என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் வீரர்களின் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர்கள் மூன்று பேர் இடம் பெற்றுள்ளனர்.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

    பேட்டிங் தரவரிசையில் இந்திய வீரர் ரி‌ஷப்பண்ட் 747 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தை பிடித்துள்ளார். இதன்மூலம் அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.

    ஐ.சி.சி.டெஸ்ட் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

    ரி‌ஷப்பண்ட் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களில் மிகவும் இக்கட்டான நிலையில் அபாரமாக விளையாடி அணியை காப்பாற்றினார். இதன் மூலம் இளம் விக்கெட் கீப்பரான ரி‌ஷப்பண்ட் மிடில் ஆர்டரில் தவிர்க்கமுடியாத வீரராக உருவெடுத்துள்ளார்.

    இந்த அணி கேப்டன் விராட் கோலி 814 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளார். ரோகித் சர்மாவும் 747 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளார்.

    நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் 919 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். ஸ்டீவ் சுமித், மார்னஸ் லபுசேன் (ஆஸ்தி ரேலியா) முறையே 2-வது, 3-வது இடங்களில் உள்ளனர்.

    கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் மெக்கிலை கடத்தல்காரர்கள் ஏறக்குறைய ஒரு மணிநேரம் கடுமையாகத் தாக்கிவிட்டு பின்னர் விடுவித்துள்ளனர்.
    சிட்னி:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் மெக்கில்.  இவர், கடந்த மாதம் 14-ம் தேதி சிட்னியில் உள்ள அவரின் வீட்டின் அருகே நடந்து சென்றார். அப்போது காரில் வந்த மர்ம நபர்கள் 4 பேர் , மெக்கில்லை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர்.

    சிட்னி நகரின் வேறு ஒரு இடத்துக்கு மெக்கில்லை கொண்டு சென்ற 4 பேரும், அவரைத் தாக்கி, மிரட்டியுள்ளனர். ஏறக்குறைய ஒரு மணிநேரம் மெக்கில்லை கடுமையாகத் தாக்கிவிட்டு அவரை விடுவித்துள்ளனர். 

    தன்னைக் கடத்தி, தாக்கியது குறித்து நியூ சவுத்வேல்ஸ் போலீசில் மெக்கில் புகார் அளித்தார். இது தொடர்பாக நியூ சவுத்வேல்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்துள்ளனர்.

    இதுகுறித்து நியூசவுத்வேல்ஸ் போலீஸ் அதிகாரி அந்தோனி ஹால்டர் கூறும் போது ‘பணத்துக்காக இந்த கடத்தல் நடந்திருக்கலாம். இந்த கடத்தல் விவகாரம் குறித்து எங்களுக்கு 20ம் தேதிதான் புகார் அளிக்கப்பட்டது. அதன்பின், 4 சிறப்பு தனிப்படைகள் உதவியுடன் தீவிரமாக தேடினோம். அப்போது இந்த கடத்தலில் தொடர்புடைய 4 பேரைக் கைது செய்தோம்’ எனத் தெரிவித்தார்.

    ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான மெக்கில் 1998 முதல் 2008ம் ஆண்டுவரை ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 44 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய மெக்கில் 208 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
    கொரோனா 2-வது அலை காரணமாக நாடு முழுவதும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக டெல்லி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    கொரோனா 2-வது அலை காரணமாக நாடு முழுவதும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக டெல்லி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தெற்கு டெல்லியில் கொரோனாவால் பாதித்த மக்களுக்கு தனது கிரிக்கெட் அகாடமி சார்பில் தினசரி இலவசமாக உணவு வழங்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டரான 36 வயது இர்பான் பதான் நேற்று அறிவித்தார்.

    இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் ‘தற்போது கொரோனாவின் 2-வது அலையின் தாக்கத்துக்கு மத்தியில் நமது நாடு இருக்கிறது. இந்த தருணத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து தேவைப்படும் மக்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வது கடமையாகும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி தொடர் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. விறுவிறுப்பான இந்த போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது.
    மான்செஸ்டர்:

    சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணி முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

    ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி தொடர் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. விறுவிறுப்பான இந்த போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது. 32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் மான்செஸ்டர் சிட்டி (இங்கிலாந்து), பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிரான்ஸ்), ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்), செல்சியா (இங்கிலாந்து) ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. அரைஇறுதிப்போட்டி 2 ஆட்டங்கள் கொண்டதாகும்.

