என் மலர்tooltip icon

    விளையாட்டு

    2023 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி சார்பில் விளையாட வேண்டும் என்பதே தனது லட்சியம் என ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளராக இருந்த கேரளாவை சேர்ந்த ஸ்ரீசாந்த், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில், இந்திய கிரிக்கெட் வாரியம் அவருக்கு கிரிக்கெட் விளையாட வாழ்நாள் தடை விதித்தது. இதனை தொடர்ந்து ஸ்ரீசாந்த் உச்சநீதிமன்றத்தில் செய்த மேல்முறையீட்டால், அவரது தடைக்காலம் 7 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.

    இந்நிலையில் ஸ்ரீசாந்தின் தடைக்காலம் கடந்த 13ம் தேதியுடன் முடிந்தது. இதையடுத்து அவர் மீண்டும் களமிறங்க தீர்மானித்துள்ளார். கடந்த சில தினங்களாக அவர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது;-

    “நான் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற வீரர் என்பது உண்மை தான். ஆனால் இப்போது நான் ஒரு புதுமுக வீரர் போல உணர்கிறேன். 7 வருடங்களுக்கு பிறகு விளையாட வருகின்ற போதிலும் என்னால் சிறப்பாக விளையாட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. மீண்டும் விளையாட அனுமதிக்க கோரி இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளேன்.

    ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் கிளப் அணிகளுக்காக விளையாட விரும்புகிறேன். இது தொடர்பாக பல்வேறு முகவர்களிடம் பேசி வருகிறேன். 2023 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி சார்பில் விளையாட வேண்டும் என்பதே எனது லட்சியம் ஆகும்” என்று தெரிவித்துள்ளார்.
    ஐபிஎல் போட்டியில் விளையாடும் 8 அணி கேப்டன்களின் சாதனைகள் பற்றிய தகவலை இந்த செய்தியின் மூலம் பார்க்கலாம்.

    சென்னை:

    13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் நடக்கிறது.

    இந்த சீசனுக்கான ஐ.பி.எல். கோப்பையை வெல்லப்போகும் அணி யார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. ஏற்கனவே கோப்பையை வென்ற அணி சாம்பியன் ஆகுமா? அல்லது புதிய அணி பட்டம் பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கேபிடல்ஸ், கிங்ஸ்லெவன் பஞ்சாப் ஆகிய 3 அணிகள் மட்டுமே இதுவரை ஐ.பி.எல். கோப்பையை வென்றது இல்லை.

    ஒரு அணியின் வெற்றிக்கு கேப்டனின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் பெற்று இருக்கிறது. ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் 8 அணி கேப்டன்களின் சாதனை விவரம் வருமாறு:-

    டோனி (சென்னை சூப்பர் கிங்ஸ்):- ஐ.பி.எல். போட்டியில் அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன் என்ற சாதனையில் டோனி உள்ளார். அவர் சென்னை சூப்பர் கிங்ஸ், ரைசிங் புனே சூப்பர்ஜெய்ண்ட் அணிகளுக்கு கேப்டனாக பணியாற்றி உள்ளார்.

    டோனி 174 போட்டிக்கு கேப்டனாக இருந்து 104 ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார். 69 போட்டியில் தோல்வி ஏற்பட்டுள்ளது. ஒரு ஆட்டம் முடிவு இல்லை. அவரது வெற்றி சதவீதம் 60.11 ஆகும். டோனி 3 முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஐ.பி.எல். கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.

    விராட்கோலி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்):-

    இந்திய அணிக்கு கேப்டன் பதவியில் சிறப்பாக பணியாற்றும் விராட்கோலியால் ஐ.பி.எல்.லில் சாதிக்க முடியவில்லை. அவரது தலைமையில் பெங்களூர் அணி கோப்பையை வெல்ல முடியாமல் இருப்பது மிகப் பெரிய ஏமாற்றமே.

