என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இந்தியாவில் கொரோனா அதிகரிப்பால் மருத்துவ பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், விராட் கோலி தம்பதி 2 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளது.
    இந்தியாவில் கொரோனா 2-வது அலை உக்கிரமாக உள்ளது. இன்றைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியுள்ளது. 2-வது அலையில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் அதிக அளவில் தேவைப்படுகிறது.

    இதனால் மிகப்பெரிய அளவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அதிகமான பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பல்வேறு நாடுகள் உதவிகள் செய்து வருகின்றன. 

    இந்தியாவில் உள்ள பெரும்பாலானோரும் மருத்துவ உபகரணங்கள் வாங்க தங்களால் முயன்ற நன்கொடைகளை வழங்கி வருகின்றனர்.

    இந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி- பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா தம்பதி 2 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளது. மேலும், ‘Ketto’ நன்கொடை வசூலிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. 7 கோடி ரூபாய் நன்கொடை வசூலிக்க திட்டமிட்டுள்ளது. நன்கொலை அளிக்குமாறு கேட்டுக்கொண்ட கோலி 2 கோடி ரூபாயும் வழங்கியுள்ளார்.
    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக எஞ்சிய ஐபிஎல் ஆட்டங்களை நடத்த வேண்டும் என்றால் அதற்குரிய காலஇடைவெளியை உருவாக்க வேண்டும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி கொரோனா அச்சத்தால் பாதியிலேயே காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது. வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்), விருத்திமான் சஹா (ஐதராபாத் சன்ரைசர்ஸ்), பயிற்சியாளர்கள் எல்.பாலாஜி, மைக் ஹஸ்சி (சென்னை சூப்பர் கிங்ஸ்), அமித் மிஸ்ரா (டெல்லி கேப்பிட்டல்ஸ்) ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். கொரோனா தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையத்தையும் (பயோ-பபுள்) மீறி வீரர்கள் இடையே எப்படி கொரோனா பரவியது என்பது தெரியாமல் இந்திய கிரிக்கெட் வாரியம் குழம்பி போய் உள்ளது. 4 அணிக்குள் கொரோனா ஊடுருவியதால் வேறு வழியின்றி ஐ.பி.எல். போட்டியை ஒத்திவைக்க வேண்டியதாகி விட்டது.

    இந்நிலையில் நடப்பு ஐ.பி.எல்.-ல் இன்னும் 31 ஆட்டங்கள் நடத்த வேண்டி உள்ளது. ஐ.பி.எல். போட்டியை நாங்கள் முழுமையாக நடத்த முடியாமல் போனால் கிட்டத்தட்ட ரூ.2,500 கோடி இழப்பு ஏற்படும். இது தொடக்கட்ட மதிப்பீடு தான்.

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக எஞ்சிய ஐ.பி.எல். ஆட்டங்களை நடத்த வேண்டும் என்றால் அதற்குரிய காலஇடைவெளியை உருவாக்க வேண்டும். இதையொட்டி அனைத்து நாட்டு கிரிக்கெட் வாரியங்களுடனும் பேச வேண்டும். நிறைய விஷயங்கள் இதில் உள்ளடங்கி இருக்கிறது. எனவே அதற்கான வேலையை படிப்படியாக தொடங்குவோம் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
    கடந்த 2 வார இடைவெளியில் இந்திய கிரிக்கெட் வீராங்கனை கொரோனா பாதிப்பு காரணமாக தனது தாய் மற்றும் சகோதரியை இழந்துள்ளார்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தி. இந்திய அணிக்காக 48 ஒருநாள் போட்டி மற்றும் 76 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி உள்ளார்.கடைசியாக கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு 20 ஓவரில் விளையாடினார்.

    இந்த நிலையில் கடந்த 2 வார இடைவெளியில் வேதா கிருஷ்ணமூர்த்தி கொரோனா பாதிப்பு காரணமாக தனது தாய் மற்றும் சகோதரியை இழந்துள்ளார்.