    இதில் இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டரில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த அரைஇறுதியின் 2-வது சுற்று ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி-பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    பரபரப்பான இந்த ஆட்டத்தில் பந்து அதிக நேரம் (56 சதவீதம்) பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியினரின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், மான்செஸ்டர் சிட்டி அணியினர் எதிரணியின் கோல் எல்லையை அடிக்கடி முற்றுகையிட்டு கோல் அடிக்க தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தனர். இதற்கு கைமேல் பலனும் கிடைத்தது.

    11-வது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டி அணி முதல் கோல் அடித்தது. அந்த அணி வீரர் ரியாத் மாக்ரெஸ் இந்த கோலை அடித்தார். இதனால் முதல் பாதியில் மான்செஸ்டர் சிட்டி அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

    2-வது பாதி ஆட்டத்திலும் மான்செஸ்டர் சிட்டி அணி தொடர்ந்து பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கு கடும் நெருக்கடி அளித்தது. 63-வது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டி அணி மீண்டும் கோல் அடித்தது. முதல் கோலை அடித்த ரியாத் மாக்ரெஸ் இந்த கோலையும் அடித்து அசத்தினார்.

    69-வது நிமிடத்தில் எதிரணி வீரர் பெர்னான்டின்ஹோவை வேண்டுமென்றே காலில் மிதித்த பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியின் வீரர் ஏஞ்சல் டி மரியா நடுவரால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு அந்த அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டியதானது.

    பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி பதில் கோல் திரும்ப எடுத்த முயற்சிக்கு கடைசி வரை பலன் கிடைக்கவில்லை. முடிவில் மான்செஸ்டர் சிட்டி அணி 2-0 என்ற கோல் கணக்கில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியை வீழ்த்தியது. அரைஇறுதியின் முதலாவது சுற்று ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி அணி 2-1 என்ற கணக்கில் வென்று இருந்தது. இதனால் ஒட்டு மொத்தத்தில் மான்செஸ்டர் சிட்டி அணி 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த ஆட்டத்தில் 2 கோல்கள் அடித்த ரியாத் மாக்ரெஸ் அரைஇறுதியின் முதல் சுற்றிலும் ஒரு கோல் அடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கால்பந்து உலகில் அதிகம் சம்பளம் பெறும் வீரர்களான நெய்மார் (பிரேசில்), கைலியன் எம்பாப்பே (பிரான்ஸ்) ஆகியோர் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியில் அங்கம் வகித்தாலும் அந்த அணி இறுதிப்போட்டியை எட்ட முடியாமல் ஏமாற்றம் அளித்தது. காயம் காரணமாக கைலியன் எம்பாப்பே அரைஇறுதியில் களம் காணவில்லை.

    சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டி துருக்கியில் உள்ள இஸ்தான்புல்லில் வருகிற 29-ந் தேதி நடக்கிறது. இதில் மான்செஸ்டர் சிட்டி அணி, ரியல் மாட்ரிட்-செல்சியா அணிகள் இடையிலான அரைஇறுதிபோட்டியில் வெற்றி பெறும் அணியை எதிர்கொள்ளும்.
    பயோ-பபுள் வெடித்து வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், ஐபிஎல் கிரிக்கெட் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
    இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வந்த வரும் நிலையில், கடந்த மாதம் 9-ந்தேதி ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடங்கியது. முதலில் சென்னையிலும் மும்பையிலும் போட்டிகள் நடைபெற்றன. அப்போது வீரர்கள் பயோ-பபுள் வளையத்திற்குள் பாதுகாப்பாக இருந்து விளையாடினர்.