    கோலி 110 ஆட்டத்துக்கு கேப்டனாக இருந்துள்ளார். இதில் 49 வெற்றி கிடைத்துள்ளது. 55 போட்டியில் தோல்வி ஏற்பட்டது. 2 போட்டி டை ஆனது. 4 ஆட்டம் முடிவு இல்லை. வெற்றி சதவீதம் 47.16 ஆகும்.

    ரோகித்சர்மா (மும்பை இந்தியன்ஸ்):-

    ஐ.பி.எல். போட்டிகளில் அதிக கோப்பையை வென்ற கேப்டன் என்ற சாதனையில் ரோகித்சர்மா உள்ளார். அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 4 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்று புதிய வரலாறு படைத்துள்ளார்.

    104 போட்டிக்கு கேப்டனாக இருந்து 60 வெற்றிகளை பெற்றுள்ளார். 42 போட்டிகளில் தோல்வி ஏற்பட்டது. 2 ஆட்டம் டை ஆனது. வெற்றி சதவீதம் 58.65 ஆகும். டோனிக்கு அடுத்தபடியாக வெற்றி சதவீதத்தில் ரோகித்சர்மா உள்ளார்.

    தினேஷ் கார்த்திக் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்):-

    விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மெனான தினேஷ் கார்த்திக் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக உள்ளார். தமிழகத்தை சேர்ந்த அவர் ஏற்கனவே டெல்லி அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார்.

    36 போட்டிக்கு தினேஷ் கார்த்திக் கேப்டனாக இருந்துள்ளார். இதில் 17-ல் வெற்றி. 18-ல் தோல்வி. ஒரு ஆட்டம் டை ஆனது. வெற்றி சதவீதம் 48.65 ஆகும்.

    டேவிட் வார்னர் (சன்ரைசர்ஸ் ஐதராபாத்):-

    இந்த சீசனுக்கான ஐதராபாத் அணியின் கேப்டனாக வார்னர் நியமிக்கப்பட்டுள்ளார். வில்லியம்சனுக்கு பதிலாக அவருக்கு மீண்டும் கேப்டன் வாய்ப்பு கிடைத்துள்ளது. வார்னர் முந்தைய சீசன்களில் டெல்லி அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார்.

    வார்னர் தலைமையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 2016-ம் ஆண்டு ஐ.பி.எல். கோப்பையை வென்றது. அவர் 47 போட்டியில் கேப்டனாக இருந்துள்ளார். இதில் 26-ல் வெற்றி கிடைத்தது. 21 போட்டியில் தோல்வி ஏற்பட்டது. வெற்றி சதவீதம் 55.31 ஆகும்.

    ஸ்டீவ் சுமித் (ராஜஸ்தான் ராயல்ஸ்):-

    ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஸ்டீவ் சுமித் ஐ.பி.எல். போட்டியில் 3 அணிகளுக்கு (புனே வாரியர்ஸ், ராஜஸ் தான் ராயல்ஸ், ரைசிங் புனேஜெயிண்ட்) கேப்டனாக பணியாற்றி உள்ளார். 29 போட்டிக்கு அவர் கேப்டனாக இருந்துள்ளார். இதில் 19 ஆட்டத்தில் வெற்றி பெற்றார். 9 போட்டியில் தோற்றார். ஒரு ஆட்டம் முடிவு இல்லை.

    ஸ்ரேயாஷ் அய்யர் (டெல்லி கேபிடல்ஸ்):-

    2018 ஐ.பி.எல். சீசனில் பாதி போட்டியில் இருந்து டெல்லி கேபிடல்ஸ் அணி கேப்டனாக காம்பீருக்கு பதிலாக நியமிக்கப்பட்டார். அவர் 24 ஆட்டத்துக்கு கேப்டனாக இருந்துள்ளார். இதில் 13 வெற்றி கிடைத்தது. `10 ஆட்டத்தில் தோல்வி ஏற்பட்டது. ஒரு போட்டி டை ஆனது.

