search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக கோப்பை போட்டி"

    • 5 பேட்ஸ்மேன்களுமே அவர்களது அணிக்காக அதிக ரன்களை குவித்து உள்ளனர்.
    • உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடப்பதால் அந்த அணிக்கு சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

    மெல்போர்ன்:

    கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் 'பேபுலஸ் போர்' (மிகச்சிறந்த நால்வர்) என்ற வார்த்தை பிரபலமானது. வீராட்கோலி (இந்தியா), ஜோரூட் (இங்கிலாந்து), வில்லியம்சன் (நியூசிலாந்து), ஸ்டீவ் சுமித் (ஆஸ்திரேலியா) ஆகியோர் இதில் இடம் பெற்றுள்ளனர்.

    தற்போது இந்த அடை மொழியில் பாகிஸ்தானின் பாபர் ஆசம் 5-வதாக இணைந்துள்ளார். அதனால் 'பேப் 5' என அழைக்கப்படுகிறது.

    இந்நிலையில் இந்த 5 வீரர்களில் உலக கோப்பை போட்டியில் வீராட்கோலியும், ஸ்டீவ் சுமித் தான் முத்திரை பதிப்பார்கள் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரரும், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான கிரேக் சேப்பல் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்த 5 பேட்ஸ்மேன்களுமே அவர்களது அணிக்காக அதிக ரன்களை குவித்து உள்ளனர். இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பையில் இந்த 5 பேருமே ரன்களை குவிக்க வாய்ப்பு உள்ளது. ஒருநாள் போட்டி, டெஸ்ட், 20 ஓவர் என 3 வடிவிலான போட்டிகளிலும் சிறப்பாக இருப்பது வீராட்கோலி, ஸ்டீவ் சுமித் மட்டுமே.

    இருவரும் இந்த உலக கோப்பை போட்டியில் தங்களது முத்திரையை பதிப்பார்கள் என்று நம்புகிறேன்.

    உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடப்பதால் அந்த அணிக்கு சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆசிய அணிகள் இந்தியாவில் சிறப்பாக செயல்படும்.

    ஆனால் சமீபகாலமாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்கள் இந்தியாவில் அபாரமாக ஆடுகிறார்கள். இந்தியாவில் அவர்கள் தங்கள் நேரத்தை செலவிடு கிறார்கள். இதனால் உலக கோப்பையை வெல்ல ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு அதிகமான வாய்ப்பு உள்ளது.

    34 வயதான வீராட்கோலி டெஸ்டில் 8676 ரன்னும் (111 போட்டி) ஒருநாள் போட்டியில் 12,898 ரன்னும் (275), 20 ஓவரில் 4008 ரன்னும் (115) எடுத்துள்ளார். அவரது சராசரி முறையே 49.29, 57.32 மற்றும் 52.73 ஆக இருக்கிறது.

    34 வயதான ஸ்டீவ் சுமித் டெஸ்டில் 9320 ரன்னும் (102), ஒருநாள் போட்டியில் 4939 ரன்னும் (142) எடுத்து உள்ளார். அவரது சராசரி முறையே 58.61 மற்றும் 44.49 ஆக இருக்கிறது.

    • இந்திய அணி நிர்வாகம் பல வீரர்களை வைத்து பரிசோதனை நடத்தி வருகிறது.
    • உலக கோப்பை போட்டியில் இந்திய அணி சீனியர் வீரர்களை நம்பிதான் இருக்கிறது.

    லாகூர்:

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணிக்கு வரும் காலங்களில் சவால்கள் காத்திருக்கின்றன. ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை (50 ஓவர்) போட்டிகளில் விளையாடுகிறது.

    ஆசிய கோப்பை போட்டி வருகிற 30-ந்தேதி முதல் தொடங்கி செப்டம்பர் 17-ந்தேதி வரை பாகிஸ்தான், இலங்கையில் நடக்கிறது. உலக கோப்பை போட்டி அக்டோபர் 5-ந் தேதி முதல் நவம்பர் 19-ந் தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடக்கிறது.

    இந்நிலையில் வீராட் கோலியை கேப்டன் பதவியில் நீடிக்க அனுமதித்து இருந்தால் இந்திய அணி உலக கோப்பைக்கு 100 சதவீதம் தயாராக இருக்கும் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்திய அணி நிர்வாகம் பல வீரர்களை வைத்து பரிசோதனை நடத்தி வருகிறது. புதிய வீரர்களை நிலை நிறுத்த அனுமதிக்காததால் தேர்வு முறையில் திணறி வருகிறது. அதனால் தான் சமீபத்தில் வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் தொடரை இழந்தது.

    உலக கோப்பை போட்டியில் இந்திய அணி சீனியர் வீரர்களை நம்பிதான் இருக்கிறது.

    கேப்டன்களின் மாற்றம் இந்திய அணிக்கு உதவவில்லை என்பது சந்தேகம் இல்லை. வீராட்கோலியை கேப்டனாக நீடிக்க அனுமதித்து இருந்தால் இந்தியா உலக கோப்பைக்கு 100 சதவீதம் தயாராக இருக்கும்.

    இவ்வாறு ரஷீத் லத்தீப் கூறியுள்ளார். அவர் 1996 மற்றும் 2003-ம் ஆண்டு உலக கோப்பைகளில் விளையாடி இருக்கிறார். உலக கோப்பை போட்டி தொடங்க இன்னும் 46 தினங்கள் உள்ள நிலையில் 4-வது வீரர் வரிசையை இந்திய அணியால் இன்னும் அடையாளம் காண இயலவில்லை.

    கடந்த 2 ஆண்டுகளில் 3 வடிவிலான போட்டிகளுக்கும் இந்திய அணி கேப்டன் பொறுப்பை ஏற்ற பிறகு ரோகித்சர்மா சர்வதேச அளவில் பெரிய வெற்றியை பெறவில்லை. இதனால் ஆசிய மற்றும் உலக கோப்பையில் அவர் தனிக்கவனம் செலுத்தி வருகிறார்.

    ×