    அதன்பின் போட்டிகள் டெல்லியிலும், அகமதாபாத்திலும் நடைபெற்றன. இரு மாநிலத்திலும் கொரோனாவின் வீரியம் அதிகமான இருந்தது. இதனால் ஐபிஎல் கிரிக்கெட்டில் வீரர்களுக்கான பயோ-பபுள் வெடித்து வீரர்களை கொரோனா தொற்று தாக்க ஆரம்பித்தது.

    முதலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வருண் சக்ரவர்த்தி உள்பட இருவர் பாதிக்கப்பட்டனர். அதன்பின் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் அமித் மிஷ்ராவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்னை அணியின் சப்போர்ட் ஸ்டாஃப்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது.

    இதனால் ஐபிஎல் போட்டிகள் உடனடியாக ரத்து செய்யப்பட்டு, காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட்டில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து வீரர்கள் அதிக அளவில் விளையாடினார்கள்.

    அவர்கள் சொந்த நாடு திரும்ப விரும்புகிறார்கள். பிசிசிஐ-யும் அதற்கு ஏற்பாடு செய்து வருகிறது. இந்த நிலையில் இன்று இங்கிலாந்தைச் சேர்ந்த 8 வீரர்கள் (பட்லர், பேர்ஸ்டோ, சாம் கர்ரன், டாம் கர்ரன், சாம் பில்லிங்ஸ், கிறிஸ் வோக்ஸ், மொயீன் அலி, ஜேசன் ராய்) லண்டன் திரும்பியுள்ளனர்.

    அவர்கள் அந்நாட்டு வழிகாட்டு நெறிமுறைப்படி 10 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு அதன்பின் வீட்டிற்குச் செல்வார்கள். மோர்கன், தாவித் மலான், கிறிஸ் ஜோர்டான் ஆகியோர் இன்னும் 48 மணி நேரத்திற்குள் இங்கிலாந்து புறப்பட இருக்கிறார்கள்.

    பட்லர்

    ஆஸ்திரேலியா வீரர்கள் இந்தியாவில் இருந்து நேரடியாக சொந் நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதல், மாலத்தீவு சென்று, அங்கு சில நாட்கள் தனிமையில் இருந்து கொண்டு, அதன்பின் அங்கிருந்து ஆஸ்திரேலியா புறப்பட இருக்கிறார்கள். இதற்கான பணிகளை பிசிசிஐ செய்து வருகிறது.

    மாலத்தீவுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்ததும் பறந்துவிடுவார்கள்.
    ஐ.பி.எல். போட்டியை பாதியிலேயே ஒத்திவைத்ததால், கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.2 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த போட்டி ஆண்டுதோறும் இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது.

    பாராளுமன்ற தேர்தல் காரணமாக ஒருமுறை ஐ.பி.எல். ஆட்டங்கள் தென் ஆப்பிரிக்காவில் நடந்தது. மற்றொரு முறை பாதி ஆட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்தப்பட்டது.

    கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியை திட்டமிட்டவாறு ஏப்ரல் -மே மாதங்களில் இந்தியாவில் நடத்த முடியவில்லை. கடந்த ஆண்டுக்கான 13-வது ஐ.பி.எல். போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபி, ஷார்ஜா ஆகிய நகரங்களில் செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் வரை நடந்தது.

    14-வது ஐ.பி.எல். போட்டி இந்தியாவில்தான் நடத்தப்படும் என்று கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக அறிவித்தது. அதன்படி கடந்த மாதம் 9-ந் தேதி இந்த போட்டி தொடங்கியது.

    கொரோனா பரவல் காரணமாக ரசிகர்கள் இல்லாமல் 6 நகரங்களில் மட்டுமே இந்த போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி சென்னை, மும்பையில் போட்டிகள் முடிந்தன. டெல்லி, அகமதாபாத்தில் ஆட்டங்கள் நடைபெற்று வந்தபோது வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

    அடுத்த கட்டமாக கொல்கத்தா, பெங்களூரில் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏற்கனவே 5 வீரர்கள் போட்டியில் பாதியில் இருந்து விலகினார்கள். ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆடம் சம்பா, ஆந்த்ரேடை கானே ரிச்சர்ட்சன், இங்கிலாந்தை சேர்ந்த லிவிங்ஸ்டன் மற்றும் இந்திய வீரர் அஸ்வின் ஆகியோர் விலகினார்கள்.