    கே.எல்.ராகுல் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்):-

    இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மென்களில் ஒருவரான கே.எல். ராகுல் முதல்முறையாக கேப்டனாக பணியாற்றுகிறார். அஸ்வினுக்கு பதிலாக பஞ்சாப் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். அஸ்வின் இந்த ஐ.பி.எல். சீசனில் டெல்லி அணிக்காக ஆடுகிறார்.


    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கியதற்கு ரபேல் நடால் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    பாரிஸ்:

    ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபன் ஆகிய 4 கிராண்ட் சிலாம் டென்னிஸ் போட்டி நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் ஆண்கள் பிரிவில் ஜோகோவிச்சும் (செர்பியா), பெண்கள் பிரிவில் சோபியா கெனினும் (அமெரிக்கா) சாம்பியன் பட்டம் பெற்றனர்.

    கொரோனா வைரஸ் காரணமாக விம்பிள்டன் போட்டி ரத்து செய்யப்பட்டது. தற்போது நடந்து முடிந்த அமெரிக்க ஓபனில் ஆண்கள் பிரிவில் டொமினிக் தீமும் (ஆஸ்தி ரியா), பெண்கள் பிரிவில் நமோமி ஒசாகாவும் (ஜப்பான்) சாம்பியன் பட்டம் பெற்றனர்.

    மே மாதம் நடைபெற இருந்த பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி கொரோனா வைரஸ் காரணமாக செப்டம்பர் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்த போட்டி வருகிற 27-ந்தேதி தொடங்குகிறது.

    பிரெஞ்சு ஓபன் போட்டியை பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது நடந்து முடிந்த அமெரிக்க ஓபனில் ரசிகர்கள் இல்லாமல் காலி மைதானத்தில் போட்டி நடந்தது.

    ஆனால் பிரெஞ்சு ஓபன் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கியதற்கு நடால் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கொரோனா மருத்துவ தடுப்பு பாதுகாப்பில் ரசிகர்களை அனுமதிப்பது பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் கவலை தெரிவித்துள்ளார்.

    நடாலின் இந்த எதிர்ப்பு காரணமாக போட்டி அமைப்பாளர்கள் ரசிகர்களுக்கு அனுமதியை மறுப்பார்களா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    34 வயதான நடால் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 13-வது முறையாக வெல்லும் ஆர்வத்தில் உள்ளார். அவர் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 12 தடவை கைப்பற்றி சாதனை புரிந்துள்ளார். 2005, 2006, 2007, 2008, 2010, 2011, 2012, 2013, 2014, 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.

    ஒரு போட்டியில் கூட தோற்காமல் அனைத்து ஆட்டத்திலும் வென்று ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்ற ஆர்வமாக இருப்பதாக ஸ்ரேயாஸ் அய்யர் தெரிவித்துள்ளார்.

    துபாய்:

    இதுவரை நடந்த 12 ஐ.பி.எல் போட்டியிலும் எந்த ஒரு அணியும் தோல்வியை சந்திக்காமல் அனைத்து ஆட்டத்திலும் வென்று ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றியது இல்லை.

    இந்தநிலையில் ஒரு போட்டியில் கூட தோற்காமல் அனைத்து ஆட்டத்திலும் வென்று ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்ற ஆர்வமாக இருப்பதாக ஸ்ரேயாஸ் அய்யர் தெரிவித்துள்ளார்.

    டெல்லி கேபிடல்ஸ் அணி கேப்டனான அவர் இது தொடர்பாக கூறியதாவது:-

    ஐ.பி.எல் தொடரில் அனைத்து போட்டிகளிலும் வென்று கோப்பையை கைப்பற்றி சாதனை படைக்க விரும்புகிறேன். இதற்காக எங்கள் அணி வீரர்கள் அனைவரும் இந்த சீசனில் கடுமையாக போராடுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஐ.பி.எல் போட்டியில் இறுதி ஆட்டத்துக்கு நுழையாத ஒரே அணி டெல்லி ஆகும். இந்த சீசனிலாவது அந்த அணி அதை மாற்றிக்காட்டுமா? என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    உலக டென்னிஸ் தரவரிசையில் அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்ற ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா 6 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார்.
    நியூயார்க்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி முடிவை தொடர்ந்து புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் (செர்பியா) தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா) நம்பர் ஒன் இடத்திலும், சிமோனா ஹாலெப் (ருமேனியா) 2-வது இடத்திலும் தொடருகின்றனர்.

    அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்ற ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா 6 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்) 13 இடங்கள் ஏற்றம் கண்டு 14-வது இடத்தை பெற்றுள்ளார். அரைஇறுதியில் தோல்வி கண்ட செரீனா வில்லியம்ஸ் ஒரு இடம் பின்தங்கி 9-வது இடம் பெற்றுள்ளார். அரைஇறுதியில் தோற்ற அமெரிக்க வீராங்கனை ஜெனிபர் பிராடி 16 இடங்கள் உயர்ந்து 25-வது இடத்தை பிடித்து இருக்கிறார்.
    எம்.எஸ். டோனி தலைசிறந்த பினிஷராக உள்ளார். அவர் போட்டியை சிறப்பாக முடிப்பது போன்று நானும் அவ்வாறு செய்ய விரும்புகிறேன் என டேவிட் மில்லர் தெரிவித்துள்ளார்.
    தென்ஆப்பிரிக்கா அணியின் இடது கை அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் மில்லர். இவர் கடந்த 8 ஆண்டுகளாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி வந்தார். இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார்.

    எம்.எஸ். டோனி சிறந்த பினிஷராக இருப்பதுபோல் தானும் இருக்க விரும்புகிறேன் என்று டேவிட் மில்லர் தெரிவித்துள்ளார்.

    டேவிட் மில்லர் இதுகுறித்து கூறுகையில் ‘‘டோனி அவரது வேலையை எப்படி செய்து முடிக்கிறாரோ அதே  வழியில் நானும் செல்ல விரும்புகிறேன். அவர் அமைதியாக இருப்பது, அவர் எப்போதும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறார் என்று நினைக்க தோன்றோம்.

    அவர் தன்னை சித்திரிக்கும் விதம், மிகவும் சிறந்தது. அவரைப் போன்று நானும் விரும்பி செயல்படுவேன். அதே எனர்ஜியை வெளிப்படுத்த முயற்சி செய்வேன். டோனி அவருடைய பலம் மற்றும் பலவீனத்தை தெரிந்து வைத்து அதற்கு ஏற்ப செயல்படுகிறார். நானும் அதை செய்வேன். அவரைப்போன்று பேட்டிங் செய்ய வேண்டும் என்பதை விட, அவரின் சில சேஸிங்கை கண்டு வியப்படைகிறேன். அவரைப் போன்று போட்டியை பினிஷ் செய்ய வேண்டும் என விரும்புகிறேன்.’’ என்றார்.
    இந்திய அணி கேப்டன் அணியை வழி நடத்தி செல்வதில் முன்னுதாரணமாக இருக்கிறார் என்று ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
    ஐ.பி.எல். 2020 சீசனில் விளையாடுவதற்காக 8 அணி வீரர்களும் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளனர். தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். வருகிற 19-ந்தேதி போட்டி நடைபெற இருக்கிறது.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் அனுபவ வீரர்களான ஏபி டி வில்லியர்ஸ், இந்திய அணி கேப்டன் விராட் கோலி இடம் பிடித்துள்ளனர். விராட் கோலி கேப்டனாக உள்ளார்.