    வேதா கிருஷ்ணமூர்த்தியுடன் அவரது அம்மா

    வேதாவின் தாய் தேவி 2 வாரங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். இந்த நிலையில் அவரது சகோதரி வத்சலாவும் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளார்.

     

    ஆஸ்திரேலியாவில் மே 15-ந் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஐ.பி.எல். போட்டியில் விளையாடிய ஆஸ்திரேலிய வீரர்கள், பயிற்சியாளர்கள், வர்ணனையாளர்கள் என 40 பேர் இந்தியாவில் தவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    புதுடெல்லி:

    14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 9-ந் தேதி சென்னையில் தொடங்கியது. சென்னை, மும்பையில் போட்டி முடிந்த நிலையில் அகமதாபாத், டெல்லியில் ஆட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

    கொல்கத்தா, ஐதராபாத், டெல்லி அணிகளை சேர்ந்த 4 வீரர்கள் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர்கள் எல்.பாலாஜி, மைக் ஹஸ்சி ஆகியோருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதைத் தொடர்ந்து ஐ.பி.எல். போட்டியை காலவரையின்றி கிரிக்கெட் வாரியம் ஒத்திவைத்தது. இந்த போட்டியில் விளையாடிய ஒவ்வொரு நாட்டு வீரர்களையும் பத்திரமாக அவர்கள் நாட்டுக்கு அனுப்பி வைக்கும் பணியில் கிரிக்கெட் வாரியம் ஈடுபட்டது.

    அதன்படி இங்கிலாந்து வீரர்கள் முதலில் நாடு திரும்பினர். தொடக்கத்தில் 8 வீரர்கள் லண்டன் புறப்பட்டு சென்றனர். அதைத் தொடர்ந்து மேலும் 3 வீரர்கள் நாடு திரும்பினர்.

    இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு ஆஸ்திரேலியாவில் மே 15-ந் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐ.பி.எல். போட்டியில் விளையாடிய ஆஸ்திரேலிய வீரர்கள், பயிற்சியாளர்கள், வர்ணனையாளர்கள் என 40 பேர் இந்தியாவில் தவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    அவர்களை கிரிக்கெட் வாரியம் தற்போது மாலத்தீவுக்கு அனுப்பி வைத்துள்ளது. வீரர்கள் அனைவரும் மாலத்தீவு சென்றடைந்தனர். அங்கு அவர்கள் தனிமையில் இருப்பார்கள். பின்னர் அங்கிருந்து தடை காலம முடிந்தபிறகு ஆஸ்திரேலியா புறப்பட்டு செல்வார்கள்.

    ஐ.பி.எல்.லில் விளையாடிய தென் ஆப்பிரிக்க வீரர்கள் 11 பேர் நாடு திரும்பினர். அவர்கள் டெல்லியில் இருந்து ஜோகன்ஸ்பர்க்குக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றனர்.

    வங்காள தேச வீரர்களான சகீப்-அல்அசன், முஸ்டாபிசுர் ரகுமான் ஆகியோர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஏற்பாடு செய்திருந்த விமானம் மூலம் தங்கள் நாட்டுக்கு சென்றடைந்தனர்.

    தென் ஆப்பிரிக்கா, வங்காள தேச நாடுகளில் இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை.

    ஐ.பி.எல்.லில் விளையாடிய நியூசிலாந்து வீரர்கள் இன்று நாடு திரும்புகிறார்கள். வில்லியம்சன், ஜேமிசன், சான்ட்னெர் ஆகியோரை தவிர்த்து 10 வீரர்கள் உள்பட நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த 17 பேர் தங்களது நாட்டுக்கு செல்கிறார்கள்.

    இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கான தடையை இங்கிலாந்து நீக்கியபிறகு வில்லியம்சன் உள்ளிட்ட 4 பேர் அங்கு செல்கின்றனர்.

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்சி தொற்று இல்லை என்பதை குறிக்கும் நெகடிவ் முடிவு வந்தபிறகே ஆஸ்திரேலியா திரும்ப முடியும்.