    இதேபோல இந்தியாவை சேர்ந்த நிதின் மேனன், ஆஸ்திரேலியாவை சேர்ந்த பால் ரீபெல் ஆகிய 2 நடுவர்களும் போட்டியில் இருந்து பாதியில் வெளியேறினார்கள்.

    இதற்கிடையே ஐ.பி.எல் போட்டியில் விளையாடிய வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர் (கொல்கத்தா), விருத்திமான் சஹா (ஐதராபாத்), அமித் மிஸ்ரா (டெல்லி) ஆகிய 4 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.

    அதோடு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் எல்.பாலாஜி மற்றும் அணியின் பஸ் கிளீனர் ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.

    கொல்கத்தா வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் பெங்களூர் - கொல்கத்தா அணிகள் மோதவேண்டிய ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

    அதைத் தொடர்ந்து மேலும் வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.

    இதைத் தொடர்ந்து கிரிக்கெட் வாரியமும், ஐ.பி.எல். ஆட்சிமன்ற குழுவும் முடிவு செய்து ஐ.பி.எல். போட்டியை காலவரையின்றி ஒத்திவைத்தது.

    வீரர்களின் பாதுகாப்பு தான் எங்களுக்கு முக்கியம் என்று கருதி கிரிக்கெட் வாரியம் இந்த முடிவை எடுத்தது. வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் நாடு திரும்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஐ.பி.எல். சேர்மன் பிரிஜேஷ் படேல் உறுதி அளித்தார்.

    ஐ.பி.எல். போட்டியை பாதியிலேயே ஒத்திவைத்ததால், கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.2 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

    ஐ.பி.எல். போட்டியில் மொத்தம் 60 ஆட்டங்கள் நடைபெற இருந்தது. இதுவரை 29 போட்டிகள் நடந்துள்ளது. நேரடி ஒளிபரப்புக்கு போட்டி ஒன்றுக்கு ரூ.54.4 கோடியை ஸ்டார் நிறுவனம் கொடுக்கிறது.

    தற்போது பாதியில் ரத்து செய்யப்பட்டதால் 31 ஆட்டங்களுக்கான பணத்தில் ரூ.1,700 கோடி இழப்பு ஏற்படுகிறது. இது தவிர டைட்டில் ஸ்பான்சர் மற்றும் இதர ஸ்பான்சர்கள் மூலமும் கிரிக்கெட் வாரியம் வருவாயை இழக்கிறது. மொத்தத்தில ரூ.2 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே பாதியில் ஒத்திவைக்கப்பட்ட எஞ்சிய ஐ.பி.எல். ஆட்டங்களை செப்டம்பர் மாதத்தில் நடத்த கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.

    இது தொடர்பாக கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறும்போது, 20 ஓவர் உலக கோப்பைக்கு முன்பு ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளோம். அப்போது கொரோனா கட்டுக்குள் வந்துவிடும். வெளிநாட்டு வீரர்கள் வருவதிலும் பிரச்சினை இருக்காது என்றார்.

    20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெறுகிறது. ஐ.பி.எல். போட்டி பாதியில் நிறுத்தப்பட்டதால், உலக கோப்பை நடைபெறுவதும் சந்தேகமே.

    மேலும் நவம்பர் மாதம் இந்தியாவில் கொரோனா 3-வது அலை ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இதனால் 20 ஓவர் உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவே.

    ஐக்கிய அரபு எமிரேட்சில் 20 ஓவர் உலக கோப்பை போட்டியை நடத்த கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.