    விராட் கோலி முன்னின்று அணியை வழிநடத்துவதில் எடுத்துக்காட்டாக விளங்குகிறார் என்று ஏ.பி. டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஏ.பி. டிவில்லியர்ஸ் கூறுகையில் ‘‘ஐ.பி.எல். நடப்பது பற்றிய தெளிவு ஒரு மாதத்திற்கு முன்பு, அதிகமாகவோ அல்லது குறைவாகவோ வந்தது என்று நினைக்கிறேன். ஐ.பி.எல். போட்டி நடைபெறுவதற்கு பி.சி.சி.ஐ. குறிப்பிடத்தக்க வேலையைச் செய்துள்ளது, நாங்கள் போட்டிகளில் விளையாடுவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர்களுடன் இருப்பதை முன்பை விட சிறந்ததாக உணர்கிறேன். நாங்கள் கடினமாக பயிற்சி செய்துள்ளோம். நெறிமுறையுடன் இந்த சூழ்நிலையில் ஒவ்வொரு வீரர்களும் கடினமாக உழைத்துள்ளனர். இதற்கான பாராட்டை விராட் கோலிக்கு கொடுத்தாக வேண்டும்.

    அவர் முன்னின்று வழிநடத்தி ஒரு எடுத்துக்காட்டாக திகழ்ந்துள்ளார். கேப்டன் முன்னின்று வழிநடத்திச் செல்வது அணியின் மற்ற வீரர்கள் அதை பின்பற்றுவது மிகவும் எளிதானது’’ என்றார்.
    அமெரிக்கா ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் ஆஸ்திரியாவை சேர்ந்த டொமினிக் தீம் சாம்பியன் பட்டம் பெற்றார்.
    அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ஆஸ்திரியாவைச் சேர்ந்த டொமினிக் தீம், ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவுடன் மோதினார்.

    முதல் செட்டை 6-2 என ஸ்வெரேவ் எளிதில் கைப்பற்றினார். இரண்டாவது செட்டையும் 6-4  என கைப்பற்றி அசத்தினார்.

    மூன்றாவது செட்டில் தீம் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன்பயனாக அவர் 3-வது செட்டை 6-4 என கைப்பற்றினார்.  தொடர்ந்து 4வது செட்டையும் 6-3 என கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5-வது செட்டிலும் தீம் ஆக்ரோஷமாக ஆடினார். இதனால் அந்த செட்டையும் 7-6  எனக் கைப்பற்றி அசத்தினார்.

    இறுதியில், 2-6, 4-6, 6-4, 6-3, 7-6 (6) என ஸ்வெரேவை வீழ்த்தி டொமினிக் தீம் சாம்பியன் பட்டம் வென்றார்.

    இந்தப் போட்டி 4 மணி நேரம் நடைபெற்றது. முதல் 2 செட்டை இழந்தாலும் தளராமல் ஆடி டொமினிக் தீம் இறுதியில் பட்டம் வென்றதுகுறிப்பிடத்தக்கது.
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    மான்செஸ்டர்:

    ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

    20 ஓவர் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த ஆஸ்திரேலியா அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது.

    முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்துயது ஆஸ்திரேலியா.

    இந்நிலையில், இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    இதையடுத்து, இங்கிலாந்து அணி களமிரங்கியது. அந்த அணியில் எந்த வீரரும் நிலைத்து நின்று ஆடவில்லை.
    சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. ஜோ ரூட் 39 ரன், மார்கன் 42 ரன், டாம் கரன் 37 ரன் மற்றும் அடில் ரஷீத் 35 ரன்னும் எடுத்தனர். 

    இறுதியில், இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 231 ரன்கள் எடுத்தது.

    ஆஸ்திரேலியா சார்பில் சம்பா 3 விக்கெட், ஸ்டார்க் 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதைத்தொடர்ந்து 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பிஞ்ச் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 73 ரன்னில் அவுட்டானார். அரை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட லாபஸ்சாக்னே 48 ரன்னில் வெளியேறினார். அலெக்ஸ் கேரி 36 ரன்கள் சேர்த்தார். மற்றவர்கள் விரைவில் வெளியேறினர்.

    இறுதியில் ஆஸ்திரேலிய அணி 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    இதையடுத்து 24 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து, ஒருநாள் தொடரை1-1 என சமன் செய்துள்ளது.