    இதனால் அவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றொரு சி.எஸ்.கே. அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் எல்.பாலாஜி ஆகியோர் டெல்லியில் இருந்து ஆம்புலன்ஸ் விமானம் மூலம் சென்னை வந்தனர். அவர்களுக்கு இங்கு கிசிசை அளிக்கப்படுகிறது.

    ஐசிசியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை அறிமுகப்படுத்தியது. டெஸ்ட் போட்டியில் விளையாடும் 8 முன்னணி அணிகள் 2019-ம் ஆண்டு முதல் 2021 வரை விளையாடும் டெஸ்ட் போட்டிகளின் வெற்றிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் சாம்பியன் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தும்.

    இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன் லார்ட்ஸ் மைதாத்தில் ஜூன் 18-ம் தேதி முதல் ஜூன் 22-ம் தேதி வரை நடைபெறும் என ஏற்கனவே ஐசிசி அறிவித்துள்ளது. ஜூன் 23-ந்தேதியை ரிசர்வ் டே-வாக அறிவித்துள்ளது.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தேர்வாகி உள்ளன.

    இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட உள்ள இந்திய அணி இன்று தேர்வு செய்யப்பட உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    4 தொடக்க ஆட்டக்காரர்கள், 5 மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள், 9 பந்துவீச்சாளர்கள், 3 விக்கெட் கீப்பர்களைக் கொண்ட அணியை தேர்வு செய்ய உள்ளதாக சேட்டன் சர்மா தலைமையிலான தேர்வு குழு தெரிவித்துள்ளது.

    ஆகஸ்டு மாதம் இங்கிலாந்தில் பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளதையும்  கருத்தில் கொண்டே இந்திய அணி தேர்வு செய்யப்படும் என பிசிசிஐ தெரிவித்தது.
    கொரோனா அச்சத்தால் இந்தியாவில் இருந்து மலேசியாவுக்கான விமான சேவைக்கு அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளதால் இந்திய வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    மலேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி வருகிற 25-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை கோலாலம்பூரில் நடக்கிறது. கொரோனா அச்சத்தால் இந்தியாவில் இருந்து மலேசியாவுக்கான விமான சேவைக்கு அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளதால் இந்திய வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

    இந்திய குழுவினர் இந்த போட்டியில் பங்கேற்க வழிவகை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு மலேசியாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள போதிலும் இப்போதைக்கு சாத்தியம் இல்லை என்றே தெரிகிறது. இந்திய நட்சத்திர வீராங்கனையான தரவரிசையில் 19-வது இடம் வகிக்கும் சாய்னா நேவால், முன்னணி வீரர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் இந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று அதன் மூலம் தரவரிசையில் முன்னேற்றம் கண்டால் மட்டுமே டோக்கியோ ஒலிம்பிக்குக்கு தகுதி பெற முடியும் என்ற சூழல் நிலவுகிறது. ஆனால் மலேசிய ஓபனில் பங்கேற்பது கேள்விக்குறியாகி இருப்பதன் மூலம் இவர்களின் ஒலிம்பிக் கனவு ஏறக்குறைய தகர்ந்து போய் விட்டது என்றே கூறலாம்.

    ஸ்ரீகாந்த்


    சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் ஜூன் 1-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை நடக்கிறது. இது தான் ஒலிம்பிக் பேட்மிண்டனுக்கான கடைசி தகுதி சுற்றாகும். அந்த நாட்டு அரசும் கட்டுப்பாடுகள் விதித்து இருப்பதால் இந்த போட்டியிலும் இந்தியர்கள் பங்கேற்பது சந்தேகம் தான்.