    சிஎஸ்கே அணியில் உள்ள பேட்டிங் பயிற்சியாளரும், ஆஸ்திரேலிய முன்னாள் வீரருமான மைக் ஹஸ்சி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். போட்டியில் விளையாடி வரும் வீரர்கள் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. அணியில் உள்ள பயிற்சியாளர் உள்ளிட்ட ஊழியர்களும் பாதிப்புக்குள்ளானார்கள்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளரான எல்.பாலாஜிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதோடு அணியில் உள்ள பஸ்கிளீனருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

    இதைத் தொடர்ந்து சி.எஸ்.கே. வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் சி.எஸ்.கே. அணியில் உள்ள பேட்டிங் பயிற்சியாளரும், ஆஸ்திரேலிய முன்னாள் வீரருமான மைக் ஹஸ்சி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

    ஏற்கனவே ஆஸ்திரேலிய பிரதமர் இந்தியாவில் இருந்து தங்கள் நாட்டுக்கு யாரும் வரவேண்டாம் என்று தடை விதித்து இருந்தார். தற்போது ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்.

    கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருக்கும்போது வீரர்கள் மற்றும் அணியின் ஊழியர்களை கொரோனா தாக்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    வீரர்களை கண்காணிக்க பொருத்தப்பட்ட ஜி.பி.எஸ். கருவியில் தவறு நேர்ந்தது, கொரோனா பாதுகாப்பு வளையம் அமைப்பதற்கு ஏற்ப சரியான ஓட்டல்களை சரியான நேரத்தில் கண்டறிய முடியாதது. மைதானம், ஓட்டல் பணியாளர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளாதது. போட்டிக்காக வேறு இடங்களுக்கு பயணம் செய்தது உள்ளிட்ட பல காரணங்களால் வீரர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

    அணிகளின் வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று உறுதியானதால் ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.  ஐ.பி.எல். போட்டியின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோத இருந்தது.

    இந்நிலையில் கொல்கத்தா அணி வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர், ஐதராபாத் அணி விர்த்திமான் சஹா, டெல்லி அணியின் அமித் மிஷ்ராவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் எல்.பாலாஜி மற்றும் ஒரு உதவியாளருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

     பிசிசிஐ

    இதையடுத்து நடப்பு ஐபிஎல் 20-20 தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

    மே 30ந்தேதி வரை போட்டிகள் நடைபெறவிருந்த நிலையில் கொரோனா காரணமாக ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    ஐபிஎல் போட்டிகளுக்கான புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
    வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
    பல்லகெலே:

    வங்காளதேசம் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது.

    இரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பல்லகெலேவில் நடைபெற்றது.

    டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 493 ரன்கள் எடுத்தது.

    கேப்டன் கருணரத்னே 118 ரன்னும், லஹிரு திரிமானே 140 ரன்னும், ஒஷாடா பெர்னாண்டோ 81 ரன்னும், டிக்வெலா 77 ரன்னும் எடுத்தனர்.

    வங்காளதேசம் அணி சார்பில் தஸ்கின் அகமது 4 விக்கெட்டும், மெஹிதி ஹசன், ஷோரிபுல் இஸ்லாம், தஜுல் இஸ்லாம் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, தொடர்ந்து ஆடிய வங்காளதேசம் அணி முதல் இன்னிங்சில் 251 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    தமிம் இக்பால் 92 ரன்னும், மொமினுல் ஹக் 49 ரன்னும், முஷ்பிகுர் ரஹீம் 40 ரன்னும் எடுத்தனர்.

    இலங்கை அணி சார்பில் ஜெயவிக்ரமா 6 விக்கெட்டும், லக்மல், ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ஆட்ட நாயகன் விருது பெற்ற ஜெயவிக்ரமா

    பாலோ ஆன் கொடுக்காத இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது. அந்த அணி 9 விக்கெட்டுக்கு 194 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. கருணரத்னே 66 ரன்னும், தனஞ்செய டி சில்வா 41 ரன்னும் எடுத்தனர்.

    வங்காளதேசம் சார்பில் தஜுல் இஸ்லாம்5 விக்கெட்டும், மெஹிதி ஹசன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    437 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. ஆனால், 227 ரன்களில் ஆல் அவுட்டானது. முஷ்பிகுர் ரஹீம் 40 ரன்னும், மெஹிதி ஹசன் 39 ரன்னும், சாய்ப் ஹசன் 34 ரன்னும், மொமினுல் ஹக் 32 ரன்னும் எடுத்தனர்.