    இங்கிலாந்து சார்பில் ஜோப்ரா ஆர்ச்சர், வோக்ஸ், சாம் கரன் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக ஜோப்ரா ஆர்ச்சர் தேர்வு செய்யப்பட்டார்.
    ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் தகுதியை இழந்துவிட்டதாக பிசிசிஐ தெரிவித்துள்ள நிலையில், பயிற்சியாளர் குழுவில் இடம் பிடிப்பார் என கொல்கத்தா அணியில் தெரிவித்துள்ளது.
    இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் பிரவீன் தாம்பே. 48 வயதாக இவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்தது. ஆனால் 2018-ம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து, அபு தாபியில் நடைபெற்ற டி10 லீக்கில் பங்கேற்றார்.

    இதனால் ஐபிஎல் போட்டியில் விளையாடும் தகுதியை இழந்து விட்டதாக பிசிசிஐ அறிவித்தது. இதனால் வெளிநாடு லீக்குகளில் விளையாட விரும்பினார். கடந்த சில தினங்களுக்கு முன் முடிவடைந்த கரீபியன் பிரிமீயர் லீக்கில் விளையாடினார்.

    இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர்கள் குழுவில் பிரவீன் தாம்பே இடம் பிடிப்பார் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சிஇஓ வெங்கி மைசூர் உறுதிப்படுத்தியுள்ளார்.
    துஸ்கான் கிராண்ட் பிரீயில் மெர்சிடெஸ் லீவிஸ் ஹாமில்டன் வெற்றி பெற்றார். இது அவரின் 90-வது கிராண்ட் பிரீ வெற்றியாகும்.
    பார்முலா 1 கார்பந்தயத்தில் துஸ்கான் கிராண்ட் பிரீ இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. முதன்முறையாக நடத்தப்படும் இந்த போட்டியில் இங்கிலாந்து வீரரும், மெர்சிடெஸ் அணியைச் சேர்ந்தவருமான லீவிஸ் ஹாமில்டன் வெற்றி பெற்றார். பார்முலா 1 கார்பந்தயத்தில் லீவிஸ் ஹாமில்டனின் 90-வது வெற்றி இதுவாகும்.

    லீவிஸ் ஹாமில்டன் பந்தய தூரத்தை 2:19:35.060 மணி நேரத்தில் கடந்து முதல் இடம் பிடித்தார். மற்றொரு மெர்சிடெஸ் வீரர் வால்டரி போட்டாஸ் 4.8880 வினாடிகளில் பின் தங்கி 2-வது இடம் பிடித்தார். ரெட் புல் அணியின் ஆல்பன் 8.064 வினாடிகளில் பின்தங்கி 3-வது இடம் பிடித்தார்.
    கரீபியன் பிரிமீயர் லீக்கில் விளையாடிய முன்னணி வீரர்களான வெயின் பிராவோ, ரஷித் கான், முகமது நபி ஆகியோர் ஐக்கிய அரபு அமீரகம் சென்றடைந்தனர்.
    ஐபிஎல் 2020 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், அபு தாபி, ஷார்ஜாவில் நடக்கிறது. வருகிற 19-ந்தேதி போட்டி தொடங்குகிறது.

    டி20 லீக்கில் விளையாடும் முக்கியமான வீரர்கள் கரீபியின் பிரிமீயர் லீக்கில் பங்கேற்றார்கள். இதனால் முன்னதாக அணியுடன் இணைய முடியவில்லை. தற்போது போட்டி முடிந்ததால் ஐக்கிய அரபு அமீரகம் சென்ற வண்ணம் உள்ளனர்.

    இன்று காலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இம்ரான் தாஹிர் சென்றடைந்தார். இந்நிலையில் சென்னை அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் வெயின் பிராவோ, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் நட்சத்திர வீரர்களான ஆப்கானிஸ்தானின் ரஷித் கான், முகமது நபி ஆகியோரும் சென்றடைந்துள்ளனர்.

    அவர்கள் அணிக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஓட்டலில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வார்கள். அதன்பின் அணியுடன் இணைந்து போட்டியில் விளையாடுவார்கள்.
    ×