    இந்திய பேட்மிண்டன் தரப்பில் பி.வி.சிந்து, சாய் பிரனீத், இரட்டையர் ஜோடியான சிராக் ஷெட்டி- சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி ஆகியோர் ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
    2012-ம் ஆண்டு சாம்பியனான செல்சி அணி அதன் பிறகு இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைப்பது இதுவே முதல்முறையாகும்.
    லண்டன்:

    சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் அரைஇறுதியில் ரியல் மாட்ரிட்டை வீழ்த்தி செல்சி அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    32 முன்னணி கிளப் அணிகள் பங்கேற்ற ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில் இங்கிலாந்தில் உள்ள புல்ஹாம் நகரில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த அரைஇறுதியின் 2-வது சுற்று ஆட்டத்தில் செல்சி அணி (இங்கிலாந்து), 13 முறை சாம்பியனான ரியல் மாட்ரிட்டை (ஸ்பெயின்) சந்தித்தது.

    விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பந்து அதிக நேரம் (68 சதவீதம்) ரியல் மாட்ரிட் அணியின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் செல்சி அணியினரின் கையே பெரும்பாலும் ஓங்கி இருந்தது. 28-வது நிமிடத்தில் செல்சி அணி முதல் கோல் அடித்தது. அந்த அணி வீரர் காய் ஹவெர்ட்ஸ் கோல் எல்லையை நோக்கி அடித்த பந்து கோல் கம்பத்தில் பட்டு திரும்பியது. அதனை சக வீரர் டிமோ வெர்னெர் தலையால் முட்டி கோல் வளையத்துக்குள் திணித்தார்.

    பதிலடி கொடுக்க, ரியல் மாட்ரிட் அணி வீரர் கரிம் பென்ஜிமா கோலை நோக்கி அடித்த பந்தை செல்சி அணியின் கோல்கீப்பர் மென்டி அருமையாக தடுத்து நிறுத்தினார். முதல் பாதி ஆட்டத்தில் செல்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

    2-வது பாதி ஆட்டத்திலும் செல்சி அணியினரின் சிறப்பான ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் ரியல் மாட்ரிட் வீரர்கள் தடுமாற்றம் கண்டனர். 85-வது நிமிடத்தில் செல்சி அணி 2-வது கோல் அடித்தது. அந்த அணி வீரர் மாசன் மவுன்ட் இந்த கோலை அடித்தார். வலுவான ரியல் மாட்ரிட் அணி கடைசி வரை போராடியும் பதில் கோல் எதுவும் திருப்ப முடியவில்லை.

    முடிவில் செல்சி அணி 2-0 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட்டை வீழ்த்தியது. இவ்விரு அணிகள் இடையிலான அரைஇறுதியின் முதலாவது சுற்று 1-1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’வில் முடிந்து இருந்தது. இதனால் ஒட்டுமொத்தத்தில் செல்சி அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 2012-ம் ஆண்டு சாம்பியனான செல்சி அணி அதன் பிறகு இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைப்பது இதுவே முதல்முறையாகும்.

    வெற்றிக்கு பிறகு செல்சி அணியின் பயிற்சியாளர் தாமஸ் துசெல் கருத்து தெரிவிக்கையில், ‘இந்த போட்டியில் எங்கள் அணி மிகச் சிறப்பாக செயல்பட்டது. இது சிறப்பான சாதனையாகும். இந்த வெற்றிக்கு எங்கள் அணி தகுதி படைத்தது’ என்றார்.

    துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் வருகிற 29-ந் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை சேர்ந்த மான்செஸ்டர் சிட்டி-செல்சி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி கொரோனா அச்சத்தால் பாதியிலேயே காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது.
    மும்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் போது எந்த வீரரும் கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதிகளை மீறவில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி கூறியுள்ளார்.

