்தனர்.  பிரித்வி ஷா (24), மயங்க் அகர்வால் (3), கேப்டன் கோலி (15), கே.எல். ராகுல் (4), கேதர் ஜாதவ் (9), ஷர்துல் தாகூர் (18), சைனி (45) மற்றும் சாஹல் (10) ரன்களில் வெளியேறினர்.

    எனினும் 48.3வது ஓவரில் இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 251 ரன்களே எடுத்தது.  பும்ரா ரன் எதுவும் எடுக்கவில்லை.  இதனால் நியூசிலாந்து 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.  2-0 என்ற கணக்கில் 3 போட்டிகள் கொண்ட தொடரையும் கைப்பற்றியுள்ளது.

    இந்த போட்டியில் மெதுவான பந்துவீச்சு விகிதத்திற்கு நியூசிலாந்து அணிக்கு 60% அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

    ஐ.சி.சி.யின் விளையாட்டு வீரர்களுக்கான விதிகளின் பிரிவு 2.22ன்படி, அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்துவீச தவறும் ஒவ்வொரு ஓவருக்கும், வீரர்களின் போட்டி கட்டணத்தில் இருந்து 20% அபராதம் விதிக்கப்படும்.

    இதன்படி மேற்கொண்ட நேர அனுமதி பரிசீலனையில், அந்த அணி 3 ஓவர்கள் வரை, அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு கூடுதலான பந்துவீச்சு விகிதம் கொண்டிருந்தது.  இதனை லாத்தம் ஒப்பு கொண்ட நிலையில் முறைப்படியான விசாரணை நடைபெற அவசியம் இல்லாமல் போனது.  இதற்கு முன் இந்திய அணி இதுபோன்று 3 முறை அபராத விதிப்பிற்கு உள்ளானது.
    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பெண்களுக்கான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
    மெல்போர்ன்:

    இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதும் பெண்களுக்கான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.

    இன்றைய ஆட்டத்தில் இந்திய பெண்கள் அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. மெல்போர்னில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது.

    அந்த அணியின் ஆஷ்லே கார்ட்னர் அதிரடியாக ஆடி 57 பந்தில் 93 ரன்கள் எடுத்தார். கேப்டன் மேக் லேன்னிங் 37 ரன்கள் எடுத்தார்.
     
    மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களே அடிக்க ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள்  சேர்த்தது.

    அதன்பின், 174 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய பெண்கள் அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஷபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 85 ரன்கள் சேர்த்தது.

    ஸ்மிருதி மந்தனா 55 ரன்களும், ஷபாலி வர்மா 49 ரன்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 30 ரன்னும் அவுட்டாகினர்.

    அடுத்து வந்த கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும், தீப்தி ஷர்மாவும் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இறுதியில், இந்திய அணி 19.4 ஓவரில் 177 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

    இந்த வெற்றி மூலம் இந்தியா 2 வெற்றி, 2 தோல்வி என மொத்தம் 4 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. இங்கிலாந்து இரண்டு வெற்றிகளுடன் 4 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 2 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது.
    ஆக்லாந்தில் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி அத்துடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.
    ஆக்லாந்து:

    இந்தியா நியூசிலாந்து இடையேயான 2வது ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி நியூசிலாந்து அணியை பேட் செய்ய பணித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய நியூசிலாந்து அணியின் மார்டின் கப்தில் மற்றும் ஹென்றி நிக்கோல்ஸ் வலுவான தொடக்கத்தை அளித்தனர். 

    நிக்கோல்ஸ் நிதானமாக விளையாட மறுமுனையில் கப்தில் அதிரடி காட்டினார். அவர் 8 போர்கள் மற்றும் 3 சிக்சர்கள் உள்பட 79 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பின்னர் நிக்கோல்ஸ்சும் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வந்த வீரர்களில் ராஸ் டெய்லரை தவிர யாரும் நிலைத்து ஆடவில்லை.

    ஒரு கட்டத்தில் நியூசிலாந்து அணி 250 ரன்களை தாண்டுவது கடினம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ராஸ் டெய்லரின் அதிரடியால் நியூசிலாந்து அணி 50 ஒவர்களில் 273 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் சஹால் 3 விக்கெட்டுகள், சர்துல் தாகூர் 2 விக்கெட்டுகள், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ராஸ் டெய்லர்

    இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிரித்வி ஷா மற்றும் அகர்வால் ஆகியோர் சொற்ப ரன்களில், அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து வந்த கேப்டன் விராட் கோலியும் 15 ரன்களில் நடையை கட்டினார். டி20 போட்டிகளில் ஜொலித்த கே.எல் ராகுல் ஒற்றை இலக்க ரன்னில் அவுட் ஆனார். கேதார் ஜாதவும் சோப்பிக்கவில்லை.

    ஆனால் அதன் பின்னர் வந்த பவுலர்களான சர்தூல் தாகூர், நவ்தீப் சைனி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சைனி 45 ரன்கள் விளாசினர். மறுமுனையில் ஜடேஜா வெற்றிக்கு போராடினார். 

    ஆனால் நியூசிலாந்து அணியினரின் நேர்த்தியான பந்துவீச்சினால் விக்கெட்டுகளை சாய்த்தனர். இறுதியில் இந்திய அணி 48.3 ஓவர்களில் 251 ரன்கள் எடுத்து  ஆட்டமிழந்தது. இதனால் நியூசிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணி தரப்பில்  சவுத்தீ, காலின் டி கிராண்ட்ரோம்,  பென்னெட், ஜேமிசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.  இந்திய அணியில் அதிகபட்சமாக ஜடேஜா 55 ரன்களும், ஷ்ரேயஸ் அய்யர் 52 ரன்களும் எடுத்தனர்.

    3 ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்றிருந்த நியூசிலாந்து அணி, இந்த வெற்றியின் மூலம் 2-0 என்ற கணக்கில் தொடரை தன்வசமாக்கியது. இரு அணிகளுக்கிடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வரும் 11ம் தேதி நடைபெற உள்ளது. 

    ஆக்லாந்தில் நடைபெற்று வரும் 2-வது ஒருநாள் போட்டியில் முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 274 ரன்களை இந்தியா அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
    ஆக்லாந்து:

    நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி வரலாறு படைத்தது. அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ஆடுகிறது. இதில் ஹாமில்டனில் நடந்த முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து தொடரில் 0-1 என்ற கணக்கில் பின்தங்கியது.

    இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    இதையடுத்து நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய மார்டின் கப்தில் மற்றும் ஹென்றி நிக்கோல்ஸ் வலுவான தொடக்கத்தை அளித்தனர். நிக்கோல்ஸ் நிதானமாக விளையாட மறுமுனையில் கப்தில் அதிரடி காட்டினார். அவர் 8 போர்கள் மற்றும் 3 சிக்சர்கள் உள்பட 79 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பின்னர் நிக்கோல்ஸ்சும் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வந்த வீரர்களில் ராஸ் டெய்லரை தவிர யாரும் நிலைத்து ஆடவில்லை. இதனால் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகள் விழுந்தன. 

    இந்திய அணி வீரர்கள்

    ஒரு கட்டத்தில் நியூசிலாந்து அணி 250 ரன்களை தாண்டுவது கடினம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டெய்லரின் அதிரடியால் அணியின் ஸ்கோர் உயர்ந்தது. ராஸ் டெய்லர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 73 ரன்கள் எடுத்தார். 

    இறுதியில் 50 ஓவர்களில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 273 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் சஹால் 3 விக்கெட்டுகள், சர்துல் தாகூர் 2 விக்கெட்டுகள், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என இந்திய அணி களமிறங்க உள்ளது. 
    ×