    இலங்கை அணி சார்பில் ஜெயவிக்ரமா 5 விக்கெட்டும், ரமேஷ் மெண்டிஸ் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனால் வங்காளதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் 209 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது. அத்துடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என கைப்பற்றியது.

    ஆட்ட நாயகன் விருது மொத்தம் 11 விக்கெட்டுகள் வீழ்த்திய ஜெயவிக்ரமாவுக்கு வழங்கப்பட்டது. தொடர் நாயகன் விருது கேப்டன் திமுத் கருணரத்னேவுக்கு அளிக்கப்பட்டது.
    இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு நாட்டிற்குள் நுழைய அனுமதி இல்லை என ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
    ஐபிஎல் கிரிக்கெட் கடந்த மாதம் 9-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடங்கியதில் இருந்தே கொரோனா வேகமும் அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கிறது.

    தினந்தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டிய வண்ணம் உள்ளது. இதனால் பெரும்பாலான நாடுகள் இந்திய விமான சேவைக்கு தடைக்கு விதித்துள்ளது. ஆஸ்திரேலியா, இந்தியாவில் இருந்து செல்வதற்கு தடைவிதித்துள்ளது மே 15-ந்தேதி வரை இந்தத் தடை நீடிக்கிறது.

    தடையை மீறினால் சிறைத்தண்டனைக்கு உள்ளாவீர்கள் என எச்சரித்துள்ளது. இதற்கிடையே ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடும் சில ஆஸ்திரேலியா வீரர்கள், ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு தங்களை சிறப்பு வாடகை விமானம் மூலம் சொந்த நாட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    ஆனால், தற்போதைக்கு சிறப்பு வாடகை விமானம் மூலம் ஐபிஎல் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய வீரர்கள் சொந்த நாடு அழைக்கும் திட்டமில்லை என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு சிஇஓ நிக் ஹாக்லி தெரிவித்துள்ளார்.
    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிராக கடைசி ஓவரில் 15 ரன்கள் விளாசிய மயங்க் அகர்வால், மேலும் ஒரு ரன் எடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
    அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தது.

    ஆனால், மயங்க் அகர்வால் சிறப்பாக விளையாடினார். அவர் 19 ஓவர் முடிவில் 84 ரன்கள் எடுத்திருந்தார். 20-வது ஓவரின் 2-வது பந்தில் ஒரு ரன் அடித்தார். 4-வது பந்தை பவுண்டரிக்கும், 5-வது பந்தை சிக்சருக்கும் விளாசினார். இதனால் 95 ரன்களை எட்டினார். கடைசி பந்தில் சிக்சர் விளாசினார் சதத்தை தொடுவார் என்று இருந்தது.

    ஆனால் கடைசி பந்தில் அவரால் பவுண்டரியே அடிக்க முடிந்தது. இதனால் 58 பந்தில் 99 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். ஒரு ரன்னில் சதத்தை கோட்டைவிட்டார்.

    இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆட்டமிழக்காமல் 99 ரன்கள் எடுத்து சதத்தை தவறவிட்ட 3-வது வீரர் என்ற அதிர்ஷ்டம் கைக்கூடாத வீரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.

    இதற்கு முன் 2013-ல் சுரேஷ் ரெய்னா, 2019-ல் கிறிஸ் கெய்ல் ஆகியோரும் 99 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்துள்ளனர்.
    6 பந்தில் 6 சிக்சர்கள் விளாசிய இலங்கை வீரர் திசாரா பேரேரா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
    இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு அல்-ரவுண்டர் திசாரா பெரேரா. 32 வயதான இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இளம் வீரர்களுக்கு வழி விடவும், அதிக திறமை கொண்ட வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்திடவும், குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

    பெரேரா உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் ஆறு பந்துகளில் 6 சிக்சர்கள் அடித்து சாதனைப் படைத்தவர். 11 வருடம் கிரிக்கெட் வாழ்க்கையில் 166 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 2338 ரன்களும், 175 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார். 84 டி20 போட்டிகளில் 1204 ரன்களும், 51 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார். ஆறு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
    ×