    14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி கொரோனா அச்சத்தால் பாதியிலேயே காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது. வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்), விருத்திமான் சஹா (ஐதராபாத் சன்ரைசர்ஸ்), பயிற்சியாளர்கள் எல்.பாலாஜி, மைக் ஹஸ்சி (சென்னை சூப்பர் கிங்ஸ்), அமித் மிஸ்ரா (டெல்லி கேப்பிட்டல்ஸ்) ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். கொரோனா தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையத்தையும் (பயோ-பபுள்) மீறி வீரர்கள் இடையே எப்படி கொரோனா பரவியது என்பது தெரியாமல் இந்திய கிரிக்கெட் வாரியம் குழம்பி போய் உள்ளது. 4 அணிக்குள் கொரோனா ஊடுருவியதால் வேறு வழியின்றி ஐ.பி.எல். போட்டியை ஒத்திவைக்க வேண்டியதாகி விட்டது.

    இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    ஐ.பி.எல். கிரிக்கெட்


    எனக்கு தெரிந்தவரை, வீரர்கள் யாரும் கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறவில்லை. இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கிடைத்திருக்கும் அறிக்கையும் அப்படி தான் கூறுகிறது. நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று எப்படி அதிகரித்தது என்பதை கூறுவது கடினம். அதே போல் தான் ஐ.பி.எல். தொடரிலும் கொரோனா எப்படி வந்தது என்று கேட்டால், அதற்கு பதில் அளிப்பது மிகவும் கடினம்.

    கடந்த ஆண்டை போலவே இந்த சீசனுக்கான ஐ.பி.எல். போட்டியையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தலாம் என்று முதலில் ஆலோசித்தோம். ஆனால் போட்டி அட்டவணையை திட்டமிட்ட சமயத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிகமிக குறைவாக இருந்ததால் இந்தியாவிலேயே போட்டியை நடத்துவது என்று முடிவுக்கு வந்தோம். அத்துடன் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரை உள்ளூரில் வெற்றிகரமாக நடத்தி முடித்தோம். கொரோனா பாதிப்பு அதிகம் இருந்த மும்பையில் கூட ஐ.பி.எல். தொடக்ககட்ட லீக் ஆட்டங்களை எந்தவித பாதிப்பும் இன்றி வெற்றிகரமாக நடத்தி முடித்தோம். தற்போது திடீரென கொரோனா பரவல் அதிகரித்தது துரதிர்ஷ்டவசமானது.

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட வீரர்கள் நலமுடன் உள்ளனர். அவர்கள் சிறந்த முறையில் குணப்படுத்தப்பட்டு அவர்களது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

    பாதுகாப்பு வளையத்தையும் மீறி கொரோனா பரவிய விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்தை குறை கூறுவது நியாயமற்றது. உலகம் முழுவதும் பல போட்டிகளில் இது போன்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து பிரிமீயர் லீக் கால்பந்து, லா லிகா கால்பந்து போட்டிகளின் போதும் வீரர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டதை மறந்து விடக்கூடாது.

    எனவே ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்கள் இடையே கொரோனா பரவியதன் பின்னணி குறித்து அறிய நாங்கள் விசாரணை நடத்தியாக வேண்டும். கடந்த ஆண்டு அமீரகத்தில் துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய 3 இடங்களில் மட்டுமே ஐ.பி.எல். போட்டி நடத்தப்பட்டது. அதுவும் ஒவ்வொரு இடங்களுக்கும் செல்வதற்கு கடும் கட்டுப்பாடு இருந்தது. எந்த இடத்திற்கும் விமானம் மூலம் செல்லாமல் தரைமார்க்கமாகவே பயணித்தோம். ஆனால் இந்தியாவில் 6 நகரங்களில் ஐ.பி.எல். ஆட்டங்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அத்துடன் விமானம் மூலம் தான் மற்ற நகரங்களுக்கு செல்ல வேண்டி இருந்தது. இந்த பயணத்தின் மூலம் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம். மேலும் நாட்டின் நிலைமையையும் நீங்கள் பார்க்க வேண்டும். நாளுக்கு நாள் கொரோனாவில் சிக்கியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. நாளை என்ன நடக்கப்போகிறது என்பது யாருக்கும் தெரியாது.

    நடப்பு ஐ.பி.எல்.-ல் இன்னும் 31 ஆட்டங்கள் நடத்த வேண்டி உள்ளது. ஐ.பி.எல். போட்டியை நாங்கள் முழுமையாக நடத்த முடியாமல் போனால் கிட்டத்தட்ட ரூ.2,500 கோடி இழப்பு ஏற்படும். இது தொடக்கட்ட மதிப்பீடு தான்.

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக எஞ்சிய ஐ.பி.எல். ஆட்டங்களை நடத்த வேண்டும் என்றால் அதற்குரிய காலஇடைவெளியை உருவாக்க வேண்டும். இதையொட்டி அனைத்து நாட்டு கிரிக்கெட் வாரியங்களுடனும் பேச வேண்டும். நிறைய விஷயங்கள் இதில் உள்ளடங்கி இருக்கிறது. எனவே அதற்கான வேலையை படிப்படியாக தொடங்குவோம்.

    இவ்வாறு கங்குலி கூறினார்.
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய அனைத்து வீரர்கள், சப்போர்ட் ஸ்டாஃப்கள் வீடு திரும்புவதில் எம்எஸ் டோனி கவனம் செலுத்தி வருகிறார்.
    இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று ஜெட் வேகத்தில் உயர்ந்தாலும், மன அழுத்தத்தில் வீட்டிற்குள்ளே இருக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு சிறிது நேரம் மகிழ்ச்சியளிக்கும் வகையில் ஐபிஎல் போட்டி நடைபெற்று வந்தது, பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும், மறுபக்கம் ஆதரவும் இருந்து வந்தது.

    வீரர்களுக்கான ஐபிஎல் பயோ-பபுள் வெடித்து கொரோனா தொற்று வீரர்களையும், சப்போர்ட் ஸ்டாஃப்களையும் தாக்கத் தொடங்கியது. இதனால் ஐபிஎல் போட்டி உடனடியாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    தற்போது வீரர்கள் அவர்களது வீட்டிற்குச் செல்வதில் கவனம் செலுத்தி வருகிறார்கள். வெளிநாடு வீரர்களை அவர்களுடய சொந்த நாடுகளுக்கு அனுப்ப ஐபிஎல் நிர்வாகம், அணிகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்களும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் இடம் பிடித்துள்ளனர்.

    அவர்கள் அனைவரும் சொந்த ஊர் கிளம்பிக் கொண்டிருக்கின்றன. தற்போது கொரோனா உச்சத்தில் இருப்பதால், அதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அனைத்து வீரர்களும் சொந்த ஊர் திரும்பிய பின்னர்தான், ஓட்டலில் இருந்து திரும்புவேன் என்று எம்எஸ் டோனி உறுதியாக கூறிவிட்டாராம்.

    தல டோனி ஆடும் லெவன் அணிக்கு சிறந்த தலைவனாக இருந்துள்ளார். கிரிக்கெட்டிற்கு வெளியிலும் நல்ல தலைவன் என்பதை இதன்மூலம் நிரூபித்துள்ளார்.
    மற்ற நாடுகளில் வேகப்பந்து வீரர்களின் சுமையை எவ்வாறு கையளாளுகிறார்கள் என்பதை பாகிஸ்தான் தேர்வாளர்களும், நிர்வாகத்தினரும் அறிந்து கொள்ள வேண்டும் என ஜூனைத்கான் கூறியுள்ளார்.

    கராச்சி:

    பாகிஸ்தான் அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஜூனைத்கான். 31 வயதான இவர் 22 டெஸ்டில் 71 விக்கெட் கைப்பற்றி உள்ளார். 76 ஒருநாள் போட்டி மற்றும் 9 இருபது ஓவரில் விளையாடினார்.

    2019-ம் ஆண்டில் இருந்து அவர் பாகிஸ்தான் அணிக்கு தேர்வு செய்யப்படாமல் உள்ளார்.

    இந்த நிலையில் பாகிஸ்தான் தேர்வு குழு மீது ஜூனைத்கான் கடுமையாக பாய்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    கேப்டனுடனும், அணி நிர்வாகத்துடனும் நமக்கு நல்ல நட்பு தொடர்ந்தால் தான் அனைத்து விதமான போட்டிகளிலும் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும். நமது திறமையை நிரூபிக்கலாம்.

    ஆனால் கேப்டனுடனும், நிர்வாகத்துடனும் நெருக்கமாக இல்லாவிட்டால் அணியில் இருந்து நீக்கப்படுவீர்கள். இதுதான் பாகிஸ்தான் அணியின் நிலைமை.

    நான் பாகிஸ்தான் அணியில் 3 வடிவிலான போட்டிகளில் விளையாடினேன். ஆனால் நான் ஓய்வு கேட்காமல் எனக்கு நிர்வாகம் ஓய்வு அளித்துவிட்டது.

    என்மீதான திடீர் வெறுப்புகளால் என்னை தேர்வு செய்யவில்லை. எனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகளில் சிறப்பாக செயல்பட்ட போதிலும், எனக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை.

    மற்ற நாடுகளில் வேகப்பந்து வீரர்களின் சுமையை எவ்வாறு கையளாளுகிறார்கள் என்பதை பாகிஸ்தான் தேர்வாளர்களும், நிர்வாகத்தினரும் அறிந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஐ.பி.எல். போட்டியில் கடந்த 2-ந் தேதி டெல்லியில் நடந்த ஆட்டத்தின் போது சூதாட்ட தரகர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் கிரிக்கெட் வாரியம் இந்த முடிவை மேற்கொண்டது.

    ஐ.பி.எல். போட்டியில் கடந்த 2-ந் தேதி டெல்லியில் நடந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்-சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

    அப்போது சட்ட விரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    போலி அடையாள அட்டையை பயன்படுத்தி மைதானத்துக்குள் நுழைந்த அவர்கள் இருவரையும் டெல்லி காவல்துறையின் சிறப்பு ஊழியர்கள் பிடித்தனர். இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 5 நாட்கள் போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

    இது தொடர்பாக டெல்லி போலீசின் கூடுதல் ஆணையர் ரோகித் மீனா கூறும்போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் வீட்டு பராமரிப்பு ஊழியராக காட்டிக் கொண்டிருந்த மணிஷ்கன்சால் மற்றும் சுகாதாரப் பணியாளராக நடித்து வந்த கிரிசன்கார்க் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

    அவரிடம் இருந்து அங்கீகார அட்டையை பறிமுதல் செய்துள்ளோம். அவற்றை அவர்கள் எவ்வாறு பெற்றனர் என்பதை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்.

    இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்புப் பிரிவுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட 2 பேரும் சூதாட்டத்தில் ஈடுபட்டதை ஒத்துக்கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 45 நிமிடங்கள் கண்காணித்த பிறகு இருவரையும் பிடித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் வீரர்களின் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர்கள் மூன்று பேர் இடம் பெற்றுள்ளனர்.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

    பேட்டிங் தரவரிசையில் இந்திய வீரர் ரி‌ஷப்பண்ட் 747 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தை பிடித்துள்ளார். இதன்மூலம் அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.

    ஐ.சி.சி.டெஸ்ட் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

    ரி‌ஷப்பண்ட் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களில் மிகவும் இக்கட்டான நிலையில் அபாரமாக விளையாடி அணியை காப்பாற்றினார். இதன் மூலம் இளம் விக்கெட் கீப்பரான ரி‌ஷப்பண்ட் மிடில் ஆர்டரில் தவிர்க்கமுடியாத வீரராக உருவெடுத்துள்ளார்.

    இந்த அணி கேப்டன் விராட் கோலி 814 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளார். ரோகித் சர்மாவும் 747 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளார்.

    நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் 919 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். ஸ்டீவ் சுமித், மார்னஸ் லபுசேன் (ஆஸ்தி ரேலியா) முறையே 2-வது, 3-வது இடங்களில் உள்ளனர்.

    ×